Saturday, February 02, 2019

இளமை நினைவுகள் SJKT SUNGKAI


சுமார் 28-30 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இதை எழுதுகிறேன். எனது பள்ளி படிப்பை முடிக்க மட்டுமே ஏழு பள்ளிக்கூடங்கள் மாறி இருந்தேன். இதனாலேயே என்னவோ பெரிதாக நண்பர்களை சம்பாதித்துக் கொள்ளவில்லை. நாடோடி தனமான வாழ்க்கைத் தொடர்ந்து கொண்டிருப்பதனாலும் தொடரும் என்பதாலும் இன்றும் இதுவே நிலை. 

வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் நினைவில் ஆழமாக படிந்திருக்கும் என்பதில் மாற்றில்லை. சத்தியாவோடு (மணிமாறன்) குறைந்தபட்சம் 4 வயதிலிருந்தாவது நான் பழகி இருக்க வேண்டும். அப்போது கேமரன்மலையில் வசித்திருந்தோம். 'Chekco' எனும் அந்தத் தோட்டம் இப்போது புதர்கள் விழுங்கிய காடாகிவிட்டது. சத்தியாவின் தாய் தந்தையரை அத்தை மாமா என்றே அழைத்திருக்கிறேன். கிருஷ்ணன் மாமா ஒரு முறை என்னைக் காப்பாற்றியதாக கூட நினைத்திருக்கிறேன். அது வேறு கதை. 

சத்தியா கடந்த மாதம் நண்பா நம் ஆரம்பப்பள்ளியின் மாணவர் சந்திப்பு ஏற்பாடகி உள்ளது என கூறினார். அப்போது தான் சத்தியாவோடு நெடுநாட்களாக பேசவில்லையே என தோன்றியது. காலம் வாழ்வை புரட்டி போட்டிருந்தது. புலன குழுமத்தில் இணைந்த போது 7/8 வயதில் பார்தவர்களை மீண்டும் சந்தித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. நிச்சயமாக பலரும் என்னை மறந்திருக்க கூடும். நானும் பலரை நினைவில் தப்பவிட்டிருந்தேன். கேமரன்மலையில் வளர்ந்த நானும் சத்தியாவும் பேராவின் சுங்கை தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடர்ந்தோம். இருவரும் அவரவர் தாத்தா வீட்டில் தங்கி படித்தோம். 

சுங்கை தமிழ்ப்பள்ளி:

1. அதிகாலையில் குளித்து தலையை வழித்து சீவி பிரதான சாலையின் முன் காத்திருந்தால் முனியாண்டி கோவில் வாசல் பலகையில் பழய 'றா'வில் கரியால் எழுதப்பட்ட கம்போங் என்றா எனும் ஊர் பெயர் தெரியும். அங்கிருந்து சில கி.மியில் பள்ளிக்கூடம். பள்ளியின் முதல் நாள் சத்தியா அழுதான். நான் இல்லை. பள்ளிக்கூடத்தில் நான் சந்தித்த முதல் நபர் பழனி. என்னை விட 3 வயது அதிகம். பழனி ஏன் அன்று மட்டும் என் வகுப்பில் அமர்ந்திருந்தார் என தெரியாது. டீச்சர் பழனியை அண்ணன் என அழைக்கச் சொன்னது ஞாபகம் உள்ளது. பாழனியை 2004-ல் மீண்டும் பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன். இளங்கலை பயிலும் போது ஒரே ஆண்டின் மாணவர்களாக இருந்தோம். பழனிக்கு என்னை ஞாபகம் இல்லை. என்னால் அவரை அடையாளம் காண முடிந்தது. 1991/1992 ஆண்டுகளில் எனது வகுப்பின் பெயர் 1 சிவப்பு & 2 சிவப்பு. 

2. பள்ளியின் பழய சிற்றுண்டி சாலையின் அருகாமையில் ஒரு கிணறு இருந்தது. தமிழ்ப் படங்களில் பார்ப்பதைப் போல் அடித்து x2 நீர் எடுக்க வேண்டும். பின்னாட்களில் அதில் கை மட்டும் கழுவினேனா இல்லை அள்ளி பருகினேனா என பலமாக யோசித்திருக்கிறேன். அதன் சுகாதார தன்மை என்னை அழைக்கழித்தது. அந்தச் சிற்றுண்டி சாலையில் நாசி லெமாக் மற்றும் சம்பால் போட்ட குண்டு பலகாரம் தவிர்த்து வேறு ஏதும் சாப்பிட்டதாக ஞாபகம் இல்லை. 

3. வகுப்பு தலைவியின் பெயர் சண்முகவள்ளி. இவரை யாரோ சண்முகவெள்ளி என கேலி செய்து கூப்பிட அவர் அழுதுகொண்டே அந்த சிற்றுண்டி கடைகாரரிடம் என்னை நோக்கி விரல் காட்டினார். அந்த கடைகாரர் 'இரு பெல்ட்ட எடுத்துட்டு வரேன்' என சொன்னது அடிவயிற்றை கலக்கியது. அன்று முதல் பயந்துக் கொண்டு சாப்பாடு வாங்கும் ஒரு ஃபோபியா ஒட்டிக் கொண்டது.

4. பள்ளி முடிந்து பேருந்து நிலையத்திற்கு திடல் வழியே நடந்து போக வேண்டும். அகால மரணமடைந்தை எலி ஒன்று நீர்த்தார் சடங்கு செய்யப்படாமல் சில நாட்களில் கொஞ்சம் வாடையெடுத்து அத்திடலில் கிடந்தது. சீனியர் ஒருவர் அதன் வாலை பிடித்து சுழற்றி வீச எனது வெள்ளை சீருடையில் அதன் பூத உடலின் எச்சம் ஒட்டியது. கடும் துர்நாற்றம். அழுது கொண்டே விடு திரும்பினேன். அந்த சீனியர் சத்தியாவின் உறவினர். விபத்தின் காரணமாக அவர் இப்போது இல்லை என்பதை அறிகிறேன். 

5. பேருந்து நிலையம் அருகே 20 காசு கொடுத்து ஆரஞ்சு பழச் சாரு என கூறப்பட்ட ஒன்றை வாங்கிக் குடிப்பது வழக்கம். அக்கடையின் புதிய விற்பனரிடம் சத்தியா 1 வெள்ளி கொடுக்க ஒரு பெரிய பை நிறை ஜூஸ் கட்டிக் கொடுத்தார் அவர். 1 வெள்ளி என்பது சில நாட்களுக்கான பாக்கெட் மணி. மறுநாள் சத்தியாவின் முகத்தில் கடுமையான சோகம் தெரிந்தது. வீட்டில் பிரச்சனையாகி இருக்கக்கூடும். நானும் கேட்டுக்கொள்ளவில்லை.

6. வகுப்புக்கு வந்ததும் பஸ் பாஸை புத்தகப்பையில் வைத்துவிட்டு வளாகத்தில் சுற்றித் திறிவோம். கோபியும் உடன் வருவார். சுற்றுவார். கோபிக்கு இரண்டு வயது அதிகம். ஒரு முறை கழிவறை சென்று திரும்பியதும் உனது பஸ் பாஸ் எங்கே என கோபி கேட்டார். புத்தகப் பையில் தேடினேன் இல்லை. பதற்றமாகி போனது. வழி நெடுக தேடி அழைந்தேன் கிடைக்கவில்லை. வகுப்பறையின் பின் பக்க அஞ்சடியில் பஸ் பாஸ் போல காதிதம் கிடப்பதை கோபி பார்த்ததாக கூறினார். சென்று பார்த்த போது எனது பஸ் பாஸ் சில்லு சில்லாக கிழித்துப் போடபட்டிருந்தது. வேறு என்ன, அழுது கொண்டே அதை காகித்தில் சேகரித்து வீட்டுக்கு வந்து திட்டு வாங்கி 'ஃபஸல்' விளையாட்டு போல் காகிதத்தில் ஒட்டி பஸ் பாஸுக்கு உயிர் கொடுத்து பயன்படுத்தினேன். அந்த மாதம் முழுக்க அவமானமும் ஏளனச் சிரிப்புகளும் நீடித்தன. இதன் சந்தேகம் கோபியின் மீது இருந்தாலும் போதிய சாட்சியங்கள் ஏதும் இல்லை. 

7. மேற்காணும் நபரின் தந்தையார் இந்திய பிரதிநிதி கட்சியின் தலைவராக இருந்தார். தார் ரோடுகள் போடுவதற்கு முன்பான சாலை கூழாங்கற்களால் கொட்டி அமைக்கப்படிருந்தது. மேற்காணும் நபரின் தங்கைக்கும் நமக்கும் ஒரே வயது. வெவ்வேறு பள்ளிகளில் படித்தோம். பள்ளிமுடிந்து வீட்டுக்குச் சொன்று கொண்டிருந்த போது ஏதேற்சையாக அவரை எதிர்கொள்ள நேர்ந்தது. 'இது எங்க அப்பா போட்ட ரோடு. இதுல நீ நடந்து வராத' என சொல்லி கல்லை எடுத்து வீச விரல்களில் காயமானது. ஒரு சாமானியன் மீதான அதிகார பாய்ச்சல் அது. 

