Showing posts with label Angkor Wat. Show all posts
Showing posts with label Angkor Wat. Show all posts

Wednesday, February 19, 2014

அங்கோர் வாட் - 1000 லிங்க ஆற்றுப்படுகை

நீரில் இருக்கும் லிங்க சிலைகள்
(இதை புதிதாக வாசிக்க ஆரம்பிப்பவர்கள் ஓர் எட்டு இந்த பக்கங்களையும் கிளிக் செய்து வாசித்துவிடுங்கள் பாகம்1 பாகம்2 பாகம்3 பாகம்4 பாகம்5 பாகம்6


நமது முன்னோர்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. பிருமாண்டமான கோவில்களை வானுலகின் பூதங்கள் வந்து கட்டிச் சென்றதாக கூறுவார்கள். 'சும்மானு நினைச்சியா, பூதங்க ஒரே நாளுல வந்து கோவில கட்டிடுங்க, சூரிய வெளிச்சம் வரத்துக்குள்ள கட்டிட்டு போயிடனும், அதனால தான் இந்தியாவுல நிறைய கோவிலுங்க முழுசா கட்டி முடிக்காம இருக்கும்' பால்ய வயதில் என் தாத்தா சொன்ன வரிகள் இன்னமும் ஞாபகம் உள்ளது. மதத்தின் மீதான அதீத நம்பிக்கை காரணமாக அவர் இப்படி கூறி இருக்கலாம்.

இன்றைய நாவீனத்தில் இருந்து காண்கையில் அந்நாளய மக்களின் கட்டிடக் கலை ஓர் ஆதிசய சாதனை. சரி இந்த கம்போடிய கோவில் நகரத்தை எப்படி அமைத்தார்கள் எனும் குறிப்புகளை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அலசி ஆராய்து பிரித்து மேய்ந்து பார்த்திருக்கிறார்கள். இன்னமும் பார்த்துக் கொண்டுள்ளார்கள்.

நாம் அங்கோர் பகுதிகளில் காணும் கோவில்கள் பெரும் கற்சுவர்களாலும், கற்சிலைகளாலும் 
​​
ஆனது. அக்கற்களை நீங்கள் காணும் போது அதில் சில துளைகளை காண முடிகிறது. அவை கட்டுமான பணிகளோடு சம்பந்தப்பட்ட துளைகள் என யூகிக்க முடிகிறது. இக்கற்கள் ஏறத்தாழ 50 கிழோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குளன் மலைப் பகுதியில் இருந்து கொண்டு வரபட்டவை. கட்டுமான பணிக்கு இக்கற்கள் கொண்டு வரபட்ட முறையை Sculpture of Angkor and Ancient Cambodia: Millennium of Glory (1997) எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் John Sanday:

இயற்கையோடு மறைந்துக் கொண்டிருக்கும் சிற்பம்
இக்கற்கள் கொண்டு வரபட்ட வழிமுறை தொடர்பாக ஆராய்சியாளர்களிடையே ஏகபட்ட சர்சைகள் உண்டு. ஒன்றிலிருந்து எட்டு டன் எடைகளிலான பாறை கற்கள் அவை. சில பெரிய கற்கள் 10 டன் எடையையும் எட்டிப் பிடிக்கின்றன. குளன் மலை பகுதியில் பாறைகள் பல அளவுகளில் வெட்டப்பட்டன. பின் மூங்கில் களிகளை செருக சுமார் இரு தூவாங்கள் துளைக்கப்பட்டன. இரு புரமும் நீண்டிருக்கும் களிகள் கொடிகளால் இருக்கிக் கட்டப்பட்டு நீரால் நிறப்பப்படும். நீர் நிறம்பிய மூங்கிற் களிகள் கற்பாறைகளை இருகப் பற்றிக் கொள்ளும். இக்கற்களை இழுக்க யானைகளை பயன்படுத்தினார்கள். கற்களுக்கு அடியில் உருளைகளை கொடுத்து யானைகளின் உதவியோடு சியம் ரிப் நதியருகே கொண்டு செல்வார்கள். அக்கற்கள் மூங்கிலால் ஆன மிதவைகளில் ஏற்றப்பட்டு கட்டுமான பணியிடங்களுக்கு அருகே எடுத்துவரப்படும். அங்கிருந்து மீண்டும் யானைகளை பயன்படுத்தி கற்களை நகர்த்தி வேலைகளை செய்திருக்கிறார்கள்.

மகேந்திர பார்வதம் தேடல் - கல்லில் சிற்பம் Source: alfredmeier.me
இரண்டு கற்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து கட்டுமான வடிவத்திற்கு ஏற்ப இளைக்கப்படும். அதன் பின்னரே கட்டுமானத்திற்கும் சிற்ப வேலைபாடுகளுக்கும் அவை பயன்படுத்தப்பட்டன. எல்லாமே மாபெரும் திட்டங்கள். இக்கட்டுமான திட்டங்களுக்கு அதிகமான அடிமைகள் தேவைபட்டார்கள், அடிமைகளை திரட்ட அதிகமான போர்களும் தேவைபட்டது.
மறுநாள் காலையில் விடுதியில் காலை உணவை முடித்துக் கொண்டு குளன் மலைக்கான பயணத்தை தொடர்ந்தோம். காலை சிற்றுண்டிகளில் பிரஞ்சு வாடை ஆதிகமாகவே உள்ளது. கட்டமாக வெட்டப்பட்ட ஸ்லைஸ் ரொட்டிகளை பட்டர் தடவி சாப்பிட நினைத்திருந்தீர்களானால் உங்கள் சிற்றுண்டி கனவில் மண் விழும். பூரி கட்டையை போன்ற உருளைகளை ரொட்டியென கொடுக்கிறார்கள். கடித்துத் தின்ன வரட்டுத்தனமானகவும் முரட்டுத்தனமாகவும் உள்ளது.

சியம் ரிப் பகுதிகளில் சமவெளிகளே கண்ணுக்கு எட்டிய தூரம் தென்படும் என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். சுமார் 45 நிமிட மகிழுந்து பயணத்தில் Kbal Spean அடிவாரத்தை அடைந்தோம். இந்த Kbal Spean எனும் இடம் Kulen மலைத் தொடரில் இருக்கும் ஒரு பகுதி. இவ்விடத்தை நெருங்கும் போது ஒரு மலைத் தொடர் நம் கண் முன் விரிகிறது.

மகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me
Kbal Spean-ணின் சிறப்பம்சம் 1000 லிங்கங்கள். மலையடிவாரத்தில் இருந்து உச்சியை அடைய 1.5 கிலோ மீட்டர் தூரம். மாற்றுப் பயண வசதிகள் இல்லை. நிச்சயம் நடந்தாக வேண்டும் அல்லது மலையேறியாக வேண்டும். உங்கள் அங்கோர் பயணத்தில் இவ்விடம் செல்ல திட்டம் இருப்பின் தகுந்த காலணியை தேர்ந்தெடுப்பது மன உளைச்சளை குறைக்கும். அடிவாரத்தில் இருந்து ஒற்றையடி காட்டுப் பாதை மலையை நோக்கி பயணிக்கிறது. சில இடங்களில் செங்குத்தான மண் முகடுகள். அதில் பதிந்திருக்கும் கற்களில் கால் வைத்து சமத்தாக ஏறிக் கொள்ள வேண்டும். மண் எங்கும் மரக் கிளைகளை போல் வேர்களும் பரவி இருக்கும். இது தான் அதன் இயற்கை எழில். அழகு மிளிரும் கம்போடியா.

மகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me
பசுமையை இரசித்துக் கொண்டு அமைதியாக மலை ஏறலாம். இந்த குளன் மலையில் எண்ணற்ற கலைப் புதையல்கள் உள்ளன. கட்டிடங்களும், முழு சிற்பங்களும், முழுமையடையாத சிற்பங்களும் அவற்றில் அடங்கும். குளன் மலைத்தொடர் அகழ்வாராய்ச்சிக்கு திறந்துவிடப்பட்ட பகுதி. தொல்லியல் ஆய்வு செய்ய விரும்புவோர் கம்போடிய அரசுக்கு தெரிவித்துவிட்டு ஆராய்ச்சியை தொடர முடியும்.

அது சுலபமான காரியமும் அல்ல. கண்ணி வெடிகள், காட்டாறின் மிரட்டலும், விலங்குகளின் ஆபத்தும் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக எதிர் நிற்கின்றன. அங்கோரியன் காலத்தில் இப்பகுதியில் ஒரு நகரம் இருந்ததாகவும் அந்நகரம் மகேந்திர பார்வதம் என அழைக்கப்பட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. நான் அங்கிருந்து திரும்பிய சில நாட்களில் அஸ்திரேலிய தொல்லியல் நிபுணர்களால் அந்நகரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக செய்தியை படித்து தெரிந்துக் கொண்டேன். தாமதமாக தெரிந்ததில் சிறு வருத்தமே. இன்னமும் குளன் மலைப் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

மகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me

தமிழ் நாளிகை செய்தி. Source: facebook
மகேந்திர பார்வதம் இரண்டாம் ஜெவர்மன் காலத்திய நகரம். இவ்வரசனின் காலத்தில் இருந்த மேலும் இரு நகரங்கள் ஹரிஹரலாயம் மற்றும் இந்திரபுரம் ஆகும்.

Kbal Spean உச்சியை அடையும் போது சில்லென்ற நீர் காற்று முகத்தை இதமாக தடவுகிறது. மாசற்ற நீரில் ஏறலமான லிங்கங்கள். ஆற்றுப்படுகை முழுக்க சின்ன சின்ன லிங்க சிலைகள். கறையோர பாறைகளில் இந்து உருவ வழிபாட்டு சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையான பெண் உருவச் சிலைகளில் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. பாறைகளால் ஆன பாலத்தை போன்ற இடத்தில் இருந்து நாம் காண்கையில் எதிர்புரம் வரும் சலனமற்ற நீர் பாலத்தை தாண்ட்டிய பள்ளத்தில் பேரிரைச்சலோடு விழுந்தோடுகிறது. பாலத்தின் நடுவே வட்டமான ஓட்டையை காண முடிகிறது. அங்கிருந்த லிங்க சிலை எடுக்கப்பட்டுவிட்டது. Kbal Spean எனும் கெமர் மொழி பாலம் எனும் அர்த்ததைக் கொண்டுள்ளது..

அதிகமான சிற்பங்களில் கவர்ந்த ஒன்று
இந்த ஆற்றுபடுகையில் லிங்கங்களை எப்படி செதுக்கினார்கள்? நீர் பெருக்கு குறைவாக இருந்த காலத்தில் அவற்றை அமைத்திருக்கிறார்கள். இமயத்தில் உருவாகும் கங்கை சிவனின் சிரசில் உதிப்பதாக நம்பப்படுகிறது. மலை ஊற்றுகளில் வழி உருவாகும் Kbal Spean ஆற்று நீர் இந்த ஆயிரம் லிங்கங்களை கடந்து புனிதப்படுவதாக புராதன கெமர் மக்கள் நம்பினார்கள். இதை கெமர் நாட்டின் கங்கையாக அவர்கள் மதித்தார்கள். அங்கோர் நகரங்களில் இருந்த கோவில் சடங்கு சாங்கிய முறைகளை நடத்த இங்கிருந்து எடுக்கப்படும் நீரையே பயன்படுத்தி இருக்கிறார்கள். KHMER THE LOST EMPIRE OF CAMBODIA by THIERRY ZEPHIR எனும் நூலில் இவற்றுக்கான மேலதிக தகவலை அறிந்துக்கொள்ள முடியும்.
ஆற்றில் சிலைகள்
'இங்கு ஏன் ஆயிரம் லிங்கங்கள் இருக்குனு தெரியுமா?' ச்சேன் வினவினார்.

'நிஜமாவே 1000 தான் இருக்கா? நான் அறிந்து இந்துக்கள் 108, 1008, 10008 எனும் எண்களில் நம்பிக்கை கொண்டவர்கள். வேத மந்திரகளுக்களோடு அவ்வெண்களை சம்பந்தப்படுத்துவதாக அறிகிறேன். இந்த கணக்கு எனக்கு தெரியவில்லை'.

'சிவனுக்கு 1000 மனைவிகள் அதனால் தான் இந்த 1000 லிங்கங்கள்.'

'அடடே, ஆச்சரியமான தகவலாக உள்ளது'.

1000 லிங்கங்கள் ஒரு பகுதி
ஆற்றின் ஓரமாக ஓர் ஒற்றயடி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழி நடந்து போகையில் கறையில் இருக்கும் பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களை நாம் காணலாம். சற்று தூரத்தில் இந்த கம்போடிய கங்கை ஒரு குட்டி நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கிறது. இங்
கு சுற்றுப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். நீர் பாசிகளை கவனத்தில் கொண்டு குளிப்பது அவசியம். மனதிற்கும் உடலுக்கும் ஓர் அதிசய உற்சாகத்தை கொடுக்கிறது இந்நீர்.

இங்கே ஓரு வசிதியும் உள்ளது. பெரும்பான்மையான பயணிகள் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையேறி வர விரும்புவதில்லை. ஆக இங்கு ஆட்களின் நடமாட்டம் சற்று குறைவென்றே சொல்லமுடியும். அப்படி வருபவர்களில் பலரும் 1000 லிங்கங்களை பார்த்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். நீர் வீழ்ச்சி பகுதியில் குளிக்க விரும்புவோருக்கு தனி அமைதி நிலையும் கிடைக்கிறது.
கபால் ஸ்பியன் நீர் வீழ்ச்சி
மலை பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வேளையில் மழை தனது வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது. பசியின் காரணமாக வயிற்றில் சிறு சலனத்தை உணர முடிந்தது. பெண்களுக்காக கட்டப்பட்ட கோட்டையை காணும் முன் அரை சான் வயிற்றுக்கான ஆகார வேட்டையில் இறங்கினோம்.

பயணங்கள் தொடரும்...

