Thursday, March 26, 2020

டிராகனின் நடனம்: அமிலக் கல்லறை

(Photo credit: ancient-origins.net)

சீனா தொடப்பாக 2017-ல் எழுதிய தொடர். கீழ் காணும் முதல் அத்தியாயம் மட்டும் ஓர் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டது.
இது வரை நான்கு அத்தியாயங்கள் எழுதி இருக்கிறேன். அடுத்தடுத்த நாட்களில் மற்ற தொடர்களை பதிவேற்றம் செய்கிறேன். நேரம் இருக்கும் நண்பர்கள் வாசித்துப் பார்க்கலாம்.

சீனா தொடர்பாக ஓர் எளிய அறிமுகம் கொடுப்பதற்காகவே இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். சீனா என்பது சமஸ்கிருதச் சொல். சீனர்கள் தங்கள் நாட்டை ’ச்சோங் குவோ’ (Zhong Guo) என்றே குறிப்பிடுகிறார்கள். ச்சோங் என்பது நடுவகம். குவோ என்பது நாடு. ஆங்கிலத்தில் சொல்வதென்றால் ‘Middle Kingdom’. இந்த தேசம் உலகின் மத்தில் அமைந்துள்ள ஆட்சி பீடம் என்பதாக அவர்கள் கருதியதால் இந்தப் பெயர் விளங்குகிறது. இனி இந்த டிராகன் தேசத்தின் நடனத்தைக் காண்போம்.
--------

சீனாவின் ஷீ-ஆன்யாங் (Xianyang) நகரம். சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்…

போருக்குச் செல்லும் படை வீர்ர்களைப் போல் பெண்களின் அணி வகுப்பு. அழகிய ஆடை ஆபரணங்களை உடுத்தி நடக்க ஆரம்பித்திருந்தார்கள். அனைவரின் முகங்களிலும் இருக்கம். அரண்மனையில் இருந்து அவர்களின் பயணம் தொடங்கியது.

“எங்கே போகிறார்கள்”.

“மன்னனின் கல்லறைக்கு”

“எதற்காக?”

“கல்லறையில் மன்னனோடு வாழ”.

சீன பேரரசின் முதல் மன்னனுக்கு நூற்றுக் கணக்கான துணைவிகள் இருந்ததாக சிம்மாஜியன் (Simma Qian) குறிப்பிடுகிறார். (சிம்மா ஜியன் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசவை நிகழ்வுகள் குறிப்பாளர். இன்று பொதுவாக ’the grand historian' என அழைக்கப்படுகிறார்.)

மன்னனின் துணைவிகளில் குழந்தையற்றோரும், ஆசை நாயகிகளும் கல்லறையில் அடைக்கப்பட்டனர். கி.மு 210-ஆம் ஆண்டில் ஒன்பதாவது மாதம் மன்னர் சின் ஷூ ஹுவாங் இறந்துபோனார். அப்போது அவர் வயது 49. சாகாவரம் தேடி அலைந்த மன்னன் ஏன் இறந்தார்? அதற்குக் காரணம் பாதரசம் (Mercury) எனும் அமிலம் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சின் ஷி ஹுவாங் அல்லது சின் ஹுவாங் டீ என தனக்கு கௌரவப் பெயர்ச் சூட்டிக் கொண்ட இந்த மன்னன் தான் சீனாவின் முதல் அரசனா? அதற்கு முந்தைய சீனா எப்படி இருந்தது? சரித்திரத்தில் வியக்கப்படும், போற்றப்படும், கொடுங்கோலன் என தூற்றப்படும் சின் ஹுவாங் டீயின் விடலைப் பருவத்தில் இருந்து தொடங்கினால் சீனா எனும் பெரும் தேசம் உருவான கதை நமக்கு விளங்கும்.

ஒருங்கிணைந்த சீன தேசம் உருவாவதற்கு முன் அப்பிரதேசம் ஏழு துண்டுகளாக உடைந்து கிடநத்து. அந்த ஏழு நாடுகளின் அரசர்களிடமும் ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் பெயர் சுவர்கத்தின் கட்டளை. ஒருங்கிணைந்த பெரும் தேசத்தை ஆட்சி செய்பவனே சுவர்கத்தின் பிள்ளையாகக் கருதப்படுவான். அதாவது கடவுளின் பிள்ளை. அதற்காக இந்த தேசங்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தன. அவை நிலையான ஆட்சியாக இல்லாமலும் சுவர்கத்தின் பிள்ளையாக தன்னை தேர்ந்தெடுத்துக் கொள்வதிலும் அதன் அரசர்களுக்கு சிக்கல் இருந்தது.

