Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Monday, February 24, 2014

2013-ல் படித்ததில் பிடித்த 10 நூல்கள்

10. ONLY 13 - THE TRUE STORY OF LON (Julia Manzanares & Derek Kent)

தாய்லாந்தை சொர்க பூமியாக அடையாளம் காண்பதற்கு அதன் ‘செக்ஸ் டூரிசமும்’ ஒரு காரணம். பாலியல் வேட்கை பொருட்டு அங்குச் செல்லும் பயணிகள் அதிகமாகவே இருக்கிறார்கள். பயணிகளின் இந்த பாலியல் தேடல் அதிகமான பெண்களை உலகின் புராதன தொழிலான விபச்சாரத்திற்கு அழைத்து வந்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் விரட்டல் ஒரு தாய்லாந்து பெண்ணை பேங்காக் பாலியல் வீதியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. அப்போது அவளின் வயது 13. இந்நூல் தொடர்பாக எனது விமர்சனத்தை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பாலியல் தொழில் தொடர்பாக ஆழமான பதிவை முன் வைக்கும் லோன் எனும் பெண்ணின் சுயசரிதம் மிக எளிமையான ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


9. பிரபல கொலை வழக்குகள் (எஸ்.பி.சொக்கலிங்கம்)

கிழக்கின் தரமான வெளியீடுகளில் மேலும் ஒரு புத்தகம். எஸ்.பி.சொக்கலிங்கம் எனும் வழக்கறிஞரால் எழுதப்பட்ட நூல். தடையற்ற வாசிப்பு. 'க்ரைம்' சிறுகதைகளை கண் விரித்து வாசிப்பதை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. மொத்தம் 10 கொலை வழக்குகளை விளக்குகிறது இந்நூல். வழக்குகளின் விசாரணை சுவாரசியமானது. அங்கே சான்றுகள் அற்ற சாட்சியம் பொய்த்து போகிறது. இருந்தும் நீதி பல நேரங்களில் வெல்வதையும் சில நேரங்களில் தோற்றுப் போவதையும் நாம் காண்கிறோம்.


8. A Record of Cambodia - The Land and It's People (Zhou Daguan)

இந்நூல் தொடர்பாக எனது கம்போடிய பயண கட்டுரையில் பல இடங்களில் மேற்கோள் காட்டி இருந்தேன். 1296-ல் அந்நாளைய அங்கோர் நகரத்திற்கு பயணம் மேற்கொண்ட ஒரு சீன பயணியின் குறிப்புகளை விளக்கும் நூல் இது. கம்போடியாவின் அங்கோர் கால மக்கள், ஆட்சி, வணிகம், வாழ்வியல், மதம் என பல தளங்களை விளக்குகிறது. சமீப காலத்தில் தான் இந்த நூல் நேரடியாக சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பு பிரஞ்சு மொழியில் இருந்து அங்கிலத்தில் The Customs of Cambodia என அறியப்பட்டது. அங்கோர் சரித்திரத்தை அறிந்துக் கொள்ள விரும்புவோர் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் இது. ச்சாவ் தாகுவான் எழுதிய சீன குறிப்பில் இருந்து இன்று நமக்கு வெகு சொற்பமானவையே கிட்டி உள்ளது. மார்க்கோ போலோவின் ஆசிய பயண குறிப்பிற்கும் ச்சாவ் தாகுவான் பயண குறிப்பிற்குமான வேறுபாட்டையும், தாகுவான் குறிப்புகளில் இருந்து இன்றைய ஆய்வுகள் கண்டடைந்த முரண்பாட்டையும் ஆசிரியர் விளக்க தவறவில்லை.


7. ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம் (கே.ரகோத்தமன்)

வாசகனை மாய காட்டுக்குள் ஆழ்த்தும் நூல் இது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமனால் எழுதப்பட்ட நூல். கொலை வழக்குக்கு முக்கிய ஆதாரமாக அமைந்த புகைப்படங்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இன்றளவிலும் பல விதமான சர்ச்சைகளை எதிர் கொண்டுள்ள வழக்கு இது. விசாரணை அதிகாரி எனும் பட்சத்தில் தனது சார்பிலான நியாய வாதங்களை முன் வைக்கிறார் ரகோத்தமன். ஒரு வழக்கை விசாரிக்க வேண்டிய முறைகளையும் அதில் தவிர்த்திருக்க வேண்டிய வற்றையும், விசாரணை அதிகாரிகளுக்கு நேர்ந்த பல விதமான இடர்பாடுகள், தடைகள், அதிகாரக் குறுக்கீடுகள் பற்றியும் விலாவாரியக குறிப்பிட்டுள்ளார். ராஜிவ் காந்தி எனும் பிரபலத்தின் கொலை வழக்கினை அறிந்துக்கொள்ள வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.


6. வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம் (முகில்)

எழுத்தாளர் முகில் எழுதிய நூல்களில் முதலில் வாசித்தது யூதர்கள். அவர் எழுத்தின் வசீகரமே மேலும் அவரின் வெறு சில படைப்புகளை நாடிச் செல்ல வைத்தது. வெளிச்சத்தின் நிறம் கருப்பு கொஞ்சம் தடித்த நூல் தான் இருந்தும் வாசிப்புக்கு தடையற்ற நூல். ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரசியத்தை கொட்டி எழுதி இருக்கிறார் முகில். என்ன தான் நாம் விஞ்ஞான ரீதியாக லாஜிக் தேடினாலும் ஆச்சரியமளிக்கும் சில அதிசயங்கள் ஆங்காங்கு நடந்தபடியே உள்ளன. சைன்ஸுக்கு அப்பாற்பட்ட சில நம்பிக்கைகள் நவநாகரீக வளர்ந்த நாடுகளிலும் மெத்த படித்த மக்களிடமும் கொட்டிக் கிடக்கிறது. இயற்கையாக நடக்கும் சம்பவங்கள் கூட சில வேளைகளில் அதிசயமாகும் அதிசயத்தை நாம் காண்கிறேம். இதை படித்து முடித்ததும் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே என்றே தோன்றியது. இது குறித்து முகிலிடம் கேட்ட போது வாய்ப்பு கிட்டுமாயின் இத்தொடரின் அடுத்த பாகத்தை எழுதுவதாக கூறினார்.


5. Lady Boys - The Secret World of Thailand's Third Gender

Only 13 புத்தகத்தை வாங்கிய போது தான் இதையும் வாங்கினேன். தென் கிழக்காசியாவில் அதிகமான திருநங்கைகள் வாழும் நாடு தாய்லாந்து. ‘லேடி பாய்ஸ்’ எனும் இந்த நூல் தாய்லாந்தில் திருநங்கைகள் தொடர்பான பல தகவல்களை நமக்கு அளிக்கிறது. நான் வித்தியா, அவன் - அது = அவள் போன்ற தமிழ் நூல்கள் இந்திய சூழலில் திருநங்கைகளின் வாழ்க்கை முறையை நமக்கு விளக்கின. தாய்லாந்து தொடர்பான ஆங்கில நூல் வரிசையில் முதல் 10-ல் இந்நூலும் ஒன்று. ஒன்பது திருநங்கைகள் குறித்த தனி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருநங்கையர்களின் அடையாளம் அந்நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. பாலியல் தொழிலின் வியாபார நூதனங்களும் அங்கு பல திருநங்கையர்கள் உருவாக காரணமாக அமைவதை காண முடிகிறது. ‘ஃபியூடிப்புல் பாக்சர்’ எனும் திரைப்படம் தொடர்பாக எனது கண்ணோட்டத்தை முன்பு எழுதி இருந்தேன். நோங் தோம் எனும் அந்த ’முய் தாய்’ வீரரின் வாழ்க்கை குறிப்பையும் இந்நூலில் காணலாம்.

4. எரியும் பனிக்காடு (Red Tea) (இரா.முருகவேல்)

இது ஆங்கிலத்தில் வெளி வந்த நாவல். தமிழில் இரா.முருகவேல் அவர்களால் மிக அருமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இன்று நமக்கு தமிழில் வாசிக்க கிடைத்திருக்கும் நாவல் இது. இந்நாவலை மையப்படுத்தியே பாலாவின் பரதேசி படம் எடுக்கப்பட்டுள்ளதை வாசித்தவர்கள் அறிய முடியும். பாலா அவரின் பெயரை போட்டுக் கொண்டது பலமான சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகின் ஒரு பக்கம் புரட்சிகளும் போராட்டங்களும் இரண்டாம் உலகப் போரின் ஆயத்தங்களும் நடந்துக் கொண்டிருந்த சமயம் தனது அடிப்படை உரிமைகள் என்னவென அறியாத மக்கள் முதலாளித்துவ பிடியில் வதைபடுகிறார்கள். அறியாமையே இதற்கு முழு முதற் காரணம். படித்து முடிக்கையில் ஏதோ ஒரு பாரம் நம் நெஞ்சில் ஏற்றி வைக்கப்படுகிறது. பனிக்காட்டில் தன் வாழ்க்கையை அற்பணித்த உயிர்களுக்கு ஒரு கணம் நம்மை மௌன அஞ்சலி செலுத்த வைக்கிறது.

3. அறம் - சிறுகதை தொகுப்பு (ஜெயமோகன்)

அறம் மொத்தம் 13 சிறுகதைகளை கொண்ட தொகுப்பாகும். வாசகனின் உணர்ச்சிகளை தட்டிச் செல்லும் படைப்பு மிக உன்னதமானது. அறம் நூலின் ஒவ்வொரு கதையிலும் அத்தன்மை புதைந்துள்ளது. அறம் செய்யும் மனிதர்களை இவ்வுலகம் எவ்வளவு அந்நியமாக்கிவிட்டது என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இதில் யானை டாக்டர் எனும் சிறுகதை தனித்துவம் வாய்ந்தது. அக்கதை பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு விழிப்புணர்வுக்காக இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிகிறேன். தமிழ் இலக்கியத்தில் இக்கதைகள் அனைத்தும் மிக முக்கியமான நிகழ்வுகளாகும். அறம் நிகழ்த்திய மனிதர்கள் பலரை நாம் அறியாமல் போனதற்கு காரணம் சமூகத்தின் அறமற்ற நிலைகள் என்பதே உண்மை.

2. என் பெயர் ராமசேஷன் (ஆதவன்)

ஆதவன் படைப்புகள் மீதான பரிச்சையத்தை ஏற்படுத்தியது என் நண்பன் முரளி. அவரிடம் இருந்த தலையணை சைஸ் ஆதவன் சிறுகதை தொகுப்புகளை தான் முதலில் வாசித்திருந்தேன். பாதி புத்தகத்தை தாண்டி இருந்த நன்நாள் ஒன்றில் முரளிக்கு டிரான்ஸ்பர் கிடைக்க புத்தகமும் இனிதே இடம் மாறியது. தொடர்ந்து வாசித்த எஸ்.ராமகிருஸ்ணனின் கதாவிலாசம் நூலில் ஆதவனின் படைப்புகளான காகித மலர்களையும் என் பெயர் ராமசேஷன் நாவலையும் அறிமுகம் செய்து இருந்தார். ராமசேஷன் ஓர் அர்தடாக்ஸ் பிராமண குடும்பத்தில் வந்தவன். நவநாகரீகம், முற்போக்கு சிந்தனை என சில சமகால சமூக வஸ்துகள் தன்னுள் நிறம்பி இருப்பதாக நினைக்கும் கதாபாத்திரம் அவன். தனது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் போலியாக வாழ்வதை காண்கிறான். ராமசேஷனை பொருத்தவரை எல்லா மனிதர்களும் முகமூடி அணிந்தே சமூகத்தை அனுகுகிறார்கள். எதனால் இச்சூழ்நிலை என்பதை நகைச்சுவை இழையோட கதை விவரிக்கப்படுகிறது. முற்போக்கு வாதி ராமசேஷன் கடைசியில் கூறும் வாக்கியம் ’என் தங்கையை காதலிப்பவனின் பல்லை உடைப்பேன்’என்பதாக இருக்கும். ராமசேஷனும் முகமூடியோடு தான் இருந்தான் என்பதை அப்பொழுது வாசகனும் உணருகிறான் . பாலகுமாரனும் இந்நூலினை அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகப்பட்டியலில் முன்மொழிந்துள்ளார்.


1. ஏழாம் உலகம் (ஜெயமோகன்)

புனித தன்மைகள் நிறைந்த கோவிலின் வாசலில் இருக்கிறது நாம் கொஞ்சமும் விரும்பாத ஏழாம் உலகம். படிக்க படிக்க ஓர் ஆச்சரியமான ஆழத்தில் மூழ்கடிக்கும் கதையம்சம். இப்படியும் நடக்கிறதா இன்னமும் நாம் வாழும் சமகால உலகில் என அதிர்ச்சியளிக்கும் நாவல். ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஒரு மாஸ்டர் பீஸ் என முத்திரை குத்தலாம். வாசகனை இந்த உலகில் இருந்து வேறு ஓர் உலகத்திற்கு தூக்கிச் செல்லும் கதை அமைப்பைக் கொண்ட படைப்பு. இந்த மனிதன் எப்படி தான் இதை எழுதினார் என இன்னமும் வியப்பாகவே உள்ளது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் இந்நாவலின் கதையாம்சம் தொட்டு பேசப்பட்டுள்ளது. ஆனால் ஜெயமோகன் இந்நாவலில் நம்மை இட்டுச் செல்லும் உலகத்தோடு ஒப்பிடும் போது நான் கடவுள் வெகு தொலைவில் தான் உள்ளது.

(பி.கு: படித்ததில் நினைவில் நின்ற நூல்களையே இங்கே பட்டியலிட்டுள்ளேன். சில நினைவில் தவறி இருக்கலாம். இவை மட்டுமே கடந்த ஆண்டின் சிறந்த நூல்கள் என குறிப்பிடவில்லை. ஆதலால் தீவிர இலக்கியவாதிகள் பொருத்தருள்வார்களாக. நீங்கள் படித்ததில் பிடித்த நூல்களையும் பட்டியலிடுங்கள் பலரின் வாசிப்பு தளத்தை விரிவுபடுத்த உறுதுணையாக இருக்கும்.)

Sunday, January 10, 2010

எப்போதும் பெண் (நாவல்) - சுஜாதா



புத்தகம்: எப்போதும் பெண்
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை

"இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின் பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன், பக்தியும் தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள்.'' - முன்னுரையில் சுஜாதா.

தாய், சகோதரிகள், தோழிகள், பின்நாட்களில் மனைவி என ஆணின் வாழ்க்கை முறை அமைகிறது. இதில் பொரும்பாலான இடங்களில் பெண் என்பவளுடனான தொடர்பு நிலை தொடர்ந்து நிலைக்காமலும், பாதியாகவும் முடிவடைந்து விடுகிறது. பெண்ணின் சுதந்திரம் ஒரு வரையரைக்குட்பட்டு இருப்பதனால் இந்நிலை எற்படும் சாத்தியங்கள் அதிகம் இருக்க முடியுமென நாம் சொல்லலாம்.

அப்பா, அண்ணன்கள், தம்பிகள், தாத்தா, மாமா, கணவன், அம்மா, அக்காள் என அவளை சார்ந்த முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வயது நிலையிலும் பெண் என்பவளின் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்படுகிறது. அதை அவள் விரும்புகிறாளா அல்லது ஏற்றுக் கொள்கிறாளா என்பதையும் அவளை சூழ்ந்தவர்கள் அறிந்துக் கொள்ள விரும்புவது கிடையாது. இது தான் சமூக நியதி எனும் கட்டாயங்கள் திணிக்கப்படுகிறது. பெண் என்பவளின் சுதந்திரம் அவளால் விரும்பப்பட்டது அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை காட்டினும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டது என்பதே தகும்.

பெண் பாலியல் வன்முறைகளுக்கு எதிரானா சட்ட திட்டங்கள் தேவையற்று போய்விடும் நிலை மனித நாகரீகத்தின் அதீத வளர்ச்சியின் பின்னும் தீர்ந்தபாடில்லை. அது இன்னமும் மெருகூட்டப்பட்டு, சீர்திருத்தப்பட்டு
நீதி எனும் பெயரில் உபயோகிக்கப்படுகிறது. பெண்ணை போகப் பொருளாக பார்க்கவும் உபயோகிக்கவும் ஆண்களுக்கான கட்டளைகள் அவனது மரபணுவின் வழியாக செலுத்தப்பட்டுவிடுகிறது. பெண்களிடம் தோன்றும் காமத் தேடல்களை அவன் விரும்பச் செய்கிறான். ஆண் என்பவனுக்கு ஏன் அப்படி தோன்ற வேண்டும்? அவனுள் ஏற்படும் பௌதிக மாற்றமும், பெண்ணின் பருவ வளர்சிகளும் அவனை இத்தூண்டுதலுக்கு ஆளாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

சுஜாதாவின் எப்போதும் பெண் எனும் நாவல் பெண்னை பற்றிய அடிப்படை புரிதலை நமக்கு நயமாக விவரித்துள்ளது என்பது மிகையற்றது. பெண்ணின் வளர்ச்சிக்கும் மாறுதல்களுக்கும் காரணங்கள் யாவை என்பதினை எளிய நடையில் எடுத்துரைத்துள்ளார். வளர்ச்சி அல்லது மாறுதல்கள் என்பன பெண்ணின் உடல், உள்ளம் மற்றும் செயல்பாடுகள் யாவற்றிலும் அடங்கியுள்ளது. அவளின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் சில கட்டமைப்புகள் சூழ்ந்துக் கொள்கின்றன. ஒரு வரையரைக்குட்பட்ட தீர்மானங்களையோ செயல்பாடுகளை மட்டுமே அவளால் செய்ய முடிகிறது.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், ஓரிரு வயது வித்தியாசங்களுடன் ஒரு தாய்க்கு பிறக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வளர்கப்படும் விதம் ஒரே விதமான சூழ்நிலையைக் கொண்டது. இருப்பினும் இருவரின் வளர்ச்சியிலும், சிந்தனையிலும் அது வேறுபாட்டை கொடுக்கிறது. இந்நிலைக்கான சாத்தியங்கள் நமக்கு குழப்பத்தை கொடுக்கின்றன. பிறப்பின் நியதி என இதை நாம் பொதுப்படையாக சொல்லிவிடுகிறோம்.

மூன்று ஆண் குழந்தைகளை பெற்று இல்வாழ்க்கையில் சலித்துப் போன ஒரு ஆண் தூக்கம் வராமல் போரடித்துப் போன இரவொன்றில் தன் மனைவியை சுகிக்க, விந்து அவளின் கரு முட்டையை தேடி ஓடுகிறது. நாவலின் முதல் பக்கத்தில் இதை படித்தவுடன் முடிவு வரை எப்படி கொண்டுச் செல்வார் எனும் தீர்மானத்தை ஓரளவேனும் யூகிக்க முடிந்தது. இக்கதையின் முடிவு எனக்கு அளப்பறிய பாதிப்பை கொடுக்கவில்லை என்பதே உண்மை. இருப்பினும் இதன் வாசிப்பு புதிய அனுபவமாகவும், சுவாரசியமாகவும் இருக்கவேச் செய்தது.

இதை கதையென்றோ, நாவல் என்றோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் படித்துப் பாருங்கள் என ஆரம்பிக்கும் சுஜாதாவின் முன்னுரை இக்கதைக்காக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தையை நமக்கு தெளிவிக்கிறது. நன்னெறிகளையும், நீதிக் கதைகளையும் விரும்பிப் படிபவர்கள் விரசமான எழுத்து என இப்புத்தகத்தை ஒதுக்கக் கூடும். நகைச்சுவை, எழுத்துநடை, சுவாரசியம் என தனக்கே உரிய பாணியில் கொடுக்கப்பட்டிருக்கும் இப்புத்தகம் எல்லோராலும் நிச்சயம் படிக்கக் கூடிய ஒன்றெனவே சொல்லமுடிகிறது.

Thursday, January 22, 2009

எஸ்.பாலபாரதியின் அவன்-அது=அவள்


நூல்: அவன்-அது=அவள்
ஆசிரியர்: யெஸ்.பாலபாரதி
நயம்: சமூக நாவல்
வெளியீடு:தோழமை பதிப்பகம்
பக்கம் : 184

தாய்லாந்தில் நடந்த ஒரு சம்பவம். ஒரு ஆண் பாலியல் மாற்றம் செய்துக்கொண்டான். காலம் கடந்தது. பெண்ணாக வாழ்ந்தது வெறுத்துப் போனது அவளுக்கு. 20 வருடம் கழித்து மருத்துவரை அணுகி கேட்டாளா(?!)ம். மீண்டும் தனக்கு ஆண் குறி வேண்டும் என்று.

பால் மாற்றம் தற்காலத்தில் நாம் அதிகம் கேள்விப்படும் விடயமாக இருக்கிறது. பிறப்பில் ஆணாக இருக்கும் ஒருவர் தன்னைப் பெண்ணாக மாற்றிக்கொள்ள விருப்பம் கொள்கிறார். இயற்கையாகவே பெண்மையின் குணங்கள் அவரிடம் இருக்கிறது. உள்ளத்தால் பெண்ணான அவர் உடலால் பெண்ணாக மாற்றம் கொள்ள விரும்புகிறார். இவர்களை திருநங்கையர்கள் என நாம் குறிப்பிடுகிறோம்.

உண்மையில் சுதந்திரம் என்பது யாது? குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதா? இல்லை நமது சிந்தனைக்கு மதிப்பளித்து நமது விருப்பப்படி வாழ்வதா. நமது வாழ்க்கை நமது விருப்பப்படி இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம். அதே வேளையில் இச்சமூக விதிகளை மதித்து நாம் வாழ வேண்டியது அவசியமாகிறது.

ஒரு ஆண் பருவம் எய்துகிறான். தனக்குள் ஊற்றெடுக்கும் உணர்வுகளை அறிகிறான். தன்னை ஒரு ஆணாக கருத மறுக்கிறான். இந்நாவலின் நாயகி கோமதி. கோமதியின் ஆரம்பக் கால வாழ்க்கை மாறுபட்டது.

கோபி பிறப்பால் ஒரு ஆண். ஆணாக வளர்க்கப்படுகிறான். அவனுக்குள் உண்டாகும் உணர்வு மாற்றங்களால் தன்னைப் பெண்காக கருதுகிறான். கோபியின் உணர்வு சித்தரிப்புகளை சிறப்பாக கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என்றேக் கூற வேண்டும்.

குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயம். தமது தமக்கையின் உடைகளை அணிந்து கொண்டு 'பூ பூக்கும் ஓசை' பாடலுக்கு ஆடும் போதும், அண்ணனிடம் அடி வாங்கும் போதும், பிள்ளைக்கு பேய் பிடித்ததாய் தாய் கருதி பூசாரியை அழைத்து பேய் ஓட்டும் போதும் கதை விவரிப்புகள் இலகுவாக மனதில் பதிகிறது.

பார்த்திங்களா என்கிட்டயே மல்லுக்கு நிக்குது இது கொஞ்சம் திமிர் பிடித்த பேய் தான். இதன் போக்கில போய் சமாளிக்க வேண்டும் எனச் சொல்லும் போலி பூசாரியின் காட்சி விவரிப்புகள் நகைச்சுவையாகவே இருக்கிறது.

தான் விருப்பும் வாழ்க்கையை வாழ நினைக்கிறான் கோபி. எதிர்பாரா விதமாக அதற்கான சந்தர்ப்பம் அமைகிறது. குடும்பம், சுற்றம் என அனைத்தையும் தூக்கியெறிகிறான். தனது புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான். அவன் கோமதி எனும் பெயரில் மாற்றம் காண்கிறாள்.

திருநங்கைகளின் வாழ்வு முறை. அவர்கள் பேச்சு வழக்கு. அவர்களுக்குள்ளான பிரச்சனைகள் போன்ற விவரிப்புகள் கதைக்கு வலு சேர்க்கின்றது.

திருநங்கைகளின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக கருதப்படுவது தாயம்மா எனும் குறி அகற்றும் சடங்கு. சில இடங்களின் அறுவடை சடங்கு என இதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆசிரியர் இதை சொல்லும் விதம் மெய்கூசச் செய்கிறது என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாகவே நமது சமூகத்தில் ஆண் பெண் என இருபாலரும் ஏற்றுக் கொள்ளாத அல்லது வெறுக்கும் சமூகமாகவே திருநங்கைகள் இருக்கிறார்கள். அப்படியாக திசையற்று தன் வாழ்வை தேடும் திருநங்கைகளுக்கு இன்னொரு திருநங்கையே துணை என்பதை இக்கதையில் காண்கிறோம்.

இக்கதையில் வரும் அன்பு எனும் கதாபாத்திரம் நாயகனா அல்லது வில்லனா என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம். சமுதாய சூழலல அறிந்து வாழும் கதாபாத்திரமாக சித்தரிக்கப்படும் இவர் பிற்பகுதியில் ஒரு கொடுமைக்காரனாக சொல்லப்படும் விதம் நெருடுகிறது.

ஆண் சமூகத்தை அவமானப்படுத்துபவர்கள் திருநங்கையர் எனும் எண்ணம் பொரும்பாலான ஆண்களுக்கு உண்டு. அதே போல் தம்மை கேவலப்படுத்தும் ஆண் வர்க்கத்தை வெறுக்கும் திருநங்கையரும் உண்டு. இதற்கு அப்பாற்பட்டு அவர்களை மனமுவந்து ஏற்று வாழ்க்கை நடத்துபவர்களும் உண்டு.

இக்கதையில் போலிஸ், ரவுடிகள், திருநங்கையரை ஏமாற்றி திருமணம் செய்யும் ஆண்கள் என பல வகையில் ஆண்களே திருநங்கையருக்கு கொடுமைகள் நிகழ்த்துபவர்களாக சொல்லி இருப்பது திருநங்கையர்களுக்கு ஆண்கள் மட்டுமே எதிரிகள் என்பது போல் உள்ளது.

நன்கு படித்த திருநங்கைகள் தங்களுக்கு ஏற்ற வேலைகளில் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். அது இந்திய நாட்டுச் சூழலில் மாறுபடுகிறதா என்பது தெரியவில்லை. படிப்பறிவுள்ள கோமதியும் கடை(பிச்சை) கேட்டு பிழைக்கும் சித்தரிப்புகள் எதிர்ப்பார்க்காத ஒன்று. திருநங்கைகள் வாழ்க்கையில் தங்களை எப்படி உயர்த்திக் கொள்ள முடியும். தம் பிள்ளைகள் திருநங்கையராக மாறுவார்களாயின் அதை எப்படி குடும்பத்தார் ஏற்றுக் கொள்ள முடியும் போன்ற முக்கிய கூறுகளை கொஞ்சம் விளங்கக் கூறியிருந்தால் மேலும் நன்மையாய் அமைந்திருக்கும்.

நாம் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவரவர் சுதந்திரத்துக்குற்பட்டது. சமூக அமைப்பில் திருநங்கையர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்களே. கீழான பார்வைக்கும் செயல்களுக்கும் அவர்களை முற்படுத்துவதில் நமது சமூகமும் காரணமாகிறது என்பது தான் உண்மை.

இன்றைய சமூக அமைப்பில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சத்தை மக்களுக்கு தெரிவிப்பதில் முனைப்பு காட்டி இருக்கும் ஆசிரியர் பாலபாரதியின் முயற்சி பாராட்டத்தக்கது. கதை வழி திருநங்கையர் உலகிற்கு நம்மை அழைத்துச் சென்று நாம் அறிய வேண்டிய தகவலை இலகுவாக சொல்லி இருப்பது மிக அருமை.

(பி.கு: இப்புத்தகத்தை எமக்கு பரிசளித்த எழுத்தாளர் பரிசல்காரன் அவர்கட்கு நன்றி.)

Friday, August 29, 2008

புதைந்த நினைவுகள் (2)

பல்கலைக்கழகப் படிப்பை முடிக்கும் வரை இடைப்பட்ட காலத்தில் அதிகமாகத் தமிழ் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கல்வி முறையின் மாற்றம் எனச் சொல்வதை விட நான் தான் படிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளவில்லையென சொன்னால் மிகவும் தகும்.

ஆரம்பப் பாடசாலையில் படிக்கும் சமயம் என் சனி ஞாயிறுகளை அதிகமாக வாசிப்பிற்கே செலவழிப்பேன். அப்படி படித்த புத்தகங்களில் பல என்னுள் இன்னமும் நீங்காமல் இருக்கின்றன. ஆனால் இப்போது அப்புத்தகங்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே. விசாரித்துப் பார்த்ததில் பலருக்கும் அப்புத்தகங்களை பற்றிய தகவல்கள் தெரியாமலே இருக்கிறது.

இப்போதெல்லாம் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிப்பதை தவிர்க்கிறேன். முடிந்த மட்டும் அவை என் சேகரிப்பில் இருப்பதே நலம் என நினைக்கிறேன். புத்தகங்களை இரவல் கொடுப்பதையும் முடிந்த அளவு தவிர்க்கிறேன். போன புத்தகங்கள் பல திரும்பாமலே தங்கிவிடுவது தான் இதற்குக் காரணம். அதனால் தான் நல்ல சேகரிப்புகளை இரவல் கொடுக்கவே மனம் வரவில்லை. நன்கு அறிந்த நண்பர்கள் ஓரிரண்டு பேர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

மலரே குறிஞ்சி மலரே

இது புத்தகத்தின் தலைப்பு இல்லை. எனக்கு 11/12 வாயதாக இருந்த சமயம் நயனம் என்ற வார இதழில் வந்த தொடர்கதையின் தலைப்பு. பத்திரிக்கைகளில் வரும் தொடர்களை படிக்க அதிக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இத்தொடரை முதல் முறை படித்த போதே அதன் தாக்கம் என்னுல் ஒட்டிக் கொண்டது.

தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. தோட்டத்தில் பிறந்து நன்கு படித்து வாழ்வில் முன்னேறி வரும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதலிலும் அதன் பின்னணிகளிலும் கதை நகர்கிறது. அவன் காதலிப்பது இரப்பர் பால் தொழிற்சாலை வைத்திருக்கும் ஒரு சீன முதலாளியின் மகளை.

பல எதிர்ப்புகளுக்குப் பிறகு முடிவில் காத்திருப்பது என்னவோ பெரும் சோகமே. அவர்கள் ஓடிப்போக நினைக்கும் சமயம் மெய் லின் எனும் அவன் காதலியின் வீட்டில் தீ பிடித்து அவள் இறந்துப் போகிறாள். பல வருடங்கள் கழிந்து அத்தோட்டத்திற்கு வருகை தரும் அந்த இளைஞனின் (கிழவன்) மனத் திரையில் பழைய சோகங்கள் படர்வதாக கதை முடியும்.

இக்கதாசிரியரின் பெயர் தியாகராஜன் என நினைக்கிறேன். வெளி தோற்றத்தை வைத்து மனிதனை எடை போடாதிருத்தலை பற்றி பல இடங்களில் மிகவும் அழகாகச் சொல்லி இருப்பார். இக்கதை நாவலாக வந்ததா என தெரியவில்லை. அப்படி இருப்பின் தெரிந்தவர்கள் சொல்லவும்.

கண்ணீர் சொல்லும் கதை

சஞ்சிக் கூலிகளாக மலாயா வந்தவர்களில் ஒருவரின் சுயசரிதமாக இந்நாவல் அமைந்திருக்கும். தோட்ட மக்கள் பட்ட கஷ்டங்கள். அவர்களுக்குள் அமைதியாக உருவாகிய அமைப்புகள், போராட்டம் எனக் கதை நகரும். கதையின் நாயகன் தாய் தந்தையின்றி வாழும் இளைஞன். அவன் சாதாரண தோட்டத் தொழிலாளி.

கால மாற்றத்தில் அவனுக்குப் பல சிரமங்கள் ஏற்பட்டு எதிர்பாரா விதமாக விபத்திற்குள்ளாகிறான். இறுதியில் பிச்சை எடுக்கும் நிலையில் தெருவுக்கு வந்த தமிழனுக்கு நம் தமிழினம் என்ன செய்கிறது எனக் கதை முடியும். இந்நாவலை எழுதியவர் இரா.ராஜேந்திரன் என ஞாபகம். ஆனால் குறிப்பாக சொல்ல முடியவில்லை.

ஊனம் ஒரு தடையல்ல

விசக் காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவன் ஒருவன் கால்கள் ஊனமாகிறான். சிறு வயதில் தந்தையைப் பறி கொடுத்த அவனுக்குத் தாய் மட்டுமே துணை. ஊனமாக இருக்கும் அந்த ஏழை மாணவனை சில மாணவர்கள் வெறுக்கிறார்கள். கேலி செய்கிறார்கள். அதை பொருட்டாக கொள்ளாமல் அவன் படித்து சாதனை புரிவது கதையின் சுருக்கம்.

கண்ணாடி மலை

பள்ளி விடுமுறையில் சுற்றுலா போகும் மணவர்களை சுற்றி கதை நடக்கும். இதை படித்த போது இம்மலை உண்மையாகவே பினாங்கில் இருக்கும் என நினைத்தேன். அப்பாவிடம் அழைத்துப் போகவும் சொல்லி இருக்கிறேன். பின்னாட்களில் தான் அது புனைவு என்பதை உணர்ந்தேன்.

மிஸ்திரி பெத்தா ராசிய (MISTERI PETA RAHSIA)

இது ஒரு மலாய் நாவல். அதன் அர்த்தம் ‘இரகசிய வரைபடத்தின் மர்மங்கள்' எனப் பொருள்படும். ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரசியம் குன்றாத மர்மக் கதை. நாயகனுக்கு ஒரு கெடுதலும் நடந்துவிடக் கூடாதே என நம் மனதுல் ஒரு உந்துதல் இருந்துக் கொண்டே இருக்கும். அதுவே கடைசி வரை கதையை நாம் கருத்தூன்றி படிக்கவும் துணை புரிகிறது.

இவற்றை தவிர்த்து மஞ்சள் வீடு, ஏணிப் படிகள் என இன்னும் பல பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றையும் பட்டியலிட இப்பதிவு போதாது. இங்கு சொல்லி இருப்பவை நான் மிக இரசித்தவை. இப்புத்தகங்கள் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். கிடைக்குமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

Wednesday, July 30, 2008

கன்னித் தமிழின் கண்ணீர்- பா.விஜய்

கவிஞர் பா.விஜய் அவர்களின் அடுத்த அக்னிப்பிரவேசம் படித்திருக்கிறீர்களா? எனக்குப் பிடித்த கவிதை தொகுப்பு நூல்களில் இதுவும் அடங்கும். நீண்ட கவிதைகளைக் கொண்ட குறுந் தொகுப்பு நூல்.

அணைத்தும் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய சீர்திருத்த கவிதைகளாக இருக்கும். சில இடங்களில் தமிழக அரசியலையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். இந்நூலில் எனக்கு பிடித்த ஒரு கவிதையினை இங்குச் சமர்ப்பிக்கிறேன்.

இந்த சமூகம் இருக்கிறதே

சமூகம்

இது

கரும்புக்குக் காத்திருந்தவனுக்கு

சக்கை தரும் சமூகம்


அவன் வீட்டு

அடுப்புக்கு நெருப்பு வைப்பதாய்

இறுதியில்

அவனுக்கே நெருப்பு வைக்கும்


இது

தமிழுக்கு மட்டுமென்ன

தங்க மகுடமா சூட்டும்?


கடையேழு வள்ளல் மட்டும்

கவனிக்காது இருந்திருந்தால்

நமது கவிராஜர்கள்

இலக்கியம் பேசியதாலேயே

இளைத்துப் போய் இருப்பார்கள்.


இவர்கள்

தினசரி இங்கே

திருவோடுகள் ஏந்தினால் தான்

மாதம் ஒருமுறை

கஜானா

கண் திறக்கும்


இப்போதோ

நமது தமிழ் மயில்

உள்ள போகன்கள் எல்லாம்

உலோபிகளாகிவிட்ட காரணத்தால்

விரைவிலேயே

விறைத்துப் போகவிருக்கிறார்கள்.


தமிழிலுள்ள எழுத்தையெல்லாம்

தங்கத்தில் பொறித்தல் வேண்டுமாம்

கேட்டுப் பாருங்கள்

அவன் தங்கத்தை

எழுத்து வடிவத்தில்

பார்த்தவனாக இருப்பான்.


சமுத்திரமாய் இருந்த

சங்கத்தமிழ் முதல்

இப்போதைய

இலக்கியம் வரைக்கும்

இடுப்பில் ஈரத்துணியோடு

இருந்த்வர்கள் எத்தனைப் பேர்?


ஒவ்வொரு கவிஞனின்

இரும்புப் பெட்டியிலும்

இருப்பதெல்லாம் என்ன?

கறையான்களிடம் காப்பாற்றப்பட்ட

ஒரு சில

ஓலைச்சுவடிகளைத் தவிர!


தமிழ்

தனக்கும் சேர்க்கவில்லை

தன்னை அண்டியவனை

சேர்க்கவும் விடவில்லை.


தமிழனின் கண்களில்

விழுந்த தூசை

துடைப்பதற்கு வந்தவன் கையில்

ஆயுதம்

நமக்கோ கைகளில்லை.


அதனால் தான்

சரித்திரம் என்கிற நதி

ஒரு கரையில் சோலையிலும்

ஒரு கரையில் பாலையிலும்

ஓடிக் கொண்டிருக்கிறது.


நமது அறிஞர்களோ

நல்லதொரு சமுத்திரத்தில்

அலைகளைப் பிடிக்க

வலைகளை வீசுகிறார்கள்.


தமிழுக்காக வாழ்ந்து

தமிழுக்காக இறந்தவன் ஒருவன்

இப்படி எழுதினான்.


தமிழில்

எவ்வளவுக்கு எவ்வளவு

இளமை இருக்கிறதோ

அவ்வளவுக்கு அவ்வளவு

வறுமையும் இருக்கிறது.


ஒன்று மட்டும் உறுதி

தமிழைக் காப்பாற்றுங்கள் என

தானாக சென்று எவனையும்

அழைக்கவும் முடியாது.

அப்படிக் காப்பாற்ற வந்தவன்

பிழைக்கவும் முடியாது.


காரணம் தமிழில்

கல்வெட்டுகள் இருக்கிறதே தவிர

பொன்வெட்டுகள் இல்லை.


தமிழ்ச்சாதி

சிந்தை பொங்கி

சித்ததானம் செய்யலாம்.

ஆயின்

அதற்கு இன்னமும்

ரத்ததானம் செய்தல்

அவசியமாக இருக்கிறது.


போகிற போக்கைப் பார்த்தால்

தமிழ்க் கருவூலமே என்று

வருத்தம் உண்டாகிறது.


தோனியைப் போலல்லாமல்

ஆணியடித்ததைப் போல்

அமர்ந்தே கிடந்தாலும்

அரசாங்க உத்தியோகம் தேவலை.


ஆம்

மாதம் ஒருமாரியாவது

அரசாங்க மேகம்

அபிஷேகம் செய்கிறது.


நமது தமிழ்

தானும் சேர்க்கவில்லை

தன்னை அண்டியவனை

சேர்க்கவும் விடவில்லை.

Wednesday, July 16, 2008

தமிழுக்கு நிறம் உண்டு


நேற்றய தினம் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாள். இன்றைக்கு தமிழை ஆண்டுக் கொண்டிருக்கிற கவிஞராக உலகத்திலேயே உள்ள எல்லாப் பொருள்களைப் பற்றியும் பாடக்கூடிய வல்லமை வாய்ந்தவராக வைரமுத்து திகழ்கிறார்.

அவருடைய கவிதைகள் பல எனக்கு மிக அத்துப்படி. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என் நினைவில் இருந்து அழியாது. முக்கியமாக அம்மா, கூடு மற்றும் உலகம் எனும் கவிதைகள் படிக்க படிக்க திகட்டாது. அவருடைய தமிழுக்கு நிறம் உண்டு எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இருந்து ஒரு கவிதையை இங்கே எழுதிப் போகிறேன்.

பிற்சேர்க்கை

ஒன்று:
சொல்லுங்கள் புலவரே!
முத்துக்கள் பிறக்கும்
இடம் பத்து…

மேகத்தில் பிறக்கும்
சங்கில் ஜனிக்கும்
சிற்பியில் இருக்கும்
தாமரையில் உயிர்க்கும்
வாழையில் கிடைக்கும்
மூங்கிலில் முளைக்கும்
தந்தத்தில் வெடிக்கும்
நாகத்தில் தெரிக்கும்

“ஒன்றை மறந்தீரே…”
“என்னது?”
“உழைப்பவன் நெற்றி”

இரண்டு:

சொல்லுங்கள் அறிஞரே!
மூடநம்பிக்கை
எவை எவை?
கழுதை கத்துதல் சுபம்
விதவை எதிர்வந்தால் பாவம்
மொட்டையடித்தால் முக்தி
உள்ளங்கை அரித்தால் வருவாய்
காலையில் காணும் கனவு பலிக்கும்
“ஒன்றை மறந்தீரே!”
“என்னது”.
“மந்திரியிடம் மனு”

மூன்று:

சொல்லுங்கள் ஜோசியரே!
இருட்டில் செய்யத்தகாதவை
எவை எவை

முடிவெட்டலாகாது
நகம் களைதலாகாது
பேன் பார்த்தலாகாது
அழுக்குத்துணியை
வெளுக்கப் போடலாகாது
உப்போ மோரோ
இரவல் தரலாகாது
பல் துலக்கலாகாது
கடன் கொடுக்கலாகாது

“ஒன்றை மறந்தீரே!”
“என்னது?”
“தொலைக்காட்சி ஆகாது”


நான்கு:

சொல்லுங்கள் பண்டிதரே!
பார்க்க முடியாதவை எவை?

அலையற்ற கடல்
இறவாத உடல்
ஆகாயம் இல்லாத ஊர்
நீர் கலவாத மோர்’
திரையரங்கில் தேசிய கீதம்
பிழைக்கத் தெரிந்த கவிஞன்
கைதொடாத காதலன்
வாழைமரத்தில் ஊஞ்சல்
உலோபியின் புன்னகை

“ஒன்றை மறந்தீரே”
“என்னது”
“ஜனநாயகத்தின் சத்தியம்”


நன்றி: தமிழுக்கு நிறம் உண்டு

Sunday, July 13, 2008

நூல் வெளியீடு: கிள்ளான் & ஈப்போ

ஜூலை 14, திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், அரச நகர் கிள்ளானில் உள்ள லக்சமனா அரங்கில் ‘வேராக நீ; நிழலாக நான்’ எனும் நூல் வெளியீடு காண்கிறது.
சிறுகதை எழுத்தாளர் எஸ்.எம்.ஆறுமுகம் தான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து வேராக நீ-நிழலாக நான் என்னும் பெயரில் வெளியிடுகிறார். மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் சிறப்புரை ஆற்றும் இந்த நிகழ்வில் எழுத்தாளர் ப.சந்திரகாந்தம் நூலாய்வுரை வழங்குகிறார்.

இலக்கிய ஆர்வாலர்களும் தமிழன்பர்களும் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குபடி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.


*****

'மலேசிய இந்தியர்கள் ஓராய்வு' எனும் நூல் எதிர்வரும் 27 ஜூலையில் வெளியீடு காண்கிறது. க.கலைமுத்து எழுதிய இந்நூல் ஈப்போ காயிங் சங்க மண்டபத்தில் மாலை 4 மணியளவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இந்நூல் விலை ரி.ம 40 வெள்ளிக்கு சந்தையில் விற்பனைக் காணவுள்ளது. வெளிநாட்டுச் சந்தையில் இந்நூல் அமெரிக்க டாலர் 20க்கு விற்கப்படும். நிகழ்வின் அன்று இந்நூலை வாங்க விரும்புபவர்கள் ரி.ம 30 வெள்ளிக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

மலேசிய தமிழ் அன்பர்கள் இந்நூல் நிகழ்வில் கலந்துச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, July 08, 2008

ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலை


மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை எனும் புத்தகம் ஜானகிராமன் ஐயா அவர்களால் எழுதப்பட்டது. இதில் வரும் கவிதை ஒன்றை என்றேன்றும் என்னால் மறக்க முடியாது. இன்றும் கூட இப்புத்தகம் என் கண்ணில் படுகையில் இக்கவிதை வரிகள் என் எண்ண அலைகளை ஆக்கிரமிக்கும். லேசான சோகம் ஒன்று என்னை ஆட்கொள்ளும்.

ம‌லாயாவின் பொருளாதார‌ம் முப்ப‌துக‌ளில் ப‌டுவீழ்ச்சி க‌ண்டிருந்த‌து. இர‌ப்ப‌ரின் விலை மிக‌ மோச‌மாக‌ வீழ்ச்சி க‌ண்டிருந்த‌தால், அத‌ன் உற்ப‌த்தியை அதிக‌மாக‌வே குறைத்துவிட‌ நேர்ந்த‌து. அதனால் த‌மிழ்த் தொழிலாள‌ர்க‌ள் ப‌ல‌ர் திரும்ப‌ இந்திய‌ நாட்டிற்கே க‌ட்டாய‌மாக‌ அனுப்பி வைக்க‌ நேர்ந்த‌து.

அந்நிலையில் பால்ம‌ர‌ம் சீவும் தொழிலாளி ஒருவ‌ன் துரையையும் கிராணியையும் க‌ங்காணியையும் ம‌க்க‌ளையும் விட்டுப் பிரிய‌ ம‌ன‌மில்லாம‌ல் க‌ண்ணீர் சிந்துவ‌தாக‌ ஒரு தொழிலாளியின் நோக்கு நிலையில் ரா.சுப்பிர‌ம‌ணி ஐய‌ர் என்ப‌வ‌ர் ஒரு க‌விதையை இய‌ற்றியுள்ளார். இக்க‌விதையில் தோட்ட‌புற‌ பின்ன‌னி, வாழ்விய‌ல் கூறுக‌ள், ம‌ண்ணின் ம‌ன‌ம் ஆகிய‌ன‌ சிற‌ப்பாக‌ வெளிப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.


போய்வாரேன் பால்ம‌ர‌மே போய்வாரேன் பால்ம‌ர‌மே
போய்வாரேன் பால்ம‌ர‌மே போய்வாரேன் பால்ம‌ர‌மே
க‌ண்ணாடித்துரையும் போனார்
க‌ங்காணி வீர‌ன் போனார்
பின்னாடி கிராணி போனார்
தாங்காம‌ல் நானும் போரேன்
என்ன‌மோ பின்னாலே எப்போதூன்னை
காண‌ப்போரேன்
(போய்)

ப‌வுனுக்கு ப‌வுன்விலையாய்
பாலுவித்த‌க் கால‌ம் போச்சே
புளிவிலைக்கும் தோற்றுப் போச்சே
பாலுவெட்டும் நிறுத்த‌லாச்சே
யார்செய்த‌ மோச‌ம் பாராய்
எவ‌ரிட்ட‌சாப‌ம் கூறாய்
(போய்)

ரொட்டிப்பால் ஒருவிலையும்
ஒட்டுப்பால் ஒருவிலையும்
ப‌ட்டைக்கு ஒருவிலையும்
(பாலு) கொட்டைக்கு ஒருவிலையும்
த‌ங்க‌ம்போல் விலைத‌ந்தாய்
ப‌ங்க‌மாய் நிலைகுலைந்தாய்
(போய்)

தீபாவ‌ளி ப‌டியென்றும்
பொங்க‌லுக்குப் பொடியென்றும்
சீராய்கொடுத்த‌ எந்த‌ன்
சிரித்த‌முக‌த்துத் துரை
கையைத்தான் விரிகிறாரே
காசென்று கேட்டாலிப்போ
(போய்)


க‌ற்ப‌க‌மென்று சொல்வார்
க‌ண்ட‌தில்லை இவ்வுல‌கில்
க‌ற்ப‌க‌ம் என்று சொல்ல‌
க‌ண்க‌ண்ட‌ ம‌ர‌மும் நீயே
கால‌மே கோல‌மோ
காப்பாற்றுவார் இல்லையே
(போய்)

உன்னைந‌ம்பி வாழ்ந்த‌வ‌ர்க‌ள்
எத்த‌னை பேர்க‌ளுண்டு
அத்த‌னை பேர்க‌ளுமே
அழுதுகொண்டு போகுறாரே
உயிர‌ள‌வும் ம‌ற‌க்க‌மாட்டேன்
ஊருக்குப் போய்வாரேன்
(போய்)


ஆதார‌ம் ம‌லேசிய‌த் த‌மிழ் க‌விதை மாநாடு
ம‌ல‌ர் 2000 ப‌க்க‌ம் 153

ந‌ன்றி : திரு.ஜான‌கிராம‌ன் (ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலை)

Thursday, June 26, 2008

பின்னூட்டமே பதிவாக (உடையார்)

(நேற்றய பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் இதுவும் ஒன்று. திரு.விஜய் அவருடைய கண்ணோட்டத்தில் உடையார் புத்தகத்தை பற்றி சொல்லி இருக்கிறார். இதை பின்னூட்டமாகவே விட்டுவிடால் பலரையும் போய்ச் சேராது என்ற நோக்கில் பதிவாகப் போடுகிறேன்.)

வணக்கம்

பொன்னியின் செல்வன் ஒரு கற்பனைப் புதினம். ஆழ்வார்க்கடியான், நந்தினி, சேந்தன் அமுதன் போன்றவை கற்பனைப் பாத்திரங்கள். இதில் சேந்தன் அமுதன் அரியணை ஏறும்வரையிலான சம்பவங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன, சில பல கற்பனைச் சம்வங்களோடு. இவ்வாறு கூறுவதால் கல்கியைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். எள்முனையளவும் எனக்கு அத்தகைய நோக்கம் கிடையாது.

உடையார், ராஜராஜ சோழனின் வாழ்வை வேறு தளத்தில் அலசுகிறது. ராஜராஜரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களான தேவார மீட்பு, பெரிய கோயிலைக் கட்டுவித்தல், அதிமுக்கியமாக அவருடைய அந்திமக் காலம் ஆகியவை பொன்னியின் செல்வனில் கூறப்படவில்லை. அந்தக் குறையை உடையார் போக்குகிறது. மேலும் ராஜராஜர் நிகழ்த்திய முக்கியமான யுத்தங்களைப் பற்றியும், அவருடைய காலத்தில் இருந்த சமூகத்தின் அமைப்பையும் பற்றி உடையார் அலசுகிறது. பொன்னியின் செல்வன் நூல் ராஜராஜரை ஒரு காதல் இளைஞனாக (சாக்லேட் பாய்), பிள்ளைக் குறும்புகள் மாறாத ஒரு இளைஞனாக மட்டுமே காட்டுகிறது. முதிர்ந்த அறிவுடன் ஒரு மகத்தான தியாகத்தைச் செய்யும் மகோன்னதத்துடன் அந்த பாத்திரம் முடிவுக்கு வந்துவிடுகிறது.

மேலும் பொன்னியின் செல்வன் புதினத்தின் நாயகன் வல்லவரையர் வந்தியத்தேவர். ஆனால் உடையார் முழுக்க முழுக்க ராஜராஜரை மட்டுமே கதை நாயகராகக் கொண்டது.

உடையாரில் அவருடைய காதல் வாழ்வு மட்டுமல்லாது அவருடைய மணவாழ்வும் விவரிக்கப்பட்டுள்ளது. அவருடைய முதிர் பருவத்தில் பஞ்சவன் மாதேவிக்கும் அவருக்கும் இடையே நிலவிய அனுக்கமான காதல் வாழ்வு பொன்னியின் செல்வனில் விவரிக்கப்பட்ட அருண்மொழிக்கும் வானதிக்கும் இடையிலான காதல் வாழ்வைப் போன்றே சுவைபடக் கூறப் பட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ்த்த இயலாத மகோன்னதங்களை நிகழ்த்திக் காட்டிய ராஜராஜரின் வாழ்வை கல்வெட்டு மற்றும் தாமிரப் பட்டய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியம் உடையார்.

ராஜராஜரைத் தவிரவும், பெரிய கோயில் என்ற கலை அதிசயத்தின் கட்டுமானக் காலத்தில் அதற்கு உறுதுணையாக இருந்த பலருடைய வாழ்வையும் விவரிக்கிற நூலாகவும் உடையார் விளங்குகிறது.
இப்போது தயாரிப்பில் இருக்கும் உளியின் ஓசை என்ற திரைப்படம் கூட பெரிய கோயிலின் கட்டுமாத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு சிற்பின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவையே.

பொன்னியின் செல்வனில் சற்றேறக் குறைய என்பத்திமூண்றாண்டுகள் வாழ்ந்த ராஜராஜரின் வாழ்வில் முதல் முப்பது ஆண்டுகள் கூட விவரிக்கப் படவில்லை என்பது எனக்குள் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. உடையார் அந்தக் குறையை நிவர்த்திக்கிறது.

பொன்னியின் செல்வனைப் போலவே உடையாரும் வாசிப்பிற்குகந்த ஒரு நல்ல நூல் என்பதே இதன் வாயிலாக நான் கூற விழைவது.

நன்றி.

Monday, June 23, 2008

இன்னமும் படிக்காத புத்தகங்கள் (உடையார்)

நான் முன்பு கூறியதைப் போல சரித்திர நாவல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தான். பொன்னியின் செல்வனைப் படிப்பவர்கள் தொடர்ந்து சரித்திர நாவல்களைப் படிக்க விருப்பப்படுவார்கள் என ஐயம் இல்லாமல் கூறலாம்.

முன்பு இந்நாவலை படித்துக் கொண்டிருந்த சமயம், இதை முடித்து விட்டு பாலகுமாரனின் ‘உடையார்’ நாவலை படியுங்கள் என சீ.வீ.ஆர் அண்ணாச்சி சிபாரிசு செய்தார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி தான் உடையார் என்று கூறினார். முன்பு இதைக் கூறும் போது அவர் அமேரிக்காவில் இருந்தார். தற்சமயம் இந்தியா திரும்பியதில் இருந்து அவரை ஜி-டாக்கில் பார்ப்பது அரிதாகிவிட்டது.

இந்நாவலைப் படிப்பதற்கு முன்பாகவே பல விடயங்களை தெரிந்து கொண்டாகிவிட்டது. பொன்னியின் செல்வனைப் போல் இதில் சுவாரசியம் குறைவு எனவும் கூறக் கேள்விப்பட்டேன். இரு ஆசிரியர்களும் அவர்கள் பாணியில், அவர்களுக்கே உரிய நடையில் எழுதி இருப்பார்கள். கல்கியின் எழுத்து நடையை ஏற்றுக் கொண்ட நான் பாலகுமாரனின் பாணியையும் ஏற்றுக் கொள்வேன் என நினைகிறேன்.

ஈப்போ மற்றும் கோலாலம்பூரிலும் பல புத்தகக் கடைகளில் தேடிப் பார்த்துவிட்டேன். கிடைத்தபாடில்லை. கடைசியாகப் பார்த்த கடையில் 6 பாகம் 440 ரிங்கிட் என சொன்னார்கள். பொதுவாக மற்ற கடைகளில் 1 ரூபாய்க்கு 0.25 சென் என கணக்கிடுவார்கள். இந்தக் கடையில் மட்டும் ரூபாய்க்கு 0.37 சென் என கணக்கு போட்டார்கள்.

பிறகு நான் வாடிக்கையாக தமிழ் புத்தகம் வாங்கும் கடைக்காரர் , இந்தியாவில் இருந்து புத்தகம் தருவித்துக் கொடுப்பதாக கூறினார். மொத்த விலை 350 ரிங்கிட் வந்தது. (ஆர்டர் கொடுத்து பிறகு ரத்து செய்துவிட்டேன்).

அன்று நண்பர் வெங்கட்ராமனுடன் ஜீ-டாக்கில் அரட்டை அடிக்கும் போது உடையார் புத்தகத்தை பற்றிக் கேட்டேன். தற்சமயம் அவர் உடையார் படித்துக் கொண்டிருப்பதாகவும், வேண்டும் என்றால் வாங்கி அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன் மூன்று பாகங்களை முதலில் அனுப்பி வைத்துவிட்டார். இன்னும் ஒரு வாரத்திற்குள் வந்துவிடும். வந்ததும் ஆரம்பிக்க வேண்டும். நண்பர் வெங்கட்ராமனுக்கு எனது நன்றி.

பொன்னியின் செல்வன் படித்த போது கிடைத்த இன்பத் தாக்கம் கல்கியின் பார்த்திபன் கனவு படிக்கும் போது கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான். இந்நாவலில் எனக்கு விளங்காத ஐயப்பாடுகள் இன்னமும் உண்டு.

Thursday, June 19, 2008

வைரமுத்துவின் - வானம் தொட்டுவிடும் தூரம்தான்

தலைப்பு: வானம் தொட்டு விடும் தூரம்தான்

ஆசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து

நயம்: சமூக நாவல்

பதிப்பகம்: சூர்யா

எனது செகரிப்பில் உள்ள புத்தகங்களில் கவிதை நூல்களும் அடங்கும். அதில் அதிக இடத்தை பிடித்திருப்பது கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை நூல்கள். பா.விஜய், கவிஞர் கண்ணதாசன், அறிவுமதி மற்றும் சில உள்ளூர் கவிஞர்களின் கவிதை நூல்கள் இருப்பினும், நேரம் அனுமதிக்கும் சமயங்களில் நான் அதிகம் புரட்டிப் பார்ப்பது கவிப்பேரரசின் கவிதை வரிகள்தான்.

சென்ற வருடம் கவிதை நூல்கள் தேடிக் கொண்டிருந்த பொழுது தட்டுப்பட்டது “வானம் தொட்டுவிடும் தூரம்தான்” எனும் புத்தகம். கவிதை நூலாக இருக்கும் என நினைத்துதான் கையில் எடுத்தேன். பின்னால் திருப்பிய பொழுது ‘இது கவிஞரின் முதல் நாவல்’ என அச்சிடப்பட்டிருந்தது.

இதற்கு முன் கவிஞரின் ‘சிற்பியே உன்னை செதுக்குகிறேன்’ என்ற கட்டுரை புத்தகத்தை வாசித்துள்ளேன். அதிக அளவிளான புத்திமதிகளை ஒரு இளைஞனுக்கு ஒரே புத்தகத்தில் புகட்ட முயற்சித்திருப்பது சற்று திகட்ட வைத்தது. அவரின் கவிதை வரியிலான புத்திமதிகளை ஏற்றுக் கொண்டு மனதையும் தேற்றிக் கொண்டேன்.

கையில் எடுத்த புத்தகத்தை வைக்க மனம் இல்லாமல், சரி என்னதான் இருக்கும், ஒரு கை பார்த்துவிடலாம் என வாங்கிவிட்டேன். உரைநடையில் கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் ஏமாற்றமாய் அமையலாம். உரைநடையையும் கவிதை தேனில் கலந்து கொடுப்பது கவிஞரின் பாணி.

நான் படித்து முடித்த பிறகு என் நண்பர் ஒருவர் இந்நூலை இரவல் வாங்கினார். இரண்டு வாரம் கழித்து “என்னால இரண்டு அத்தியாயத்துக்கு மேல முடியல மச்சி, நீங்களே வச்சிகுங்க” என திருப்பித் தந்துவிட்டார்.

நீங்கள் படிக்கும் போது வரிக்கு வரி இருக்கும் கவிதை வாடை உங்களை முகம் சுழிக்க வைக்கலாம். அதை ரசித்துக் கொண்டே புரட்டினால் நிச்சயம் இரண்டு நாட்களில் முடித்துவிடலாம்.

கதையின் நாயகன் வாஞ்சிநாதன், நாயகி செல்வி, மற்றும் முக்கிய கதா பாத்திரம் செந்தோழன். பட்டபடிப்பை முடித்துவிட்டு கிராமத்தில் இருக்கும் ஒரு இளைஞர் கூட்டத்தை சுற்றி நடக்கும் கதைக் கரு. வேலையில்லாமல் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கும் ஏழை இளைஞர்களுள் ஒருவன் தான் கதையின் நாயகன். அவன் செல்வியின் மேல் காதல் வயப்படுகிறான். யார் இந்த செல்வி? அந்த ஊர் பெரியவர் சங்கரலிங்கத்தின் மகள். சங்கரலிங்கம் கதையின் வில்லன்.

தனது சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் ஊர் மக்களை தன் பிடியில் வைத்திருக்கிறான் சங்கரலிங்கம். சங்கரலிங்கத்தின் சூழ்ச்சியை ஊர் மக்களுக்கு உணர வைத்து வாஞ்சிநாதனையும் செல்வியையும் இணைத்து வைப்பதே கதைச் சுருக்கம். இந்நூலை வாசித்து முடித்தபோது பழைய சினிமா படத்தை பார்த்த கசப்பு உண்டானது. புதிய பாணியில் என்றால் சிம்புவின் படம். வித்தியாசமான நடையில் இருக்கும் நாவலை படித்த மகிழ்ச்சியும் உண்டானது.

கதையை படித்து முடித்த போது ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. “பணக்கார பெண்ணை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்ட வேலை இல்லா இளைஞன் இனி எப்படி வாழ்க்கையை நடத்தப் போகிறான்?”

இது கவிஞரின் முதல் நாவல் என்பதை மனதில் வைத்து ஏற்றுக் கொண்டாலும், ஒரு மாறுதலுக்காக கதையை வேறு கோணத்தில் கொடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

சுவாரசியமான உரைநடை நாவலை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் கசப்பு.
கவிதை வரியை நேசிப்பவர்களுக்கு தித்திப்பு.

பொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது? (இறுதிப் பதிவு)

(பொன்னியின் செல்வன்)


இது இத்தொடரின் கடைசிப் பதிவு.
முந்தய பதிவுகளை படிக்க இங்கே சுட்டவும் பகுதி1 பகுதி2

வானதி பொன்னியின் செல்வன் மேல் கொண்ட காதல்

சிறுபிராயத்திலேயே தாயை இழந்து , பின் தந்தையையும் சீக்கிரமே பறி கொடுத்துவிட்டு அன்புக்கு ஏங்கி நின்ற இந்த சிறு பெண்ணுக்கு, வாழ்வில் ஒரே பிடிப்பு என்பது தாய் பாசத்தையொத்த இளைய பிராட்டியின் அன்பு தான் … பருவம் வந்த பின்னும் கூட, குந்தவைக்கு அவள் குழந்தையாகவே தெரிந்தாள் …

ஆனால் வல்லிய விதியானது அவளையும் விட்டுவிடவில்லை … வந்தது ஒரு காட்டுப் பூனையின் ரூபத்தில்…. பூனையோடு பொருந்த (அதாவது சண்டையிட ….) யானை மேல் வந்தான் ஒருவன் … வேடிக்கையாக இல்லை ? ஆனால் கேவலம் பறவை இனமென்று பாகுபாடு பாராமல் , அந்த இளம் குஞ்சுகளின் உயிரைக் காத்த அந்த கருணைமிகு இதயம் … யாராக இருப்பன் அந்த யானைப் பாகன்? களங்கமில்லா தூய பால் போன்ற அவள் மனதை கொள்ளை கொண்டவன் யார் ? என்ற எண்ணங்கள் அவளுக்குள் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை இன்பமாக வதைத்தன …

வெளி உலகம் என்றால் என்ன என்பதையே அறியாது , கொடும்பாளுர் ஒன்றே உலகம் என்று வளர்ந்து வந்த ஒரு அறியாப்பெண்; காதல், களவு போன்றவற்றை கனவில் கூட எண்ணிப்பார்த்திராதவள் … அதனால் … கள்ளம் , கபடம் , கவலை ஏதும் இன்றி மனம் போல் ஆடிப்பாடி , களிப்பில் மூழ்கிக் கிடந்தவளின் உள்ளத்தில் இப்போது ஏதோ ஒரு பெரும் மாற்றம் … மானைப் போல துள்ளிக்கொண்டு திரிந்த கால்களில் இன்று ஒரு சிறிய தயக்கம், தடுமாற்றம் … தோகை விரித்தாடும் மயிலைப்போல வான வெளியெங்கும் சுதந்திரமாக சுற்றி வந்த அவளின் மனம் இன்று கூண்டில் அடைபட்ட கிளியாக ஆகிவிட்டது ஏன் ?

குளத்தில் விழும் கல் தண்ணீரில் வட்ட வட்டமாய் அழகிய அலைகளை எழச்செய்வது போல் … அவளின் உள்ளத்தடாகத்தில் ஒரு அழகிய வீர திருமுகம் இன்ப அலைகளை எழுப்பி விட்டிருக்கிறது …. அந்த அனுபவம் அவளுக்குப்புதிதாக மற்றுமின்றி புதிராகவும் இருந்தது … புரியாத சிலவற்றில் தான் போதையும் , ஈடுபாடும் அதிகம் உண்டாகும் என்பது உண்மையோ? தான் கொடும்பாளூர் இளவரசி என்று அறிந்ததும் அவன் கோபம்கொண்டு விருட்டென்று திரும்பிச் சென்றது ஏன் ? மீண்டும் சந்தித்தால் அவன் ஏன் அவ்வாறு கோபம் கொண்டான் என கேட்கவேண்டும் … அந்த யானைப்பாகனை மறுபடியும் காண முடியுமா ? என்றெல்லாம் அந்த சிறுபெண்ணின் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் அலை மோதின …

ஆனால் … அவன்தான் இந்த நாட்டு மக்களின் ஆத்மார்த்தமான அன்புக்கு உரியவன் … அரசற்கு அரசர்களை எல்லாம் அடி பணிய வைக்கும் அஞ்சா நெஞ்சன் , வீரத்தில் , கருணையில் , அழகில் இந்த அகிலமே போற்றும் `அருள் மொழி வர்மன் ‘… என்ற உண்மை அவள் உள்ளத்தில் பேரிடியாக இறங்கியது … நாடே போற்றும் இளவரசரை , கேவலம் ஒரு யானை பாகன் என்று நினைத்தோமே ? இந்த அரசே அவனுடையது … அவனுக்கே அரசாங்க உத்யோகம் வாங்கித்தருவதாக சொன்னோமே … என்ன வேடிக்கை , இல்லை .. மூடத்தனம் ? என்றெல்லாம் அவள் நினைத்து உள்ளம் கலங்கிக்கொண்டிருந்த வேளையில், அவன் முன்னே தீபம் ஏந்தி நின்று , அவனை வாழ்த்தி , வெற்றி மலை சூட்டி வழியனுப்ப வேண்டும் என்றால் ? …

தயக்கமும் , குற்ற உணர்வும் , அவற்றோடு பெண்களுக்கே உரிய இயற்கையான அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பென்னும் நால்வகை உணர்ச்சிகளும் ஒருங்கே உந்தித்தள்ள , அவன் தன்னை ஏறெடுத்துப்பார்த்த அந்த நொடியில் , அவள் தன்வசம் இழந்து மூர்ச்சை ஆகிச் சரிந்தாள் … ஆனால் … இது அபசகுனத்திற்கான அறிகுறியல்ல … அவளை அவன் எப்போதும் நினைவில் வைத்திருக்க தூண்டும் நல்லதொரு சந்தர்ப்பம் என்பதையோ … அவனும் , இப்படி ஒரு விசித்திரப்பெண்ணை முதன் முதலில் பார்த்ததைத் தன் ஆயுள் முழுவதும் மறக்கப் போவதில்லை என்பதையோ …, பாவம் , அப்பேதை அறியாள் …
(வானதி)
அவனை ஒரு வேலைக்காரன் என்று பரிகாசம் செய்தது , அவன் போர்க்களம் போகும் சமயத்தில் , விபத்து போல் தீபத்தை தவற விட்டது என்பதையே அவள் மனம் நினைத்து கொண்டிருக்க … அந்த நினைவுகளே அவன் மீது அளப்பெரும் காதலாக உருப்பெற்று வளர்ந்து வருவதை அவள் அறிந்திறாள் …. இருந்தாலும் , அவனை மணந்து கொள்ள இந்த சோழ நாட்டின் ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் விரும்புவாள் … அதையே தான் செய்தால் … பட்டமகிஷி ஆகும் எண்ணத்திலேயே !!! என்ற ஏளனப்பேச்சும் வரும் … யானைப் பாகனாகவே அவன் இருந்திருக்கக்கூடாதா ?…

“நான் அவனை யானைப்பாகனாக இருக்கும்போதே விரும்பினேன் … அவன் இளவரசனா என்று அப்போது எனக்கு தெரியாது … அதைப்பற்றிய கவலை அப்போது அல்ல எப்போதும் எனக்கு இல்லை , அவன் அன்பு ஒன்றே ஏன் பிறவியின் பயன் , அவன் இதயமே எனக்கு அரியாசனம் “… என்றெல்லாம் அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொண்டு , தன் காதலுக்கு உரமேற்றி வளர்த்துவந்தாள் …. பிரதிபலன் எதுவும் எதிர் பாராத காதல் தன்னுடையது என்று நிரூபிக்க ஒரு தருணம் வாராதா என்று வாடி வருந்திக்கொண்டிருந்தாள் …

அத்தகையவனை …ஒரு நாள் கடல் கொண்டு விட்டது !! என்ற செய்தி வந்தால்? … அதை அவள் காதுகள் கேட்டனவா ? இல்லை , அதற்கு முன்னமே அவள் உயிர் அவளிடத்தில் இல்லை என அறிந்து கொண்டாள் … இனி யோசிக்க என்ன இருக்கிறது ? இந்த உடம்பேனும் கூட்டைப்பற்றி இனி என்ன கவலை ? அவனோடு வானவெளியில் நட்சத்திரமாக ஜொலித்திருக்கவும் , சோலைத்தென்றலோடு கூடவே சேர்ந்து வரும் பூக்களின் நறுமணம் போல , அவன் ஆவியோடு சுற்றித்திரிந்திருக்கவும் அவள் தயாராகி விட்டாள் …

ஓடையில் பாய்ந்து தன் உயிரை விட்டுவிட துணித்து விட்டாள் … ஐயோ பாவம் , … அது கைகூடவில்லையே … தன்னைக் கரை ஏற்றிக்காப்பாற்றி, தன் உள்ளம் கவர்ந்தவனோடு தன்னை சேர விடாமல் பிரித்தது யார் என்று தெரிந்து கொள்ள அவள் விரும்பாததில் என்ன ஆச்சரியம் ? ஆனால் …அவனை கடல் கொண்ட செய்தி உண்மையல்ல என்று அறிந்ததும் உண்டான இன்பத்துக்கு அளவே இல்லை … ஆஹா … ஒரு நொடியில் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம் என எண்ணி மகிழ்வதற்குள் … அவன் இன்னொரு பெண்ணை நேசித்துக்கொண்டு இருக்கலாம் என்று கேட்கும் படி நேர்ந்ததே … என்ன கொடுமை !!! போகட்டும் … அவன் யாரை விரும்பினாலும் … என் காதல் மாறாது … அவன் உயிரைக்காத்த பெண்ணை அவன் விரும்புவதில் தவறு ஒன்றுமில்லை …. ஆனாலும் , தான் தன் தூய அன்பைக்காட்ட ஒரு வாய்ப்புக்கூட கிடைக்கவில்லையே என்று எண்ணி அவள் இன்னும் வேதனைப்பட்டாள் …

அன்று ஒரு நாள் , காவிரித்தாய் , கரை புரண்டு பொங்கி வந்த தன் அன்பினால் , அவளை குடந்தை ஜோதிடர் வீட்டுக்கூரையோடு சேர்த்துக்கொண்டு சென்ற போதும், தன் உயிரைப்பற்றிய கவலை சிறிதும் அவளுக்கு இல்லை … ஆனால் , தன்னை மீட்க வெள்ளத்தில் குதித்த அந்த ஓடக்காரப்பெண்ணை தான் காப்பாற்ற வேண்டும் , அவள் இளவரசருக்கு செய்த உதவிக்கு , பிரதி உதவியாக தான் அவளைக்காப்பற்றியாக வேண்டும் , இளவரசரின் மேல் உள்ள தன் மெய் அன்பை நிரூபிக்க இது போல் ஒரு பொன்னான தருணம் என்றும் அமையப்போவதில்லை … அந்த முயற்சியில் தான் இறக்க நேரிட்டாலும் , மரணத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் , அதை இளவரசர் உணரும் போது அவர் கண்களில் துளிர்க்கும் ஒரு சொட்டு கண்ணீர் மட்டுமே தனக்குப்போதும் … என்று எண்ணியே பூங்குழலியை அவள் முதலை வாயினின்று காப்பாற்றினாள்…
ஆனால் அவள் விஷயத்தில் விதியின் விளையாட்டுகள் இனிதாகவே இருந்தன …. தன் மனம் கொண்ட நாயகனும் தன்னை நினைத்து அல்லும் பகலும் மருகுகிறான் என்று அறிவதை விட ஒரு இனிய செய்தி வேறு என்ன இருக்க முடியும் ? அதை அவன் வாயினாலேயே கேட்கும் போது , அந்த நொடிக்க்காகவே தான் உயிர் வாழ்ந்திருப்பதாக அவள் நினைப்பதில் வியப்பொன்றும் இல்லையே ?

தன் காதலன் இறந்த செய்தி கேட்டு தன்னுயிரை விட்டுவிடத்துணிந்தவள் , தன் காதலனைக் காப்பாற்றியவளை தான் காப்பாற்றி, அவன் நன்றிக்கடனை தீர்க்க தன் உயிரையும் கொடுக்க முன்வந்தவள், தன் காதல் அவன் மீது தானே ஒழிய அரியாசனத்தின் மீதில்லை என்ற சபதத்தில் இருந்து வாழும் வரை வழுவாமல் இருந்தவள் … அந்த உத்தமியின் காதல் சாலச்சிறந்தது என்பதில் சந்தேகம் என்ன? ….
முற்றும்..


பொன்னியின் செல்வன் ஒரு அமுத சுரபியை போன்ற நாவல்… எழுதுவதற்கு இன்னும் நிறைய உள்ளன…
எ.கா: 1) மணிமேகலை வந்தியதேவன் மேல் கொண்ட காதல்
2) ஊமை ராணி சுந்தர சோழர் மேல் கொண்ட காதல்
3) பூங்குழலியின் காதல்
4) நந்தினியின் காதல்
இன்னும் நிறைய உள்ளன. காதலை தவிர்த்து மற்ற கண்ணோட்டதிலும் எழுதலாம்.

நன்றி.

Wednesday, June 18, 2008

பொன்னியின் செல்வன்-யாருடைய காதல் உயர்ந்தது ? (2)


(வந்தியத்தேவன்)

முதல் பாகம் இங்கே சுட்டவும்

குந்தவை வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல்

ஆனால் விதி யாரை விட்டது … எந்த நொடியில் அவள் வந்தியத்தேவனைச் சந்தித்தாளோ குடந்தை ஜோதிடர் வீட்டில்… அப்போது தான் அவள் “பெண்மை” பூத்ததை அவளே அறிகிறாள். வியப்பால் அகன்று விரிந்த தன் பெரிய கண்களால் அப்படியே வந்தியதேவனை விழுங்கி விடுவதுபோல் பார்க்கிறாள் … அவனது களை ததும்பும் திருமுகத்தைக்கண்டதும் தன்னையே இழக்கிறாள் … தன்னையும் அறியாமல் மெல்லிய இளம் காதல் துளிர் விடுவதை உணர்கிறாள் …

ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறதே ? அது என்ன ?… பாராளும் மன்னன் மகள் தான், அவனோ ஒரு வழிப்போக்கன் அவ்வளவே … தங்கள் காதல் பொருத்தமானதா என்று மனதுக்கும் , புத்திக்கும் ஒரு பெரும் போராட்டம் அவளுக்குள் தொடங்குகிறது ….

ஆனாலும் மனமே வெல்கிறது … தன்னுடைய நிலையில் இருந்து அவள் ஒரு போதும் இறங்கி வர இயலாது … தனக்கு இருக்கும் பொறுப்புகளை அவள் தட்டிக்கழிக்க முடியாது … எல்லா சாதரண பெண்களையும் போல காதலனே உலகம்… என்று அவனை நினைப்பதையே முழு நேர தொழிலாக (வானதி, மணிமேகலை மற்றும் பூங்குழலி போல்) அவள் செய்ய முடியாது … அதனால் அவள் காதலை மறைத்து வைக்க முயல்கிறாள் … அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறாள் … காதல் வயப்பட்ட தன் மனதை வந்தியத்தேவனிடம் பெரும்பாலும் அவள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை … ஆனால் , சரியான தருணங்களில் , அதை அவள் வெளியிட தயங்கவும் இல்லை … (சிறைச்சாலையில் , பொன்னியின் செல்வனுக்கு ஓலை கொடுத்து அனுப்பும் போது , சின்னப்பழுவேட்டரயரை தேடிச்சென்று திரும்பி வந்து வந்தியத்தேவன் அவளை பார்க்கும்போது … )




(குந்தவை)


தான் சோழ நாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அவள் வந்தியத்தேவனைப்போல் ஒரு அனாதையைக்காதலிக்கவில்லை … அவன் தனக்கு அடிமை போல் இருப்பான் என்று அவனை மணம் செய்து கொள்ள விரும்பவில்லை … அவ்வளவு சுயநலம் பிடித்தவளும் இல்லை அவள் … ஆனால் சோழ நாட்டின் மீது கொண்ட அன்பால் அவள் கட்டுண்டு கிடந்தாள் … அது அவளே அவளுக்கு இட்டுக்கொண்ட விலங்கு …

பெரிதாக பிரஸ்தாபித்தால்தான் காதல் உயர்ந்ததா என்ன ? இது இரு ஜோடி கண்களின் மௌன கீதம் … ஒரே எண்ணம் உடைய இரு மனங்களினின்று எழும் இனிய ராகம் … அவர்கள் பேசிக்கொள்ளத்தேவை இல்லை … அவர்களின் மனங்கள் இணைந்து விட்டதை அவர்கள் இருவருமே நன்கு அறிவார்கள் … இது ஒரு மென்மையான, மேன்மையான காதல் ….




தொடரும்…

Tuesday, June 17, 2008

பொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது ?


தலைப்பு: பொன்னியின் செல்வன்
ஆசிரியர்: கல்கி
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி
வந்தியத்தேவன் குந்தவை மேல் கொண்ட காதல்

விபத்து என்பார்களே… அது இதுதானோ? … அதுவும் விபத்தின் முடிவு இன்பமானதாக இருந்துவிட்டால்? … அதுதான் நம் நாயகனுக்கு நேர்ந்தது… குடந்தை ஜோதிடர் வீட்டில் அவன் கண்டது என்ன? சோதிடரையா? வானதியையா? இல்லவே இல்லை … குந்தவையின் பொன்முகம் ஒன்றைத்தான் … ஆயிரம் காவியங்கள் புகழ்ந்து பாட ஒண்ணாத அவள் அழகிய திருமுக மண்டலத்தைத்தான் … அதுவரை அவனுக்குள் இருந்த இதயம் வெளியேறி, அவன் எதிரில், வியப்பும், மகிழ்ச்சியும் ஒரு சேரப்பொலிந்த குந்தவையின்பால் சென்று கலந்தது…

அவள் இளவரசியோ அல்லது சாதாரணபெண்ணோ, அந்த நொடியில் அவனுக்கு அது எதுவுமே தோன்றவில்லை … அங்கே , அந்த வேளையில் அவன் இளவரசியை சந்திப்பதை எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை …. எத்தனையோ போர்க்களங்களில், அவன் எதிரிகளின் கூரிய உலோக வாட்கள் சாதிக்க முடியாததை, இப்பெண்ணின் கண்களாகிய வாள்கள் சாதித்து விட்டனவே !!! அவனை அடியோடு சாய்த்து விட்டனவே !!! இதுதான் இயற்கையின் இணையில்லா வலிமையோ… இதுதான் இன்ப விபத்து என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த விபத்தில் சிக்கிக்கொள்ளலாமே … என்று எண்ணுகிறான் நம் நாயகன்.

ஆனால், அவள் இளவரசி என்று தெரிந்ததும், குந்தவைக்கு வந்த அதே தயக்கம், இன்னும் அதிகமாகவே அவனுக்குள் எழுந்து பாடாய்ப்படுத்துகிறது … தன் நிலை என்ன? அவள் நிலை என்ன? அரசர்கள் எல்லாம் அடிபணிந்து சேவகம் செய்யக்கூடிய “அரசிளங்குமரி” எங்கே? அனாதையாய் பழங்குடியின் பெருமையை மட்டும் தாங்கியிருக்கும் தான் எங்கே? தனக்கென்று ஒரு நாடில்லை… ஏன்? சொந்தமாய் வீடு கூட இல்லை… இது பொருந்துமா? நடக்குமா? உலகம் தான் ஏற்குமா? என்று அவனும் பலவாறு சிந்திக்கிறான் … ஒரு பெண்ணின் கண்களுக்கு உள்ள சக்தியை எண்ணி எண்ணி வியக்கிறான்…. மனப்போராட்டங்களில் தன் அமைதியை இழக்கிறான் … ஆனாலும் அதில் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்து அதில் திளைக்கிறான் …

காதல் என்ற ஒன்றை இதுவரையில் அவன் கேள்விப்பட்டுதானிருந்தான்… ஆனால் அதை இப்போதுதான் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறான் … ஒவ்வொரு முறையும் அவள் பொன்முகத்தில் தோன்றும் பலவகை பாவங்களில், அவள் தன்னை சிறிதளவேனும் விரும்புகிறாளா? இல்லையா? என்ற கேள்விக்கான விடையை தேட முயல்கிறான் .. ஆனால் அவள் கண்களை பார்த்தபின், தான் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம், என்ன எதிர்பார்த்து அவள் முன்பு இந்த நிமிடம் நிற்கிறோம் என்பதெல்லாம் அவனுக்கு எங்கே ஞாபகம் இருக்கின்றன? அவன்தான் தன்னையே அவளிடம் தொலைத்து விட்டானே…

அவள் தன்னை விரும்புகிறாள் என்பதை அவன் அறிவான் .. அவளும் தான் அவளை நேசிப்பதை அறிவாள்… எனவே, பெரிதாக பேசிக்கொள்ள ஒன்றும் இல்லை … ராஜாங்க விஷயங்கள், பாண்டிய நாட்டாரின் சதிச்செயல்கள், பழுவூர் இளையராணியின் பழிவாங்கும் படலம் இவற்றுக்கு நடுவே, காதல் கவிதைகள் புனைந்து மகிழ இருவருக்குமே நேரம் இல்லைதான்…. அதற்கான சமய சந்தர்ப்பங்களும் அமையவில்லைதான் ….

காவலர்களிடம் இருந்து தப்பி வந்து அவசர அவசரமாக ஓலை கொடுக்க வேண்டும், திரும்ப உடனே புறப்பட்டு இலங்கை செல்லவேண்டும், பின் திருடன் போல் பதுங்கிப்பதுங்கி மாறுவேடம் பூண்டு அவளை மீண்டும் வந்து சந்திக்க வேண்டும் .. அடடா .. எத்தனை இம்சைகள் .. இதற்கு நடுவே காதல் கீதம் பாட எப்படி மனமிருக்கும்?

இத்தகைய நெருக்கடிகளிலும் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையும், அன்பும் வலுவடைந்ததே தவிர நலிவடையவில்லை … சேர்ந்து இருக்கும் சமயங்களில், அவர்கள் தங்கள் காதலைப்பற்றி பேசியதைவிட, சோழ நாட்டைப்பற்றி கவலைப்பபட்டதுதான் அதிகம்…. ஆனாலும் அவர்கள் இருவரும் தங்கள் காதலின் மேன்மையை அறிவார்கள்… அதை வர்ணனைகள், வார்த்தைகள் எனும் மொழியின் சிறைகளுக்குள் அடைத்து வைத்து ரசிக்க இருவருமே விரும்பவில்லை !!! …

நாம் கூடத்தான் … சரி தானே?
கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராகவன் சாம்பத் குமார் அவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க…
தொடரும்…..

Thursday, June 12, 2008

நூல் நயம்: கடல் புறா



தலைப்பு: கடல் புறா
ஆசிரியர்: சாண்டில்யன்
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி

ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்குத் தகுதி இல்லை. படிக்கும் போது ஏற்பட்ட இன்பத்தாக்கத்தை எனது கண்ணோட்டத்தில் எழுதிவிடுகிறேன்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததால் ஏற்பட்ட தாக்கம் தொடர்ந்து சரித்திர நாவல்களை படிக்கத் தூண்டிற்று. சரித்திர நாவல்களை சேமித்துக் கொண்டும் வருகிறேன்.

தமிழர்களால் கண்டரியப்பட்ட கடாரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் எனக்குள் அதிகமாய் இருந்தது. ஆனால் தற்சமயம் ‘கெடா’ என அழைக்கப்படும் கடாரத்தின் வரலாற்றுக் குறிப்புகள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. மலாய்காரர்களின் ஆதிக்கத்திற்குப் பிறகு நடந்த வரலாற்றுக் குறிப்புகளே அதிகம் காணப்படுகின்றன.

இப்புத்தகத்தை வாங்குவதற்கே போதும் போதும் என்றாகிவிட்டது. ஆரம்பத்தில் தேடிய இடங்களில் 140 ரிங்கிட்டிற்கும் குறையாமல் சொன்னார்கள். அப்படி இப்படியென்று கோலாலம்பூரில் சற்று குறைந்த விலைக்குக் கிடைத்தது. தடித்த அட்டை கொண்ட மூன்று பாகங்கள். புத்தகத்தின் வாசனையே தனிதான்.

ஆடி 18-ம் நாளில் பொன்னியின் செல்வன் தொடங்குவது போல், கடல் புறா ஒரு சித்திரா பௌர்ணமியன்று தொடங்குகிறது. கதையின் நாயகன் கருணாகர தொண்டைமான். அவருக்கு காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகியென இரு காதலிகள்.

ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். தன் மகளுடன் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறார் குணவர்மர். ஸ்ரீவிஜயத்திற்கும் கலிங்கத்திற்கும் ஏற்கனவே நட்புறவு இருக்கிறது. இதன் வழி ஜெயவர்மன் கலிங்கத்தின் உதவியோடு குணவர்மனை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறான்.

இச்செய்தி சோழப் பேரரசுக்குத் தெரிந்துவிடுகிறது. குணவர்மனையும் அவர் மகள் காஞ்சனா தேவியையும் காத்து அழைத்து வர வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார். பாலூர்ப் பெருந்துறை சுவர்ண பூமியின் திரவுகோலாக திகழ்கிறது.

இதன் மமதையில் தன்னை சுற்றியுள்ள நாடுகளின் கடல் ஆதிக்கத்தை ஒடுக்க நினைக்கிறான் கலிங்கத்து மன்னன். முக்கியமாக கடலோடிகளாக சிறந்து விளங்கிய தமிழர்களின் ஆதிகத்தை. கலிங்கத்தில் வசிக்கும் தமிழர்களையும் தமிழ் வணிகர்களையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறான்.

கருணாகர பல்லவன் கொண்டு வரும் ஓலையை சற்றும் மதிக்காமல் தூக்கியெரிகிறான். பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குகிறான். அபாயத்தில் இருந்து தப்பி செல்கிறார்கள்.
கலிங்கம் மற்றும் ஸ்ரீவிஜயத்தின் கொட்டத்தை அடக்க தீர்மானம் எடுக்கிறான் கருணாகர பல்லவன். முதலில் கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை உடைக்கிறான். பிறகு குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியனையில் ஏற்றுகிறான். இம்முயற்ச்சிக்கு துணையாக உருவாவதே கடல் புறா எனும் போர் கப்பல்.

பொன்னியின் செல்வனைப் போல் கதை சுற்றி வலைத்துக் கொண்டுச் செல்லப்படவில்லை. கதாபத்திரங்களும் குறைவாக இருப்பதால் கதை சரலமாகப் போகிறது. இரண்டாம் பாகத்தில் அளவு கடந்த சிருங்கார ரசமும் வர்ணனைகளும் சற்று எரிச்சலூட்டுகிறது. பாதிக்கு மேல் கதை சூடுபிடித்து ஆர்வமூட்டுகிறது.

இக்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள்:

கருணாகர பல்லவன்: சோழர் படைத் தலைவன். இளைய பல்லவன் என அழைக்கப்படுகிறான். தந்திரசாளியும் புத்திசாளியும் கூட. ஸ்ரீவிஜய வெற்றிக்குப் பிறகு வீர ராஜேந்திர சோழ தேவர், கருணாகரனை வண்டை மாநில சிற்றரசானாக்கி காஞ்சனா தேவியையும் மஞ்சளழகியையும் மணம் முடித்து வைக்கிறார். (ஒரே கல்லில் மூன்று மாங்காய்). வண்டை மாநில அரசானான பிறகு தொண்டைமான் என அழைக்கப்படுகிறான்.

காஞ்சனா தேவி: கட்டழகி காஞ்சனா கடாரத்தின் இளவரசி. இவளின் துணிச்சல் கருணாகரனுக்கு இவள் மீது காதல் கொள்ளச் செய்கிறது.

மஞ்சலழகி: ஸ்ரீவிஜய பேரரசின் இளவரசி. ஆக்ஷய முனையின் தலைவி.
அநாபய சோழர்: பிற்காலத்தில் குழோதுங்கன் என பெயர் பெற்று விளங்குகிறார். கருணாகரனின் நண்பன்.

அகூதா: சீனக் கடல் கொள்ளைக்காரன். கருணாகரன் மற்றும் அமீர் என பலருக்கு பயிற்சியளிக்கிறார். பிற்காலத்தில் சீன தேசத்து அரசனாக திகந்தவர்.

அமீர்: இரக்க மனம் கொண்ட அரபு நாட்டு முரடன். கருணாகரனின் உப தலைவனாக பணியாற்றுகிறான்.

கண்டியதேவன்: கருணாகரனின் உபதலைவன். கப்பல் விடுவதில் திறமைசாளி.

அமுதன்: வணிகன். செல்வத்தை பாதுகாப்பதில் சிறந்தவன்.

அகூதாவின் கதாபாத்திரம் ஆர்வமூட்டும் வகையில் இருக்கிறது. இரண்டாம் பகுதிக்கு மேல் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போகிறது. அக்ஷய முனையின் தலைவனாக இருக்கும் பலவர்மனின் கதியும் அப்படியே. கல்கியை போல், இக்கதையின் ஆசிரியர் அவர்களின் சில தகவல்களை கொடுத்து கதையை முடித்திருக்கலாம்.

கதையின் கடற்போர் தந்திரங்களும், திருப்புமுனைக்களும் சுவை கூட்டியுள்ளன. கதையை படிப்பதற்குத் திகட்டாமல் இருக்கச் செய்கிறது. பெண்களை வர்ணனை செய்வதில் சாண்டில்யனை அடித்துக் கொள்ள முடியாது போலும். மஞ்சலழகியின் உண்மையான பெயரும் கடைசி வரையில் தெரியாமல் போகிறது.

ஸ்ரீவிஜய வெற்றியோடு கதை நிறைவை அடைகிறது. அதற்கடுதாற்போல் கலிங்கத்தின் படையெடுப்பு போன்றவை வேறு நாவல்களில் உள்ளனவா என தெரியவில்லை. இருந்தால் தெரிவிக்கவும். தரை போர் முறைகளைதான் அதிக அளவிலான சரித்திர நாவல்களின் கண்டிருப்போம். சரித்திர நாவல் பிரியர்களுக்கு கடல் புறா கண்டிப்பாக ஒரு வித்தியாசமான விருந்தாக அமையும்.