Showing posts with label Angkor Tom. Show all posts
Showing posts with label Angkor Tom. Show all posts

Wednesday, January 22, 2014

அங்கோர் வாட் - தங்கக் கதவு

Phimeanakas 3D வடிவமைப்பு Source: .angkor-planet.com

’கண்ணி வெடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்கள் அரசின் உதவி ஊதியம் ஏதும் ஆவண செய்யப்பட்டுள்ளதா?’


‘இல்லை. அவர்களாகவே அவர்களை கவனித்துக் கொள்ளும் நிலை தான். இந்த அங்கோர் பார்க் பகுதிகளில் கூட அவர்கள் இருக்கிறார்கள். பிறகு சந்திப்பீர்கள்.’ என்றார் ச்சேன்.

கம்போடியாவில் இருக்கும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். கண்ணி வெடிகள் மிக சுலபத்தில் புதைக்கப்பட்டுவிட்டன ஆனால் அதை அகற்றும் பணியோ உயிர் போகும் செயல். ஒரு கண்ணி வெடியை அகற்ற சராசரியாக 1200 அமேரிக்க டாலர்கள் செலவாகின்றது. கம்போடியா போன்ற ஏழை நாட்டுக்கு இது பெரும் சுமை. ஆகவே உலக நாடுகளின் நன்கொடையை கொண்டே இப்பணிகள் நடைபெறுகின்றன.

கண்ணி வெடியை அகற்றும் பணியில் அக்கி ரா Source: archcomm.arch.tamu.edu
ரியல் ஹீரோஸ் Source: archcomm.arch.tamu.edu


கம்போடிய கண்ணி வெடிகளை பற்றி பேசும் போது அக்கி ரா எனும் கம்போடிய தனி மனிதனையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். கம்போடியாவில் கண்ணி வெடி பொருட் காட்சி சாலையை ஆரம்பித்தவர் இவர். அக்கி ரா தனது பத்தாவது வயதில் கட்டாய இராணுவ அடிமையாக்கப்பட்டார். போல் போட்டின் அராஜக அட்சியில் நூற்றுக்கும் மேட்பட்ட கண்ணி வெடிகளை இவர் புதைத்திருக்கிறார். கெமர் ஆட்சி சீர் நிலைக்கு வந்த பின் அக்கி ரா கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார். ஆயிரக்கணக்கான வெடிகளை இவர் அகற்றியுள்ளார்.

கண்ணி வெடிகள் மரண எண்ணிக்கையை அதிகரிக்க புத்கைக்கப்பட்டவை அல்ல. அவை உடல் ஊன எண்ணிக்கையை அதிகரிக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டன. போர்களில் மரணங்கள் புறம் தள்ளப்படுபவை. அவை மறக்கப்படும். உடல் ஊனமோ நெடுங் கால பாதிப்பை கொடுப்பவை. அதன் தாக்கம் ஏனைய படை பலத்தையும் பாதிக்கும். போர்களில் நெடுநாள் பாதிப்புகளுக்கு கையாளப்படும் மிக மலிவான கருவி கண்ணி வெடி. செற்ப வெடி மருந்தும் சில ஆணிகளும் அதற்கு போதும் என்பது அக்கி ராவின் கருத்து.

ச்சேனுடன் பேசியபடி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். கோல் ச்சேன் ஏதாகினும் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டே இருந்தார். கூடவே கொஞ்சம் குபீர் சிரிப்புக்கான நகைச்சுவைகள். பயணிகள் கலைப்பு தெரியாமல் இருப்பதற்கான அவர் தொழில் உக்திகள் இவை.

இன்றைய நிலையில் Phimeanakas
தொடர்ந்து நாங்கள் பார்த்த இடம் Phimeanakas. இந்த புராதன கட்டிடம் பலமாகவே சிதிலமாகியுள்ளது. பிரமிட் போன்ற மூன்று அடுக்குகளோடு உச்சியின் நடுவில் ஒரு கதவு. அங்கோர் தோம் பெருங் கோட்டை பகுதியில் இதுவும் பத்தோடு பதினொன்றாக உள்ளது. சரித்திர ஆதாரத்தின் படி இக்கட்டிடம் தங்கத்தால் ஆன அரண்மனையாகும். 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராஜேந்திரவர்மனால் கட்டபட்டு பின் இரண்டாம் சூரியவர்மனால் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இன்று இந்துக் கோவிலாக Phimeanakas அழைக்கப்படுவதன் காரணம் மர்மமானதே. இறந்த அரசனின் மீது வைக்கப்பட்ட சிவலிங்கம் கூட இதற்கு காரணமாக இருக்காலாம்.