8. 1992-ன் ஆரம்பத்தில் சுங்கை தமிழினம் தளபதி போதையில் மூழ்கி இருந்தது. ஒரு நாள் கடைசி பாடம் முடிய போகும் மகிழ்ச்சியில் சுகேன் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தார். திடீரென 'டீச்சர் விக்னேஸ்சு ராக்கம்மா கைய தட்டு பாட்டு பாடுறான்' என சொன்னார். வகுப்பாசிரியர் பாடம் அப்போது. அவர் பெயர் விக்னேஸ்வரி என ஞாபகம். அவரும் விசாரனை இன்றி பிரம்படி கொடுத்தார். குற்றவியல் அமலாக்க சட்ட பிரிவில் மேற்கல்வியை தொடரும் போது 'hearsay evidence' எனும் சாட்சியை எந்தக் காரணம் கொண்டும் விசாரணைக்கோ அல்லது நீதிமன்ற சாட்சியமாகவோ பயன்படுத்தக் கூடாது என்பதை போதித்தனர். இந்தச் செவி வழி குற்றச்சாட்டுக்கு விசாரணையின்றி தண்டனை பெற்றதால் சுகேனையும், டீச்சரையும் அப்போதும், ராக்கம்மா கையை தட்டும் சமயங்களிலும் நினைவு கூர்ந்து இருக்கிறேன்.

9. சுரேந்திரன் வீடு சுங்கையில் இருந்து தாப்பா போகும் வழியில் சாலையோரம் இருந்தது. கடை வீடு அமைப்பிலான அந்த இடம் பேருந்தில் போகும் சமயங்களில் பார்க்கும் விதத்தில் இருந்தது. 1992க்கு பின் நான் மாற்றலாகி சென்றுவிட்டாலும் விடுமுறை சமயங்களில் சில ஆண்டுகள் சுங்கை வந்து போய் கொண்டிருந்தேன். பேருந்தில் இருந்து சுரேந்திரன் வீட்டை மட்டும் பார்த்திருக்கிறேன். சுரேந்திரன் ஒரு போதும் எதிர்பட்டதில்லை. 91/92 சமயங்களில் மழை காலத்தில் அதிகமாக வெள்ளம் ஏற்படும். பேருந்து பள்ளியை அடைய கால தாமதம் ஆகும். ஒரு முறை 'டீச்சர் ரொம்ப அடிக்கிறாங்க அதனால் தான் ஸ்கூல் வரலனு' சுரேந்திரன் சொன்னதாக வெள்ளத்தில் சிக்கி வந்த மாணவர் ஒருவர் சொல்ல. வெள்ளம் வடிந்த மறுநாள் சுரேந்திரன் வகுப்புக்கு வந்தார். வேறு என்ன நடந்திருக்கும்? 'அதே தான்'. 

10. சுரேந்திரன் வீட்டு அருகாமையில் குழந்தையம்மாள் ஆசிரியை வீடு இருந்தது. என் வகுப்புக்கு நன்னெறி கல்வி போதித்தார். தேங்காய் எண்ணெய் அப்பி அலுத்த வாரிய தலையையும், குண்டு குண்டாக இருக்கும் என் கையெழுத்தும் நல்ல உதாரணம் என வகுப்புக்கு காட்டி இருக்கிறார். சித்திரம் வரையும் போட்டியில் மோசமான வரையும் திறன் கொண்ட எனது சேவல் ஓவியத்தை தேர்வு செய்தார். அதற்காக துரைசிங்கம் எனும் அரசியல் பிரமுகரிடம் 'லூனா கலர்' பென்சில்களை பரிசில் பெற்றேன். குழந்தையம்மாள் ஆசிரியரை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. தீபாவளி அட்டை ஒன்றை எழுதி அவருக்கு கொடுத்த போது வாங்கிக் கொண்டார். அடுத்த முறை கொடுக்க வேண்டம் என்பது போல் ஏதொ ஒரு செய்தியை விளக்கி சொன்னது அப்பொழுது சரியாக புரிந்திருக்கவில்லை. 

11. படங்களை கத்தரித்து புத்தகத்தில் ஒட்டி வண்ணம் தீட்டுவதில் ஒரு அளாதி வெறி இருந்தது. ஒரு முறை அப்படி அதி தீவிரமாக படங்களை கத்தரித்து பேக்கில் இருந்து பசை எடுத்து திரும்பும் போது படங்கள் அனைத்தும் தவறி போய்விட்டன. கடுமையான தேடலிலும் கிடைக்கவில்லை. பக்கத்தில் இருந்த சாந்தி அதை எடுத்ததாக கூறி அவரிடம் இருந்த படங்களை அபகரிக்க முயற்சித்தேன். பஞ்சாயித்து தீர்க்க வந்த டீச்சர் முந்தய பட கத்தரிப்புகளை காட்டி சாந்தி மிக நேர்த்தியாக படங்களை கத்தரித்து இருப்பதாகவும், எனது கத்தரி போடும் திறன் மிக மோசமாக இருப்பதாகவும் பகுத்தாய்ந்து தீர்ப்பை சாந்திக்கு சாதகமாக அளித்தார். அந்த படங்கள் எனது நோட்டு புத்தகத்தின் பயன்படுத்தப்படாத ஏடுகளின் இடுக்கில் சிக்கி இருந்ததை நான் கவனிக்கவில்லை. தவறு என் பக்கம். அந்த ஆசிரியரின் அசாத்திய தீர்ப்பை நினைத்து வியக்கிறேன்.

12. தோழர் வனிதா அதீத மதி கூர்மை கொண்டவர் என்பதாலும் சிட்டி ரோபோவை போல் எல்லா பாடங்களையும் சட்டென கரைத்துக் குடித்து சிறப்பு தேர்ச்சி பெற்றவராக நினைவில் நிற்கிறார்.

13. ஜோன்சன் வகுப்பு தலைவர் என்பதால் நினைவில் உள்ளார். ஜெகதீசன்/ ஜெகதீஸ்வரன் இந்த பெயர் கொண்டவரை புகைப்படத்தில் அடையாளம் காட்ட முடியும். நலினியின் பெயரை மறந்திருந்தேன் இருந்தும் அவர் புன்னகை ஞாபகத்தில் உள்ளது. சண்முகவள்ளி பக்கத்தில் நிற்கும் மாணவிக்கு (பெயர் தெரியவில்லை) ஏனோ என்னை பிடிக்கவில்லை. அவர் கொண்டு வந்த 'picking stick' விளையாட்டுப் பொருளை என்னோடு மட்டும் பகிர மறுத்துவிட்டார். தினேஸை ஒரு முறை தானா ராத்தாவில் சந்தித்தேன். அவருக்கு என்னை ஞாபகம் இல்லை. 

14. தலைமையாசிரியர் பெயர் திரு கிருஷ்ணன் என்பதாக ஞாபகம். அவருக்கு ஒரு தங்கப் பல் இருந்தது. மாணவர்கள் வெந்நீரில் குளித்துவிட்டு பள்ளிக்கு வர வேண்டும் என்பதை நான் படித்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் சபை கூடத்தில் உரையாற்றி இருக்கிறார். இந்த சபைக் கூடத்தில் 'தூப்பாக்கி துப்பாக்கி' என மேல் வகுப்பு மாணவர்கள் அடிக்கடி ஒப்புவித்தது திருக்குறள் என்பது அச்சமயம் எனக்கு புலப்படாமல் இருந்தது.  எங்களோடு பேருந்தில் வரும் ஆசிரியர் ஒருவர் என்னை 'சோத்து பானை' எனக் கூறி திட்டினார். சேத்து பானை எனும் வார்த்தையை திட்ட பயன்படுத்த முடியும் என்பது ஆச்சரியமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அவரை ஈப்போவில் சந்தித்த போது  பணி ஓய்வு பெற்றிருந்தார்.

15. ஒரு முறை தாத்தாவுக்கு உடல் நலம் கடுமையாக பாதிப்பு அடைந்திருந்தது. மறுதினம் தேர்வு நாள். தாத்தாவை தாப்பா மருத்துவ மனையில் சேர்த்தார்கள். அன்றய தினம் வீடு திரும்ப நள்ளிரவு ஆகி இருந்தது. உறக்கம் பிடிக்கமால் காய்ச்சல் ஏற்பட்டது. மறுதினம் பள்ளி நோக்கி நடந்துக் கொண்டிருந்த போது திடீரென வாந்தி வந்தது. பின்னால் இருந்து வேகமாக வந்த பெண் மாணவி என்னை பெயர் சொல்லி அழைத்தார் 'காய்ச்சலா?, இன்னும் வாந்தி வர மாதிரி இருக்கா, டீச்சர் கிட்ட கூட்டிட்டு போகவா' என கேட்டார். நான் தலையசைத்து விட்டு வகுப்புக்கு வந்துவிட்டேன். அந்த சீனியர் மாணவி மிகவும் அழகாக இருந்தார்.

முற்றும்.

பி/கு: நண்பர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள். 

Friday, February 01, 2019

அரசர் விரும்பிய சீன பேரழகிகள்

பண்டைய சீனாவின் பொற்காலமாக கருதப்படுவது தாங் பேராட்சி காலமாகும். நாடும் வீடும் செழித்தது. வணிகம் வாணிபம் பெருகியது. பல வெளிநாட்டவரும் அப்போதைய தாங் பேராட்சியின் குடையில் வசிக்க எத்தனித்தனர்.

பண்டைய வாள் வடிவமைப்புகளிலும் தாங் பேரரசின் வாள்கள் மிக வடிவாக இருக்கும். ஒவ்வொரு பேரரசின் போதும் வேவ்வேரு மாதிரியான வாள்களை பயன்படுத்தினார்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் தாங் பேரரசு காலத்து வாள்கள் பிடிக்கும். இதை வேறு பதிவில் பார்க்கலாம். Tang Dynasty Swords என கூகித்தால் நிறைய செய்திகள் கிட்டும். நீங்கள் ஷீ-ஆன் நகர் சென்றால் சீன அரசின் சுடுமட்சிலை ஆலையிலும் பெருட்காட்சியகத்திலும் இந்த வாள்களை இரசித்து மகிழலாம்.

