Thursday, December 26, 2013

அங்கோர் வாட் பயணம் - வெங்கலக் கோபுர சிவன் கோவில்

Bapuan Temple 3D வடிவமைப்பு : Source theadvisorcambodia.com
கார்போனைட் ஆராய்ச்சிகளின் வழி ஆங்கோர் சரித்திரத்தை நாம் அறிந்துக் கொண்டது மிக செற்பமே. அங்கோர் எண்ணற்ற இரகசியங்களை தன்னோடு வைத்துக் கொண்டுள்ளது. அதில் பல இன்னும் எத்தனை காலம் ஆனாலும் நம்மால் கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். இருட்டடிப்புகளும் கலைத் திருட்டுகளும் உலகிற்கு பல செய்திகளை சொல்லாமலே மறைத்துவிட்டுள்ளன.

கெமர் மக்களுக்கு தனியொரு இலக்கிய பாரம்பரியம் இருப்பதாக அறிய முடியவில்லை. ஆரம்ப கால கல்வி முறையும் சரித்திரமும் போல் போட் காலத்தில் பலமாகவே சிதைக்கப்பட்டுள்ளது. இன்றும் பசுமையோடு இருக்கும் பல சரித்திர புதினங்களை நமக்கு கொடுத்த கல்கியும், சாண்டில்யனும், விக்ரமனும், ஆங்கு தோன்றி இருப்பின் நிச்சயம் போல் போட்டின் ஆயுதம் பதம் பார்த்திருக்கக் கூடும்.
போல் போட்: Source freethoughtpedia.com
அங்கோர் தோம் மொத்தம் 216 பெருமுகங்களைக் கொண்டுள்ளது. அதாவது 54 பெருமுகக் கோபுரங்கள். ஒரு கோபுரத்திற்கு நான்கு முகங்கள் விகிதம். இந்த முகங்கள் எதன் குறியீடு என்பது இன்னமும் பதில் கிடைக்காத இரகசியம் தான். நெற்றிக் கண் உள்ளதை போல் சில முகங்கள் இருப்பதால் அது சிவனைக் குறிப்பதாக சொல்கிறார்கள். ஏழாம் ஜெயவர்மன் புத்தத்தை பேனியவன் என்பதால் அது புத்தனின் முகம் என்பதாகவும் கருத்துகள் உண்டு. இல்லை இல்லை அந்த முகங்கள் அதை உருவாக்கிய ஏழாம் ஜெயவர்மனையே குறிக்கிறது எனும் சாரரும் உண்டு. 

இக்கலைச் சிற்பங்கள் உறுவாக்கப்பட்ட காலம் ஜெயவர்மனின் ஆட்சி என்பதால் அவனைக் கொண்டாடுகிறோம். ஆனால் இப்படைப்புகளுக்கு பின்னால் இருக்கும் மாபெரும் வேலைபாடுகளை செய்தவர்களை நாம் சல்லடைப் போட்டாலும் தெரிந்துக் கொள்வது சிரமமே.

இங்கும் Zhou Daguan-னின் குறிப்புகளை மேற்கோள்காட்ட வேண்டி உள்ளது. ச்சாவ் தனது குறிப்பில் யசோதரபுரத்தில் அதிகமாக இருந்தது அடிமைகளே என கூறுகிறார். உள்ளூர் மக்களைக் காட்டினும் அதிகமான அடிமைகள் அங்கு இருந்துள்ளனர். போர்களில் அடிமையாக்கப்பட்டு கொண்டு வந்தவர்களை கோவில்களையும் கோட்டைகளையும் கட்ட பயன்படுத்தினர். கூடவே யானைகளையும். 

முகக் கோபுர கோவிலில் சில சுவர் ஓவிய வேலைபாடுகளை நீங்கள் காண முடியும். அன்றய மக்களின் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் நிகழ்வுகள் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் சில முக்கிய சரித்திர நிகழ்வுகளையும் போர் காட்சிகளையும் காணமுடிகிறது. 

