Friday, June 27, 2008

விடியலைத் தேடி

“டேய் ராஜபாகு உங்க ஆத்தா அங்க தூக்கு மாட்டிகிடுச்சுடா, ஆட்டம் போட்டுகிட்டு இருக்க, கிறுக்கு பயலே”, என்று வாயில் இருந்த வெற்றிலை எச்சில் தெரிக்க கத்தினாள் காத்தம்மாள் கிழவி. ஐயோ என்ன இது! கிழவியின் வார்த்தைகள் ஆயிரம் சம்மட்டிகளைச் சேர்த்து வைத்து என் இதயத்தில் அடித்ததைப் போல் இருந்தது. காத்தம்மாள் கிழவி எங்கள் கிராமத்தின் ‘செய்தியாளர்’. தகவல் கிடைத்திருக்காமல் இப்படிச் சொல்லியிருக்க மாட்டாள்.

எங்கள் கிராமத்தில் புதன் கிழமை மாலை வேளைகளில் ரொட்டிக்காரர் வருவது வழக்கம். அவரது மோட்டார் சைக்கிளின் ‘ஹார்ன்’ சத்தத்தை கெட்டவுன் என் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். எனக்கு அப்பொழுது ஏழுவயதுதான் இருக்கும். கிராமத்து பகுதியில் உள்ள தமிழ் பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கிய காலகட்டம்.

அன்று ஐந்து மணி வாக்கில் ரொட்டிக்காரரின் மோட்டார் சைக்கிளின் ‘ஹார்ன்’ சத்தம் கேட்டது. என் கால்கள் ஓர் இடமாக நிற்காமல் அலைமோதிக் கொண்டிருந்தது. வாரத்திற்கு ஒரு ரொட்டியாவது வாங்கிச் சுவை பார்க்காவிட்டால் என் மனம் வாடி வதங்கிவிடும். என் தேவையை அறிந்த அம்மா ஐம்பது காசை என் கையில் கொடுத்தார். போய் ரொட்டி வாங்கி சாப்பிடுடா கண்ணா என்று என் தலையை வருடி அனுப்பி வைத்தார். எனக்குப் பிடித்த பால் ரொட்டியை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு அருகில் இருந்த குட்டிச் சுவரில் அமர்ந்துக் கொண்டேன். முதல் கடியை வைப்பதற்குள் காத்தம்மாள் கிழவியின் அதிரடிக் கூச்சல் சத்தம் என்னைச் சிதறடித்தது.

கடவுளே! ஏன் இந்த சோதனை? நான் வெளியே வந்து இன்னும் பதினைந்து நிமிடங்கள் கூட ஆகவில்லையே. அதற்குள் ஏன் அம்மா இப்படி செய்துவிட்டார்? எனக்கு ஆதரவாக இருந்தது அம்மா மட்டும்தானே? இனி யார் என்னைப் பார்த்துக் கொள்வார்கள்? நொடிப் பொழுதில் ஆயிரம் கேள்வி அம்புகள் என்னைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன. சட்டெனச் சுவரில் எட்டிப் பாய்ந்தேன். என் கையில் இருந்த ரொட்டித் துண்டு முண்டியடித்துக் கொண்டு மண்னை கவ்வியது. வீட்டிற்கு விரைந்து ஓடினேன்.

கட்டிலில் அம்மாவின் பிரேதத்தைக் கிடத்தி வைத்திருந்தார்கள். கண்களை திறந்த வண்ணம், சற்று வெளியே தள்ளிய நாக்குடன் அசைவற்ற ஜடமாய் விரைத்து போய் கிடந்தார். என் கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தேன். அனைத்து இறுதிச் சடங்குகளும் நடந்தாகிவிட்டது. என் அப்பாவோ வீட்டு பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இனி என்னை வந்து அழைத்துச் செல்வார் என எதிர்பார்த்துக் காத்திருந்தால் அது என் முட்டாள் தனம்தான்.

நான் சாதரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் அப்பா வெளியூரில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அவ்வப்பொழுது பணம் அனுப்பி வைப்பார். இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்துச் செல்வார். தந்தையின் பாசம் கிடைக்காதவனாய்த் தான் வளர்ந்தேன். இந்தச் சூழலில் என் அம்மா யாருடைய உதவியையும் எதிர் பார்க்கவில்லை. வீட்டு வேலைகள் போக, ஒழிந்த நேரத்தில் சிறு தையல் வேலைகளை செய்து குடும்பச் செலவுகளைப் பார்த்துக் கொள்வார்.

அம்மா இறப்பதற்கு ஓரிறு தினங்களுக்கு முன் அப்பா வீட்டிற்கு வந்தார். இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டையில் என் அம்மாவை அடித்துத் துன்புறுத்தினார் அப்பா. அவர்களின் பேச்சு எனக்கு புரியாத புதிராகவே இருந்தது. பயந்து போனவனாய், காரணம் அறிய பக்குவப்படாதவனாய், தடுக்க பலமில்லாதவனாய் ஓர் ஓரமாய் நின்று அழுது கொண்டிருந்தேன். அப்பா தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு அன்று இரவே எங்கோ கிளம்பிவிட்டார்.

அதுவே நான் அவரைப் பார்த்த இறுதி நாள். வேறோரு பெண்ணுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டதால் தான் இவ்வளவு பிரச்சனைகள் என பின் நாட்களில் அறிந்துக் கொண்டேன். இதன் விளைவாக அனாதையென நடுத்தெருவில் விடப்பட்டேன்.

வீட்டில் காரியம் முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். “பையனை நாங்க அழைச்சிகிட்டு போய் பாத்துக்குறோங்க”, என்றார் என் தாய் மாமன். தன் குடும்பத்தோடு ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்தாரா என்பது இன்றளவில் பதில் கிடைக்காத கேள்விதான். இல்லை இவ்வளவு சொந்தங்கள் இருந்தும் என்னைக் கவனிக்காமல் விட்டால் நாலுபேர் பேசும்படி ஆகிவிடுமோ என்பதற்காக இவ்வாறு கூறினாரோ? அவரது இனிப்பான வார்த்தைகளுக்காக ஊரார் மெச்ச, என்னை அழைத்துச் சென்றார்கள்

வாரங்கள் பல கடந்தது. அவர்களும் என்னைப் பள்ளிக்கு அனுப்புவதாக தெரியவில்லை. வீட்டிலும் என்னை ஒரு பாரமாகவே கருதினர். யாரும் முகம் கொடுத்துப் பேச மாட்டார்கள். மொத்தத்தில் உயிருள்ள ஒரு பொருளாய் நடமாடிக் கொண்டிருந்தேன். என் அம்மாவைச் சம்பந்தப்படுத்தி குத்திப் பேசும் பேச்சுகளும் ஏச்சுகளும் எனக்கு மரத்துப் போய்விட்டது.

“உங்க அம்மா என் கிட்ட கொடுத்து வெச்சிட்டுப் போயிருக்காளா? இல்ல உங்க அப்பன் தான் மாச மாசம் கொட்டிக் குடுக்குறானா? இப்ப படிப்பு ஒன்னுதான் உனக்குக் கேடு”, நான் பள்ளிக் கூடம் போகட்டுமா எனக் கேட்டதற்கு அர்ச்சனை செய்தாள் அத்தை. என் பள்ளிக்கூட கனவுகளுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் சிறு சிறு வேலைகளை செய்துக் கொண்டு வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தேன்.

சில சமயங்களில் அம்மா மீது சிறு கோபங்கள் தோன்றி மறையும். அம்மா மட்டும் இருந்திருந்தால் நான் இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை. நிம்மதியாகப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டுருந்திருப்பேன் என நினைத்து பல நாட்கள் அழுதிருக்கிறேன். நான் அறியாமல் சிறு தவறுகள் செய்தாலும் அதை பெரிதாக்கி அடிவாங்கச் செய்வாள் அத்தை. ஒரு முறை நான் வீட்டை சுத்தமாக துடைக்கவில்லை என பிரச்சனை எழுப்பினாள். “வேளாவேளைக்கு நல்லா தின்னுற தானே, இந்த வேலைய கூட உன்னால ஒழுங்கா செய்ய முடியாதா”, என என் வலது கையில் கம்பியை காய்ச்சி சூடு வைத்தாள்.

சிறு பிள்ளைகளை சித்திரவாதை செய்தால் காவல் துறையினரிடம் புகார் செய்ய வேண்டுமென என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த வயதில் அதையெல்லாம் எப்படி செய்வதென்று எனக்கு தெரியவில்லை. சூடுபட்ட காயத்தால் துடிதுடித்துப் போனேன். அன்றிரவே வீட்டை விட்டுத் தப்பி ஓடினேன். சாலையோரமாக நின்றுக் கொண்டிருந்த லாரியில் ஏறி அமைதியாகப் படுத்துக் கொண்டேன்.

நீண்ட பயணத்திற்கு பிறகு லாரி ஓரிடத்தில் நின்றது. சட்டெனப் பாய்ந்து அங்கிருந்து நகர்ந்தேன். என் பெற்றோரின் சுயநலம் பிள்ளையை எப்படியெல்லாம் பாதிப்படைய செய்கிறது. ஊர் பேர் தெரியாத இடம். ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மக்களின் நகர வாழ்க்கை. என்ன செய்வதென்று அறியாமல் நாதியற்று கிடக்கும் நான்.

“அண்ணே, நீங்க என்ன வேலை கொடுத்தாலும் செய்யுறேன், கொஞ்சம் சாப்பாடு மட்டும் கொடுங்க’, என்றேன் ஒரு ஒட்டுக் கடை ஓரமாக நின்றவாறு. என்னை ஏற இரங்கப் பார்த்தக் கடைகாரர் “சாப்பாடுலாம் ஒன்னும் கிடையாது கிளம்பு”, என விரட்டினார். பசி மயக்கத்தில் உடல் சோர்ந்து போனேன். வெய்யிலின் தாக்கம் என்னை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தது. நான் இரண்டு அடி நகர்ந்திருப்பேன் அந்தக் கடைக்காரர் என்னை அழைத்தார். உணவளித்தார்.

திருப்தியாக உண்டேன். என் கதை முழுவதும் கூறி அழுது தீர்த்தேன். அந்த கடைக்காரர் பெயர் முருகேசு. நல்ல மனிதர். எனக்கு சிறந்த ஆலோசகராக விளங்கியவர். “இதோ பாரு தம்பி, சின்ன பசங்களை வேலைக்கு வைச்சிக்கிறது சட்ட படி குற்றம். பக்கத்தில இருக்கும் அன்பு இல்லத்தில் சேர்த்து விடுறேன், பள்ளிக்கூடத்திற்குப் போய் ஒழுங்கா படிக்கனும் புரியுதா”, என்றார். அவரது ஆதரவான வார்த்தைகள் என் வாழ்வில் ஓளி ஏற்றி வைத்ததைப் போல் சந்தோசமாக இருந்தது. சந்தேகத்தால் தான் ஆரம்பத்தில் விரட்டினார் என பிறகு புரிந்துக் கொண்டேன்.

அன்பு இல்லத்தில் இருந்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். முருகேசு அண்ணன் நேரம் கிடைக்கும் சமயங்களில் என்னை கண்டு செல்வார். நானும் பள்ளி விடுமுறைகளில் அவரது கடைக்குச் சென்று சிறு சிறு உதவிகள் செய்து வருவேன். பல சிரமங்களுக்குப் பின் படிப்பை தொடர்ந்தது, படிப்பின் ‘சுவையை’ எனக்கு உணர்த்தியது. பாடங்களை ‘ருசித்துப்’ படிக்க ஆரம்பித்தேன்.

என் அம்மாவின் ஞாபகம் ஒரு கணமும் என்னை விட்டு பிறிந்ததில்லை. நாளுக்கு நாள் அம்மா மீதிருந்த ஏக்கத்தைவிட கோபமே அதிகரித்தது. எத்தனையோ மாதர்கள் கணவனை பிரிந்த பின்னர் தங்கள் பிள்ளைகளை சிறப்பாக வளர்க்கிறார்கள். ஏன் என் அம்மா மட்டும் என்னை நாதியற்று நடுத்தெருவில் நிற்கும்படி செய்தார்?

****************************************
‘டாக்டர் அந்த ‘பேசன்ட்’ சுயநினைவிற்கு திரும்பிட்டாங்க”, என்றாள் என் அறைக் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் தாதி. என்னை சுதாகரித்துக் கொண்டு பழைய நினைவிலிருந்து திரும்பினேன்.
நான்கு ஐந்து நாட்களுக்கு முன் விஷத்தை குடித்து உயிருக்கு போராடிய பெண்ணை நான் பணிபுரியும் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். நான் மருத்துவனாக வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து இதுபோல தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பல நோயாளிகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இவள் விசயத்தில், கூடவே அழுது கொண்டிருந்த அவளது பிள்ளைகளை பார்க்கையில் என் மனம் நெருடியது. இவளை காப்பாற்ற முடியவில்லையெனில் இந்தப் பிள்ளைக்ளின் கதி என்னவாகும்?

சுயநினைவிற்கு திரும்பிய அவளை காண சென்றேன். தன் பிள்ளைகளை கட்டியணைத்து அழுதவாறு படுத்திருந்தாள். என்னைக் கண்டவுடன் கண்களை துடைத்துக் கொண்டு தன்னை சரிபடுத்திக் கொண்டாள். அவள் அருகில் அமர்ந்து மருந்தோடு மருந்தாக சில புத்திமதிகளைக் கூற விழைந்தேன். அவளை விட்டுச் சென்ற கணவனின் செயலால் தான் இந்தத் தற்கொலை முயற்சியென அறிந்துக் கொண்டேன். இனி பிள்ளைகளுக்காக வாழ்வை தொடர்வாள் என விழியோரம் பொங்கிய அவளது கண்ணீர் சொல்லியது. அந்தச் சிறு பிள்ளைகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய மனத்திருப்தி எனக்கு மகிழ்ச்சியளித்தது.