வடிவான வாள்களை மட்டும் அல்ல வடிவான பெண்களையும் விரும்பினார்கள் அக்காலத்து அரசர்கள். கணக்கில் அடங்க அந்தபுரத்து மங்கைகள். தாங் காலத்தில் பேரழகி போட்டிகளும் நடத்தப்பட்டன. நாட்டில் இருக்கும் 12 முதல் 16 வயதிலான மங்களைகள் அதில் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுபவர் அரசரின் நாயகிகளில் ஒருவராவார். தனது ஒட்டு மொத்த குடும்பத்தின் சுகபோக வாழ்வுக்காக இத்தகைய போட்டிகளில் கலந்துக் கொண்டவர்கள் ஏராளம். 

செழிப்பான பெண்களே அழகானவர்கள் என அடையாளப் படுத்தப்பட்டனர். செழிப்பென்றால் எப்படி? தொப்பை போட்ட கன்னங்கள், மடிப்பு விழுந்த கழுத்து, சற்றே முந்திய வயிறு இவை யாவும் அழகி போட்டியின் முக்கிய கூறுகள். ஒல்லியான பெல்லி கொண்ட பெண்கள் ஓரம்கட்ட பட்டனர். சதை செழித்த பெண்கள் அழகானவர்கள் மட்டும் அல்ல, ஆரோக்கியமும் கொண்ட்டவர்களாகவும், அதிக வாரிசுகளை பெற கூடியவர்களாகவும் கருதப்பட்டனர். போட்டி்யில் வென்ற சில அழகிகளின் சிலைகள் படத்தில் காணலாம்.

கீழ்காணும் படங்கள் எனது சீ-ஆன் பயணத்தின் போது அங்குள்ள பொருட்காட்சி சாலையில் எடுக்கப்பட்டது. இந்த மாதிரியான சிலைகளை இன்றும் விற்பனை நிலையங்களில் காணலாம். பொரும்பான்மையான சயமங்களில் அதன் அழகியல் ஈர்ப்பு குறைவால் கடந்து விடுவோம். அடுத்த முறை இச்சிலைகளை காணும் போது அவை பேரரசர் விரும்பிய அழகிகள் என்பதை நினைவு கூறுங்கள்.




Wednesday, January 30, 2019

மகாத்மா காந்தி கொலை வழக்கு

வாசகர்கள் தவறவிடக் கூடாத நூல் இது. காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான கதைகளையும், செய்திகளையும், ஆவணப் படங்களையும் பல விதங்களில் திரையில் கண்டும் வாசித்தும் இருப்போம். உலகச் சரித்திரத்தில் மாற்றம் ஏற்படுத்திய 100 பிரபலங்கள் எனும் நூல் உண்டு. அதில் காந்தியின் பெயர் இருக்காது. அதற்கான காரணத்தை முன் வைக்கும் அந்நூல் ஆசிரியர் காந்தியின் அரசியல் கொள்கைகள் அவரின் இறப்பிற்குப் பின் யாராலும் முன் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருப்பார். ஆனால் காந்தியின் கொலைக்கு முக்கியக் காரணம் அவரது கொள்கைகள் தான்.

நாம் இதுவரை பார்த்த, வாசித்தக் கதைகள் யாவும் காந்தியைச் சார்ந்தவகைகளாக இருந்திருக்கும். இந்நூல் முழுக்க காந்தியைக் கொல்ல வேண்டும் எனும் தீவிரக் கொள்கை கொண்ட தீவிரவாத கும்பலைச் சுற்றிய செய்திகளை நமக்கு அளிக்கிறது. சுதந்திர இந்தியாவில் ஹிந்துத் தீவிரவாதம் தலையெடுக்கக் காரணம் என்ன? கோட்ஸ்சே கூலிக்கு கொலை செய்தவராயின் தனது அடையாளத்தை மறைத்து கொலை செய்திருக்கலாம்! ஆனால் கோட்ஸ்சே எந்த வித அடையாள மறைப்பும் இன்றி காந்தியைக் கொலைச் செய்கிறார். காந்தியக் கொன்றப் பின் தான் பிறவிப் பயனடைந்துவிட்டதாக மகிழ்ச்சி கொண்டு தண்டனைக்குத் தயாராகிவிடுகிறார்.

தான் காந்தியைக் கொன்றது அரசியல் காரணங்களுக்கே எனக் கூறும் கோட்ஸ்சே தனது செயல்களில் தெளிவாகவே ஒவ்வொரு முடிவுகளையும் எடுத்திருக்கிறார். எந்தக் கோனத்திலும் சிந்தனை பிசிகியவராக அவரை அனுகிவிட முடியாது. எந்த அளவிற்கு ஹிந்து மதப் பற்று இருந்ததோ அந்த அளவிற்கு இஸ்லாமிய வெறுப்பும் அவரிடம் இருந்திருக்கிறது. காந்தி கண்டெடுத்த இந்திய சுதந்திரத்தால் பாக்கிஸ்தான் எனும் ஓர் இஸ்லாமிய நாடு உறுவானது. ஆனால் இந்தியா ஓர் இந்து தேசமல்ல. மதசார்பற்ற நாடாக இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனும் காந்தியின் கொள்கைகள் கொட்ஸ்சேவை மிகையாகவே கொதிப்படையச் செய்தன. காந்தியின் கொள்கைகளுக்கு எதிரான இந்து மகாசபையினரின் எதிர்ப்புகளும் வாதங்களும் தேசிய நிலையில் கவனம் பெறாமல் போனது மேலும் அவர்களின் கோபத் தீயில் நெய் வார்த்தது.

காந்தியின் கொலை வழக்கில் தூக்கிலடப்பட்ட நபர்கள் இருவர். ஆயுல் தண்டனை விதிக்கப்பட்டோர் மேலும் சிலர். காரணம் அது திட்டமிடப்பட்டக் கூட்டுச் சதி படு கொலையாகும். இந்தக் கொலைக்கு முழுமையாக தானே பெறுப்பேற்பதாக கோட்ஸ்சே வாதிட்டிருக்கிறார். காவல் துறையின் விசாரணை இக்கொலையின் வேர் இந்து மகாசாபா அமைப்பில் இருந்து உறுவானதை கண்டறிகிறார்கள். கொலைச் சதியில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். குற்றம் சாற்றப்பட்ட ஒவ்வொருவரின் பின்னனியும் அவர்களின் ஆரம்பக் காலம் முதல் அலசி ஆரயப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.

காந்தியைச் சுடப் பயன்படுத்தப்பட்டது ஓர் இத்தாலிய நாட்டுத் துப்பாக்கி. அது செய்யப்பட்ட ஆண்டு முதல் இந்தியா வந்து செர்ந்தது வரை என ஒவ்வோரு வரியும் சுவாரசியமான விளக்கங்களோடு விரிகிறது இந்நூல். இந்நூல் உறுவாக நிறையவே வாசித்து மேற்கோள் காட்டி இருக்கும் ஆசிரியர், வசகன் மேலும் தேடி பிடித்து வாசித்து அறிந்து கொள்ள தூண்டுதல்களையும் வழிவகுத்திருக்கிறார். நான் அவ்வாறே நூலின் வாசிப்பை நிறுத்தி இணையத்தில் சில தகவல்களை தேடி பிடித்து வாசித்து மீண்டும் நூலினைத் தொடர்ந்தேன். உலகில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட நான்காவது நாடு பாக்கிஸ்தான். சிந்துவெளி நாகரீகம் தோன்றிய சிந்து நதி தற்போது இருக்கும் இடமும் பாக்கிஸ்தான் தான்.

கோட்ஸ்சே தனது தரப்பு வாதத்தை எழுதி வைத்து சில மணி நேரங்கள் நீதிமன்றத்தில் வாசித்திருக்கிறார். வழக்கின் மேல் முறையீட்டின் சமயத்திலும் அதே போல் சில மணி நேரங்கள் தன் தரப்பு வாதத்தை வாசித்திருக்கிறார். வழக்கைப் பார்த்த பலரும் அவரின் பேச்சாற்றலில் உணர்ச்சிவயப்பட்டதாகவும், அந்த பார்வையாளர்களின் கைகளில் பேனா கொடுத்திருந்தால் கோட்ஸ்சே கோஸ்டியினர் நிரபராதிகள் என தீர்ப்பெழுதி இருப்பார்கள் என பின்னாட்களில் அவ்வழக்கின் நீதிபதி தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். கோட்ஸ்சேவின் defense வாதம் பின்னாட்களில் அவரின் தம்பி கோப்பால் கோட்ஸ்சோவால் May It Please Your Honor எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

நாதுராம் கோட்ஸ்சேவின் சாம்பல் இரகசியமாக கரைக்கப்படது என ஆசிரியர் எழுதியுள்ளார். கோட்ஸேவின் கடைசி ஆசை தனது சாம்பல் பாக்கிஸ்தானில் இருக்கும் சிந்துநதியில் கரைக்கப்பட வேண்டும் என்பதே. காந்தியின் சாம்பல் தூவப்பட்ட இந்திய தேசத்தில் தமது சாம்பல் கரைக்கப்படுவதை கோட்ஸ்சே விரும்பவில்லை. அது நடந்தேறியதா என்பது நமது தேடலுக்குறியது. காந்தியின் கொலை வழக்கு ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் தண்டனை காலம் முடிந்து வந்த பின்பும் சிறப்புக் கமிஷனால் மறு விசாரணை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் என்னை வெகுவாக கவர்த நூல் இது.