கீழ் காணும் ஓவியம் கெமர் இராணுவத்தில் சீன வீரர்களின் பங்களிப்பை காட்டுவதாக உள்ளது. அங்கோர் நாகரீக காலத்தில் சீன தேசத்தோடு இவர்களின் உறவு இணக்கமாக இருந்ததாகவே குறிப்புகள் உரைக்கின்றன. 

கொண்டை இருப்பது சீன இராணுவம்
அரசர்கள் சைவம், வைணவம் பௌத்தம் என மதங்களை மாறி மாறி ஆதரித்து வந்துள்ளார்கள். மதங்களுக்கிடையிலான புகைச்சல் உடைபட்ட சிலைகளிலும் அவர்கள் காலத்தில் மறுசீரமைப்பு செய்த கோவில்களிலும் காணமுடிகிறது.

பேயோனில் நடக்க நடக்க பெருமுகங்கள் நம்மை கவனித்தபடியே உள்ளது. நடக்க நடக்க முடிவடையாத பாதைகள். பேயோனில் ஆங்காங்கு சிறுசிறு அறைகளை காண முடிகிறது. அங்கு புத்த சிலையை நிறுவி ஊதுபத்தி கொழுத்தவும் முடிகயிறு கொடுக்கும் வேலைகளும் நடக்கின்றன. 

அங்கோர் பயணத்தில் நீங்கள் அடிக்கடி கேட்கும் வார்த்தை ‘ஓன் டால’ என்பதாக தான் இருக்கும். அதாவது ஒரு டாலர். கெமர் மக்கள் பேசும் ஆங்கிலத்தில் 'R' மற்றும் ‘S' போன்ற எழுத்துகள் பெரும்பாலும் மறைந்துவிடுகிறது. ஜெயவர்மன் என்பதை ‘ஜெயவமா’ என்பதாகவே உச்சரிக்கிறார்கள். 

பள்ளி பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் அதிகமாக அங்காடி வியாபாரங்களில் ஈடுபடுவது தெரிகிறது. பள்ளி முடிந்ததும் வியாபாரத்துக்கு வந்துவிடுகிறார்கள். சிறு பிள்ளைகள் ‘ஓன் டால’க்கான வியாபாரம் புரிகிறார்கள். உதாரணமாக சிறு கைவினை பொருட்களும் போஸ்கார்டுகளும் ஒரு டாலருக்கு விற்கப்படுகிறது. பாதுகாப்பு பொருட்டு புராதன சரித்திர தளங்கள் அமைந்த இடத்தில் மின்வசதிகள் கொடுப்படவில்லை. சாப்பாட்டு கடைகளும் வியாபார அங்காடிகளும் ஜெனரேட்டரின் உயபத்தில் செயல்படுகின்றன.

பெருமுகக் கோபுரங்களை முடித்துக் கொண்டு Baphuon எனும் கோவிலை காணச் சென்றோம். அங்கோர் தோம் கோட்டை பகுதியில் அமைந்த மேலும் ஒரு கட்டிடம். 11-ஆம் நூற்றாண்டில் 2-ஆம் உதயாதித்யவர்மனால் சிவனுக்காக கட்டப்பட்ட கோவில். இது வெங்கல கோபுரங்களால் ஆன கோவிலாக கூறப்படுகிறது. 15-ஆம் நூற்றாண்டில் புத்த கோவிலாக மாற்றும் முயற்சியில் சிதிலங்கள் ஏற்பட்டுள்ளன. 9 மீட்டர் உயரமும் 70 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு உறங்கும் புத்த சிலை அமைப்பு கொஞ்சமாக தெரிகிறது. இன்றைய நிலையில் ஒன்றும் இல்லாத வெற்று கட்டிடமாக மட்டும் தெரிகிறது. உச்சி கோபுரத்திற்கான படிகள் செங்குத்தாக தெரிகிறது. நான்கு கால்களில் தான் படியேற முடியும். 
Baphuon கோவில் இன்றய நிலையில்

1948-ல் Baphuon : Source npm.gov.tw
‘ச்சேன் அதன் உச்சிக்கு போய் பார்த்திருக்கிறீர்களா’

‘ஆம். நான்றாக காற்று வரும். ஆனந்தமாக இருக்கும், இந்த வெள்ளைக்கார பசங்க அங்கன போய் உக்காந்துகிட்டு புத்தகம் படிச்சிகிட்டு இருப்பானுங்க’. 

