Wednesday, January 30, 2019

மகாத்மா காந்தி கொலை வழக்கு

வாசகர்கள் தவறவிடக் கூடாத நூல் இது. காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான கதைகளையும், செய்திகளையும், ஆவணப் படங்களையும் பல விதங்களில் திரையில் கண்டும் வாசித்தும் இருப்போம். உலகச் சரித்திரத்தில் மாற்றம் ஏற்படுத்திய 100 பிரபலங்கள் எனும் நூல் உண்டு. அதில் காந்தியின் பெயர் இருக்காது. அதற்கான காரணத்தை முன் வைக்கும் அந்நூல் ஆசிரியர் காந்தியின் அரசியல் கொள்கைகள் அவரின் இறப்பிற்குப் பின் யாராலும் முன் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருப்பார். ஆனால் காந்தியின் கொலைக்கு முக்கியக் காரணம் அவரது கொள்கைகள் தான்.

நாம் இதுவரை பார்த்த, வாசித்தக் கதைகள் யாவும் காந்தியைச் சார்ந்தவகைகளாக இருந்திருக்கும். இந்நூல் முழுக்க காந்தியைக் கொல்ல வேண்டும் எனும் தீவிரக் கொள்கை கொண்ட தீவிரவாத கும்பலைச் சுற்றிய செய்திகளை நமக்கு அளிக்கிறது. சுதந்திர இந்தியாவில் ஹிந்துத் தீவிரவாதம் தலையெடுக்கக் காரணம் என்ன? கோட்ஸ்சே கூலிக்கு கொலை செய்தவராயின் தனது அடையாளத்தை மறைத்து கொலை செய்திருக்கலாம்! ஆனால் கோட்ஸ்சே எந்த வித அடையாள மறைப்பும் இன்றி காந்தியைக் கொலைச் செய்கிறார். காந்தியக் கொன்றப் பின் தான் பிறவிப் பயனடைந்துவிட்டதாக மகிழ்ச்சி கொண்டு தண்டனைக்குத் தயாராகிவிடுகிறார்.

தான் காந்தியைக் கொன்றது அரசியல் காரணங்களுக்கே எனக் கூறும் கோட்ஸ்சே தனது செயல்களில் தெளிவாகவே ஒவ்வொரு முடிவுகளையும் எடுத்திருக்கிறார். எந்தக் கோனத்திலும் சிந்தனை பிசிகியவராக அவரை அனுகிவிட முடியாது. எந்த அளவிற்கு ஹிந்து மதப் பற்று இருந்ததோ அந்த அளவிற்கு இஸ்லாமிய வெறுப்பும் அவரிடம் இருந்திருக்கிறது. காந்தி கண்டெடுத்த இந்திய சுதந்திரத்தால் பாக்கிஸ்தான் எனும் ஓர் இஸ்லாமிய நாடு உறுவானது. ஆனால் இந்தியா ஓர் இந்து தேசமல்ல. மதசார்பற்ற நாடாக இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனும் காந்தியின் கொள்கைகள் கொட்ஸ்சேவை மிகையாகவே கொதிப்படையச் செய்தன. காந்தியின் கொள்கைகளுக்கு எதிரான இந்து மகாசபையினரின் எதிர்ப்புகளும் வாதங்களும் தேசிய நிலையில் கவனம் பெறாமல் போனது மேலும் அவர்களின் கோபத் தீயில் நெய் வார்த்தது.

காந்தியின் கொலை வழக்கில் தூக்கிலடப்பட்ட நபர்கள் இருவர். ஆயுல் தண்டனை விதிக்கப்பட்டோர் மேலும் சிலர். காரணம் அது திட்டமிடப்பட்டக் கூட்டுச் சதி படு கொலையாகும். இந்தக் கொலைக்கு முழுமையாக தானே பெறுப்பேற்பதாக கோட்ஸ்சே வாதிட்டிருக்கிறார். காவல் துறையின் விசாரணை இக்கொலையின் வேர் இந்து மகாசாபா அமைப்பில் இருந்து உறுவானதை கண்டறிகிறார்கள். கொலைச் சதியில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். குற்றம் சாற்றப்பட்ட ஒவ்வொருவரின் பின்னனியும் அவர்களின் ஆரம்பக் காலம் முதல் அலசி ஆரயப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.

காந்தியைச் சுடப் பயன்படுத்தப்பட்டது ஓர் இத்தாலிய நாட்டுத் துப்பாக்கி. அது செய்யப்பட்ட ஆண்டு முதல் இந்தியா வந்து செர்ந்தது வரை என ஒவ்வோரு வரியும் சுவாரசியமான விளக்கங்களோடு விரிகிறது இந்நூல். இந்நூல் உறுவாக நிறையவே வாசித்து மேற்கோள் காட்டி இருக்கும் ஆசிரியர், வசகன் மேலும் தேடி பிடித்து வாசித்து அறிந்து கொள்ள தூண்டுதல்களையும் வழிவகுத்திருக்கிறார். நான் அவ்வாறே நூலின் வாசிப்பை நிறுத்தி இணையத்தில் சில தகவல்களை தேடி பிடித்து வாசித்து மீண்டும் நூலினைத் தொடர்ந்தேன். உலகில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட நான்காவது நாடு பாக்கிஸ்தான். சிந்துவெளி நாகரீகம் தோன்றிய சிந்து நதி தற்போது இருக்கும் இடமும் பாக்கிஸ்தான் தான்.

கோட்ஸ்சே தனது தரப்பு வாதத்தை எழுதி வைத்து சில மணி நேரங்கள் நீதிமன்றத்தில் வாசித்திருக்கிறார். வழக்கின் மேல் முறையீட்டின் சமயத்திலும் அதே போல் சில மணி நேரங்கள் தன் தரப்பு வாதத்தை வாசித்திருக்கிறார். வழக்கைப் பார்த்த பலரும் அவரின் பேச்சாற்றலில் உணர்ச்சிவயப்பட்டதாகவும், அந்த பார்வையாளர்களின் கைகளில் பேனா கொடுத்திருந்தால் கோட்ஸ்சே கோஸ்டியினர் நிரபராதிகள் என தீர்ப்பெழுதி இருப்பார்கள் என பின்னாட்களில் அவ்வழக்கின் நீதிபதி தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். கோட்ஸ்சேவின் defense வாதம் பின்னாட்களில் அவரின் தம்பி கோப்பால் கோட்ஸ்சோவால் May It Please Your Honor எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

நாதுராம் கோட்ஸ்சேவின் சாம்பல் இரகசியமாக கரைக்கப்படது என ஆசிரியர் எழுதியுள்ளார். கோட்ஸேவின் கடைசி ஆசை தனது சாம்பல் பாக்கிஸ்தானில் இருக்கும் சிந்துநதியில் கரைக்கப்பட வேண்டும் என்பதே. காந்தியின் சாம்பல் தூவப்பட்ட இந்திய தேசத்தில் தமது சாம்பல் கரைக்கப்படுவதை கோட்ஸ்சே விரும்பவில்லை. அது நடந்தேறியதா என்பது நமது தேடலுக்குறியது. காந்தியின் கொலை வழக்கு ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் தண்டனை காலம் முடிந்து வந்த பின்பும் சிறப்புக் கமிஷனால் மறு விசாரணை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் என்னை வெகுவாக கவர்த நூல் இது.

Tuesday, January 29, 2019

மயக்குறு திணை - சிறுகதை


”இங்க தான் படிச்சிங்களா? சின்ன வயசுல இந்த எஸ்டேட்ல தான் இருந்திங்கனு கேள்விப்பட்டேன். உள்ள வாங்க.” நுழைவாயில் பக்கம் வந்திருந்த தலைமையாசிரியர் அழைத்தார். ஆங்கிலத்தில் தான் உரையாடினார். 

”ஆமாம் சார், 91 பேட்ஜ், அங்க தான் வீடு இருந்தது, இப்போ உடைச்சிட்டாங்க போல, ஆறாவது பரிட்சை முடியறதுக்கு முன்னாடி இங்கிருந்து கிளம்பிவிட்டடேன்” உறுதிபடுத்தும் வகையாக சிரித்துக் கொண்டு அவரின் கரம் குலுக்கினேன். அதற்குள் பச்சை சாயம் பூசிய தேட்டத்துப் பலகை வீடிருந்த திசையைக் காட்டியிருந்தேன். காட்டுச் செடிகளின் புதர் நான் சுட்டிய திசையில் மண்டியிருந்தது.

”இப்போலாம் வெளிநாட்டுக்காரங்க தானே தேட்டத்து வேலை பாக்குறாங்க, குடும்ப அமைப்பிலான வீடுகளுக்குத் தேவை குறைஞ்சிட்டதால அதை எல்லாம் காலி செய்துட்டாங்க. நீங்க ஏன் கிளம்பிட்டிங்க?” அணிவகுப்புத் திடலில் நடந்தபடி பேசினார்.

”ஈப்போவுக்கு படிக்க போய்ட்டேன் சார். இங்க மறுபடி வருவேனு நினைச்சி கூட பார்க்கல”.

”நம்ம மக்கள் அதிகமா டவுன் பக்கம் போயிட்டதால தான் நிறைய பள்ளிக்கூடங்கள மூட வேண்டியதா போச்சு. இந்த ஸ்கூல பாருங்க படிக்கிற பிள்ளைகள பாதி பேர் அஸ்லிகார பிள்ளைகள்.” மொத்தம் 18 பேர் மட்டும் படிப்பதாக கூறினார். இந்தக் காரணத்தினால் தான் நான் பள்ளியைவிட்டுச் சென்றிருக்கக்கூடுமென தலைமையாசிரியருக்கு சுய தீர்மானம் இருந்தது. உண்மையில்லை தான். நான் அவரை மறுத்துக் கூறவும் விரும்பவில்லை.

பள்ளி வளாகத்தைக் கண்களால் அளந்தேன். மொத்தப் பள்ளியும் இளைத்துவிட்டதைப் போல் ஓர் உணர்வு. வருடத்தில் ஒரு முறை மலைத் தேனீக்கள் கூடுகட்டிச் செல்லும் பெரும் பாறை ஒன்று வளாகத்தில் இருந்தது. பாறை முழுக்க வண்ணம் பூசி மலாய் மொழியில் வாசகம் எழுதி இருந்தார்கள். பாறை சிவப்பும் வெள்ளையுமாக நிறம் மாறி இருந்தது. மலைத் தேனீக்கள் இனி வருவது சந்தேகமே.

