Showing posts with label புத்தக அறிமுகம். Show all posts
Showing posts with label புத்தக அறிமுகம். Show all posts

Friday, January 18, 2019

ஏ.கே. செட்டியார் படைப்புகள் – தொகுதி 1


இந்த நூலை வாசித்தது 1938 ஆண்டின் முதல் சென்று வரலாற்றைத் திரும்பி பார்த்து வந்தது போல் இருந்தது. எவ்வளவு பயண அனுபவங்கள். இந்த அனுபவம் மொத்தமும் ஒரு மனிதனை எப்படி எல்லாம் பக்குவ படுத்தியுள்ளது. ஏ.கே. செட்டியார் நமக்காக பதிவு செய்து வைத்திருப்பது ஏராளம். தாமக்குத் தெரிதவற்றை தமிழ் மக்களுக்காக எடுத்துச் சொல்லி இருக்கிறார். 80-களில் இவர் மறைவிற்குப் பின் இவரின் படைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுள்ளது. ஒரு சில படைப்புகள் அச்சில் வரமலேயே போய்விட்டன. செட்டியாரின் படைப்புகளை இரண்டு தொகுதிகளாக தொகுத்து மீண்டும் நம் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.

முதல் தொகுதி சுமார் 1000 பக்கங்களை கொண்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி இதன் முன்னுரை 42 பக்கங்களுக்கு உள்ளது. இந்த நூலை வாசிப்போர் முன்னுரையை தவற விட வேண்டாம். அது மிகைக்காக எழுதப்பட்டதல்ல. இந்த நூலை கூர்ந்து உணர்ந்து கொள்ள வழி செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

ஏ.கே.செட்டியாரின் இயற் பெயர் அ.கருப்பஞ் செட்டியார். வணிக நுணுக்கங்களிலும், செல்வங்கள் குவிப்பதிலும் முனைப்புக் காட்டும் தனவணிக சமூகத்தில் பிறந்த ஏ.கே. செட்டியார் விதிவிலக்காக வாழ்ந்துள்ளார். இவரின் முதல் படைப்பு 1928-ஆம் ஆண்டு வெளிவந்த சாரதாம்பாள் – ஒரு சிறு தமாஷ் எனும் சிறுகதை. இந்த சிறுகதையும் முதல் தொகுதியின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மொழி நடையே நமக்கு மிக வித்தியாசமாகவும் தமாஷாகவும் உள்ளது. ஏனெனில் அப்போதைய மொழி நடையை இந்நாளில் யாரும் பயன்படுத்துவதில்லை. புனைவை விட பயணக் கட்டுரைகளையும், துறை சார்ந்த கட்டுரைகளையுமே நிறைய எழுதி இருக்கிறார்.

பர்மாவில் தமிழர்கள் அதிகமாக வசித்த கால கட்டத்தில் தனவணிகன் எனும் வார/மாத இதழ் அங்கே வெளிவந்துள்ளது. ஏ.கே.செட்டியார் ரங்கூனில் சில காலம் தங்கி அதன் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இது நடந்த கால கட்டம் 1930-களில். ரங்கூனில் இருந்து ஜப்பானுக்கு சொன்று புகைப்பட கலையை கற்றறிகிறார். ஜப்பான் பயணாம் அவருக்கு பயணத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.

ஏ.கே.செட்டியார் அதிக அளவில் கடல் வழியே தூர தேசங்களுக்கு பயணம் செய்துள்ளார். இவர் பயணம் செய்த காலகட்டத்தில் பல ஆசிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் அடிமைகளாக இருந்தன. இன துவேசத்திற்கு பஞ்சமில்லாத கால கட்டம். செட்டியார் நிறத்தால் கருப்பு. செல்லும் இடங்களில் அவரை கருப்பின அடிமை என கருதி மிக மோசமாக நடத்தி இருக்கிறார்கள். கப்பலிலோ அல்லது விமானத்திலோ முதல் வகுப்பில் பயணம் செய்ய முடியாது. நட்சத்திர விடுதிகளில் தங்க முடியாது என படுத்தி எடுத்துள்ளனர் வெள்ளையர்கள். அனைத்தையும் சகித்துக் கொண்டு கடந்து வந்திருக்கிறார்.

 தென் ஆப்பிரிக்காவை இன வெறியின் புகழிடம் எனக் குறிப்பிடுகிறார் செட்டியார். பேருந்தில் பயணம் செய்த கருப்பினத்தவரை ஒரு வெள்ளையர் எட்டி உதைத்து விரட்டிய கட்சி இவரை பயப்பட செய்துள்ளது. அதை படிக்கும் நமக்கும் திக் என்றிருக்கிறது. தென் ஆப்பிரிக்கா இன வெறி மட்டுமின்றி செழிப்பான பழ வகைகளுக்கும் புகழ் பெற்ற இடமென குறிப்பிடுகிறார். தென் ஆப்பிரிக்கவில் வசிக்கும் தமிழர்கள் இன்னமும் 1860-ஆம் ஆண்டின் தமிழை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை கேட்க நகைச்சுவையாக உள்ளது என எழுதியுள்ளார். போர்த்துகீசியர்கள் ஜாவா இன அடிமைகளை தென் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சேர்த்த குறிப்புகளையும் கொடுத்துள்ளார்.

இரங்கூனில் இருந்த சமயம் இவர் ஜப்பான் எனும் நூலை எழுதி இருக்கிறார். அக்காலகட்டத்தில் ஜப்பான் நூல் தடை செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் புகைப்பட கலையை படித்தது போல், நியூ யார்க்கில் புகைப்படம், நிலற்படம் எடுக்கும் கலைகளையும் கற்றுக் கொள்கிறார். அந்நாட்களில் கேமராவை இயக்கவும் படங்களை உருதுளக்கவும் தொழில் நுட்பம் தெரிய வேண்டும். கற்ற கலையை சரிவர பயன்படுத்த காந்தி தொடர்பான ஆவணப் படத்தை எடுக்கிறார். இந்திய தேசம் முழுக்க பயணம் மேற்கொண்டு செய்திகளை சேமிக்கிறார். காந்தி போகும் இடங்கள் சென்று காணொளி பதிவு செய்கிறார். காந்தியின் வெளிநாட்டு பயண காணொளிகளையும் புகைப்படங்களையும் அமேரிக்கா, ஐரோப்பா வரை பயணம் செய்து சேமித்து அந்த படத்தை எடுத்து முடிக்கிறார்.

செட்டியார் எடுத்த காந்தி ஆவணப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. அந்நாளில் ஆந்திர பிரதேசம் இல்லை. தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் ஒரே மாநிலத்தில் வசித்ததால் இருமொழியில் இப்படம் வெளியீடு கண்டது. லாகூர் போன்ற பாக்கிஸ்தான் மாநிலங்களும் பிரிடீஸ் இந்தியாவின் கீழ் ஒரு குடையில் இருந்துள்ளது.

செட்டியாரின் சில கட்டுரைகள் அபரிமிதமாக உள்ளன. விளம்பரம் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி உள்ளார். 1940-களில் எழுதப்பட்ட கட்டுரையில் அவர் கொடுத்திருக்கும் தரவுகள் வியப்பளிக்கின்றன. விளம்பர உலகின் பரிமாணத்தை ஆரம்பம் முதல் மிக நேர்த்தியாக எழுதி இருக்கிறார். அக்கட்டுரை நிச்சயமாக ஏகபட்ட நூல்களை மேற்கோள் காண கோரியிருக்கும் என்பதை உணர முடிகிறது.

பஸ் பிரயாணம் எனும் நூலுக்காக அவர் தரவுகளை தேடிய விதத்தை குறிப்பிட்டுள்ளார். செட்டியார் அவர் பயணம் செய்த நாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கும், தூதரகங்களுக்கும் கடிதம் எழுதி நூல்களையும் தகவல்களையும் திரட்டி பஸ் பிரயாணம் கட்டுரைகளை எழுதி முடித்திருக்கிறார்.