‘படி ரொம்ப ஆபத்தா இருக்கு, நிறைய பேர் விழுத்திருக்க வாய்ப்பிருக்கு’.

Baphuon மேல் இருந்து
‘ஆமாம் பாஸ், அடி சருக்கினா மருகையா தான். கொஞ்சம் கொஞ்சமாக ஏறி உட்காந்து உட்காந்து சிலர் ஏறுவாங்க, அதிகமா யாரும் படியேறுவது கிடையாது.’

‘நல்ல காற்று. வெயிலும் அதிகம் தான்’

‘இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வந்திடும்’.

‘ஒன்பது தலை நாகம் பெண் உருவில் வந்து ராஜாவோடு கூடுவதாக சொல்வார்களே அது இந்த இடம் போலவே உள்ளதே. அந்தக் கட்டிடமா இது?”.

“உங்களுக்கு இந்தக் கதைகளும் தெரிந்துள்ளதே. அது அந்தப்பக்கம். இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். உலகை காக்கும் மாதா அந்த ஒன்பது தலை நாகி என்பது நம்பிக்கை. நாகா என்பது ஆண். நாகி என்பது பெண்”. ச்சேனின் ஆண் பால் பெண் பல் பதம் வியக்க வைத்தது. 

”போல் போட்டில் ஆட்சியில் இந்த இடங்கள் எப்படி இருந்தன என ஏதும் தகவல் உண்டா ச்சேன்?” 

"எல்லா இடங்களிலும் கன்னி வெடிகளை புதைத்து வைத்திருந்திருக்கிறார்கள். பின் நாட்களில் அதை எடுத்துவிட்டாலும் இன்னமும் கண்டு பிடிக்க முடியாத கன்னி வெடிகள் உள்ளன. இந்த இடங்கள் எல்லாம் பெரிய பெரிய மரங்களால் காடு மண்டி மூடப்பட்டிருந்ததாக அப்பா கூறுவார். பல கட்டிடங்கள் அப்போது பார்வையில் இருந்து மறைந்திருந்தன”.
Baphuon : உறக்கும் நிலையில் புத்த சிலை
மேலும் வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3

தொடரும்...

Thursday, December 12, 2013

அங்கோர் வாட் 3- பேசும் கற்கள்

கெமர் கல்வெட்டு
கல் சொல்லும் கதை:

அரச கட்டளை: ஸ்ரீ பிங்கலேஷ்வரா படகிற்கு 3 ’கனன்’ உப்பும்*, குபோன் கம்ரதன் படகிற்கு 3 ‘கனன்’ உப்பும், சர்வஷ்ரமாவின் இரு படகுகளுக்கு 4 ‘கனன்’ உப்பும், ஸ்ரீ பட்டேஷ்வரா மற்றும் ஸ்ரீ புஷ்கேஷ்வரா படகுகளுக்கு 2 ‘கனன்’ உப்பும் வழங்க வேண்டும். அரச கட்டளைப்படி உப்புகள் தீர்த்தகிராம துறைமுகத்தில் விநியோகிக்கப்படும். இங்கு வரும் போதும் அல்லது புறப்படும் போதும் இந்நிபந்தனை விதிக்கப்படும். இவ்விதியை தடுப்போரும், மீறுவோரும் தண்டனைக்குட்படுவர். 

Source : Inscription, the basis of our knowledge of history. - George Coedes

உப்பு*- பண்டைய கால வணிகத்தின் மதிப்பு மிகுந்த பொருள். Salt எனும் வார்த்தையில் இருந்து உருவானதே Salary.