Pheimeanakas தொடர்பான கர்ண பரம்பரை கதை ஒன்றும் உள்ளது. மறைவாய் சொல்ல வேண்டிய கதை என்பதால் பெண்களும், இளையோரும், முதியோரும் 18 வயதுக்கும் குறைவானோரும் அடுத்த பத்தியை ஸ்கீப் செய்துவிட்டு படிக்கலாம். கீழே கதை.


யசோதரபுர காலத்தில் Pheimeanakas தங்கத்தால் ஆன அரண்மனையாக இருந்தது. அதில் அரசனின் ஏகபட்ட மனைவிகளும் சேடிப் பெண்களும் இருந்திருக்கிறார்கள். அரண்மனைக்குள் நுழைவதற்கு பெண்களுக்கு மட்டும் தான் உரிமை என்பது வரலாற்று உண்மை. தினமும் முதல் ஜாமத்தில் ஒன்பது தலை கொண்ட நாகம் பெண் உருவம் கொண்டு பிரதான அறையில் ஆஜராகிவிடுமாம். அந்த அறையில் அரசன் மட்டுமே நுழைய முடியும். பட்டத்து ராணியாக இருந்தாலும் தூக்க வியாதியில் கூட அந்த அறையை எட்டிப் பார்க்க கூடாது என்பது எழுதப்படாத விதி. முதல் ஜாமம் முழுக்க நாகத்தை குஷிபடுத்திவிட்டு இரண்டாம் ஜாமமே தன் ஏனைய மனைவிகளோடு அவன் குஷியாக இருக்க முடியும். ஒரு வேளை நாகம் பெண் உரு கொண்டு வரமால் போய்விட்டால் அது குறுகிய காலத்தில் அரசன் இறப்பதற்கான அறிகுறி என்பதும் நாகப் பெண்ணோடு அரசன் கூட தவறுவது நாட்டின் சுபிட்சத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதும் கெமர் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகும்.

North Khleang இன்றய நிலை
Pheimeanakas போன்ற வடிவமைப்பைக் கொண்ட மேலும் இரு கட்டிடங்கள் உள்ளன. அவை North Khleang மற்றும் South Khleang என அழைக்கப்படுகிறது. இவ்விரு கட்டிடங்களும் வெவ்வேறு கால கட்டத்திலான அரசர்களால் கட்டப்பட்டது. இக்கட்டிடங்களின் பயன்பாடு இன்னமும் சில ஆச்சரிய குறிகளோடு உள்ளது. இதன் சுவர்களில் இருக்கும் கல்வெட்டுகளின் அடிப்படையில் இவை அரச விருந்தினருக்கும், தூதுவர்களுக்கும் தங்கும் விடுதியாக பயன்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Terrace of Elephant அழகான யானை கூட்டங்களோடு
மேற்கூறிய இடங்களை பார்த்துக் கொண்டு வரும் போது நீங்கள் யானைகளின் மேல் நிற்பது போன்றதொரு மேல்தளத்தை அடைவீர்கள். அவ்விடம் Terrace of Elephant என அழைக்கப்படும். உலோகங்களாலும் யானை தந்தங்களாலும் அலங்கரிக்கப்பட்ட இடமாக இதைக் கூறுகிறார்கள். இன்று நாம் காண்பதோ வயோதிக கிழட்டு யானை சுவர்களை மட்டுமே. அரசன் நிகழ்வுகளை அமர்ந்து காணும் மேல் தளமே இந்த Terrace of Elephant. வெற்றி அடைந்த போர் வீரர்கள் கூடும் இடமாகவும், மக்களவையாகவும், மைதானமாகவும் இவ்விடம் இருந்துள்ளது.
300 மீட்டருக்கும் அதிகமாக யானை புடைப்புச் சித்திரங்கள். 
Terrace of Elephant தளத்தில் இருந்து நாம் கவனிக்கையில் எதிரே சில தனிக் கோபுரங்கள் தெரிகின்றன. அவை கோபுரங்கள் அல்ல. பலி பீடங்கள். அதையும் அரசன் கண் எதிரே கவனிக்கும் படியே அமைத்திருக்கிறார்கள். மொத்தம் 12 கோபுரங்கள் இருந்துள்ளன. தற்சமயம் அவை எண்ணிக்கையில் சற்றே குறைந்துள்ளன. அந்த தண்டனைகள் எப்படி நிறைவேற்றப்பட்டன என்பதற்கான சில குறிப்புகள் காணப்படுகின்றன. மனிதனை வதைக்கும் செயல்களை சிந்திப்பதில் மனிதன் சளைத்தவன் அல்ல. அவனது கிரியேட்டிவிட்டி அங்கே காட்டாறாக பெருக்கெடுக்கிறது.
பயணங்கள் தொடரும்...

Thursday, December 12, 2013

அங்கோர் வாட் 3- பேசும் கற்கள்

கெமர் கல்வெட்டு
கல் சொல்லும் கதை:

அரச கட்டளை: ஸ்ரீ பிங்கலேஷ்வரா படகிற்கு 3 ’கனன்’ உப்பும்*, குபோன் கம்ரதன் படகிற்கு 3 ‘கனன்’ உப்பும், சர்வஷ்ரமாவின் இரு படகுகளுக்கு 4 ‘கனன்’ உப்பும், ஸ்ரீ பட்டேஷ்வரா மற்றும் ஸ்ரீ புஷ்கேஷ்வரா படகுகளுக்கு 2 ‘கனன்’ உப்பும் வழங்க வேண்டும். அரச கட்டளைப்படி உப்புகள் தீர்த்தகிராம துறைமுகத்தில் விநியோகிக்கப்படும். இங்கு வரும் போதும் அல்லது புறப்படும் போதும் இந்நிபந்தனை விதிக்கப்படும். இவ்விதியை தடுப்போரும், மீறுவோரும் தண்டனைக்குட்படுவர். 

Source : Inscription, the basis of our knowledge of history. - George Coedes

உப்பு*- பண்டைய கால வணிகத்தின் மதிப்பு மிகுந்த பொருள். Salt எனும் வார்த்தையில் இருந்து உருவானதே Salary.

கல்லின் கதை: 

தென் இந்திய எழுத்து வகையை போல் இருக்கும் இக்கல்வெட்டு பண்டைய கெமர் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினோரு வரிகள் உள்ளன. 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கம்போடியாவின் ‘கண்டல்’ எனும் ஊரின் வயல் வெளியில் புதைந்திருந்த இக்கல் தற்சமயம் ப்னோம் பேன் மியூசியத்தில் உள்ளது. இக்கல்வெட்டை உரிமையாக்கிக்கொள்ள சில போராட்டங்களும் விசாரனைகளும் நடந்தது தனிக்கதை. மேற்காணும் கட்டளையை சுங்கத்துறையின் வரி விதிப்பை போலவே கருதமுடிகிறது.

********

பாற்கடலை கடையும் காட்சி
பயணக் கலைப்பு எனும் சொல்லைக் கூட நினைத்துப் பார்க்கவில்லை. நூற்றாண்டுகளாக காடுகளுக்குள் தன்னை மறைத்துக் கொண்ட கலைப் பொக்கிஷத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவளே ஓங்கி இருந்தது. நாங்கள் யசோதரபுத்திற்குச் செல்கிறோம். ஆனால் இன்று அது அப்படி அழைக்கப்படவில்லை. 

தூர வாசலில் பெரிய முகம். மோனாலிசா சிரிப்பைப் போன்றதொரு பாவனையை காண முடிகிறது. டாவின்சியை சில நூற்றாண்டுகள் விச்சிய பெருமை அதைச் செதுக்கிய சிற்பியையே சேரும். இதுவும் அர்த்தம் காண முடியாத புன்னகையே. உள் நோக்கி நடக்க மேலும் மேலும் முகங்கள். உள் நுழையும் முன் வெளி புரத்தைக் காண்போம். 