திருசிராப்பள்ளி தொடர்பான பழைய கட்டுரைகளை தேடி பதிப்பித்துள்ளார். அது 1873, 1898, 1901 மற்றும் 1919 ஆண்டுகளில் தமிழ் முன்னோடிகளால் எழுதப்பட்டவை. அவற்றை வாசித்து உணர்ந்துக் கொள்ள அகராதி தேவைப்படுகிறது. தடிமனான சமஸ்கிருதம் கலந்த தமிழில் அவை எழுதப்பட்டுள்ளன. செட்டியார் தமது கட்டுரையில் பயண குறிப்புகளை வாசிக்க இலக்குவாகவே எழுதியுள்ளார். இருந்தும் சில சொல் வழக்குகள் இன்று நம்மிடம் புழக்கத்தில் இல்லை.

ஏ.கே.செட்டியார் 1983-ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். அவர் திருமணம், பிரிவு தொடர்பான தகவல்களை பதிப்பாசிரியரால் கண்டறிய முடியவில்லை . இறுதிகாலத்தில் அவருடைய சேமிப்பு நூல்களை நூலகத்திற்கும், பள்ளிகளுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். ஏ.கே.செட்டியார் நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய ஆளுமை. இந்த முதல் பாகத்தின் ஏகபட்ட கட்டுரைகளை நாம் வாசித்து உவகை அடைய முடியும். நாம் பிறந்திராத காலத்தில் நிகழ்ந்த அச்சம்பவங்கள் அறிவிற்கு புதிய தகவல்கள். சிறிது இடைவெளிக்கு பின் இரண்டாம் பாகத்தை வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

Monday, February 24, 2014

2013-ல் படித்ததில் பிடித்த 10 நூல்கள்

10. ONLY 13 - THE TRUE STORY OF LON (Julia Manzanares & Derek Kent)

தாய்லாந்தை சொர்க பூமியாக அடையாளம் காண்பதற்கு அதன் ‘செக்ஸ் டூரிசமும்’ ஒரு காரணம். பாலியல் வேட்கை பொருட்டு அங்குச் செல்லும் பயணிகள் அதிகமாகவே இருக்கிறார்கள். பயணிகளின் இந்த பாலியல் தேடல் அதிகமான பெண்களை உலகின் புராதன தொழிலான விபச்சாரத்திற்கு அழைத்து வந்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் விரட்டல் ஒரு தாய்லாந்து பெண்ணை பேங்காக் பாலியல் வீதியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. அப்போது அவளின் வயது 13. இந்நூல் தொடர்பாக எனது விமர்சனத்தை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பாலியல் தொழில் தொடர்பாக ஆழமான பதிவை முன் வைக்கும் லோன் எனும் பெண்ணின் சுயசரிதம் மிக எளிமையான ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


9. பிரபல கொலை வழக்குகள் (எஸ்.பி.சொக்கலிங்கம்)

கிழக்கின் தரமான வெளியீடுகளில் மேலும் ஒரு புத்தகம். எஸ்.பி.சொக்கலிங்கம் எனும் வழக்கறிஞரால் எழுதப்பட்ட நூல். தடையற்ற வாசிப்பு. 'க்ரைம்' சிறுகதைகளை கண் விரித்து வாசிப்பதை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. மொத்தம் 10 கொலை வழக்குகளை விளக்குகிறது இந்நூல். வழக்குகளின் விசாரணை சுவாரசியமானது. அங்கே சான்றுகள் அற்ற சாட்சியம் பொய்த்து போகிறது. இருந்தும் நீதி பல நேரங்களில் வெல்வதையும் சில நேரங்களில் தோற்றுப் போவதையும் நாம் காண்கிறோம்.


8. A Record of Cambodia - The Land and It's People (Zhou Daguan)

இந்நூல் தொடர்பாக எனது கம்போடிய பயண கட்டுரையில் பல இடங்களில் மேற்கோள் காட்டி இருந்தேன். 1296-ல் அந்நாளைய அங்கோர் நகரத்திற்கு பயணம் மேற்கொண்ட ஒரு சீன பயணியின் குறிப்புகளை விளக்கும் நூல் இது. கம்போடியாவின் அங்கோர் கால மக்கள், ஆட்சி, வணிகம், வாழ்வியல், மதம் என பல தளங்களை விளக்குகிறது. சமீப காலத்தில் தான் இந்த நூல் நேரடியாக சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பு பிரஞ்சு மொழியில் இருந்து அங்கிலத்தில் The Customs of Cambodia என அறியப்பட்டது. அங்கோர் சரித்திரத்தை அறிந்துக் கொள்ள விரும்புவோர் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் இது. ச்சாவ் தாகுவான் எழுதிய சீன குறிப்பில் இருந்து இன்று நமக்கு வெகு சொற்பமானவையே கிட்டி உள்ளது. மார்க்கோ போலோவின் ஆசிய பயண குறிப்பிற்கும் ச்சாவ் தாகுவான் பயண குறிப்பிற்குமான வேறுபாட்டையும், தாகுவான் குறிப்புகளில் இருந்து இன்றைய ஆய்வுகள் கண்டடைந்த முரண்பாட்டையும் ஆசிரியர் விளக்க தவறவில்லை.


7. ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம் (கே.ரகோத்தமன்)

வாசகனை மாய காட்டுக்குள் ஆழ்த்தும் நூல் இது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமனால் எழுதப்பட்ட நூல். கொலை வழக்குக்கு முக்கிய ஆதாரமாக அமைந்த புகைப்படங்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இன்றளவிலும் பல விதமான சர்ச்சைகளை எதிர் கொண்டுள்ள வழக்கு இது. விசாரணை அதிகாரி எனும் பட்சத்தில் தனது சார்பிலான நியாய வாதங்களை முன் வைக்கிறார் ரகோத்தமன். ஒரு வழக்கை விசாரிக்க வேண்டிய முறைகளையும் அதில் தவிர்த்திருக்க வேண்டிய வற்றையும், விசாரணை அதிகாரிகளுக்கு நேர்ந்த பல விதமான இடர்பாடுகள், தடைகள், அதிகாரக் குறுக்கீடுகள் பற்றியும் விலாவாரியக குறிப்பிட்டுள்ளார். ராஜிவ் காந்தி எனும் பிரபலத்தின் கொலை வழக்கினை அறிந்துக்கொள்ள வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.


6. வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம் (முகில்)

எழுத்தாளர் முகில் எழுதிய நூல்களில் முதலில் வாசித்தது யூதர்கள். அவர் எழுத்தின் வசீகரமே மேலும் அவரின் வெறு சில படைப்புகளை நாடிச் செல்ல வைத்தது. வெளிச்சத்தின் நிறம் கருப்பு கொஞ்சம் தடித்த நூல் தான் இருந்தும் வாசிப்புக்கு தடையற்ற நூல். ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரசியத்தை கொட்டி எழுதி இருக்கிறார் முகில். என்ன தான் நாம் விஞ்ஞான ரீதியாக லாஜிக் தேடினாலும் ஆச்சரியமளிக்கும் சில அதிசயங்கள் ஆங்காங்கு நடந்தபடியே உள்ளன. சைன்ஸுக்கு அப்பாற்பட்ட சில நம்பிக்கைகள் நவநாகரீக வளர்ந்த நாடுகளிலும் மெத்த படித்த மக்களிடமும் கொட்டிக் கிடக்கிறது. இயற்கையாக நடக்கும் சம்பவங்கள் கூட சில வேளைகளில் அதிசயமாகும் அதிசயத்தை நாம் காண்கிறேம். இதை படித்து முடித்ததும் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே என்றே தோன்றியது. இது குறித்து முகிலிடம் கேட்ட போது வாய்ப்பு கிட்டுமாயின் இத்தொடரின் அடுத்த பாகத்தை எழுதுவதாக கூறினார்.