Wednesday, January 22, 2014

அங்கோர் வாட் - தங்கக் கதவு

Phimeanakas 3D வடிவமைப்பு Source: .angkor-planet.com

’கண்ணி வெடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்கள் அரசின் உதவி ஊதியம் ஏதும் ஆவண செய்யப்பட்டுள்ளதா?’


‘இல்லை. அவர்களாகவே அவர்களை கவனித்துக் கொள்ளும் நிலை தான். இந்த அங்கோர் பார்க் பகுதிகளில் கூட அவர்கள் இருக்கிறார்கள். பிறகு சந்திப்பீர்கள்.’ என்றார் ச்சேன்.

கம்போடியாவில் இருக்கும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். கண்ணி வெடிகள் மிக சுலபத்தில் புதைக்கப்பட்டுவிட்டன ஆனால் அதை அகற்றும் பணியோ உயிர் போகும் செயல். ஒரு கண்ணி வெடியை அகற்ற சராசரியாக 1200 அமேரிக்க டாலர்கள் செலவாகின்றது. கம்போடியா போன்ற ஏழை நாட்டுக்கு இது பெரும் சுமை. ஆகவே உலக நாடுகளின் நன்கொடையை கொண்டே இப்பணிகள் நடைபெறுகின்றன.

கண்ணி வெடியை அகற்றும் பணியில் அக்கி ரா Source: archcomm.arch.tamu.edu
ரியல் ஹீரோஸ் Source: archcomm.arch.tamu.edu


கம்போடிய கண்ணி வெடிகளை பற்றி பேசும் போது அக்கி ரா எனும் கம்போடிய தனி மனிதனையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். கம்போடியாவில் கண்ணி வெடி பொருட் காட்சி சாலையை ஆரம்பித்தவர் இவர். அக்கி ரா தனது பத்தாவது வயதில் கட்டாய இராணுவ அடிமையாக்கப்பட்டார். போல் போட்டின் அராஜக அட்சியில் நூற்றுக்கும் மேட்பட்ட கண்ணி வெடிகளை இவர் புதைத்திருக்கிறார். கெமர் ஆட்சி சீர் நிலைக்கு வந்த பின் அக்கி ரா கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார். ஆயிரக்கணக்கான வெடிகளை இவர் அகற்றியுள்ளார்.

கண்ணி வெடிகள் மரண எண்ணிக்கையை அதிகரிக்க புத்கைக்கப்பட்டவை அல்ல. அவை உடல் ஊன எண்ணிக்கையை அதிகரிக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டன. போர்களில் மரணங்கள் புறம் தள்ளப்படுபவை. அவை மறக்கப்படும். உடல் ஊனமோ நெடுங் கால பாதிப்பை கொடுப்பவை. அதன் தாக்கம் ஏனைய படை பலத்தையும் பாதிக்கும். போர்களில் நெடுநாள் பாதிப்புகளுக்கு கையாளப்படும் மிக மலிவான கருவி கண்ணி வெடி. செற்ப வெடி மருந்தும் சில ஆணிகளும் அதற்கு போதும் என்பது அக்கி ராவின் கருத்து.

ச்சேனுடன் பேசியபடி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். கோல் ச்சேன் ஏதாகினும் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டே இருந்தார். கூடவே கொஞ்சம் குபீர் சிரிப்புக்கான நகைச்சுவைகள். பயணிகள் கலைப்பு தெரியாமல் இருப்பதற்கான அவர் தொழில் உக்திகள் இவை.

இன்றைய நிலையில் Phimeanakas
தொடர்ந்து நாங்கள் பார்த்த இடம் Phimeanakas. இந்த புராதன கட்டிடம் பலமாகவே சிதிலமாகியுள்ளது. பிரமிட் போன்ற மூன்று அடுக்குகளோடு உச்சியின் நடுவில் ஒரு கதவு. அங்கோர் தோம் பெருங் கோட்டை பகுதியில் இதுவும் பத்தோடு பதினொன்றாக உள்ளது. சரித்திர ஆதாரத்தின் படி இக்கட்டிடம் தங்கத்தால் ஆன அரண்மனையாகும். 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராஜேந்திரவர்மனால் கட்டபட்டு பின் இரண்டாம் சூரியவர்மனால் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இன்று இந்துக் கோவிலாக Phimeanakas அழைக்கப்படுவதன் காரணம் மர்மமானதே. இறந்த அரசனின் மீது வைக்கப்பட்ட சிவலிங்கம் கூட இதற்கு காரணமாக இருக்காலாம்.


Pheimeanakas தொடர்பான கர்ண பரம்பரை கதை ஒன்றும் உள்ளது. மறைவாய் சொல்ல வேண்டிய கதை என்பதால் பெண்களும், இளையோரும், முதியோரும் 18 வயதுக்கும் குறைவானோரும் அடுத்த பத்தியை ஸ்கீப் செய்துவிட்டு படிக்கலாம். கீழே கதை.


யசோதரபுர காலத்தில் Pheimeanakas தங்கத்தால் ஆன அரண்மனையாக இருந்தது. அதில் அரசனின் ஏகபட்ட மனைவிகளும் சேடிப் பெண்களும் இருந்திருக்கிறார்கள். அரண்மனைக்குள் நுழைவதற்கு பெண்களுக்கு மட்டும் தான் உரிமை என்பது வரலாற்று உண்மை. தினமும் முதல் ஜாமத்தில் ஒன்பது தலை கொண்ட நாகம் பெண் உருவம் கொண்டு பிரதான அறையில் ஆஜராகிவிடுமாம். அந்த அறையில் அரசன் மட்டுமே நுழைய முடியும். பட்டத்து ராணியாக இருந்தாலும் தூக்க வியாதியில் கூட அந்த அறையை எட்டிப் பார்க்க கூடாது என்பது எழுதப்படாத விதி. முதல் ஜாமம் முழுக்க நாகத்தை குஷிபடுத்திவிட்டு இரண்டாம் ஜாமமே தன் ஏனைய மனைவிகளோடு அவன் குஷியாக இருக்க முடியும். ஒரு வேளை நாகம் பெண் உரு கொண்டு வரமால் போய்விட்டால் அது குறுகிய காலத்தில் அரசன் இறப்பதற்கான அறிகுறி என்பதும் நாகப் பெண்ணோடு அரசன் கூட தவறுவது நாட்டின் சுபிட்சத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதும் கெமர் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகும்.