அந்த ஏழு தேசங்களில் சின் தேசமும் ஒன்று. மிகச் சிறிய நாடு. சின் ஷி ஹுவாங் தனது 12/13-வது வயதில் அரியணை ஏறினார். இவரின் பிறப்பின் குறிப்புகள் இல்லாததால் வயதை தீர்மானிப்பதில் இன்னமும் சிக்கல் அமைந்துள்ளது. சின் அம்மாவின் பெயர் சாவோ ஜி (Zhao Ji). ஒரு நடனக்காரி. (Lu Buwei) லூ பூவெய் எனும் வியாபாரியால் சின் ஹூவாங் டீயின் அப்பாவிடம் அழைத்துவரப்பட்டவள்.

லூ பூவெய் ஒரு இராஜ தந்திரியும் கூட. அவரது மதி திறமையை மெச்சி அரசவையில் அமைச்சர் பதவியையும் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. சா வோஜியின் இரகசிய காதலனாகவும் இருந்திருக்கிறார். கடைசி வரை சின் ஷி ஹூவாங் தனக்கு பிறந்த பிள்ளை என்பதிலும் நம்பிக்கைக் கொண்டிருந்தார். சின் இராஜாங்கத்தின் வரி சீர்திருத்தங்கள் இவரால் கொண்டு வரப்பட்டவை.

எது எப்படியாகினும் சின் ஷி ஹுவாங் அரசனாகிவிட்டார். இளம் பிராயம். நாட்டை ஆள்வதற்கான அனுபவம் போதாது. லூ பூவெய் முன் வந்தார். அரசவையின் அனுமதியோடு தன்னை பிரதம மந்திரியாக நியமித்துக் கொண்டார்.

”இன்று முதல் இந்த நாடின் பிரதம மந்திரியாகிய நான் தந்தை ஸ்தானத்தில் இருந்து இந்த நாட்டை வழி நடத்த உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் மன்னா”. உறுதி மொழி கூறிய லூ பூவெய் அரச சபையில் இருந்து வெளியேறினார். கூடவே மன்னனின் அம்மாவும்.

சின் மன்னனின் வயது அதிகரிக்கவும் பிரதம மந்திரி சாவோ ஜியின் பக்கம் இருந்து விலகினார். அதே காலகட்டத்தில் சாவோ ஜிக்கும், (Lao Ai) லாவோ ஐ எனும் அரண்மனை அதிகாரிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்களுக்கு இரு ஆண்குழந்தைகள் பிறந்தது. இந்த செய்தி லூ பூவெய் தவிர அரண்மனையின் வேறு யாருக்கும் தெரியாது.

லா வோஐ-க்கு ஒரு விபாரீத ஆசை இருந்தது. தனக்குப் பிறந்த இரு குழந்தைகளில் ஒருவரை அரசனாக்கிவிடலாம் என திட்டமிட்டார். தற்போதைய அரசை ஆட்சி கவிழ்ப்பு செய்ய திட்டமிட்டிருந்தார். சின் அரசன் வெளியூர் பயணம் செய்திருந்த சமயம் சா வோஜியின் முத்திரை மோதிரத்தைக் கொண்டு அரண்மனையில் இராணுவ கலகத்திற்கு ஏற்பாடு செய்தான் லா வோஐ.

(பண்டைய நாகரீகங்களில் மன்னனை கை பொம்மையாக பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாத தந்திரமுறைகள் இருந்துள்ளன. வயது முதிர்ந்த வாரிசை கொன்றுவிடுவதின் வழி இளம் வாரிசை அரியனையில் அமர்த்திவிடுவார்கள். சந்தர்பவாதிகள் திரை மறைவில் இருந்து ஆட்சி நடத்திக் கொள்வார்கள்.)

ஒற்றர்களின் வழி அந்தத் தகவல் கசிந்தது. லா வோஐ-க்கு பிறந்த அந்த இரு குழந்தைகளும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டனர்.

“குழந்தாய் இங்கே வா”. தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார் சின். “நீ இந்நாட்டின் சிறந்த அரசனாக இருக்க முடியுமென கருதுகிறாயா?” குழந்தைகள் சிரித்தன. அவ்விரு குழந்தைகளின் கவனமும் தன் கையில் இருந்த பொம்மைகளின் மீது இருந்தது.