5. Lady Boys - The Secret World of Thailand's Third Gender

Only 13 புத்தகத்தை வாங்கிய போது தான் இதையும் வாங்கினேன். தென் கிழக்காசியாவில் அதிகமான திருநங்கைகள் வாழும் நாடு தாய்லாந்து. ‘லேடி பாய்ஸ்’ எனும் இந்த நூல் தாய்லாந்தில் திருநங்கைகள் தொடர்பான பல தகவல்களை நமக்கு அளிக்கிறது. நான் வித்தியா, அவன் - அது = அவள் போன்ற தமிழ் நூல்கள் இந்திய சூழலில் திருநங்கைகளின் வாழ்க்கை முறையை நமக்கு விளக்கின. தாய்லாந்து தொடர்பான ஆங்கில நூல் வரிசையில் முதல் 10-ல் இந்நூலும் ஒன்று. ஒன்பது திருநங்கைகள் குறித்த தனி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருநங்கையர்களின் அடையாளம் அந்நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. பாலியல் தொழிலின் வியாபார நூதனங்களும் அங்கு பல திருநங்கையர்கள் உருவாக காரணமாக அமைவதை காண முடிகிறது. ‘ஃபியூடிப்புல் பாக்சர்’ எனும் திரைப்படம் தொடர்பாக எனது கண்ணோட்டத்தை முன்பு எழுதி இருந்தேன். நோங் தோம் எனும் அந்த ’முய் தாய்’ வீரரின் வாழ்க்கை குறிப்பையும் இந்நூலில் காணலாம்.

4. எரியும் பனிக்காடு (Red Tea) (இரா.முருகவேல்)

இது ஆங்கிலத்தில் வெளி வந்த நாவல். தமிழில் இரா.முருகவேல் அவர்களால் மிக அருமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இன்று நமக்கு தமிழில் வாசிக்க கிடைத்திருக்கும் நாவல் இது. இந்நாவலை மையப்படுத்தியே பாலாவின் பரதேசி படம் எடுக்கப்பட்டுள்ளதை வாசித்தவர்கள் அறிய முடியும். பாலா அவரின் பெயரை போட்டுக் கொண்டது பலமான சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகின் ஒரு பக்கம் புரட்சிகளும் போராட்டங்களும் இரண்டாம் உலகப் போரின் ஆயத்தங்களும் நடந்துக் கொண்டிருந்த சமயம் தனது அடிப்படை உரிமைகள் என்னவென அறியாத மக்கள் முதலாளித்துவ பிடியில் வதைபடுகிறார்கள். அறியாமையே இதற்கு முழு முதற் காரணம். படித்து முடிக்கையில் ஏதோ ஒரு பாரம் நம் நெஞ்சில் ஏற்றி வைக்கப்படுகிறது. பனிக்காட்டில் தன் வாழ்க்கையை அற்பணித்த உயிர்களுக்கு ஒரு கணம் நம்மை மௌன அஞ்சலி செலுத்த வைக்கிறது.

3. அறம் - சிறுகதை தொகுப்பு (ஜெயமோகன்)

அறம் மொத்தம் 13 சிறுகதைகளை கொண்ட தொகுப்பாகும். வாசகனின் உணர்ச்சிகளை தட்டிச் செல்லும் படைப்பு மிக உன்னதமானது. அறம் நூலின் ஒவ்வொரு கதையிலும் அத்தன்மை புதைந்துள்ளது. அறம் செய்யும் மனிதர்களை இவ்வுலகம் எவ்வளவு அந்நியமாக்கிவிட்டது என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இதில் யானை டாக்டர் எனும் சிறுகதை தனித்துவம் வாய்ந்தது. அக்கதை பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு விழிப்புணர்வுக்காக இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிகிறேன். தமிழ் இலக்கியத்தில் இக்கதைகள் அனைத்தும் மிக முக்கியமான நிகழ்வுகளாகும். அறம் நிகழ்த்திய மனிதர்கள் பலரை நாம் அறியாமல் போனதற்கு காரணம் சமூகத்தின் அறமற்ற நிலைகள் என்பதே உண்மை.

2. என் பெயர் ராமசேஷன் (ஆதவன்)

ஆதவன் படைப்புகள் மீதான பரிச்சையத்தை ஏற்படுத்தியது என் நண்பன் முரளி. அவரிடம் இருந்த தலையணை சைஸ் ஆதவன் சிறுகதை தொகுப்புகளை தான் முதலில் வாசித்திருந்தேன். பாதி புத்தகத்தை தாண்டி இருந்த நன்நாள் ஒன்றில் முரளிக்கு டிரான்ஸ்பர் கிடைக்க புத்தகமும் இனிதே இடம் மாறியது. தொடர்ந்து வாசித்த எஸ்.ராமகிருஸ்ணனின் கதாவிலாசம் நூலில் ஆதவனின் படைப்புகளான காகித மலர்களையும் என் பெயர் ராமசேஷன் நாவலையும் அறிமுகம் செய்து இருந்தார். ராமசேஷன் ஓர் அர்தடாக்ஸ் பிராமண குடும்பத்தில் வந்தவன். நவநாகரீகம், முற்போக்கு சிந்தனை என சில சமகால சமூக வஸ்துகள் தன்னுள் நிறம்பி இருப்பதாக நினைக்கும் கதாபாத்திரம் அவன். தனது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் போலியாக வாழ்வதை காண்கிறான். ராமசேஷனை பொருத்தவரை எல்லா மனிதர்களும் முகமூடி அணிந்தே சமூகத்தை அனுகுகிறார்கள். எதனால் இச்சூழ்நிலை என்பதை நகைச்சுவை இழையோட கதை விவரிக்கப்படுகிறது. முற்போக்கு வாதி ராமசேஷன் கடைசியில் கூறும் வாக்கியம் ’என் தங்கையை காதலிப்பவனின் பல்லை உடைப்பேன்’என்பதாக இருக்கும். ராமசேஷனும் முகமூடியோடு தான் இருந்தான் என்பதை அப்பொழுது வாசகனும் உணருகிறான் . பாலகுமாரனும் இந்நூலினை அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகப்பட்டியலில் முன்மொழிந்துள்ளார்.


1. ஏழாம் உலகம் (ஜெயமோகன்)

புனித தன்மைகள் நிறைந்த கோவிலின் வாசலில் இருக்கிறது நாம் கொஞ்சமும் விரும்பாத ஏழாம் உலகம். படிக்க படிக்க ஓர் ஆச்சரியமான ஆழத்தில் மூழ்கடிக்கும் கதையம்சம். இப்படியும் நடக்கிறதா இன்னமும் நாம் வாழும் சமகால உலகில் என அதிர்ச்சியளிக்கும் நாவல். ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஒரு மாஸ்டர் பீஸ் என முத்திரை குத்தலாம். வாசகனை இந்த உலகில் இருந்து வேறு ஓர் உலகத்திற்கு தூக்கிச் செல்லும் கதை அமைப்பைக் கொண்ட படைப்பு. இந்த மனிதன் எப்படி தான் இதை எழுதினார் என இன்னமும் வியப்பாகவே உள்ளது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் இந்நாவலின் கதையாம்சம் தொட்டு பேசப்பட்டுள்ளது. ஆனால் ஜெயமோகன் இந்நாவலில் நம்மை இட்டுச் செல்லும் உலகத்தோடு ஒப்பிடும் போது நான் கடவுள் வெகு தொலைவில் தான் உள்ளது.

(பி.கு: படித்ததில் நினைவில் நின்ற நூல்களையே இங்கே பட்டியலிட்டுள்ளேன். சில நினைவில் தவறி இருக்கலாம். இவை மட்டுமே கடந்த ஆண்டின் சிறந்த நூல்கள் என குறிப்பிடவில்லை. ஆதலால் தீவிர இலக்கியவாதிகள் பொருத்தருள்வார்களாக. நீங்கள் படித்ததில் பிடித்த நூல்களையும் பட்டியலிடுங்கள் பலரின் வாசிப்பு தளத்தை விரிவுபடுத்த உறுதுணையாக இருக்கும்.)