North Khleang இன்றய நிலை
Pheimeanakas போன்ற வடிவமைப்பைக் கொண்ட மேலும் இரு கட்டிடங்கள் உள்ளன. அவை North Khleang மற்றும் South Khleang என அழைக்கப்படுகிறது. இவ்விரு கட்டிடங்களும் வெவ்வேறு கால கட்டத்திலான அரசர்களால் கட்டப்பட்டது. இக்கட்டிடங்களின் பயன்பாடு இன்னமும் சில ஆச்சரிய குறிகளோடு உள்ளது. இதன் சுவர்களில் இருக்கும் கல்வெட்டுகளின் அடிப்படையில் இவை அரச விருந்தினருக்கும், தூதுவர்களுக்கும் தங்கும் விடுதியாக பயன்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Terrace of Elephant அழகான யானை கூட்டங்களோடு
மேற்கூறிய இடங்களை பார்த்துக் கொண்டு வரும் போது நீங்கள் யானைகளின் மேல் நிற்பது போன்றதொரு மேல்தளத்தை அடைவீர்கள். அவ்விடம் Terrace of Elephant என அழைக்கப்படும். உலோகங்களாலும் யானை தந்தங்களாலும் அலங்கரிக்கப்பட்ட இடமாக இதைக் கூறுகிறார்கள். இன்று நாம் காண்பதோ வயோதிக கிழட்டு யானை சுவர்களை மட்டுமே. அரசன் நிகழ்வுகளை அமர்ந்து காணும் மேல் தளமே இந்த Terrace of Elephant. வெற்றி அடைந்த போர் வீரர்கள் கூடும் இடமாகவும், மக்களவையாகவும், மைதானமாகவும் இவ்விடம் இருந்துள்ளது.
300 மீட்டருக்கும் அதிகமாக யானை புடைப்புச் சித்திரங்கள். 
Terrace of Elephant தளத்தில் இருந்து நாம் கவனிக்கையில் எதிரே சில தனிக் கோபுரங்கள் தெரிகின்றன. அவை கோபுரங்கள் அல்ல. பலி பீடங்கள். அதையும் அரசன் கண் எதிரே கவனிக்கும் படியே அமைத்திருக்கிறார்கள். மொத்தம் 12 கோபுரங்கள் இருந்துள்ளன. தற்சமயம் அவை எண்ணிக்கையில் சற்றே குறைந்துள்ளன. அந்த தண்டனைகள் எப்படி நிறைவேற்றப்பட்டன என்பதற்கான சில குறிப்புகள் காணப்படுகின்றன. மனிதனை வதைக்கும் செயல்களை சிந்திப்பதில் மனிதன் சளைத்தவன் அல்ல. அவனது கிரியேட்டிவிட்டி அங்கே காட்டாறாக பெருக்கெடுக்கிறது.
பயணங்கள் தொடரும்...

Thursday, December 12, 2013

அங்கோர் வாட் 3- பேசும் கற்கள்

கெமர் கல்வெட்டு
கல் சொல்லும் கதை:

அரச கட்டளை: ஸ்ரீ பிங்கலேஷ்வரா படகிற்கு 3 ’கனன்’ உப்பும்*, குபோன் கம்ரதன் படகிற்கு 3 ‘கனன்’ உப்பும், சர்வஷ்ரமாவின் இரு படகுகளுக்கு 4 ‘கனன்’ உப்பும், ஸ்ரீ பட்டேஷ்வரா மற்றும் ஸ்ரீ புஷ்கேஷ்வரா படகுகளுக்கு 2 ‘கனன்’ உப்பும் வழங்க வேண்டும். அரச கட்டளைப்படி உப்புகள் தீர்த்தகிராம துறைமுகத்தில் விநியோகிக்கப்படும். இங்கு வரும் போதும் அல்லது புறப்படும் போதும் இந்நிபந்தனை விதிக்கப்படும். இவ்விதியை தடுப்போரும், மீறுவோரும் தண்டனைக்குட்படுவர். 

Source : Inscription, the basis of our knowledge of history. - George Coedes

உப்பு*- பண்டைய கால வணிகத்தின் மதிப்பு மிகுந்த பொருள். Salt எனும் வார்த்தையில் இருந்து உருவானதே Salary.

கல்லின் கதை: 

தென் இந்திய எழுத்து வகையை போல் இருக்கும் இக்கல்வெட்டு பண்டைய கெமர் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினோரு வரிகள் உள்ளன. 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கம்போடியாவின் ‘கண்டல்’ எனும் ஊரின் வயல் வெளியில் புதைந்திருந்த இக்கல் தற்சமயம் ப்னோம் பேன் மியூசியத்தில் உள்ளது. இக்கல்வெட்டை உரிமையாக்கிக்கொள்ள சில போராட்டங்களும் விசாரனைகளும் நடந்தது தனிக்கதை. மேற்காணும் கட்டளையை சுங்கத்துறையின் வரி விதிப்பை போலவே கருதமுடிகிறது.

********

பாற்கடலை கடையும் காட்சி
பயணக் கலைப்பு எனும் சொல்லைக் கூட நினைத்துப் பார்க்கவில்லை. நூற்றாண்டுகளாக காடுகளுக்குள் தன்னை மறைத்துக் கொண்ட கலைப் பொக்கிஷத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவளே ஓங்கி இருந்தது. நாங்கள் யசோதரபுத்திற்குச் செல்கிறோம். ஆனால் இன்று அது அப்படி அழைக்கப்படவில்லை. 

தூர வாசலில் பெரிய முகம். மோனாலிசா சிரிப்பைப் போன்றதொரு பாவனையை காண முடிகிறது. டாவின்சியை சில நூற்றாண்டுகள் விச்சிய பெருமை அதைச் செதுக்கிய சிற்பியையே சேரும். இதுவும் அர்த்தம் காண முடியாத புன்னகையே. உள் நோக்கி நடக்க மேலும் மேலும் முகங்கள். உள் நுழையும் முன் வெளி புரத்தைக் காண்போம். 

வாசல் நோக்கிய பாதையின் இருபக்கமும் பாம்பின் உடலை இழுத்துக் கொண்டிருக்கும் பெருச் சிலைகளின் வரிசை. மலைக்க வைக்கும் தொடக்கம். ஒவ்வொரு சிலையும் இரண்டு சுமோ வீரனை ஒத்திருக்கிறது. பாற்கடலை கடையும் வருணனை. அமுதச் சுரபிக்காக அசுரக் கூட்டத்தை ஏமாற்றிய கடவுளின் கதை. இந்த தேவக் கூட்டமும் அசுரக் கூட்டமும் கடைந்து எடுத்த பொன் கோபுரம் உள்ளே உள்ளது. இன்று பொன் இல்லாத கோபுரமாக உள்ளது.

அங்கோர் வாட்டை காட்டினும் பெரிய சுற்றளவைக் கொண்டது அங்கோர் தோம் எனப்படும் இக்கோவில். மாபெரும் முகக் கோபுரங்களைக் கொண்ட கோவில் தான் இந்த அங்கோர் தோம். அங்கோர் தோம், பேயோன் மற்றும் தாப்ரோம் எனும் மூன்று கோவில்கள் அருகருகே உள்ளன. இம்மூன்று கோவில்களும் வடிவமைப்பில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் தாப்ரோம் எனும் கோவில் கொஞ்சம் மாறுபடுகிறது. அங்கோர் தோமில் இருக்கும் நாம் உட்புரத்தில் சென்று காணும் கோவில் பேயோன். 
முகம் மறு சீர்ரமைக்கப்பட்டுள்ளது. பிக்பக்கம் அகழி.