சின் தனது படைகளைக் கொண்டு ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தை முறியடித்தார். லா வோஐ தரையில் படுக்க வைக்கப்பட்டான். போரில் ஏற்பட்டக் காயம் அவனை சோர்வுறச் செய்திருந்தது. கைகால்கள் அகல விரிக்கப்பட்டு கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்டது. அக்கயிறுகள் நாலா திசைகளிலும் நிறுத்தப்பட்ட குதிரைகளில் கட்டப்பட்டன.

இந்தச் சம்பவங்கள் நடந்தது லா வோஐ-யின் காதலியாகிய சின் அரசனின் அம்மாவின் கண் முன் தான்.

“அரசிகளுக்கு காதலன் இருப்பது புதிதல்லவே மகனே, ஏன் இப்படிச் செய்கிறாய்? தயவு செய்து என் காதலனை கொன்றுவிடாதே.”

“அம்மா உங்கள் தனிபட்ட விசயம் எனக்கு தேவையில்லைதான். ஆனால் எனது அரியனைக்கு ஆசைப்படும் யாரும் உயிரோடு இருக்கக் கூடாது. இவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்தே நடந்ததாக உங்கள் ஆசைக் காதலன் சொல்கிறான். இனி அவன் உயிர் வாழ்வது என் அரியணைக்கு நல்லதல்ல”.

குதிரைகள் விரட்டியடிக்கப்பட்டன. அவள் காதலனின் உடல் பிய்ந்து உதிரம் மண்ணில் கரைந்தது. பொம்மை விளையாடிக் கொண்டிருந்த அந்த இரு குழந்தைகளும் கழுத்தில் துணிகளால் இருக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. சின்னின் அம்மா அரண்மனையில் காவல் வைக்கப்பட்டாள். அரசனை பாதுகாக்க தவறியதற்காக லூ பூவேய்யின் பிரதம மந்திரி பதவி பறிகப்பட்டது. பின் நாட்களில் அவமானத்தின் காரணமாக விஷம் அருந்தி தற்கொலைச் செய்துக் கொண்டார்.

சின் தனது அரசவையில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். தெரிந்த எதிரிகளை விட கண்களுக்குத் தெரியாமல் நம் அருகிலேயே இருக்கும் எதிரிகளே ஆபத்தானவர்கள் என்பதை சின் தன் வாழ்நாளில் மிக நம்பினார். தனது இராணுவத்தையும் ஒற்றர் படையையும் வலுவாக்கினார்.

பக்கத்து நாடுகள் மீதான ஆக்கிரமிப்புகள் நடந்தன. ஹன் (Han), ஸா-ஓ (Zhao), வெய் (Wei) என மூன்று நாடுகள் சின் வசம் வந்துவிட்டிருந்தன. மீதம் இருப்பது இன்னும் மூன்று நாடுகள். அடுத்ததாக யான் (Yan) எனும் தேசத்தின் மீது படையெடுக்க உத்தேசித்திருந்தார் சின் ஷி ஹூவாங். அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

யான் தேசத்தின் இரு தூதுவர்கள் சின் மன்னனுக்குப் பரிசு பொருட்களைக் கொண்டு வந்திருந்தார்கள். அரசவையில் மண்டியிட்டு வணங்கினார்கள். யான் நாட்டின் பரிசைத் தனக்குத் திறந்து காட்டச் சொன்னார் சின். அரியணைச் சூழல் அதில் ஒருவனுக்கு அதீத பயத்தை ஏற்படுத்தி இருந்தது. ஒருவன் மட்டுமே முன் சென்றான். பெட்டியைத் திறந்து பரிசை வெளியெடுத்தான்.

அதில் ஒழித்து வைத்திருந்தக் கத்தியை எடுத்து அரசனை தாக்க ஆரம்பித்தான் தூதுவன். கடும் போராட்டத்தில் அரசன் உயிர் தப்பினான். அரசர் தன் முதுகில் வாள் மாட்டி இருந்தார். அதை உடனடியாக எடுத்து எதிரியை தாக்க முடியவில்லை. காரணம் அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய போர் வாள்கள் மிக நீளமானவை. உடனடியாக எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சின் வம்சத்து வாள்களை இன்றும் சீ-ஆன் பொருட்காட்சி சாலைகளில் காணலாம். அரசரை காண வந்த இருவரும் தூதர்கள் அல்ல. கை தேர்ந்த கொலையாளிகள். இச்சம்பவத்தின் பின் சின் அரண்மனையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழுபடுத்தப்பட்டன. இருந்தும் அரசனுக்கு ஒரு பாதுகாப்பற்றத் தன்மை தன்னைச் சூழ்ந்திருப்பதாக தோன்றியது.

