1976-ஆம் ஆண்டு மலேசியாவின் இரண்டாம் பிரதமரான துன் அப்துல் ரசாக் இரத்தப் புற்று நோயினால் பாதிப்படைந்து இறந்தார். அக்காலகட்டத்தில் அவரின் மூத்த மகனான ட்த்தோ ஸ்ரீ நஜிப் அவர்களை மக்கள் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். நஜிப் 23.07.1953-ஆம் ஆண்டு பிறந்தவர்.
தந்தையின் மரணத்தின் சமயம் அவருக்கு 23-வயது தான். தந்தையின் இறப்பிற்கு பின் அவரின் தேர்தல் பகுதியான பகாங் மாநிலத்தின் பெக்கானில் நஜிப் போட்டியிட எத்தனித்தார். அதற்கான வாய்ப்பும் இலகுவாக அமைந்தது.
இடைத் தேர்தலில் நஜிப் வெற்றி பெற்றார். அது அனுதாபத்தின் பேரில் கண்ட வெற்றி என்பதாக மக்கள் பேசியதை மறுக்க முடியாமல் தான் இருந்தது. தொடர்ந்து 1978-ஆம் ஆண்டு நடை பெற்ற பொது தேர்தலில் பாஸ்(மலேய இஸ்லாமிய கட்சி) கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கண்டார்.

ஆரம்ப காலத்தில் பெக்கான் பகுதியின் அம்னோ இளைஞர் அணி தலைவராக 5 ஆண்டுகளுக்கு 1976-ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். 1980-ஆம் ஆண்டு பெக்கான் பகுதிக்கு இணை தலைவராகவும் 1982-ஆம் ஆண்டு பெக்கான் பகுதி தலைவராகவும் பகாங் மாநில அம்னோ தொடர்புக் குழு இணை தலைவராகவும் பதவி ஏற்றார்.
இதனைத் தொடர்ந்து மேலும் சில அரசாங்க பதவிகளை 1982-ஆம் ஆண்டு வரை வகித்து வந்தார். 1982-ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் சட்மன்ற உறுபினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின் 1986-ஆம் ஆண்டு வரையில் பகாங் மாநில முதல் அமைச்சர் பதவியை நிர்வகித்தார். அதே ஆண்டு மத்திய அரசினால் விளையாட்டு மற்றும் கலாச்சார அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 1998-ஆம் ஆண்டிற்கான கமென்வெல்த் போட்டி நடத்த மலேசியா தேர்வு பெற வாய்ப்புகள் தேடி கொடுத்தார். 1990-ஆம் ஆண்டு தற்காப்பு அமைச்சராக பதவி ஏற்றார் நஜிப்.
1993 மற்றும் 1996 ஆம் ஆண்டு அம்னோ கட்சி தேர்தலில் 1202 வாக்குகள் பெற்று கட்சியின் இணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999-ஆம் ஆண்டும் கட்சியின் பெருவாரியான ஓட்டுகளை பெற்றார். இருப்பினும் 1999-ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் நஜீப் ஸ்லிம் மெஜோரிட்டி எனப்படும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் மிக மோசம வாக்குகளை பெற்றது அக்காலகட்டமாக தான் இருக்க முடியும்.
அச்சமயம் துணை பிரதமராக இருந்த டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம் வெளியேற்றப்பட்ட காலமாகும். இருப்பினும் அதன் பின் வந்த தேர்தல்களில் நஜிப் தனது நிலையை தற்காத்துக் கொண்டார். ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான நஜிப் அம்னோவில் சிறந்த சேவையாளர் என போற்றப்படுபவர்.
நஜிப் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியினை கோலாலம்பூரின் சொண்ட் ஜான் பள்ளியில் பயின்றார். அதன் பின் இங்கிலாந்தின் மொல்வன் பாய்ஸ் கல்லூரியிலும், நார்டிங்கம் பல்கலைக்கழகத்திலும் பயின்று பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றார்.
2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நஜிப் நாட்டின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அரசியல் வாழ்க்கையில் 33 வருடங்களை கடந்தவர் நஜிப். இக்காலகட்டங்கள் நாட்டிற்கு மிகச் சிறப்பான ஆட்சியை நடத்துவதற்கான தகுதிகளை அவருக்கு வழங்கி இருக்க வேண்டும் என்றே கருத வேண்டும். நாட்டின் அரசியலுக்கு பூகம்பமாக அமைந்தது கடந்த பொதுத் தேர்தல். காரணம் மக்களின் நம்பிக்கையின்மை என்று கூட சொல்லலாம். இன்று வரையினும் பல குளறுபடிகள் இருந்தபடியே இருக்கிறது.
இன்றைய நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை திருப்திகரமாக அமைத்துக் கொடுப்பதன் வழியே நாட்டின் சுபிட்சமான ஆட்சிக்கு வழிவகுக்கும் என்பதனை மறுக்க இயலாது. பொருளாதார நெருக்கடிகள் நாட்டின் முதுகெழும்பை முறுக்கிக் கொண்டிருக்கின்றன. குற்றச் செயல்கள் பெருக்கம் காண்கிறது. வேலை வாய்ப்பும் குறைந்துள்ளது. இப்பிரச்சனைகளுக்கு சரியான அடித்தளம் அமைந்தாலன்றி அரசியல் பிரச்சனைகள் சுலபத்தில் அமைதி கொள்ளாது.
(துன் அப்துல்லா அஹ்மட் படாவி - ஆட்சி 2004-2009)
இன்று நாட்டின் 6-வது பிரதமராக பதவி ஏற்றிருக்கும் டத்தோ நஜிப் முதல் கட்டமாக பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது. இன்றய மலேசிய அரசியல் நிலை பல வகையினும் மேம்பாடடைந்திருக்கிறது.
மக்கள் ஒவ்வொரு அரசியல் நிகழ்வினையும் முன் நிறுத்திச் சிந்திக்கிறார்கள். இதில் இடது சாரி சிந்தனைகள் மறுக்க முடியாத ஒன்றாகும். அவற்றினை நன்முறையில் கையாள்வது மிக அவசியம். மேலாதிக்க கட்டுபாடுகள் அரசுக்கெதிரான சிந்தனையாளர்களை அதிகரிக்கவேச் செய்யும் என்பது கடந்த நாட்களில் நாம் கண்ட உண்மை.
(டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் - 2009 - இனி)
பொருளாதாரத் துரையில் பட்டம் பெற்ற முதல் பிரதமராக நஜிப் பதவி ஏற்றிருக்கிறார். நாட்டின் பிரச்சனைகளை மட்டுமின்றி தமது கட்சியையும் கவனிப்பு செலுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் அவர் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அம்னோவின் சிறு குளறுபடியும் அக்கட்சியை மட்டுமின்றி தேசிய முன்னணியில் இருக்கும் ஏனைய கூட்டனி கட்சிகளுகளையும் சேர்த்து சிதறடிக்கும் சாத்தியம் கொண்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாத ஒன்றாகும்.
பல்லின மக்களுக்கும் சிறப்பான தலைவராக அமைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களோடு செயல்படுவார் என்று நம்புவோம். அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள். அரசர்கழகு செங்கோன் முறைமை.