வாசல் நோக்கிய பாதையின் இருபக்கமும் பாம்பின் உடலை இழுத்துக் கொண்டிருக்கும் பெருச் சிலைகளின் வரிசை. மலைக்க வைக்கும் தொடக்கம். ஒவ்வொரு சிலையும் இரண்டு சுமோ வீரனை ஒத்திருக்கிறது. பாற்கடலை கடையும் வருணனை. அமுதச் சுரபிக்காக அசுரக் கூட்டத்தை ஏமாற்றிய கடவுளின் கதை. இந்த தேவக் கூட்டமும் அசுரக் கூட்டமும் கடைந்து எடுத்த பொன் கோபுரம் உள்ளே உள்ளது. இன்று பொன் இல்லாத கோபுரமாக உள்ளது.

அங்கோர் வாட்டை காட்டினும் பெரிய சுற்றளவைக் கொண்டது அங்கோர் தோம் எனப்படும் இக்கோவில். மாபெரும் முகக் கோபுரங்களைக் கொண்ட கோவில் தான் இந்த அங்கோர் தோம். அங்கோர் தோம், பேயோன் மற்றும் தாப்ரோம் எனும் மூன்று கோவில்கள் அருகருகே உள்ளன. இம்மூன்று கோவில்களும் வடிவமைப்பில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் தாப்ரோம் எனும் கோவில் கொஞ்சம் மாறுபடுகிறது. அங்கோர் தோமில் இருக்கும் நாம் உட்புரத்தில் சென்று காணும் கோவில் பேயோன். 
முகம் மறு சீர்ரமைக்கப்பட்டுள்ளது. பிக்பக்கம் அகழி.

அங்கோர் தோம் இன்று ஒரு கோவில் என அழைக்கப்படுகிறது. காரணம் அதன் கட்டிட வடிவமைப்பு. 13-ஆம் நூற்றாண்டில் அது ஏழாம் ஜெயவர்மனுக்கும் அவனையடுத்த மூன்றாம் இந்திரவர்மனுக்கும் யசோதரபுரத்தின் கோட்டையாக இருந்துள்ளது. உங்களது அங்கோர் பயணத்தின் போது குறைந்தபட்சம் ஒரு நாளையாவது இங்குச் செலவிடுங்கள். அங்கோர் காலத்து கடைசி தலைநகரான இவ்விடத்தில் நீஙகள் கண்டு மலைக்க வேண்டிய கலையம்சங்கள் ஏராளம். 

அங்கோர் கட்டிட பகுதிகளில் நாம் காணும் பொதுவான அம்சங்களில் ஒன்று அகழிகள். படகுகளை வைத்துச் சுற்றி வரும் அளவுக்கு பெரிய அகழிகளை காண முடிகிறது. சரித்திர குறிப்பேடுகள் எல்லா கோவில்களுக்கும் அகழிகள் இருந்ததாக கூறுகிறது. ஆனால் பலவும் வற்றி போய்விட்டன. சில கோவிகளில் ஒரு பக்கம் மட்டும் தேங்கிய குட்டையைப் போல் அகழிகள் காணப்படுகிறது. 
பாழ்பட்ட பாம்பின் உடல்
கெமர் அரசர்கள் தங்களை கடவுளின் அவதாரமாகவும், அரசன் என்பவன் கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகவும் நினைத்து தனது சாம்ராஜிய செல்வச் செருக்கை காண்பிக்கவே இந்த ஒப்பற்ற கோவில்களையும், கட்டிடங்களையும் கட்டி இருக்கிறார்கள். கோவில்கள் வலுவாக இருக்கவே இந்த அகழிகள் கட்டபட்டதாக கூறப்படுகிறது. சுற்றிலும் அகழிகள் இருக்க கோட்டை/கோவிலுக்கு நுழையும் பாதை குறுகளாகிறது. நுழை பாதைகளை வீரர்கள் பாதுகாக்க அகழிகளில் முதலைகள் இராணுவ வேலையைச் செய்திருக்கின்றன. 