இதற்கிடையே பெரும் நில பரப்பை கொண்ட ச்சூ (Chu) தேசத்தை வீழ்த்தினான். தனக்கு கடுக்காய் கொடுத்த யான் தேசமும் கவிழ்ந்தது அதை அடுத்து இருந்த ச்சீ (Qi) எனும் சிறு தேசம் எந்த போரும் இன்றி சரண் அடைந்தது. இப்போது பிரிவினைகள் இல்லை. ஒரே தேசம் அது சின் தேசம். ஒரே பேரரசன் அவன் பெயர் சின் ஹூவாங் டீ.

சின் காலத்தின் சீனாவின் நிலபரப்பிற்கும் தற்போதைய நிலைக்கும் வேறுபாடுகள் உண்டு. தற்போதைய சீனா நில பரப்பில் நான்காவது பெரிய நாடு. சண்டைச் சேவலை போன்றதொரு நில அமைப்புக் கொண்டது. சின் காலத்தின் பின் வந்த ஆட்சிகளில் சீனாவின் நிலபரப்பு பெரிதாக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சீனாவை உறுவாக்கிய சின் ஆட்சி அமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். ஆறு வகை எழுத்து முறைகள் அக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. அவற்றை ஒரே எழுத்து முறைக்கு கொண்டுவந்தார். இன்றளவில் ஒரே எழுத்துரு வகைகளே சீனர்களின் எழுத்துலகில் பயன்படுத்தப்படுகிறது. பண்ட மாற்று முறையில் இருந்து பண மாற்று முறை அமல்படுத்தப் பட்டது.

சின் அரசில் செல்வாக்கு மிகுந்த ஒரு நபர் இருந்தார். அரசனின் நம்பிக்கையான மந்திரியும் கூட. அவர் பெயர் லீசூ. லீசூவின் அலோசனையின் கீழ் சின் தேசத்தில் சட்ட அற நெறி (Legalism) சித்தாந்தம் கொண்டு வரப்பட்டது. இதன் அமலாக்கம் சீன தேசத்தில் மிகப் பெரும் உயிர் மற்றும் கலாச்சார சேதத்தை ஏற்படுத்தியது. நில ஆக்கிரமிப்பு போர், ஆட்சி சீர்திருத்தமென சின் காலகட்டத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடி இருக்கலாம் என கணிக்கிறார்கள்.

சட்ட அறநெறி சித்தாந்த அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சுயநலவாதிகள். தேசத்தின் நன்மை பொருட்டு இந்த சுயநலவாதி மக்களை அடக்கி வைக்கவேண்டும். சட்ட அறநெறிக்கு எதிரான அனைத்தும் அழித்தொழிக்கபட்டது. பல நூல்கள்* எறிக்கப்பட்டன, எதிர்சிந்தனை கொண்ட அறிஞர்கள் கொல்லப்பட்டார்கள். முக்கியமாக கன்பூசியஸ் சித்தாந்தமும் மதமும் தடை செய்யப்பட்டது.

*பண்டையச் சீனர்கள் மூங்கில் பட்டைகளை நேர்வாக்காக வைத்து நூல்களை இயற்றினார்கள். இந்த மூங்கில் பட்டைகள் சிறு கொடிகளால் இணைக்கப்பட்டிருக்கும். நாம் பாயை சுருட்டுவது போல் இந்த நூல்களை சுருட்டி வைத்துக்கொள்வார்கள். அப்போதைய எழுது முறை வலமிருந்து இடமாக வாசிக்கப்பட்டது.

மக்கள் சிறு தவறு செய்தாலும் கடும் தண்டனை விதிக்கப்பட்டது. முக்கியமாக சீனப் பெருஞ்சுவரைக் கட்டவும், சாலைகள் அமைக்கவும், பெரும் கால்வாய்கள் அமைக்கவும் அடிமைகளாக்கப்பட்டனர். சீனப் பெருஞ்சுவர் கட்டத் தொடங்கியதும் சின்காலத்தில் தான். சின் ஹூவாங் டாவ் எனப்படும் கடலில் முடியும் பெருச்சுவர் சின் ஹூவாங் டீயில் பெயரின் தான் இன்றும் அழைக்கப்படுகிறது.