கல்லின் கதை: 

தென் இந்திய எழுத்து வகையை போல் இருக்கும் இக்கல்வெட்டு பண்டைய கெமர் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினோரு வரிகள் உள்ளன. 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கம்போடியாவின் ‘கண்டல்’ எனும் ஊரின் வயல் வெளியில் புதைந்திருந்த இக்கல் தற்சமயம் ப்னோம் பேன் மியூசியத்தில் உள்ளது. இக்கல்வெட்டை உரிமையாக்கிக்கொள்ள சில போராட்டங்களும் விசாரனைகளும் நடந்தது தனிக்கதை. மேற்காணும் கட்டளையை சுங்கத்துறையின் வரி விதிப்பை போலவே கருதமுடிகிறது.

********

பாற்கடலை கடையும் காட்சி
பயணக் கலைப்பு எனும் சொல்லைக் கூட நினைத்துப் பார்க்கவில்லை. நூற்றாண்டுகளாக காடுகளுக்குள் தன்னை மறைத்துக் கொண்ட கலைப் பொக்கிஷத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவளே ஓங்கி இருந்தது. நாங்கள் யசோதரபுத்திற்குச் செல்கிறோம். ஆனால் இன்று அது அப்படி அழைக்கப்படவில்லை. 

தூர வாசலில் பெரிய முகம். மோனாலிசா சிரிப்பைப் போன்றதொரு பாவனையை காண முடிகிறது. டாவின்சியை சில நூற்றாண்டுகள் விச்சிய பெருமை அதைச் செதுக்கிய சிற்பியையே சேரும். இதுவும் அர்த்தம் காண முடியாத புன்னகையே. உள் நோக்கி நடக்க மேலும் மேலும் முகங்கள். உள் நுழையும் முன் வெளி புரத்தைக் காண்போம். 

வாசல் நோக்கிய பாதையின் இருபக்கமும் பாம்பின் உடலை இழுத்துக் கொண்டிருக்கும் பெருச் சிலைகளின் வரிசை. மலைக்க வைக்கும் தொடக்கம். ஒவ்வொரு சிலையும் இரண்டு சுமோ வீரனை ஒத்திருக்கிறது. பாற்கடலை கடையும் வருணனை. அமுதச் சுரபிக்காக அசுரக் கூட்டத்தை ஏமாற்றிய கடவுளின் கதை. இந்த தேவக் கூட்டமும் அசுரக் கூட்டமும் கடைந்து எடுத்த பொன் கோபுரம் உள்ளே உள்ளது. இன்று பொன் இல்லாத கோபுரமாக உள்ளது.

அங்கோர் வாட்டை காட்டினும் பெரிய சுற்றளவைக் கொண்டது அங்கோர் தோம் எனப்படும் இக்கோவில். மாபெரும் முகக் கோபுரங்களைக் கொண்ட கோவில் தான் இந்த அங்கோர் தோம். அங்கோர் தோம், பேயோன் மற்றும் தாப்ரோம் எனும் மூன்று கோவில்கள் அருகருகே உள்ளன. இம்மூன்று கோவில்களும் வடிவமைப்பில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் தாப்ரோம் எனும் கோவில் கொஞ்சம் மாறுபடுகிறது. அங்கோர் தோமில் இருக்கும் நாம் உட்புரத்தில் சென்று காணும் கோவில் பேயோன். 
முகம் மறு சீர்ரமைக்கப்பட்டுள்ளது. பிக்பக்கம் அகழி.

அங்கோர் தோம் இன்று ஒரு கோவில் என அழைக்கப்படுகிறது. காரணம் அதன் கட்டிட வடிவமைப்பு. 13-ஆம் நூற்றாண்டில் அது ஏழாம் ஜெயவர்மனுக்கும் அவனையடுத்த மூன்றாம் இந்திரவர்மனுக்கும் யசோதரபுரத்தின் கோட்டையாக இருந்துள்ளது. உங்களது அங்கோர் பயணத்தின் போது குறைந்தபட்சம் ஒரு நாளையாவது இங்குச் செலவிடுங்கள். அங்கோர் காலத்து கடைசி தலைநகரான இவ்விடத்தில் நீஙகள் கண்டு மலைக்க வேண்டிய கலையம்சங்கள் ஏராளம். 