பாறைக்கு முன் அணி வகுப்புத் திடல். அதை ஒட்டி பிரிட்டிஸ் காலத்தில் கட்டிய பலகை கட்டிடம். அதைக் கொட்டகை என்றும் கிண்டலடிப்போர் உண்டு. 1947-ல் இருந்து தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ள இடம். மறைப்புப் பலகைகளை வைத்து வகுப்புகளைப் பிரித்து பாடம் நடத்தினார்கள். இப்போதும் அப்படியே போதிக்கப்படுவதை காண முடிந்தது.

கொஞ்சம் புத்தகங்களோடு நூலகம் இருந்த இடம் புதுப்பித்த தலைமையாசிரியர் அறையாக மாறி இருந்தது. 1992-ஆம் ஆண்டு நிதி திரட்டி கட்டிய செங்கள் கட்டடத்தை ஆறாம் வகுப்பிற்கும் நூலகத்திற்கும் என வகுத்திருந்தார்கள். ஆறாம் வகுப்பு அப்படியே இருந்தது. நூலகத்தில் தலைமையாசிரியர் குடி பெயர்ந்திருந்தார்.

”கொஞ்சம் இருங்க சார், ஸ்கூல பார்த்துட்டு வந்திடுறேன்.” நான் கொண்டு வந்திருந்த பையை அவர் அறையில் வைத்துவிட்டு பக்கத்தில் இருந்த ஆறாம் வகுப்பு முன் சென்றேன். தன்னிரக்க உணர்வு என்னைக் கலங்கச் செய்தது. என் மனதிற்குள் வைத்துக் கொண்ட நினைவுகள் முயல் குட்டிகளாக வெளிவர எத்தனித்தன.

”உன்ன ஆறு ஏ எடுக்க ஒழுங்கா படிடானு சொன்னா... என்ன பண்ணிகிட்டு இருக்க...” சந்திரன் வாத்தியார் என் இடது கையைப் பிடித்துக் கொண்டு கண்மண் தெரியாமல் முதுகு, பிட்டம், கால் என பிரம்பால் விலாசி வெளியே விரட்டியது இங்கே தான்.

நடந்தபடியே திடல் பக்கம் வந்திருந்தேன். கொஞ்சம் மழைப் பெய்தாலும் சகதியாகிவிடும் புல் வெளி. சகதியாக இருந்தாலும் விளையாட்டை விடக்கூடாது என்பதில் தின்னம் இருந்தது. அதற்காகவேனும் நெகிழியிலான காலனிகளையே பலரும் பயன்படுத்தினோம். துவைத்து துடைத்தாலே காய்ந்துவிடும். விலையும் மலிவு. துணியிலான காலனிகள் அதிக விலை மட்டுமல்ல, கேமரன் மலைக் குளிரில் சுலபத்தில் காயாது.

திடல் முடியும் இடத்தில் ஒரு மேடு தொடங்கி கொஞ்சம் நில இடவெளியும் பின் வேலியும் இருந்தது. வேலியை ஒட்டிய 'ரெஸ் பேரி' மரம் இன்னமும் அங்கேயே இருந்தது. அதே உயரம். 23 வருடங்களுக்கு முன் பார்த்த அதே செழிப்பு. என் நினைவுகளைப் போலவே எந்த மாற்றமும் இல்லாமல்.

அதன் பழங்களைச் சியாமளாவிற்காகவே பறித்துச் செல்வேன். ”புளிக்குதுடா இன்னும் பழுக்கல”. கருமை குறைவான ரெஸ் பேரி காயைக் காட்டி அவள் முகத்தைப் புளிப்பது என்னை மகிழ்ச்சிபடுத்தியது. ஆறாம் ஆண்டில் சியாமளா ஒவ்வொரு நாளும் அழகாகி கொண்டிருந்தாள்.

”டேய் மாற, சியாமளா உன் ஆளா டா?” என அருள் நேரடியாக விசாரித்தான். அந்தக் கேள்வி ஒரு உளக் கிளர்ச்சியைக் கொடுத்தது. சக மாணவர்களின் கற்பனை இதயக் குறியில் அம்பு விடும் தேவனாக என்னை மாற்றிக் கொண்டிருந்தது. அதை நான் மிகுதியாக விரும்பினேன்.

பரிட்சையில் ஆறு ஏ எடுப்பதாகக் கூறி அப்பாவிடம் முன்கூட்டியே ஒரு பி.எம்.எக்ஸ் சைக்கிளை லஞ்சம் வாங்கி இருந்தேன். தூரமில்லாத வீட்டுக்கு கூட அந்தச் சைக்கிளை ஓட்டிச் செல்வது ஒரு மிதப்பைக் கொடுத்தது. சியாமளா கூட எனது சைக்கிளை மிரள பார்த்திருக்கிறாள். பள்ளி முடிந்து அவளை சைக்கிளின் பின் அமர்த்தி மிதித்துக் கொண்டு ரகு கடையில் டியூப் ஐஸ் வாங்கித் தின்பதும் சில வேளைகளில் நடந்தது.

”வேகமா ஓட்டாத டா, பயமா இருக்கு” என என்னை இருக்கிப் பிடிக்கும் ஸ்பரிசத்தைக் காதல் மனம் கொண்டவர்களால் மட்டுமே உணர முடியும். என் மீது கொண்ட அதீத ஆசையிலாயே சியாமளா அன்யோன்யமாக பழகுவதாக கருதினேன். அவளின் மனதை புரிந்துக் கொள்வதில் எக்கச்செக்கமான குழப்பங்கள் இருந்தது. காதலை உறுதி படுத்தாத வரையில் அது சிக்கலான விசயம் தானே.

கணேசன் அதற்கு ஒரு தீர்வைத் தந்தான். ”ஒரு லெட்டர்ல நீ எல்லாத்தையும் எழுதி சியாமளா கிட்ட கொடுத்திடு, எழுத்திட்டு லெட்டர்ல பவுடர தூவிவிடு, அப்ப தான் லெட்டர் நல்ல வாசமா இருக்கும்” இடைநிலைப் பள்ளியில் இருக்கும் அவன் அண்ணன் அப்படிச் செய்ததாகக் கூறினான். அதுவே எனக்கும் நல்ல யோசனையாக தோன்றியது.

நல்ல நாள் பார்த்து என் கடைசி காதல் கடித்தத்தை சில பல பிருமாண்டங்களோடு அலங்கரித்து முடித்தேன். இடைவேளை நேரம் சியாமளாவிடம் அதைக் கொடுத்த போது அவள் வேகமாக அழ ஆரம்பித்திருந்தாள். அந்த நாள் என் வாழ்வின் பேரவலம் ஆனது. கதவின் முன் காவலில் இருந்த கணேசன் காணாமல் போயிருந்தான்.

வகுப்பாசிரியர் சந்திரனுக்குத் தான் முதலில் தெரிந்தது. அதன் பின் ஒரு பள்ளிக்கூடத்துக்கே அது பேசு பொருளாகி போனது. சந்திரன் ஐயா தன் பிரம்பாயுத்தை என் மீது பிரயோகிக்க ஆரம்பித்திருந்தார்.

”இனி நீ ஸ்கூல் பக்கமே வரக் கூடாது” அவர் தூக்கியெரிந்த என் பள்ளிப் பையின் அடிவயிரு கிழிந்து நூல்கள் சிதறின. என் அப்பாவுக்கும் இந்த விசயம் தெரிந்து இடைவார் பூஜை செய்து சில நாட்களில் என்னை ஈப்போவில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார்கள். நான் கடைசியாக பார்த்தது சியாமளாவின் அழுத முகம் தான்.

“என்ன மாறன் சார்' இங்கயே நின்னுட்டிங்க?” தலைமையாசிரியர் என் பின்னால் நின்றிருந்தார்.

“பழைய ஞாபகம் வந்திடுச்சு சார்”, துளிர்த்த ஞாபகங்களை மனக் கிணற்றில் மூடி வைத்துப் பேச்சை தொடர்ந்தேன்.

”இங்க இன்னும் பூசை போடுறாங்களா சார்?” திடலின் பக்கவாட்டில் பார்க்க அந்த மாரியம்மன் கோவில் முழுதாகத் தெரிந்தது. அதன் முன்னிருந்த தார் சாலையில் கவ்வாத்து செய்த தேயிலைகளைக் கழிவு பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

”மியான்மார்கார பையன் ஒருவன் விளக்கு போடுறதா சொல்றாங்க. வருசம் தவறாம திருவிழாவுக்கு மட்டும் தான் ஜனம் கூடுது”. கோவிலுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் ஏறக்குறைய ஒரே வயது தான். பல சிறு வழிபாட்டுத் தளங்கள் பராமரிப்பு இன்றி தடம் தெரியாமல் போனதாகச் சொன்னார்.

”Step Back in Time புத்தகத்துல இந்த தோட்டத்த உறுவாக்க தாப்பா வழியா கோமரன்மலைக்கு தமிழ் சஞ்சிக் கூலிகள் நடந்தே வந்ததாக குறிப்பிட்டிருக்காங்க. அதை எழுதினது இந்த தோட்ட முதலாளி தான். நாம விட்டுடோம் சார்”.

”பொருளாதார பேரலையில் நம் சமூகத்தின் இடப் பெயர்வும் தவிர்க்க முடியாது தான் மாறன். எதுவும் நம் கையில் இல்லை. சரி மேலிடத்தில் இருந்து நீங்கள் வந்த விசயத்தை சொல்லலையே”. துரித 'மைலோ' பானத்தை கப்பில் கொட்டி சுடுநீர் நிறப்பி என் முன் நகர்தியபடி கேட்டார்.

”உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச விசயம் தானே சார். இது இந்தப் பள்ளிக்கான இரண்டாவது கடிதம்.”

”மாணவர்களைப் பக்கத்துப் பள்ளிக்கு அனுப்பிட்டு இதை மூடிடலாம்னு சொல்றாங்களா? நீங்க படிச்ச இடமாச்சே. தீட்டின மரத்திலேயே கூர் பாக்குறிங்களே மாறன்”.

”எனக்கு இங்கு வேலை நியமனம் இல்லாதிருந்தால் இந்த விசயங்கள் தெரியாமல் போயிருக்கலாம். நான் வசித்த, படித்த இடம் என்பதாலேயே பார்க்க வந்தேன். நான் அரசு இயந்திரத்தின் தூது புறா மட்டுமே. குறைவான மாணவர்கள். பக்கத்துப் பள்ளியில் சேர்ந்துக் கொண்டால் ஒரே பள்ளிக்கான செலவில் சேரும்.” 