சின் ஹூவாங் டீ உலகிற்கான நடுவக ஆட்சியை கொண்டு வந்துவிட்டதாக நம்பினார். ஆட்சியில் சீர்திருத்தம் செய்துவிட்டதாக நம்பினார். கடவுளின் கட்டளையை நிறைவேற்றிவிட்ட மனநிறைவு அவருக்கு இருந்தது.

சின் ஹுவாங் டீயை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்தன. பாதுகாப்பின்மையின் அச்சம் அவரை மிகவருத்தியது. அரியனையில் வாளோடு தான் அமர்வார். அரண்மனையில் தான் தூங்கும் அறையை யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொண்டார். இருந்தும் யாரோ தன்னை பின் தொடர்வதைப் போன்ற எண்ணம் உதித்துக் கொண்டே இருந்தது.

அவர் செய்த கொலைகள் நினைவிற்கு வந்துபோயின. தன்னால் கொல்லப்பட்ட ஆன்மாக்கள் தன்னைக் கொல்ல பின் தொடர்வதாக நம்பினார். தான் இறந்த பின் இந்த ஆன்மாக்கள் அவரை பழிவாங்கக் கூடும். யோசனையில் ஆழ்ந்த அரசர் தனக்கானக் கல்லறையை வடிவமைக்க ஆரம்பித்தார். எப்படிபட்ட கல்லறை? வேற்றுலகிலும் அரசனாகவே வாழ வேண்டும். எல்லா வசதிகளோடும். சுமார் 7 லட்சம் அடிமைகளைக் கொண்டு அந்தக் கல்லறை தயாரானது.

சின் தேசத்தின் வரைபடம் போன்ற அமைப்பிலானக் கல்லறை. மிகப் பெரிய அரண்மனை. அதில் வெங்களத்தில் ஆன கல்லறை. தேசத்தில் ஓடும் ஆறு நதிகளும் அதில் இருக்க வேண்டும். நட்சத்திரம் இருக்க வேண்டும். நிலா இருக்க வேண்டும். பலம் கொண்ட இராணுவம் மிக அவசியம். ஆம் இராணுவ தளவடாங்களை மறந்துவிடாதீர்கள். இப்படியாக ஏகப்பட்ட பிருமாண்டங்களோடு தனது கல்லறையைத் தயாரிக்கச் சொன்னார். இந்தக் கல்லறைக்குள் இன்றும் பாதரச அமிலம் உள்ளது.

சிலகாலத்திற்கு பிறகு மன்னனுக்கு வேறொரு யோசனைத் தோன்றியது. ’நான் கடவுளின் குழந்தை. நான் சாகாமல் நீண்ட ஆயுளோடு இந்த உலகை ஆட்சி செய்ய வேண்டும். அதற்கான வழி நிச்சயம் இருக்கும்’.

”யாரங்கே! நான் அமரத்துவமாக வாழ வழியை கண்டறியுங்கள். நமது படைகளை கடல் தாண்டி தேடச் சொல்லுங்கள். நான் முதுமையடைமலும் இறக்காமலும் இருக்க தீர்வை கொடுக்கச் சொல்லுங்கள்”.

”கடல் தாண்டிய மலையில், மூலிகை இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த மலையை யாரும் இன்னும் கண்டு பிடிக்கவில்லை மன்னா”.

“தேடிச் செல். கண்டுபிடிக்கும் வரை திரும்பி வராதே”

“மன்னா இளமையாக இருக்க ஒரு வழி உண்டு. எண்ணிலடங்கா பெண்களோடு சிற்றின்பத்தில் திளைத்தால் முதுமை அண்டாது”.

“ஓ. அப்படியே ஆகட்டும்”.

நாட்கள் கழிந்தன. மன்னன் தனது முழு பொழுதையும் அந்தபுரத்தில் மட்டுமே கழித்துக் கொண்டிருந்தான். மன்னனின் சாகா வர கண்டுபிடிப்புக்குச் சென்ற ஒருவன் திரும்பி வந்தான்.

“மன்னா இந்த மூலிகை சாகா வரத்திற்கு வழி வகுக்கும். ஆனால் மன்னா..,”

“ஆனால் என்ன?”

“இதை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் இளமையாகவும், இறக்காமலும் இருக்க முடியும்”.

“முட்டாளே, நான் கேட்டது அமரத்துவமாக வாழ்வதற்கான தீர்வு. போர் வாள் என் இதயத்தை துளைத்தாலும் நேராத இறப்பு. கண்டு பிடிக்கும் வரை இங்கே தலைக்காட்டிவிடாதே. அது வரை இந்த மூலிகையின் குறிப்புகளை மட்டும் வைத்துவிட்டுச் செல்”.

