Friday, September 13, 2019

வெண்சுருட்டு மங்கை (Cigarette Girl) - இந்தோனேசிய நாவல்

நாவல்: Cigarette Girl (Gadis Kretek)
நயம்: சமூக நாவல் (Indonesia)
பக்கம்: 244 Pages
ஆசிரியர்: Ratih Kumala

இந்தோனேசிய கெரெதேக் வகை சிகரட்டுகளுக்கு தனி தன்மை உண்டு. மலேசிய சந்தைகளில் மலிவாகவும் சுலபமாகவும் கிடைக்ககூடிய சிகரட்களில் கெரெதேக் வகையும் அடங்கும். கெரெதேக் இந்தோனேசியாவின் பாரம்பரிய அடையாளமாகவும் திகழ்கிறது. ஆரம்ப காலங்களில் கெரெதேக் சிகரட்டுகளை உடல் நலனுக்காக பிடித்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அரட்டைக் கலாச்சாரத்திற்கும், ஆஸ்துமா நோய்க்கும் கெரெதெக் முக்கிய பங்காற்றி உள்ளது. ஆனால் இன்றய நிலையில் அனைத்து வகை சிகரட்டுகளும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவையே என அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. கெரெதேக் சிகரட்டுக்கு ஏற்ற இணைப்பாக கூறப்படுவது கொட்டை வடிநீர். கொட்டை வடிநீர் அல்லது காப்பி கலாச்சாரம் டச்சு காலனியாதிக்கத்தின் போது இந்தோனேசியாவில் காலூன்றியது. கருப்புக் காப்பியும் கெரெதேக் சிகரட்டும் கொடுக்கும் ‘கிக்’ ஆளாதியென கருதுகிறார்கள். வானிலை மாற்றத்திற்கு ஏற்ப கருப்புக் காப்பியை காருப்புத் தேநீருக்கு மாற்றிக் கொள்கிறார்கள். 

கெரெதேக் சிகரட்டுகள் மற்ற சிகரட்டுகளை காட்டினும் எப்படி மாறுபடுகின்றன? கெரெதேக் சிகரட்டுகளில் புகையிலையும் மூன்றில் ஒரு பங்கிற்கு கிராம்பும் சேர்க்கிறார்கள். அது போக சுவைக்காக செயற்கை முறை புகயிலைச் சாறையும் சேர்க்கிறார்கள். இதன் தயாரிப்பு முறை ஒவ்வொரு பிராண்டுக்கும் மாறுபாடுகிறது. கெரெதேக் புகையின் வாடை மற்ற சிகரட் புகையை விட மாறுபாடு கொண்டிருக்கும். சிகரட் கேர்ல்/ காடிஸ் கெரெதேக் எனும் இந்நாவல் பேசும் கதை என்ன? இந்த நாவல் மூன்று தலைமுறைகளின் கதையை பேசுகிறது. காதல், வன்மம், பகை மற்றும் அரசியலின் ஊடாக கெரெதேக் சிகரட்டின் பரிணாம வளர்ச்சியை நமக்குக் காட்டுகிறது. இந்த நாவல் 2012-ல் வெளீயீடு கண்டு பெரும் கவனம் பெற்றது. கெரெதேக் சிகரட்டுகளின் பாரம்பரியம், வரலாற்றுப் பின்னணி, தொழில் முறை, வணிகம் என இந்தோனேசிய சிகரட் சாம்ராஜியத்தின் மொத்த வடிவமாக இந்த நாவல் அமைந்துள்ளது. 

இந்த நாவலில் இரண்டு கதைச் சொல்லிகள் உள்ளனர். ஒன்று நாவலாசிரியர் வழியாகச் சொல்லப்படுகிறது. முதல் இரு தலைமுறைகளின் கதையும் பெரும்பான்மையாக நாவலாசிரியரே சொல்கிறார். அடுத்தபடியாக லெபாஸ் எனும் காதாபார்த்திரம் நிகழ்கால கதை சொல்லியாக இருக்கிறார். லெபாஸ் இந்தோனேசியாவின் முதல் நிலையில் இருக்கும் கெரெதேக் சாம்ராஜிய சக்ரவர்த்தியின் மகன். லெபாஸுக்கு இரண்டு அண்ணன்கள். உடல் நலம் குன்றி மரணப் படுக்கையில் இருக்கும் லெபாஸின் தந்தை (சௌராஜா) அடிக்கடி ‘ஜெங் யா’ எனும் பெண் பெயரைச் செல்லி பிதற்றுகிறார். சௌராஜாவுக்கு மரணிப்பதற்குள் ஜெங் யாவை பார்த்துவிட வேண்டும் எனும் விருப்பம் இருக்கிறது. மகன்கள் ஜெங் யாவை தேடி புரப்படும் பயணமும் சௌராஜா மரணிக்கும் முன் அந்த பெண்மணியை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததா எப்பதே நாவலின் சாரம். கதையின் ஒரு வரி தகவல் மிகச் சாதாரனமாக இருபினும் நாம் யூகிக்க முடியாத ஒரு கோணத்தில் கதையை நகர்தி இருப்பது இந்நாவலின் பலம். 