Tuesday, January 29, 2019

மயக்குறு திணை - சிறுகதை


”இங்க தான் படிச்சிங்களா? சின்ன வயசுல இந்த எஸ்டேட்ல தான் இருந்திங்கனு கேள்விப்பட்டேன். உள்ள வாங்க.” நுழைவாயில் பக்கம் வந்திருந்த தலைமையாசிரியர் அழைத்தார். ஆங்கிலத்தில் தான் உரையாடினார். 

”ஆமாம் சார், 91 பேட்ஜ், அங்க தான் வீடு இருந்தது, இப்போ உடைச்சிட்டாங்க போல, ஆறாவது பரிட்சை முடியறதுக்கு முன்னாடி இங்கிருந்து கிளம்பிவிட்டடேன்” உறுதிபடுத்தும் வகையாக சிரித்துக் கொண்டு அவரின் கரம் குலுக்கினேன். அதற்குள் பச்சை சாயம் பூசிய தேட்டத்துப் பலகை வீடிருந்த திசையைக் காட்டியிருந்தேன். காட்டுச் செடிகளின் புதர் நான் சுட்டிய திசையில் மண்டியிருந்தது.

”இப்போலாம் வெளிநாட்டுக்காரங்க தானே தேட்டத்து வேலை பாக்குறாங்க, குடும்ப அமைப்பிலான வீடுகளுக்குத் தேவை குறைஞ்சிட்டதால அதை எல்லாம் காலி செய்துட்டாங்க. நீங்க ஏன் கிளம்பிட்டிங்க?” அணிவகுப்புத் திடலில் நடந்தபடி பேசினார்.

”ஈப்போவுக்கு படிக்க போய்ட்டேன் சார். இங்க மறுபடி வருவேனு நினைச்சி கூட பார்க்கல”.

”நம்ம மக்கள் அதிகமா டவுன் பக்கம் போயிட்டதால தான் நிறைய பள்ளிக்கூடங்கள மூட வேண்டியதா போச்சு. இந்த ஸ்கூல பாருங்க படிக்கிற பிள்ளைகள பாதி பேர் அஸ்லிகார பிள்ளைகள்.” மொத்தம் 18 பேர் மட்டும் படிப்பதாக கூறினார். இந்தக் காரணத்தினால் தான் நான் பள்ளியைவிட்டுச் சென்றிருக்கக்கூடுமென தலைமையாசிரியருக்கு சுய தீர்மானம் இருந்தது. உண்மையில்லை தான். நான் அவரை மறுத்துக் கூறவும் விரும்பவில்லை.

பள்ளி வளாகத்தைக் கண்களால் அளந்தேன். மொத்தப் பள்ளியும் இளைத்துவிட்டதைப் போல் ஓர் உணர்வு. வருடத்தில் ஒரு முறை மலைத் தேனீக்கள் கூடுகட்டிச் செல்லும் பெரும் பாறை ஒன்று வளாகத்தில் இருந்தது. பாறை முழுக்க வண்ணம் பூசி மலாய் மொழியில் வாசகம் எழுதி இருந்தார்கள். பாறை சிவப்பும் வெள்ளையுமாக நிறம் மாறி இருந்தது. மலைத் தேனீக்கள் இனி வருவது சந்தேகமே.

பாறைக்கு முன் அணி வகுப்புத் திடல். அதை ஒட்டி பிரிட்டிஸ் காலத்தில் கட்டிய பலகை கட்டிடம். அதைக் கொட்டகை என்றும் கிண்டலடிப்போர் உண்டு. 1947-ல் இருந்து தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ள இடம். மறைப்புப் பலகைகளை வைத்து வகுப்புகளைப் பிரித்து பாடம் நடத்தினார்கள். இப்போதும் அப்படியே போதிக்கப்படுவதை காண முடிந்தது.

கொஞ்சம் புத்தகங்களோடு நூலகம் இருந்த இடம் புதுப்பித்த தலைமையாசிரியர் அறையாக மாறி இருந்தது. 1992-ஆம் ஆண்டு நிதி திரட்டி கட்டிய செங்கள் கட்டடத்தை ஆறாம் வகுப்பிற்கும் நூலகத்திற்கும் என வகுத்திருந்தார்கள். ஆறாம் வகுப்பு அப்படியே இருந்தது. நூலகத்தில் தலைமையாசிரியர் குடி பெயர்ந்திருந்தார்.

”கொஞ்சம் இருங்க சார், ஸ்கூல பார்த்துட்டு வந்திடுறேன்.” நான் கொண்டு வந்திருந்த பையை அவர் அறையில் வைத்துவிட்டு பக்கத்தில் இருந்த ஆறாம் வகுப்பு முன் சென்றேன். தன்னிரக்க உணர்வு என்னைக் கலங்கச் செய்தது. என் மனதிற்குள் வைத்துக் கொண்ட நினைவுகள் முயல் குட்டிகளாக வெளிவர எத்தனித்தன.

”உன்ன ஆறு ஏ எடுக்க ஒழுங்கா படிடானு சொன்னா... என்ன பண்ணிகிட்டு இருக்க...” சந்திரன் வாத்தியார் என் இடது கையைப் பிடித்துக் கொண்டு கண்மண் தெரியாமல் முதுகு, பிட்டம், கால் என பிரம்பால் விலாசி வெளியே விரட்டியது இங்கே தான்.

நடந்தபடியே திடல் பக்கம் வந்திருந்தேன். கொஞ்சம் மழைப் பெய்தாலும் சகதியாகிவிடும் புல் வெளி. சகதியாக இருந்தாலும் விளையாட்டை விடக்கூடாது என்பதில் தின்னம் இருந்தது. அதற்காகவேனும் நெகிழியிலான காலனிகளையே பலரும் பயன்படுத்தினோம். துவைத்து துடைத்தாலே காய்ந்துவிடும். விலையும் மலிவு. துணியிலான காலனிகள் அதிக விலை மட்டுமல்ல, கேமரன் மலைக் குளிரில் சுலபத்தில் காயாது.

திடல் முடியும் இடத்தில் ஒரு மேடு தொடங்கி கொஞ்சம் நில இடவெளியும் பின் வேலியும் இருந்தது. வேலியை ஒட்டிய 'ரெஸ் பேரி' மரம் இன்னமும் அங்கேயே இருந்தது. அதே உயரம். 23 வருடங்களுக்கு முன் பார்த்த அதே செழிப்பு. என் நினைவுகளைப் போலவே எந்த மாற்றமும் இல்லாமல்.

அதன் பழங்களைச் சியாமளாவிற்காகவே பறித்துச் செல்வேன். ”புளிக்குதுடா இன்னும் பழுக்கல”. கருமை குறைவான ரெஸ் பேரி காயைக் காட்டி அவள் முகத்தைப் புளிப்பது என்னை மகிழ்ச்சிபடுத்தியது. ஆறாம் ஆண்டில் சியாமளா ஒவ்வொரு நாளும் அழகாகி கொண்டிருந்தாள்.

”டேய் மாற, சியாமளா உன் ஆளா டா?” என அருள் நேரடியாக விசாரித்தான். அந்தக் கேள்வி ஒரு உளக் கிளர்ச்சியைக் கொடுத்தது. சக மாணவர்களின் கற்பனை இதயக் குறியில் அம்பு விடும் தேவனாக என்னை மாற்றிக் கொண்டிருந்தது. அதை நான் மிகுதியாக விரும்பினேன்.

பரிட்சையில் ஆறு ஏ எடுப்பதாகக் கூறி அப்பாவிடம் முன்கூட்டியே ஒரு பி.எம்.எக்ஸ் சைக்கிளை லஞ்சம் வாங்கி இருந்தேன். தூரமில்லாத வீட்டுக்கு கூட அந்தச் சைக்கிளை ஓட்டிச் செல்வது ஒரு மிதப்பைக் கொடுத்தது. சியாமளா கூட எனது சைக்கிளை மிரள பார்த்திருக்கிறாள். பள்ளி முடிந்து அவளை சைக்கிளின் பின் அமர்த்தி மிதித்துக் கொண்டு ரகு கடையில் டியூப் ஐஸ் வாங்கித் தின்பதும் சில வேளைகளில் நடந்தது.

”வேகமா ஓட்டாத டா, பயமா இருக்கு” என என்னை இருக்கிப் பிடிக்கும் ஸ்பரிசத்தைக் காதல் மனம் கொண்டவர்களால் மட்டுமே உணர முடியும். என் மீது கொண்ட அதீத ஆசையிலாயே சியாமளா அன்யோன்யமாக பழகுவதாக கருதினேன். அவளின் மனதை புரிந்துக் கொள்வதில் எக்கச்செக்கமான குழப்பங்கள் இருந்தது. காதலை உறுதி படுத்தாத வரையில் அது சிக்கலான விசயம் தானே.

கணேசன் அதற்கு ஒரு தீர்வைத் தந்தான். ”ஒரு லெட்டர்ல நீ எல்லாத்தையும் எழுதி சியாமளா கிட்ட கொடுத்திடு, எழுத்திட்டு லெட்டர்ல பவுடர தூவிவிடு, அப்ப தான் லெட்டர் நல்ல வாசமா இருக்கும்” இடைநிலைப் பள்ளியில் இருக்கும் அவன் அண்ணன் அப்படிச் செய்ததாகக் கூறினான். அதுவே எனக்கும் நல்ல யோசனையாக தோன்றியது.