அதிர்வு விசையில் இருந்த என் கையடக்கத் தொலைபேசி அலறியது. அடுத்த முனையில் என் மனைவி பேசிவிட்டு வைத்தாள் இன்று முருகேசு அண்ணனின் நினைவு நாள். ஆறு ஆண்டுகளுக்கு முன் முதுமையின் காரணமாக அவர் காலமாகிவிட்டார். இப்பொழுது எனக்கு ஐம்பத்து நான்கு வயதாகின்றது. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பார்கள். என் வாழ்வில் தூண்டுகோலாக இருந்தவர் முருகேசு.
என் தாய் போன்றோரின் கோழைத் தனமான செயல்களால் எவ்வளவு பிள்ளைகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களில் பலர் சமுதாயத்திற்கும் நாட்டிக்கும் கேடு விளைவிற்பவர்களாகவும் உருவாகி இருக்கலாம். நான் இன்று மருத்துவனாக உருவாகியிருப்பதற்கு காரணம் முருகேசு அண்ணனை போன்றேரின் நல்ல உள்ளங்களால் தான். அவருக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டுமெனக் கூறி என் மனைவி தொலைபேசி அழைப்பு கொடுத்தாள். வீட்டை அடைந்தவுடன் முருகேசு அண்ணனின் பெயரில் அர்ச்சனை செய்துவரலாம் என என் மனைவி கூறினாள். சரியெனச் சொல்லி துவாலையை இடுப்பில் முடிந்து கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றேன்.

(பி.கு: இது எனது இரண்டாவது சிறுகதை. முன்பு வெட்பிரஸ் தளத்தில் பதிவிடப்பட்டு மீண்டும் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.)

Thursday, June 26, 2008

பின்னூட்டமே பதிவாக (உடையார்)

(நேற்றய பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் இதுவும் ஒன்று. திரு.விஜய் அவருடைய கண்ணோட்டத்தில் உடையார் புத்தகத்தை பற்றி சொல்லி இருக்கிறார். இதை பின்னூட்டமாகவே விட்டுவிடால் பலரையும் போய்ச் சேராது என்ற நோக்கில் பதிவாகப் போடுகிறேன்.)

வணக்கம்

பொன்னியின் செல்வன் ஒரு கற்பனைப் புதினம். ஆழ்வார்க்கடியான், நந்தினி, சேந்தன் அமுதன் போன்றவை கற்பனைப் பாத்திரங்கள். இதில் சேந்தன் அமுதன் அரியணை ஏறும்வரையிலான சம்பவங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன, சில பல கற்பனைச் சம்வங்களோடு. இவ்வாறு கூறுவதால் கல்கியைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். எள்முனையளவும் எனக்கு அத்தகைய நோக்கம் கிடையாது.

உடையார், ராஜராஜ சோழனின் வாழ்வை வேறு தளத்தில் அலசுகிறது. ராஜராஜரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களான தேவார மீட்பு, பெரிய கோயிலைக் கட்டுவித்தல், அதிமுக்கியமாக அவருடைய அந்திமக் காலம் ஆகியவை பொன்னியின் செல்வனில் கூறப்படவில்லை. அந்தக் குறையை உடையார் போக்குகிறது. மேலும் ராஜராஜர் நிகழ்த்திய முக்கியமான யுத்தங்களைப் பற்றியும், அவருடைய காலத்தில் இருந்த சமூகத்தின் அமைப்பையும் பற்றி உடையார் அலசுகிறது. பொன்னியின் செல்வன் நூல் ராஜராஜரை ஒரு காதல் இளைஞனாக (சாக்லேட் பாய்), பிள்ளைக் குறும்புகள் மாறாத ஒரு இளைஞனாக மட்டுமே காட்டுகிறது. முதிர்ந்த அறிவுடன் ஒரு மகத்தான தியாகத்தைச் செய்யும் மகோன்னதத்துடன் அந்த பாத்திரம் முடிவுக்கு வந்துவிடுகிறது.

மேலும் பொன்னியின் செல்வன் புதினத்தின் நாயகன் வல்லவரையர் வந்தியத்தேவர். ஆனால் உடையார் முழுக்க முழுக்க ராஜராஜரை மட்டுமே கதை நாயகராகக் கொண்டது.

உடையாரில் அவருடைய காதல் வாழ்வு மட்டுமல்லாது அவருடைய மணவாழ்வும் விவரிக்கப்பட்டுள்ளது. அவருடைய முதிர் பருவத்தில் பஞ்சவன் மாதேவிக்கும் அவருக்கும் இடையே நிலவிய அனுக்கமான காதல் வாழ்வு பொன்னியின் செல்வனில் விவரிக்கப்பட்ட அருண்மொழிக்கும் வானதிக்கும் இடையிலான காதல் வாழ்வைப் போன்றே சுவைபடக் கூறப் பட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ்த்த இயலாத மகோன்னதங்களை நிகழ்த்திக் காட்டிய ராஜராஜரின் வாழ்வை கல்வெட்டு மற்றும் தாமிரப் பட்டய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியம் உடையார்.

ராஜராஜரைத் தவிரவும், பெரிய கோயில் என்ற கலை அதிசயத்தின் கட்டுமானக் காலத்தில் அதற்கு உறுதுணையாக இருந்த பலருடைய வாழ்வையும் விவரிக்கிற நூலாகவும் உடையார் விளங்குகிறது.
இப்போது தயாரிப்பில் இருக்கும் உளியின் ஓசை என்ற திரைப்படம் கூட பெரிய கோயிலின் கட்டுமாத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு சிற்பின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவையே.

பொன்னியின் செல்வனில் சற்றேறக் குறைய என்பத்திமூண்றாண்டுகள் வாழ்ந்த ராஜராஜரின் வாழ்வில் முதல் முப்பது ஆண்டுகள் கூட விவரிக்கப் படவில்லை என்பது எனக்குள் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. உடையார் அந்தக் குறையை நிவர்த்திக்கிறது.

பொன்னியின் செல்வனைப் போலவே உடையாரும் வாசிப்பிற்குகந்த ஒரு நல்ல நூல் என்பதே இதன் வாயிலாக நான் கூற விழைவது.

நன்றி.

Monday, June 23, 2008

இன்னமும் படிக்காத புத்தகங்கள் (உடையார்)

நான் முன்பு கூறியதைப் போல சரித்திர நாவல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தான். பொன்னியின் செல்வனைப் படிப்பவர்கள் தொடர்ந்து சரித்திர நாவல்களைப் படிக்க விருப்பப்படுவார்கள் என ஐயம் இல்லாமல் கூறலாம்.

முன்பு இந்நாவலை படித்துக் கொண்டிருந்த சமயம், இதை முடித்து விட்டு பாலகுமாரனின் ‘உடையார்’ நாவலை படியுங்கள் என சீ.வீ.ஆர் அண்ணாச்சி சிபாரிசு செய்தார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி தான் உடையார் என்று கூறினார். முன்பு இதைக் கூறும் போது அவர் அமேரிக்காவில் இருந்தார். தற்சமயம் இந்தியா திரும்பியதில் இருந்து அவரை ஜி-டாக்கில் பார்ப்பது அரிதாகிவிட்டது.

இந்நாவலைப் படிப்பதற்கு முன்பாகவே பல விடயங்களை தெரிந்து கொண்டாகிவிட்டது. பொன்னியின் செல்வனைப் போல் இதில் சுவாரசியம் குறைவு எனவும் கூறக் கேள்விப்பட்டேன். இரு ஆசிரியர்களும் அவர்கள் பாணியில், அவர்களுக்கே உரிய நடையில் எழுதி இருப்பார்கள். கல்கியின் எழுத்து நடையை ஏற்றுக் கொண்ட நான் பாலகுமாரனின் பாணியையும் ஏற்றுக் கொள்வேன் என நினைகிறேன்.

ஈப்போ மற்றும் கோலாலம்பூரிலும் பல புத்தகக் கடைகளில் தேடிப் பார்த்துவிட்டேன். கிடைத்தபாடில்லை. கடைசியாகப் பார்த்த கடையில் 6 பாகம் 440 ரிங்கிட் என சொன்னார்கள். பொதுவாக மற்ற கடைகளில் 1 ரூபாய்க்கு 0.25 சென் என கணக்கிடுவார்கள். இந்தக் கடையில் மட்டும் ரூபாய்க்கு 0.37 சென் என கணக்கு போட்டார்கள்.

பிறகு நான் வாடிக்கையாக தமிழ் புத்தகம் வாங்கும் கடைக்காரர் , இந்தியாவில் இருந்து புத்தகம் தருவித்துக் கொடுப்பதாக கூறினார். மொத்த விலை 350 ரிங்கிட் வந்தது. (ஆர்டர் கொடுத்து பிறகு ரத்து செய்துவிட்டேன்).

அன்று நண்பர் வெங்கட்ராமனுடன் ஜீ-டாக்கில் அரட்டை அடிக்கும் போது உடையார் புத்தகத்தை பற்றிக் கேட்டேன். தற்சமயம் அவர் உடையார் படித்துக் கொண்டிருப்பதாகவும், வேண்டும் என்றால் வாங்கி அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன் மூன்று பாகங்களை முதலில் அனுப்பி வைத்துவிட்டார். இன்னும் ஒரு வாரத்திற்குள் வந்துவிடும். வந்ததும் ஆரம்பிக்க வேண்டும். நண்பர் வெங்கட்ராமனுக்கு எனது நன்றி.

பொன்னியின் செல்வன் படித்த போது கிடைத்த இன்பத் தாக்கம் கல்கியின் பார்த்திபன் கனவு படிக்கும் போது கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான். இந்நாவலில் எனக்கு விளங்காத ஐயப்பாடுகள் இன்னமும் உண்டு.

Sunday, June 22, 2008

வலைப்பதிவும் ஒரு வருட நிறைவும்

கடந்த 15.06.2008 உடன் நான் வலையுலகத்திற்கு பிரவேசித்து ஒரு வருடம் நிறைவை அடைகிறது. 2007-ஆம் ஆண்டு நண்பர் ஒருவர் மூலம் தேன்கூடு திரட்டி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஆறு மாத காலமாக கண்டகண்ட இடுகைகளைப் படித்து வந்தேன். யாருடைய பதிவு, யார் எழுதுகிறார்கள் என்றேல்லாம் தெரியாது. பின்னூட்டங்களும் இடத் தெரியாது.

1) ஆரம்ப காலத்தில் என்னை வெகுவாக கவர்ந்தது திரு. சேவியர் அவர்களின் பதிவு. ஆரம்பத்தில் தெரியாவிட்டலும் பின்னாட்களில் அது சேவியர் அவர்களால் எழுதப்படுகிறது என அறிந்து கொண்டேன். இவருடைய “கவிதைச் சாலை” மற்றும் “அலசல்” என இரு பதிவுகளுமே கலக்கலாக தான் இருக்கும்.

2) அடுத்ததாக திரு. சுப்பையா அவர்களின் பதிவும் என்னை அதிகம் கவர்ந்தது. அவரது பல்சுவைப் பதிவின் சிறுகதைகள் அனைத்தும் படித்திருக்கிறேன். ஆஹா, நாமும் இப்படி எழுதினால் நன்றாக இருக்குமே என்று யோசித்ததும் உண்டு. அவர் பதிவுகளின் சிறப்பே வாசகர்களைச் சற்றும் சலிப்புத் தட்டாமல் பதிவின் இறுதி வரைக் கொண்டுச் செல்வது தான்.

3) திரு. மோகன்தாஸ் அவர்களின் பதிவும் மிக ஜனரஞ்சகமாக இருக்கும். இவரது சோழர் பதிவு மற்றும் சிறுகதைகள் அருமை. நட்சத்திரம் எனும் தலைப்பில் இவர் எழுதிய சோழர்கால சிறுகதை என்றும் மறக்க முடியாதது.

4) மற்றபடி ஆரம்பத்தில் நான் அதிகம் சொன்றுவருவது திரு. வெங்கட்ராமன், திரு. ஹரி மற்றும் மைபிரண்ட் போன்றவர்களின் பதிவும் அடங்கும். லக்கி லுக் மற்றும் இட்டிலி வடை பதிவுகள் அனைவரும் வாசிக்கும் ஒன்று என்பதால் அதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை.

இந்த ஒரு வருட காலத்தில் நான் எழுதிய பதிவுகள் மிகக் குறைவானவையே. பதிவு எழுத ஆரம்பித்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டு தட்டுத்தடுமாறி எழுதினேன். நான் சரிவர கற்றது அடிப்படை ஆரம்பத் தமிழ்க் கல்வி மட்டுமே. அதன் பிறகு எழு எட்டு வருடத்திற்குத் தமிழ் வாசிப்பும் எழுத்தும் அறவே இல்லாமல் போனது.

இதற்கு காரணம் நான் படித்தது இஸ்லாமிய இடைநிலைப் பள்ளியில். ஞாயிற்று கிழமை நாளிதழில் வரும் சினிமா துணுக்குகளை புரட்டிப் பார்த்துவிட்டு வைத்துவிடுவேன். அச்சமயத்தில் அது மட்டும்தான் என் தமிழை வளர்க்க நான் எடுத்துக் கொண்ட முயற்சி. என் பள்ளியில் 100 மலாய் மணவர்களுக்கு 2 இந்திய மாணவர்கள் இருப்பார்கள். 15 பேர் இருந்தால் தான் தமிழ் கல்வி பயிலும் வாய்ப்பு கொடுக்கப்படும். நாங்கள் இருந்ததே 4 பேர். அவர்களில் இருவர் ‘பீட்டர் கேஸ்’ . நாங்கள் தமிழ் வகுப்பு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு முற்றிலும் தடைபட்டது.

என்னை மறுபடியும் எழுதவும் வாசிக்கவும் வைத்தது தமிழ் வலையுலகம்தான். எழுத்தும், வாசிப்பும் என் தமிழ் எழுத்து, இலக்கண, இலக்கிய பிழை, யாவற்றையும் திருத்திக் கொள்ளப் பெரிதும் வழி புரியும் என நம்புகிறேன்.

நான் இது வரை எழுதியது நூற்றுக்கும் குறைவான பதிவுகள் தான். சில முறை பதிவேற்றம் செய்யத் தெரியாமலும் சிரமப்பட்டிருக்கிறேன். முக்கியமாக படம் மற்றும் வீடியோ காட்சிகளை ஆரம்பத்தில் எனக்கு வலையேற்றத் தெரியாது.

அச்சமயத்தில் ‘பிளாகரின்’ உபயோகம் எனக்குச் சரியாக தட்டுப்படவில்லை. மலேசிய வலைபதிவர்களின் எண்ணிக்கையும் மிகச் சொற்பமாக இருந்ததால் உதவி கிட்டுவதும் சிரமமாக இருந்தது. ‘வெர்ட்பிரஸ்’ தளத்தின் உபயோகம் சற்று சுலபமாக தொன்றியதால் அதில் எழுத ஆரம்பித்தேன். நீண்ட இடைவேளிக்கு பிறகு மறுபடியும் பிளகருக்கு தாவி எழுதி வருகிறேன்.

இச்சமயத்தில் என் வலைப்பதிவு மேம்பாட்டிற்கு உதவிய மைபிரண்டு, சதீஸ்குமார் மற்றும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். முக்கியமாக, வலைப்பதிவுலக கருத்து பரிமாற்றத்திற்கு பெரிதும் பங்காற்றும் “தமிழ்மணம்” திரட்டிக்கும் என் மனமார்ந்த நன்றி.

செருப்பு



உங்களுக்கு ரஞ்சிதாவ தெரியுமா? எனக்குத் தெரியும். என் கூடப் படிச்சவ. இது நடந்தப்ப எனக்கு வயசு 20 இருக்கும். கல்லூரியில படிச்சிக்கிட்டு இருந்தேன். ரஞ்சிதா மாநிறமா இருப்பா. குதிரை வால் மாதிரி அவ கோரை முடிய பின்னால வலித்துக் கொத்தாகக் கட்டி இருப்பா.

அவள் வகுப்புக்கு வரும்போதெல்லாம் சாதாரணமா தான் உடுத்தி இருப்பா. ஆனா லட்சணமா இருப்பா. அதோ அவ வகுப்புக்கு வந்துகிட்டு இருக்கா. வகுப்புல சில பொண்ணுங்க இருக்காளுங்க. அசின் நயன்தாராங்கிற நெனப்போட தான் சுத்திக்கிட்டு இருப்பாளுங்க. ரஞ்சிதா வகுப்புள்ள நுழையறா.

அவ வகுப்புல நுழைஞ்ச போது அந்த அசின் நயன்தாரா பொண்ணுங்க அவள ஒரு மாதிரியா பாக்குறாளுங்க. அவுங்களுக்குள்ள ஏதோ பேசிக்கிறாளுங்க. ரஞ்சிதா அத கவனிக்காம இல்ல. நம்மளப் பத்திதான் பேசுறாங்கன்னு அவளுக்கே அப்பட்டமா தெரியுது. இன்ன பேசிக்கிறாளுங்கன்னும் யூகிக்க முடியுது. ரஞ்சிதா மனசுக்குள்ள நெனச்சுக்குறா.

“என் செருப்பு, உங்களுக்கு என்னடி வந்துச்சு.”

அந்தப் போலி நடிகைகள் ரஞ்சிதாவப் பாத்துச் சிரிக்கிறாளுங்க. ரஞ்சிதாவுக்கு கோபம் தலைக்கேறிடுச்சு. எரிச்சிடுற வேகத்துல போலி நடிகைகளப் பாத்து மொறைக்கிறா. அவளுகளும் பதிலுக்கு முறைக்கிறாளுங்க.

உண்மைய சொல்லனும்னா ரஞ்சிதா பயந்தாங்கொள்ளிப் பொண்ணு. அவளோட கோபப் பார்வைய அவளால தக்கவைச்சிக்க முடியல. தலைய கீழ போட்டுக்கிட்டு அவ இடத்தை நோக்கி நடக்குறா.

இப்போ சரித்திரப் பாடம். இந்த லெக்சரரைப் பத்தி நான் கண்டிப்பா சொல்லியாகனும். இவுங்க எப்போதும் கண்ணுல அடிக்கிற மாதிரி தான் துணி உடுத்துவாங்க. ஆரஞ்சு மஞ்சள்னு. பாக்கவே கண்ணு கூசும். பிறகு என்னத்த படிக்கிறதுன்னு பல நாள் பாடம் ஆரம்பிச்சதுமே தூங்கிப் போயிருக்கேன்.

அன்னிக்கு ரஞ்சிதா போட்டிருந்த செருப்பு ரொம்ப தேஞ்சு போயிருந்துச்சு. அவ வரும் போது ‘சரக்கு பரக்குனு’ கேட்ட சத்தம் தான் நடந்த கலவரத்துக்குக் காரணம்.

“மாணவர்களே, அடுத்த வாரம் நம் வரலாற்றுக் கழகத்தின் ஆண்டுக் கூட்டம். கூட்டம் முடிந்ததும் விருந்து உபசரிப்பும் இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 15 புள்ளிகள் வழங்கப்படும். நாகரிகமான உடையுடன் வர வேண்டும். கட்டொழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும். இன்றைய பாடம் முடிந்தது, நீங்கள் கிளம்பலாம்.”

ஷாப்பிங் செண்ட்டர்:

ரஞ்சிதா ஷாப்பிங் செண்டருக்கு வந்திருக்கா. அவள கேவலப் படுத்தும் பழைய செருப்பை போட்டுக்கிட்டு ஆண்டுக் கூட்டத்துக்கு அவ போக விரும்பல. விலை குறைவான தூக்குச் செருப்பு தேடிக்கிட்டு இருக்கா. அதை போட்டுக்கிட்டு எப்படி சாதாரணமா நடக்குறதுன்னும் யோசிச்சிக்கிட்டு இருக்கா.

தேடி அலைஞ்சி கடைசியா விலை மலிவா கொடுக்கும் கடைக்கு முன் நிக்கிறா.

“இந்தக் கடைதான் நமக்கு சரிப்படும்” என மனசுல நினைச்சுக்கிட்டா.

“வாங்க மிஸ், எந்த மாதிரி செருப்பு வேணும் உங்களுக்கு?” கச்சிதமான சிரிப்போடு கேக்குறா அந்தக் கடைக்காரப் பொண்ணு.

“எனக்கு தூக்குச் செருப்பு வேணும். 20 வெள்ளிக்கு குறைவா கிடைக்குமா? என்ன கலரா இருந்தாலும் பரவாயில்லை?”

“இல்லைங்க. குறைஞ்ச வெலைன்னு பாத்தீங்கன்னா 39 வெள்ளிக்குதான் இருக்கு.”

“ம்... சரி, சைஸ் 7 கொடுங்க.”

ரஞ்சிதா பட்ஜெட்டுல பெரிய பாறையே விழுந்திடுச்சு.

ரஞ்சிதாவின் வாடகை வீடு:

போன மாசம் வீட்டிலிருந்து கொண்டு வந்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் தான் இனிமேல் அவளுக்கு மூணு வேளை சாப்பாடும். இங்க படிக்கிற காலத்துல இந்த சாப்பாடு அவளுக்கு ரொம்பவே பழகிப் போச்சு. காலையில் வாங்கி வந்த தூக்குச் செருப்பைப் பாக்குறா. ஏனோ தெரியல அவளுக்குள்ள ஒரு எரிச்சல். வீட்டுக் கதவு ஓரத்துல கெடக்கும் பழைய செருப்பப் பாக்குறா. அவளுக்குள்ள ஒரு பரிதாபம் வருது.

பஸ் ஸ்டாப்பில் சாயங்கால வேளையில்:

ரஞ்சிதா கழக கூட்டத்துக்குப் போக நின்னுகிட்டு இருக்கா. அவளால முடிஞ்ச அளவுக்கு அழகா உடுத்தி இருக்கா. முக்கியமா அந்த தூக்குச் செருப்பு போட்டிருக்கா. ரஞ்சிதாவுக்கு அது அசௌகரியமாத் தான் இருக்கு. அவ கால் கெண்டைய அழுத்தி வலியைக் கொடுக்குது. பஸ் வந்ததும் எல்லோரும் அடிச்சிப் புடிச்சு ஏறுறாங்க. ரஞ்சிதாவும் அந்தக் கூட்டத்தில் ஒருத்தியா இருக்கா. அவ கஷ்டப்பட்டு ஏறினாலும் தூக்குச் செருப்பு தடுக்கி விட்டுடுச்சு. கால அழுத்தி வச்சதில அதோட கால் கட்டை ஒடைஞ்சிருச்சு.

சில மணி நேரம் கழித்து:

ரஞ்சிதா இன்னமும் அந்த பஸ் ஸ்டாப்பில் கவலையா உக்காந்திருக்கா. அவ முகத்துல சோகம். நெனப்பெல்லாம் சரித்திரப் பாடத்தின் 15 மார்க்குகளை சுத்தி வட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. வெறும் காலோட அவ வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சுட்டா. இப்படி நடக்க அவளுக்கு ரொம்ப வசதியா இருக்கு.

அவளது கையிலிருந்த பாலிதீன் உறைக்குள் புதுச் செருப்பு கேட்பாரில்லாம கெடந்துச்சு. அதைச் சரி செய்ய அவ கிட்ட பணமும் இல்ல. ரஞ்சிதாவ பழைய செருப்பு கூப்பிடுது. அந்த செருப்பு ரஞ்சிதாவ போலியாக்கல. அவளுக்கு அந்தச் செருப்புதான் எப்போதும் சௌகரியத்தக் கொடுக்குது. ரஞ்சிதா எப்பவும் ரஞ்சிதாதான்.

வீட்டுக்கு வந்து பாத்த போது தேஞ்சு போன பழைய சேருப்பு கதவு ஓரத்திலேயே கெடக்கு. அத யாரும் எடுத்துக்கனும்னு நெனைக்கல. ஏன்னா அந்த செருப்போட அருமை அவுங்களுக்குத் தெரியாது. ரஞ்சிதாவுக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் மற்றவர்கள்தான்.

இப்போ பழைய செருப்பு இருந்த இடத்துக்கு புதுச் செருப்பு குடிபெயர்ந்திருக்கு.

Thursday, June 19, 2008

வைரமுத்துவின் - வானம் தொட்டுவிடும் தூரம்தான்

தலைப்பு: வானம் தொட்டு விடும் தூரம்தான்

ஆசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து

நயம்: சமூக நாவல்

பதிப்பகம்: சூர்யா

எனது செகரிப்பில் உள்ள புத்தகங்களில் கவிதை நூல்களும் அடங்கும். அதில் அதிக இடத்தை பிடித்திருப்பது கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை நூல்கள். பா.விஜய், கவிஞர் கண்ணதாசன், அறிவுமதி மற்றும் சில உள்ளூர் கவிஞர்களின் கவிதை நூல்கள் இருப்பினும், நேரம் அனுமதிக்கும் சமயங்களில் நான் அதிகம் புரட்டிப் பார்ப்பது கவிப்பேரரசின் கவிதை வரிகள்தான்.

சென்ற வருடம் கவிதை நூல்கள் தேடிக் கொண்டிருந்த பொழுது தட்டுப்பட்டது “வானம் தொட்டுவிடும் தூரம்தான்” எனும் புத்தகம். கவிதை நூலாக இருக்கும் என நினைத்துதான் கையில் எடுத்தேன். பின்னால் திருப்பிய பொழுது ‘இது கவிஞரின் முதல் நாவல்’ என அச்சிடப்பட்டிருந்தது.

இதற்கு முன் கவிஞரின் ‘சிற்பியே உன்னை செதுக்குகிறேன்’ என்ற கட்டுரை புத்தகத்தை வாசித்துள்ளேன். அதிக அளவிளான புத்திமதிகளை ஒரு இளைஞனுக்கு ஒரே புத்தகத்தில் புகட்ட முயற்சித்திருப்பது சற்று திகட்ட வைத்தது. அவரின் கவிதை வரியிலான புத்திமதிகளை ஏற்றுக் கொண்டு மனதையும் தேற்றிக் கொண்டேன்.

கையில் எடுத்த புத்தகத்தை வைக்க மனம் இல்லாமல், சரி என்னதான் இருக்கும், ஒரு கை பார்த்துவிடலாம் என வாங்கிவிட்டேன். உரைநடையில் கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் ஏமாற்றமாய் அமையலாம். உரைநடையையும் கவிதை தேனில் கலந்து கொடுப்பது கவிஞரின் பாணி.

நான் படித்து முடித்த பிறகு என் நண்பர் ஒருவர் இந்நூலை இரவல் வாங்கினார். இரண்டு வாரம் கழித்து “என்னால இரண்டு அத்தியாயத்துக்கு மேல முடியல மச்சி, நீங்களே வச்சிகுங்க” என திருப்பித் தந்துவிட்டார்.

நீங்கள் படிக்கும் போது வரிக்கு வரி இருக்கும் கவிதை வாடை உங்களை முகம் சுழிக்க வைக்கலாம். அதை ரசித்துக் கொண்டே புரட்டினால் நிச்சயம் இரண்டு நாட்களில் முடித்துவிடலாம்.

கதையின் நாயகன் வாஞ்சிநாதன், நாயகி செல்வி, மற்றும் முக்கிய கதா பாத்திரம் செந்தோழன். பட்டபடிப்பை முடித்துவிட்டு கிராமத்தில் இருக்கும் ஒரு இளைஞர் கூட்டத்தை சுற்றி நடக்கும் கதைக் கரு. வேலையில்லாமல் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கும் ஏழை இளைஞர்களுள் ஒருவன் தான் கதையின் நாயகன். அவன் செல்வியின் மேல் காதல் வயப்படுகிறான். யார் இந்த செல்வி? அந்த ஊர் பெரியவர் சங்கரலிங்கத்தின் மகள். சங்கரலிங்கம் கதையின் வில்லன்.

தனது சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் ஊர் மக்களை தன் பிடியில் வைத்திருக்கிறான் சங்கரலிங்கம். சங்கரலிங்கத்தின் சூழ்ச்சியை ஊர் மக்களுக்கு உணர வைத்து வாஞ்சிநாதனையும் செல்வியையும் இணைத்து வைப்பதே கதைச் சுருக்கம். இந்நூலை வாசித்து முடித்தபோது பழைய சினிமா படத்தை பார்த்த கசப்பு உண்டானது. புதிய பாணியில் என்றால் சிம்புவின் படம். வித்தியாசமான நடையில் இருக்கும் நாவலை படித்த மகிழ்ச்சியும் உண்டானது.

கதையை படித்து முடித்த போது ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. “பணக்கார பெண்ணை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்ட வேலை இல்லா இளைஞன் இனி எப்படி வாழ்க்கையை நடத்தப் போகிறான்?”

இது கவிஞரின் முதல் நாவல் என்பதை மனதில் வைத்து ஏற்றுக் கொண்டாலும், ஒரு மாறுதலுக்காக கதையை வேறு கோணத்தில் கொடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

சுவாரசியமான உரைநடை நாவலை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் கசப்பு.
கவிதை வரியை நேசிப்பவர்களுக்கு தித்திப்பு.

பிரமாண்ட முறையில் மருதநாயகம்- கமல்ஹாசன் பேட்டி


கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படம் உலகம் முழுவதிலும் ரிலிஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இதில் கமல்ஹாசன் 10 வேடங்களில் கலக்கலாக நடித்துள்ளார். தசாவதாரம் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவர் ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கே: தசாவதாரம் படம் எடுக்கும் ஐடியா எப்படி வந்தது?

ப: தசாவதாரம் எடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தேன். இப்படத்தை எடுத்தது கஷ்டமான காரியம் அல்ல. அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன்.

கே: நீங்கள் மிக பெரிய பராட்டாக எதை கருதுகிறீர்கள்?

ப: நான் எப்போதுமே விரும்புவது ரசிகர்களின் பாரட்டைதான். அவர்கள் பாராட்ட பாராட்டதான் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு கலைஞனுக்கு ரசிகர்கள் பாரட்டுதான் முக்கியம்.

கே: தசாவதாரம் படம் தொழில் நுட்பரீதியாக நன்றாக உள்ளது. ஆனால் கதை பலவீனமாக இருப்பதாக சொல்கிறார்களே?

ப: குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அதை பற்றி எல்லாம் நான் கவலைப் படுவதே இல்லை. என்னை பொறுத்தவரையில் ‘தசாவதாரம்’ படம் மிக நன்றாக வந்துள்ளது. அதில் எந்த குறையும் காணமுடியாது. அந்த அளவிக்கு கவனமாக இப்படத்தை எடுத்திருக்கிறோம்.

கே: இப்படம் வேகமாக செல்வதால். சாதாரண ரசிகர்களினால் புரிந்துக் கொள்ள முடியாதே?

ப: எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். படம் வேகமாகச் செல்வதால் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம். விரைவில் ரசிகர்களை மகிழ்விற்பதர்காக எனது கனவு படமான “மருதநாயகத்தை” பிரமாண்டமான முறையில் எடுக்க இருக்கிறேன். இப்படத்தை மர்மயோகிக்கு பிறகு எடுக்க திட்டமிட்டுள்ளேன்.

கே: தசாவதாரத்தில் நீங்கள் நடித்த கேரக்டர்களில் மிகவும் பிடித்த கேரக்டர் எது?

ப: ஒரு தாயிடம் சென்று நீங்கள் பெற்ற பத்து குழந்தைகளில் எந்த குழந்தை பிடிக்கும் என கேட்டால் அவள் என்ன பதில் சொல்வாளே அதுதான் என் பதிலும். தசாவதாரத்தில் நான் நடித்த 10 கேரக்டர்களும் என் குழந்தைகள் மாதிரி.

கே: சிரஞ்சீவி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறீர்களா?

ப: சிரஞ்சீவி எனது நெருங்கிய நண்பர். அவர் சினிமாவில் வெற்றி பெற்றது போல் அரசியலிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
நன்றி: மலேசிய நண்பன்.

பொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது? (இறுதிப் பதிவு)

(பொன்னியின் செல்வன்)


இது இத்தொடரின் கடைசிப் பதிவு.
முந்தய பதிவுகளை படிக்க இங்கே சுட்டவும் பகுதி1 பகுதி2

வானதி பொன்னியின் செல்வன் மேல் கொண்ட காதல்

சிறுபிராயத்திலேயே தாயை இழந்து , பின் தந்தையையும் சீக்கிரமே பறி கொடுத்துவிட்டு அன்புக்கு ஏங்கி நின்ற இந்த சிறு பெண்ணுக்கு, வாழ்வில் ஒரே பிடிப்பு என்பது தாய் பாசத்தையொத்த இளைய பிராட்டியின் அன்பு தான் … பருவம் வந்த பின்னும் கூட, குந்தவைக்கு அவள் குழந்தையாகவே தெரிந்தாள் …

ஆனால் வல்லிய விதியானது அவளையும் விட்டுவிடவில்லை … வந்தது ஒரு காட்டுப் பூனையின் ரூபத்தில்…. பூனையோடு பொருந்த (அதாவது சண்டையிட ….) யானை மேல் வந்தான் ஒருவன் … வேடிக்கையாக இல்லை ? ஆனால் கேவலம் பறவை இனமென்று பாகுபாடு பாராமல் , அந்த இளம் குஞ்சுகளின் உயிரைக் காத்த அந்த கருணைமிகு இதயம் … யாராக இருப்பன் அந்த யானைப் பாகன்? களங்கமில்லா தூய பால் போன்ற அவள் மனதை கொள்ளை கொண்டவன் யார் ? என்ற எண்ணங்கள் அவளுக்குள் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை இன்பமாக வதைத்தன …

வெளி உலகம் என்றால் என்ன என்பதையே அறியாது , கொடும்பாளுர் ஒன்றே உலகம் என்று வளர்ந்து வந்த ஒரு அறியாப்பெண்; காதல், களவு போன்றவற்றை கனவில் கூட எண்ணிப்பார்த்திராதவள் … அதனால் … கள்ளம் , கபடம் , கவலை ஏதும் இன்றி மனம் போல் ஆடிப்பாடி , களிப்பில் மூழ்கிக் கிடந்தவளின் உள்ளத்தில் இப்போது ஏதோ ஒரு பெரும் மாற்றம் … மானைப் போல துள்ளிக்கொண்டு திரிந்த கால்களில் இன்று ஒரு சிறிய தயக்கம், தடுமாற்றம் … தோகை விரித்தாடும் மயிலைப்போல வான வெளியெங்கும் சுதந்திரமாக சுற்றி வந்த அவளின் மனம் இன்று கூண்டில் அடைபட்ட கிளியாக ஆகிவிட்டது ஏன் ?

குளத்தில் விழும் கல் தண்ணீரில் வட்ட வட்டமாய் அழகிய அலைகளை எழச்செய்வது போல் … அவளின் உள்ளத்தடாகத்தில் ஒரு அழகிய வீர திருமுகம் இன்ப அலைகளை எழுப்பி விட்டிருக்கிறது …. அந்த அனுபவம் அவளுக்குப்புதிதாக மற்றுமின்றி புதிராகவும் இருந்தது … புரியாத சிலவற்றில் தான் போதையும் , ஈடுபாடும் அதிகம் உண்டாகும் என்பது உண்மையோ? தான் கொடும்பாளூர் இளவரசி என்று அறிந்ததும் அவன் கோபம்கொண்டு விருட்டென்று திரும்பிச் சென்றது ஏன் ? மீண்டும் சந்தித்தால் அவன் ஏன் அவ்வாறு கோபம் கொண்டான் என கேட்கவேண்டும் … அந்த யானைப்பாகனை மறுபடியும் காண முடியுமா ? என்றெல்லாம் அந்த சிறுபெண்ணின் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் அலை மோதின …

ஆனால் … அவன்தான் இந்த நாட்டு மக்களின் ஆத்மார்த்தமான அன்புக்கு உரியவன் … அரசற்கு அரசர்களை எல்லாம் அடி பணிய வைக்கும் அஞ்சா நெஞ்சன் , வீரத்தில் , கருணையில் , அழகில் இந்த அகிலமே போற்றும் `அருள் மொழி வர்மன் ‘… என்ற உண்மை அவள் உள்ளத்தில் பேரிடியாக இறங்கியது … நாடே போற்றும் இளவரசரை , கேவலம் ஒரு யானை பாகன் என்று நினைத்தோமே ? இந்த அரசே அவனுடையது … அவனுக்கே அரசாங்க உத்யோகம் வாங்கித்தருவதாக சொன்னோமே … என்ன வேடிக்கை , இல்லை .. மூடத்தனம் ? என்றெல்லாம் அவள் நினைத்து உள்ளம் கலங்கிக்கொண்டிருந்த வேளையில், அவன் முன்னே தீபம் ஏந்தி நின்று , அவனை வாழ்த்தி , வெற்றி மலை சூட்டி வழியனுப்ப வேண்டும் என்றால் ? …

தயக்கமும் , குற்ற உணர்வும் , அவற்றோடு பெண்களுக்கே உரிய இயற்கையான அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பென்னும் நால்வகை உணர்ச்சிகளும் ஒருங்கே உந்தித்தள்ள , அவன் தன்னை ஏறெடுத்துப்பார்த்த அந்த நொடியில் , அவள் தன்வசம் இழந்து மூர்ச்சை ஆகிச் சரிந்தாள் … ஆனால் … இது அபசகுனத்திற்கான அறிகுறியல்ல … அவளை அவன் எப்போதும் நினைவில் வைத்திருக்க தூண்டும் நல்லதொரு சந்தர்ப்பம் என்பதையோ … அவனும் , இப்படி ஒரு விசித்திரப்பெண்ணை முதன் முதலில் பார்த்ததைத் தன் ஆயுள் முழுவதும் மறக்கப் போவதில்லை என்பதையோ …, பாவம் , அப்பேதை அறியாள் …
(வானதி)
அவனை ஒரு வேலைக்காரன் என்று பரிகாசம் செய்தது , அவன் போர்க்களம் போகும் சமயத்தில் , விபத்து போல் தீபத்தை தவற விட்டது என்பதையே அவள் மனம் நினைத்து கொண்டிருக்க … அந்த நினைவுகளே அவன் மீது அளப்பெரும் காதலாக உருப்பெற்று வளர்ந்து வருவதை அவள் அறிந்திறாள் …. இருந்தாலும் , அவனை மணந்து கொள்ள இந்த சோழ நாட்டின் ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் விரும்புவாள் … அதையே தான் செய்தால் … பட்டமகிஷி ஆகும் எண்ணத்திலேயே !!! என்ற ஏளனப்பேச்சும் வரும் … யானைப் பாகனாகவே அவன் இருந்திருக்கக்கூடாதா ?…

“நான் அவனை யானைப்பாகனாக இருக்கும்போதே விரும்பினேன் … அவன் இளவரசனா என்று அப்போது எனக்கு தெரியாது … அதைப்பற்றிய கவலை அப்போது அல்ல எப்போதும் எனக்கு இல்லை , அவன் அன்பு ஒன்றே ஏன் பிறவியின் பயன் , அவன் இதயமே எனக்கு அரியாசனம் “… என்றெல்லாம் அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொண்டு , தன் காதலுக்கு உரமேற்றி வளர்த்துவந்தாள் …. பிரதிபலன் எதுவும் எதிர் பாராத காதல் தன்னுடையது என்று நிரூபிக்க ஒரு தருணம் வாராதா என்று வாடி வருந்திக்கொண்டிருந்தாள் …

அத்தகையவனை …ஒரு நாள் கடல் கொண்டு விட்டது !! என்ற செய்தி வந்தால்? … அதை அவள் காதுகள் கேட்டனவா ? இல்லை , அதற்கு முன்னமே அவள் உயிர் அவளிடத்தில் இல்லை என அறிந்து கொண்டாள் … இனி யோசிக்க என்ன இருக்கிறது ? இந்த உடம்பேனும் கூட்டைப்பற்றி இனி என்ன கவலை ? அவனோடு வானவெளியில் நட்சத்திரமாக ஜொலித்திருக்கவும் , சோலைத்தென்றலோடு கூடவே சேர்ந்து வரும் பூக்களின் நறுமணம் போல , அவன் ஆவியோடு சுற்றித்திரிந்திருக்கவும் அவள் தயாராகி விட்டாள் …

ஓடையில் பாய்ந்து தன் உயிரை விட்டுவிட துணித்து விட்டாள் … ஐயோ பாவம் , … அது கைகூடவில்லையே … தன்னைக் கரை ஏற்றிக்காப்பாற்றி, தன் உள்ளம் கவர்ந்தவனோடு தன்னை சேர விடாமல் பிரித்தது யார் என்று தெரிந்து கொள்ள அவள் விரும்பாததில் என்ன ஆச்சரியம் ? ஆனால் …அவனை கடல் கொண்ட செய்தி உண்மையல்ல என்று அறிந்ததும் உண்டான இன்பத்துக்கு அளவே இல்லை … ஆஹா … ஒரு நொடியில் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம் என எண்ணி மகிழ்வதற்குள் … அவன் இன்னொரு பெண்ணை நேசித்துக்கொண்டு இருக்கலாம் என்று கேட்கும் படி நேர்ந்ததே … என்ன கொடுமை !!! போகட்டும் … அவன் யாரை விரும்பினாலும் … என் காதல் மாறாது … அவன் உயிரைக்காத்த பெண்ணை அவன் விரும்புவதில் தவறு ஒன்றுமில்லை …. ஆனாலும் , தான் தன் தூய அன்பைக்காட்ட ஒரு வாய்ப்புக்கூட கிடைக்கவில்லையே என்று எண்ணி அவள் இன்னும் வேதனைப்பட்டாள் …

அன்று ஒரு நாள் , காவிரித்தாய் , கரை புரண்டு பொங்கி வந்த தன் அன்பினால் , அவளை குடந்தை ஜோதிடர் வீட்டுக்கூரையோடு சேர்த்துக்கொண்டு சென்ற போதும், தன் உயிரைப்பற்றிய கவலை சிறிதும் அவளுக்கு இல்லை … ஆனால் , தன்னை மீட்க வெள்ளத்தில் குதித்த அந்த ஓடக்காரப்பெண்ணை தான் காப்பாற்ற வேண்டும் , அவள் இளவரசருக்கு செய்த உதவிக்கு , பிரதி உதவியாக தான் அவளைக்காப்பற்றியாக வேண்டும் , இளவரசரின் மேல் உள்ள தன் மெய் அன்பை நிரூபிக்க இது போல் ஒரு பொன்னான தருணம் என்றும் அமையப்போவதில்லை … அந்த முயற்சியில் தான் இறக்க நேரிட்டாலும் , மரணத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் , அதை இளவரசர் உணரும் போது அவர் கண்களில் துளிர்க்கும் ஒரு சொட்டு கண்ணீர் மட்டுமே தனக்குப்போதும் … என்று எண்ணியே பூங்குழலியை அவள் முதலை வாயினின்று காப்பாற்றினாள்…
ஆனால் அவள் விஷயத்தில் விதியின் விளையாட்டுகள் இனிதாகவே இருந்தன …. தன் மனம் கொண்ட நாயகனும் தன்னை நினைத்து அல்லும் பகலும் மருகுகிறான் என்று அறிவதை விட ஒரு இனிய செய்தி வேறு என்ன இருக்க முடியும் ? அதை அவன் வாயினாலேயே கேட்கும் போது , அந்த நொடிக்க்காகவே தான் உயிர் வாழ்ந்திருப்பதாக அவள் நினைப்பதில் வியப்பொன்றும் இல்லையே ?

தன் காதலன் இறந்த செய்தி கேட்டு தன்னுயிரை விட்டுவிடத்துணிந்தவள் , தன் காதலனைக் காப்பாற்றியவளை தான் காப்பாற்றி, அவன் நன்றிக்கடனை தீர்க்க தன் உயிரையும் கொடுக்க முன்வந்தவள், தன் காதல் அவன் மீது தானே ஒழிய அரியாசனத்தின் மீதில்லை என்ற சபதத்தில் இருந்து வாழும் வரை வழுவாமல் இருந்தவள் … அந்த உத்தமியின் காதல் சாலச்சிறந்தது என்பதில் சந்தேகம் என்ன? ….
முற்றும்..


பொன்னியின் செல்வன் ஒரு அமுத சுரபியை போன்ற நாவல்… எழுதுவதற்கு இன்னும் நிறைய உள்ளன…
எ.கா: 1) மணிமேகலை வந்தியதேவன் மேல் கொண்ட காதல்
2) ஊமை ராணி சுந்தர சோழர் மேல் கொண்ட காதல்
3) பூங்குழலியின் காதல்
4) நந்தினியின் காதல்
இன்னும் நிறைய உள்ளன. காதலை தவிர்த்து மற்ற கண்ணோட்டதிலும் எழுதலாம்.

நன்றி.

Wednesday, June 18, 2008

பொன்னியின் செல்வன்-யாருடைய காதல் உயர்ந்தது ? (2)


(வந்தியத்தேவன்)

முதல் பாகம் இங்கே சுட்டவும்

குந்தவை வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல்

ஆனால் விதி யாரை விட்டது … எந்த நொடியில் அவள் வந்தியத்தேவனைச் சந்தித்தாளோ குடந்தை ஜோதிடர் வீட்டில்… அப்போது தான் அவள் “பெண்மை” பூத்ததை அவளே அறிகிறாள். வியப்பால் அகன்று விரிந்த தன் பெரிய கண்களால் அப்படியே வந்தியதேவனை விழுங்கி விடுவதுபோல் பார்க்கிறாள் … அவனது களை ததும்பும் திருமுகத்தைக்கண்டதும் தன்னையே இழக்கிறாள் … தன்னையும் அறியாமல் மெல்லிய இளம் காதல் துளிர் விடுவதை உணர்கிறாள் …

ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறதே ? அது என்ன ?… பாராளும் மன்னன் மகள் தான், அவனோ ஒரு வழிப்போக்கன் அவ்வளவே … தங்கள் காதல் பொருத்தமானதா என்று மனதுக்கும் , புத்திக்கும் ஒரு பெரும் போராட்டம் அவளுக்குள் தொடங்குகிறது ….

ஆனாலும் மனமே வெல்கிறது … தன்னுடைய நிலையில் இருந்து அவள் ஒரு போதும் இறங்கி வர இயலாது … தனக்கு இருக்கும் பொறுப்புகளை அவள் தட்டிக்கழிக்க முடியாது … எல்லா சாதரண பெண்களையும் போல காதலனே உலகம்… என்று அவனை நினைப்பதையே முழு நேர தொழிலாக (வானதி, மணிமேகலை மற்றும் பூங்குழலி போல்) அவள் செய்ய முடியாது … அதனால் அவள் காதலை மறைத்து வைக்க முயல்கிறாள் … அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறாள் … காதல் வயப்பட்ட தன் மனதை வந்தியத்தேவனிடம் பெரும்பாலும் அவள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை … ஆனால் , சரியான தருணங்களில் , அதை அவள் வெளியிட தயங்கவும் இல்லை … (சிறைச்சாலையில் , பொன்னியின் செல்வனுக்கு ஓலை கொடுத்து அனுப்பும் போது , சின்னப்பழுவேட்டரயரை தேடிச்சென்று திரும்பி வந்து வந்தியத்தேவன் அவளை பார்க்கும்போது … )




(குந்தவை)


தான் சோழ நாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அவள் வந்தியத்தேவனைப்போல் ஒரு அனாதையைக்காதலிக்கவில்லை … அவன் தனக்கு அடிமை போல் இருப்பான் என்று அவனை மணம் செய்து கொள்ள விரும்பவில்லை … அவ்வளவு சுயநலம் பிடித்தவளும் இல்லை அவள் … ஆனால் சோழ நாட்டின் மீது கொண்ட அன்பால் அவள் கட்டுண்டு கிடந்தாள் … அது அவளே அவளுக்கு இட்டுக்கொண்ட விலங்கு …

பெரிதாக பிரஸ்தாபித்தால்தான் காதல் உயர்ந்ததா என்ன ? இது இரு ஜோடி கண்களின் மௌன கீதம் … ஒரே எண்ணம் உடைய இரு மனங்களினின்று எழும் இனிய ராகம் … அவர்கள் பேசிக்கொள்ளத்தேவை இல்லை … அவர்களின் மனங்கள் இணைந்து விட்டதை அவர்கள் இருவருமே நன்கு அறிவார்கள் … இது ஒரு மென்மையான, மேன்மையான காதல் ….




தொடரும்…

Tuesday, June 17, 2008

பொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது ?


தலைப்பு: பொன்னியின் செல்வன்
ஆசிரியர்: கல்கி
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி
வந்தியத்தேவன் குந்தவை மேல் கொண்ட காதல்

விபத்து என்பார்களே… அது இதுதானோ? … அதுவும் விபத்தின் முடிவு இன்பமானதாக இருந்துவிட்டால்? … அதுதான் நம் நாயகனுக்கு நேர்ந்தது… குடந்தை ஜோதிடர் வீட்டில் அவன் கண்டது என்ன? சோதிடரையா? வானதியையா? இல்லவே இல்லை … குந்தவையின் பொன்முகம் ஒன்றைத்தான் … ஆயிரம் காவியங்கள் புகழ்ந்து பாட ஒண்ணாத அவள் அழகிய திருமுக மண்டலத்தைத்தான் … அதுவரை அவனுக்குள் இருந்த இதயம் வெளியேறி, அவன் எதிரில், வியப்பும், மகிழ்ச்சியும் ஒரு சேரப்பொலிந்த குந்தவையின்பால் சென்று கலந்தது…

அவள் இளவரசியோ அல்லது சாதாரணபெண்ணோ, அந்த நொடியில் அவனுக்கு அது எதுவுமே தோன்றவில்லை … அங்கே , அந்த வேளையில் அவன் இளவரசியை சந்திப்பதை எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை …. எத்தனையோ போர்க்களங்களில், அவன் எதிரிகளின் கூரிய உலோக வாட்கள் சாதிக்க முடியாததை, இப்பெண்ணின் கண்களாகிய வாள்கள் சாதித்து விட்டனவே !!! அவனை அடியோடு சாய்த்து விட்டனவே !!! இதுதான் இயற்கையின் இணையில்லா வலிமையோ… இதுதான் இன்ப விபத்து என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த விபத்தில் சிக்கிக்கொள்ளலாமே … என்று எண்ணுகிறான் நம் நாயகன்.

ஆனால், அவள் இளவரசி என்று தெரிந்ததும், குந்தவைக்கு வந்த அதே தயக்கம், இன்னும் அதிகமாகவே அவனுக்குள் எழுந்து பாடாய்ப்படுத்துகிறது … தன் நிலை என்ன? அவள் நிலை என்ன? அரசர்கள் எல்லாம் அடிபணிந்து சேவகம் செய்யக்கூடிய “அரசிளங்குமரி” எங்கே? அனாதையாய் பழங்குடியின் பெருமையை மட்டும் தாங்கியிருக்கும் தான் எங்கே? தனக்கென்று ஒரு நாடில்லை… ஏன்? சொந்தமாய் வீடு கூட இல்லை… இது பொருந்துமா? நடக்குமா? உலகம் தான் ஏற்குமா? என்று அவனும் பலவாறு சிந்திக்கிறான் … ஒரு பெண்ணின் கண்களுக்கு உள்ள சக்தியை எண்ணி எண்ணி வியக்கிறான்…. மனப்போராட்டங்களில் தன் அமைதியை இழக்கிறான் … ஆனாலும் அதில் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்து அதில் திளைக்கிறான் …

காதல் என்ற ஒன்றை இதுவரையில் அவன் கேள்விப்பட்டுதானிருந்தான்… ஆனால் அதை இப்போதுதான் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறான் … ஒவ்வொரு முறையும் அவள் பொன்முகத்தில் தோன்றும் பலவகை பாவங்களில், அவள் தன்னை சிறிதளவேனும் விரும்புகிறாளா? இல்லையா? என்ற கேள்விக்கான விடையை தேட முயல்கிறான் .. ஆனால் அவள் கண்களை பார்த்தபின், தான் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம், என்ன எதிர்பார்த்து அவள் முன்பு இந்த நிமிடம் நிற்கிறோம் என்பதெல்லாம் அவனுக்கு எங்கே ஞாபகம் இருக்கின்றன? அவன்தான் தன்னையே அவளிடம் தொலைத்து விட்டானே…

அவள் தன்னை விரும்புகிறாள் என்பதை அவன் அறிவான் .. அவளும் தான் அவளை நேசிப்பதை அறிவாள்… எனவே, பெரிதாக பேசிக்கொள்ள ஒன்றும் இல்லை … ராஜாங்க விஷயங்கள், பாண்டிய நாட்டாரின் சதிச்செயல்கள், பழுவூர் இளையராணியின் பழிவாங்கும் படலம் இவற்றுக்கு நடுவே, காதல் கவிதைகள் புனைந்து மகிழ இருவருக்குமே நேரம் இல்லைதான்…. அதற்கான சமய சந்தர்ப்பங்களும் அமையவில்லைதான் ….

காவலர்களிடம் இருந்து தப்பி வந்து அவசர அவசரமாக ஓலை கொடுக்க வேண்டும், திரும்ப உடனே புறப்பட்டு இலங்கை செல்லவேண்டும், பின் திருடன் போல் பதுங்கிப்பதுங்கி மாறுவேடம் பூண்டு அவளை மீண்டும் வந்து சந்திக்க வேண்டும் .. அடடா .. எத்தனை இம்சைகள் .. இதற்கு நடுவே காதல் கீதம் பாட எப்படி மனமிருக்கும்?

இத்தகைய நெருக்கடிகளிலும் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையும், அன்பும் வலுவடைந்ததே தவிர நலிவடையவில்லை … சேர்ந்து இருக்கும் சமயங்களில், அவர்கள் தங்கள் காதலைப்பற்றி பேசியதைவிட, சோழ நாட்டைப்பற்றி கவலைப்பபட்டதுதான் அதிகம்…. ஆனாலும் அவர்கள் இருவரும் தங்கள் காதலின் மேன்மையை அறிவார்கள்… அதை வர்ணனைகள், வார்த்தைகள் எனும் மொழியின் சிறைகளுக்குள் அடைத்து வைத்து ரசிக்க இருவருமே விரும்பவில்லை !!! …

நாம் கூடத்தான் … சரி தானே?
கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராகவன் சாம்பத் குமார் அவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க…
தொடரும்…..

Monday, June 16, 2008

சாலையோர சித்தன்

வாழ்க்கையின் எதார்த்தங்கள் இனிமையானது. எதிர்பார்ப்புகளும் அதனால் எற்படும் ஏற்றமும் ஏமாற்றமும் வாழ்வை வளப்படுத்துகிறது. நாம் சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. சிலரை எப்பொழுதோ பார்த்திருப்போம், ஆனால் அவர்களின் நினைவுகள் எப்பொழுதும் இருக்கும். இதற்கு காரணம் நாம் அவரை சந்திக்கும் சூழலாக கூட இருக்கலாம்.

நான் ரவிகுமார். இப்பொழுது பினாங்கில் இருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் ஈப்போவிற்கு பயணம் செய்யப் போகிறேன். வியாபார நிமித்தமாக இங்கு வந்துள்ளேன். வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாளாகிவிட்டது. கண்டிப்பாக வெளி மாநிலத்தில் வேலை செய்பவர்கள் பலரும் வீடு திரும்பி இருப்பார்கள். இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. நாளை திங்கள். வேலை நாள். விடுமுறையை கழித்து பலரும் புறப்பட ஆயுத்தமாயிருப்பார்கள்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் முதுகை லட்சக் கணக்கான வாகனங்கள் இஸ்திரி செய்துக் கொண்டிருக்கும். நெடுஞ்சாலை நுழைவாயிலும், வெளியேரும் இடத்திலும் நெரிசல் நிச்சயம். சுங்கச் சாவடியில் அதிக நேரம் நிற்க வேண்டிவரலாம். வாகனத்தை நத்தையைப் போல் நகர்த்திக் கொண்டு போவது எரிச்சலான ஒன்று. இப்படிபட்ட சூழ்நிலைகளில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்துவிடலாமா என்று கூட நான் நினைத்தது உண்டு.

சுருங்கச் சொன்னால் விடுமுறை நாட்களில் நெடுஞ்சாலையை பயன்படுத்துவது எனக்கு பிடிக்காது. பழைய சாலையில் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன். எனக்கு தோதாக வாகனமும் அதிகம் இல்லை.

மதியம் மூன்று மணி இருக்கும். சூரியன் தகித்துக் கொண்டிருந்தான். தூக்கம் கொஞ்சமாய் எட்டிப் பார்த்தது. எனது காரை ஒரு மரத்தடியில் சற்று நிறுத்தினேன். அரை மணி நேரம் காரினுள் உறங்கிப் போனேன்.

லேசான பசி வயிற்றை கிள்ளியது. பினாங்கில் பெயர் போனது ‘நாசி கண்டார்’ அல்லவா, சரி ஒரு கை பார்த்துவிடலாமென ஒரு கடையினுள் நுழைந்தேன். சாப்பாடு சொல்லிவிட்டு ஒரு இடமாய் பார்த்து அமர்ந்துக் கொண்டேன்.

அறிமுகம் இல்லாத சிறுவன் ஒருவன் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். கசங்கியச் சட்டை, சற்றே கலைந்த முடி, முட்டி அளவிளான அரை காற்சட்டை, ஒட்டி உலர்ந்து போன உடல், இவையாவும் அவன் வறுமையை எடுத்துரைத்தது.

“அண்ணே பலகாரம் வாங்கிக்கிறீங்களா?” இப்பொழுது அவன் என் எதிரில் என்னை நோக்கி புன்சிரிப்புடன் கேட்கிறான்.

அவன் கையில் இருந்த பிலாஸ்டிக் கூடையை என் முன் காட்டினான். பலகார வகைகள் சிறு சிறு பைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

“வேண்டாமப்பா” இது எனது பதில்.

அவன் இடத்தைவிட்டு நகர்ந்தான். எனது சாப்பாடு வந்ததும் அதை ருசிக்கத் தொடங்கினேன். கை கழுவி விட்டு வந்த பொழுது மறுபடியும் அச்சிறுவன் என் கண்ணில்பட்டான். ஆணும் பெண்ணுமாக இருவர் அமர்ந்து இருந்தார்கள். கணவன் மனைவி என நினைக்கிறேன். பலகாரக் கூடையை அவர்களிடம் நீட்டினான். வேண்டாம் என்பதற்கு அறிகுறியாக தலையை அசைக்கவும், சிறுவன் அவ்விடத்தைவிட்டு சென்றான்.

சாப்பாட்டிற்கு பணத்தை செலுத்திவிட்டு திரும்பினேன். மீண்டும் என் கண்ணெதிரில் அவன்.

“சாப்டாச்சா அண்ணே, பலகாரம் வாங்கிக்கிறீங்களா”, மறுபடியும் என்னை நோக்கிக் கேட்டான்.

“வேண்டாம்பா, வயிறு நிறைய சாப்பிட்டாச்சி”, எனக் கூறியவாறு எனது காரை நோக்கி நடந்தேன்.

அவன் அக்கடை ஐந்தடியின் ஓரத்திற்கு சென்றான். கையிலிருந்த பலகார கூடையை கீழே வைத்துவிட்டு, அந்த பக்கம் வந்து போவோரிடம் பலகாரம் வேண்டுமா என அதே பல்லவியை படித்துக் கொண்டிருந்தான்.

அவன் பேச்சில்தான் எத்தனை மரியாதை. கனிவான பார்வை. எவ்வளவு நேரமாகியும், கொஞ்சமும் சலிப்பு தட்டாமல் அதே தொனியில் அடுத்தவரிடம் கேட்கிறான். “அக்கா பலகாரம் வேணுமா”, “அங்கில் பலகாரம் வேணுமா”. மிஞ்சி போனால் அச்சிறுவனுக்கு 10 வயது தான் இருக்கும். என்ன ஒரு துடிப்பு. தளர்ச்சியில்லா விடா முயற்சியோடு காரியத்தில் கருத்தாய் இருக்கிறான்.

நான் காரில் அமர்ந்து பயணத்திற்கு தயாரனேன். இப்பொழுது அவன் என் கார் கதவருகே நிற்கிறான். முகத்தில் அதே இளஞ்சிரிப்போடு. ஜன்னலை கீழிறக்கினேன்.

“வீட்டில இருகறவங்களுக்கு பலகாரம் வாங்கிட்டு போறிங்களா அண்ணே, தம்பி தங்கச்சிக்கு கொடுக்கலாம், பாருங்க எல்லாம் சைவம்தான்”, கூடையை மறுபடியும் நீட்டினான்.

அவன் முகத்தை பார்த்தேன். முன்பிருந்த அதே புன்னகையை பரிசளித்துக் கொண்டிருந்தான்.

“தம்பி, பலகாரம் எதுவும் வேண்டாம், இந்தா, இந்த காச வச்சிக்க” என்று சிகப்பு நோட்டு ஒன்றை அவன் சட்டை பையில் சொருகினேன். நன்றி கூறி நான் கொடுத்த பத்து ரிங்கிட்டோடு மீண்டும் ஐந்தடிக்கு ஓடினான்.

எனது காரை செலுத்தத் தயாரானேன். அச்சிறுவனை கண்டேன். அவனது செயலை கண்டு அதிர்ந்து போனேன். நான் கொடுத்த பணத்தை வேறோருவனிடம் நீட்டிக் கொண்டிருந்தான்.

“தம்பி, இங்க வா”, என அவனை அழைத்தேன்.

“பலகாரம் வேணுமாண்ணே”, ஒன்றூம் தெரியாதவன் போல் கேட்டுக் கொண்டு என்னருகே வந்தான்.

“நான் கொடுத்த காச எதுக்கு அந்த ஆளுகிட்ட கொடுத்த?”.

“பாவம் அண்ணே அவரு, கண் தெரியாதவரு, இந்த பக்கம் தான் சுத்திகிட்டு இருப்பாரு, சாப்டாரா இல்லையானு கூட தெரியல”,

நான் பணம் வாங்கிய அந்த மனிதனை நோக்கினேன். தூரத்தில் இருந்த அவனது நடை பாவனை அவன் குருடன் என்பதை நிச்சயப்படுத்தியது.

சிறுவன் மீண்டும் தொடர்ந்தான், “சில சமயம் விற்று போக மீதம் இருக்கும் பலகாரத்தை கொடுப்பேன், இன்னிக்கு காலையில் இருந்தே எந்த வியாபாரமும் இல்லை. நீங்க கொடுத்த காச மட்டும் கொண்டு போனால் அம்மா திட்டுவாங்க. முன்னே ஒருத்தர் இப்படிதான் காசு கொடுத்துட்டு போனாரு. வீட்டுக்கு கொண்டு போனப்ப அம்மா கேட்டாங்க. என்னடா பலகாரம் விக்காம இருக்கு காச மட்டும் கொண்டுவந்திருக்கியேனு. உள்ளத சொன்னேன். உழைக்காமல் வரும் பணம் நிலைக்காது. நாம திடகாத்திரமா இருக்கோம். உழைச்சி வாழ முடியும். அடுத்தவர் கொடுப்பதை வாங்குவதுக்குப் பேர் பிச்சை. உழைக்க முடியாதவங்கதான் பிச்சை எடுப்பாங்க அப்படினு சொன்னாங்க. நான் இன்னும் தெம்பாக இருக்கேன் அண்ணே” எனக் கூறினான்.

அவன் மன உறுதியைப் பார்த்து நெகிழ்ந்துப் போனேன்.

“எல்லாம் எவ்வளவு தம்பி?”

“எல்லா பலகாரத்தையும் நீங்களே வங்கிக்க போறீங்களா அண்ணே”,

நான் சரி என்பதற்கு அடையாளமாக தலை அசைத்தேன். பலகாரங்கள் அனைத்தையும் ஒரு பையில் போட்டான்.

“நுப்பத்தி அஞ்சி வெள்ளிதான்னே”,

பலகாரம் நிறப்பப்பட்ட பையை என் பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு பணத்தை கொடுத்தேன். நன்றி கூறிய அவன் மீண்டும் ஒரு சிரிப்பை பரிசளித்துவிட்டு சட்டென அங்கிருந்து கிளம்பினான். அவன் என் பார்வையிலிருந்து மறையும் வரை அவனைப் பரர்த்துக் கொண்டிருந்தேன்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதை இச்சிறு நிகழ்வு எனக்கு உணர்த்தியது. அச்சிறுவனை மறுபடியும் என் வாழ்வில் சந்திப்பேனா என்பது சந்தேகம்தான். அவனது பெயரும் எனக்கு தெரியாது. இந்த நிகழ்வும் என்னிலிருந்து மறையாது. அவன் என்றென்றும் எனக்கு போதனை செய்த சாலையோர சித்தன் தான்.

Sunday, June 15, 2008

கள்ளம் கொண்ட உள்ளம்


விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசனின் உதவி பெறுவது பற்றி பேசும்போது;


மன்னர், “என்ன லஞ்சம் கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்”


“மன்னரே! தப்பித் தவறி அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்” என மந்திரி சொன்னார்.


ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மந்திரி மது மயக்கத்தில் மன்னரிடம் கேட்டார்.


“மன்னா! அப்படி என்ன சொக்கு பொடி போட்டீர்கள். பக்கத்து நாட்டு மன்னன் நம் காலைச் சுற்றும் பூனையாகி விட்டானே”.


“எதிரி நாட்டு அரசன் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லச் சொல்லி, நம் ஒற்றனிடமே லஞ்சம் கொடுத்தனுப்பினேன், அவன் நமக்கு நண்பனாகி விட்டான்”, எனக் கண்ணடித்து, மது மயக்கத்தில் உளறியதை, பக்கத்து நாட்டு அரசன் கேட்டு விட்டான்.


அப்புறம் என்ன! அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது.

Friday, June 13, 2008

உடல் அசைவு மொழி (body language) என்றால் என்ன?



ஒருவருடன் பேசும் போது நமது உடல் அசைவு மூலம் நமது எண்ணங்களையும், செயல்களையும் தெரிவிக்க முடியும்.