”வேறு ஏதும் செய்ய முடியாதா?” 

”பள்ளியை மூடாதிருக்க காரணங்களைக் குறிப்பிட்டு மறுபரிசீலனைக்கு கோரிக்கை வைக்கலாம், முதல் கடிதத்துக்கு அப்படி தான் செய்திருந்திங்க”.

”இன்னும் ஓரிரு வருஷம் தாக்கு பிடிக்குமா?” அந்தக் கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை.

”சரி சார் கிளம்புறேன், நிறைய வேலை இருக்கு”.

வேலிக்கு வெளியே இருந்த வாகனத்தை நோக்கி நடந்தேன். இடைவேளை நேரத்தில் பாரதியார் பாடலை இசைக்கவிட்டிருந்தார்கள். ’பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா, நிந்தன் பச்சை நிறத் தோன்று தையே நந்தலாலா’ என யோசுதாளின் குரல் இனித்துக் கொண்டிருந்தது. என் எதிரே ஓடிவந்த மாணவனின் கையில் சில ரெஸ் பேரிகள் இருந்தன. அவை இன்னும் பழுத்திருக்கவில்லை. 

–முற்றும்- 

ஜனவரி 2018

*நன்றி மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை.

Friday, January 25, 2019

Kra Isthmus Canal (க்ரா கால்வாய்) - தீவாகும் தீபகற்பம்



இந்தியப் பெருங்கடலில் இருந்து தென் சீனக் கடலுக்கானப் பயணத்தை இணைக்கும் மிகக் குறுகிய கடல் வழி பாதை மலாக்கா நீரிணை தான். ஆண்டுக்கு 2 இலட்சம் கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியே பயணம் செய்ய முடியும். இன்றைய நிலையில் 120000 வர்த்தக கப்பல்கள் இந்த நீரிணையில் உலக நாடுகளின் பொருளாதாரத்தின் ஒரு பகுதியைச் சுமந்துச் சென்றுக் கொண்டுள்ளன. அந்தி வேளைகளில் தெலோக் கெமாங் (Teluk Kemang) கடற்கரையில் நின்று காண்கையில் கடலின் முதுகில் தொடர் வண்டிகளைப் போல் கப்பல்கள் ஊர்ந்து கொண்டிருப்பதைக் காண முடியும். உலகளாவிய நிலையில் அதிகமான கப்பல் போக்குவரத்துக் கொண்ட கடல் பகுதிகளில் ஒன்று மலாக்கா நீரணை.

1677-ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம். தாய்லாந்து என அறியப்படும் தேசம் அன்று அயோத்தியப் பேரரசு (Ayutthaya Kingdome) எனப் பெயர் கொண்டு விளங்கியது. இன்றைய தாய்லாந்து பூலோக வரைப் படம் போல இல்லாமல் அதன் இராஜாங்கம் மியன்மார், லாவோஸ், மலாயா என பரந்துபட்டிருந்தது. ஆசிய கண்டத்தையும் மேற்குலக தேசங்களையும் இணைக்கும் வர்த்தக மையமாக ஆயோத்திய தேசம் அமைந்ததால் சொல்வ செழிப்போடு விளங்கியது.

அதை ஆட்சி செய்த ராமபோதி அரசருக்கு ஒரு யோசனைத் தோன்றியது. தனது அரசவையில் கலந்தாலோசித்தார். தென் தாய்லாந்தின் வளைகுடாவை ஒட்டி இருக்கும் சொங்கலா (Shongkhla) எனும் நகரில் இருந்து அந்தமான் கடல் பகுதியில் இருக்கும் மரிட் எனும் கடற்கரை நகருக்கு நீர் வழிப் பாதை ஏற்படுத்த முடியுமா என்பது தான் அரசரின் சிந்தனை. அப்போதைய தொழில்நுட்பத்தால் அது சாத்தியப்படவில்லை.

அதைத் தொடர்ந்து பல நூற்றாண்டுகளின் கால இடைவெளியில் அந்த நீர் வழிப் பாதைக்கான முயற்சிகள் சாத்தியப்படுமா என பலரும் முயன்றுள்ளார்கள். அன்றய தாய்லாந்து மன்னர்கள் இராணுவத்தை வழுபடுத்துவதற்காகவே க்ரா கால்வாயை உருவாக்க நினைத்தார்கள். மேற்கு உலக காலணியாதிக்கம் ஆசிய நாடுகளெங்கும் கை ஓங்கி இருந்த சமயம் க்ரா கால்வாய் அமையாமல் இருப்பதே தன் நாடுக்குப் பாதுகாப்பு எனக் கருதியது தாய்லாந்து.

சூவேஸ் கால்வாயை வெற்றிகரமாக அமைத்துக் கொடுத்த Ferdinand de Lesseps, 1882-ஆம் ஆண்டு தாய்லாந்து வந்தார். க்ரா கால்வாயை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதே அவரின் நோக்கம். நாட்டின் பாதுகாப்பு பொருட்டு தாய்லாந்து மன்னர் அந்த ஆய்வு மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை. பிரிடிஸ் காலணியாதிக்கத்தில் சிங்கபூர் உலகப் பிரசித்தி வாய்ந்த துறைமுக நகரமாக இருந்தது. அதன் பின் உண்டான பிரிடிஸ் தாய்லாந்து ஒப்பதந்தபடி க்ரா கால்வாயை அமைக்க மாட்டேன் என சூடம் அடித்து சத்தியம் செய்துக் கொடுத்தது தாய்லாந்து.

சீனாவின் தற்போதைய மாபெரும் திட்டங்களில் ஒன்று One Belt One Road (OBOR) திட்டமாகும். கடந்த ஆண்டில் இதன் ஆதிகாரபூர்வ மாநாட்டுக்குச் சுமார் 43 நாட்டுத் தலைவர்களின் வருகையை முன்னிட்டு ஒட்டு மொத்த பெய்ஜிங்கும் சாலை அடைப்பால் ஸ்தம்பித்து போனது. இந்த ஓபோர் திட்டத்தில் ஓர் அம்சம் கடல் வழி பட்டுப் பாதை (Maritim Silk Road). இதை சாத்தியப் படுத்த தாய்லாந்தின் வாலைத் துண்டிக்க வேண்டும். அதாவது மலேசியாவின் தலைக்கு மேலே ஒரு சிறுக் கோடு போட்டுவிட்டால் இரு மாபெரும் கடல் பகுதிகளை இணைத்துவிடலாம்.

இப்படி ஒரு கால்வாய் அமைக்கப்படுமானால் அது க்ரா கால்வாய் என அழைக்கப்படும். வர்த்தகக் கப்பல்கள் மலாக்கா நீரணை வழியே சிங்கப்பூரைக் கடந்து தென் சீனக் கடலில் நுழையும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலை இருக்காது. அந்தமான் கடலில் இருந்து நேராகத் தாய்லாந்து வளைகுடா வழி தென் சீனக் கடலுக்கு போய்விடலாம். இதனால் சுமார் 1000கிலோ மீட்டர் பயணத் தூரத்தை மிச்சம் பிடிக்க முடியும். மொத்தப் பயண நாட்களில் 2 அல்லது 3 நாட்கள் குறைந்துவிடும்.

தாய்லாந்து இந்தத் திட்டத்தின் வழி பொருளாதார வளர்ச்சியும் இலாபமும் பார்க்க முடியும். இந்தக் கால்வாயை உருவாக்க நான்கு பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று தேர்வு செய்யப்படலாம். வேண்டிய அளவிலான கால்வாய் அகலத்துக்கு ஹைட்ரஜன் வெடி மருந்துகளை வைத்துக் கொண்டு வந்தால் இருபக்கக் கடல்களையும் இணைத்துவிடலாம்.

2005-ஆம் ஆண்டுக் கசிந்தத் தகவலின் அடிப்படையில் சீனா இந்தத் திட்டத்தை 10 ஆண்டுகளில் செய்து முடித்துவிடலாம் என்கிறது. 30 ஆயிரம் ஆள் பலமும் 25 பில்லியன் டாலர் பணமும் இந்தக் கால்வாய் திட்டத்தைச் சாத்தியப்படுத்த போதுமானதாகக் கூறப்படுகிறது. க்ரா கால்வாயை அமைப்பதின் மூலம் ஆசிய கண்டத்தின் பல நாடுகள் உலக நாடுகளுடனானக் கடல் வர்த்தகத்தைக் குறைந்த செலவில் ஈடுகட்ட முடியும்.

ஆனால் தாய்லாந்திடம் ஏதோ ஒரு தயக்கம் தொடர்ந்து இருந்துக் கொண்டே உள்ளது. க்ரா கால்வாய் திட்டம் சாத்தியப்படும் என்றால் தாய்லாந்தின் தென் கோடியில் இருக்கும் நான்கு மாநிலங்கள் அதன் பெருநிலப் பகுதியில் இருந்துத் துண்டித்துப் போகும். இயற்கைப் பேரிடர்கள் கூட நிகழலாம். சீனா தன் பங்குக்கு உறுவாக்கிய மாபெரும் அணையும் (The Three Gorges Dam) அதனால் உண்டாகும் தொடர் இயற்கைப் பேரிடரையும் நாம் நினைவு கூற வேண்டும். ஒரு பெரும் நிலத்தையும் மலைகளையும் குடையும் போதுக் கிடைக்கும் மண் மணல் போன்றவற்றைக் குவிப்பதற்கான இடம் கண்டறியப்படவில்லை.

மலேசியாவைப் பொறுத்த வரை மலாக்கா நீரிணையை ஒட்டியத் துறைமுகங்களான பினாங்கு (Penang Port), கிள்ளான் (Port Klang), மலாக்கா (Melaka Port), ஜொகூர் (Tanjung Pelepas) போன்ற இடங்களைச் சார்ந்தத் துறைமுகங்கள் பாதிப்பைச் சந்திகக் கூடும். சிங்கப்பூர் தனதுக் கடல் வணிகத்தின் 30 விழுக்காடு இழக்குமெனத் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் பேங்காக்கில் நடைபெற்றக் கூட்டத்தின் பின்பும் தாய்லாந்து க்ரா கால்வாய் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்தத் திட்டமாக இன்னும் எடுத்துக் கொள்ளப் படவில்லை என்றேக் கூறுகிறது. பின்னணி தீர்வுகள் நமக்கு தெரிவதற்கான சாத்தியங்கள் குறைவு தான்.