நல்ல நாள் பார்த்து என் கடைசி காதல் கடித்தத்தை சில பல பிருமாண்டங்களோடு அலங்கரித்து முடித்தேன். இடைவேளை நேரம் சியாமளாவிடம் அதைக் கொடுத்த போது அவள் வேகமாக அழ ஆரம்பித்திருந்தாள். அந்த நாள் என் வாழ்வின் பேரவலம் ஆனது. கதவின் முன் காவலில் இருந்த கணேசன் காணாமல் போயிருந்தான்.

வகுப்பாசிரியர் சந்திரனுக்குத் தான் முதலில் தெரிந்தது. அதன் பின் ஒரு பள்ளிக்கூடத்துக்கே அது பேசு பொருளாகி போனது. சந்திரன் ஐயா தன் பிரம்பாயுத்தை என் மீது பிரயோகிக்க ஆரம்பித்திருந்தார்.

”இனி நீ ஸ்கூல் பக்கமே வரக் கூடாது” அவர் தூக்கியெரிந்த என் பள்ளிப் பையின் அடிவயிரு கிழிந்து நூல்கள் சிதறின. என் அப்பாவுக்கும் இந்த விசயம் தெரிந்து இடைவார் பூஜை செய்து சில நாட்களில் என்னை ஈப்போவில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார்கள். நான் கடைசியாக பார்த்தது சியாமளாவின் அழுத முகம் தான்.

“என்ன மாறன் சார்' இங்கயே நின்னுட்டிங்க?” தலைமையாசிரியர் என் பின்னால் நின்றிருந்தார்.

“பழைய ஞாபகம் வந்திடுச்சு சார்”, துளிர்த்த ஞாபகங்களை மனக் கிணற்றில் மூடி வைத்துப் பேச்சை தொடர்ந்தேன்.

”இங்க இன்னும் பூசை போடுறாங்களா சார்?” திடலின் பக்கவாட்டில் பார்க்க அந்த மாரியம்மன் கோவில் முழுதாகத் தெரிந்தது. அதன் முன்னிருந்த தார் சாலையில் கவ்வாத்து செய்த தேயிலைகளைக் கழிவு பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

”மியான்மார்கார பையன் ஒருவன் விளக்கு போடுறதா சொல்றாங்க. வருசம் தவறாம திருவிழாவுக்கு மட்டும் தான் ஜனம் கூடுது”. கோவிலுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் ஏறக்குறைய ஒரே வயது தான். பல சிறு வழிபாட்டுத் தளங்கள் பராமரிப்பு இன்றி தடம் தெரியாமல் போனதாகச் சொன்னார்.

”Step Back in Time புத்தகத்துல இந்த தோட்டத்த உறுவாக்க தாப்பா வழியா கோமரன்மலைக்கு தமிழ் சஞ்சிக் கூலிகள் நடந்தே வந்ததாக குறிப்பிட்டிருக்காங்க. அதை எழுதினது இந்த தோட்ட முதலாளி தான். நாம விட்டுடோம் சார்”.

”பொருளாதார பேரலையில் நம் சமூகத்தின் இடப் பெயர்வும் தவிர்க்க முடியாது தான் மாறன். எதுவும் நம் கையில் இல்லை. சரி மேலிடத்தில் இருந்து நீங்கள் வந்த விசயத்தை சொல்லலையே”. துரித 'மைலோ' பானத்தை கப்பில் கொட்டி சுடுநீர் நிறப்பி என் முன் நகர்தியபடி கேட்டார்.

”உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச விசயம் தானே சார். இது இந்தப் பள்ளிக்கான இரண்டாவது கடிதம்.”

”மாணவர்களைப் பக்கத்துப் பள்ளிக்கு அனுப்பிட்டு இதை மூடிடலாம்னு சொல்றாங்களா? நீங்க படிச்ச இடமாச்சே. தீட்டின மரத்திலேயே கூர் பாக்குறிங்களே மாறன்”.

”எனக்கு இங்கு வேலை நியமனம் இல்லாதிருந்தால் இந்த விசயங்கள் தெரியாமல் போயிருக்கலாம். நான் வசித்த, படித்த இடம் என்பதாலேயே பார்க்க வந்தேன். நான் அரசு இயந்திரத்தின் தூது புறா மட்டுமே. குறைவான மாணவர்கள். பக்கத்துப் பள்ளியில் சேர்ந்துக் கொண்டால் ஒரே பள்ளிக்கான செலவில் சேரும்.” 

”வேறு ஏதும் செய்ய முடியாதா?” 

”பள்ளியை மூடாதிருக்க காரணங்களைக் குறிப்பிட்டு மறுபரிசீலனைக்கு கோரிக்கை வைக்கலாம், முதல் கடிதத்துக்கு அப்படி தான் செய்திருந்திங்க”.

”இன்னும் ஓரிரு வருஷம் தாக்கு பிடிக்குமா?” அந்தக் கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை.

”சரி சார் கிளம்புறேன், நிறைய வேலை இருக்கு”.

வேலிக்கு வெளியே இருந்த வாகனத்தை நோக்கி நடந்தேன். இடைவேளை நேரத்தில் பாரதியார் பாடலை இசைக்கவிட்டிருந்தார்கள். ’பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா, நிந்தன் பச்சை நிறத் தோன்று தையே நந்தலாலா’ என யோசுதாளின் குரல் இனித்துக் கொண்டிருந்தது. என் எதிரே ஓடிவந்த மாணவனின் கையில் சில ரெஸ் பேரிகள் இருந்தன. அவை இன்னும் பழுத்திருக்கவில்லை. 

–முற்றும்- 

ஜனவரி 2018

*நன்றி மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை.

Friday, January 25, 2019

Kra Isthmus Canal (க்ரா கால்வாய்) - தீவாகும் தீபகற்பம்



இந்தியப் பெருங்கடலில் இருந்து தென் சீனக் கடலுக்கானப் பயணத்தை இணைக்கும் மிகக் குறுகிய கடல் வழி பாதை மலாக்கா நீரிணை தான். ஆண்டுக்கு 2 இலட்சம் கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியே பயணம் செய்ய முடியும். இன்றைய நிலையில் 120000 வர்த்தக கப்பல்கள் இந்த நீரிணையில் உலக நாடுகளின் பொருளாதாரத்தின் ஒரு பகுதியைச் சுமந்துச் சென்றுக் கொண்டுள்ளன. அந்தி வேளைகளில் தெலோக் கெமாங் (Teluk Kemang) கடற்கரையில் நின்று காண்கையில் கடலின் முதுகில் தொடர் வண்டிகளைப் போல் கப்பல்கள் ஊர்ந்து கொண்டிருப்பதைக் காண முடியும். உலகளாவிய நிலையில் அதிகமான கப்பல் போக்குவரத்துக் கொண்ட கடல் பகுதிகளில் ஒன்று மலாக்கா நீரணை.

1677-ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம். தாய்லாந்து என அறியப்படும் தேசம் அன்று அயோத்தியப் பேரரசு (Ayutthaya Kingdome) எனப் பெயர் கொண்டு விளங்கியது. இன்றைய தாய்லாந்து பூலோக வரைப் படம் போல இல்லாமல் அதன் இராஜாங்கம் மியன்மார், லாவோஸ், மலாயா என பரந்துபட்டிருந்தது. ஆசிய கண்டத்தையும் மேற்குலக தேசங்களையும் இணைக்கும் வர்த்தக மையமாக ஆயோத்திய தேசம் அமைந்ததால் சொல்வ செழிப்போடு விளங்கியது.

அதை ஆட்சி செய்த ராமபோதி அரசருக்கு ஒரு யோசனைத் தோன்றியது. தனது அரசவையில் கலந்தாலோசித்தார். தென் தாய்லாந்தின் வளைகுடாவை ஒட்டி இருக்கும் சொங்கலா (Shongkhla) எனும் நகரில் இருந்து அந்தமான் கடல் பகுதியில் இருக்கும் மரிட் எனும் கடற்கரை நகருக்கு நீர் வழிப் பாதை ஏற்படுத்த முடியுமா என்பது தான் அரசரின் சிந்தனை. அப்போதைய தொழில்நுட்பத்தால் அது சாத்தியப்படவில்லை.

அதைத் தொடர்ந்து பல நூற்றாண்டுகளின் கால இடைவெளியில் அந்த நீர் வழிப் பாதைக்கான முயற்சிகள் சாத்தியப்படுமா என பலரும் முயன்றுள்ளார்கள். அன்றய தாய்லாந்து மன்னர்கள் இராணுவத்தை வழுபடுத்துவதற்காகவே க்ரா கால்வாயை உருவாக்க நினைத்தார்கள். மேற்கு உலக காலணியாதிக்கம் ஆசிய நாடுகளெங்கும் கை ஓங்கி இருந்த சமயம் க்ரா கால்வாய் அமையாமல் இருப்பதே தன் நாடுக்குப் பாதுகாப்பு எனக் கருதியது தாய்லாந்து.

சூவேஸ் கால்வாயை வெற்றிகரமாக அமைத்துக் கொடுத்த Ferdinand de Lesseps, 1882-ஆம் ஆண்டு தாய்லாந்து வந்தார். க்ரா கால்வாயை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதே அவரின் நோக்கம். நாட்டின் பாதுகாப்பு பொருட்டு தாய்லாந்து மன்னர் அந்த ஆய்வு மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை. பிரிடிஸ் காலணியாதிக்கத்தில் சிங்கபூர் உலகப் பிரசித்தி வாய்ந்த துறைமுக நகரமாக இருந்தது. அதன் பின் உண்டான பிரிடிஸ் தாய்லாந்து ஒப்பதந்தபடி க்ரா கால்வாயை அமைக்க மாட்டேன் என சூடம் அடித்து சத்தியம் செய்துக் கொடுத்தது தாய்லாந்து.