அங்கோர் கட்டிட பகுதிகளில் நாம் காணும் பொதுவான அம்சங்களில் ஒன்று அகழிகள். படகுகளை வைத்துச் சுற்றி வரும் அளவுக்கு பெரிய அகழிகளை காண முடிகிறது. சரித்திர குறிப்பேடுகள் எல்லா கோவில்களுக்கும் அகழிகள் இருந்ததாக கூறுகிறது. ஆனால் பலவும் வற்றி போய்விட்டன. சில கோவிகளில் ஒரு பக்கம் மட்டும் தேங்கிய குட்டையைப் போல் அகழிகள் காணப்படுகிறது. 
பாழ்பட்ட பாம்பின் உடல்
கெமர் அரசர்கள் தங்களை கடவுளின் அவதாரமாகவும், அரசன் என்பவன் கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகவும் நினைத்து தனது சாம்ராஜிய செல்வச் செருக்கை காண்பிக்கவே இந்த ஒப்பற்ற கோவில்களையும், கட்டிடங்களையும் கட்டி இருக்கிறார்கள். கோவில்கள் வலுவாக இருக்கவே இந்த அகழிகள் கட்டபட்டதாக கூறப்படுகிறது. சுற்றிலும் அகழிகள் இருக்க கோட்டை/கோவிலுக்கு நுழையும் பாதை குறுகளாகிறது. நுழை பாதைகளை வீரர்கள் பாதுகாக்க அகழிகளில் முதலைகள் இராணுவ வேலையைச் செய்திருக்கின்றன. 

அங்கோரில் நாம் இன்று காணும் சிலைகள் எல்லாம் முழுமையாய் இருப்பதில்லை. சில அங்கோர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. சில கிடைக்காமலே போய்விட்டன. நான் முன்பு சொன்ன சுமோ அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அதே கதிதான். முக்கியமாக பார்வதி, லட்சுமி போன்ற பெண் தெய்வங்களின் சிலைகளின் முகப் பகுதி மட்டும் செதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. சரித்திர சுவடு மிகும் இடங்ளில் நிகழ்ந்த கலைத் திருட்டுகள் பல கோடி டாலர் மதிப்புகளை எட்டுகிறது. சரித்திரத்தில் கலைத் திருடர்கள் என ஒரு தனிக் கட்டுரையையே எழுதலாம். 
பெருமுகக் கோபுரங்கள். மூன்று முகங்கள்.

சிறுவியாபாரிகள் கோவிலின் முகப்புப் பகுதியில் புத்தகங்களையும், காணொளி சீடிகளையும், கைவினைப் பொருட்களையும் துரத்தி துரத்தி விற்பனை செய்கிறார்கள். அட இன்னும் சுற்றிப் பார்க்கவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் இப்படியா என நாமும் ஓட வேண்டி உள்ளது. நீங்கள் யானை சவாரி செய்தும் இங்குச் சுற்றி பார்க்கலாம். சிகப்பு வெல்வெட் துணியை போர்த்தி யானைகளை தயார் நிலையில் வைத்துள்ளார்கள் பாகன்கள். நாங்கள் யானை சவாரியை தேர்ந்தெடுக்கவில்லை. 

அங்கோர் பயணத்தில் நீங்கள் காண இருப்பது நீண்ட நெடுந்தூர கலை அம்சங்களை. ஆக நீங்கள் நடந்தாக வேண்டும். உங்கள் கால்களில் ஆணி ஏற்படுமாயினும், மனம் ததும்பும் கேளிக்கை பயணங்களை விரும்புவோராக இருப்பீர்கள் என்றாலோ இப்பயணம் உங்களுக்கு உவகை அளிக்காமல் போகலாம். சிற்பக் கலைகளின் பின்ணியை அறிந்துக் கொள்ள புத்தகங்களும், தகுதியான பயண வழிகாட்டியும் உங்களுக்கு உதவலாம். 
எண்னற்ற முகக் கோபுரங்கள்
அங்கோர் தோமின் பெருமுகக் கோபுரங்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு முகங்களை கொண்டுள்ளது. ஆனால் நீங்கள் எந்தப் பக்கம் நின்று கவனித்தாலும் மூன்றினை மட்டுமே காண முடியும். பின்னால் இருக்கும் ஒன்று மறைந்துவிடும். அவ்வளவு நேர்த்தியான கட்டமைப்பு. 

உள் பகுதியில் இடிபாடுகள் நிறைந்த ஒரு தளத்தில் கட்டுமான பணிகள் நடந்துக் கொண்டிருந்தது. யுனேஸ்கோவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடப்பதாக கோல் ச்சேன் கூறினார். 

அங்கோர் பகுதிகளில் அவ்வளவு சுலபத்தில் மறு சீரமைப்புப் பணிகளை செய்துவிட முடியாது. கட்டிட அமைப்பு இருந்ததன் ஆதாரம் காட்டப்பட வேண்டும். அது மூன்று அடுக்குகளான குழுவினரால் ஒப்புக் கொண்ட பிறகே சீரமைப்புப் பணிகளை தொடர முடியும். சீரமைப்புப் பணிகள் மூன்றாண்டுகளாக நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேயோன் எனும் தங்கக் கோபுரத்திலான கோவில் மட்டும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா?

இன்றய நவீனம் அந்நாட்களில் இருந்திருந்தால் ஒட்டு மொத்த உலகையும் அடிமையாக்கி கோவில்கள் எழுப்பி இருப்பான் இந்த ஏழாம் ஜெயவர்மன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

பயணங்கள் தொடரும்...

Monday, December 09, 2013

அங்கோர் வாட் 2 - கம்போடிய பயணம் படங்களுடன்

பொற்கதிரில் பொழிவாய் சிதறும் சிரிப்பு

’May you have what really matters- in future may you marry thousands and thousands of husbands' - A Record of Cambodia The Land and its People - Page 56 (Young Girls)


'Zhentan' எனும் சடங்கு முறையைக் கேள்விபட்டதுண்டா? வயதுக்கு வந்த பெண் திருமணம் செய்துக் கொடுக்கப்படும் முன் மத போதகனால் கன்னி கழிக்கப்பட வேண்டும் என்பதே இச்சடங்கின் அர்த்தம். A Record of Cambodia The Land and its People எனும் நூலில் இக்குறிப்பு காணப்படுகிறது. சியம் ரிப் பயணத்திற்கு முன் கம்போடியாவை பற்றி அறிந்து வைத்துக் கொள்ள சில புத்தகங்களை வாங்கினேன். அதில் இந்தப் புத்தகம் தனி சிறப்பு மிக்கது. 


1296-1297-ஆண்டுகளில் அன்றைய யசோதரபுரம் என அழைக்கப்படும் அங்கோர் நகரத்திற்குச் சென்ற ஒரு சீனத் தூதுவனின் குறிப்புகளில் இருந்து இப்புத்தகம் இயற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சீனக் குறிப்பில் இருந்து பிரன்சு மொழிக்கும் பின் பிரன்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு The Customs Of Cambodia (1902) எனும் நூலாக பதிப்பிக்கப்பட்டது. 2007-ல் நேரடியாக சீனக் குறிப்பில் இருந்து ஆங்கிலத்திற்கு A Record of Cambodia The Land and its People எனும் புத்தகமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்புகளை எழுதிய சீன தூதுவனின் பெயர் ச்சாவ் தாக்குவான் (Zhou Daguan 1266–1346). தாக்குவான் மூன்றாம் இந்திரவர்மனின் (Indravarma iii 1295-1308) காலகட்டத்தில் அங்குப் பயணித்திருக்கிறார். அக்காலகட்டத்தில் யசோதரபுரத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்த ஒரே நேரடி சாட்சி ச்சாவ் தாக்குவான் மட்டுமே. 

கம்போடிய நாணயம் - ரியல்
மெற்சொன்ன சடங்கு முறை ஒரு கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. அன்றய மக்களின் நிலை இதுவென அறிய முடிகிறது. ச்சாவ் தாக்குவான் சென்ற காலத்தில் சைவம், வைணவம் மற்றும் புத்தம் என மூன்று மதங்களும் அங்கு அமலில் இருந்துள்ளன. பூணூல் மற்றும் காவி அணிந்தவர்களை பண்டிதர்கள் என குறிப்பிடுகிறார் தாக்குவான். அவரின் குறிப்புகளை மேலும் ஆங்காங்கு அடுத்து வரும் பத்திகளில் மேற்கோள் காட்டுகிறேன். நீங்கள் அங்கோர் பயணம் செல்வதாக இருந்தால் இந்த புத்தகத்தையும் வாங்கிப் படித்துவிடுங்கள். அன்றைய நிலையில் இங்கிருக்கும் கோவில்கள் எப்படி இருந்தன என்பதையும் இன்றைய நிலையில் நீங்கள் காணும் மாபெரும் கற்சிப்பங்களுக்குமான வேறுபாட்டை உணர்வீர்கள்.

நாங்கள் அங்கு சென்ற நேரம் சியம் ரிப் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு அதிகாலை நேரம் அது. எப்பொழுதும் இந்நிலையில் இருப்பதில்லை. நாங்கள் அங்குச் செல்வதற்கு இரு நாட்களுக்கு முன் தான் கம்போடிய பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. இவ்வாண்டின் தேர்தல் கொஞ்சம் சவாலாக இருந்ததாகவும். மக்களின் எழுச்சி நிலை ஓங்கி இருந்ததால் நெடுநாட்களாக ஆட்சியில் இருந்தக் கட்சிக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். மலேசியாவின் அரசியல் நிலையே அங்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டேன். ’இரு நாட்களாக ஊடகச் செய்திகள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் வெற்றியாளர் யார் என்பதும் தெரியவில்லை. அதிகமான மக்கள் தேர்தல் செய்தியை அறிந்துக் கொள்ள விடுமுறையில் இருக்கிறார்கள். கலவரம் வருமென’ அஞ்சுவதாக பயண வழிகாட்டி ச்சேன் வயிற்றில் புலியைக் கறைத்தார்.

டிலக்ஸ் அறையின் கட்டில் பகுதி
‘ச்சேன் நான் உங்களுக்கு மடல் அனுப்பி இருந்தேன் இல்லையா. எங்களின் விடுதிக்கான வழி தெரியும் தானே’ ‘ஓ... நிச்சயமாக. SKY WAY HOTEL தானே. தாராளமாக செல்லலாம்’. ’நாங்கள் குளித்துத் தயாராகிவிடுகின்றோம். பிறகு காலைச் சிற்றுண்டிக்கு அழைத்துச் செல்லுங்கள்.’ ‘ஆகட்டும் சார்’. ’நாங்கள் தங்கும் விடுதி எப்படி? நல்லவிதமானதா?’ ச்சேன்னின் நல்ல பதிலை எதிர்ப்பார்த்தேன். ‘நல்ல விடுதி. ஜப்பானியர்கள் அதிகம் அந்த விடுதியைத் தேர்ந்தெடுப்பார்கள். கொஞ்சம் விலை மலிவு’. 
விடுதியின் வெளிபுரம்
நாம் செல்லும் பயணங்களில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயங்களில் விடுதியும் ஒன்று. சில வேளைகளில் ரொம்பவே சொதப்பலாகிவிடும். இதனால் விடுமுறைக்கான மன நிலை மொத்தமாய் குழைந்துவிடும். இது தொடர்பாக சுஜாதா தனது பயணத்தின் போது பட்ட அவஸ்தையை நயகரா எனும் கதையில் அழகாகச் சொல்லி இருப்பார். SKY WAY HOTEL, SIEM REAP மூன்று நட்சத்திர தங்கும் விடுதியாகும். நீச்சல் குளம், இணைய வசதியும், காலைச் சிற்றுண்டியும் உண்டு. நான்கு நாள் மூன்று இரவுகள் நாங்கள் அங்கு தங்கினோம். நாங்கள் 3 டீலக்ஸ் அறைகளை பதிவு செய்திருந்தோம். அறை ஒன்று மூன்று இரவுகளுக்கு 250 ரிங்கிட்/USD78 மட்டுமே. 