மனிதர்களின் அத்து மீறல்களைத் தாங்கிக் கொள்ளும் இயற்கை தனது சீற்றத்தை வெளிபடுத்தும் போது மனிதனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

-முற்றும்-

Reference:

2018-ஆம் ஆண்டு வாசித்த நூல்கள் (21-30)



21. உளவு-ஊழல்-அரசியல்

அரசு செயல்பட்டை கேள்விக்கு உட்படுத்தும் ஒரு சாமானியன் எப்படி எல்லாம் அடித்து துவைத்து துவம்சம் செய்யப்படுகிறான் என்பதை ஒரு கிரைம் சாகச நூலை போல் எழுதி இருக்கிறார் சவுக்கு சங்கர். ஊழல் மிகுந்த அரசு இயந்திரத்தில் அனைத்து துரைகளும் சமூக நியதிக்கு நேர்மாறாக நடந்துக் கொள்கின்றன. சங்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் தனது 16-வது வயதில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவர் காணும் அரசியால் ஊழல் சம்பவங்கள், எப்படியாக அதில் அவர் சிக்கி தப்புகிறார் என்பதாக மிக சுவாரசசியமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

22. ஓநாய் குலசின்னம்

1970-களில் கலாச்சார புரட்சியின் போது சீனாவின் இன்னர் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்தில் நடந்த சம்பவத்தை இந்த நூல் பேசுகிறது. இது மிக மிக சுவாரசியமான மறுபட்ட வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் புத்தகம். இதை வாசிக்கும் போது ஓநாய்களை காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அதனை ஒரு வெற்றியின் குறியீடாகவே காண்பீர்கள். இந்நூல் தொடர்பான விளக்க பதிவை ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

23. குமார் துப்பறிகிறார்

இன்ஸ்பெக்டர் குமார் செர்லாக் ஹாம்ஸை போல நூதன துண்ணறிவைக் கொண்டவர். மிகவும் ஜாலியாக வாசிப்பவரை சிரிக்க வைத்துக் கொண்டே துப்பறிகிறார். பேயோனின் நகைச்சுவை மிகுந்த எழுத்து எனக்கு பிடித்தமான ஒன்று. அதில் அழகியலும் மொழி லாவகமும் உண்டு.

24. என்னை நான் சந்தித்தேன்

எழுத்தாளர் இராஜேஸ்குமாரின் எழுத்துலக சுயசரிதமாக இந்த நூல் அமைந்துள்ளது. மிக விறுவிறுப்பான எழுத்து நடை. எழுத்துலகில் 1000க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். எழுத்துலகில் கொண்டாடப்பட்ட அளவு இவர் சினிமா துறையில் பார்க்கப்படவில்லை. சினிமாவில் இவரின் படைபுகள் திருடப்பட்டன. உழைப்புக்கு ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றப்பட்டார். சினிமாவின் மோசடிகளை நூல் நெடுக பதிவு செய்கிறார்.

25. துப்பாக்கி மொழி

இந்த நூலில் இந்தியாவில் செயல்படும் சுமார் 63 தீவிரவாத இயக்கங்களை பதிவு செய்துள்ளார்கள். அது அதிர்ச்சிகரமானதாகவும் உள்ளது. ஒரு மண் சார்ந்த மக்களின் நியாயங்களும், கோரிக்கைகளும், கொள்கைகளும் மறுக்கப்படும் போது அங்கே ஓர் எழுச்சியும் போராட்டமும் உருவாகிறது. ஆயுதம் ஏந்தும் போராட்டம் என்பது தீவிரவாதமாக ஆகிறது. நாம் அறிந்திராத ஏகபட்ட புதிய இயக்கங்களை பற்றி இந்த நூல் பேசுகிறது.

26. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

The confession of an economic hitman எனும் ஆங்கில பதிப்பின் மொழியாக்கம் இந்த நூல். வாசிப்பு வெளியில் அதிகமாக விவாதிக்கப்பட்ட நூல்களில் ஒன்று. அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் சுரண்டல்களை தோல் உரித்து காட்டுகிறது. இந்தோனேசிய, பனமா, சவுதி அரேபியா, ஈரான், ஈக்வெடார், குவாத்தமாலா என ஏகபட்ட நாடுகளில் பொருளாதார நிபுணராக பணியாற்றுகிறார் ஜான் பெர்கின்ஸ். வளர்ச்சி திட்டங்களுக்கென அந்த நாடுகள் அதிகமான கடனை வாங்கி கட்ட முடியாத நினைக்கு தள்ளப்படுகின்றன. கடனுக்கு பதிலாக அந்நாடுகளின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. சமீப அரசியல் நிலையில் செங்கொடி ஏந்திய கம்பூனிச முதலாளியும் இந்த வழிமுறையை தான் பல நாடுகளின் செயல்படுத்தியுள்ளார். எரியும் பனிக்காடு (Red Tea) நூலில் இரா.முருகவேலின் மொழியாக்கம் மிக இலகுவான நடையில் இருந்தது. இந்த நூலில் அது மிஸ்ஸிங். சில வாக்கியங்களை வாசித்து முடிப்பதற்குள் நுரை தள்ளிவிடுகிறது.

27. மிச்சமிருப்பவர்கள்

ஒரு சமூகத்தின் அரசியல் தலைமைத்துவம் என்பதே கேலிக்கு உட்படும் போது அந்த சமூக நிலை எப்படி இருக்கும். வழிகாட்டல் குறைவான சமூகத்தில் நிகழும் அவலங்களை இந்த குறுநாவல் பேசுகிறது. 2007 எழுச்சி பேரணிக்கு முந்தய காலகட்டதில் மலேசிய இந்திய சமூகத்தில் நிகழ்ந்த பல ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை நிகழ்வுகளை பதிவு செய்துள்ள நூல் இது. இக்குறுநாவல் தொடர்பாக முந்தய பதிவில் எழுதியுள்ளேன்.

28. தப்பு தப்பாய் ஒரு கொலை

இராஜேஸ்குமார் தமது சுயசரிதத்தில் சிலாகித்து குறிப்பிட்டிருந்ததால் இந்த நாவலை வாசித்தேன். விறுவிறுப்பான நடை என்பதை தவிர இதில் வேறு விசயங்கள் இல்லை.

29. Brief answers to the big question.

ஸ்டிபன் ஹாக்கின்ஸ் எழுதிய கடைசி நூல் இது. பெரிய கேள்விகளுக்கான குறுகிய விடை எனினும் ஒவ்வொரு விடையும் சுமார் 20 பக்கங்களுக்கு உள்ளன. இலகுவான ஆங்கில நடையில் எழுதபட்டிருப்பினும் அறிவியல் புரிந்துணர்வின் பொருட்டு சிற்சில இடங்களில் இந்நூல் மீள் வாசிப்பை கோருகிறது. கடவுள் உண்டா எனும் முதல் கேள்வியில் அது இல்லையெனவும் தேவை அற்றது எனவும் விளக்கமளிக்கிறார் ஸ்டீபன். பத்திமான்களின் உணர்சியை சீண்டி பார்க்கும் பதில் எனினும் அதுவே உண்மையும் கூட. கலத்தை கடக்கும் பயணம் சாத்தியமா? கருந்துளையில் இருப்பது என்ன என மிக எளிய மொழியில் பேசும் நூல். ஸ்டீபனின் எழுத்தில் அவர் நகைச்சுவை உணர்வும், இலக்கிய ஆர்வமும் கொண்டவர் என காண முடிகிறது.

30. Imperial Women

சீன சமூகத்தில் பெயரிடும் முறையை வைத்தே அச்சமூகத்தில் ஆணின் ஆதிக்கத்திற்கு கொடுக்கப்படும் முக்கியதுவத்தை உணர முடியும். அப்படி இருக்க சில பெண்களே சீன சரித்திரத்தில் தமது பெயரை நிலை நாட்டி உள்ளனர். 5000-ஆம் ஆண்டு பாரம்பரியத்தில் Wu Zetian எனும் ஒரே ஒரு பெண் மட்டுமே அரசர் ஆகி இருக்கிறார். அடுத்தபடியாக அந்த இடத்தை நெறுங்கும் நபர் Dowager Cixi எனும் இராஜமாதா. அரசரின் கடைசி நிலை காமக்கிழத்தியாக இருந்த இவர் இராஜமாதாவாக தன்னை உயர்திக் கொண்டு திரைமறைவில் சீன நாட்டை ஆட்சி செய்துள்ளார். மஞ்சூரியாவின் யாஹூனாலா குழுமத்தைச் சேர்ந்த இவரின் பேரன் தான் சீனாவின் கடைசி அரசர் ஆவார். 1800-களில் கிழக்கு நாடுகள் ஆசியாவின் மீது மேற்கொண்ட ஆக்கிறப்பின் போது சீனாவும் தப்பவில்லை. இவரின் தனித்த ஆளுமையே 1911 வரை சீனாவில் அரச ஆட்சியை நீட்டிக்க செய்தது. இந்நாவல் ச்சீசி ஃபோர்பிடன் சிட்டியில் காமக்கிழத்தியாக அழத்து வந்தது முதல் அவரின் காலத்தை பதிவு செய்கிறது.

முற்றும்.

Thursday, January 24, 2019

2018-ஆம் ஆண்டு வாசித்த நூல்கள் (11-20)

வாசிக்கும் நூல்கள் குறித்து தொடர்ந்து எழுதி வர வேண்டும் என கருதினேன். காலச் சூழலில் அதற்கான வாய்ப்புகளை நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. நூல் பட்டியல் தொடர்பாக கடந்த மார்ச்சில் ஆகக் கடைசியாக எழுதியது. சென்ற ஆண்டினை கடந்துவிட்டதால் நூல்களின் கணக்கறிக்கையை எழுதி முடித்துவிடலாம். கீழே எனது பட்டியல். ஆர்வம் இருப்போர் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். முதல் 12 புத்தகங்கள் தொடர்பான குறிப்புகளை எனது மார்ச் பதிவில் காணலாம். கீழ் காணும் பட்டியலில் சில நூல்களை விரிவாகவும் எழுதி இருக்கிறேன்.


11. ISIS கொலைகாரன் பேட்டை

பா.ராகவன் சர்வதேச அளவில் இருக்கும் மாய வலைகளை எழுதி முடித்து ஓய்வதற்குள் முலைத்துவிட்டிருக்கும் இயக்கம் ஐ.எஸ். அமெரிக்கா பெருசா இரஸ்யா பெருசா எனும் இடைவிடாத போட்டியில் சிரியா எனும் தேசத்தை சுடுகாடாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். கொலைகளை இரசிக்கும் சமூகங்கள் இங்கே உருவாகிக் கொண்டிருக்கின்றன. மனிதத்தை பேசும் எத்தனையோ உலக அமைப்புகள் இருந்தும் குழந்தைகளைக் கூட காப்பாற்ற முடியாத வக்கற்றவர்களாகவே அவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஐ.எஸ் இயக்கத்தின் அரம்பம் முதல் டிசம்பர் 2016 வரையிலான நிகழ்வுகளை விரிவாக பேசுகிறது இந்த நூல்.