சீனாவின் தற்போதைய மாபெரும் திட்டங்களில் ஒன்று One Belt One Road (OBOR) திட்டமாகும். கடந்த ஆண்டில் இதன் ஆதிகாரபூர்வ மாநாட்டுக்குச் சுமார் 43 நாட்டுத் தலைவர்களின் வருகையை முன்னிட்டு ஒட்டு மொத்த பெய்ஜிங்கும் சாலை அடைப்பால் ஸ்தம்பித்து போனது. இந்த ஓபோர் திட்டத்தில் ஓர் அம்சம் கடல் வழி பட்டுப் பாதை (Maritim Silk Road). இதை சாத்தியப் படுத்த தாய்லாந்தின் வாலைத் துண்டிக்க வேண்டும். அதாவது மலேசியாவின் தலைக்கு மேலே ஒரு சிறுக் கோடு போட்டுவிட்டால் இரு மாபெரும் கடல் பகுதிகளை இணைத்துவிடலாம்.

இப்படி ஒரு கால்வாய் அமைக்கப்படுமானால் அது க்ரா கால்வாய் என அழைக்கப்படும். வர்த்தகக் கப்பல்கள் மலாக்கா நீரணை வழியே சிங்கப்பூரைக் கடந்து தென் சீனக் கடலில் நுழையும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலை இருக்காது. அந்தமான் கடலில் இருந்து நேராகத் தாய்லாந்து வளைகுடா வழி தென் சீனக் கடலுக்கு போய்விடலாம். இதனால் சுமார் 1000கிலோ மீட்டர் பயணத் தூரத்தை மிச்சம் பிடிக்க முடியும். மொத்தப் பயண நாட்களில் 2 அல்லது 3 நாட்கள் குறைந்துவிடும்.

தாய்லாந்து இந்தத் திட்டத்தின் வழி பொருளாதார வளர்ச்சியும் இலாபமும் பார்க்க முடியும். இந்தக் கால்வாயை உருவாக்க நான்கு பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று தேர்வு செய்யப்படலாம். வேண்டிய அளவிலான கால்வாய் அகலத்துக்கு ஹைட்ரஜன் வெடி மருந்துகளை வைத்துக் கொண்டு வந்தால் இருபக்கக் கடல்களையும் இணைத்துவிடலாம்.

2005-ஆம் ஆண்டுக் கசிந்தத் தகவலின் அடிப்படையில் சீனா இந்தத் திட்டத்தை 10 ஆண்டுகளில் செய்து முடித்துவிடலாம் என்கிறது. 30 ஆயிரம் ஆள் பலமும் 25 பில்லியன் டாலர் பணமும் இந்தக் கால்வாய் திட்டத்தைச் சாத்தியப்படுத்த போதுமானதாகக் கூறப்படுகிறது. க்ரா கால்வாயை அமைப்பதின் மூலம் ஆசிய கண்டத்தின் பல நாடுகள் உலக நாடுகளுடனானக் கடல் வர்த்தகத்தைக் குறைந்த செலவில் ஈடுகட்ட முடியும்.

ஆனால் தாய்லாந்திடம் ஏதோ ஒரு தயக்கம் தொடர்ந்து இருந்துக் கொண்டே உள்ளது. க்ரா கால்வாய் திட்டம் சாத்தியப்படும் என்றால் தாய்லாந்தின் தென் கோடியில் இருக்கும் நான்கு மாநிலங்கள் அதன் பெருநிலப் பகுதியில் இருந்துத் துண்டித்துப் போகும். இயற்கைப் பேரிடர்கள் கூட நிகழலாம். சீனா தன் பங்குக்கு உறுவாக்கிய மாபெரும் அணையும் (The Three Gorges Dam) அதனால் உண்டாகும் தொடர் இயற்கைப் பேரிடரையும் நாம் நினைவு கூற வேண்டும். ஒரு பெரும் நிலத்தையும் மலைகளையும் குடையும் போதுக் கிடைக்கும் மண் மணல் போன்றவற்றைக் குவிப்பதற்கான இடம் கண்டறியப்படவில்லை.

மலேசியாவைப் பொறுத்த வரை மலாக்கா நீரிணையை ஒட்டியத் துறைமுகங்களான பினாங்கு (Penang Port), கிள்ளான் (Port Klang), மலாக்கா (Melaka Port), ஜொகூர் (Tanjung Pelepas) போன்ற இடங்களைச் சார்ந்தத் துறைமுகங்கள் பாதிப்பைச் சந்திகக் கூடும். சிங்கப்பூர் தனதுக் கடல் வணிகத்தின் 30 விழுக்காடு இழக்குமெனத் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் பேங்காக்கில் நடைபெற்றக் கூட்டத்தின் பின்பும் தாய்லாந்து க்ரா கால்வாய் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்தத் திட்டமாக இன்னும் எடுத்துக் கொள்ளப் படவில்லை என்றேக் கூறுகிறது. பின்னணி தீர்வுகள் நமக்கு தெரிவதற்கான சாத்தியங்கள் குறைவு தான்.

மனிதர்களின் அத்து மீறல்களைத் தாங்கிக் கொள்ளும் இயற்கை தனது சீற்றத்தை வெளிபடுத்தும் போது மனிதனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

-முற்றும்-

Reference:

2018-ஆம் ஆண்டு வாசித்த நூல்கள் (21-30)



21. உளவு-ஊழல்-அரசியல்

அரசு செயல்பட்டை கேள்விக்கு உட்படுத்தும் ஒரு சாமானியன் எப்படி எல்லாம் அடித்து துவைத்து துவம்சம் செய்யப்படுகிறான் என்பதை ஒரு கிரைம் சாகச நூலை போல் எழுதி இருக்கிறார் சவுக்கு சங்கர். ஊழல் மிகுந்த அரசு இயந்திரத்தில் அனைத்து துரைகளும் சமூக நியதிக்கு நேர்மாறாக நடந்துக் கொள்கின்றன. சங்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் தனது 16-வது வயதில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவர் காணும் அரசியால் ஊழல் சம்பவங்கள், எப்படியாக அதில் அவர் சிக்கி தப்புகிறார் என்பதாக மிக சுவாரசசியமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

22. ஓநாய் குலசின்னம்

1970-களில் கலாச்சார புரட்சியின் போது சீனாவின் இன்னர் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்தில் நடந்த சம்பவத்தை இந்த நூல் பேசுகிறது. இது மிக மிக சுவாரசியமான மறுபட்ட வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் புத்தகம். இதை வாசிக்கும் போது ஓநாய்களை காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அதனை ஒரு வெற்றியின் குறியீடாகவே காண்பீர்கள். இந்நூல் தொடர்பான விளக்க பதிவை ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

23. குமார் துப்பறிகிறார்

இன்ஸ்பெக்டர் குமார் செர்லாக் ஹாம்ஸை போல நூதன துண்ணறிவைக் கொண்டவர். மிகவும் ஜாலியாக வாசிப்பவரை சிரிக்க வைத்துக் கொண்டே துப்பறிகிறார். பேயோனின் நகைச்சுவை மிகுந்த எழுத்து எனக்கு பிடித்தமான ஒன்று. அதில் அழகியலும் மொழி லாவகமும் உண்டு.

24. என்னை நான் சந்தித்தேன்

எழுத்தாளர் இராஜேஸ்குமாரின் எழுத்துலக சுயசரிதமாக இந்த நூல் அமைந்துள்ளது. மிக விறுவிறுப்பான எழுத்து நடை. எழுத்துலகில் 1000க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். எழுத்துலகில் கொண்டாடப்பட்ட அளவு இவர் சினிமா துறையில் பார்க்கப்படவில்லை. சினிமாவில் இவரின் படைபுகள் திருடப்பட்டன. உழைப்புக்கு ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றப்பட்டார். சினிமாவின் மோசடிகளை நூல் நெடுக பதிவு செய்கிறார்.

25. துப்பாக்கி மொழி

இந்த நூலில் இந்தியாவில் செயல்படும் சுமார் 63 தீவிரவாத இயக்கங்களை பதிவு செய்துள்ளார்கள். அது அதிர்ச்சிகரமானதாகவும் உள்ளது. ஒரு மண் சார்ந்த மக்களின் நியாயங்களும், கோரிக்கைகளும், கொள்கைகளும் மறுக்கப்படும் போது அங்கே ஓர் எழுச்சியும் போராட்டமும் உருவாகிறது. ஆயுதம் ஏந்தும் போராட்டம் என்பது தீவிரவாதமாக ஆகிறது. நாம் அறிந்திராத ஏகபட்ட புதிய இயக்கங்களை பற்றி இந்த நூல் பேசுகிறது.

26. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

The confession of an economic hitman எனும் ஆங்கில பதிப்பின் மொழியாக்கம் இந்த நூல். வாசிப்பு வெளியில் அதிகமாக விவாதிக்கப்பட்ட நூல்களில் ஒன்று. அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் சுரண்டல்களை தோல் உரித்து காட்டுகிறது. இந்தோனேசிய, பனமா, சவுதி அரேபியா, ஈரான், ஈக்வெடார், குவாத்தமாலா என ஏகபட்ட நாடுகளில் பொருளாதார நிபுணராக பணியாற்றுகிறார் ஜான் பெர்கின்ஸ். வளர்ச்சி திட்டங்களுக்கென அந்த நாடுகள் அதிகமான கடனை வாங்கி கட்ட முடியாத நினைக்கு தள்ளப்படுகின்றன. கடனுக்கு பதிலாக அந்நாடுகளின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. சமீப அரசியல் நிலையில் செங்கொடி ஏந்திய கம்பூனிச முதலாளியும் இந்த வழிமுறையை தான் பல நாடுகளின் செயல்படுத்தியுள்ளார். எரியும் பனிக்காடு (Red Tea) நூலில் இரா.முருகவேலின் மொழியாக்கம் மிக இலகுவான நடையில் இருந்தது. இந்த நூலில் அது மிஸ்ஸிங். சில வாக்கியங்களை வாசித்து முடிப்பதற்குள் நுரை தள்ளிவிடுகிறது.

27. மிச்சமிருப்பவர்கள்

ஒரு சமூகத்தின் அரசியல் தலைமைத்துவம் என்பதே கேலிக்கு உட்படும் போது அந்த சமூக நிலை எப்படி இருக்கும். வழிகாட்டல் குறைவான சமூகத்தில் நிகழும் அவலங்களை இந்த குறுநாவல் பேசுகிறது. 2007 எழுச்சி பேரணிக்கு முந்தய காலகட்டதில் மலேசிய இந்திய சமூகத்தில் நிகழ்ந்த பல ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை நிகழ்வுகளை பதிவு செய்துள்ள நூல் இது. இக்குறுநாவல் தொடர்பாக முந்தய பதிவில் எழுதியுள்ளேன்.

28. தப்பு தப்பாய் ஒரு கொலை

இராஜேஸ்குமார் தமது சுயசரிதத்தில் சிலாகித்து குறிப்பிட்டிருந்ததால் இந்த நாவலை வாசித்தேன். விறுவிறுப்பான நடை என்பதை தவிர இதில் வேறு விசயங்கள் இல்லை.

29. Brief answers to the big question.

ஸ்டிபன் ஹாக்கின்ஸ் எழுதிய கடைசி நூல் இது. பெரிய கேள்விகளுக்கான குறுகிய விடை எனினும் ஒவ்வொரு விடையும் சுமார் 20 பக்கங்களுக்கு உள்ளன. இலகுவான ஆங்கில நடையில் எழுதபட்டிருப்பினும் அறிவியல் புரிந்துணர்வின் பொருட்டு சிற்சில இடங்களில் இந்நூல் மீள் வாசிப்பை கோருகிறது. கடவுள் உண்டா எனும் முதல் கேள்வியில் அது இல்லையெனவும் தேவை அற்றது எனவும் விளக்கமளிக்கிறார் ஸ்டீபன். பத்திமான்களின் உணர்சியை சீண்டி பார்க்கும் பதில் எனினும் அதுவே உண்மையும் கூட. கலத்தை கடக்கும் பயணம் சாத்தியமா? கருந்துளையில் இருப்பது என்ன என மிக எளிய மொழியில் பேசும் நூல். ஸ்டீபனின் எழுத்தில் அவர் நகைச்சுவை உணர்வும், இலக்கிய ஆர்வமும் கொண்டவர் என காண முடிகிறது.

30. Imperial Women

சீன சமூகத்தில் பெயரிடும் முறையை வைத்தே அச்சமூகத்தில் ஆணின் ஆதிக்கத்திற்கு கொடுக்கப்படும் முக்கியதுவத்தை உணர முடியும். அப்படி இருக்க சில பெண்களே சீன சரித்திரத்தில் தமது பெயரை நிலை நாட்டி உள்ளனர். 5000-ஆம் ஆண்டு பாரம்பரியத்தில் Wu Zetian எனும் ஒரே ஒரு பெண் மட்டுமே அரசர் ஆகி இருக்கிறார். அடுத்தபடியாக அந்த இடத்தை நெறுங்கும் நபர் Dowager Cixi எனும் இராஜமாதா. அரசரின் கடைசி நிலை காமக்கிழத்தியாக இருந்த இவர் இராஜமாதாவாக தன்னை உயர்திக் கொண்டு திரைமறைவில் சீன நாட்டை ஆட்சி செய்துள்ளார். மஞ்சூரியாவின் யாஹூனாலா குழுமத்தைச் சேர்ந்த இவரின் பேரன் தான் சீனாவின் கடைசி அரசர் ஆவார். 1800-களில் கிழக்கு நாடுகள் ஆசியாவின் மீது மேற்கொண்ட ஆக்கிறப்பின் போது சீனாவும் தப்பவில்லை. இவரின் தனித்த ஆளுமையே 1911 வரை சீனாவில் அரச ஆட்சியை நீட்டிக்க செய்தது. இந்நாவல் ச்சீசி ஃபோர்பிடன் சிட்டியில் காமக்கிழத்தியாக அழத்து வந்தது முதல் அவரின் காலத்தை பதிவு செய்கிறது.

முற்றும்.

Thursday, January 24, 2019

2018-ஆம் ஆண்டு வாசித்த நூல்கள் (11-20)

வாசிக்கும் நூல்கள் குறித்து தொடர்ந்து எழுதி வர வேண்டும் என கருதினேன். காலச் சூழலில் அதற்கான வாய்ப்புகளை நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. நூல் பட்டியல் தொடர்பாக கடந்த மார்ச்சில் ஆகக் கடைசியாக எழுதியது. சென்ற ஆண்டினை கடந்துவிட்டதால் நூல்களின் கணக்கறிக்கையை எழுதி முடித்துவிடலாம். கீழே எனது பட்டியல். ஆர்வம் இருப்போர் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். முதல் 12 புத்தகங்கள் தொடர்பான குறிப்புகளை எனது மார்ச் பதிவில் காணலாம். கீழ் காணும் பட்டியலில் சில நூல்களை விரிவாகவும் எழுதி இருக்கிறேன்.


11. ISIS கொலைகாரன் பேட்டை

பா.ராகவன் சர்வதேச அளவில் இருக்கும் மாய வலைகளை எழுதி முடித்து ஓய்வதற்குள் முலைத்துவிட்டிருக்கும் இயக்கம் ஐ.எஸ். அமெரிக்கா பெருசா இரஸ்யா பெருசா எனும் இடைவிடாத போட்டியில் சிரியா எனும் தேசத்தை சுடுகாடாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். கொலைகளை இரசிக்கும் சமூகங்கள் இங்கே உருவாகிக் கொண்டிருக்கின்றன. மனிதத்தை பேசும் எத்தனையோ உலக அமைப்புகள் இருந்தும் குழந்தைகளைக் கூட காப்பாற்ற முடியாத வக்கற்றவர்களாகவே அவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஐ.எஸ் இயக்கத்தின் அரம்பம் முதல் டிசம்பர் 2016 வரையிலான நிகழ்வுகளை விரிவாக பேசுகிறது இந்த நூல்.

12. ஏ.ஆர்.ரஹ்மான்

ரஹ்மான் ஒஸ்கார் விருதுகளை வாங்கும் நிகழ்விலிருந்து இந்த நூல் தொடங்குகிறது. விருது வாங்கும் போது அவர் பேசிய வரிகள் ‘வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் என்முன்னே இரண்டு பாதைகள் இருந்தன, வெறுப்பு அல்லது அன்பு, நான் எப்போதும் அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் இன்றைக்கு இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறேன்’. இந்த வரிகளே இந்நூலை ஒரே வீச்சில் படித்து முடிப்பதற்கான உத்வோகத்தை கொடுக்கின்றன. அவரது வெற்றிக் கதையின் பல சம்பவங்கள் நம்மை நெகிழ வைக்கிறது. இந்த நூல் எழுத்தாளர் என்.சொக்கனின் படைப்பு. இணையத்தில் மின் நூலாகவும், ஒலி நூலாகவும் இலவசமாகக் கிடைக்கிறது.

13. First they killed my father

இது 2000-ஆம் ஆண்டில் வெளி வந்த நூல். 2017-ஆம் ஆண்டில் திரைக்கதையாக்கப் பட்டுள்ளது. கம்போடியாவின் பிரசித்திப் பெற்ற இரு இடங்கள் ஃனோம்ப் பேன் மற்றும் சியம் ரிப். இன்றய நிலையில் இவ்விரு இடங்களும் இரு வேறு சரித்திர நிகழ்வுகளை நமக்குக் காட்டுகிறது. மண்டை ஓட்டுக் குவியலின் காட்சியாக ஃனோம்ப் பேன் ஒரு வீழ்ச்சியின் அரசியலையும், கோவில் கோபுர நகரங்கள் நிறைந்த சியம் ரிப் அப்பிராந்தியத்தின் முன் காலத்து மாட்சியையும் காட்டுகிறது.

இந்த நூல் ஒரு சிறுமியில் பார்வையில் போர் கால வாழ்வியலை பதிவு செய்கிறது. போல் போட் காலத்தில் நடந்த கொடுமைகளை நாம் வாசிக்கவும், திரையில் காணவும் அதீத உணர்சிவய படுகிறோம். இந்த சுயசரிதத்தில் வரும் லோங் போன்ற சிறுவர் சிறுமியர் அதைப் பார்த்தும் அனுபவித்தும் கடந்து வந்திருக்கிறார்கள்.