Thursday, November 14, 2013

ஜெயமோகனின் அறமும் - அறமற்ற நிலைகளும்


புத்தகம்: அறம்
ஆசிரியர்: ஜெயமோகன்
நயம்: சிறுகதை தொகுப்பு (13 கதைகள்)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம்

சிறந்த நூல்கள் வாசகனுக்கு நல்ல நண்பனாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எங்குச் சென்றாலும் ஓரிரு புத்தகங்களை எடுத்து வைத்துக் கொள்வது எனது வழக்கம். நேரம் கிட்டுமாயின் சில பக்கங்களையாகினும் புரட்டி படித்துவிட முடியும். எத்தனை நூல்களை வாசித்தாலும் அதில் சில மட்டுமே வாசகனிடம் தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கின்றன. 

சமீபத்தில் படித்ததில் மிக கவர்ந்த நூலில் ஒன்று அறம். ஒவ்வொரு கதையும் அற்புதமாய் தொகுக்கப்பட்டுள்ளது. அறம் சிறுகதை தொகுன்பின் அனைத்துக் கதைகளும் ஜெயமோகனின் தளத்தில் இலவசமாக படிக்க முடிகிறது. இருந்தும் இந்நூலை வாங்கிச் சேகரிப்பதில் கொஞ்சமும் நட்டம் இல்லை. இது நிச்சயமாக நமது சேகரிப்பில் இருக்க வேண்டிய நூலாகும்.

ஆரம்ப காலத்தில் ஜெயமோகனின் படைப்புகளை வாசிக்கும் போது அவரின் வட்டார வழக்கு அயற்சியை ஏற்படுத்தியதுண்டு. நாள்பட அவரின் எழுத்து நடை பிடிபட்டதும் தடையற்ற வாசிப்புக்கு இலகுவாகவே இருந்தது. முதலில் முழுமையாய் வாசித்தது அவரின் ஊமைச் செந்நாய், ஆயிரம் கால் மண்டபம், இன்னும் சில சிறுகதை தொகுப்புகளாகும். 

ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஒரு மாஸ்டர் பீஸ் என முத்திரை குத்தலாம். வாசகனை இந்த உலகிக் இருந்து வெறு ஒரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் கதை அமைப்பை கொண்ட படைப்பு அது. இந்த மனிதன் எப்படி தான் இதை எழுதினார் என இன்னமும் வியப்பாகவே உள்ளது. ஏழாம் உலகம் நாவலுக்கு தனியொரு புத்தக அறிமுகம் எழுத வேண்டும் என்றே நினைக்கின்றேன்.

அறம் மொத்தம் 13 சிறுகதைகளை கொண்ட தொகுப்பாகும். வாசகனின் உணர்சிகளை தட்டிச் செல்லும் படைப்பு மிக உன்னதமானது. அறம் நூலின் ஒவ்வொரு கதையிலும் அத்தன்மை புதைந்துள்ளது. அறம் செய்யும் மனிதர்களை இவ்வுலகம் எவ்வளவு அந்நியமாக்கிவிட்டது என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. 

இதில் யானை டாக்டர் எனும் சிறுகதை தனித்துவம் வாய்ந்தது. அக்கதை பிற மொழிகளிலும் மொழிபெயர்கப்பட்டு விழிப்புணர்வுக்காக இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிகிறேன். தமிழ் இலக்கியத்தில் இக்கதைகள் அனைத்தும் மிக முக்கியமான நிகழ்வாகும். அறம் நிகழ்த்திய மனிதர்கள் பலரை நாம் அறியாமல் போனதற்கு காரணம் சமூகத்தின் அறமற்ற நிலைகள் என்பதே உண்மை. 

அறம் நூலினை வாசித்து முடித்து ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலும் அவரின் பதில் மடலும் உங்கள் பார்வைக்கு:


அன்பின் ஜெயமோகன்,

உங்களின் அறம் நூலினை மிக கனத்த இதயத்தோடு வாசித்து முடித்தேன். நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு எழுத்துகளிலும் கதைச் சூழலின் உணர்வுகள் விரவிக் கிடக்கின்றன. நீங்கள் இக்கதைகளை எழுதிய மனச் சூழலும் வியக்க வைக்கிறது.

சமூகத்தில் பாழ் போன அற நிலைகளை வாசிக்கும் தருணம் ஏதோ ஒரு கோபம் ஏற்படவே செய்தது. அது சமூகத்தின் மீதான கோபமா அல்லது எனது மீதான கோபமா எனவும் சிந்திக்க வைக்கிறது.

நீங்கள் இக்கதைகளில் சொல்லி இருக்கும் அனைத்து நபர்களும் எனக்கு புதிய அறிமுகமே. முதல் கதையான அறம் என்னை கலங்கச் செய்தது. ஆனால் யானை டாக்டர் கதையை படித்தபோது மொத்தமாக மனம் உடைந்து போனேன். புழுக் குவியலில் யானைக்கு போஸ்மோர்டம் என்பது சற்றும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கோவில் மற்றும் சர்க்கஸ்களில் யானையை நடத்தும் விதத்தை தவிர்க்க கூறும் டாக்டர் கே அறம் சார்ந்த வாழ்வியலின் உயரத்தில் காணப்படுகிறார்.

தாய்லாந்தில் ஒரு முறை யானை சவாரி செய்திருக்கின்றேன். யானை மண்டையில் இரும்புக் கோலில் அடித்து ஓட்டினான் பாகன். அச்சமயம் என் மனம் பக்கென்று போனது. இனி யானை சவாரி கூடாது என்றே நினைத்தேன். யானை டாக்டர் கதையை வாசித்த போதுமிகவும் வேதனை அடைந்தேன். அக்கதை ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. இரண்டு நாட்கள் அக்கதையை மீண்டும் வாசித்து ஏதோ ஒரு தேடலில் ஆழ்ந்து போனேன். அக்கதை என் சிந்தனையில் ஓடிக் கொண்டே இருந்தது. சில இடைவெளிக்கு பின்னரே மீதக் கதைகளை வாசித்து முடித்தேன்.

பூமேடை இராமையா போன்ற சமூக நல விரும்பிகளை சமுதாயம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறது. இனிப்புச் சாறை சுமந்த சக்கைகளாகவே அவர்கள் தூக்கியெறியப்படுகிறார்கள். கிடைத்த இனிப்புக்காகவேனும் அவர்கள் நினைத்துப் பார்க்கப்படுவதில்லை. குழு சார்ந்த அதிகாரவர்க்கமே தியாகம் செய்து கொண்டிருப்பவர்கள் எனும் பொது மனநிலையே இதற்குக் காரணம் என கருதுகிறேன்.

நான் மலேசிய குடியுரிமை இலாக்காவில் அதிகாரியாக பணி புரிகிறேன். உலகம்யாவையும் எனும் கதை எனது பணிக்கு முற்றிலும் உடன்படாத ஒன்று. கேரி யார் என்பதையும் அவர் உருவாக்கிய உலகக் குடிமகன் கடவுச் சான்றையும் தேடிப் பிடித்து அறிந்து கொண்டேன். ஒரே உலகம் ஒரே குடிமக்கள் எனும் சாத்தியம் சற்றே சிந்திக்க வைக்கிறது. இனம் மற்றும் மதம் எனும் பொய்கள் மனித மனதில் இருந்து வடிந்தாலன்றி அது நடப்பதற்கில்லை. எனது பணியிட தோழர்களிடம் கேரியின் கதையை பகிர்ந்து கொண்ட சமயம் அவருக்கு யூதன் எனும் அடையாளத்தை குத்தினார்கள். ஒரே இஸ்ரேல் எனும் கொள்கையை உதாரணப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்தேன். கேரியின் நெடும் போராட்ட கதையை விளக்கஇயலாது என உணர்ந்து அமைதியானேன். உலகமயமாக்கல் எனும் கேட்பாடு உலகை நம் கண் முன் விரித்துப் போட்டிருந்தாலும் மனமெனும் தனி தேசம் சுலபத்தில் அகன்றுவிடுவதன்று.

உங்கள் படைப்பிற்கு நன்றி.


அன்புடன்,
விக்னேஷ்வரன் அடைக்கலம்.



அன்புக்குரிய விக்னேஷ்வரன்,

தங்கள் கடிதத்துக்கு நன்றி.

உண்மைதான். நான் அறம் கடிதங்களுக்கான எதிர்வினைகளில் முக்கியமாகக் கண்டது அக்கதைகளின் நாயகர்கள் முன்வைக்கும் மானுட அறத்துக்குச் சற்றும் பொருந்தாத இனமொழிமதக் கண்ணோட்டத்திலேயே அவர்கள் வாசகர்களில் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறார்கள். கெத்தேல் சாகிப் என்ன இருந்தாலும் ஒரு முஸ்லீம்தானே, அது அவர்களின் வணிக உத்தியாக ஏன் இருக்கக்கூடாது என்று எழுதியவர்கள் உண்டு. அவர் முஸ்லீம் என்பதனாலேயே அக்கதை பல இஸ்லாமிய இதழ்களில் மறுபிரசுரம் ஆகியது. அதைப்போல டாக்டர் கே ஒரு பிராமணர் என்பதனாலேயே அச்சாதியைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்பட்டார். ஏற்பும் மறுப்பும் அந்தத் தளத்திலேயே நடந்தன. அறம் பேசும் மனிதர்கள் நம்மிடமிருந்து எவ்வளவு அன்னியமானவர்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

ஜெ


கதைகளை இணையத்தில் வாசிக்க: http://www.jeyamohan.in/?page_id=17097

Friday, June 07, 2013

ONLY 13 - தாய்லாந்தின் விபச்சார உலகம்


TOO MANY WOMEN
FROM TOO MANY COUNTRIES
SPEAK THE SAME LANGUAGE
OF SILENCE

புத்தகம்: ONLY 13 - THE TRUE STORY OF LON
நயம்: சுயசரிதம்
பக்கம்: 330 PAGES
பதிப்பகம்: BAMBOO SINFONIA PUBLICATIONS

புத்தகத்தின் சில வரிகள்:
1. My culture holds all women to be not only inferior — but expendable.
2. My mother knows only two things; Old men want to sleep with me, and she wants money.
3. I tried to commit suicide twice because I wanted to see my father in heaven, so he could stop searching for me.


தாய்லாந்து பயணத்தின் போது சாலையோர ஒட்டுக் கடைகளை கணிசமாக காண முடியும். வருத்த புழு பூச்சி வகைகளும் காரம் மிகுந்த உணவு பண்டங்களும் சாலையோர கடைகளில் பிரபலம். இது போக பொரித்த எலி, தவளை, பாம்பு போன்றவற்றையும் காணலாம்.

பயணிகளுக்கு இது விசித்திர உணவாக இருக்கும். அந்த வியாபாரியிடம் கேட்டீர்கள் எனில் ‘விட்டமீன் விட்டமீன்’ என சொல்வான். அவற்றை சுவை பார்க்கும் பயணிகள் ‘இட்ஸ் நைஸ்’ என சொல்வதையும் காணலாம்.

இந்த உணவு பண்டத்தின் வரலாற்று பின்னணி தாய்லாந்தின் எல்லையில் இருக்கும் ’ஈசான்’ (Issan) எனும் வறுமை மிகுந்த மாநிலத்தில் தொடங்குகிறது. தாய்லாந்தின் உடல் வியாபார மையங்களில் இருக்கும் 80% பெண்கள் இந்த ஈசான் பகுதியில் இருந்து வந்தவர்கள். இன்னமும் வந்துக் கொண்டிருக்கிறார்கள். தாய்லாந்து பெருநிலத்தில் ஈசான் எனும் மாநிலம் கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளின் எல்லையில் உள்ளது.

பால்வினை தொழிலில் ஈடுபடும் தாய்லாந்து பெண்களுக்கு தினமும் பிறந்த நாள் வரும், ஊரில் இருக்கும் அம்மாவோ அப்பாவோ உடல் நலமற்று இருப்பார்கள். தன்னிடம் ’ஜொல்லு’ வடிக்கும் ஆண்களிடம் பணம் பறிக்க ஏவப்படும் வியாபார உத்திகள் இவை. இதை அறியாமல் போகும் பின்நவீனதுவ எழுத்தாளன் குட்டியின் ஜாக்கெட்டில் பணத்தை சொருகிவிட்டு மெக்கோங் நதியை இரசித்ததாய் கூறிக்கொள்வது தமிழ் இலக்கிய வளர்ச்சியின் மைல் கல்லாக அமைந்துள்ளது.

ஈசான் போன்ற பகுதியில் வசிக்கும் மக்கள் தன்னை தாய்லாந்து மக்கள் என கூறிக் கொள்வதில் வெட்கப்படுகிறார்கள். தாய்லாந்து அரசாங்கமும் இந்த மாநிலத்தின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொள்வதில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் கம்போடிய இராஜியத்தில் இருந்து தாய்லாந்தில் சேர்க்கப்பட்ட பகுதியாக இது கருதப்படுகிறது. இதனால் இன்னமும் அவர்கள் முழு தாய்லாந்தியர்களாவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி வாழ் மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். விளைச்சல் குறைந்து போகும் நாட்களில் வயலில் இருக்கும் புழு, கூட்டுப்புழு, பாம்பு, எலி போன்றவை இவர்கள் சாப்பாட்டுக்கு வழி செய்கின்றன.

சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வந்த காலத்தில் இப்பகுதி வாழ் மக்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள். விபச்சாரத்தை நாடிவரும் சுற்றுப் பயணிகளின் பண வாசனை இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திக் கொள்ள செய்தது. ’லேடி பாய்ஸ்’ எனப்படும் திருநங்கைகளும் தாய்லாந்தில் அதிகமாக உள்ளதற்கு காரணம் பொறுப்பற்ற இந்த சுற்றுலாத் துரையே. குடும்ப வருமையின் காரணம் தன்னை பெண்ணாக்கிக் கொண்ட ஆண்களின் கதைகளையும் இங்கு அதிகம் காண முடிகிறது.

ஒன்லி 13 எனப்படும் புத்தகம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்ட ஒரு பெண்ணின் சுயசரிதையை நமக்கு விளக்குகிறது. இந்த சுயசரிதம் ‘லோன்’ எனும் பெண்ணால் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தாய்லாந்தின் Krabi எனும் ஊருக்குச் சென்றிருந்த சமயம் ONLY 13 THE TRUE STORY OF LON மற்றும் LADYBOYS எனும் இரு புத்தகங்களை அதன் விமான நிலையத்தில் வாங்கினேன்.

லேன் எனும் சிறுமி ‘உபோன்’ எனும் ஊரில் பிறந்தவள். அவளது வாழ்வில் நிகழும் சில கசப்பான சம்பவங்களால் வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். பாங்கக் வந்தடையும் அவள் கிடைக்கும் வேலைகளை செய்து தனது வாழ்வை தொடர முயற்சிக்கிறாள்.

பாங்காக்கில் பெயர் போன பாலியல் தொழில் வீதியில் மது பான கடையில் (கோ கோ பார்) சுத்தம் செய்யும் வேலை கிடைக்கிறது. அங்கு வேலை செய்யும் போது அவள் காணும் காட்சிகள் நாளடைவில் அவளை பாலியல் தொழிலுக்கு ஈர்கச் செய்கிறது. தாய்லாந்தில் மெத்த படித்த ஒருவன் சம்பாதிக்கும் பணத்தை காட்டினும் பாலியல் தொழிலில் எவ்வளவு அதிகமான பணம் கிடைக்கிறது என்பதை ஒப்பீடு செய்கிறாள் லோன்.

’கோ கோ பார்களில்’ வேலை செய்யும் பெண்கள் தங்களுக்கான கஷ்டமர்களை தேர்ந்தெடுக்கும் முறைகளையும் தொழில் உக்திகளையும் மிகச் சிறப்பாக விளக்குகிறது இந்த நூல். மூன்றாம் உலக நாடுகளின் இந்த அவல நிலைக்கு மேலை நாடுகளின் பங்களிப்பு என்னவென்பதை நாம் அறிய முடிகிறது. ’கோ கோ பார்களில்’ காதலை தேடும் வெளிநாட்டு ஆசாமிகள் அந்நாட்டின் பாலியல் தொழிலாளர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். அப்படி இருந்தும் பாங்காக், பட்டாயா, புக்கேட் போன்ற பாலியல் தொழில் மலிந்து காணப்படும் இடங்களில் வெளிநாட்டு பயணிகளின் வருகை மிகுந்தபடியே உள்ளது. ஆண்களுக்கு ஏற்படும் சுக்கில தோஷத்தின் கொடுமையை இது நமக்கு உணர்த்துகிறது.

தனது சுயசரிதத்தில் லோன் தன்னை ஒரு தாய்லாந்துகாரியாக ஒப்புக் கொள்ள மறுக்கிறாள். உபோன்/ஈசான் நிலத்து மக்களின் வருமை மிகுந்த வாழ்வு ஏனைய தாய்லாந்து மக்களிடையே ஒரு மோசமான பார்வையை ஏற்படுத்தியுள்ளதை இதற்கு காரணம் காட்டுகிறாள். தனது 13-வது வயதில் வீட்டை விட்டு ஓடும் லோன் 14-வது வயதில் தனது கன்னி தன்மையை ஒரு சுவீஸ் கிழவனுக்கு விற்பனை செய்கிறாள். இதற்காக அவளக்கு கிடைக்கும் பணம் 1200 அமேரிக்க டாலர்கள். ஆண்டு முழுக்க நான் பணி புரிந்த மதுபான கடையை கூட்டி பெருக்கினாலும் எனக்கு இவ்வளவு பணம் கிடைத்திருக்காது என அடுத்த கட்டங்களுக்கு இவளது பாலியல் தொழில் பயணிக்கிறது.

18 வயதுக்கும் குறைவானோர் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தாய்லாந்தில் சட்டபடி குற்றம், இருந்தும் கையூட்டுகளின் வழி இந்த சட்டம் கண்னை மூடிக்கொள்கிறது. பாங்காக்கில் இருந்து பட்டாய செல்லும் லோன் அவளுக்கு விருப்பம் குறைவான பணம் காய்க்கும் காதல்களால் பல நாடுகளுக்கு பயணம் செய்கிறாள். தனது பாலியல் வியாபாரத்தில் அங்கும் பணம் சம்பாதித்து தன் அம்மாவுக்கு கொடுக்கிறாள்.
ஈசான் குடும்பங்களின் முதலாவதாக பிறக்கும் பெண்ணின் குடும்ப சுமை பெரிது. அக்குடும்பங்களில் ஆண்களின் பங்கு குடிப்பதும், சூதாடுவதும், இனப்பெருக்கம் செய்வதும் என அமைகிறது. பெண்ணாக பிறப்பவளின் வாழ்வு குடும்பத்திற்காக பொன் முட்டையிடும் வாத்தாக அமைகிறது. 

லோன் வாழ்க்கையின் விரக்தியில் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். அதிலும் அவளுக்கு தோல்வியே எஞ்சுகிறது. பல பல இன்னல்களினால் மனதாலும் உடலாலும் சேர்வடையும் லோன் ‘பைபோலா டிசார்டரினால்’ பாதிப்படைகிறாள். அவளின் ஆரோக்கிய நிலை இன்றளவும் கேள்விக்குட்பட்டே உள்ளது.

லோனின் ஆரோக்கிய பாதிப்பிற்கு பின் மருத்துவ உதவிகள் செய்த கென் எனும் இங்கிலாந்துகாரரால் இந்த நூல் எழுதி முடிக்கப்படுகிறது. லோன் ஆரோக்கிய பாதிப்பில் இருக்கும் போது சொல்லப்படும் தகவல்கள் கென்னின் விளக்கத்தில் மாறுபாடடைவதை வைத்து லோனின் மன பாதிப்பை அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த புத்தகம் மூன்றாம் உலக நாடுகளில் பாலியல் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க பங்களிக்கும் ஒவ்வொருவரின் முகத்திலும் அறைவதாக அமைகிறது. இருந்தும் ‘செக்ஸ் பயணிகளின்’ வருகையை இது இம்மியும் குறைக்கப் போவதில்லை என்பதே உண்மை.

Wednesday, July 28, 2010

Notes to Science Fiction Writers by Ben Bova


தலைப்பு : Notes to Science Fiction Writers
ஆசிரியர் : Ben Bova

வெளியீடு : Houghton Mifflin Company, Boston (1981)

பக்கம் : 193

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிவிரைவில் நடந்தேறிக் கொண்டிருப்பவை. இவற்றின் மாற்றம் ஒவ்வொரு நிமிடங்களிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அறிவியல் புனைவுகள் வாசகனை ஒரு புதிய சிந்தனையில் ஆழ்த்துகிறது. உதாரணமாக நாம் இருந்திராத ஒரு சூழலை வாசிப்பில் அனுபவிக்கின்றோம் அதில் இலயித்து போகின்றோம். அறிவியல் புதினங்களில் மனித வாழ்க்கையின் அன்றாடங்களை காண முடிவதாக இருப்பினும் அதன் புதுமைகள் வாசகனுக்கு உவப்பளிக்கும் ஒன்றென அமைகிறது.

அறிவியல் புனைவுகளை நாம் இங்கு பேசும் பொழுது மாய யதார்த்தம் அல்லது மாந்திரிக யதார்த்தம் எனும் ஏனைய பிரிவுகளையும் காண வேண்டி உள்ளது. தமிழ் புதினங்கள் பல அறிவியல், மாய, மாந்திரிக யதார்த்தம் சார்ந்த மயக்கம் கொண்டு வெளி வந்திருக்கின்றன. அறிவியல் புனைவு மாய மந்திர யதார்த்தங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றென அமைகிறது. அதற்கு அதீத கற்பனை மட்டும் போதுமானது அல்ல.


அப்படி என்றால் அறிவியல் புனைவுகள் அமைப்பது கடினமான ஒன்றா? Notes to a science fiction writer எனும் நூலின் ஆசிரியர் Ben Bova, Isaac Asimov என்பவரின் கருத்தை பின் வருமாறு குறிப்பிடுகிறார்: Asimov-வின் கருத்தின் படி அறிவியல் புனைவு கடினமான ஒன்றென குறிப்பிடப்படுகிறது. இதன் கட்டமைப்பில் ஆசிரியரின் மாறுபட்ட சிந்தனை அதன் வெற்றியாக அமைகிறது. அறிவியல் புனைவின் நாயகன் அதில் செலுத்தப்படும் சிந்தனை வடிவங்கள். அது மிகையாகி மாய மந்திர கதையாகிவிடாமலும் இருக்க வேண்டும். அதாவது கதையின் வடிவம் அறிவியல் கோட்பாடுகளை கொண்டமைய வேண்டும் என்பதாக Asimov குறிப்பிடுகிறார்.


சிந்தனை கட்டமைப்புகள் சாதாரணமாக முன்வைக்கப்படுமாயின் அதன் அழகியல் பாதிக்கப்படும். ஆதலால் கலை நுணுக்கங்களின் வடிவமைப்பும் அறிவியல் புதினங்களுக்கு அவசியமாகிறது. இதற்கு உதாரணமாக 1973-ஆம் ஆண்டில் ஆசிரியர் எழுதிய Hall of Fame எனும் அறிவியல் புதினத்தை எடுத்துரைக்கிறார். Men of Good Will மற்றும் The Shining Ones போன்ற புத்தகங்களையும் எடுத்துக்காட்டாக தமது கட்டுரைகளுக்கு விளக்க உதாரணங்களோடு பயன்படுத்தப்பட்டுள்ளது. Poul Anderson-னின் (மேற்கத்திய அறிவியல் புனைவு எழுத்தாளர்) கூற்றை நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது ஐம்புலன்களை பயன்படுத்தும் வழிமுறை. இதன் வழி நாம் எழுதும் கதாபாத்திரங்களுக்கும் கதையோட்டத்திற்கும் முழு உயிரோட்டம் கிடைக்கும் என குறிப்பிடுகிறார். இது அறிவியல் புனைவுக்கு மட்டும் அல்லாது யதார்த புனைவுகளுக்கும் தகுந்த ஒன்று என்பதை நாம் காண முடிகிறது.


மேலும் அறிவியல் புனைவிற்கான சிந்தனை பெருக்கத்திற்கு அறிவியல் சார்ந்த மாதிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்களின் வாசிப்பு அனுபவம் கைக்கொடுக்கும் என்கிறார். அதனைக் காட்டினும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை நிதானித்து கவனிப்பதும் “இப்படி நேர்ந்தால்” எனும் கேள்வியை கேட்பதின் வழியும் அறிவியல் புனைவிற்கு நிச்சயம் கைகொடுக்கும் என குறிப்பிடுகிறார்.


உதாரணமாக, ஒரு மனிதன் பொய் பேசுகிறானா இல்லையா என்பதை துள்ளியமாக கண்டறியும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன நேரும்? அல்லது மனிதனுள் ஏற்படும் சிந்தனை மாற்றங்கள் ஒரு மிருகத்திற்கோ, இயந்திரத்திற்கோ, கிருமிகளுக்கோ உண்டாகுமாயின் என்ன நேரும்? என்பதாக நமக்கு உதாரணங்களை காட்டுகிறார். 1981-ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம் என்பதால் இன்றய நிலையில் தகவல்கள் அடிபட்டுபோயுள்ளன. என்போல் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு சிறு தூண்டுதலாக அமையலாம்.


Sunday, January 10, 2010

எப்போதும் பெண் (நாவல்) - சுஜாதா



புத்தகம்: எப்போதும் பெண்
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை

"இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின் பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன், பக்தியும் தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள்.'' - முன்னுரையில் சுஜாதா.

தாய், சகோதரிகள், தோழிகள், பின்நாட்களில் மனைவி என ஆணின் வாழ்க்கை முறை அமைகிறது. இதில் பொரும்பாலான இடங்களில் பெண் என்பவளுடனான தொடர்பு நிலை தொடர்ந்து நிலைக்காமலும், பாதியாகவும் முடிவடைந்து விடுகிறது. பெண்ணின் சுதந்திரம் ஒரு வரையரைக்குட்பட்டு இருப்பதனால் இந்நிலை எற்படும் சாத்தியங்கள் அதிகம் இருக்க முடியுமென நாம் சொல்லலாம்.

அப்பா, அண்ணன்கள், தம்பிகள், தாத்தா, மாமா, கணவன், அம்மா, அக்காள் என அவளை சார்ந்த முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வயது நிலையிலும் பெண் என்பவளின் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்படுகிறது. அதை அவள் விரும்புகிறாளா அல்லது ஏற்றுக் கொள்கிறாளா என்பதையும் அவளை சூழ்ந்தவர்கள் அறிந்துக் கொள்ள விரும்புவது கிடையாது. இது தான் சமூக நியதி எனும் கட்டாயங்கள் திணிக்கப்படுகிறது. பெண் என்பவளின் சுதந்திரம் அவளால் விரும்பப்பட்டது அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை காட்டினும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டது என்பதே தகும்.

பெண் பாலியல் வன்முறைகளுக்கு எதிரானா சட்ட திட்டங்கள் தேவையற்று போய்விடும் நிலை மனித நாகரீகத்தின் அதீத வளர்ச்சியின் பின்னும் தீர்ந்தபாடில்லை. அது இன்னமும் மெருகூட்டப்பட்டு, சீர்திருத்தப்பட்டு
நீதி எனும் பெயரில் உபயோகிக்கப்படுகிறது. பெண்ணை போகப் பொருளாக பார்க்கவும் உபயோகிக்கவும் ஆண்களுக்கான கட்டளைகள் அவனது மரபணுவின் வழியாக செலுத்தப்பட்டுவிடுகிறது. பெண்களிடம் தோன்றும் காமத் தேடல்களை அவன் விரும்பச் செய்கிறான். ஆண் என்பவனுக்கு ஏன் அப்படி தோன்ற வேண்டும்? அவனுள் ஏற்படும் பௌதிக மாற்றமும், பெண்ணின் பருவ வளர்சிகளும் அவனை இத்தூண்டுதலுக்கு ஆளாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

சுஜாதாவின் எப்போதும் பெண் எனும் நாவல் பெண்னை பற்றிய அடிப்படை புரிதலை நமக்கு நயமாக விவரித்துள்ளது என்பது மிகையற்றது. பெண்ணின் வளர்ச்சிக்கும் மாறுதல்களுக்கும் காரணங்கள் யாவை என்பதினை எளிய நடையில் எடுத்துரைத்துள்ளார். வளர்ச்சி அல்லது மாறுதல்கள் என்பன பெண்ணின் உடல், உள்ளம் மற்றும் செயல்பாடுகள் யாவற்றிலும் அடங்கியுள்ளது. அவளின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் சில கட்டமைப்புகள் சூழ்ந்துக் கொள்கின்றன. ஒரு வரையரைக்குட்பட்ட தீர்மானங்களையோ செயல்பாடுகளை மட்டுமே அவளால் செய்ய முடிகிறது.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், ஓரிரு வயது வித்தியாசங்களுடன் ஒரு தாய்க்கு பிறக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வளர்கப்படும் விதம் ஒரே விதமான சூழ்நிலையைக் கொண்டது. இருப்பினும் இருவரின் வளர்ச்சியிலும், சிந்தனையிலும் அது வேறுபாட்டை கொடுக்கிறது. இந்நிலைக்கான சாத்தியங்கள் நமக்கு குழப்பத்தை கொடுக்கின்றன. பிறப்பின் நியதி என இதை நாம் பொதுப்படையாக சொல்லிவிடுகிறோம்.

மூன்று ஆண் குழந்தைகளை பெற்று இல்வாழ்க்கையில் சலித்துப் போன ஒரு ஆண் தூக்கம் வராமல் போரடித்துப் போன இரவொன்றில் தன் மனைவியை சுகிக்க, விந்து அவளின் கரு முட்டையை தேடி ஓடுகிறது. நாவலின் முதல் பக்கத்தில் இதை படித்தவுடன் முடிவு வரை எப்படி கொண்டுச் செல்வார் எனும் தீர்மானத்தை ஓரளவேனும் யூகிக்க முடிந்தது. இக்கதையின் முடிவு எனக்கு அளப்பறிய பாதிப்பை கொடுக்கவில்லை என்பதே உண்மை. இருப்பினும் இதன் வாசிப்பு புதிய அனுபவமாகவும், சுவாரசியமாகவும் இருக்கவேச் செய்தது.

இதை கதையென்றோ, நாவல் என்றோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் படித்துப் பாருங்கள் என ஆரம்பிக்கும் சுஜாதாவின் முன்னுரை இக்கதைக்காக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தையை நமக்கு தெளிவிக்கிறது. நன்னெறிகளையும், நீதிக் கதைகளையும் விரும்பிப் படிபவர்கள் விரசமான எழுத்து என இப்புத்தகத்தை ஒதுக்கக் கூடும். நகைச்சுவை, எழுத்துநடை, சுவாரசியம் என தனக்கே உரிய பாணியில் கொடுக்கப்பட்டிருக்கும் இப்புத்தகம் எல்லோராலும் நிச்சயம் படிக்கக் கூடிய ஒன்றெனவே சொல்லமுடிகிறது.