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவரது பேச்சு சுவாரஸ்யமாக இருந்தால் தான் அவரது பேச்சை தொடர்ந்து கவனிப்போம். நண்பனின் பேச்சு போரடிக்க ஆரம்பித்தால் நமது கவனம் வேறு பக்கம் திரும்பும். உடலை நெளித்து, கை கால்களை ஆட்டி சோம்பல் முறித்து கொட்டாவி விட தொடங்கிவிடுவோம்.

நண்பரின் பேச்சு போரடிக்கிறது என வார்த்தையாக சொல்லாமல் உடல் அசைவு மூலம் சொல்லும் இத்தகைய செயல்திறன், ‘சொல்சார தகவல் பரப்பு’ என்பதாகும். உடல் அசைவு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொருள் இருப்பதாக கணித்துள்ளனர். உடல் அசைவு மொழிகளின் முக்கியதுவத்தை விளக்கும் ஒரு சீன நாடோடி கதை உண்டு.

பண்டைய சீனவில் நீதிபதி ஒருவர் பணிமாற்றமாகி சீன தலைநகருக்கு வந்தார். அவர் திறன்மிக்க தையல்காரன் ஒருவனை அழைத்து தனக்கு, நீதிபதிகள் அணியும் நீண்ட அங்கி தைக்குமாறு கூறினார்.

அங்கி தைப்பதற்கு ஒப்பு கொண்ட தையல்காரர் நீதிபதியிடம், “ஐயா, நிங்கள் புதிதாக பதவி நியமனம் பெற்று தலைநகருக்கு வந்துள்ளீர்களா? அல்லது பதவி உயர்வு பெற்று தலைநகருக்கு வந்துள்ளீர்களா? இல்லை பதவி உயர்வை எதிர்பார்த்து தலை நகருக்கு வந்துள்ளீர்களா? என்று பணிவுடன் கேட்டார். தையல்காரனின் கேள்வி நீதிபதியை வியப்படைய செய்தது. அனைத்து நீதிபதிகளும் ஒரே விதமான அங்கியைதானே அணிவார்கள். நீ எதற்காக தேவையற்ற கேள்விகளை கேட்கிறாய்? என தையல்காரனை கடிந்து கொண்டார்.

“ஐயா எனது கூற்றை தயவு செய்து கோளுங்கள்” என்று பதிலளித்த தையல்காரர், தனது விளக்கத்தை பின்வருமாறு கூறினார். கனம் நீதிபதி அவர்களே! நீங்கள் புதிதாக நியமனம் பெற்றவரெனில் உங்களது உயர் அதிகாரிகளின் முன்பு அடிக்கடி விரைப்புடன் நிற்க வேண்டும். எனவே உங்களது அங்கி முன்பகுதியிலும், பின் பகுதியிலும் சமநீளம் கொண்டதாக அமைதல் வேண்டும்

நீங்கள் பதவி உயர்வு பெற்று தலைநகருக்கு வந்துள்ளீர்கள் எனில் நெஞ்சை நிமிர்த்தி கர்வமுடன் தேற்றமளிக்க வாய்ப்புள்ளது. எனவே உங்கள் அங்கியின் முன் பகுதி நீளம் மிக்கதாக அமைதல் வேண்டும்.


மாறாக பதவி உயர்வு எதிர்பார்த்து தலைநகருக்கு வந்துள்ளீர்கள் எனில் உங்கள் உயர் அதிகாரிகள் முன்பு தோள்கள் குவிந்த வண்ணம் பணிவுடன் நிற்க வேண்டும். அவ்வகை தருணங்களில் உங்களது அங்கி பின்பகுதியில் நீளம் மிக்கதாக அமைதல் வேண்டும், ஐயா இப்பொழுது கூறுங்கள் உங்கள் அங்கி எப்படி இருக்க வேண்டும்?

தையல்காரனின் விளக்கம் நீதிபதிக்கு பெரும் திருப்தியை அளித்தது. தனது ஆயுட்காலத்தில் பல தருணங்களில் நீதிபதிதையல்காரனின் விளக்கத்தை பற்றி எண்ணி எண்ணி வியந்தார்.


உடல் அசைவு மொழிகள் சமீப காலமாக நிர்வாக கல்வி இயலில் முக்கியதுவம் பெற்றுவருகிறது. இருப்பினும் பண்டைய காலத்திலேயே மக்கள் உடல் அசைவு மொழி பற்றி தெரிந்து வைத்துள்ளனர் என்பதை இந்த கதை மூலம் அறியலாம்.

Thursday, June 12, 2008

மறந்து போன கவிதைகள்


உன்னை பார்த்து
கொண்டிருப்பதால் தானோ
இதயம் தினமும்
துடித்துக் கொண்டிருக்கிறது
என் இதயத்திற்கு
உயிர் மட்டும் இல்லை
விழிகளும் இருக்கிறது
உன் இதயத்தை
பார்த்துக் கொண்டே இருக்க

கவிதைகள் எழுதிடத்தான்
கைகள் துடிக்கின்றன
எழுதிட நினைத்தவுடன்
கவிதைகள் மறந்து போகின்றன
நினைத்த கவிதைகள் மறந்து போனாலும்
கனவில் தோன்றிய
உன் கவிதை கொண்ட கண்களை
மறக்கவும் முடியவில்லை
மறைக்கவும் முடியவில்லை

நூல் நயம்: கடல் புறா



தலைப்பு: கடல் புறா
ஆசிரியர்: சாண்டில்யன்
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி

ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்குத் தகுதி இல்லை. படிக்கும் போது ஏற்பட்ட இன்பத்தாக்கத்தை எனது கண்ணோட்டத்தில் எழுதிவிடுகிறேன்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததால் ஏற்பட்ட தாக்கம் தொடர்ந்து சரித்திர நாவல்களை படிக்கத் தூண்டிற்று. சரித்திர நாவல்களை சேமித்துக் கொண்டும் வருகிறேன்.

தமிழர்களால் கண்டரியப்பட்ட கடாரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் எனக்குள் அதிகமாய் இருந்தது. ஆனால் தற்சமயம் ‘கெடா’ என அழைக்கப்படும் கடாரத்தின் வரலாற்றுக் குறிப்புகள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. மலாய்காரர்களின் ஆதிக்கத்திற்குப் பிறகு நடந்த வரலாற்றுக் குறிப்புகளே அதிகம் காணப்படுகின்றன.

இப்புத்தகத்தை வாங்குவதற்கே போதும் போதும் என்றாகிவிட்டது. ஆரம்பத்தில் தேடிய இடங்களில் 140 ரிங்கிட்டிற்கும் குறையாமல் சொன்னார்கள். அப்படி இப்படியென்று கோலாலம்பூரில் சற்று குறைந்த விலைக்குக் கிடைத்தது. தடித்த அட்டை கொண்ட மூன்று பாகங்கள். புத்தகத்தின் வாசனையே தனிதான்.

ஆடி 18-ம் நாளில் பொன்னியின் செல்வன் தொடங்குவது போல், கடல் புறா ஒரு சித்திரா பௌர்ணமியன்று தொடங்குகிறது. கதையின் நாயகன் கருணாகர தொண்டைமான். அவருக்கு காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகியென இரு காதலிகள்.

ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். தன் மகளுடன் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறார் குணவர்மர். ஸ்ரீவிஜயத்திற்கும் கலிங்கத்திற்கும் ஏற்கனவே நட்புறவு இருக்கிறது. இதன் வழி ஜெயவர்மன் கலிங்கத்தின் உதவியோடு குணவர்மனை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறான்.

இச்செய்தி சோழப் பேரரசுக்குத் தெரிந்துவிடுகிறது. குணவர்மனையும் அவர் மகள் காஞ்சனா தேவியையும் காத்து அழைத்து வர வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார். பாலூர்ப் பெருந்துறை சுவர்ண பூமியின் திரவுகோலாக திகழ்கிறது.

இதன் மமதையில் தன்னை சுற்றியுள்ள நாடுகளின் கடல் ஆதிக்கத்தை ஒடுக்க நினைக்கிறான் கலிங்கத்து மன்னன். முக்கியமாக கடலோடிகளாக சிறந்து விளங்கிய தமிழர்களின் ஆதிகத்தை. கலிங்கத்தில் வசிக்கும் தமிழர்களையும் தமிழ் வணிகர்களையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறான்.

கருணாகர பல்லவன் கொண்டு வரும் ஓலையை சற்றும் மதிக்காமல் தூக்கியெரிகிறான். பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குகிறான். அபாயத்தில் இருந்து தப்பி செல்கிறார்கள்.
கலிங்கம் மற்றும் ஸ்ரீவிஜயத்தின் கொட்டத்தை அடக்க தீர்மானம் எடுக்கிறான் கருணாகர பல்லவன். முதலில் கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை உடைக்கிறான். பிறகு குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியனையில் ஏற்றுகிறான். இம்முயற்ச்சிக்கு துணையாக உருவாவதே கடல் புறா எனும் போர் கப்பல்.

பொன்னியின் செல்வனைப் போல் கதை சுற்றி வலைத்துக் கொண்டுச் செல்லப்படவில்லை. கதாபத்திரங்களும் குறைவாக இருப்பதால் கதை சரலமாகப் போகிறது. இரண்டாம் பாகத்தில் அளவு கடந்த சிருங்கார ரசமும் வர்ணனைகளும் சற்று எரிச்சலூட்டுகிறது. பாதிக்கு மேல் கதை சூடுபிடித்து ஆர்வமூட்டுகிறது.

இக்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள்:

கருணாகர பல்லவன்: சோழர் படைத் தலைவன். இளைய பல்லவன் என அழைக்கப்படுகிறான். தந்திரசாளியும் புத்திசாளியும் கூட. ஸ்ரீவிஜய வெற்றிக்குப் பிறகு வீர ராஜேந்திர சோழ தேவர், கருணாகரனை வண்டை மாநில சிற்றரசானாக்கி காஞ்சனா தேவியையும் மஞ்சளழகியையும் மணம் முடித்து வைக்கிறார். (ஒரே கல்லில் மூன்று மாங்காய்). வண்டை மாநில அரசானான பிறகு தொண்டைமான் என அழைக்கப்படுகிறான்.

காஞ்சனா தேவி: கட்டழகி காஞ்சனா கடாரத்தின் இளவரசி. இவளின் துணிச்சல் கருணாகரனுக்கு இவள் மீது காதல் கொள்ளச் செய்கிறது.

மஞ்சலழகி: ஸ்ரீவிஜய பேரரசின் இளவரசி. ஆக்ஷய முனையின் தலைவி.
அநாபய சோழர்: பிற்காலத்தில் குழோதுங்கன் என பெயர் பெற்று விளங்குகிறார். கருணாகரனின் நண்பன்.

அகூதா: சீனக் கடல் கொள்ளைக்காரன். கருணாகரன் மற்றும் அமீர் என பலருக்கு பயிற்சியளிக்கிறார். பிற்காலத்தில் சீன தேசத்து அரசனாக திகந்தவர்.

அமீர்: இரக்க மனம் கொண்ட அரபு நாட்டு முரடன். கருணாகரனின் உப தலைவனாக பணியாற்றுகிறான்.

கண்டியதேவன்: கருணாகரனின் உபதலைவன். கப்பல் விடுவதில் திறமைசாளி.

அமுதன்: வணிகன். செல்வத்தை பாதுகாப்பதில் சிறந்தவன்.

அகூதாவின் கதாபாத்திரம் ஆர்வமூட்டும் வகையில் இருக்கிறது. இரண்டாம் பகுதிக்கு மேல் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போகிறது. அக்ஷய முனையின் தலைவனாக இருக்கும் பலவர்மனின் கதியும் அப்படியே. கல்கியை போல், இக்கதையின் ஆசிரியர் அவர்களின் சில தகவல்களை கொடுத்து கதையை முடித்திருக்கலாம்.

கதையின் கடற்போர் தந்திரங்களும், திருப்புமுனைக்களும் சுவை கூட்டியுள்ளன. கதையை படிப்பதற்குத் திகட்டாமல் இருக்கச் செய்கிறது. பெண்களை வர்ணனை செய்வதில் சாண்டில்யனை அடித்துக் கொள்ள முடியாது போலும். மஞ்சலழகியின் உண்மையான பெயரும் கடைசி வரையில் தெரியாமல் போகிறது.

ஸ்ரீவிஜய வெற்றியோடு கதை நிறைவை அடைகிறது. அதற்கடுதாற்போல் கலிங்கத்தின் படையெடுப்பு போன்றவை வேறு நாவல்களில் உள்ளனவா என தெரியவில்லை. இருந்தால் தெரிவிக்கவும். தரை போர் முறைகளைதான் அதிக அளவிலான சரித்திர நாவல்களின் கண்டிருப்போம். சரித்திர நாவல் பிரியர்களுக்கு கடல் புறா கண்டிப்பாக ஒரு வித்தியாசமான விருந்தாக அமையும்.

Monday, June 09, 2008

'பாரோ' மன்னனின் மர்மக் கல்லறை

(ஹாவட் கார்டர் மற்றும் லாட் கார்னர்வான்)


ஒரு கற்பனைக்கு எடுத்துக் கொள்வோம், ‘மம்மி’கள் உயிர் பிழைத்தால் என்ன நடக்கும்? அவை மனிதனை அழிக்கும் சக்தி கொண்டவையாக இருக்குமா? சரித்திரத்தின் சுவடுகளை துள்ளியமாக அறிந்துக் கொள்ள வழிவகுக்குமா?இல்லை அதையும் மனிதன் மிருகக்காட்சி சாலையில் அடைத்து வைத்து அழகு பார்ப்பானா? இவையனைத்தும் உலகைப் படைத்த இறைவனுக்கே வெளிச்சம்.