டாம் ரைடர் படப் பிடிப்பிற்காக சியாம் ரிப் சொன்ற ஏஞ்சலினா ஜோலி அங்கிருக்கும் ஏழ்மை நிலை கண்டு அம்மக்களுக்கு தன்னார்வளாராக பல தொண்டுகளை செய்து வந்தார். இந்த நூல் இவரை மிக பாதித்திருக்கக் கூடும். 2017-ஆம் ஆண்டு திரைபடமாக வெளியீடு கண்டது. திரைப்படமும் சிறப்பாகவே காட்சி அமைக்கப்பட்டுள்ளது. போல் போட் காலத்தில் வைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் முனைந்த ஆகிரா எனும் தனிமனிதன் தொடர்பாக எழுதி இருந்தேன். வாசிக்க விரும்புவோர் இந்த உரலில் காணலாம் http://vaazkaipayanam.blogspot.com/2014/01/blog-post.html

14. வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - தமிழ் மகன்

எதிர்காலத்தில் இந்த நாவல் தொடங்குவதாக அமைகிறது. சடாரென்று 2017 வந்து. மீண்டும் கற்காலம் சென்று பிறகு திருவள்ளுவரை சந்தித்து என பயனிக்கிறது. இதை எப்படி தொடர்பு படுத்திக் கொள்வது எனும் சந்தேகம் வாசகனை தொடர்ந்து ஆட்கொள்கிறது. அதற்கான முழுமை நாவலை வாசித்து முடிக்கையில் நமக்கு கிடைக்கிறது. தமிழ்மகனின் சிறுகதை மற்றும் நாவல் என முன்பு வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த நாவலில் இவர் அளித்திருக்கும் தளம், நடை என அனைத்தும் மாறுபட்ட முயற்சியாக உள்ளது. முற்றிலும் ’நன் லீனியர்’ முறையிலான கதை அமைப்பு.

நாவலில் நாயகன் தேவ் ஜப்பானில் ஏற்படும் சுனாமியில் பாதிக்கப்பட்டு அவரது மூளையில் தமிழ் மொழி தொடர்பான பல தகவல்கள் சம்பவங்கள் என நினைவை ஆக்கிறமிக்கின்றன. அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான ஆய்வே இந்நூல் நெடுக பேசப்படுகிறது. இது நாவல் என்பதைக் கட்டினும் தமிழர் மற்றும் தமிழ் மொழி மீதான பண்பாட்டு படையெடுப்புகளையும் மொழி ஆக்கிரமிப்புகளையும் பதிவு செய்திருக்கும் ஆவண நூலாகவே தெரிகிறது.

கால ஓட்டத்தில் தமிழ் மொழி சந்தித்த பரிணாமங்கள், உலகளவில் அதல் பயன்பாடு என்பதோடு ஆரிய மொழி கலப்பு, ஏதனால் ஆரியம் தமிழ் மொழியின் முக்கிய எதிரியாக அமைந்துள்ளது என்பதுமாக இந்நாவல் பேசுகிறது.

15. சிறிது வெளிச்சம்

தேசாந்திரி மற்றும் துணையெழுத்து போலவே இந்த நூலின் கட்டுரைகள் அமைந்திருந்தன. சிறிது வெளிச்சம் என்பது கு.பா.ராவின் சிறுகதை தலைப்பு. அக்கதை ஒரு பெண்ணின் மீதான கருணை எனும் சிறுது வெளிச்சத்தை பேசுகிறது. அதே போல் எந்த வெளிச்சமும் படாத ஏகப்பட்ட சம்பவங்களும், மனிதர்களும் நம்மை சுற்றி நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் சமூகத்தின் சாமனியர்கள். அந்த சாமனியர்களின் உலகில் நிகழும் மனிதத்தை இந்த நூல் பேசுகிறது.

தேசாந்திரி மற்றும் துணையெழுத்து கட்டுரை தொகுப்பு போலவே இருந்ததால் வாசிக்க கொஞ்சம் அயற்சியை ஏற்படுத்தியது. பல சுவாரசியமான சம்பவங்களையும் மனிதர்களையும் இந்நூல் காட்ட தவறவில்லை.

16. உப்பு நாய்கள்

இந்நாவல் முதல் பாகத்தில் இரு வேறு சம்பவங்களையும் இரண்டாம் பாகத்தில் மூன்று வெவ்வேறான சம்பங்களையும் பதிவு செய்கிறது. பொதுவெளியில் பார்க்கப்படாத மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் யுக்தி என்பது பல எழுத்தாளர்களால் தற்சமயம் கையாளப்படுகிறது. இருப்பினும் இந்நாவலில் புரட்டப்படும் ஒரிரு பக்கங்களிலேயே தொடர் பாலில் நிகழ்வுகளென, பாலியல் வரற்சியின் மிகுதியில் வாழும் மக்களென அச்சமூகம் காட்டப்படுகிறது. போதைக் கடத்தல், ஆள் கடத்தல், திருட்டு, பாலியல் வியாபாரம் என பல சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் பேசப்படும் மற்றுமொரு சம்பவம் நாய் இறைச்சி விநியோகம். நள்ளிரவில் நாய் வேட்டையாடி இறைச்சித் துண்டுகளாக்கி உணவு அங்காடிகளில் விற்றுவிடுகிறார்கள். அது எப்படி பயனீட்டாளரை சென்றடைகிறது என்பது வேறு விசயம். நாய் இறைச்சியை உணவாக கொள்வது கொரியா, சீனா மற்றும் வேறு சில இந்தோ சீன நாடுகளில் சாதாரணமான நிகழ்வாகும். அது அவர்களின் காலாச்சாரத்தை ஒன்றியது. ஆனால் இந்நாவலின் கலத்திற்கு அது அந்நிய செயல். அதனால் அதை ஒரு அபூர்வ நிகழ்வென புனைத்துள்ளார் போலும். இந்நாவலின் பெரும்பகுதி வன்முறை சமூகத்தை பற்றியே பேசுகிறது. அது வாசகனை கவரும் சூழலில் இல்லை.

17. Way Back in to Korea

கொரியா செல்வதற்கு முன் வாசித்த நூல். கொரிய மக்களின் வரலாற்றியல் வாழ்வியல் என இரு தளங்களையும் இந்நூல் பதிவு செய்கிறது. இதை வாசித்த போதே இந்தியர்களோடு அவர்களுக்கு இருக்கும் தொடர்பை உணர முடிந்தது. இந்நூல் தொடர்பாக முந்தய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். பாண்டிய மன்னர்களை போல் கொரியாவிலும் இரட்டை கயல் சின்னம் பயனில் இருந்துள்ளது.

போரின் கொடுமையை பேசும் இடமாக (DMZ) அமைந்துள்ளது. இந்த இராணுவமற்ற மண்டலம் நெடுங்காலமாக மனிதர்களின் தாக்கமற்ற அழகு பூங்காவாக மறி உள்ளது. வட , தொன் கொரியா எனும் சொல் பிரயோகத்தை கூட கொரிய மக்கள் விரும்புவதில்லை. ஒருவருக்கு மற்றொன்று விரோத பொருள். கொரிய போரினால் பிளவுபட்ட குடும்பங்கள் ஏறாளம். ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் சந்தித்துக் கொள்ளும் தினங்கள் உண்டு. கொரியாவை பற்றி தெரிந்து புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

18. இரவுக்கு முன்பு வருவது மாலை - ஆதவன்

ஆதவனின் சிறுகதைகளை எனக்கு அறிமுகப் படுத்தியது நண்பர் முரளி. அந்த வாசிப்பு புது அனுபவமாக இருந்தது. பல முறை ஆதவனின் சிறுகதைகளை சிலாகித்து உரையாடி இருக்கிறேன். என் பெயர் ராமசேஷன், காகித மலர்கள் போன்றவையும் நல்ல வாசிப்பு அனுபவத்தையே கொடுத்தன.

இரவுக்கு முன்பு வருவது மாலை அதாவனின் 5 குறுநாவல்களை அடக்கிய நூல். 2012-க்கு பின் மீண்டும் ஆதவனை இப்போது வாசிக்க கொஞ்சம் போர் அடிக்கும் பேர்வழியாக தெரிந்ந்தார். இதில் 'சிறகுகள்' எனும் குறுநாவல் எனை வெகுவாக கவர்ந்தது. ஒரு பெண் பாத்திரமாகவே மாறி இக்கதையை இயற்றியுள்ளார். 1970-களில் ஒரு பெண்ணின் பார்வையில் பெண் சுதந்திரம் எந்த நிலையில் இருந்துள்ளது என்பதை இக்கதையின் வழி அறியமுடிகிறது. அது போக கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன் எனும் அலுவலக அரசியல் பேசும் கதையும் பிடித்திருந்தது.

19. சமணர் கழுவேற்றம் - ஒரு வரலாற்றுத் தேடல்

சமணர்கள் கழுவேற்றம் சரித்திர நிகழ்வென குறிபிடப்படுகிறது. அது உண்மையா இல்லையா என்பதையே இந்த நூல் பேசுகிறது. மிகமிக நீண்டதொரு விளக்கம் தான். ஒரு மேற்கோள் பாட நூல் வாசிப்பதை போல் இருந்தது. சமண சமயம், சமணர்களின் கலாச்சாரம் போன்றவற்றை அறிந்துக் கொள்ள இந்த நூல் உதவும்.

20. இட்லியாக இருங்கள்

பொதுவாகவே தன்முனைப்பு தூண்டல் போன்ற இத்தியாதிகளை நான் நம்புவதில்லை. Emotional Intelligence எனும் பதத்தை உள்வாங்கி அறிந்துக்கொள்ளவே அந்த நூலினை வாங்கினேன். ஆச்சரியமாக இதில் பேசப்பட்ட விசயம் எனக்கு மிக பிடித்துப் போனது. ஒவ்வொரு பக்கமும் சுய பரிசோதனை கூடங்களாகின. நாம் வெந்த இட்லியா இல்லை வேகாத இட்லியா என்பதை தேடிக் கொண்டே போகிறோம். வாசிக்கவும், இதன் பேசு பொருளும் உற்சாகமான அனுபவத்தைக் கொடுத்தது.


தொடரும்...