12. ஏ.ஆர்.ரஹ்மான்

ரஹ்மான் ஒஸ்கார் விருதுகளை வாங்கும் நிகழ்விலிருந்து இந்த நூல் தொடங்குகிறது. விருது வாங்கும் போது அவர் பேசிய வரிகள் ‘வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் என்முன்னே இரண்டு பாதைகள் இருந்தன, வெறுப்பு அல்லது அன்பு, நான் எப்போதும் அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் இன்றைக்கு இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறேன்’. இந்த வரிகளே இந்நூலை ஒரே வீச்சில் படித்து முடிப்பதற்கான உத்வோகத்தை கொடுக்கின்றன. அவரது வெற்றிக் கதையின் பல சம்பவங்கள் நம்மை நெகிழ வைக்கிறது. இந்த நூல் எழுத்தாளர் என்.சொக்கனின் படைப்பு. இணையத்தில் மின் நூலாகவும், ஒலி நூலாகவும் இலவசமாகக் கிடைக்கிறது.

13. First they killed my father

இது 2000-ஆம் ஆண்டில் வெளி வந்த நூல். 2017-ஆம் ஆண்டில் திரைக்கதையாக்கப் பட்டுள்ளது. கம்போடியாவின் பிரசித்திப் பெற்ற இரு இடங்கள் ஃனோம்ப் பேன் மற்றும் சியம் ரிப். இன்றய நிலையில் இவ்விரு இடங்களும் இரு வேறு சரித்திர நிகழ்வுகளை நமக்குக் காட்டுகிறது. மண்டை ஓட்டுக் குவியலின் காட்சியாக ஃனோம்ப் பேன் ஒரு வீழ்ச்சியின் அரசியலையும், கோவில் கோபுர நகரங்கள் நிறைந்த சியம் ரிப் அப்பிராந்தியத்தின் முன் காலத்து மாட்சியையும் காட்டுகிறது.

இந்த நூல் ஒரு சிறுமியில் பார்வையில் போர் கால வாழ்வியலை பதிவு செய்கிறது. போல் போட் காலத்தில் நடந்த கொடுமைகளை நாம் வாசிக்கவும், திரையில் காணவும் அதீத உணர்சிவய படுகிறோம். இந்த சுயசரிதத்தில் வரும் லோங் போன்ற சிறுவர் சிறுமியர் அதைப் பார்த்தும் அனுபவித்தும் கடந்து வந்திருக்கிறார்கள்.

டாம் ரைடர் படப் பிடிப்பிற்காக சியாம் ரிப் சொன்ற ஏஞ்சலினா ஜோலி அங்கிருக்கும் ஏழ்மை நிலை கண்டு அம்மக்களுக்கு தன்னார்வளாராக பல தொண்டுகளை செய்து வந்தார். இந்த நூல் இவரை மிக பாதித்திருக்கக் கூடும். 2017-ஆம் ஆண்டு திரைபடமாக வெளியீடு கண்டது. திரைப்படமும் சிறப்பாகவே காட்சி அமைக்கப்பட்டுள்ளது. போல் போட் காலத்தில் வைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் முனைந்த ஆகிரா எனும் தனிமனிதன் தொடர்பாக எழுதி இருந்தேன். வாசிக்க விரும்புவோர் இந்த உரலில் காணலாம் http://vaazkaipayanam.blogspot.com/2014/01/blog-post.html

14. வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - தமிழ் மகன்

எதிர்காலத்தில் இந்த நாவல் தொடங்குவதாக அமைகிறது. சடாரென்று 2017 வந்து. மீண்டும் கற்காலம் சென்று பிறகு திருவள்ளுவரை சந்தித்து என பயனிக்கிறது. இதை எப்படி தொடர்பு படுத்திக் கொள்வது எனும் சந்தேகம் வாசகனை தொடர்ந்து ஆட்கொள்கிறது. அதற்கான முழுமை நாவலை வாசித்து முடிக்கையில் நமக்கு கிடைக்கிறது. தமிழ்மகனின் சிறுகதை மற்றும் நாவல் என முன்பு வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த நாவலில் இவர் அளித்திருக்கும் தளம், நடை என அனைத்தும் மாறுபட்ட முயற்சியாக உள்ளது. முற்றிலும் ’நன் லீனியர்’ முறையிலான கதை அமைப்பு.

நாவலில் நாயகன் தேவ் ஜப்பானில் ஏற்படும் சுனாமியில் பாதிக்கப்பட்டு அவரது மூளையில் தமிழ் மொழி தொடர்பான பல தகவல்கள் சம்பவங்கள் என நினைவை ஆக்கிறமிக்கின்றன. அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான ஆய்வே இந்நூல் நெடுக பேசப்படுகிறது. இது நாவல் என்பதைக் கட்டினும் தமிழர் மற்றும் தமிழ் மொழி மீதான பண்பாட்டு படையெடுப்புகளையும் மொழி ஆக்கிரமிப்புகளையும் பதிவு செய்திருக்கும் ஆவண நூலாகவே தெரிகிறது.

கால ஓட்டத்தில் தமிழ் மொழி சந்தித்த பரிணாமங்கள், உலகளவில் அதல் பயன்பாடு என்பதோடு ஆரிய மொழி கலப்பு, ஏதனால் ஆரியம் தமிழ் மொழியின் முக்கிய எதிரியாக அமைந்துள்ளது என்பதுமாக இந்நாவல் பேசுகிறது.

15. சிறிது வெளிச்சம்

தேசாந்திரி மற்றும் துணையெழுத்து போலவே இந்த நூலின் கட்டுரைகள் அமைந்திருந்தன. சிறிது வெளிச்சம் என்பது கு.பா.ராவின் சிறுகதை தலைப்பு. அக்கதை ஒரு பெண்ணின் மீதான கருணை எனும் சிறுது வெளிச்சத்தை பேசுகிறது. அதே போல் எந்த வெளிச்சமும் படாத ஏகப்பட்ட சம்பவங்களும், மனிதர்களும் நம்மை சுற்றி நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் சமூகத்தின் சாமனியர்கள். அந்த சாமனியர்களின் உலகில் நிகழும் மனிதத்தை இந்த நூல் பேசுகிறது.

தேசாந்திரி மற்றும் துணையெழுத்து கட்டுரை தொகுப்பு போலவே இருந்ததால் வாசிக்க கொஞ்சம் அயற்சியை ஏற்படுத்தியது. பல சுவாரசியமான சம்பவங்களையும் மனிதர்களையும் இந்நூல் காட்ட தவறவில்லை.

16. உப்பு நாய்கள்

இந்நாவல் முதல் பாகத்தில் இரு வேறு சம்பவங்களையும் இரண்டாம் பாகத்தில் மூன்று வெவ்வேறான சம்பங்களையும் பதிவு செய்கிறது. பொதுவெளியில் பார்க்கப்படாத மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் யுக்தி என்பது பல எழுத்தாளர்களால் தற்சமயம் கையாளப்படுகிறது. இருப்பினும் இந்நாவலில் புரட்டப்படும் ஒரிரு பக்கங்களிலேயே தொடர் பாலில் நிகழ்வுகளென, பாலியல் வரற்சியின் மிகுதியில் வாழும் மக்களென அச்சமூகம் காட்டப்படுகிறது. போதைக் கடத்தல், ஆள் கடத்தல், திருட்டு, பாலியல் வியாபாரம் என பல சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் பேசப்படும் மற்றுமொரு சம்பவம் நாய் இறைச்சி விநியோகம். நள்ளிரவில் நாய் வேட்டையாடி இறைச்சித் துண்டுகளாக்கி உணவு அங்காடிகளில் விற்றுவிடுகிறார்கள். அது எப்படி பயனீட்டாளரை சென்றடைகிறது என்பது வேறு விசயம். நாய் இறைச்சியை உணவாக கொள்வது கொரியா, சீனா மற்றும் வேறு சில இந்தோ சீன நாடுகளில் சாதாரணமான நிகழ்வாகும். அது அவர்களின் காலாச்சாரத்தை ஒன்றியது. ஆனால் இந்நாவலின் கலத்திற்கு அது அந்நிய செயல். அதனால் அதை ஒரு அபூர்வ நிகழ்வென புனைத்துள்ளார் போலும். இந்நாவலின் பெரும்பகுதி வன்முறை சமூகத்தை பற்றியே பேசுகிறது. அது வாசகனை கவரும் சூழலில் இல்லை.

17. Way Back in to Korea

கொரியா செல்வதற்கு முன் வாசித்த நூல். கொரிய மக்களின் வரலாற்றியல் வாழ்வியல் என இரு தளங்களையும் இந்நூல் பதிவு செய்கிறது. இதை வாசித்த போதே இந்தியர்களோடு அவர்களுக்கு இருக்கும் தொடர்பை உணர முடிந்தது. இந்நூல் தொடர்பாக முந்தய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். பாண்டிய மன்னர்களை போல் கொரியாவிலும் இரட்டை கயல் சின்னம் பயனில் இருந்துள்ளது.

போரின் கொடுமையை பேசும் இடமாக (DMZ) அமைந்துள்ளது. இந்த இராணுவமற்ற மண்டலம் நெடுங்காலமாக மனிதர்களின் தாக்கமற்ற அழகு பூங்காவாக மறி உள்ளது. வட , தொன் கொரியா எனும் சொல் பிரயோகத்தை கூட கொரிய மக்கள் விரும்புவதில்லை. ஒருவருக்கு மற்றொன்று விரோத பொருள். கொரிய போரினால் பிளவுபட்ட குடும்பங்கள் ஏறாளம். ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் சந்தித்துக் கொள்ளும் தினங்கள் உண்டு. கொரியாவை பற்றி தெரிந்து புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

18. இரவுக்கு முன்பு வருவது மாலை - ஆதவன்

ஆதவனின் சிறுகதைகளை எனக்கு அறிமுகப் படுத்தியது நண்பர் முரளி. அந்த வாசிப்பு புது அனுபவமாக இருந்தது. பல முறை ஆதவனின் சிறுகதைகளை சிலாகித்து உரையாடி இருக்கிறேன். என் பெயர் ராமசேஷன், காகித மலர்கள் போன்றவையும் நல்ல வாசிப்பு அனுபவத்தையே கொடுத்தன.