அங்கோரில் நாம் இன்று காணும் சிலைகள் எல்லாம் முழுமையாய் இருப்பதில்லை. சில அங்கோர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. சில கிடைக்காமலே போய்விட்டன. நான் முன்பு சொன்ன சுமோ அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அதே கதிதான். முக்கியமாக பார்வதி, லட்சுமி போன்ற பெண் தெய்வங்களின் சிலைகளின் முகப் பகுதி மட்டும் செதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. சரித்திர சுவடு மிகும் இடங்ளில் நிகழ்ந்த கலைத் திருட்டுகள் பல கோடி டாலர் மதிப்புகளை எட்டுகிறது. சரித்திரத்தில் கலைத் திருடர்கள் என ஒரு தனிக் கட்டுரையையே எழுதலாம். 
பெருமுகக் கோபுரங்கள். மூன்று முகங்கள்.

சிறுவியாபாரிகள் கோவிலின் முகப்புப் பகுதியில் புத்தகங்களையும், காணொளி சீடிகளையும், கைவினைப் பொருட்களையும் துரத்தி துரத்தி விற்பனை செய்கிறார்கள். அட இன்னும் சுற்றிப் பார்க்கவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் இப்படியா என நாமும் ஓட வேண்டி உள்ளது. நீங்கள் யானை சவாரி செய்தும் இங்குச் சுற்றி பார்க்கலாம். சிகப்பு வெல்வெட் துணியை போர்த்தி யானைகளை தயார் நிலையில் வைத்துள்ளார்கள் பாகன்கள். நாங்கள் யானை சவாரியை தேர்ந்தெடுக்கவில்லை. 

அங்கோர் பயணத்தில் நீங்கள் காண இருப்பது நீண்ட நெடுந்தூர கலை அம்சங்களை. ஆக நீங்கள் நடந்தாக வேண்டும். உங்கள் கால்களில் ஆணி ஏற்படுமாயினும், மனம் ததும்பும் கேளிக்கை பயணங்களை விரும்புவோராக இருப்பீர்கள் என்றாலோ இப்பயணம் உங்களுக்கு உவகை அளிக்காமல் போகலாம். சிற்பக் கலைகளின் பின்ணியை அறிந்துக் கொள்ள புத்தகங்களும், தகுதியான பயண வழிகாட்டியும் உங்களுக்கு உதவலாம். 
எண்னற்ற முகக் கோபுரங்கள்
அங்கோர் தோமின் பெருமுகக் கோபுரங்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு முகங்களை கொண்டுள்ளது. ஆனால் நீங்கள் எந்தப் பக்கம் நின்று கவனித்தாலும் மூன்றினை மட்டுமே காண முடியும். பின்னால் இருக்கும் ஒன்று மறைந்துவிடும். அவ்வளவு நேர்த்தியான கட்டமைப்பு. 

உள் பகுதியில் இடிபாடுகள் நிறைந்த ஒரு தளத்தில் கட்டுமான பணிகள் நடந்துக் கொண்டிருந்தது. யுனேஸ்கோவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடப்பதாக கோல் ச்சேன் கூறினார். 

அங்கோர் பகுதிகளில் அவ்வளவு சுலபத்தில் மறு சீரமைப்புப் பணிகளை செய்துவிட முடியாது. கட்டிட அமைப்பு இருந்ததன் ஆதாரம் காட்டப்பட வேண்டும். அது மூன்று அடுக்குகளான குழுவினரால் ஒப்புக் கொண்ட பிறகே சீரமைப்புப் பணிகளை தொடர முடியும். சீரமைப்புப் பணிகள் மூன்றாண்டுகளாக நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேயோன் எனும் தங்கக் கோபுரத்திலான கோவில் மட்டும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா?

இன்றய நவீனம் அந்நாட்களில் இருந்திருந்தால் ஒட்டு மொத்த உலகையும் அடிமையாக்கி கோவில்கள் எழுப்பி இருப்பான் இந்த ஏழாம் ஜெயவர்மன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

பயணங்கள் தொடரும்...