அங்கோர் தோம் இன்று ஒரு கோவில் என அழைக்கப்படுகிறது. காரணம் அதன் கட்டிட வடிவமைப்பு. 13-ஆம் நூற்றாண்டில் அது ஏழாம் ஜெயவர்மனுக்கும் அவனையடுத்த மூன்றாம் இந்திரவர்மனுக்கும் யசோதரபுரத்தின் கோட்டையாக இருந்துள்ளது. உங்களது அங்கோர் பயணத்தின் போது குறைந்தபட்சம் ஒரு நாளையாவது இங்குச் செலவிடுங்கள். அங்கோர் காலத்து கடைசி தலைநகரான இவ்விடத்தில் நீஙகள் கண்டு மலைக்க வேண்டிய கலையம்சங்கள் ஏராளம். 

அங்கோர் கட்டிட பகுதிகளில் நாம் காணும் பொதுவான அம்சங்களில் ஒன்று அகழிகள். படகுகளை வைத்துச் சுற்றி வரும் அளவுக்கு பெரிய அகழிகளை காண முடிகிறது. சரித்திர குறிப்பேடுகள் எல்லா கோவில்களுக்கும் அகழிகள் இருந்ததாக கூறுகிறது. ஆனால் பலவும் வற்றி போய்விட்டன. சில கோவிகளில் ஒரு பக்கம் மட்டும் தேங்கிய குட்டையைப் போல் அகழிகள் காணப்படுகிறது. 
பாழ்பட்ட பாம்பின் உடல்
கெமர் அரசர்கள் தங்களை கடவுளின் அவதாரமாகவும், அரசன் என்பவன் கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகவும் நினைத்து தனது சாம்ராஜிய செல்வச் செருக்கை காண்பிக்கவே இந்த ஒப்பற்ற கோவில்களையும், கட்டிடங்களையும் கட்டி இருக்கிறார்கள். கோவில்கள் வலுவாக இருக்கவே இந்த அகழிகள் கட்டபட்டதாக கூறப்படுகிறது. சுற்றிலும் அகழிகள் இருக்க கோட்டை/கோவிலுக்கு நுழையும் பாதை குறுகளாகிறது. நுழை பாதைகளை வீரர்கள் பாதுகாக்க அகழிகளில் முதலைகள் இராணுவ வேலையைச் செய்திருக்கின்றன. 

அங்கோரில் நாம் இன்று காணும் சிலைகள் எல்லாம் முழுமையாய் இருப்பதில்லை. சில அங்கோர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. சில கிடைக்காமலே போய்விட்டன. நான் முன்பு சொன்ன சுமோ அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அதே கதிதான். முக்கியமாக பார்வதி, லட்சுமி போன்ற பெண் தெய்வங்களின் சிலைகளின் முகப் பகுதி மட்டும் செதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. சரித்திர சுவடு மிகும் இடங்ளில் நிகழ்ந்த கலைத் திருட்டுகள் பல கோடி டாலர் மதிப்புகளை எட்டுகிறது. சரித்திரத்தில் கலைத் திருடர்கள் என ஒரு தனிக் கட்டுரையையே எழுதலாம். 
பெருமுகக் கோபுரங்கள். மூன்று முகங்கள்.

சிறுவியாபாரிகள் கோவிலின் முகப்புப் பகுதியில் புத்தகங்களையும், காணொளி சீடிகளையும், கைவினைப் பொருட்களையும் துரத்தி துரத்தி விற்பனை செய்கிறார்கள். அட இன்னும் சுற்றிப் பார்க்கவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் இப்படியா என நாமும் ஓட வேண்டி உள்ளது. நீங்கள் யானை சவாரி செய்தும் இங்குச் சுற்றி பார்க்கலாம். சிகப்பு வெல்வெட் துணியை போர்த்தி யானைகளை தயார் நிலையில் வைத்துள்ளார்கள் பாகன்கள். நாங்கள் யானை சவாரியை தேர்ந்தெடுக்கவில்லை. 

அங்கோர் பயணத்தில் நீங்கள் காண இருப்பது நீண்ட நெடுந்தூர கலை அம்சங்களை. ஆக நீங்கள் நடந்தாக வேண்டும். உங்கள் கால்களில் ஆணி ஏற்படுமாயினும், மனம் ததும்பும் கேளிக்கை பயணங்களை விரும்புவோராக இருப்பீர்கள் என்றாலோ இப்பயணம் உங்களுக்கு உவகை அளிக்காமல் போகலாம். சிற்பக் கலைகளின் பின்ணியை அறிந்துக் கொள்ள புத்தகங்களும், தகுதியான பயண வழிகாட்டியும் உங்களுக்கு உதவலாம். 
எண்னற்ற முகக் கோபுரங்கள்
அங்கோர் தோமின் பெருமுகக் கோபுரங்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு முகங்களை கொண்டுள்ளது. ஆனால் நீங்கள் எந்தப் பக்கம் நின்று கவனித்தாலும் மூன்றினை மட்டுமே காண முடியும். பின்னால் இருக்கும் ஒன்று மறைந்துவிடும். அவ்வளவு நேர்த்தியான கட்டமைப்பு. 

உள் பகுதியில் இடிபாடுகள் நிறைந்த ஒரு தளத்தில் கட்டுமான பணிகள் நடந்துக் கொண்டிருந்தது. யுனேஸ்கோவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடப்பதாக கோல் ச்சேன் கூறினார். 

அங்கோர் பகுதிகளில் அவ்வளவு சுலபத்தில் மறு சீரமைப்புப் பணிகளை செய்துவிட முடியாது. கட்டிட அமைப்பு இருந்ததன் ஆதாரம் காட்டப்பட வேண்டும். அது மூன்று அடுக்குகளான குழுவினரால் ஒப்புக் கொண்ட பிறகே சீரமைப்புப் பணிகளை தொடர முடியும். சீரமைப்புப் பணிகள் மூன்றாண்டுகளாக நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேயோன் எனும் தங்கக் கோபுரத்திலான கோவில் மட்டும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா?

இன்றய நவீனம் அந்நாட்களில் இருந்திருந்தால் ஒட்டு மொத்த உலகையும் அடிமையாக்கி கோவில்கள் எழுப்பி இருப்பான் இந்த ஏழாம் ஜெயவர்மன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

பயணங்கள் தொடரும்...

Monday, December 09, 2013

அங்கோர் வாட் 2 - கம்போடிய பயணம் படங்களுடன்

பொற்கதிரில் பொழிவாய் சிதறும் சிரிப்பு

’May you have what really matters- in future may you marry thousands and thousands of husbands' - A Record of Cambodia The Land and its People - Page 56 (Young Girls)


'Zhentan' எனும் சடங்கு முறையைக் கேள்விபட்டதுண்டா? வயதுக்கு வந்த பெண் திருமணம் செய்துக் கொடுக்கப்படும் முன் மத போதகனால் கன்னி கழிக்கப்பட வேண்டும் என்பதே இச்சடங்கின் அர்த்தம். A Record of Cambodia The Land and its People எனும் நூலில் இக்குறிப்பு காணப்படுகிறது. சியம் ரிப் பயணத்திற்கு முன் கம்போடியாவை பற்றி அறிந்து வைத்துக் கொள்ள சில புத்தகங்களை வாங்கினேன். அதில் இந்தப் புத்தகம் தனி சிறப்பு மிக்கது. 