அக்காலத்தில் இறந்த எகிப்திய மன்னர்களை பாடம் செய்து கல்லரையில் வைத்துவிடுவார்கள். எகிப்திய மன்னர்களை ‘பாரோ’ மன்னர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வாரு பாடம் செய்யப் பட்ட பிரேதத்தை நாம் ‘மம்மி’ என்று அழைக்கிறோம். ஒரு சில வருடங்களுக்கு முன் 20000 வயதை கொண்ட ‘மம்மி’கள் இன்னமும் கண்டரிய படாமல் இருக்கலாம் என படித்த ஞாபகம் உண்டு.

எகிப்திய தேசத்தில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்சியில் ஆகக் கடைசியாக கிடைத்தாகக் கருதப்படுவதுதான் இந்த ‘தூத்தன்கேமன்' அரசரின் கல்லறை. இவரது கல்லறையானது முழுமை அடைந்த கல்லறையாகக் கருதப்படுவது மட்டுமின்றி கண்டரியப்படாத பல மர்மங்களைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எகிப்திய பழங்குடியினரால் அது ‘தூத்’ அரசரால் எற்பட்ட சாபமெனவும் கூறப்படுகிறது. அவர் அறையப்பட்டிருக்கும் கல்லறையையோ அல்லது உடலையோ யாராவது தொந்தரவு செய்தால், தொந்தரவு செய்தவர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் சாகும் அளவிற்கு ‘தூத்’ அரசர் சாபத்தை எற்படுத்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எந்த அளவிற்கு உண்மை என்பது கேள்விக்குறிதான்.

‘தூத்’ அரசர் தமது 9-வது வயதில் எகிப்திய அரசராக அரியனை ஏரினார். இளம் வயதில் ஆட்சி பீடத்தை பிடித்த இவர் தனது 19-வது வயதில் காலமானார்.
இவர் இறப்பிற்கான காரணம் மர்மமானதாகவும், இன்றளவும் ஆராய்ச்சியாளர்களால் உறுதியான காரணங்களை கூற முடியாமல் இருப்பதும் ஆச்சர்யமே!

1922-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘ஹாவட் கார்டர்’ என்ற தொள் பொருள் ஆராய்ச்சியாளரும் அவர் தம் குழுவினரும் ‘தூத்’ அரசரின் கல்லறையைக் கண்டரிந்துள்ளனர். அதிக அளவிலான செலவை கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு ‘லாட் கார்னர்வோன்’ என்ற செல்வந்தரால் நிதி உதவி செய்யப்பட்டுள்ளாது.

இந்தக் கல்லறைக் கண்டுபிடிக்கப்பட்டதே தனிக் கதை. ‘தூத்’ அரசரின் கல்லறை வேலி ஆப் கிங்ஸ் ‘Valley of the Kings’ எனப்படும் வெஸ்ட் பேங்கின் ‘West Bank’ தீபிஸ் ‘Tebes’ மலைத் தொடரில் உள்ளது. எப்படி அந்தக் கல்லறையைக் கண்டுபிடித்தார்கள்? அந்த மலையில் தேடிக்கொண்டேயிருந்திருக்கிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அப்பொழுது தண்ணீர் சுமந்து வந்த எகிப்தியச் சிறுவன் ஏதோ இடற விழுகிறான். அப்படிக் கண்டுபிடித்ததுதான் இந்தக் கல்லறை. அந்தச் சிறுவனுக்கும் ஒன்றும் ஆகவில்லை. இந்தக் கல்லறைக்குள் முதலில் நுழைந்தது (அனுப்பப்பட்டது) மற்றுமொரு எகிப்தியச் சிறுவன். அவனுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

இவரின் கல்லறையை கண்டு பிடித்த ஆராய்ச்சி குழுவினர் வெற்றியின் விழும்பை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ச்கிக் கடலில் இருந்தனர். பின் நாளில் ‘சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டியின்’ கதையாகியது இவர்களின் நிலை.

“எமது கல்லறையை மாசு படுத்துபவர்கள்; முதலை, நைல் நதிக் குதிரை மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக” இவ்வாசகம் ‘தூத்’ அரசரின் நுழைவாயில் பழங்கால எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சிக் குழுவினர், இது மக்களின் கவனத்தை திருப்ப நினைக்கும் வாசகமாக கருதினர். இவர்கள் கணிப்பின் படி உள்ளே விலை மதிக்க தக்க புதையல் இருக்கலாம் எனவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் இதில் முக்கிய தடயங்கள் இருக்கலாம் எனவும் கருதினர்.

இவர்களது கணிப்பு 100% சரியாகவே இருந்தது. உண்மையாகவே உள்ளே சென்றவர்கள் யாரும் முதலை, சிங்கம் மற்றும் குதிரைக்கு உணவாகவில்லை. ‘தூத்’ அரசரின் கல்லறை மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருந்ததாகவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் முழுமையடைந்ததாகவும் குறிப்பிடபட்டுள்ளது. முக்கியமாக விலைமதிக்க தக்க புதையலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இவாரய்ச்சி குழுவினரில் பலர், ஒருவர் பின் ஒருவராக இறந்திருக்கிறார்கள். இவையாவும் சாபத்தால் ஏற்பட்ட மரணங்கள் தான என்பது புரியாத புதிர்தான். முதலில் இறந்தவர், ஆராய்ச்சி குழுவினருக்கு நிதி உதவி செய்த ‘லாட் கார்னர்வோன்’. இவர் 4 ஏப்ரல் 1923-ல் கொசு கடித்து இறந்ததாக நம்பப் படுகிறது. கன்னத்தில் கொசு கடித்த இடமும், ‘தூத்’ அரசரின் கன்னத்தில் இருந்த சிகப்பு நிறத்திலான வடுவும் ஒரே மதிரியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இதையடுத்து அவர் வளர்த்த நாய் காரணமின்றி, சாகும் வரை குரைத்து உயிர் விட்டதாகக் கூறப்படுகிறது. ஆராய்ச்சி குழுவின் தலைவரான ‘ஹாவட் கார்டர்’ வளர்த்த ‘லக்கி பேர்டு’ எனப்படும் பறவை நாகத்தால் விழுங்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்தை ‘தூத்’ அரசரின் தலையில் இருக்கும் கிரீடத்தின் நாகத்தோடு இணைத்துப் பேசுகிறார்கள். கல்லறைச் சொத்துகளின் ஆய்வாளராக இருந்த ‘ஆர்தர் மேஸ்’ எனப்படும் ஆராய்ச்சியாளர் சுய நினைவற்று சிறிது காலத்தில் இறந்தார்.

இது ‘தூத்’ அரசரின் சாபம் என்பதில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களில் ‘ஆடம்சன்’ என்ற கல்லறைக் காவலரும் ஒருவர். இவருக்கு நேர்ந்த ஒரு கோர விபத்தில் தன் மனைவியை இழந்தார். மகனின் முதுகொழும்பு உடைந்தது மற்றும் துரத்திற்கு தூக்கி வீசப் பட்ட இவர், காரின் சக்கரம் தன் தலையில் ஏருவதிலிருந்து உயிர் தப்பினார். இதுவும் அனைவருக்கும் நேர்ந்தது போன்ற தற்செயலாக நடந்த சம்பவமே என்ரே எண்ணினார்.

இவையணைத்தும் எப்படி சம்மந்தப் பட்ட நபர்களையே பதித்திருக்கும்?
இது தொடர்பாக ‘பிரான்ஸ்’ நாட்டைச் சேர்ந்த சைல்வியன் கேண்டோன் ‘Sylvian Gandon’ எனும் ஆராய்ச்சியாளர், தொடர்ந்து இறக்கும் ஆராய்ச்சி குழுவினரின் மர்ம மரணத்திற்கு தனது ஆய்வின் கூற்ரை ‘Proceedings of The Royal Society’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘மைக்ரோ ஸ்போரா’ மற்றும் 3300 வருடங்களாக ‘தூத்’ அரசின் கல்லறையில் அடைந்து கிடக்கும் பல செயற்கை உயிர் கொல்லி கிருமிகளே இந்த மரணங்களுக்கு காரணம் என விளக்கம் கூறியுள்ளார்.

லாங் ஐலேண்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ‘பாப் பாரியர்’ மம்மிகள் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவராவார். ‘தூத்’ அரசரின் மரணத்தை பற்றி இவர் கூறுகையில் அது ஒரு கொலையாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். தூத்தன்கேமனின் ஆளோசகரும் மற்றும் உதவியாளருமான ‘ஆய்’ என்பவரால் கொலை செய்யப்பட்டிருக்களாம் என கருத்து தெரிவித்திருக்கிறார். ‘தூத்’ அரசரின் மறைவிற்கு பின் அவரின் பதவியை வகிக்க வாரிசு இல்லாத காரணத்தால், ‘ஆய்’ தன்னை எகிப்திய மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.

‘தூத்’ அரசரின் மம்மியை ஊடுகதிர் ‘X-Ray’ செய்யப்பட்டதில் அவரது பின் மண்டையில் பெரிய அளவிலான இரத்தக் கசிவு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அது அவரை தாக்கியதால் எற்பட்டதாக இருக்கக்கூடும் எனவும், அத்தாக்குதளே அவரது மரணத்திற்கு காரணமாக இருக்களாம் எனவும் கூறப்படுகிறது.

தூத்தன்கேமனின் மறைவைத் தொடர்ந்து அவரது இளைய மனைவியான ‘Ankhesenamum’, புதிய அரசராகியிருக்கும் ‘ஆய்’யை மணந்துக் கொள்ளா விருப்பமில்லாததால், தனது மகனை எகிப்தின் மன்னராக்குவதற்கு அனுப்பி வைத்திருக்கிறாள். ஆனால் அவளது மகன் எகிப்தை வந்தடைவதற்கு முன்பே கொலை செய்யப்பட்டுள்ளார்.

அரியனை ஏறிய ‘ஆய்’ சில வருடத்தில் மரணமடைந்திருக்கிறார், இதைத் தொடர்ந்து மூன்று வருடங்களில் ‘Ankhesenamum’-மும் எகிப்திய சரித்திரத்திலிருந்து காணாமற் போகிறாள். அவளைப் பற்றிய தடயங்களும் எதுவும் இல்லாமற் போய்யிருக்கிறது. அவளும் இந்த தொடர் கொளைகளுக்கு ஆளாகியிருப்பாளா என்பதும் கொள்விக்குறியே.


இவரையடுத்து அரசரானவர் ‘ஹோரெம்ஹெப்’. தளபதி ‘ஹோரெம்ஹெப்’ ஆரம்ப காலத்தில் ‘அக்ஹிநேத்தனிடம்’ உதவியாளாராக பணிபுரிந்து வந்தார். ‘அக்ஹிநேத்தன்’ யார்? இவர் ‘தூத்’ அரசர் அரியனை எறுவதற்கு முன் அரசராக இருந்தவர். ‘தூத்’ அரசரின் ஆட்சியின் போது ‘ஹோரெம்ஹெப்’படைத் தளபதியாகவும், முக்கிய அமைச்சு பதவிகளையும் வகித்து வந்திருக்கிறார். ‘தூத்’ மற்றும் ‘ஆய்’ அரசரின் மறைவிற்கு பின்னர் ‘ஹோரெம்ஹெப்’ தன்னை அரசராக நியமித்துக் கொண்டார்.

சில தகவல்கள் ‘ஹோரெம்ஹெப்பிற்கும்’ தூத் அரசரின் இளய மனைவியான ‘Queen Ankhesenamun’-கும் இடையிலான தகாத உறவினால் இந்த தொடர் கொலைகள் நடந்திருகலாம் எனவும் கூறுகின்றன. ‘ஹோரெம்ஹெப்’ அரசர் பதிவியை ஏற்ற பிறகு ‘ஆய்’ சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் சரித்திரத்தில் இடம் பெற முடியாமற் போகும் அளவிற்கு அழித்திருக்கிறார். இதற்கு இவர்களுக்கிடைய இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம்.

புதிய ஆராய்ச்சிகள், இவரின் மூட்டுகள் பதிக்கப் பட்டதால் இவர் இறந்திருக்கக் கூடும் எனவும் கொலை அல்ல என குறிப்பிடுகிறார்கள். இவர் தொடைபகுதி எழும்புகள் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும். இதுவே இவரின் இறப்பிற்கு காரணம் எனவும் கூறுகிறார்கள்.

இதையடுத்து 1968-ஆம் ஆண்டின் ஆராய்ச்சி அவர் மண்டையிளுள்ள எழும்பு துகள்கள் இவரைத்தாக்கியதால் ஏற்பட்டவை எனவும் பின் அவர் கிழே விழுந்து கால் முறிந்திருக்கக் கூடும் என கூறியுள்ளார்கள்.

மற்றோறு தகவல் இவை அனைத்தும் 1922-ஆம் ஆண்டு இவரை கல்லறையிலிருந்து எடுக்கும் போது பாதுகாப்பாக கையாழப்படாத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் எனவும் கூறுகிறார்கள்.

இன்றளவும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் இவரது மறைவிற்கும், கல்லறையின் மர்மத்திற்கும் இன்னமும் திருப்தியான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.


(இப்பதிவு நான் வெட்பிரஸ் வலைபதிவில் எழுதியது. சில திருத்தங்கள் செய்து பிளாகரில் கொடுத்துள்ளேன்)