இரவுக்கு முன்பு வருவது மாலை அதாவனின் 5 குறுநாவல்களை அடக்கிய நூல். 2012-க்கு பின் மீண்டும் ஆதவனை இப்போது வாசிக்க கொஞ்சம் போர் அடிக்கும் பேர்வழியாக தெரிந்ந்தார். இதில் 'சிறகுகள்' எனும் குறுநாவல் எனை வெகுவாக கவர்ந்தது. ஒரு பெண் பாத்திரமாகவே மாறி இக்கதையை இயற்றியுள்ளார். 1970-களில் ஒரு பெண்ணின் பார்வையில் பெண் சுதந்திரம் எந்த நிலையில் இருந்துள்ளது என்பதை இக்கதையின் வழி அறியமுடிகிறது. அது போக கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன் எனும் அலுவலக அரசியல் பேசும் கதையும் பிடித்திருந்தது.

19. சமணர் கழுவேற்றம் - ஒரு வரலாற்றுத் தேடல்

சமணர்கள் கழுவேற்றம் சரித்திர நிகழ்வென குறிபிடப்படுகிறது. அது உண்மையா இல்லையா என்பதையே இந்த நூல் பேசுகிறது. மிகமிக நீண்டதொரு விளக்கம் தான். ஒரு மேற்கோள் பாட நூல் வாசிப்பதை போல் இருந்தது. சமண சமயம், சமணர்களின் கலாச்சாரம் போன்றவற்றை அறிந்துக் கொள்ள இந்த நூல் உதவும்.

20. இட்லியாக இருங்கள்

பொதுவாகவே தன்முனைப்பு தூண்டல் போன்ற இத்தியாதிகளை நான் நம்புவதில்லை. Emotional Intelligence எனும் பதத்தை உள்வாங்கி அறிந்துக்கொள்ளவே அந்த நூலினை வாங்கினேன். ஆச்சரியமாக இதில் பேசப்பட்ட விசயம் எனக்கு மிக பிடித்துப் போனது. ஒவ்வொரு பக்கமும் சுய பரிசோதனை கூடங்களாகின. நாம் வெந்த இட்லியா இல்லை வேகாத இட்லியா என்பதை தேடிக் கொண்டே போகிறோம். வாசிக்கவும், இதன் பேசு பொருளும் உற்சாகமான அனுபவத்தைக் கொடுத்தது.


தொடரும்...

2018-ஆம் ஆண்டு வாசித்த நூல்கள் (1-10)

நூல்கள் தொடர்பாக பேசும் களம் நமக்கு மிகக் குறைவாகவே உள்ளது. வாசித்த நூல்களை அறிமுகம் அல்லது விமர்சித்துப் பகிரும் போது ஒரு சில தனிபட்டக் கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. ”உனக்கு எப்படி வாசிக்கவும் எழுதவும் நேரம் கிடைக்குது” என்பது அதில் ஒன்று. இப்படியான கேள்விகளுக்கு பதில் கொடுக்கத் தேவையில்லை தான். சில வேளைகளில் அவை எரிச்சலையும் எழுதாமல் விடுவதற்கான சோம்பலையும் கொடுக்கின்றன என்பது தான் உண்மை.

யூ டியுபில் இலக்கியப் பெட்டி எனும் ஒரு தளம் உள்ளது. புத்தகம் பேசுவோம் எனும் தலைப்பில் அருமையான நூல்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். அவர்கள் படைக்கும் விதம் பார்பவர்களுக்கு வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அதன் காணொளிகளின் மறுமொழி ஒன்றை வாசித்தேன். நாம் ஏன் நூல்களை வாசிக்க வேண்டும். அதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது என்பதாக ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.

நேற்றய இரவு எஸ்.இராமகிருஸ்ணனின் சிறிது வெளிச்சம் எனும் கட்டுரைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் மூன்று கரையுள்ள ஆறு எனும் தலைப்பில் ஒரு கட்டுரை, பல வரிகள் அடிகோடிட்டு மனப்பாடம் செய்யும் விதத்தில் அமைந்திருந்தது. நூல் வாசிப்பு தொடர்பாக எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையில் யூ டியுபில் பார்தக் கோள்விக்கு பின் வருமாறு பதில் கிடத்தது:

“புத்தகம் என்ன செய்யும்? ஏன் புத்தகம் படிக்க வேண்டும்? என்று கேட்பவர்களுக்கு என்றைக்குமான பதிலாக உள்ளது ஒரு திரைப்படம். அது பிரபல ஃபிரெஞ்சு இயக்குநர் த்ரூபா இயக்கிய 'Fahrenheit 451' என்ற படம். அமெரிக்க எழுத்தாளரான ரே பிராட்பரி எழுதிய விஞ்ஞானப் புனைக்கதையை த்ரூபா படமாக்கி இருக்கிறார். த்ரூபா இயக்கிய ஒரே ஆங்கிலப்படம் அது. Fahrenheit 451 என்பது புத்தகங்கள் எரிவதற்கான உஷ்ண நிலை.”

“புத்தகம் இன்னொரு பிரபஞ்சம். அதன் உள்ளே இந்தப் பிரபஞ்சத்தின் தீர்க்க முடியாத புதிர்களுக்கான பதில் காணப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ் நாளில் சுயமாக அனுபவித்து அறிய முடியாத அத்தனையும் புத்தகம் வாழியாக மனிதர்களுக்கு எளிதாக அனுபவமாகிறது.”

”உலகின் நினைவுகளும், கனவுகளும், நம்பிக்கைகளும் ஒன்று கலந்து உருவானதே புத்தகம். அதுவே உலகின் ஒப்பற்ற அதிசயம்” - சிறிது வெளிச்சம் நூலில் எஸ்.ராமகிருஸ்ணன்.

............................................

வாசித்த நூல்களைப் பற்றி பேசாமல் விடுவதால் அவை நம் மனதில் தங்காமலே போய்விடுகின்றன. அவற்றை அறிமுகப்படுத்தும் போது யாரோ ஒரு சிலர் உந்துதல் ஏற்பட்டு வாசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. கிண்டிலில் தமிழ் நூல்களை வாங்கி வாசிக்கும் முறைகளையும் சில நண்பர்கள் கேட்டு அறிந்துக் கொண்டார்கள். ஆண்டு தொடக்கம் முதல் இது வரை வாசித்த நூல்கள் தொடர்பான சிறு குறிப்புகள்:

1. FBI - அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை

அமெரிக்காவின் துப்பரிதல் வேலைகளை இரு வேறு துறைகள் செய்துவருகின்றன. ஒன்று சி.ஐ.ஏ மற்றொன்று எஃப்.பி.ஐ. இந்த இரண்டு துறைகளும் முற்றிலும் மாறுபட்ட பங்காற்றுகின்றன. எஃப்.பி.ஜ உள்நாட்டு துப்பரிதல்களையும் புலன் விசரனையையும் செய்கின்றது. சி.ஐ.ஏ வெளிநாட்டு விவகாரங்களுக்கானது. மிகவும் இலகுவாக வாசித்துவிடக் கூடிய நூல் இது. எஃப்.பி.ஐயின் பிறப்பு முதல் தற்கால நிகழ்வு வரை அவர்கள் செய்த சாதனைகளையும் கோட்டைவிட்ட சம்பவங்களையும் வாசித்து அறிந்துக் கொள்ள இந்த நூல் உதவுகிறது.

2. பிரிடிஷ் ஏஜெண்ட்

பேயோன் எழுதிய கதைகள் கட்டுரைகள் என இத்தொகுப்பு நூல் அமைகிறது. பிரிடிஷ் ஏஜெண்ட் என்பது இந்நூலின் முதல் சிறுகதை. இதில் வரும் சில கதைகள் வாய்விட்டு சிரிக்கும் அளவிற்கு நகைச்சுவையோடு படைக்கப்பட்டுள்ளன. யார் இந்த பேயோன் என்பது இன்று வரை கேள்வி குறியான விசயம் தான். பிரிடிஷ் ஏஜெண்ட் கதையில் பாரதியார் வருகிறார். இந்த பேயோன் பாரதியாரை உளவறி வந்த பிரிடிஷ் ஏஜெண்டாக இருக்குமோ என கதை போகிறது. துப்பறியும் கதைகளில் குமார் எனும் மதிநுட்ப கதாபாத்திரம் கவர்கிறது. குமார் துப்பறிகிறார் எனும் பேயோனின் மற்றுமொரு நூலும் உண்டு. பிரிடிஸ் ஏஜெண்ட் நூலில் சில ஆழமான கட்டுரைகள் உண்டு. அவை சீரியசான நகைச்சுவையா அல்லது ஆய்வு கட்டுரையா என்பதை மேலும் தேடி அறிந்துக் கொள்ள வேண்டும். இந்த நூல் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றது.

3. துப்பறியளாம் வாங்க

இணையத்தில் உள்ள கட்டுரைகளின் தொகுப்பு நூல் என்றே அறிகிறேன். வெளிநாடுகளில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக டிஸ்கவரி தொலைக்காட்சியில் மெடிக்கல் டிடெக்டிவ்ஸ் எனும் ஆவணப் படங்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் விசாரனை செய்யப்பட்ட மிக சிக்கலான சம்பவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பூர்வமாக தடயங்களை திரட்டி நீதி மன்றத்தில் குற்றத்தை நிருபனம் செய்தது வரை இந்நூலில் படங்களோடு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பல கொலை சம்பவங்கள் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்டவை என்பதை உணர முடிகிறது. இந்த நூல் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

4. ஷெர்லாக் ஹோம்ஸ் - ஒரு மோதிரம் இரு கொலைகள்
(Sherlock Holmes) A Study in Scarlet 1887

இந்தக் கதையை சில ஆண்டுகளுக்கு முன் ஆங்கில பதிப்பில் வாசித்தேன். ஆர்த்தர் கோனன் டாயில் எனும் எழுத்தாளர் என்னை அதிகமாகவே வசிகரித்தார். டாயிலின் ஒரு சில நூல்களின் வாசிப்பிற்குப் பின் இணையத்தில் ஒரு கட்டுரையை எழுதினேன். ஒரு மோதிரம் இரு கொலைகள் என தமிழ்ப் பதிப்பில் இந்நூலைக் கண்டவுடன் வாசிக்கத் தொடங்கிவிட்டேன். புதிதாக வாசிக்கும் அதே அனுபத்தை தமிழில் உணர முடிந்தது. கொஞ்சமும் குறைவற்ற சுவாரசியம். ஷெர்லாக் ஹொம்ஸ் தொடர்பாக திரைப்படங்கள் உள்ளன. வசிப்பில் கிடைக்கும் உணர்வு அந்தத் திரப்படங்களில் இல்லை.