அன்று மன்னனின் கையில் ஒப்படைக்கப்பட்டது பாதரசம் கலந்த மூலிகை. ஏன் பாதரசம் என்பதற்கான கேள்விக்கு வரலாற்றில் இன்னமும் பதில் இல்லை. அதை அரசர் தொடர்ந்து சில ஆண்டுகள் சாப்பிட்டு வந்தார். பாதரசமே அரசனின் உடல் பாதிப்பிற்கும் இறப்பிற்கும் காரணமென கூறப்படுகிறது.

இரசாயன ஆய்வியல் நிபுணர்களின் கூற்றின்படி பாதரசம் மனிதனின் உடலில் ஒட்டாது. தாமரை இலைக்கும் நீருக்கும் ஏற்படும் தன்மையை போன்ற நிலையிலானது. சின் அரசர் மூலிகைகளோடு கலந்து வலுக்கட்டாயமாக அதைத் தன் உடலில் செலுத்தினார்.

சில ஆண்டுகளில் நறை கூடி இருந்தது. அரசரின் பாதரச சிட்டிகையின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருந்தது. பாதரசம் நரம்புகளைப் பாதித்தது. அரசர் நிதானம் இழந்திருந்தார். அடுத்ததாக அது மூளையைத் தாக்கியது. பாதரச மூலிகை வைத்தியத்தின் ஆறாம் ஆண்டில் அரசன் தன் சேனைகளோடு ஒரு மலையை நோக்கிச் சென்றான்.

நடக்க முடியாத நிலை. சிறுநீரகம் பாதிப்படைந்திருந்தது. இரு வீரர்கள் அரசரை மலை உச்சிக்கு தூக்கிச் சென்றார்கள்.

மலையில் நின்றபடி வானை நோக்கி பேச ஆரம்பித்திருந்தார். “சுவர்கத்தின் கடவுளே. உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளை வந்திருக்கிறேன். உன் கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டேன். ஏன் எனக்கு சாகா வரம் கொடுக்க மறுக்கிறாய்”. தனது மன வருத்தத்தைத் தெரிவித்து அழ ஆரம்பித்திருந்தார்.

சின் ஹூவாங் டீக்கு தனது வாழ்வின் கடைசி தினம் நெருங்குவது தெரிந்திருந்தது. ஒரு பயணத்தின் சமயம் தேரில் தன் அருகே அமர்ந்திருந்த பிரதம மந்திரி லீசூவை அழைத்தார்.

“இதில் என்ன இருக்கிறது தெரியுமா லீசூ?”

“தெரியாது மன்னா”.

“நான் இறந்த பின் தேர்ந்தெடுக்க வேண்டிய வாரிசின் பெயர்”.

“இல்லை மன்னா. கூடிய விரைவில் உங்கள் சாகா வரத்திற்கான மருந்து கண்டு பிடிக்கப்பட்டுவிடும். நமது இராணுவம் தேடிக் கொண்டுள்ளது”.

“நமது இராணுவம் இன்னும் கடலை தாண்டவே இல்லை லீசூ. பயணத்தின் போது அவர்களை பெரிய மீன்கள் தாக்கிவிட்டதாம். ஒற்றர்கள் எனக்குச் செய்தியை தெரிவித்துவிட்டார்கள். நான் அந்த மீன்களை வேட்டையாட போகிறேன் லீசூ. உடனே கிளம்புவோம் வா”.

“கடலுக்கா மன்னா?”

“என்ன கேள்வி இது. அங்கு தானே அந்த மீன்கள் உள்ளன… ம்ம்ம்... சீக்கிரம் புறப்படுவோம் வா”.

மன்னனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள். கரையில் இறங்கி தன் அம்புகளை எய்து பல மீன்களை கொன்றுவிட்டதாக கூறினார் சின். உடன் வந்திருந்த இராணுவம் ஜெய கோஷம் இட்டது.

மன்னர் தனது நகர் வலத்தில் இருந்தார். தான் எழுதிய அரியனை இரகசியங்களும் அதில் இருந்தன. பயணத்தின் போது இளைப்பாறியவாக்கில் இறந்துபோனார். அரியனை இரகசியங்கள் களவாடப்பட்டன. மன்னின் மரணம் மறைக்கப்பட்டது.

டிராகனின் நடனம் தொடரும்…

No comments: