Friday, July 12, 2013

சிங்கம் 2 - பாக்குறியா பாக்குறியா


பிருமாண்டமான ஆங்கில திரைப்படங்களை கடந்த நூற்றாண்டில் கண்டு கழித்து இன்புற்றிருக்கிறோம். 'வெள்ளைக்காரன் நம்மல விட 20 வருஷம் முன்னுக்கு இருக்கான் டா' என பேசிக் கொள்வார்கள் அப்போதைய சமூக வலைத்தளம் இல்லாத விமர்சகர்கள். அரை குறை ஆடைகளை கண்டால் கண்னை மூடிக் கொள்ளும் நல்ல பிள்ளையாக இருந்த காலம். 

சில படங்கள் பார்ட் 1 பார்ட் 2 என வெளியிடப்பட்டு தூள் கிளப்பும். என்னளவில் அர்னால்டின் பிரடேட்டர், டெர்மினேட்டர் போன்ற படங்கள் 'வாவ்' சொல்ல வைத்த படங்களாகும். அவ்வேளைகளில் ஏன் தமிழ் படங்கள் மட்டும் இப்படி பாகம் பாகமாக வருவதில்லை என ஏங்குவதுண்டு. 

ரஜினியும் கமலும் பாட்ர்1 பார்ட்2 என மீண்டும் மீண்டும் ஒரே தலைப்பிலான படங்களில் நடித்திருந்தால் பள்ளி மாணவனான நானும் நண்பர்களோடு வீர தீரமான சில விமர்சனங்களை செய்திருப்பேன். முன் ஜென்ம பாவத்தால் அப்படியான வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விட்டது.

மூத்த விமர்சகர்கள் சொன்னது உண்மையோ என்னவோ 20 ஆண்டுகள் கழித்து இப்போது தமிழ் திரைப்படங்களை பாகம் வாரியாக பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. அப்போதய நிலையில் தமிழில் நீயா மற்றும் கல்யாண ராமன் போன்ற திரைப்படங்களே இரண்டு பாகங்களில் வெளிவந்ததாக நினைக்கிறேன். 

சிங்கம் 2 வந்த தினமே வலையுலக விமர்சகர்கள் அதை கிழிந்து பிழிந்து தோரணம் கட்டிவிட்டதால் அதை விரிவாக விமர்சிக்க அவசியமில்லை என்றே கருதுகிறேன். இதற்கு ஏன் இவ்வளவு வரவேற்பு. முண்டியடித்து பார்க்கச் செல்கிறார்கள். பார்க்கிறார்கள் பார்க்கிறார்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். 

அரி எனும் மாமனிதனுக்குள் ஒரு காலாச்சார கவலன் எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கிறான். 'பாக்குறியா பாக்குறியா' என சூரிய கார்ஜிப்பதை போல் படமெடுக்கும் போதெல்லாம் அந்த கவலனும் வசனத்தை பொழிந்து தள்ளிவிடுகிறான். நல்லவன் வல்லவன் பாசம் நேசம் என எல்லாமே குடும்ப கூட்டத்துக்கு ஏற்றதாய் அமைத்து வாயில் ஈ போவது அறியாமல் படத்தில் மூழ்கச் செய்கிறார். எது எப்படியோ சந்தானத்தின் காமெடி லீலைகள் பச்சையான அசைவ வகையே. 

நாக்கில் பாம்பை கொத்த வைத்து போதை ருசிக்கிறான் ஒரு கிங் காங் வில்லன். அவன் ஒரு ஆப்பிரிக்க கடத்தல் டானாம். முதல் பாகத்தில் உள்ளூர் ரௌடியுடனும் இரண்டில் வெளி நாட்டு டானுடனும் மூன்றில் வேற்று கிரகவாசிகளுடனும் சிங்கம் சண்டையிடும் என நம்பப்படுகிறது. 

என் இதயம் இது வரை துடிக்கவில்லை என முதல் பாகத்தில் ஒரு பாடல் இருக்கும் அதில் அனுஷ்காவில் நெஞ்சில் வட்ட வட்ட வானவில்லை விட்டு கடுபெற்றி தொலைத்தார்கள். அதே வேலையை இரண்டாம் பாகத்திலும் செய்து வயிற்றெரிச்சலை கொட்டி திர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

அப்பட்டமாக சொல்லலாம் இது நிச்சயமாக விஜயகாந்த் நடித்திருக்க வேண்டிய திரைப்படம். இதன் கதைக் கருவினை சில யுகத்திற்கு முன் அவர் யோசித்துவிட்டார். அப்போது கொண்டாடி நெகிழாத தமிழினம் இப்போது ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. 

இந்த படம் வெற்றியடையளாம். அதனால் மூன்றாம் பாகமும் வெளியாகலாம். நானும் இப்படி இன்னொரு மொக்கையை போடலாம். 

பி.கு: இப்பதிவு முழுக்க ஐ-பேட் நான்கில் தட்டச்சு செய்து பதியபட்டுள்ளது :-)

Friday, July 05, 2013

NAKED FEAR - நிர்வாண மனித வேட்டை 18+




ஒருவனின் உரிமை முழுவதும் பரிக்கப்பட்ட பின் அவன் தொடர்ந்து வாழ வழி செய்வது தன்னம்பிக்கை மட்டும் தான். பிழைப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் பலரின் ஏமாற்றுக் கதைகளை நாம் பல இடங்களில் கேள்விபட்டும் படித்தும் இருக்கலாம். தாயகத்தைவிட்டு வேற்று தேசத்திற்கு பிழக்கச் செல்லும் நபர் நம்பிக்கையின் அடிப்படையிலேயே செல்கிறான். அவர் ஏமாற்றப்படும் போது அந்த நம்பிக்கையும் உடைந்து அழுவதை தவிர வேறு நாதி இருப்பதாக தெரியவில்லை.
 
வெளிநாட்டில் வேலைக்கு வருபவர்கள் ஏஜெண்டுகளிடம் மிக கவனமாக இருப்பார்கள். தான் ஏமாற்றப்பட கூடாது என்பதில் அக்கரை எடுத்துக் கொள்வார்கள். இருந்தும் ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகவே காணப்படுகிறார்கள்.

எனது பணியில் நான் கண்டவரை இந்தியா, வங்காளம் போன்ற தேசங்களில் இருந்து இங்கு வேலைக்கு வரும் நபர்கள் குறைந்தபட்சம் மலேசிய ரிங்கிட்டுக்கு 15000 முதல் 20000 வரையிலும் செலவளித்து வருகிறார்கள். ஏஜெண்டுகளிடம் ஏமாற்றப்பட்ட பின் வேலைக்கான விசா காலாவதியாகி அல்லது ஏஜெண்டுகளால் கள்ள விசா கொடுக்கப்பட்டு, கொடுமை காரணமாக வேற்றிடம் ஓடி எப்படியாவது ஒரு நாள் பிடிபட்டு போவார்கள்.

அவர்களை இறக்குமதி செய்ததோடு ஏஜெண்டும் காணாமல் போய் இருப்பான். நான் பார்த்த வரையில் சாதாரன வேலைக்காக அதிகம் செலவு செய்து வருபவர் இந்த இரு நாட்டினர் மட்டுமே. பிடிபட்டவர் தண்டனைக்கு பிறகு அவர் தேசத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார். இருந்தும் ஊரில் கடன், அவமானம், ஏதுவும் சம்பாதிக்க முடியாத நிலை என பல குடைச்சல்கள் அவர்கள் வாழ்வை தொடர்வதற்கான ஆணி வேரையும் பிடுங்கி எறிந்திருக்கும்.
 
பாலியல் தொழிலுக்காகன ஏஜெண்டுகள் குறி வைப்பது சீனா, வியட்நாம், பிலிபைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற தேச பெண்கள். இது கள்ள மார்கெட்டில் நடக்கும் தொழில் என்பதால் இதன் நடவடிக்கைகளை கண்டுபிடித்து முறியடிப்பது கொஞ்சம் சவாலான காரியம். இப்படியாக ஏமாற்றப்படுபவர்களை பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்கவும் Anti-trafficking in Persons and Anti-smuggling of Migrants சட்டம் இயற்றப்பட்டது.
 

NAKED FEAR திரைப்படம் வெளிநாட்டுக்குப் பிழைப்பு தேடி வரும் பெண் ஏமாற்றப்பட்டு அவள் அனுபவிக்கும் கொடுமைகளை நமக்குச் சொல்கிறது. இது சைக்கோ கில்லர்ஸ் வகையை சேர்ந்த திரைப்படம். சைக்கோ கொலைகாரர்கள் படங்களை எக்கச்செக்கமாகவே ஹாலிவுட் நமக்கு கொடுத்துவிட்டது என்றாலும் இதன் சுவாரசியம் வேறு. ரோமம் சிலிர்த்து உடலை உரைய வைக்கும் திரைபட வரிசையில் இதை நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம்.

படத்தின் ஆரம்பமே ஒரு கொலையில் தொடங்குகிறது. நிர்வாணமாக ஒரு பெண் பொட்டல் காட்டில் ஓடி வருகிறாள். திடீரென ஒரு அம்பு அவள் நெஞ்சை துழைக்கிறது. அவள் அருகே வரும் ஒரு வேட்டையாடி அவள் தலையில் சுட்டு கணக்கை தீர்க்கிறான். படத்தின் கதை இந்த கொலையாளியின் தளத்தில் பயணிக்கிறது. கதைக் களம் நடக்கும் இடம் மெக்சிக்கோ நாட்டின் ஒரு காட்டுப் பகுதியாகும். கொலை செய்பவனுக்கு அந்தக் காட்டின் மூலை முடுக்கு எல்லாம் அத்துபடி. நீங்கள் எங்கு ஓடினாலும் கண்டுபிடித்துவிடுவான். செத்து போனவர்களை அங்கேயே குழி தோண்டி புதைத்தும் விடுவான்.

 
இப்படியான சைக்கோ இருக்கும் மேக்சிக்கோ தேசத்திற்கு வேலை நிமித்தம் வருகிறாள் டயானா எனும் பெண். அவள் ஒரு நடன மாது.அவளை அழைத்து வரும் ஏஜெண்ட் பாஸ்போட்டை பிடிங்கிக் கொண்டு ஒரு பாரில் வேலைக்கு சேர்த்து விடுகிறான். அன்று முதல் அவள் நம்பிக்கையில் மண் வாரி இறைக்கப்படுகிறது. கிடைத்ததும் அவள் விரும்பிய வேலை இல்லை. பாரில் அவளுக்கு ஆடை அவிழ்த்து நடனமாடும் வேலை கொடுக்கப்படுகிறது. புதுப் பெண் அழகாக இருக்கிறாளே என பணத்தை வீசுகிறார்கள் அங்குவரும் ’குடி’மக்கள். இருந்தும் மொத்தத்தில் அவளுக்கு கிடைக்கும் கமிஷன் பணமோ மிக செற்பமாகவே உள்ளது.

ஏஜெண்டிடம் இருந்து பாஸ்போட்டை மீட்டால் மட்டுமே அவளுக்கு அங்கிருந்து விடுதலை கிடைக்கும். அங்கிருந்து ஓடிவிடுவதும் சுலபமான காரியம் இல்லை. ஏஜெண்ட் நிர்ணயித்து இருக்கும் அவளின் கடனோ மிக அதிகம். எவ்வளவு சிரமப்பட்டு பணத்தை சேர்த்தாலும் கடனை அடைப்பது எட்டாக் கனியாக உள்ளது. டயான தங்கி இருக்கும் அறையில் அந்த பாரில் வேலை பார்க்கும் இன்னொரு பெண்ணும் தங்கி இருக்கிறாள். நாம் வேலை செய்து கடனை அடைப்பது சாத்தியம் இல்லை. வேலை நேரம் போக இரவில் பாலியல் தொழிலில் செய்தால் கடனை சீக்கிரம் தீர்த்துவிடலாம் என யோசனை கூறுகிறாள்.

டயானாவின் போறத நேரம் அவள் சந்திக்கும் முதல் கஷ்டமர் அந்த சைக்கோ கொலையாளி ஆவான். அவனும் வேட்டையாட ஒரு பெண்னை தேடி பிடிக்க வந்திருப்பான். அவனோடு காரில் போகும் டயானா பாதியில் மனம் மாறி இறங்கிக் கொள்ள நினைக்கையில் படத்தின் மனித வேட்டையின் துரத்தல்கள் ஆரம்பமாகிறது. அவளை வீட்டிற்கு கடத்திச் சென்று மயக்க மருந்து கொடுத்து கால் விரல் இடுக்குகளில் உள்ள சதையை கத்தரித்துவிடுகிறான். மயக்கம் தெளிந்து எழும் அவள் ஒரு காட்டின் நடுவே நிர்வாணமாக கிடக்கிறாள். எழுகையில் சதை பிய்ந்த கால்களில் வலி. அம்பு எய்ய தயாராக இருக்கிறான் மனித வேட்டை செய்பவன்.

இதற்கிடையில் அங்கு புதிதாக வந்திருக்கும் காவல் அதிகாரி ஊரில் காணாமல் போவோரின் புகார்களை ஆய்வு செய்கிறார். காணாமல் போனவர்கள் பட்டியலில் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள், முக்கியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் அதிகம் தொலைந்து போய் இருக்கிறார்கள். அவர்களை வேட்டையாடியவன் ஊரில் மதிப்பும் மரியாதையும் மிக்க நபர். யாருக்கும் அவன் ஒரு தொடர் கொலையாளி என்பதற்கான சந்தேகம் எழாதபடி தனது நிலையை தக்க வைத்து வந்தவனாவான்.

காட்டில் பிறந்த மேனியாக தப்பி ஓடும் டயானா எப்படி தப்பித்தாள் என்பதாக மீத கதை அமைகிறது. நிர்வாணமாக காட்டில் ஓடும் பெண்ணின் மேனி அழகை இரசிப்பதை தவிர்த்து பார்வையாளனுக்கு அவள் மீதான இரக்கத்தை ஏற்படுத்தி உள்ளது இயக்குனரின் வெற்றி. ஆடை உட்பட எந்த ஒரு பாதுகாப்பு அம்சமும் அந்த பெண்ணுக்கு இல்லை. தன்னம்பிக்கையும் தைரியமும் மட்டுமே அவளை காப்பாற்றுகிறது. மனித வாழ்க்கையில் பாதுகாப்பு அவனது சுய முயற்சியில் மட்டுமே அடங்கியுள்ளது. அவ்வப்போது கிடைக்கும் உதவிகள் ஒரு கட்டத்தில் நமக்கு சாதகமற்று போய்விடும் வேளையில் முயற்சியும் நம்பிக்கையும் மட்டுமே நமது ஆயுதமாக அமைகிறது. நாம் இன்னமும் ஒரு மோசமான உலகில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே படத்தின் செய்தி.

இது குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் படம் இல்லை என்பதால் படத்தை தேடி பிடித்து பார்க்கும் திறமையை உங்கள் வசம் விட்டுவிடுகிறேன். ஜெயம் உண்டாகட்டும்.

Friday, June 21, 2013

மோசமான புகை மூட்டம்- மலேசியா, சிங்கப்பூர் மக்கள் பரிதவிப்பு

இந்த ஓரிரு நாட்களில் மலேசியவின் பல மாநிலங்களிலும் சிங்கை, இந்தோனேசியா, தென் தாய்லாந்து பகுதிகளில் சிலவும் கடுமையான புகை மூட்டத்தால் பாதிப்படைந்து உள்ளது. கடந்த ஆண்டுகளை விட தற்போதய நிலவரம் மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. 

பொதுவாக இந்த மாதிரியான புகை மூட்டம் எல்லா ஆண்டுகளிலும் இருக்கும் ஒன்றே. இந்த ஆண்டு அதன் நிலை கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது. இன்றய நிலையில் நான் வசிக்கும் ஜேகூர் பகுதிகளில் புகை மூட்டத்தின் அடர்த்தி 327-லை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இங்குள்ள சில பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. 

இதே போன்ற நிலையை 1997-ல் கண்டிருக்கின்றேன். இந்த புகை மூட்ட பிரச்சனை இயற்கை பேரிடர் என்பதை காட்டினும் மனிதர்களின் செயலால் செயற்கையாக ஏற்பட்ட ஒன்றே. இந்தோனேசியாவின் சுமாத்ரா எனும் பகுதியில் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட காட்டு தீயினால் கட்டுக்கடங்கா இந்த புகைமூட்ட நிலை ஏற்பட்டுள்ளது. 

புகைக்கு பயந்து வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைக்க வேண்டி உள்ளது. ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளி வரும் போதும் திறந்த வெளிகளில் இருக்கும் போதும் முகமுடி அணிந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இன்றய நிலையில் வேலை செய்யும் போதும் முகமுடி அவசிய பொருளாகிவிட்டது. இது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட தண்டனைய என்பதை ஐயம் இல்லாமல் சொல்லலாம்.

என்ன தான் முகமுடி அணிந்திருந்தாலும் கண் எரிச்சலையும் தொண்டையில் ஏற்படும் அறிப்பு தன்மையையும் தவிர்க்க முடியாத நிலையில் இருப்பது வருத்தமே. 

சுமாத்ராவில் ஏற்பட்ட காட்டு தீ, தற்போதைய சீதோசன நிலையினால் உண்டானதாக கூறப்படுகிறது. இருந்தும் அதன் பின்னணியில் உள்ள முதாலாளிதுவத்தின் செயல்பாடுகளையும் மறுக்க இயலாது. வணிகம் பொருட்டு காடுகள் அழிக்கப்படுவதாலும் இப்படி புகை மூட்டம் ஏற்படுகிறது என்பதே உண்மை.

நிலைமை மேலும் மோசமாகும் பட்சத்தில் செயற்கை மழையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது மலேசிய அரசு. தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் சுகாதார மையங்களை ஆங்காங்கு திறக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.

புகைமூட்டத்தின் அளவுகோள்:
0 - 50 மோசமில்லா நிலை
51 - 100 மத்திமம்
101 - 200 ஆரோக்கியமற்ற நிலை
201 - 300 மிகவும் ஆரோக்கியமற்ற நிலை
301 - 400 ஆபாத்து நிலை
401 - 500 மிகவும் ஆபத்தான நிலை
> 501 ஊரடங்கு நிலை
இதை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேலையில் இங்கிருக்கும் புகைமூட்டத்தின் அடர்த்தி 310 ஆக உள்ளது.


ஏற்படக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகள்:
1. தொண்டை அரிப்பு, இருமல்
2. சுவாச பிரச்சனை, மூக்கில் அடைப்பு
3. கண் எரிச்சல்
4. தோல் எரிச்சல்
5. நெஞ்சு வலி



கடைபிடிக்க வேண்டிய சில நடவடிக்கைகள்
1. வெளியே செல்லும் போது முகமூடி அணிந்துக் கொள்வது நலம்.
2. முடிந்த அளவு வெளியே செல்லாமல் இருக்க முயற்சியுங்கள்.
3. அடிக்கடி சுத்தமான நீரை அருந்த வேண்டும்.
4. வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைத்திருங்கள்.
5. புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
6. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
7. முகத்தினையும், கைகளையும் அடிக்கடி சுத்தமான நீரினில் கழுவுவது நலம்.
8. கண்களுக்கான சொட்டு மருந்து, ஈரமான டெட்டால் முக காகிதங்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது அவசியம்.
9. மோசமான தாக்கத்திற்குட்பட்டோர் நிச்சயமாக மருத்துவ பரிசோதனைக்கு செல்வது அவசியம்.
10. புகை மூட்ட அடர்த்தி நிலையையும் செய்திகளையும் கவனம் எடுத்து தெரிந்து கொள்ளுங்கள்.

Wednesday, June 19, 2013

அரசியல் எனக்குப் பிடிக்கும்

நூல்: அரசியல் எனக்குப் பிடிக்கும்
நயம்: அரசியல்
ஆசிரியர்:ச.தமிழ்ச்செல்வன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்


அரசியல் எனக்குப் பிடிக்கும். இந்த குட்டி வாக்கியம் சில காலத்திற்கு முன் நான் வாசித்த ஒரு சிறு நூலின் தலைப்பாகும். காரம் குறையாத கடுகை போன்றது தான் இந்த நூலின் தன்மையும். கவனிக்க தக்க இந்த நூல், வாசகனுக்கு தெளிவான விளக்கத்தை உதாரணங்களோடும் சம்பவங்களோடும் மிக சுவாரசியமாக படைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன்.

அரசியல், சமூகம், பொருளாதாரம் எனும் மூன்று கூறுகள் உலக வாழ்க்கையில் எல்லா மாந்தர்களுக்குமான முக்கிய அம்சமாகும். விரும்பினாலும் விரும்பாவிட்டாமும் இவற்றில் இருந்து எந்த ஒரு மனிதனும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. 

இன்றய நிலையில் அரசியல் ஒரு தீண்ட தகாத பொருளாகவே பார்க்கப்படுகிறது. பொது வெளியில் அரசியலின் இருண்ட பக்கம் மக்களிடையே ஒரு கசப்புத் தன்மையை ஏற்படுத்தி உள்ளது. உலகாளாவிய அரசியல் ஆனாலும் அல்லது உள்ளூர் அரசியல் ஆனாலும் அங்கிருக்கும் அரசியல் தன்மை என்பது ஏற்றமும் தாழ்வும் சேர்த்தே விமர்சிக்கப்படுவதை நாம் காணலாம். இதுவே அரசியலின் ஆரோக்கிய தன்மை என்பதாக நான் காருதுகிறேன்.

இப்புத்தகம் கிருஷ்ண பிரபுவால் எனக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு சில புத்தகங்களை வாங்க அவரிடம் உதவி கேட்ட பொழுது இன்னும் சில முக்கியாமாக புத்தகங்களையும் சேர்ந்து அனுப்பி வைத்திருந்தார்.

இந்த புத்தகத்தில் அரசியல் தொடர்பான ஒரு விரிவான பார்வையை வாசகனுக்கு வைக்கிறார் தமிழ்ச்செல்வன். அரசு, அரசியல், அரசாங்கம் என்பதன் விளகங்கள் இந்நூலினை வாசிக்க ஆர்வம் கெள்ள செய்கிறது. 

அரசியல் என சொல்லும் போது உங்கள் கண் முன் தோன்றும் காட்சி என்னவாக இருக்கும்? அரசியல் தலைவரின் முகமோ, அரசின் அலுவலகமோ உங்கள் மனக் கண்ணில் காட்சியளிக்கலாம். அரசியல் கட்சிகள் இல்லாத போதும் அரசாங்கம் நம்மை ஆட்சி செய்தே வருகிறது. 

இராணுவம், காவல்துறை மேலும் இதர அரசு நிர்வாகங்களும் நாட்டின் சட்ட திட்டங்களை பாதுகாக்க வழிவகுக்கிறது. நீதி, நிர்வாகம், இராணுவம், போலீஸ் இதையெல்லாம் நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதில்லை. இருந்தும் நமது விருப்பம், தேர்வுகளுக்கு அப்பால் இரும்புப் பிடியாக நம்மீது இடையறாது ஆட்சி செலுத்திக்கொண்டே இருக்கிறது அரசு என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இதுவே கம்யூனிச முறையில் நமது பார்வை இரண்டே சொல்லுக்குள் அடங்கிவிடுகிறது. ஒன்று இடது சாரி அரசியல் மற்றொன்று வலது சாரி அரசியல். ஆட்சி, அரசு, அரசாங்கம் என்பதை பொய்யாக்கும் ஒரு கோணத்தை கம்யூனிச மேதை கார்ல்மாக்ஸ் குறிப்பிடுகிறார். நாட்டின் சொத்துடைமை அல்லது பொருளாதாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதை அரசியல் நிர்ணயம் செய்கிறது.

அரசியல் என்பதன் கோனங்களையும் ஒரு விரிவான பார்வையையும் நமது புரிதலையும் சுயபரிசோதனை செய்து கொள்ள இந்த நூல் நிச்சயமாக நமது சேகரிப்பில் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

Monday, June 17, 2013

'பிக்கினி' அழகிகளின் சூரிய குளியல்

விரைவு படகில் இருந்து எடுக்கப்பட்ட படம்
சொகுசு கப்பல்களில் பயணம் செய்வதை நான் கொஞ்சமும் நினைத்துப் பார்த்ததில்லை. அதில் பயணம் செய்ய சில ஆயிரம் ரிங்கிட்டுகளையாவது செலவு செய்ய வேண்டும். அது போக அப்படியான சொகுசு பயணங்களில் நாட்டமும் குறைவாகவே இருந்தது. கப்பலில் ஏறி சுற்றி முற்றி கடலை தானே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். 5/6 நாட்கள் செலவளித்து கடலை பார்த்து மறை கழண்டு போக வேண்டுமா என்ற எண்ணமும் இருந்தது.
 
இப்படியாக இருந்த எண்ணத்தில் எனது பணியானது பல திருப்பு முனைகளை ஏற்படுத்தியுள்ளது. நான் பணி புரிந்த கிழக்கு கரை மாநிலத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி வரையினும் தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக சுற்றுலா துறைக்கு விடுப்பு கொடுத்துவிடுவார்கள். இம்மாதங்களில் அதிக அளவில் மழை பெய்யும் . மேலும் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும்.


நீச்சல் குளத்தை ஒட்டிய ‘பார்’ வசதி
கற்றின் அழுத்தம் கூடுவதால் கடல் அலைகள் உயர்ந்து இருக்கும். அக்டோபரின் இறுதிகளில் இதன் தாக்கத்தை காண முடியும். அப்படி ஒரு முறை பயணம் செய்து கடல் மயக்கத்திற்குட்பட்டேன். 'புவி ஈர்ப்பின்’ நிலையின்மையால் இப்படி ஏற்படுவதாக அறிகிறேன். அதிகமான அலைகளின் தாக்குதலுகுற்படும் படகில் இருப்பவர்களுக்கு இப்படி ஏற்படும். மிக மோசமாக கடல் மயக்கத்திற்குட்படுவோர் வாந்தி, பேதிக்கு ஆளாகலாம். அடிக்கடி பயணம் செய்வோர் கடல் மயக்கத்தில் இருந்து தன்னை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள முடியும். ‘NOVOMIN' எனும் மாத்திரை இப்படியான பயண மயக்கங்களை தடுக்க உதவும்.

நீச்சல் குளத்தின் ஒரு பகுதி
மார்ச் முதல் அக்டோபர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருவார்கள். திரங்கானுவில் பயணிகளின் கவனத்தை ஈர்த்த இரு முக்கியமன தீவுகள் ‘ரெடாங்’ மற்றும் ‘ஹெந்தியான்’ ஆகும். மலேசியாவில் நிச்சயமாக பார்க்க வேண்டிய இடங்களில் இந்த இரு தீவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

‘ரெடாங்’ தீவினில் விடுமுறையை கழிக்க செலவு சற்று அதிகமாகும். ‘ஹெந்தியன்’ தீவில் இதை காட்டினும் குறைந்த விலையில் விடுமுறையை கழிக்கலாம். இங்கு வருகை புரியும் பயணிகளில் அதிகமானோர் வெளிநாட்டினர். பள்ளி விடுமுறையற்ற காலங்களில் உள்நாட்டு பயணிகளை காட்டினும் வெளிநாட்டு பயணிகளே அதிகம் இருப்பார்கள்.

ரெமி மார்ட்டின்
‘ரெடாங்’ தீவுக்கு சிங்கபூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து நேரடி விமான போக்குவரத்து உள்ளது. தரை வழி பயணம் மேற்கொள்வோர் ’குவாலா திரங்கனு’ அல்லது ‘மாராங்’ போன்ற படகு துரைமுகத்தை அடைந்து விரைவு படகு ஏறி இந்த தீவுகளுக்குச் செல்ல முடியும். அப்படி பயணிப்பது நிச்சயமாக அதிகமான நேரத்தை எடுக்கும். கரையிலிருந்து இத்தீவை அடைய 2 மணி நேரங்கள் ஆகும். பொதுவாக வெளி மாநிலங்களில் இருந்து தரை வழி பயணம் செய்து வருவோர் தனது அரை நாள் அல்லது ஒரு நாளை அத்தீவை சென்றடைய பயன்படுத்த வேண்டி இருக்கும்.

சுழழுந்து இறங்குமிடம்
STAR CRUISE சொகுசு கப்பல் வாரத்திற்கு இரு முறை தென் சீன கடல் வழி பாதையை பயன்படுத்தும். சிங்கப்பூரில் இருந்து புரப்படும் இக்கப்பல் ‘ரெடாங்’ தீவில் ஒரு நாள் சுற்றுப் பயணிகளுக்காக நிறுத்தப்படும். பிறகு அங்கிருந்து வியட்நாமுக்கு பயணித்துவிடும். ரெடாங் தீவினில் நிறுத்தப்படும் சமயம் அக்கப்பலை பரிசோதனை செய்ய சில அதிகாரிகளுடன் செல்வேன்.


13 மாடிகள் கொண்ட இக்கப்பலில் கிடைக்காதது எதுவும் இல்லை என்ற இரகத்தில் தான் அமைத்திருக்கிறார்கள். மலேசிய கடல் எல்லையில் இமிகிரேஷன் சோதனைகள் முடிந்தவுடன் அதன் பயணிகள் ரெடாங் தீவின் கடற்கரைகளுக்கு விரைவு படகேறி செல்வார்கள். இக்கப்பலில் இருக்கும் போது ஒரு 5 நட்சத்திர விடுதியில் இருப்பதை போலவே நீங்கள் உணர்வீர்கள். அதன் சன்னலின் வழி எட்டி பார்த்தால் மட்டுமே நீங்கள் கடலில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். இதன் 13-வது மாடியில் ஒரு நீச்சல் குளமும் அதனை ஒட்டிய ‘பார்’ வசதியும் இருக்கும். அதே போல் அதன் இடது பக்கம் கூடை பந்து மைதானமும், சுழழுந்து இறங்கும் இடமும், சிறிய ’கோல்ப்’ மைதானமும் இருக்கும்.


மீன்களுக்கு தீனியிடும் சிறுவன்
இந்த கப்பலின் முக்கிய அம்சமாக சூதாட்டமும் உள்ளது. அது போக அரை நிர்வான நடனங்களும், கேலிக்கை விளையாட்டுகளும் இன்னும் பிற மேட்டுக்குடி வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. பணி நிமித்தம் வரும் அதிகாரிகளுக்கு இலவச தங்கும் அறையும், உணவும் கொடுக்கப்படும். கப்பலில் இருக்கும் வணிக பொருட்களை வாங்கினால் சிறப்பு கழிவும் உண்டு. இதில் என்னை கவர்ந்தது வாசனை திரவியங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிய வாசனை திரவியங்கள் மிகையாகவே சேர்ந்துவிட்டது.


விமான பயணம் செய்து இங்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் முதலிடம் வகிப்பது இந்தாலி மற்றும் இங்கிலாந்துகாரர்கள். வெகுவான எண்ணிக்கையில் ஜப்பானியர்களும் வருகை புரிகின்றனர். பெர்ஜாயா விடுதி வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய புகழிடமாக உள்ளது. இதன் கடற்கரையும் விடுதியினால் நிர்வகிக்கப்படுகிறது. தனியாரினால் நிர்வகிக்கப்படும் கடற்கரை நெடுகினும் வெளிநாட்டு பயணிகள் குப்புர படுத்து சூரிய குளியல் எடுக்கிறார்கள்.


எழில் மிகு கடற்கரை
ரெடாங் தீவின் கடற்கரை மிக மிக எழிலாக அமைந்துள்ளது. மூன்று பக்கம் மலைகள் சூழ்ந்திருக்க கடல் நீர் கிரிஸ்டல் கற்களை போல் மின்னுகிறது. உலர்ந்த வெள்ளை மணல் இள நீல வண்ண கடல் நீருக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

கடல் குளியலை தவிர்த்து, ஸ்னுர்கலிங், டைவிங் நடவடிக்கைகள் இங்கு பிரபலம். நீச்சல் தெரிந்தவர்கள் மீன்களுக்கு தீனி போட்டு அவற்றோடு நீந்தி இரசிக்கலாம். டைவிங் தெரிந்தவர்களுக்கு பல வண்ண கோரல்களை ஆழ்கடலில் மூழ்கி இரசிக்க வாய்ப்பு கிட்டும்.
படகு துரை

கப்பலின் மேல் மாடி நீச்சல் குளம்












இரவு வேளைகளில் ‘லாங் பீச்’ எனும் பகுதி குதுகல மனிதர்களின் கூச்சலில் கலைகட்டும். ஆடல் பாடல் என கடற்கரையோர மதுபான கடைகளில் விருந்துண்டு மகிழ்கிறார்கள். இந்த மாதிரியான கடல் நடவடிக்கைகள் 8 மாதங்கள் மட்டுமே ரெடாங் தீவினில் நடைபெறுகிறது. எதிர் வரும் நான்கு மாதங்கள் காற்றும் மழையுமாக இத்தீவு தன்னை தானே சுத்தம் செய்துகொள்கிறது. 

பயணங்கள் தொடரும்... 

Thursday, June 13, 2013

BEAUTIFUL BOXER - பாலியல் மாற்றத்திற்கான முயற்சியில்...


கடைநிலை மக்களின் வாழ்வில் ஒன்றிய சில கலாச்சாரங்கள் சுவாரசியம் மிகுந்தவை. மன அமைதிக்காகவும் உல்லாசமாக பொழுதைக் கழிக்கவும் ஆரம்பம் முதலே மனிதன் பல வழிகளை கண்டறிந்து வந்திருக்கிறான். காலப்போக்கில் 'ஃப்பியூடலிசம்' எனும் கட்டமைப்பில் பல பிரிவினர்களாக வகுக்கப்பட்டது நாம் சொல்லிக் கொள்ளும் நாகரீக வளர்ச்சியின் காரணம் தான். வலுத்தவன் உயர்ந்தவன் என்றும் வலுவற்றவன் கடைநிலையன் என்றும் கருதப்பட்டனர். உணர்ச்சிகள் ஒன்று தான். எவராக இருந்தாலும் மன மகிழ்ச்சியும் அமைதியும் தேவைப்படுகிறது.

தன் நிலைக்கும் சக்திக்கும் ஏற்ப, தன் பண்பாட்டிண் வழி அறிந்ததை பொழுதைக்கழிக்கவும், சமுதாய கூடலுக்காகவும் பயன்படுத்திக் கொண்டார்கள். 'எவளுஷன் ஃப்ரேசேஸ்' எனப்படும் இதன் வளர்ச்சி பல நிலைகளில் உண்டானது. அதை விளக்கிப் பேசி மாளாது. கலைகள் உண்டானதின் ஆரம்ப நிலை இது எனக் கொள்ளலாம்.

கலைகள் ஒவ்வொரு சமூகத்திலும் பல நிலைகளில் பல பிரிவுகளாக விரிந்துக் கிடக்கின்றன. ஆசிய கண்டத்தில் அந்நியர் கைகளில் அகப்படாத நாடென தாய்லாந்து பிரசித்துப் பெற்று விளங்குகிறது. இவர்களின் கலைகளில் உலகம் அறிய புகழ் பெற்றவற்றுள் 'தாய் கிக் பாக்சிங்' மற்றும் 'முய் தாய்' என்பதினை குறிப்பிட்டு சொல்லலாம். தாய்லாந்தியர்களின் விட்டுக் கொடுகாத மனப்போக்கு இவற்றின் உலகளாவிய வெற்றிக்குக் காரணமாக இருக்கக் கூடும். 

வாரத்தில் சில தினங்கள் கடலோரங்களில் ’தாய் கிக் பாக்சிங்’ நடைபெறும். நன்முறையில் பயிற்சிப் பெற்ற தாய் பாக்சிங் வீரன் சுமார் ஆறடி உயரம் இலகுவாக எகிரிக் குதிக்கவும் தனது குதிக்காலில் குதித்தபடியே சில மணி நேரங்கள் தன் உடல் எடை முழுதினையும் தாங்கி நிற்கவும் வலு பெற்றவனாக இருக்க வேண்டும். இந்த பாக்சிங் பயிற்சியின் ஆரம்ப நிலைகளை நாம் எளிதில் காணலாம். பயிற்சி பெற்ற வீரர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சி முறையினை காண சாதாரண மக்களுக்கு அனுமதி கிடைப்பது சிரமம்.

ஆறு அல்லது ஏழு வயது மதிக்க தக்க ஒரு சிறுவன் உதட்டுக்கு சிவப்புச் சாயமிட்டு, கன்னங்களுக்கு வண்ணம் பூசி, கண்களுக்கு மையிடப்பட்டு திருநங்கையர்களுக்குறிய அடையாளங்களோடு இளம் ’தாய்பாக்சிங்’ வீரனாக விளையாட்டு களத்தில் இறக்கப்படுகிறான். ''நீயும் அந்த மாதிரி புகழ் பெற வேண்டும்" என வாழ்த்துச் சொல்லி அனுப்புகிறார்கள். அச்சமயம் அங்கே தோன்றும் அவள், அச்சிறுவனின் மேல் இருக்கும் கோமாளித் தனமான அலங்காரங்களை அகற்றிவிட்டு "நீ நீயாக இருக்க கற்றுக் கொள். நீ உயர்வடைவாய். உனக்கு கடவுளின் ஆசி கிடைக்கட்டும்" எனச் சொல்கிறாள். 'பியூட்டிபுஃல் பாக்சர்' எனும் தாய்லாந்திய திரைப்படத்தின் ’கிளைமக்ஸ்’ காட்சி இது.

விழிம்பு நிலையில் இருக்கும் ஒரு தாய்லாந்து சிறுவன் தன் விருப்பப்படி வாழ நினைக்கிறான். எதிர்மறையான பாலியல் உணர்வுகளை ஆரம்பம் முதல் உணர்கிறான். தன் விருப்பத்துக்கு செயல்பட பல தடைகள். காரணம் சமூகத்தைச் சார்ந்த வாழ்க்கை. கடைநிலையில் வாழும் மனிதன் அடுத்தவருக்காவும் தன்னை வாழ்ந்து கொள்ள முற்படும் நிலை அவனது சமூகத்திலும் இருக்கவே செய்கிறது. கையில் கிடைக்கும் உதட்டுச் சாயத்தை, குளியலறைக்குள் சென்று சில நொடிகள் பூசிப் பார்த்து இரசிக்கிறான். யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதே எனும் பயத்தில் அதை விருட்டென அழித்துவிட்டு வருகிறான். 

ஆண்கள் இருக்குமிடத்தில் சட்டையை கழட்டக் கூசுகிறான். பெண்களின் ஆடையை அணிந்து கொள்ள விருப்பம் கொள்கிறான். நினைப்பதை அடைய முடியாத நிலை. அவனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பணம் இருந்தால் மட்டுமே முடியும். உலகத்தில் பல தேவைகளுக்கு அது தானே பதிலாக இருக்கிறது. 

பாக்சிங்கில் ஈடுபட அவனுக்கு ஆர்வமிருக்கிறது. தான் திருநங்கையாக வேண்டும், சிகிச்சை செய்து கொள்ள வேண்டும், பெண் ஆடை அணிய வேண்டும் எனும் அலாதியான எண்ணமே அவன் வளர்ச்சிக்கு வித்தாகிறது. ஏளனங்களையும் கேளிப்பேச்சுகளையும் மென்மை குணம் கொண்ட ஒரு வீரனாக மனதில் வலிகளோடு ஏற்றுக் கொள்கிறான். அது அவனது இலட்சியத் தடைகள். கடந்தாக வேண்டிய நிலையெனக் கருதுகிறான்.

படத்தின் காட்சி அமைப்புகள் அருமையாகவே இருக்கிறது. தாய்லாந்தின் கிராம வாழ்க்கை, ஆசிரம வாழ்க்கை, விளையாட்டு நடக்குமிடம், இரவுச் சந்தை என இரசிக்கும் வகையில் உள்ளன. நாயகனுக்கான திருநங்கையரின் குரல் இயல்பாக இருக்கிறது. மென்மையும், அமைதியும் நிறைந்த பேச்சும் காட்சிகளுக்கு ஏற்ற இசை பின்னணியும் படத்தில் ஒன்றித்திருக்க வகை செய்திருக்கிறதென்றால் மிகை இல்லை. 

ஜப்பானில் நடைபெறும் பாக்சிங் போட்டியில் வெற்றியடைகிறான். இரவில் அவனை மகிழ்விக்க ஒரு மங்கை அனுப்பப்படுகிறாள். அவள் உடல் காட்டி நிற்க ''நான் இதற்குத் தகுதியற்றவன்" என அவளை கட்டி அழும் காட்சிகள் நம் மனதை உலுக்கச் செய்கிறது. மனிதனின் உணர்ச்சிகள் எவ்வளவு மென்மையானது என்பதை அச்சில நொடிகளில் நாமும் உணர முடிகிறது.

திருநங்கையர்கள் மீது ஒரு பரிதாப நிலை ஏற்பட இப்படம் எடுக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் சமூகத்தில் அவர்களும் ஒரு அங்கத்தினரே. அவர்களுக்கான உரிமையை அவர்கள் எடுத்துக்கொள்ள கூட கூசும்படியான நிலையை சமூகம் உருவாக்கிவிட்டது. பாலியல் மாற்றத்தை தீண்டத்தகாத ஒன்றாகவே நாம் காண்கிறோம். 

பாலியல் உணர்ச்சிகளின் மாற்றத்தை உணர்ந்த ஒருவர் ஒன்று தன் உண்மை அடையாளத்தை மறைத்து வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. அல்லது சமூகத்தை ஒதுக்கி ஒடுக்கப்பட்ட தனி உலகில் வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. இல்லையேல் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ தன்னை பல மடங்கு உயர்த்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அந்நிலையை அடைய அவர்கள் போராட வேண்டியது கொஞ்ச நஞ்சமல்ல. மக்களின் ஒடுக்கும் பார்வையால் இப்படியாக தனக்குள் இருக்கும் திறமைகளையும், உணர்வுகளையும் வெளிகாட்ட முடியாமல் தனக்குள் தன்னை புதைத்துக் கொண்டு அடுத்தவருக்காக வாழ்ந்துக் கொண்டிருப்பவர் எத்தனையோ.

** இப்பதிவினை 2009-ஆம் ஆண்டில் எழுதினேன். இப்பொழுது மீள் பதிவு செய்யப்படுகிறது.

Monday, June 10, 2013

குட்டிப் புலி - ஜாதி விளம்பரம்




தனிபட்ட ஜாதிகளின் அடையாளங்களை மக்களின் பார்வைக்கு வைப்பதில் தமிழ் சினிமா கடந்த ஒரு நூற்றாண்டாக போராடி வருகிறது. உயர் ஜாதிகளின் உயர்வையும் கீழ் ஜாதிகளின் தாழ்வையும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாகினும் சினிமாவில் பார்த்து சிலாகித்துக் கொள்கிறோம். அந்த வரிசையில் இரசிகர்கள் மேலும் ’ஆனந்தமடைய’ திரைக்கு வந்திருக்கும் படம் குட்டிப் புலி.

சுப்ரமணியபுரத்தில் தொடங்கிய சசிக்குமார் ஒரு தனிபட்ட சாதிக்கு விளக்கு பிடித்துக் கொண்டிருப்பதை தனது ஒவ்வொரு படத்திலும் காட்டி வந்தார். குட்டிப் புலியாகிய சமீபத்திய படத்தில் ஒரு படி மேலே போய் ஒரு சாதியினர் செய்யும் கொலைகளுக்கு வக்கலாத்து வாங்கி அவர்களை குல தெய்வமாக்கியுள்ளார். சசிக்குமார் இயக்கும் / நடிக்கும் படங்கள் யாவும் இந்த சாதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது போலும். இந்த படத்தின் இயக்குனர் புதியவரான முத்தையா. இவர் இயக்குனர் ஹரியை போல சில பல முயற்சிகள் மேற்கொள்வார் என இப்போதே சொல்லி வைப்பதை காண முடிகிறது.

முந்தய படங்களில் துரோகம் எனும் ஒரு கருத்தினை மட்டும் கையில் வைத்திருந்த சசிக்குமாரின் படங்கள் போதிய பாரட்டையே பெற்று வந்தது. ஆனால் அப்படங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட சாதியில் நடக்கும் சம்பங்களை விவரிப்பதாக அமைத்திருந்தார். ஒரு வேளை தனது வாழ்வியல் சூழ்நிலையில் இருந்து இக்கதைகளை அமைத்திருக்கக் கூடும் என நாம் நம்பலாம். அக்கதைகளின் போக்கு நட்பின் துரோகம், குடும்ப துரோகம் என சென்றுவிடுவதால் அவரின் சாதி போதனைகள் கதையோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டது. 

ஒரு சாதியின் வாழ்வியல் முறைகளை பதிவு செய்வதை மறுப்பதற்காக இதை சொல்லவில்லை. வெங்கடேசனின் காவல்கோட்டம் போன்ற நல்லதொறு படைப்பு சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளது. காவல் கோட்டம் முழுக்க முழுக்க கள்ளர் சாதியின் வாழ்வியல் முறைகளை சரித்திர பதிவாக கொண்டுள்ளது. அச்சரித்திர நாவலின் ஒரு சிறு பகுதியை தழுவி எடுக்கப்பட படம் அரவான். அதில் நாயகன் தன் சிரசை அருவாளில் வெட்டிக் கொள்வதாக படம் முடியும்.

தேவர் சாதியினரை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் அருவாளை அதன் சின்னமாக கொண்டிருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் நேர்த்தி கடனாக இருக்கக் கூடும் என நினைக்கின்றேன். தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணியான கமல்ஹாசனும் இதை தான் சூடம் காட்டி பொட்டு வைத்திருக்கின்றார்.

தனது சாதிய விளம்பரத்துக்கு குட்டிப் புலி அம்மா மகன் பாசத்தை ‘மேக் ஆப்’ செய்து கொண்டுள்ளது. ஊதாரியாக திரியும் மகனை மெச்சோ மெச்சென்று மெச்சி கொண்டு திரிகிறார் அம்மா. ஆணி போயி ஆடி போயி ஆவணி வந்தா என் மகன் ’டாப்பா’ வருவான் என கூறும் அதே அம்மா தான். எல்லா படங்களிலும் இவர் இப்படி தான் நடிப்பார் என்பதை இதிலும் நிருபித்துள்ளார். தென் மேற்கு பருவகாற்றில் தூக்கிய அருவாளோடு அழைத்து வந்து நடிக்க வைத்திருப்பார்கள் போல. 

படத்தின் ஆரம்பமே ஒரு அருவா வெட்டு சம்பவத்தில் ஆரம்பமாகிறது. எப்படி ஆரம்பிக்கிறதோ அதே மாதிரியே முடிவும் உள்ளது. சரி ஆரம்பமும் முடிவும் தானே அருவா வேட்டு என நீங்கள் ஆனந்தபட்டுக்கொள்ள வேண்டாம். இடைபட்ட 2 மணி நேரமும் யாரவது எதையாவது கர கரவென அருத்துக் கொண்டிருக்கிறார்கள். கூடவே அந்த அரிவாள் நம் கழுத்திலும் வந்து நிற்பது காசு கொடுத்து படம் பார்க்கும் நமது பாவமாக தான் இருக்க முடியும்.

ஒரு காட்சியில் ‘நீங்க ஆடுளாம் வெட்டுவிங்களா?’ என நாயகி கேட்க ‘அவன் ஆளையே வெட்டுவான்’ என சிலாகிக்கிறார் அம்மா. இந்த படத்தின் ‘டுவிஸ்டு’ என்னவென்று கேட்கிறீர்களா. எந்த ஒரு ‘டுவிஸ்டும்’ இல்லாமல் நம்மை மண்ட காய வைத்திருப்பதே மிகப் பெரிய டுவிஸ்ட்டு. 

இந்த படத்தில் நகைச்சுவையின் பெயரிலும் சில கொடுமைகள் நடந்துள்ளன. அவற்றை வெண்திரையில் கண்டு இரசிக்கவும். இன்னும் ஓரிரு தினங்களில் ஆதித்யாவில் வந்துவிடும். ‘ரொமான்ஸ்’ என சொல்லப்படும் காட்சிகள் அனைத்தும் இளையராஜாவின் பாடல்களுக்கு குத்தகை விட்டிருக்கிறார்கள். இந்த படத்திற்காக சசிகுமார் என்ன இழவிற்கு உடல் மெலிந்துள்ளார் என்பதும் புரியவில்லை. 

வேலை வெட்டி இல்லாத மகன். அவனை போற்றி புகழும் அம்மா. அவனின் வீர தீர செயல்களுக்கு மயங்கும் காதலி. மகன் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக வில்லனின் தலையை துண்டாக அருத்து எடுக்கிறார் அம்மா. பிறகு அம்மா குலதெய்வமாகிவிடுகிறார். எங்களின் குலதெய்வங்கள் இப்படிதான் தியாகங்களின் வழி உறுவாகினர் என மெய்சிலிர்க்கும் சில வசனங்களை போட்டு நாம் அமர்ந்திருந்த சீட்டுக்கு ஒரு குண்டை போட்டு அனுப்பி வைக்கிறார்கள்.

ஆச்சி. பேச்சி, மூச்சி என கூறிக் கொள்ளும் தனது குல தெய்வங்கள் இப்படி ’தியாக’ கொலை செய்தவர்கள் என இயக்குனர் கூற முயற்சி செய்கிறார என புரியவில்லை. அப்படி இருப்பின் அவர் குறிப்பிடும் சாதியினர் வழிபடுவது கொலைகாரர்களை என்றள்ளவா ஆகிறது. சமூக முன்னேற்றத்திற்கு கிஞ்சித்தும் உதவிடாத சாதிய நம்பிக்கைகளை இன்றய தலைமுறையினரிடையே விதைப்பதாகவே இதை காண முடிகிறது. 

1990களின் இறுதியில் வெளியான THE KEYS AKKA MAGA எனும் ஆல்பத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கா மக எனும் அப்பாடல் THE KEYS மலேசிய இசைக் குழுவினரால் இயற்றப்பட்ட முதல் பாடலாகும். காலம் தாமதித்த ஒரு அங்கிகாரமாக அப்பாடல் மீண்டும் மக்களின் பார்வைக்கு வந்துள்ளது. 
பி/கு: இந்த படம் தான் பார்ப்பேன் என அடம்பிடித்து செல்பவர்கள் கூடவே ஒரு பழுத்த எழும்மிச்சை பழத்தையும் கொண்டு செல்லவும். படம் முடிந்த பின் உச்சாந்தலையில் தேய்து கொள்ள வசதியாக இருக்கும்.