ஆரம்பத்தில் லெபாஸ் மட்டுமே ஜெங் யாவை தேடிச் செல்க்கிறார். போகும் வழியில் அவரைப் போல் ’போப் மார்லே’காலாச்சார ஈடுபாடு கொண்ட நண்பரை சந்திக்கிறார். இசைக் கொண்டாட்டத்தில் கெரெதேக் சிகரட்டோடு கஞ்சாவையும் சேர்த்து அடித்து மட்டையாகிவிடுகிறார். லெபாஸ் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு ஓர் இளமை துள்ளல் மிகுந்த இளைஞனாக காட்டப்படுகிறது. இவருக்கு குடும்ப தொழிலில் ஈடுபடும் நோக்கம் இல்லை. அமேரிக்காவுக்கு வணிக மேலாண்மை படிக்க குடும்பத்தார் இவரை அனுப்பி வைக்கிறார்கள், இசையில் ஆர்வம் கொண்டு ஜமாய்க்கா வரை போய் இசை ஞானத்தை வளர்த்துக் கொள்கிறார். அதிலும் மனநிறைவு இல்லாமல் சினிமா பக்கம் திரும்புகிறார். சொல் பேச்சு கேட்காத பிள்ளையாக குடுப்பத்தாரிடம் எப்போதும் ஒரு கெட்ட பெயர் உண்டு. லெபாஸை பொருத்த வரை அவர் தன் விரும்பபடி தன் சுய முயற்சியில் வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறார். ஷங்கரை போல் பெரிய பட்ஜெட் படம் எடுக்கும் ஆசை இருந்தாலும் அவருக்கு அமைவெதெல்லாம் சோப்பு விளம்பரமும், பேய்க் கதைகளை எடுக்கும் வாய்ப்புகள் தான். 

இந்நாவல் ஜாவ மக்களின் வாழ்வியலை மிக அழகாக பதிவு செய்துள்ளது. முக்கியமாகா ஜகார்த்தா, கூடுஸ் (Kudus) மற்றும் M Town போன்ற இடங்களில் பிரதான கதை நடக்கிறது. குடுஸ் தற்சமயம் கெரெதேக் சிகரட்டுகளின் தொழில் நகரமாக விளங்குகிறது. இங்கு வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பக்கினர் கெரெதேக் சிகரட் தொழில்துறை சார்ந்தே தங்களின் வாழ்வாதாரத்தை தேடிக் கொள்கிறார்கள். வியாபார விருத்தியின் ரீதியாக தொழிற்சாலைகள் தங்கள் வேலையாட்களை கவனித்துக் கொள்ளும் முறையும், பாரம்பரை பெருமை காக்க சில கம்பெனிகள் நகரர்தப்படுவதையும் ஆசிரியர் பதிவு செய்கிறார். அது போக அந்த தொழில்துறை சுற்று வட்டாரத்தில் இயங்கும் வட்டி முதலைகள் அங்கு பணி புரியும் தொழிலாளர்களையும் முக்கியமாக இளம் பெண்களை கடன் கொடுத்து தங்கள் அடிமையாக்கிக் கொள்வதையும் அறியமுடிகிறது.

நிகழ்காலத்தில் நடக்கும் கதை திடீரென மூன்றாம் அத்தியாயத்தில் டச்சு காலனியாத்திக்க காலத்தில் தொடங்குகிறது. இந்தோனேசியர்கள் ஜப்பானியர்களின் வருகையை பெரிதும் நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் கழுதை தேய்ந்த கதையாக டச்சு ஆட்சியை விட ஜப்பானியர்களின் ஆட்சி குறுகிய காலத்தில் வெறுப்பை சம்பாத்தித்துக் கொள்கிறது. ஏகபட்ட உள்ளூர் வாசிகள் சூரபாயா (Surabaya) நகருக்கு சிறைபிடித்துக் கொண்டுச் செல்லப்படுகிறார்கள். அங்கு கட்டாய தொழில் முகாம்களில் கடுமையாக வேலை வாங்கப்படுகிறார்கள். நாவலின் இப்பகுதி இட்ரோஸ் மொரியா (IDROES MOERIA) எனும் காதாபாத்திர்த்தை மையப்படுத்தி சொல்லப்படுகிறது. இக்காலகட்டத்தில் கெரேதேக் என்பது கொலொபோட் (Klobot) எனும் வடிவில் உள்ளது. அதாவது பீடி அளவிலேயே அதன் பரிணாமம் உள்ளது. சோள மட்டைகளை சமன் செய்து வெட்டி, இஸ்திரி போட்டு காய வைத்து இப்படியான பீடிகளை செய்கிறார்கள். அதை மருத்து கடைகளில் விற்பனைக்கு வைக்கிறார்கள். ஆஸ்துமா நோயாளிகளே அச்சயம் கொலோபோட்களை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் போது புகையிலை பணமாகவும் செயல்பட்டுள்ளது. ஆக பொதுமக்களிடம் புகையிலை இருக்காதபடி ஜப்பானிய இராணுவம் அனைத்தையும் பரிமுதல் செய்கிறது. தற்செயலாக சிறை போக நேரிடும் இட்ரோஸ் அங்கு சீனர்களிடம் புலங்கிய சிலிண்டர் வகை வெண்சுருட்டுகளின் பயன்பாட்டை பார்க்கிறார். கொலொபோட் (பீடி) வடிவத்தில் இருந்து கெரெதேக் சிகரட்டாக மெறுகேற்றும் ஐடியாவை வித்திடுகிறார். 

இட்ரோஸ் மொரியா மற்றும் சௌஜாகாட் எனும் இரு நண்பர்களும் தங்களது இளமை பருவத்தில் பீடி மடிக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். இருவரும் ரௌமாயிஸா எனும் பெண் மீது காதல் கொள்கிறார்கள். சௌஜாகாட்டின் காதலை நிராகரிக்கும் ரௌமாயிஸா இட்ரோஸ் மொரியாவை திருமணம் செய்து கொள்கிறார். இதுவே இந்த இரு நண்பர்களின் தொழில் மற்றும் குடும்ப பகையின் காரணமாகிறது. இட்ரோஸ் மோரியா மற்றும் சௌஜாகாட் இரு குடும்பத்தின் வழி கதை மூன்று தலைமுறைகளில் நம்மிடம் சமர்பிக்கப்படுகிறது. ஆரம்ப அத்தியாயங்களில் இட்ரோஸ் மோரியா பார்வையில் வைக்கப்படும் கதை கடைசி சில அத்தியாயங்களில் சௌஜாகாட் பார்வையில் வைக்கப்படுகிறது. ஒரே நிகழ்வு இரு வேறு தரப்பினருக்கு வேறு விதமான கோணத்தில் தங்களை எதிரிகளாக பாவித்துக்கொள்ள வைக்கிறது. இதில் யார் சொல்வது சரி? அது வாசகனின் தேர்வுக்கு விடப்படுகிறது.

இந்தோனேசிய அரசியல் மாற்றத்தை பொருத்த வரை இரண்டு காலகட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று காலணியாதிக்க காலம். மற்றொன்று G30S எனும் இயக்கத்தின் நிகழ்வு. சில இராணுவ ஜெனரல்களின் கொலையை காரணம் காட்டி இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்படுகிறது. இச்சம்பவமும் இட்ரோஸ் மோரியாவின் கெரெதேக் தொழிலோடு மிக நேர்த்தியாக கோர்க்கப்படுகிறது. 

இந்நாவலில் கூறப்படும் சிகரட் கேர்ல் அல்லது காடிஸ் கெரெதேக் யார்? இட்ரோஸ் திருமணம் செய்துக் கொண்ட ரௌமாயிஸா அல்ல. சிகரட் கேர்லை கண்டு பிடிக்கும் சுவாரசியத்தை வாசகனிடம் விட்டுவிடலாம். இந்த நாவல் ஆசிரியர் ராதே குமாலா கெரெதேக் சிகரட் சார்ந்த ஏகபட்ட செய்திகளை நமக்குக் கடத்திக் கொடுத்துள்ளார், புகையிலை பயிர் செய்யும் நடைமுறை, இலைகளின் தேர்வு, கிராம்பு வகைகளின் சேர்க்கை, அதன் விளம்பர உலகம், தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், பயனர்கள் என அனைத்து அம்சங்களையும் நாம் காண்கிறோம். இந்த நாவலை எழுத நிச்சயமாக மிகவும் சிரமம் கொண்டு தகவல்களை திரட்டி இருக்க வேண்டும். வாசிக்கும் ஒவ்வொரு வாக்கியமும் நமக்கு தகவல் கசிவை கொடுக்கின்றன. 

-முற்றும்-