5. மாவோ - என் பின்னால் வா

எழுத்தாளர் மருதனின் மற்றுமொரு அற்புதமான படைப்பு. பெய்ஜிங் தியான் ஆன் மென் சதுக்கத்திற்கு முன் தான் மாவோவின் நினைவாலயம் உள்ளது. செவ்வாய் கிழமையைத் தவிர மற்ற நாட்களில் பதன் செய்யப்பட்ட அவரின் உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சீனாவில் கம்யூனிச சித்தாந்தம் அறிமுகம் முதல் விவசாய புரட்சியின் வழி சுதந்திரம் பெற்றுவது வரையினும். கடைசியாக அவரின் இறப்பு வரையும் இந்நூல் பேசுகிறது. சீனாவில் இன்றளவிலும் ஒரே கட்சி ஆட்சி முறை தான். மாவோ காலத்தில் நடந்த தி கிரேட் லீப் மற்றும் நில உடமை புரட்சியால் கட்சிக்குள் எழுந்த பிரச்சனைகள். இதனால் பஞ்சம் ஏற்பட்டு பல இலட்சம் மக்கள் இறந்ததால் மாவோவின் மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. மாவோவை அதிகமாக நேசிப்பதைப் போலவே வெறுப்பவர்களும் உண்டு. சீனாவின் கம்யூனிச அரசியலின் அடிப்படை புரிதலுக்கு இந்த நூல் மிக உதவியாக இருக்கும். இரசியாவில் நடந்த தொழில் புரட்சிக்கும் சீனாவில் நிகழ்ந்த விவசாய புரட்சிக்குமான மாறுபாடுகளை ஆசிரியர் விளக்கமாக எழுதி இருக்கிறார்.

6. நான் நாத்திகன் ஏன் - பகத்சிங்

பகத்சிங் சிறையில் இருக்கும் போது கடவுள் மறுப்புத் தொடர்பாக அவர் எழுதிய குறிப்புகள் தான் இந்த நூல். பகத்சிங் ஒரு தூக்கு தண்டனைக் கைதி. அவரிடம் சிறை நண்பரொருவர் கூறுகிறார் ‘உனது கடைசி காலத்தில் நீ கடவுளை பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிடுவாய் பகத்சிங்”. “அப்படி நேரவே நேராது. அவ்வாறு நம்புவது என்னை நானே அவமானப்படுத்துவதற்கு சமம். பலவீனத்தால், சுயநல நோக்கங்களால் நான் பிரார்த்தனை செய்யப் போவதில்லை, அதை எனது அகங்காரமாக நினைத்தால் நினைத்துவிட்டுப் போ” என்கிறார் பகத்சிங். வாசிக்க வேண்டிய நூல். இருந்தும் மொழி பெயர்ப்பும் எழுத்துருக்களின் அச்சு வடிவமும் அதன் வசீகரத்தைக் குன்றச் செய்துள்ளன.

7. மகாத்மா காந்தி கொலை வழக்கு

காந்தியின் மீதான தீரா வன்மத்தோடு திரியும் நாதுராம் கோட்சேவை பின் தொடரும் நூல். ஒரே மூச்சில் படித்து உள்வாங்கிக் கொள்ளக் கூடிய நூல். இந்நூல் தொடர்பான விரிவான பார்வையை முந்தய பதிவுகளில் கொடுத்திருக்கிறேன்.

8. 6174

சுதாகர் கஸ்தூரி எனும் எழுத்தாளரின் எழுத்து இதற்கு முன் எனக்கு பரிட்சயமற்றது. 6174 என்பது அவரின் முதல் நாவலும் கூட. இந்நாவலின் விமர்சனங்களை வாசித்த பிறகே இந்நூலை வாசிக்க ஆரம்பித்தேன். லெமூரியா கண்ட அழிவின் போது இந்த நாவல் தொடங்குகிறது. அதன் பின் நாவலின் ஓட்டம் ’காலை ஜப்பானில் காபி, மாலை நியுயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி’ என்பதைப் போல் ஓரிடம் நிற்காமல் பறக்கிறது. 6174 எனும் கணிதவியலின் கருஞ்சுழி சூத்திரத்தை இந்த நாவல் மையமாக பேசினாலும் அதைத் தாண்டிய பல அறிவியல் தகவல்களையும், தொல்பொருள் ஆய்வியல் களங்களையும், வெண்பா விளக்கங்களையும் வாசகனுக்கு கடத்தித் தருகிறது. இன்னொரு வெண்பா புதிரா என வாசகன் யோசிக்கும் தருணத்தில் நாவலின் கதாபாத்திரமும் அதே வசனத்தைப் பேசி சமாளிக்கிறது. இக்கதையின் முடிவில் எனக்கு விமர்சனம் உண்டு. அதை பேசினால் வாசிப்போரின் சுவாரசியம் குறைந்து போகும். இந்நாவலை வாசித்த பலரும் சுதாகர் கஸ்தூரி தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்த டான் பிராவுன் எனக் கூறுகிறார்கள்.

9. வெள்ளை நிறத்தில் ஒரு காதல்

சமிபத்தில் வெளியீடு கண்ட வேங்கை நங்கூறத்தின் ஜீன் குறிப்புகள் நூல் தொடர்பாக நண்பர் அதிஷா பேசிய காணொளியை பார்த்த பிறகே தமிழ்மகனின் படைப்புகளை தேடி வாசிக்க ஆரம்பித்தேன். முன்பு இவரது ஆண்பால் பெண்பால் மற்றும் வெட்டுப் புலி நாவல்கள் தொடர்பான விமர்சனங்களை வாசித்திருந்தாலும் அவரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிண்டிலில் இவரின் ஒரு சில நூல்கள் கிடைக்கின்றன. வெள்ளை நிறத்தில் ஒரு காதல் தமிழ்மகன் 1984-ல் ஒரு போட்டிக்காக எழுதி முதல் பரிசை வென்ற நாவல் என அறிய முடிகிறது. கன்னிமாரா எனும் நூலகத்தின் பல நூல்களின் இலக்கியத்தை இந்த நூல் நம்மோடு உரையாடுகிறது. இந்த நாவலின் வலு அதன் கதாபாத்திர வடிவமைப்புகள். வலக்கறிஞர் அலுவலகத்தில் ஒருக்கும் ஒரு வயதான வக்கிலின் மொழியாடலைக் கூட மிக நுட்பமாக கையாண்டு எழுதி இருப்பார்.

10. எட்டாயிரம் தலைமுறை

தமிழ்மகனின் சிறுகதை தொகுப்பு நூல். 2008-ஆம் ஆண்டில் சிறந்த சிறுகதை பரிசை வென்ற நூல் இது. இந்த நூலில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. எழுத்து விற்பனர்களை பற்றிய ஒரு சிறுகதை இதில் குறிப்பிட தக்கது. 2007-ஆம் ஆண்டில் முனைவர் கலியபெருமாளிடம் யாப்பிலக்கண வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தேன். அவரது வீடு ஈப்போவில் இருந்தது. சில பெட்டிகளில் கட்டுக் கட்டாக நூல்களை கட்டி வைத்திருப்பார். அவை யாவும் அச்சிடப்பட்டு விலை போகாத நூல்கள். அதுவே நம் மக்களிடம் நூல் வாசிப்பிற்கான விழிப்புணர்பு எந்த வகையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இன்னொருப் பக்கம் தன்முனைப்பு எனு பெயரில் திருவள்ளுவரும், ஔவையும் புத்தரும் கூறிய கருத்துகளை மீள் அச்சிட்டு விளம்பரம் செய்து மக்களை வாங்க வைக்கும் யுத்தியும் இங்கே நடக்கிறது. இப்படியான ஒரு சம்பவத்தை சவீதா முத்துக்கிருஷ்ணன் சிந்தனைகள் எனும் கதையின் வழி சமர்ப்பிக்கிறார் தமிழ்மகன். இரண்டு கடிதங்கள் எனும் கதையும் மக்களிடம் இருக்கும் இலக்கிய வாசிப்பு தொடர்பான செய்தியையே பேசுகிறது.

தொடரும்...

Wednesday, January 23, 2019

Amazon Kindle E-Book Reader- 15 குறிப்புகள்


1.Amazon Kindle Oasis மின் நூல் வாசிக்கும் கருவியை வாங்கினேன். கிண்டில் வரிசையில் மேலும் Kindle, Kindle Paperwhite, Kindle Voyage என மேலும் சில பிரத்தியோக வாசிக்கும் கருவிகள் உள்ளன. புத்தக விரும்பிகள் நிச்சயம் இதை வாங்கி உபயோகப் படுத்தலாம்.

2.அச்சு புத்தகங்களை வாங்குவதைக் காட்டினும் கிண்டில் மின் நூல்கள் விலை மிக மலிவாகக் கிடைக்கின்றன.

3.அமெசோன் கிண்டில் செயலியைப் பயன்படுத்த ஆரம்பித்து சில காலமே ஆகிறது. சீனாவில் ஆங்கில/ தமிழ் புத்தகங்களை வாங்குவது சுலபம் இல்லை. தகவல் பரப்பும் கருவியானது பேருந்து பயணச் சீட்டாக இருந்தாலும்  தடைப் போட்டுவிடுகிறார்கள். இக்காரணங்களே என்னைக் கிண்டில் பக்கம் திருப்பி விட்டது.

4.கடந்த ஆண்டு அமெசோன் கிண்டில் செயலியை கைப்பேசியில் தறவிறக்கம் செய்து தமிழ்ப் புத்தகங்களை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். தினசரி வாழ்க்கையில் அதிகமாகவே ஸ்க்கிரினைப் பார்த்து பழவிட்டதால் அதிவேகமாகவே நூல்களை வாசிக்க முடிகிறது.

5.கிண்டில் செயலியை கைப்பேசியில் பொறுத்திப் படிப்பதற்கும் கிண்டில் பிரத்தியோக வாசிப்பு கருவியில் நூல்களை வாசிப்பதற்கும் ஏகப்பட்ட சாதக பாதகங்கள் உள்ளன. அச்சு ஏட்டில் வாசிப்பதைவிட மேலான அனுபவத்தை இக்கருவிகள் நமக்கு அளிக்கின்றன.

