Showing posts with label இறைவனுக்கு ஒரு கடிதம். Show all posts
Showing posts with label இறைவனுக்கு ஒரு கடிதம். Show all posts

Tuesday, December 16, 2008

இறைவனுக்கு ஒரு கடிதம்!!

இறைவனுக்கு வணக்கம்,

நீ எதையும் கண்டு கொள்ளாமல் இருமாப்புடன்தான் இருக்கிறாய். இந்த ஆறறிவு அறிவு ஜீவிகளை நினைக்கையில் தான் பெருமிதமாக இருக்கிறது. உன் பெயரைச் சொல்லிக்கொண்டு அடிதடியில் இறங்கிவிடுகிறார்கள். என்னைக் கேட்டால் உலகில் மிகப்பெரிய வன்முறைக் கும்பல் தலைவன் நீ தான் என்பேன். ஏன் என்று கேட்கிறாயா? மௌனத்தை துணை கொண்டு சாதனை செய்பவன் அல்லவா நீ! அதுதான் காரணம்.

ஒரு கிழவனைக் கண்டேன். அவனுக்கு 80 வயதுக்குமேல் இருக்க வேண்டும். நினைவு தெரிந்த நாளில் இருந்து உன்னை வழிபடுகிறானாம். ஏன் என்றேன். நீ நல்லது செய்வாய் என்ற நம்பிக்கை என்றான். பார், தன் மேல் இருக்கும்
நம்பிக்கையைவிட உன் மேல் தான் அதிக நம்பிக்கை வைத்துள்ளது மனித குலம். அந்த மனிதனின் விசுவாசத்திற்கு நீ பதில் சொல்வாயா? இங்குள்ள சிலர் அவனுக்கு பதில் சொன்னார்கள். அவன் மடையன் என்று. ஆனால் அவனுக்கோ இன்னமும் அந்த பதிலில் திருப்திதான் இல்லை.

உனது பக்தர்கள் தன் சக மனிதனுக்கு உதவுவதைவிட உன்னிடத்தில்தான் கொட்டிக் கொடுக்கிறார்கள். பிரச்சனைகளையும், சம்பாதிக்கும் செல்வங்களையும் சமபங்கில். மடிந்து போகும் மனிதனுக்கு மண்டையில் மயிர் இருக்கும் அளவிற்கு மதி நுட்பம் இருப்பதில்லை. கோடிக்கணக்கில் தானம் செய்து உனக்கு கோவில் கட்டுகிறான். தெருக்கோடியில் நிற்கும் அனாதையை மறந்துவிடுகிறான்.

"அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு"
குறள் எண்: 80
அன்புடமை (இல்லறவியல்)

என்று வள்ளுவர் சொல்கிறார். ஆனால் இங்கோ நிலைமை அப்படி இருக்கவில்லை. நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் சவரம் செய்த தாடியைப் போல் சடசடவென வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்று போனால் இன்னொன்று என்பது போல் புதிது புதிதாக குற்றச் செயல்கள்.

''பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்''
-அருள் பிரார்த்தனை

என வள்ளலார் தமது அருள் பிரார்த்தனையில் சொல்கிறார். இங்கோ உனக்கு ஏகப்பட்ட மதங்கள். மனிதனுக்கு தொண்டு செய்ய மதம் இருப்பின் பழுதில்லை. இங்கோ உனக்கு தொண்டு செய்ய மதங்கள் இருக்கிறது. உனக்கு நகை அணிவிக்க வேண்டும் என்கிறான், சட்டை போட வேண்டும் என்கிறான், தூக்கி வைத்துக் கொண்டு ஊர்வலம் போக வேண்டும் என்கிறான். நீயே சொல் இறைவா, நீ என்ன முடமா? முடமாய் கிடப்பவனுக்கு கூட இந்த மனிதர்கள் இவ்வளவு சேவை செய்வதில்லை போ.

என் இறைவனே,

உயரிய இடத்தில் இருக்க வேண்டிய உன் உணர்வு சந்தைக் கடை, சாக்கடை என படி இறக்கம் கொண்டே போகிறது. இதற்கு காரணம் நீயா இல்லை இந்த மனிதர்கள் தானா என்பது தெரியவில்லை. எல்லாம் இறைவன் செயல் என்றும் சொல்கிறார்கள், சில வேளைகளில் மனிதனின் அறியாமை என்றும் சொல்கிறார்கள். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிறார்கள். அப்படிப்பட்ட இறை தன்னுள்ளும் இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள்.

உன்னை கோவிலில் சிலையாக வைத்து வழிபடுகிறார்கள். நீ தூரத்தில் இருக்க வேண்டியவன் தானா? அப்படி உன்னை சிலையாக வழிபடுபவர்கள் கூட அந்த சிலையை அணுக பல தடைகள். இதற்கு யாரை நீ குறை சொல்ல போகிறாய்? நான் கேட்பது ஒன்று தான் என் நண்பனாக எனக்குள்ளே என்னோடு இரு என் மனசாட்சியாக, நன்நெறி போதகனாக, சூது அறியச் செய்பவனாக. நீ உச்சத்தில் இருக்கவும் வேண்டாம், தாழ்ந்திருக்கவும் வேண்டாம்.

''ஆதித் தமிழன் ஆண்டவனானான் மீதி தமிழன் அடிமைகளானான்'' என்கிறார்கள். பக்தர் எனும் பேரில் நான் உன் அடிமையாய் இருக்க விருப்பம் கொள்ளவில்லை. எதற்கு இந்த உயர்வு தாழ்வு நிலை. அதை உருவாக்கியவனும் நீதானா?

மனிதன் தவறு செய்கிறான். தவறுக்கு தண்டனை பெறுகிறான். தெய்வம் தண்டித்தது என்கிறார்கள். தண்டித்தது நீயானால் தவறு செய்ததும் நீயே. எதனால் இந்த கபட நாடகம்.

நீ இன்று கவிஞர்களின் விளையாட்டுப் பொருளாகிவிட்டாய்.

இல்லாத
இறைவன் போல்
இடைகொண்ட பெண்னே!

என்கிறான் ஒரு கவிஞன். பாடலில் தான் இப்படி என்றால் திரைபடங்களிலும் அப்படி தான். உன் பெயரால் மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டது. மாற்றான் மதம் பிடிக்காமல் போய்விட்டது. மதமில்லாமல் உன்னைக் காண இங்கு பலருக்கும் விருப்பமில்லை.

பிரச்சனைகள் இருந்தால் தான் கடவுளை நினைப்பார்கள் என்கிறான் ஒருவன். நினைப்பது நீதியாக இருந்தாலும் பரவாயில்லை. பிரச்சனைகளை தீர்க்கும் பேரில் உனக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுத்தால் தான் நீ உதவுவாய் என்று கூறி பஞ்சம் பிழைக்கிறது ஒரு கூட்டம். இப்படிபட்ட பார்வையில் நீ இந்த பூமியில் அவசியம் தானா என்று சொல்?

பேச எவ்வளவோ தோன்றுகிறது. இப்போதைக்கு இது போதும். தவறுகள் நேரும் போது இன்னும் கடிதங்கள் எழுதுவேன். உன்பேரில் என்னை நான் கேள்விகள் கேட்டுக் கொள்ள.