
அன்புள்ள அம்மாவுக்கு,
அம்மா நீங்கள் நலமா? எல்லோரும் நலம் வாழ இலச்சிமல ஆத்தா அருள் புரிவாளாக. எப்போதும், எல்லோரும் மற்றவர் மனம் குளிர சொல்வதை போல் நானும் நலம் என சொல்லிக் கொள்கிறேன்.
உங்களுக்கு 3 கண் ஊனம் என்பதை நான் அறிவேன். உலக மாறுதல் நான்காவது கண் ஒன்றை உருவாக்கி அதுவும் உங்களுக்கு தெரியாமல் செய்துவிட்டது. உலத்தை சொல்லி என்ன புண்ணியம் நீங்கள் தான் கண் திறந்து பார்க்கவில்லை என சொன்னால் பொருந்தும். நான் உளறுவதாக நினைக்க வேண்டாம் கண் என சொன்னது எழுதுவம், படிப்பதும், கணக்கிடுவதும். நான்காவது கண் கணினி, இணையம் என மனிதர்கள் சொல்லிக் கொள்ளும் ஒரு ஜந்து.
நீங்கள் படித்துவிட மாட்டீர்கள் எனும் இருமாப்பில் இக்கடிதத்தை எழுதும் என்னை இலச்சிமல ஆத்தா தான் மன்னிக்க வேண்டும். அம்மா, இக்கனத்தில் நீங்கள் அதிசய பெட்டியின் முன் அமர்ந்து ஆடல்களை இரசித்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? முன்பு நம் வீட்டில் அதிசய பெட்டி இல்லை. ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கொரு முறையென மாமா வீட்டில் படம் பார்த்தால் தான் உண்டு.
ஆனால் இப்பொழுதோ காலையும் மாலையும் அலாரம் வைத்தது போல் அதிசய பொட்டியை திறந்துவிடுகிறீர்கள். சீரியல் என்ற பெயரில் வரும் சீரழிவு கண்றாவிகளை மறவாமல் காண்கிறீர்கள். அதனோடு ஒன்றிப் போகிறீர்கள். அவர்கள் அழுதால் அழவும் சிரித்தால் சிரிக்கவும் நீங்கள் கண்ணாடியின் பிரதிபலிப்பென உருவாகிவிட்டீர்கள்.
இத்தோடு நிறுத்தியபாடில்லாமல் பக்கத்து வீடு, எதிர் வீடு என அனைவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு தொடர் நாடகங்களை பற்றிய தொடர் விவாதாம் செய்கிறீர்கள். இதனால் என்ன புண்ணியம் நேர்ந்தது? உங்கள் விவாதங்களை கேட்ட ஆர்வத்தில் பக்கத்து தெருவில் இருக்கும் ஆனந்தி அக்கள் வரும் தீபாவளிக்குள் ‘ஆஸ்ட்ரோ’ இணைப்பை ஏற்படுத்த வேண்டும், தொடர் நாடகங்களை பார்க்க வேண்டும் என்றிருக்கிறார். இதை கூட என்னுடன் வேலை பார்க்கும் அவர் கணவன் தான் சொன்னார். வீட்டில் நச்சரிப்பு தாங்கவில்லை என்று.
அம்மா நான் மட்டும் யோக்கியன் இல்லை. நானும் இந்த தொடர் நாடக பித்தத்தில் சிக்கிய காலம் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்தது இலச்சிமல ஆத்தாளின் கருணையாக தான் இருக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் ‘சீரியல்’ என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சல் தான் வருகிறது. ஜவ்வு மிட்டாயை போல் இழு இழுவென இழுத்து கடசியில் அது ஒன்றும் இல்லாத சக்கை என உணர வைக்கிறது. வாயில் இருக்கும் போது தித்திக்கும் சிறு இனிப்பு கிடைக்குமே அது போல தான் நீங்கள் கண்டு கழிக்கும் போது சிறு ஆனந்தம் ஏற்படுகிறது.
அம்மா நன்றாக யோசித்துப் பாருங்கள், இந்தத் தொடர் நாடகங்கள் பொன்னான நேரத்தை மரண படுக்கைக்கு இட்டுச் செல்லும் அரக்கன் இல்லையா? தீயனவயை போதிக்கும் சாத்தான் இல்லையா? அதன் போதனைகளை சற்று உணர்ந்திருக்கிறீர்களா? இரு மணம் புரிந்துக் கொள்ளும் கணவன், அடுத்தவன் குடும்பத்தை கெடுக்க நினைக்கும் அக்காள், அண்ணியின் மீது வேண்டா வெறுப்புக் கொண்ட தங்கை, மருமகளை அதட்டும் மாமியார், மனைவி பேச்சை வேத வாக்காக மதிக்கும் கணவன். இதுவா நம் தமிழ் கலாச்சாரம்?
முன்பு படித்தவர்கள் அதிகம் இல்லை. ஆனால் அவர்கள் ஓய்வு நேரங்களை நாவல், மாத வார சஞ்சிகைகள் என ஈடுபடுத்திக் கொண்டு தங்களது வெளியுலக அறிவை வளர்த்துக் கொண்டர்கள். இப்போது நடப்பது என்ன? சினிமா ஏடுகளை தவிர மற்ற ஏடுகள் வந்த வேகத்தில் பொட்டிப் பாம்பென அடங்கிவிடுகிறது. இது வருத்தத்திற்குறிய விடயம் இல்லையா?
அம்மா, இப்பொதெல்லாம் பட்டிணத்தில் அடிக்கடி உலகமயமாக்குதல், வினண்வெளி ஆராய்ச்சி, புவி வெப்பம், பண வீக்கம், ஏன் அதிகம் வேண்டாம் நான் இப்போது புலம்பிக் கொண்டிருக்கும் பதிவுலகில் கூட பின் நவீனதுவம் என்றெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள். இவற்றை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இவற்றை பற்றி நீங்கள் கண்டு ரசிக்கும் தொடர் நாடகங்கள் ஏதாவது சொல்லி இருக்கிறதா?
அம்மா, நீங்கள் தொடர் நாடகங்கள் பார்க்க வேண்டாமென நான் சொல்லவில்லை. சிகரெட்டு பழக்கத்தை போல நம்மவர்களிடையே மேலோங்கி நிற்கிறது இந்தச் ‘சீரியல்’ பார்க்கும் பழக்கம். அதைக் குறைத்துக் கொண்டால் நல்லதல்லவா? உங்கள் மனம் புண்படும்படி பேசி இருந்தால் இந்தச் சிறுவனை மன்னியுங்கள். நீங்கள் படிக்காத, பதில் எழுதாத கடிதத்தை இங்கே நிறுத்திக் கொள்கிறேன். இலச்சிமல ஆத்தாளின் ஆசிர்வாதத்தோடு விடைபெருகிறேன்.
அன்பு கலந்த வருத்தத்தோடு,
விக்கி.
பி.கு: இக்கடிதத்தை படித்துவிட்டு அம்மா என்னை அடிக்காமல் இருக்க அந்த இலச்சிமல ஆத்தா தான் காப்பாற்ற வேண்டும்.