6.கைப்பேசியில் மின் நூல்களை வாசிக்கும் போது முகநூல் மற்றும் வாட்சாப் போன்ற செயலிகளின் மேற்த்திரை தகவல்கள் நூல் வாசிப்பில் கவனச் சிதறல் ஏற்படுத்தும் வாய்புகள் அதிகம். கிண்டில் கருவிகளில் அந்தத் தொல்லைகள் இல்லாமல் நமது வாசிப்பில் ஆழ்ந்துப் போகலாம்.

7.சமீப காலத்தில் கிண்டிலில் தமிழ் அகராதியை இணைத்து இருக்கிறார்கள். ஐயம் கொடுக்கும் வார்த்தைகளின் மீது அழுத்தினால் தமிழ் அகராதியில் அர்த்தம், விக்கிபிடியாவில் அவ்வார்த்தகளின் பயன்பாடு மற்றும் மற்ற மொழிகளுக்கான மொழி பெயர்ப்பும் கொடுக்கப்படுகிறது. 

8.பலரும் ஐ-பேட் மற்றும் அண்ட்ராய்ட் டேப்லட் போலவே கிண்டில் நூல் வாசிக்கும் கருவி செயல்படுவதாக கருதுகிறார்கள். உண்மையில் கிண்டில் கருவி நூல் வாசிப்பிற்கான தனி அறை. நீக்கமற நூல்களே இங்கே நிறைந்துள்ளன. அதிக நேரம் ஸ்க்கிரினை பார்ப்பவர்களுக்கு இந்தக் கிண்டில் டிவைஸ்கள் கண் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதாக இணைய தகவல்கள் தெரிவிற்கின்றன.

9.கிண்டில் கருவிகளின் எடை 200 கிராமிற்கும் குறைவாகவே உள்ளன. பல ஆயிரம் நூல்களை ஒரு கருவியில் வைத்துக் கொண்டு திரிவதில் சிரமம் ஏற்படுவதில்லை. எழுத்துருக்களின் அளவுகளை நமது வசதிக்கு ஏற்ப பெரிதாகவும் சிரிதாகவும் மாற்றிக் கொள்ள முடிகிறது. அச்சு நூல்களின் பூச்சியடிக்கும் சிறு எழுத்துக்களின் கண் உறுத்தல் இதில் ஏற்படுவது இல்லை.

10. ஒலி வடிவ புத்தகங்களையும் கிண்டில் கருவிகளில் வாங்கி பயன்படுத்த முடியும்.

11. இங்கே நூல்களை வாங்கவும் வாசிக்கவும் ஓரே தளம் தான். ஆசைக்கு ஆயிரம் நூல்களை வாங்கி வாசிக்காமல் கிடப்பில் போடும் சாத்தியமும் உண்டு. ஆதலால் வாங்கிய நூலை முழுதாக வாசித்து முடித்த பின்பே அடுத்த நூலூக்கு தாவவும்.

12. கிண்டில் கருவிகளின் பேட்டரி அதிக நாட்களுக்கு தாங்குகின்றன. கிண்டில் ஓசிசின் அட்டையிலும் பேட்டரி சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்படுள்ளது.

13. நூல்களை வாசிக்கும் போது வேண்டிய வரிகளை அடிக்கோடிட்டு சேமித்துக் கொள்ளா முடிகிறது. அது தொடர்பாக நமது குறிப்புகளையும் எழுதி வைத்துக் கொள்ள முடியும். மற்ற வாசகர்களின் அடிக்கோலையும் குறிப்புகளையும் வாசிக்கவும் முடியும்.

14. நாம் வாசிக்கும் பத்திகளில் இருக்கும் பிழைகளை உடனுக்குடன் கிண்டில் செயலகத்திற்கு தெரிவிக்க முடிகிறது. அது பதிப்பகம்/ ஆசிரியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என நம்பலாம்.

15. இது வரை Tamil எனும் வார்த்தையைத் தட்டச்சு செய்து தேடினால் சுமார் 4000த்திற்கும் அதிகமான நூல்கள் கிடைக்கின்றன. திருக்குறள், கொன்றை வேந்தன் போன்ற நூல்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. பல நூல்கள் முதல் அத்தியாயம் வரையிலும் நூல் ரொடர்பான அறிமுக வாசிப்பிற்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.

Tuesday, January 22, 2019

பெண் பிறவி எடுத்த புத்தர்


சீன மொழியை Hanyu என்றும் குறிப்பிடுவார்கள். ஹன் மக்களால் பேசப்படும் மொழி என்பது அதன் பொருள். சீனாவில் சுமார் 53 இன மக்கள் வசிக்கிறார்கள். அதில் 90% அதிகமானோர் ஹன் இன மக்கள். சீன சரித்திரத்தில் சர்ச்சைக்குரிய ஒரு பெண் ஹன் இனக் குழுவைச் சேர்ந்த Wu Zetian எனும் அரசி.

Wu Zetian தனது 13-வது வயதில் Li Shimin எனும் அரசனின் கடைசி நிலைக் காமக்கிழத்தியாக்கப்பட்டார். அரசருக்கு Wu Zetian மீது ஏகப்பட்ட பிரியம். அரசனின் மகனுக்கும் Wu Zetian-னைப் பிடித்திருந்தது. அரசன் இறந்தப் பின் வருந்ததக்க வாழ்க்கையை Wu Zetian வாழ விரும்பவில்லை. பொதுவாக அரசனின் கல்லறையில் புதைத்துவிடுவார்கள் அல்லது மொட்டையடித்து துறவு வாழ்க்கைக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால் Wu Zetian தனது மதி திறமையில் அரசனின் மகனுக்கும் கிழத்தியானார்.


Li Shimin இறந்தப் பின் பட்டத்து இளவரசனாக இருந்த Li Zhi அரியனைக்கு வந்தார். கடை நிலைக் காமக்கிழத்தியாக இருந்த Wu Zetian இப்போது அரசனின் இரண்டாம் துணைவி போன்ற நிலைக்கு வந்தார். இருவரும் சந்ததிகளைப் பெருக்கினர். இருந்தும் அவருக்கு போட்டியாக மேலும் இரு பெண்கள் இருந்தார்கள். அவர்களை தீர்த்துக்கட்டினால் அரசி எனும் பதவிக்கு வந்துவிடலாம். அதையும் செய்தார். அரசனின் செல்ல மனைவியாக ராஜியத்தில் தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டார். Li Zhi நோய்வாய்ப்பட்டு இறந்த போது இளவரசனுக்கு இளம் வயது.

கன்பூசியஸ் பெண் நாடாலுவதைத் தடுத்தது. Wu புத்த மதத்தைத் தழுவி தன்னை ’அரனாக்கிக்’ கொண்டார். அவரை புத்தரின் மறு அவதாரமாக பிரகடனபடுத்திக் கொண்டார். சீனாவின் லூஓயாங் (Luoyang) எனும் இடத்தில் அமைந்துள்ளது லூங்மன் கற்குகைகள் (Longmen Grottoes) . சரித்திர புகழ் கொண்ட இந்த இடம் தொடர்பாக வேறொரு கட்டுரையில் காணலாம். இங்கே மலைக் குகைகளை குடைந்து இலட்ச கணக்கான புத்த சிலைகளை வடித்துள்ளார்கள். சீனாவில் புத்தம் பரவிய ஆரம்ப பகுதிகள் ஒன்று இக்கற்குகை. இங்கே தனக்காக மாபெரும் சிலை ஒன்றை வடித்துக் கொண்டார். 

Zhou பேரரசை நிறுவினார். Zhou பேரரசின் மன்னராகத் தன்னை முடிசூட்டிக் கொண்ட போது வூவின் வயது 66, இச்சம்பவம் நடந்த ஆண்டு 690. அரசனில்லாமல் சீன தேசத்தைச் சிறப்பாக ஆட்சி செய்தார். அக்காலகட்டத்தில் பெண் நாடாலுவது சுலபமல்ல. தனக்கென பலமான ஒற்றர் படையை வைத்துக் கொண்டார். தனக்கெதிராக கிஞ்சித்தும் சதி நடக்காமலும், எதிரிகளையும் ஒழித்துக் கட்டினார். விவசாயத்தில் பல மேம்பாடுகள் செய்து மக்களால் போற்றப்பட்டார்.

Wu Zetian செய்த இரு அரசியல் கொலைகள் தன் பிள்ளைகள் தொடர்பானது. அரசனின் இளம் மனைவியாக இருந்த போது பட்டத்து அரசியை ஒழிக்கத் திட்டமிட்ட Wu தனக்குப் பிறந்த பச்சிலம் பெண் குழந்தையை அரசி கொன்றதாகக் குற்றம் சாட்டினார். கொலைக் குற்றத்திற்காக அரசி சிறையில் அடைக்கப்பட்டார். அரசியை சிக்க வைக்கத் தருணம் பார்த்து Wu அக்குழந்தையைக் கொன்றதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.

இரண்டாம் கொலை Wu-வின் மகன் தொடர்பானது. முன்னால் அரசிகளின் மகள்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பரிவு மனம் கொண்ட இளவரசர் Wu Zetian-யை அவர்களை விடுவிக்கக் கோரினார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத அரசி தன் மகன் அரசனாக தகுதியற்றவனெனக் கருதினார். சில காலத்தில் இளவரசர் இறந்துப் போனார். சாப்பாட்டில் விஷம். இரண்டாம் மகனின் ஆட்சி சரி இல்லையென அவரையும் பதவி விலகச் செய்தார். இது போக அரசியல் இலாபத்திற்காக்த் தனது இரு பேரப் பிள்ளைகளையும் கொன்றுள்ளார்.

அதன் பின் Zhou பேரரசைப் பெண் மன்னராக 16 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்தார். Wu Zetian தனது 82வது வயதில் முதுமையின் காரணமாக மரணமடைந்தார். இவருக்குப் பிறந்த மூன்று மகன்களும் வெவ்வேறு காலகட்டத்தில் சீனப் பேரரசை ஆட்சி செய்துள்ளனர். Wu Zetian கேட்டுக் கொண்ட படி அவர் கணவர் Li Shi-வின் கல்லறையில் புதைத்தார்கள். தன்னை மன்னர் என குறிபிட வேண்டாம் என்றும் மரணப் படுக்கையில் அவர் கேட்டுக் கொண்டதாக குறிப்பிடுகின்றனர். அது அரசியல் காரணமாகவும் கூட இருக்கலாம். சுவர்கத்தின் பிள்ளைகளான ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் எனும் அசைக்க முடியா நம்பிக்கையை கொண்டிருந்தனர் சீனர்கள்.