Showing posts with label மலேசியா. Show all posts
Showing posts with label மலேசியா. Show all posts

Tuesday, January 29, 2019

மயக்குறு திணை - சிறுகதை


”இங்க தான் படிச்சிங்களா? சின்ன வயசுல இந்த எஸ்டேட்ல தான் இருந்திங்கனு கேள்விப்பட்டேன். உள்ள வாங்க.” நுழைவாயில் பக்கம் வந்திருந்த தலைமையாசிரியர் அழைத்தார். ஆங்கிலத்தில் தான் உரையாடினார். 

”ஆமாம் சார், 91 பேட்ஜ், அங்க தான் வீடு இருந்தது, இப்போ உடைச்சிட்டாங்க போல, ஆறாவது பரிட்சை முடியறதுக்கு முன்னாடி இங்கிருந்து கிளம்பிவிட்டடேன்” உறுதிபடுத்தும் வகையாக சிரித்துக் கொண்டு அவரின் கரம் குலுக்கினேன். அதற்குள் பச்சை சாயம் பூசிய தேட்டத்துப் பலகை வீடிருந்த திசையைக் காட்டியிருந்தேன். காட்டுச் செடிகளின் புதர் நான் சுட்டிய திசையில் மண்டியிருந்தது.

”இப்போலாம் வெளிநாட்டுக்காரங்க தானே தேட்டத்து வேலை பாக்குறாங்க, குடும்ப அமைப்பிலான வீடுகளுக்குத் தேவை குறைஞ்சிட்டதால அதை எல்லாம் காலி செய்துட்டாங்க. நீங்க ஏன் கிளம்பிட்டிங்க?” அணிவகுப்புத் திடலில் நடந்தபடி பேசினார்.

”ஈப்போவுக்கு படிக்க போய்ட்டேன் சார். இங்க மறுபடி வருவேனு நினைச்சி கூட பார்க்கல”.

”நம்ம மக்கள் அதிகமா டவுன் பக்கம் போயிட்டதால தான் நிறைய பள்ளிக்கூடங்கள மூட வேண்டியதா போச்சு. இந்த ஸ்கூல பாருங்க படிக்கிற பிள்ளைகள பாதி பேர் அஸ்லிகார பிள்ளைகள்.” மொத்தம் 18 பேர் மட்டும் படிப்பதாக கூறினார். இந்தக் காரணத்தினால் தான் நான் பள்ளியைவிட்டுச் சென்றிருக்கக்கூடுமென தலைமையாசிரியருக்கு சுய தீர்மானம் இருந்தது. உண்மையில்லை தான். நான் அவரை மறுத்துக் கூறவும் விரும்பவில்லை.

பள்ளி வளாகத்தைக் கண்களால் அளந்தேன். மொத்தப் பள்ளியும் இளைத்துவிட்டதைப் போல் ஓர் உணர்வு. வருடத்தில் ஒரு முறை மலைத் தேனீக்கள் கூடுகட்டிச் செல்லும் பெரும் பாறை ஒன்று வளாகத்தில் இருந்தது. பாறை முழுக்க வண்ணம் பூசி மலாய் மொழியில் வாசகம் எழுதி இருந்தார்கள். பாறை சிவப்பும் வெள்ளையுமாக நிறம் மாறி இருந்தது. மலைத் தேனீக்கள் இனி வருவது சந்தேகமே.

பாறைக்கு முன் அணி வகுப்புத் திடல். அதை ஒட்டி பிரிட்டிஸ் காலத்தில் கட்டிய பலகை கட்டிடம். அதைக் கொட்டகை என்றும் கிண்டலடிப்போர் உண்டு. 1947-ல் இருந்து தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ள இடம். மறைப்புப் பலகைகளை வைத்து வகுப்புகளைப் பிரித்து பாடம் நடத்தினார்கள். இப்போதும் அப்படியே போதிக்கப்படுவதை காண முடிந்தது.

கொஞ்சம் புத்தகங்களோடு நூலகம் இருந்த இடம் புதுப்பித்த தலைமையாசிரியர் அறையாக மாறி இருந்தது. 1992-ஆம் ஆண்டு நிதி திரட்டி கட்டிய செங்கள் கட்டடத்தை ஆறாம் வகுப்பிற்கும் நூலகத்திற்கும் என வகுத்திருந்தார்கள். ஆறாம் வகுப்பு அப்படியே இருந்தது. நூலகத்தில் தலைமையாசிரியர் குடி பெயர்ந்திருந்தார்.

”கொஞ்சம் இருங்க சார், ஸ்கூல பார்த்துட்டு வந்திடுறேன்.” நான் கொண்டு வந்திருந்த பையை அவர் அறையில் வைத்துவிட்டு பக்கத்தில் இருந்த ஆறாம் வகுப்பு முன் சென்றேன். தன்னிரக்க உணர்வு என்னைக் கலங்கச் செய்தது. என் மனதிற்குள் வைத்துக் கொண்ட நினைவுகள் முயல் குட்டிகளாக வெளிவர எத்தனித்தன.

”உன்ன ஆறு ஏ எடுக்க ஒழுங்கா படிடானு சொன்னா... என்ன பண்ணிகிட்டு இருக்க...” சந்திரன் வாத்தியார் என் இடது கையைப் பிடித்துக் கொண்டு கண்மண் தெரியாமல் முதுகு, பிட்டம், கால் என பிரம்பால் விலாசி வெளியே விரட்டியது இங்கே தான்.

நடந்தபடியே திடல் பக்கம் வந்திருந்தேன். கொஞ்சம் மழைப் பெய்தாலும் சகதியாகிவிடும் புல் வெளி. சகதியாக இருந்தாலும் விளையாட்டை விடக்கூடாது என்பதில் தின்னம் இருந்தது. அதற்காகவேனும் நெகிழியிலான காலனிகளையே பலரும் பயன்படுத்தினோம். துவைத்து துடைத்தாலே காய்ந்துவிடும். விலையும் மலிவு. துணியிலான காலனிகள் அதிக விலை மட்டுமல்ல, கேமரன் மலைக் குளிரில் சுலபத்தில் காயாது.

திடல் முடியும் இடத்தில் ஒரு மேடு தொடங்கி கொஞ்சம் நில இடவெளியும் பின் வேலியும் இருந்தது. வேலியை ஒட்டிய 'ரெஸ் பேரி' மரம் இன்னமும் அங்கேயே இருந்தது. அதே உயரம். 23 வருடங்களுக்கு முன் பார்த்த அதே செழிப்பு. என் நினைவுகளைப் போலவே எந்த மாற்றமும் இல்லாமல்.

அதன் பழங்களைச் சியாமளாவிற்காகவே பறித்துச் செல்வேன். ”புளிக்குதுடா இன்னும் பழுக்கல”. கருமை குறைவான ரெஸ் பேரி காயைக் காட்டி அவள் முகத்தைப் புளிப்பது என்னை மகிழ்ச்சிபடுத்தியது. ஆறாம் ஆண்டில் சியாமளா ஒவ்வொரு நாளும் அழகாகி கொண்டிருந்தாள்.

”டேய் மாற, சியாமளா உன் ஆளா டா?” என அருள் நேரடியாக விசாரித்தான். அந்தக் கேள்வி ஒரு உளக் கிளர்ச்சியைக் கொடுத்தது. சக மாணவர்களின் கற்பனை இதயக் குறியில் அம்பு விடும் தேவனாக என்னை மாற்றிக் கொண்டிருந்தது. அதை நான் மிகுதியாக விரும்பினேன்.

பரிட்சையில் ஆறு ஏ எடுப்பதாகக் கூறி அப்பாவிடம் முன்கூட்டியே ஒரு பி.எம்.எக்ஸ் சைக்கிளை லஞ்சம் வாங்கி இருந்தேன். தூரமில்லாத வீட்டுக்கு கூட அந்தச் சைக்கிளை ஓட்டிச் செல்வது ஒரு மிதப்பைக் கொடுத்தது. சியாமளா கூட எனது சைக்கிளை மிரள பார்த்திருக்கிறாள். பள்ளி முடிந்து அவளை சைக்கிளின் பின் அமர்த்தி மிதித்துக் கொண்டு ரகு கடையில் டியூப் ஐஸ் வாங்கித் தின்பதும் சில வேளைகளில் நடந்தது.

”வேகமா ஓட்டாத டா, பயமா இருக்கு” என என்னை இருக்கிப் பிடிக்கும் ஸ்பரிசத்தைக் காதல் மனம் கொண்டவர்களால் மட்டுமே உணர முடியும். என் மீது கொண்ட அதீத ஆசையிலாயே சியாமளா அன்யோன்யமாக பழகுவதாக கருதினேன். அவளின் மனதை புரிந்துக் கொள்வதில் எக்கச்செக்கமான குழப்பங்கள் இருந்தது. காதலை உறுதி படுத்தாத வரையில் அது சிக்கலான விசயம் தானே.

கணேசன் அதற்கு ஒரு தீர்வைத் தந்தான். ”ஒரு லெட்டர்ல நீ எல்லாத்தையும் எழுதி சியாமளா கிட்ட கொடுத்திடு, எழுத்திட்டு லெட்டர்ல பவுடர தூவிவிடு, அப்ப தான் லெட்டர் நல்ல வாசமா இருக்கும்” இடைநிலைப் பள்ளியில் இருக்கும் அவன் அண்ணன் அப்படிச் செய்ததாகக் கூறினான். அதுவே எனக்கும் நல்ல யோசனையாக தோன்றியது.

நல்ல நாள் பார்த்து என் கடைசி காதல் கடித்தத்தை சில பல பிருமாண்டங்களோடு அலங்கரித்து முடித்தேன். இடைவேளை நேரம் சியாமளாவிடம் அதைக் கொடுத்த போது அவள் வேகமாக அழ ஆரம்பித்திருந்தாள். அந்த நாள் என் வாழ்வின் பேரவலம் ஆனது. கதவின் முன் காவலில் இருந்த கணேசன் காணாமல் போயிருந்தான்.

வகுப்பாசிரியர் சந்திரனுக்குத் தான் முதலில் தெரிந்தது. அதன் பின் ஒரு பள்ளிக்கூடத்துக்கே அது பேசு பொருளாகி போனது. சந்திரன் ஐயா தன் பிரம்பாயுத்தை என் மீது பிரயோகிக்க ஆரம்பித்திருந்தார்.

”இனி நீ ஸ்கூல் பக்கமே வரக் கூடாது” அவர் தூக்கியெரிந்த என் பள்ளிப் பையின் அடிவயிரு கிழிந்து நூல்கள் சிதறின. என் அப்பாவுக்கும் இந்த விசயம் தெரிந்து இடைவார் பூஜை செய்து சில நாட்களில் என்னை ஈப்போவில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார்கள். நான் கடைசியாக பார்த்தது சியாமளாவின் அழுத முகம் தான்.

“என்ன மாறன் சார்' இங்கயே நின்னுட்டிங்க?” தலைமையாசிரியர் என் பின்னால் நின்றிருந்தார்.

“பழைய ஞாபகம் வந்திடுச்சு சார்”, துளிர்த்த ஞாபகங்களை மனக் கிணற்றில் மூடி வைத்துப் பேச்சை தொடர்ந்தேன்.

”இங்க இன்னும் பூசை போடுறாங்களா சார்?” திடலின் பக்கவாட்டில் பார்க்க அந்த மாரியம்மன் கோவில் முழுதாகத் தெரிந்தது. அதன் முன்னிருந்த தார் சாலையில் கவ்வாத்து செய்த தேயிலைகளைக் கழிவு பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

”மியான்மார்கார பையன் ஒருவன் விளக்கு போடுறதா சொல்றாங்க. வருசம் தவறாம திருவிழாவுக்கு மட்டும் தான் ஜனம் கூடுது”. கோவிலுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் ஏறக்குறைய ஒரே வயது தான். பல சிறு வழிபாட்டுத் தளங்கள் பராமரிப்பு இன்றி தடம் தெரியாமல் போனதாகச் சொன்னார்.

”Step Back in Time புத்தகத்துல இந்த தோட்டத்த உறுவாக்க தாப்பா வழியா கோமரன்மலைக்கு தமிழ் சஞ்சிக் கூலிகள் நடந்தே வந்ததாக குறிப்பிட்டிருக்காங்க. அதை எழுதினது இந்த தோட்ட முதலாளி தான். நாம விட்டுடோம் சார்”.

”பொருளாதார பேரலையில் நம் சமூகத்தின் இடப் பெயர்வும் தவிர்க்க முடியாது தான் மாறன். எதுவும் நம் கையில் இல்லை. சரி மேலிடத்தில் இருந்து நீங்கள் வந்த விசயத்தை சொல்லலையே”. துரித 'மைலோ' பானத்தை கப்பில் கொட்டி சுடுநீர் நிறப்பி என் முன் நகர்தியபடி கேட்டார்.

”உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச விசயம் தானே சார். இது இந்தப் பள்ளிக்கான இரண்டாவது கடிதம்.”

”மாணவர்களைப் பக்கத்துப் பள்ளிக்கு அனுப்பிட்டு இதை மூடிடலாம்னு சொல்றாங்களா? நீங்க படிச்ச இடமாச்சே. தீட்டின மரத்திலேயே கூர் பாக்குறிங்களே மாறன்”.

”எனக்கு இங்கு வேலை நியமனம் இல்லாதிருந்தால் இந்த விசயங்கள் தெரியாமல் போயிருக்கலாம். நான் வசித்த, படித்த இடம் என்பதாலேயே பார்க்க வந்தேன். நான் அரசு இயந்திரத்தின் தூது புறா மட்டுமே. குறைவான மாணவர்கள். பக்கத்துப் பள்ளியில் சேர்ந்துக் கொண்டால் ஒரே பள்ளிக்கான செலவில் சேரும்.” 

”வேறு ஏதும் செய்ய முடியாதா?” 

”பள்ளியை மூடாதிருக்க காரணங்களைக் குறிப்பிட்டு மறுபரிசீலனைக்கு கோரிக்கை வைக்கலாம், முதல் கடிதத்துக்கு அப்படி தான் செய்திருந்திங்க”.

”இன்னும் ஓரிரு வருஷம் தாக்கு பிடிக்குமா?” அந்தக் கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை.

”சரி சார் கிளம்புறேன், நிறைய வேலை இருக்கு”.

வேலிக்கு வெளியே இருந்த வாகனத்தை நோக்கி நடந்தேன். இடைவேளை நேரத்தில் பாரதியார் பாடலை இசைக்கவிட்டிருந்தார்கள். ’பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா, நிந்தன் பச்சை நிறத் தோன்று தையே நந்தலாலா’ என யோசுதாளின் குரல் இனித்துக் கொண்டிருந்தது. என் எதிரே ஓடிவந்த மாணவனின் கையில் சில ரெஸ் பேரிகள் இருந்தன. அவை இன்னும் பழுத்திருக்கவில்லை. 

–முற்றும்- 

ஜனவரி 2018

*நன்றி மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை.

Friday, March 14, 2014

வெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்


மியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக இந்துகள். அந்த சிறுபான்மைக்கு அன்னாந்து பார்க்கும் அளவுக்கு கோவில். அந்தக் கோவில் கோபுரம் மட்டும் தான் உயரமாக உள்ளது. மக்களின் வாழ்க்கை தரமோ கோவில் வாசலை விட மோசமாக உள்ளது. பாகுபாடு மிகுந்த அரசியல் நிலையால் அதிகமான அகதிகளை உருவாக்குவதில் முதல் நிலை வகிக்கிறது இந்நாடு. அதில் மிகுதியாகவே முகமதிய அகதிகள். 

மியன்மார் அகதிகளின் தொல்லை தாய்லாந்து மற்றும் மலேசிய குடியுரிமை இலகாக்களுக்கு பலமான தலைவலியை கொடுக்கும் விடயங்களில் ஒன்று. தரை வழி பயணமும், கள்ளத் தோனியும் இவர்கள் இங்கு குடியேற காரணம். கூட்டமாக இவர்கள் வந்த படகு சுட்டு வீழ்த்தப்பட்ட ’சம்பவங்களை’ கேள்விபட்டதுண்டு. முறையான கடப்பிதழ் இன்றி பிடிபடும் இவர்களை திருப்பி அனுப்புவதிலும் பெரும் சிக்கல். எவ்வளவு துள்ளியமாக மியன்மார் மொழி பேசுபவராக இருப்பினும் தூதரகங்கள் ’இவன் என் நாட்டினன்’ என்பதை மறுக்கவே செய்கின்றன. ’ரொகின்யா’, ‘ஹரக்கான்’, ‘சின்’, ‘மின்’ என இவர்களுக்குள் பல பிரிவுகள். பிளவுகளும் கூட. சில அகதி முகாம்களில் பத்து பன்னிரண்டு ஆண்டுகள் என இவர்கள் காலம் கடத்தி வருவது அரசாங்க பணத்திற்கான கேடு. 

வெண்ணிற இரவுகள் காதலின் ஊடலை மையமாக கொண்ட கதையோட்டம். சலிப்பு தட்டாத கதை. படத்தை பார்த்து முடிக்கையில் தோன்றியது ஒன்று தான். இப்படிபட்ட தமிழ்ப்படங்கள் மலேசிய சூழலில் இன்னும் அதிகமாகவே வர வேண்டும். திறம் கொண்ட படைப்பாளிகள் இங்கு அதிகமாகவே இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு என காண்கையில் திரையரங்கம் பல் இளிக்கவே செய்கிறது. முந்தைய படைப்புகள் தான் இதற்கு காரணம். மலேசிய திரைப்படத்தை திரையரங்கில் பார்ப்பது சொந்தக் காசுக்கு சூன்யமாகும் எனும் கருத்தே பலரிடமும் ஆழமாக பதிந்துள்ளது. வெண்ணிற இரவுகள் கொஞ்சமும் ஏமாற்றமளிக்கவில்லை. அடுத்த படைப்புகளுக்கான நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் இயக்குனர். மலேசிய சூழலில் சில நல்ல படைப்புகள் முன்பு வந்திருந்தாலும் அவை திரையிடப்படாமல் இருந்திருக்கின்றன. வெண்ணிற இரவுகள் ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. இது நிச்சயமாக வெற்றி பெற கூடிய தொடக்கமும் ஆகும்.

தனது கடன்கார முன்னாள் காதலனை தேடிச் செல்கிறார் காதலி. மலேசியாவின் ‘ஏர் ஆசியா’ விளம்பரத்துடன் மியன்மாருக்கான இவரின் பயணம் தொடங்குகிறது. கதைக் களம் மியன்மார், மலேசியா, சிங்கப்பூர் என விருவிருப்பை கூட்டுகிறது. மியன்மாரில் மகேனை தேடும் போது காட்டப்படும் இடம் தான் நான் ஆரம்பத்தில் கூறிய கோவில். இங்கே இயக்குனரின் நூதனம் வியக்க வைக்கிறது. தமிழர்களிடையே பாழாய் போன ஓர் எண்ணம் உண்டு அது ஹிந்து மதமும் தமிழனும் பிரிக்க முடியாத சக்தி எனும் அசைக்க முடியாத நம்பிக்கை. கோவிலை காட்டுவதன் வழி மியன்மாரின் தமிழ் குடியினரையும் காட்டிவிடுகிறார். ‘அங்கயும் தமலவங்க இருக்காங்க பாரு’ எனும் எண்ணத்தை 'பாமரனிடம்' புகுத்தும் எளிய வழி. உண்மையில் அதிகமான தமிழ் முஸ்லிம்களும் அங்கே வசிக்கிறார்கள். 

பாடாவதியான வசனங்களினால் பல மலேசிய ’டெலிமூவி’கள் நம்மை வெயில் காய வைத்துள்ளன. ‘வாழ்க்கைனா என்னானு தெரியுமா’ எனும் வகையிலான வசனங்களை கேட்டாலே சேனலை மாற்றும் மனப்போக்கை தான் மலேசிய தமிழ் நன்னெறி திரைப்படைப்புகள் இங்கே ஏற்படுத்தியுள்ளன. புதிய தலைமுறையின் திரை ஆர்வமும் படைப்புகளும் இதை பலமாகவே மாற்றி அமைக்கும் என்பதாக உணர்கிறேன்.

’நுசந்தாரா’ எனும் சூழல் மியன்மார் முதல் இந்தோனேசியா வரை பல நாடுகளை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில் சேவல் சண்டை மிக பிரபலம். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதீத சட்ட அழுத்தத்தால் இவ்விளையாட்டு வழக்கொழிக்கப்பட்டது. இது கல்வெட்டில் பொறிக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டும் ஆகும். மியன்மார் மக்களோடு மக்களாக சேவல் சண்டை விட்டுக் கொண்டிருக்கும் காட்சியோடு மகேனின் கதாபாத்திரம் தொடங்குகிறது. வறண்ட பூமி, வயல் வெளி, குடிசை வீடு என எல்லா பாகுதிகளிலும் கேமரா கோனம் பயணித்துள்ளது. காதல் கதை என்பதால் மியன்மார் மக்களின் சமூக சூழல் அழுத்தத்தோடு முன் வைக்கப்படவில்லை. திரைக்கதைக்கு அது ஒவ்வாததாகவும் கருதி இருக்கக் கூடும். 

ரமேஷ், மேகலா என இரு கதாபாத்திரங்களை மையமாக கொண்டே திரைக்கதை நகர்கிறது. இதற்கு நிச்சயமாக அசாத்திய திறன் வேண்டும். முக்கிய கதாபாத்திரம் இந்த இரு ஜோடிகள் மட்டுமே என்றிருக்க கதையை சுவாரசியமாக சொல்லி முடிப்பது சவாலான காரியமே. நிகழ்காலத்திலும் பழய நினைவுகளுடனும் படம் நகர்வதால் கதையோட்டம் போர் அடிக்காமல் உள்ளது. இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் உள்ள முரண் நாயகன் ஜாலியான கேரக்டராகவும் நாயகி சீரியசான கேரக்டராகவும் காட்டப்படுவது. ஒவ்வொரு காட்சிகளும் இளமையின் துள்ளலோடு நகர்ந்துச் செல்ல இது பெரும் பலமாக அமைந்துள்ளது. 

லாஜிக் தவறுகளை சுட்டிக்காட்டாவிட்டால் இவ்விலக்கிய சமூகம் என்னை மன்னிக்காது என்பதால் இதன் சில குறைபாடுகளையும் காண்போம். தந்தையின் மீது வெறுப்பு மிகுந்த ரமேஷ் தன் படிப்புக்கு தானாகவே பணம் தேடிக்கொள்கிறார். அப்படியாக மேகலாவிடம் நாமம் போடும் பணம் சில ஆயிரங்கள். இருந்தும் இவர் கையில் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் பளபளக்கிறது. ’புரட்டாசிக்கு ஒரு மாசம் சைவம்’ எனும் மேகலா, ரமேஷிடம் இங்க ‘காட்டுப் பன்டி’ கிடைக்காதா என நம் போன்ற பிஞ்சு பார்வையாளனின் மனதில் கள்ளுக்கடையை ஞாபகப்படுத்தி தொலைக்கிறார். மேகலா ஒரு வலைபதிவர். ’வெட்பிரஸ்’ தளத்தில் வெண்ணிற இரவுகள் என தனது பிளாக் எழுதி வருகிறார். எந்த வலைத்தளமாக இருந்தாலும் ‘கொம்பஸ்’ பகுதியில் மட்டுமே உள்ளீடுகளை செய்ய முடியும். ஆனால் அவரோ முகப்பு தளத்தில் தட்டச்சு செய்வது ‘நொட்டையாக’ உள்ளது.


மலேசிய பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க்கை முறையை மிக யதார்த்தமாக காட்டியுள்ளார்கள். யூனிவர்சிட்டியில் கொடுக்கப்படும் பட்டப் பெயர், ஓரெண்டேஷன் @ ரேகிங் போன்ற காட்சிகள் மலரும் நினைவுகளாக உள்ளன. மீண்டும் மீண்டும் வரும் அதே ’ஸப்போர்டிங் ஆர்டிஸ்’ காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அதாவது மேகலா மகேன் உற்ற தோழர் தோழியரை தாண்டிய மற்ற கதாபாத்திரங்களை குறிப்பிடுகிறேன். இது போக மகேன் (ரமேஷ்) மற்றும் ’சைக்கோ மந்திரா’ (ரமேஷின் நண்பன்) பாடகரையும் தவிர்த்து அதிகமான தமிழ் இளைஞர் கதாபாத்திரங்கள் இல்லை. பெண்களின் ஆதிக்கம் கதையில் மிகுந்துள்ளது. 

மலேசிய காட்சி அமைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் பசுமையோடும் மியன்மார் காட்சி அமைப்புகள் வறட்சி நிலையும் மிகுந்து உள்ளன. இரு வேறு நிலப்பகுதிகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை காத தூர வேறுபாடுகளை உணர்த்துகிறது. வசதியற்ற அவர்களின் நிலையை தமிழ் தேசியம் மறந்தே வாழ்கிறது. புரட்சிக்கும் போருக்கும் மட்டும் தமிழ் தேசியம் முதுகு வளையும் என்பதாகவே இதை உணர்கிறேன். 

உணர்ச்சி மிகு தருணங்கள் மேகலா எனும் கதாபாத்திரத்துக்கு மிக எளிதாக அமைந்திருக்கிறது. அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். அழுகை, பயம், கோபம், நகைச்சுவை, யதார்த்தமென கலக்கி இருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் சோடாபட்டி கண்ணாடியுடனும், ஒப்பனை பவுடர் அடர்த்தியுடனும் நாம் பார்க்கும் மேகலா நிகழ்கால தைரிய பெண்ணாக முற்றிலும் மாறுபடுகிறார். மனதை பறிக்கும் அழகுடன் இருக்கிறார். 

’சைக்கோ மந்திரா’ ’பத்தல பத்தல சூரு பத்தல’ எனும் பொன்னான வரிகளில் ஏதாகினும் பாடலை பாடிவிடுவாரோ எனும் அச்சத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்கள். பாடல் வரிகளும் இசை அமைப்பும் நெஞ்சில் நிற்கின்றன. ரிங் டோன் வைத்துக்கொள்ளும் வசதி செய்துள்ளார்களா எனும் விவரம் தெரியவில்லை. 

மியன்மார் காட்சி அமைப்பு எனும் பட்சத்தில் புத்த மடாலயங்களை படக்குழுவினர் மறக்கவில்லை. பார்க்கும் இடமெங்கும் முளைத்த காளான்களாக இருப்பது அது தானே. இங்கே தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களின் இலக்கிய பாரம்பரியம் என்ன? மொழியை மறக்காமல் இருக்கும் போது எழுத்தை மறந்திருக்க கூடுமா எனும் எண்ணங்களை தவிர்க்க முடியவில்லை. 

உலகச் சந்தையில் மதிப்பு குறைந்த மியன்மார் நாணயம் ஊடலில் பிரிந்த காதலரின் உறவை மீட்டுணர வைக்கிறது. ஊடல் தவிர்த்து வேறு என்ன காரணங்களுக்காக பிரிந்தார்கள் என்பது படத்தின் முக்கிய திருப்புமுனைகள். அவர்களை மியன்மார் நாணயம் இணைத்ததா அல்லது பிரித்ததா என்பது உட்ச பட்ச காட்சி. இப்படத்தின் வசன அமைப்புகளில் மகேன் தன் சித்தியுடன் பேசும் காட்சி அமைப்பே சற்று சறுக்கல் கொண்டுள்ளதாக கருதுகிறேன். அதன் அழுத்தம் ஒப்ப மறுக்கிறது. 

மலேசிய தமிழ் திரைப்படைப்புக்கு வெண்ணிற இரவுகள் ஓர் அடித்தளமாக அமைந்துள்ளது. இது மென்மேலும் வளர வேண்டும். நிச்சயமாக திரையரங்குகளில் இப்படத்தை காண தவறாதீர்கள். படக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். 

வெண்ணிற இரவுகள் (White Nights) - நவீன டொஸ்தாயெவ்ஸ்கியின் காதல்.

Friday, June 21, 2013

மோசமான புகை மூட்டம்- மலேசியா, சிங்கப்பூர் மக்கள் பரிதவிப்பு

இந்த ஓரிரு நாட்களில் மலேசியவின் பல மாநிலங்களிலும் சிங்கை, இந்தோனேசியா, தென் தாய்லாந்து பகுதிகளில் சிலவும் கடுமையான புகை மூட்டத்தால் பாதிப்படைந்து உள்ளது. கடந்த ஆண்டுகளை விட தற்போதய நிலவரம் மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. 

பொதுவாக இந்த மாதிரியான புகை மூட்டம் எல்லா ஆண்டுகளிலும் இருக்கும் ஒன்றே. இந்த ஆண்டு அதன் நிலை கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது. இன்றய நிலையில் நான் வசிக்கும் ஜேகூர் பகுதிகளில் புகை மூட்டத்தின் அடர்த்தி 327-லை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இங்குள்ள சில பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. 

இதே போன்ற நிலையை 1997-ல் கண்டிருக்கின்றேன். இந்த புகை மூட்ட பிரச்சனை இயற்கை பேரிடர் என்பதை காட்டினும் மனிதர்களின் செயலால் செயற்கையாக ஏற்பட்ட ஒன்றே. இந்தோனேசியாவின் சுமாத்ரா எனும் பகுதியில் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட காட்டு தீயினால் கட்டுக்கடங்கா இந்த புகைமூட்ட நிலை ஏற்பட்டுள்ளது. 

புகைக்கு பயந்து வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைக்க வேண்டி உள்ளது. ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளி வரும் போதும் திறந்த வெளிகளில் இருக்கும் போதும் முகமுடி அணிந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இன்றய நிலையில் வேலை செய்யும் போதும் முகமுடி அவசிய பொருளாகிவிட்டது. இது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட தண்டனைய என்பதை ஐயம் இல்லாமல் சொல்லலாம்.

என்ன தான் முகமுடி அணிந்திருந்தாலும் கண் எரிச்சலையும் தொண்டையில் ஏற்படும் அறிப்பு தன்மையையும் தவிர்க்க முடியாத நிலையில் இருப்பது வருத்தமே. 

சுமாத்ராவில் ஏற்பட்ட காட்டு தீ, தற்போதைய சீதோசன நிலையினால் உண்டானதாக கூறப்படுகிறது. இருந்தும் அதன் பின்னணியில் உள்ள முதாலாளிதுவத்தின் செயல்பாடுகளையும் மறுக்க இயலாது. வணிகம் பொருட்டு காடுகள் அழிக்கப்படுவதாலும் இப்படி புகை மூட்டம் ஏற்படுகிறது என்பதே உண்மை.

நிலைமை மேலும் மோசமாகும் பட்சத்தில் செயற்கை மழையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது மலேசிய அரசு. தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் சுகாதார மையங்களை ஆங்காங்கு திறக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.

புகைமூட்டத்தின் அளவுகோள்:
0 - 50 மோசமில்லா நிலை
51 - 100 மத்திமம்
101 - 200 ஆரோக்கியமற்ற நிலை
201 - 300 மிகவும் ஆரோக்கியமற்ற நிலை
301 - 400 ஆபாத்து நிலை
401 - 500 மிகவும் ஆபத்தான நிலை
> 501 ஊரடங்கு நிலை
இதை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேலையில் இங்கிருக்கும் புகைமூட்டத்தின் அடர்த்தி 310 ஆக உள்ளது.


ஏற்படக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகள்:
1. தொண்டை அரிப்பு, இருமல்
2. சுவாச பிரச்சனை, மூக்கில் அடைப்பு
3. கண் எரிச்சல்
4. தோல் எரிச்சல்
5. நெஞ்சு வலி



கடைபிடிக்க வேண்டிய சில நடவடிக்கைகள்
1. வெளியே செல்லும் போது முகமூடி அணிந்துக் கொள்வது நலம்.
2. முடிந்த அளவு வெளியே செல்லாமல் இருக்க முயற்சியுங்கள்.
3. அடிக்கடி சுத்தமான நீரை அருந்த வேண்டும்.
4. வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைத்திருங்கள்.
5. புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
6. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
7. முகத்தினையும், கைகளையும் அடிக்கடி சுத்தமான நீரினில் கழுவுவது நலம்.
8. கண்களுக்கான சொட்டு மருந்து, ஈரமான டெட்டால் முக காகிதங்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது அவசியம்.
9. மோசமான தாக்கத்திற்குட்பட்டோர் நிச்சயமாக மருத்துவ பரிசோதனைக்கு செல்வது அவசியம்.
10. புகை மூட்ட அடர்த்தி நிலையையும் செய்திகளையும் கவனம் எடுத்து தெரிந்து கொள்ளுங்கள்.

Thursday, November 12, 2009

சொல்லாததும் உண்மை


சரித்திரம் தனக்கு தோதாக சில வேளைகளில் வேடமிட்டுக் கொள்கிறது.

பூர்வ குடி தோழர் சொன்னார்.

கொடும் பாவிகள் சூழலிலிருந்து இருந்து தப்பித்துக் கொள்ளவே எம்மினம் தூர விளகிப் போனது என அவர் கூறினார். முன் நாட்களில் அவர்களுக்கு நடந்தவற்றை நாம் முழுமையாக அறிந்துக் கொள்ள செய்திகள் சொற்பமாகவே இருக்கிறது. எப்போதோ சொல்லி, எங்கெங்கோ பரவிய விசயங்கள் திட்டுத்திட்டாக நமக்கு கிடைக்க பெறுகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பேரரசுகளின் சாம்ராஜிய விஸ்தரிப்பு கடல் கடந்து பல தேசங்களுக்கு நீண்டிருந்தது. கடல் வழி பயணங்கள் அதிகரித்திருந்த அவ்வேளையில் வியாபாரங்களும் அதிகரித்திருந்தது. வியாபாரம் எனும் பெயரில் சுரண்டிய செல்வங்களை வெவ்வேறு தேசங்களுக்கு இட்டுச் செல்லும் போது கடற்கொள்ளையர்களின் தொல்லை வலுத்திருந்தது. திருடனிடம் திருட்டு, திருட்டுக்கு மேல் திருட்டு என கொள்ளையர்களின் அழிச்சாட்டியம் பல்கிப் பெருகிப் போனது.

பாதுகாப்பின் பொருட்டு சாம்ராஜியபதிகள் கடல் காவலை வலுப்படுத்த முற்பட்டார்கள். பல காலமாக கொள்ளையிட்டு வாழ்ந்துவிட்டவர்கள் எங்கு போவார்கள். காவல் நெருக்கடிகளின் பாதிப்பு அதிகரிக்கவும் விட்டதை விட்டபடி அவர்கள் காடுகளுக்குள் புகுந்தார்கள். காட்டுக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்தவர்களின் இடங்களை ஆக்ரமிக்க எத்தனித்தார்கள். அவர்களை அழிக்கவும் செய்தார்கள். நாகரீகம் அவ்விடத்தில் இன்னமும் தன் சிறுபிள்ளை பிராயத்தில் தான் இருந்திருக்கிறது.

காட்டில் இருந்த பூர்வ குடி மக்களால் ஏன் அவர்களை எதிர்க்க முடியவில்லை? அவர்கள் இனத்தால் சிறுத்திருந்தார்களா? பலத்தால் வலுவிழந்து இருந்தார்களா? கொள்ளையர்களின் ஆயுதங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லையா? யார் இந்த கொள்ளையர் கூட்டம்? இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? எனும் கேள்விகள் உங்கள் சிந்தனைக்கு விடப்படுகிறது.

ஓர் இனம் நெடுங்காலமாக தன்னை தனிமைப் படுத்திக் கொண்டதற்கான இக்காரணங்களை அறிய மேலும் சில முயற்சிகள் தேவைப்படுகிறது. மாயா நாகரிக மக்கள், சிவப்பிந்தியர்கள் என இன்னும் பல இன அழிப்புகள் சரித்திரத்தில் தொன்றியும் மறைந்தும் இருக்கிறது.

**********

"பொதுவாவே உங்களுக்கு நிறைய உதவி கிடைக்குமே... யார் உங்களை வந்து பார்ப்பாங்க.... யாருக்கு ஆதரவா இருக்கீங்க..."

"எனக்கு காசு கிடைச்சா போதும். மத்தத பத்தி எனக்கு கவல ல்ல. அரசியல் எல்லாம் சும்மா ஏமாத்துவானுங்க... காசு கொடுத்தா வாங்கிப்பேன்... அது போதும்..."

பூர்வீக குடி தோழர் சொன்னார்.

பொருளியல் சிந்தனை. மனித நாகரீக வளர்ச்சியின் மேன்மையான சித்தாந்தம். அதில் வலுத்தவன் சமுதாயத்தின் மத்தியில் தன்னை உயர்வாக காட்டிக் கொள்கிறான். பொருளியில் அடிப்படையிலான இச்சிந்தனை எதனால் அந்த தோழரிடம் உறுவானது? எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்பதன் அர்த்தம் என்ன? பணம் கிடைத்தால் நான் எது வேண்டுமானாலும் செய்ய தயார் என்பதா?

***********

மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சரித்தி புத்தகத்தை நீங்கள் தலை கீழாக கூட புரட்டிப் பார்க்கலாம். பூர்வீகக் குடியினரைப் பற்றிய செய்திகள் எத்தனை இடங்களிடல் உள்ளது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன் புதிதா அச்சிடப்பட்ட ரித்திர புத்தகத்தில் மலேசிய நாட்டின் பெருன்பான்மையினரின் சகோதரர்கள் இவர்கள் என எங்கோ ஒரு மூலையில் குறிப்பிடப்பட்டிருந்தது. போற்றுதலுக்குறிய விடயம் தான். சரி அதைப் பற்றி நமக்கென்ன.

போர்த்துகீரியர் ஆட்சி காலம், பிரிட்டிஷ் ஆட்சி காலம், ஜப்பானிய ஆட்சி காலம் என்பன மலாயா சரித்திரத்தில் குறிப்பிட தக்கவை. இக்காலகட்டங்களில் இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையா? பூர்விக குடியினரின் சிறப்பு சழுகைகள் அப்போதே வழங்கப்பட்டுவிட்டதா?

மக்களை சக்கையாக பிழிந்தெடுத்த இந்த ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து இவர்கள் தப்பி வாழ்ந்தார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அக்காலகட்டத்தில் நடந்தவற்றிற்கான குறிப்புகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதை மீட்டெடுப்பது இப்போது சாத்தியம் தானா?

**********

உங்களில் கற்றறிந்து உயர் நிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்களே என்றேன்.

பூர்வக் குடி தோழர் சொன்னார்.

பொருளியல் தோடல் அதிகரித்த போது மக்கள் வெளி வர ஆரம்பித்தார்கள். அக்காலகட்டங்களில் மதம் சார்ந்த அமைப்புகள் சில ஆங்காங்கு பல உதவிகள் செய்து வந்தார்கள். பெயர் மாற்றம், மதம், புதிய நம்பிக்கை என சமூகத்தில் மாற்றங்கள் பரவலாக நடந்து வந்தது. இவர்களின் வழி சமூகத்தில் கல்வி, பொருளாதாரம் வாழ்க்கை முறை என புதிய சிந்தனைகள் பரிநாமம் பெற்றது.

இவ்வமைப்புகளைக் கண்டு அச்சம் கொண்டவர்களும் உண்டு. நம்மை மாற்றி ஏதாவது செய்துவிடுவார்களோ என மூத்த குடியினர் பயந்தார்கள். இன்னமும் பலருக்கு பயம் இருக்கிறது. அவர்களிடம் இருந்து இலகுவாக உதவி கிடைக்கும்படி இருப்பினும் அவர்களின் மதம் எனும் போர்வையை போர்த்திக் கொள்ளாத வரையில் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கருணை கிட்டும் என சொல்லி அமைதிகாத்துவிடுகிறார்கள்.

**************

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சுற்றுலா துரைக்கு மவுசு கூடிற்று. காலப் போக்கில் பூர்வக் குடி மக்களின் வாழ்வும் கலாச்சார முறைகளும் சுற்றுலா துரைக்கு கொண்டு வரபட்டது.

பூர்வக் குடி தோழர் சொன்னார்.

இதன் வழி பூர்வக் குடி மக்கள் பொருள் சம்பாதித்துக் கொள்ள வழிவகுத்தது. பிள்ளைக் கறி கேட்ட கதையாக பெண் சதை வியாபாரமும் ஆங்காங்கு நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இதில் யாரை குறை சொல்ல முடியும். அடிதட்டு மக்களும் வாழ்ந்தாக வேண்டிய நிலை. வயிற்றைக் கழுவ அவர்களுக்கும் பணம் தேவைபடுகிறது. சரி தவறென்பது அவர்களின் சிந்தனைக்குட்பட்டது. நான் சொல்லி ஏதுமில்லை என்றார்.

************

மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் இடங்களில் இருப்பவர்கள் அதை எப்படி சமாளிக்கிறார்கள்.

பூர்வக் குடி தோழர் சொன்னார்.

பொரும்பான்மையாக இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதால் அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருக்கிறது. சளி, காய்ச்சல் போன்றவற்றை பெரிதாக கருதுவதில்லை. அவற்றைப் போக்க சில இயற்கை உணவுகள் சாப்பிடப்படுகிறது.

.......

பூர்வீகக் குடியினரில் இயற்கையாக மரணம் ஏய்துபவர்கள் பலரும் மத்திம வயதினரைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களது முகத் தோற்றம் உடல் அமைப்பு போன்றவற்றிற்கு மரபணு எவ்வளவு தூரம் காரணமாக இருக்கிறதோ அதே போல இவர்களின் மரணத்திற்கு அதுவே காரணமாக சொல்லப்படுகிறது. ஊது குழாய் வழி வேட்டையாடிய உணவுகளை சாப்பிடும் போது அதன் நச்சுத் தன்மை பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சில மருத்துவ குறிப்புகள் உள்ளன. இக்காலத்தில் ஊது குழாய் வேட்டை குறைந்திருப்பினும் அதன் பாதிப்பு இருக்கவே செய்கிறது.

*************

டுரியான் மற்றும் மங்குஸ்தின் பழ காலங்களில் வெளி வேலையில் ஈடுபட்டிருப்போரும் அதற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, பழ வியாபார வேட்டையில் இறங்கி விடுகிறார்கள். தினமும் கிடைக்கும் கைக்காசு மட்டும் காரணமல்ல. சாதாரண வேலையை விட இதில் ஈட்டும் தொகை அதிகம்.

பழ காலத்தில் பூர்வக் குடி தோழர் அவரிடம் அழைத்துச் சென்றிருந்தார். அந்தி சாய்ந்த வேலையில் ஓரிரு நண்பர்களோடு கைவிளக்கு எடுத்துக் கொண்டு நீர்வீழ்ச்சியின் பகுதிக்கு நடை பயணப்பட்டோம். சுற்றுலா மையமாக்கப்பட்ட அவ்விடம் பயணிகளுக்கு அவ்வேளையில் மூடப்பட்டிருந்தது.

"இது தான் சரியான நேரம், கருக்கிருட்டு நேரத்தில் வரக் கூடாது. 'டத்தோ' இருக்கும்" என்றார்.

அவர்கள் கையில் இருந்த விளக்குகளை நீரோட்ட பகுதியில் இருந்த பாறைகளின் இடுக்குகளில் ஒளியிட்டு அடித்தபடி நடந்தார்கள்.

நகைகளை களையாமல் நிர்வீழ்ச்சி பகுதிகளில் குளிப்பவர்களின் ஆபரணங்கள் அடித்துச் செல்லப்பட்டு இப்படி பாறைகளின் இடுக்குகளில் மாட்டிக் கொள்ளும். இருட்டிய வேளையில் விளக்கொளி படும்போது நகைகள் மினுக்கும். இப்படியும் இவர்களின் பொருளியல் தேடல்கள் அமைகின்றன.

*********

பூர்வக் குடி தோழர் கேட்டார்.

எங்களைப் பற்றி எழுதப் போவதாக சொன்னாயே? புனைவா அல்லது நிஜமா?


******************************************************************


பார்வைக்கு சில சுட்டிகள்:

http://malaysiana.pnm.my/Alat%20Tradisonal/buru_sumpitan.htm

http://en.wikipedia.org/wiki/Orang_Asli

http://www.malaysiasite.nl/orangeng.htm