Thursday, April 02, 2009

வருச நாட்டு ஜமீன் கதை!!

புத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை
ஆசிரியர்: வடவீர பொன்னையா
பதிப்பகம்: விகடன் பிரசுரம்
விலை: ரூ50

புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக் கண்டவுடன் எடுத்து புரட்ட ஆரம்பித்தேன். உள்ளே மேலும் சில பழமையான படங்களோடும் ஓரமாய் இருக்கும் சிறு குறிப்புகளும் கவரும் வண்ணம் இருந்தன. சரி படித்துப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். வடவீர பொன்னையா என்ற எழுத்தாளரின் எழுத்தை முதல் முறை வாசித்தேன்.

இதைக் கதை என்று சொல்வதை விட நீள் சரித்திரக் கட்டுரை என்று தான் சொல்ல வேண்டும். சாபத்தால் சரிந்த ஒரு சாம்ராஜ்யத்தின் உண்மைக் கதை எனும் கோடிட்ட வார்த்தைகளை முன்னமே தெரிவித்து விடுகிறார்கள். மூன்று தலைமுறையில் ஜமீனில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. கதையை கொஞ்சமும் சுவாரசியம் குறையாமல் இட்டுச் சென்றிருப்பது ஆசிரியரின் பலம்.

இக்கதை சம்பந்தப்பட்ட மனிதர்களையும், குடும்ப நண்பர்களையும், வாரிசுகளையும் ஆசிரியர் நேரில் கண்டு சம்பவங்களை உறுதி செய்து சம்பவங்களை லாவகமாக கோர்த்து எழுதி இருக்கிறார். ஜமீன் மிரட்டல், ஏழை மக்கள், பளியர்கள், கவுடள் நம்பிக்கை, சாபம் என கதையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஈர்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஜமீன்கள் பெண்கள் விசயத்தில் பாரபட்சம் பார்க்காமல் ஏக போகமா வாழ்ந்ததை ஒளிவு மறைவு இல்லாமல் விலாவாரியா விவரிச்சு எழுதப்பட்டிருக்கிறது. சுவாரசியத்துக்காக சில புனைவுகள் சேர்க்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. ஜமீன் அழிந்து போவதற்கு முழுக் காரணம் சாபம் என்பதை விட ஜமீன் வாரிசுகளின் ஏகாந்த வாழ்க்கை முறையும், கணக்கு வழக்கு இல்லாமல் கடன் வாங்கும் போக்கும் காரணமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர் காலத்தில் ஆராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப்பட்ட தொல் பொருள் செய்திகளும் கதை போக்கில் சொல்லப்படுகிறது. கதையை படித்து முடித்த பிறகும் சில கதாப்பத்திரங்களும், சில இடங்களில் சொல்லப்படும் கருத்தும் இன்னமும் அழியாமலே இருக்கிறது.

சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒரு மனிதன் மனதளவில் சுதந்திரமாக செயல்படவும் வல்லமை பெறவும் துடிக்கிறான், எனவே மனிதர்கள் மனதில் தான் யுத்தங்கள் தொடங்குகின்றன. அவர்களின் மனங்களிலேதான் அமைதியும் உண்டாக வேண்டும் என சில வரிகள் நெஞ்சில் பதிகின்றன.

மூன்றாவது சாம்ராஜியத்தில் இருக்கும் ஜமீன் மைனர் பாண்டியன். இவரின் இறப்போடும் அதன் பின் இன்றளவில் அவர்களின் பரம்பரையினர் எப்படி இருக்கிறார்கள் என்பதாக கதை முடிக்கப்படுகிறது. இக்கதை எழுதும் போது மைனர் பாண்டி திருமணம் செய்து கொண்ட பெண் உயிரோடு இருந்திருக்கிறார். 73 வயது அவருக்கு.

அவருடைய புகைப்படத்தோடும் சில பேட்டிகள் போடப்பட்டிருக்கின்றன.மைனர் பாண்டிக்கு 34 வாயதாக இருந்த போது அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு 13 வயது. மாட்டு வண்டியில் போய் கொண்டிருக்கும் போது பார்த்தவுடன் பிடித்துப் போய் தூக்கிக் கொண்டு சென்று திருமணம் செய்துக் கொள்கிறார். கேட்க கேளியாகவும் கொடுமையாகவும் தான் இருக்கும்.

பாலிய விவாகம் என்பது அக்காலகட்டத்தில் பெரிய விசயமாக இருந்ததாக தெரியவில்லை. அவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்து வைத்தே அந்த ஆசாமிகளுக்கு அத்தனை மனைவிகளும் வைப்பாட்டிகளும் என்றால் இன்றய நிலையில் 29 அல்லது 30 வயதில் திருமணம் செய்வார்கள் என்றால் என்னாவது? சற்று சிந்த்திக்க வேண்டிய விசயம் தான். இல்லை அக்காலத்தில் வாழ்க்கை முறை சுமையில்லாமல்(வேலை வெட்டி) இருந்திருக்குமோ? :)

அன்றைய நிலையிலேயே பெண்கள் விழிப்படைந்தார்கள் என்பதாக சித்தரிக்கப்பட்டிருப்பவர் வேலுத்தாயம்மா. இவர் கொண்டமனூர் சாமியப்ப நாயக்கரின் முதல் மனைவி. மைனர் பாண்டியனின் அம்மா. சுகபோகியாக இருக்கும் கணவனை விட்டுச் சென்று வாழ்கிறார். மைனர் பாண்டியும் பொறுப்பில்லாமல் இருக்கவும், அவரை விட்டும் தனித்து வாழ்கிறார். மைனர் பாண்டி இறந்தது 1951-ஆம் வருடம். வேலுதாயம்மா இறந்தது 1956-ஆம் வருடம். மைனர் பாண்டியின் இறப்புச் சடங்கிலும் அவர் கலந்துக் கொள்ளவில்லை. அப்படி ஒரு மனோதிடமான பெண். கணக்கு வழக்குகளை சீராக எழுதி கையெப்பம் இட்ட பிரதியையும் ஸ்கேன் செய்து போட்டிருக்கிறார்கள். இன்னும் பல விடயங்கள் பார்க்க படிக்க திகட்டாத தேனாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

உண்ணாம கெட்டுப் போச்சி உறவு,
பார்க்காம கெட்டுப் போச்சி பயிரு,
ஏறாம கெட்டுப் போச்சி குதிரை,
அடிக்காம கெட்டுப் போச்சு பிள்ளை,
முறுக்காம கெட்டுப்போச்சி மீசை.

சாபத்தோட வீரியத்துக்கு
சாம்ராச்யம் உரமாச்சு..
பூமியில பொதஞ்ச கதை
மறுபடியும் கருவாச்சு..
நல்ல சனங்க போற பாதையில
நல்ல விதை முளைக்கும்..
சரித்திரத்த சொல்லுகிற
சாட்சியாக இருக்கும்..

இப்படியாக சில கிராமிய பழமொழிகளும் மிக இலகுவாக கோர்க்கப்பட்டிருக்கின்றன. புத்தகத்தை இன்னும் சிறப்பாக அச்சிட்டிருக்கலாம். ஆனந்த விகடன் சைசில் சிறுவர் புத்தகத்தை போல் இருக்கிறது. கள்ளிக் காட்டு இதிகாசத்தை போன்ற அளவில் அச்சிடப்பட்டிருந்தால் பக்கங்களும் கூடி இருக்கும். கையடக்கமாக படிப்பதற்கும் வசதியாக இருக்கும். எப்படி இருப்பினும், படித்து முடித்ததும், ஏதோ ஒரு தேடலுக்காக மீண்டும் படிக்கச் சொல்கிறது வருச நாட்டு ஜமீன் கதை.