1296-1297-ஆண்டுகளில் அன்றைய யசோதரபுரம் என அழைக்கப்படும் அங்கோர் நகரத்திற்குச் சென்ற ஒரு சீனத் தூதுவனின் குறிப்புகளில் இருந்து இப்புத்தகம் இயற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சீனக் குறிப்பில் இருந்து பிரன்சு மொழிக்கும் பின் பிரன்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு The Customs Of Cambodia (1902) எனும் நூலாக பதிப்பிக்கப்பட்டது. 2007-ல் நேரடியாக சீனக் குறிப்பில் இருந்து ஆங்கிலத்திற்கு A Record of Cambodia The Land and its People எனும் புத்தகமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்புகளை எழுதிய சீன தூதுவனின் பெயர் ச்சாவ் தாக்குவான் (Zhou Daguan 1266–1346). தாக்குவான் மூன்றாம் இந்திரவர்மனின் (Indravarma iii 1295-1308) காலகட்டத்தில் அங்குப் பயணித்திருக்கிறார். அக்காலகட்டத்தில் யசோதரபுரத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்த ஒரே நேரடி சாட்சி ச்சாவ் தாக்குவான் மட்டுமே. 

கம்போடிய நாணயம் - ரியல்
மெற்சொன்ன சடங்கு முறை ஒரு கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. அன்றய மக்களின் நிலை இதுவென அறிய முடிகிறது. ச்சாவ் தாக்குவான் சென்ற காலத்தில் சைவம், வைணவம் மற்றும் புத்தம் என மூன்று மதங்களும் அங்கு அமலில் இருந்துள்ளன. பூணூல் மற்றும் காவி அணிந்தவர்களை பண்டிதர்கள் என குறிப்பிடுகிறார் தாக்குவான். அவரின் குறிப்புகளை மேலும் ஆங்காங்கு அடுத்து வரும் பத்திகளில் மேற்கோள் காட்டுகிறேன். நீங்கள் அங்கோர் பயணம் செல்வதாக இருந்தால் இந்த புத்தகத்தையும் வாங்கிப் படித்துவிடுங்கள். அன்றைய நிலையில் இங்கிருக்கும் கோவில்கள் எப்படி இருந்தன என்பதையும் இன்றைய நிலையில் நீங்கள் காணும் மாபெரும் கற்சிப்பங்களுக்குமான வேறுபாட்டை உணர்வீர்கள்.

நாங்கள் அங்கு சென்ற நேரம் சியம் ரிப் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு அதிகாலை நேரம் அது. எப்பொழுதும் இந்நிலையில் இருப்பதில்லை. நாங்கள் அங்குச் செல்வதற்கு இரு நாட்களுக்கு முன் தான் கம்போடிய பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. இவ்வாண்டின் தேர்தல் கொஞ்சம் சவாலாக இருந்ததாகவும். மக்களின் எழுச்சி நிலை ஓங்கி இருந்ததால் நெடுநாட்களாக ஆட்சியில் இருந்தக் கட்சிக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். மலேசியாவின் அரசியல் நிலையே அங்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டேன். ’இரு நாட்களாக ஊடகச் செய்திகள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் வெற்றியாளர் யார் என்பதும் தெரியவில்லை. அதிகமான மக்கள் தேர்தல் செய்தியை அறிந்துக் கொள்ள விடுமுறையில் இருக்கிறார்கள். கலவரம் வருமென’ அஞ்சுவதாக பயண வழிகாட்டி ச்சேன் வயிற்றில் புலியைக் கறைத்தார்.

டிலக்ஸ் அறையின் கட்டில் பகுதி
‘ச்சேன் நான் உங்களுக்கு மடல் அனுப்பி இருந்தேன் இல்லையா. எங்களின் விடுதிக்கான வழி தெரியும் தானே’ ‘ஓ... நிச்சயமாக. SKY WAY HOTEL தானே. தாராளமாக செல்லலாம்’. ’நாங்கள் குளித்துத் தயாராகிவிடுகின்றோம். பிறகு காலைச் சிற்றுண்டிக்கு அழைத்துச் செல்லுங்கள்.’ ‘ஆகட்டும் சார்’. ’நாங்கள் தங்கும் விடுதி எப்படி? நல்லவிதமானதா?’ ச்சேன்னின் நல்ல பதிலை எதிர்ப்பார்த்தேன். ‘நல்ல விடுதி. ஜப்பானியர்கள் அதிகம் அந்த விடுதியைத் தேர்ந்தெடுப்பார்கள். கொஞ்சம் விலை மலிவு’. 
விடுதியின் வெளிபுரம்
நாம் செல்லும் பயணங்களில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயங்களில் விடுதியும் ஒன்று. சில வேளைகளில் ரொம்பவே சொதப்பலாகிவிடும். இதனால் விடுமுறைக்கான மன நிலை மொத்தமாய் குழைந்துவிடும். இது தொடர்பாக சுஜாதா தனது பயணத்தின் போது பட்ட அவஸ்தையை நயகரா எனும் கதையில் அழகாகச் சொல்லி இருப்பார். SKY WAY HOTEL, SIEM REAP மூன்று நட்சத்திர தங்கும் விடுதியாகும். நீச்சல் குளம், இணைய வசதியும், காலைச் சிற்றுண்டியும் உண்டு. நான்கு நாள் மூன்று இரவுகள் நாங்கள் அங்கு தங்கினோம். நாங்கள் 3 டீலக்ஸ் அறைகளை பதிவு செய்திருந்தோம். அறை ஒன்று மூன்று இரவுகளுக்கு 250 ரிங்கிட்/USD78 மட்டுமே. 

கம்போடிய நாணயம் ரியல் என அழைக்கப்படுகிறது. ரியலின் மதிப்பு மிகக் குறைவு. ஆதலால் செல்லும் இடங்கள் யாவும் அமேரிக்க டாலரின் புலக்கம் தான். ஒரு டாலர் 4200 ரியலுக்கு சமம். விமான டிக்கட், விடுதி செலவு மற்றும் பயண வழிகாட்டிக்கான பணம் யாவும் அங்குச் செல்லும் முன் இணையம் வழி செலுத்திவிட்டேன். அங்கு கொண்டு சென்றது உணவு மற்றும் வழிச் செலவுக்கான பணம் மட்டுமே. உணவுக்கான பணம் மட்டுமே கொஞ்சம் அதிகமாக செலவானது. ஒரு வேளை சாப்பாடு சராசரியாக 6 பேருக்கும் 40 டாலர் வரையில் செலவானது. மலேசிய நாணயத்திற்கு ஒப்பிடும் போது இது கொஞ்சம் அதிகமானதே. சர்வதேச சுற்றுலா தளம் என்பதால் இவ்விலை பட்டியலை நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். 

உங்கள் வழித் துணைக்கு பயனாக அமையும் மேலும் ஒரு புத்தகம் Lonely Planet Cambodia. Lonely Planet உலகின் அனைத்து நாடுகளுக்குமான சுற்றுலாக் குறிப்புகளைத் தொகுத்திருப்பார்கள். ஒரு கையடக்க அகராதியைப் போல் புரட்டிக் கொள்ள முடியும். கம்போடியாவுக்கான புத்தகத்தை புரட்டிய போது சில இந்திய உணவகங்களும் அங்கிருப்பதை உணர்ந்தேன். அங்குச் சென்றும் காலைச் சிற்றுண்டிக்கு இந்திய உணவகத்தை தான் நாடினோம். ச்சேன் காட்டியதில் புத்தகத்தை காட்டினும் மேலும் பல இந்திய உணவகங்கள் பெருகி இருந்தன. அதிகாலை என்பதால் பல உணவகங்கள் திறக்கப்படாமல் இருந்தன. 

Curry Walla உணவகம்
Curry Wallaவில் மட்டும் எங்களை உபசரிப்பதாகச் சொன்னார்கள். அனைத்தும் வட இந்திய உணவு வகைகள். வேலையாட்கள் வட இந்தியரும் கம்போடியர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆடர் எடுத்து உடனுக்குடன் வேண்டியதை சமைத்துக் கொடுக்கிறார்கள். உணவுக்கு A கொடுக்கலாம். நான் சப்பாத்தி ஆர்டர் செய்திருந்தேன். இங்கு நாம் சப்பத்தியை சாம்பார் அல்லது சட்டினி வகைகளோடு முக்கி எடுத்து ருசி பார்ப்போம். அங்கு ஒரு கிண்ணத்தில் கெட்டித் தயிரை கொடுத்தார்கள். சப்பாத்திக்கும் தயிருக்குமான காம்பினேஷன் டிவைன். 

சியம் ரிப்பில் சர்வ தேச அளவிலான எல்லா உணவுகளும் கிடைக்கின்றன. நாட்டுக்கு ஒரு கடை விகிதம் திறந்திருப்பார்கள் போல. முடிந்த அளவுக்கு பதம் பார்த்துவிடுங்கள். வாய்ப்புகள் எல்லா சமயங்களிலும் அமைவதில்லை. 

நுழைவுச் சீட்டு எடுக்கும் இடம், நாங்கள் எடுத்தது மூன்று நாட்களுக்கான சீட்டு
சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வர்மன்கள் கட்டி வைத்த கட்டிடங்களை காண ஆயத்தமானோம். அதற்கு முன் அங்கோர் பார்க் எனப்படும் கோவில்களும் கலைச் சிற்பங்களும் நிறைந்த அப்பகுதியை சுற்றி பார்க்க உரிமச் சீட்டு எடுக்க வேண்டும். எல்லா பணமும் மொத்தமாக பயண வழிகாட்டியிடம் செலுத்திவிட்டதால் பாஸுக்கான விலையும் சேர்க்கப்பட்டிருந்தது. படம் பிடிக்க முகத்தை காட்டி பாஸ் வாங்கி மாட்டிக் கொண்டோம். 

முதலாவதாக நாங்கள் காணச் சென்ற இடத்தை இப்படி குறிப்பிடுகிறார் சீனத் தூதுவன் ச்சாவ் தாகுவான்:

‘the wall of the city are about twenty li (10 kilometers) in circumference. there are five gateways, each of them with two gates, one in front of the other.'

'in the center of the capital is a gold tower, flanked by twenty or so stone towers and hundred or so stone chambers'. A Record of Cambodia The Land and its People - Page 47&48 (the city and its walls)

பயணங்கள் தொடரும்...

Thursday, December 05, 2013

அங்கோர் வாட் - கம்போடிய பயணம் படங்களுடன்

எனது பாஸ்போர்ட், இமிகிரேஷனுக்கான வெள்ளை அட்டையும், சுங்கத்துறைக்கான நீல அட்டையும்
சரித்திர சுவடுகளை படித்து உணர்ந்து கொள்வதிலும், நேரிடையாக கண்டு உணர்வதிலும் காத தூர வேறுபாடுகள் உண்டு. முன் நோக்கி ஓடும் முன்னோடிகள் சரித்திரத்தை பழம் பெருமை பேசும் கருவியாகவே கருதுகிறார்கள். அதை தூர எரிந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது இவர்களின் வாதம். 

வரலாற்று பின்னணிகளை அலசல் செய்து தெரிந்து கொள்வதில் எனக்கு அலாதி பிரியம். முடிந்த அளவில் அதை இங்கு பகிர்ந்தும் வந்துள்ளேன். இப்பொழுதும் ஒரு சுவாரசியமான பயணத்தை முடிந்த மட்டில் இங்கு கொடுக்க எத்தனிக்கிறேன். 

சியம் ரிப் கம்போடியாவின் இரண்டாவது பெருநகரம். முதல் நிலையில் உள்ளது அதன் தலைநகரான ப்நோம் பேன். கம்போடியா ஆசியாவில் மூன்றாம் நிலையில் இருக்கும் ஏழை நாடு. பல போர்களாலும் படையெடுப்புகளாலும் பலமான அடிகளை வாங்கிய நாடு. இன்னமும் அதன் தாக்கத்தை நாம் அங்கு காண முடிகிறது. போல் போட்டின் ஆட்சி காலத்தின் யுத்த கால நிகழ்வுகளை வாசிக்க விரும்புவோர் Survival in the Killing Fields எனும் நூலினை வாசித்துப் பார்க்கலாம். 
தரையிறங்கும் முன்
அதிக வளர்ச்சி என ஏதும் கூற முடியாத நகரம் சியம் ரிப். 20 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஒரு கிராமப் பகுதியில் வாழ்ந்திருப்பீர்கள் என்றால் அது தான் இன்றைய சியம் ரிப். நகரப் பகுதிகளில் மட்டுமே மின்சார வசதிகள் காணப்படுகிறது. நான் சென்றது அதன் மழை கால சமயத்தில். கால்வாய் வசதிகள் போதுமானதாக அமைக்கப்படவில்லை என்பதால் சிறு மழைக்குக் கூட நீர் தேக்கங்கள் ஏற்படுகிறது. சியம் என்பது தாய்லாந்தின் புரதான பெயர். சியம் ரிப் என்பது தாய்லாந்து வீழ்ந்த பகுதி என அறியப்படுகிறது. கம்போடியர்கள் இன்றளவிலும் தாய்லாந்துக்காரர்களை தன் எதிரியாகவே கருதுகிறார்கள். 

எல்லையோர வாய்க்கால் வரப்பு தகறாருகள் இவர்களுக்கு உண்டு. கம்போடிய தாய்லாந்து எல்லையில் இருக்கும் ஒரு புரதான கோவில் யாருக்கு சொந்தம் என்பதிலான பிரச்சனை இன்னும் நிலுவையில் உள்ளது. தாய்லாந்தில் இருந்து கம்போடியாவுக்கு பயணம் செய்வது ஒரு மலை முகட்டில் இருந்து உங்களை கீழே உருட்டிவிடுவதற்கு சமமாகும். மிக மோசமான பாதைகளை கடந்து வந்தாக வேண்டும். இரு நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கம் சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் வருமானமும் யுனேஸ்கோவின் மாணியமும் இதற்கு முக்கிய காரணம். இருவரும் சலிக்காமல் விடாப்பிடியாகவே இருக்கிறார்கள். 

விமான நிலையத்திற்கு வெளியே- துடைத்து வைத்த சுத்தம்
மலேசியர்கள் கம்போடியாச் செல்ல விசா தேவை இல்லை. விசா கட்டுப்பாடு உள்ள நாடுகள் கம்போடிய இமிகிரேஷனில் 'Visa On Arrival' எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதற்கான கட்டணம் தெரியவில்லை. மலேசியர்கள் விசா இல்லாமல் 30 நாட்களுக்கான பயண உரிமத்தை பெற்றுக் கொள்ள முடியும். 30 நாட்களுக்கும் அதிகமாக தங்க விரும்புவோர் விசா நிபந்தனைக்குட்படுவார்கள். 

சியம் ரிப் முழுவதும் சுற்றுலா பயணிகளை நம்பி செயல்படுகிறது. சுற்றுலா பயணிகள் இல்லாத சியம் ரிப் நகரத்தை இவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்துக் கலாச்சாரத்தையும் மரபுக் கலைகளையும் அமல்படுத்திய ஒரு பழம் பெரும் நாகரீகத்தை காண புற்றிசல்களை போல் கூட்டம் கிளம்பி வந்துக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் ஐரோப்பிய வெள்ளைத் தோல்கள் அதிக அளவில் வருகிறார்கள். அதனை அடுத்து ஜப்பானியர்களும் சீனர்களும் அதிகமாக வருகை புரிகிறார்கள் என்பது சற்று ஆச்சரியமான தகவல் தான். 

விமான நிலையத்தினுள் இந்த வெள்ளை யானை பலரையும் கவர்ந்தது
வாட் என்பது கோவிலை குறிக்கும். இன்றய அங்கோர் எனப்படும் சமவெளி முன் ஒரு காலத்தில் யசோதரபுரம், ஹரிஹரலாயம், ஈஸ்வரபுரம் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. அங்கோர் வாட் என்பது சூரியவர்மன் எனும் கெமர்(கம்போடியா) அரசனால் கட்டப்பட்ட கோவிலாகும். இன்றும் அது தமிழர்களால் கட்டபட்டது எனவதிடுவோர் உண்டு. சூரியவர்மன் தமிழன் என சொல்பவர்களும் உண்டு. அங்கு வாழ்ந்த மக்கள் இந்துவாக இருந்திருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் நிச்சயமாக அந்த மண்ணின் மைந்தர்களாகிய கம்போடியர்கள் தான். அக்கோவில்களை கட்டி எழுப்பியதும் கம்போடிய அரசர்கள் தான். ஹிந்து மதமும் அரசாட்சி முறைகளும் வணிகத்தின் வழி அங்கு பரப்பப்பட்டுள்ளது. 

அங்கோர் பகுதியில் நூற்றுக்கும் மெற்பட்ட கோவில்கள் இருந்துள்ளன. ஆனால் இன்று நம்மால் காண முடிந்தது அவற்றில் சொற்பமானவை மட்டுமே. பல கோவில்கள் போர்களலும் இயற்கை பேரிடர்களாலும் பலமான பாதிப்பிற்குட்பட்டுள்ளன. சிற்ப கலை திருட்டுகளும் நடந்துள்ளன. இதில் அங்கோர் வாட் மட்டும் கொஞ்சம் தப்பித்துவிட்டது. அதுவே இன்றளவும் முழுமையாக காணப்படுகிறது. அதனால் தான் என்னவோ சியம் ரிப் போகும் பலரும் அங்கோர் வாட் காணச் செல்வதாக அதை ஒரு ‘லெண்ட் மார்க்காக’ குறிப்பிடுகிறார்கள். 
எல்லையோர சர்ச்சைக்கு காரணமான Preah Viher கோவில் - Photo thanks to TOGO website
நான், மனைவி, அப்பா, அம்மா, என் நண்பர் மாறன் மற்றும் அவர் மனைவி என 6 பேர் இந்த அங்கோர் பயணத்தில் கலந்துக் கொண்டோம். ஏர் ஆசியாவின் மலிவு விற்பனையின் போது போக வர விமான சீட்டு ஒரு ஆளுக்கு 270 ரிங்கிட் ஆனது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சியம் ரிப் விமான நிலையத்துக்கு 2.30 மணி நேர பயணம். தரையிறங்கும் முன் அந்நாட்டின் நிலபரப்பு மிக விசித்திரமாகவே காட்சியளித்தது. சமவெளியும் நீர் நிலை பகுதிகளும் அங்கும் இங்குமாக காணப்பட்டது. 

பயணத்திற்கு முன்பாகவே ஹோட்டல் மற்றும் பயண வழிகாட்டியையும் முன் பதிவு செய்திருந்தேன். சியம் ரிப்பின் ஹோட்டல்கள் மிக மலிவான விலையில் கிடைக்கின்றன. TripAdvisor, Booking, AirAsia Go, Agoda போன்ற இணைய தளங்கள் இதற்கு மிகவும் பயனாக இருந்தன. பயண வழிகாட்டிக்கு ஒரு சில நிருவனங்களை அனுகினேன். தேர்ந்தெடுக்க நினைத்த வழிகாட்டியை இணைய பயனர்கள் அவர்களின் பயண அனுபவங்களில் எழுதியதின் அடிப்படையில் தேர்வு செய்தேன். எனது நல்லூழ், கோல் ச்சேன் எனும் அவ்வழிகாட்டி அருமையான மனிதராக அமைந்தார். 

சியம் ரிப் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விசா பிரச்சனைகள் ஏதும் இல்லாததால் இமிகிரேஷன் விவகாரங்கள் இனிதே முடிந்தது. விசா வேண்டுவோர் ஒரு பக்கம் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தார்கள். 30 நாள் முத்திரையோடு கம்போடியாவில் காலடி வைத்தோம். ச்சேன் எனது பெயர் பலகையோடு காத்திருந்தார். விசாலமான இருக்கைகள் கொண்ட ‘வேனுக்கு’ எங்களை அழைத்துச் சென்றார். அதிசயமாக வேனின் கதவுகளை காணவில்லை. ‘நண்பா இது மலேசியா இல்லை. இந்த வண்டியின் கதவுகள் அந்தப் பக்கம் இருக்கிறது பார்’ என்றார் ச்சேன். கம்போடியாவின் வண்டிகள் யாவும் இட பக்க வழக்கம் கொண்டவை. நமது போகும் வழி அவர்களுக்கு வரும் வழியென சாலை அமைப்பு. அறியாமையின் நகைப்போடு எங்களின் விடுதியை நோக்கி பயணப்பட்டோம்... 

பயணங்கள் தொடரும்...