கம்போடிய நாணயம் ரியல் என அழைக்கப்படுகிறது. ரியலின் மதிப்பு மிகக் குறைவு. ஆதலால் செல்லும் இடங்கள் யாவும் அமேரிக்க டாலரின் புலக்கம் தான். ஒரு டாலர் 4200 ரியலுக்கு சமம். விமான டிக்கட், விடுதி செலவு மற்றும் பயண வழிகாட்டிக்கான பணம் யாவும் அங்குச் செல்லும் முன் இணையம் வழி செலுத்திவிட்டேன். அங்கு கொண்டு சென்றது உணவு மற்றும் வழிச் செலவுக்கான பணம் மட்டுமே. உணவுக்கான பணம் மட்டுமே கொஞ்சம் அதிகமாக செலவானது. ஒரு வேளை சாப்பாடு சராசரியாக 6 பேருக்கும் 40 டாலர் வரையில் செலவானது. மலேசிய நாணயத்திற்கு ஒப்பிடும் போது இது கொஞ்சம் அதிகமானதே. சர்வதேச சுற்றுலா தளம் என்பதால் இவ்விலை பட்டியலை நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். 

உங்கள் வழித் துணைக்கு பயனாக அமையும் மேலும் ஒரு புத்தகம் Lonely Planet Cambodia. Lonely Planet உலகின் அனைத்து நாடுகளுக்குமான சுற்றுலாக் குறிப்புகளைத் தொகுத்திருப்பார்கள். ஒரு கையடக்க அகராதியைப் போல் புரட்டிக் கொள்ள முடியும். கம்போடியாவுக்கான புத்தகத்தை புரட்டிய போது சில இந்திய உணவகங்களும் அங்கிருப்பதை உணர்ந்தேன். அங்குச் சென்றும் காலைச் சிற்றுண்டிக்கு இந்திய உணவகத்தை தான் நாடினோம். ச்சேன் காட்டியதில் புத்தகத்தை காட்டினும் மேலும் பல இந்திய உணவகங்கள் பெருகி இருந்தன. அதிகாலை என்பதால் பல உணவகங்கள் திறக்கப்படாமல் இருந்தன. 

Curry Walla உணவகம்
Curry Wallaவில் மட்டும் எங்களை உபசரிப்பதாகச் சொன்னார்கள். அனைத்தும் வட இந்திய உணவு வகைகள். வேலையாட்கள் வட இந்தியரும் கம்போடியர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆடர் எடுத்து உடனுக்குடன் வேண்டியதை சமைத்துக் கொடுக்கிறார்கள். உணவுக்கு A கொடுக்கலாம். நான் சப்பாத்தி ஆர்டர் செய்திருந்தேன். இங்கு நாம் சப்பத்தியை சாம்பார் அல்லது சட்டினி வகைகளோடு முக்கி எடுத்து ருசி பார்ப்போம். அங்கு ஒரு கிண்ணத்தில் கெட்டித் தயிரை கொடுத்தார்கள். சப்பாத்திக்கும் தயிருக்குமான காம்பினேஷன் டிவைன். 

சியம் ரிப்பில் சர்வ தேச அளவிலான எல்லா உணவுகளும் கிடைக்கின்றன. நாட்டுக்கு ஒரு கடை விகிதம் திறந்திருப்பார்கள் போல. முடிந்த அளவுக்கு பதம் பார்த்துவிடுங்கள். வாய்ப்புகள் எல்லா சமயங்களிலும் அமைவதில்லை. 

நுழைவுச் சீட்டு எடுக்கும் இடம், நாங்கள் எடுத்தது மூன்று நாட்களுக்கான சீட்டு
சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வர்மன்கள் கட்டி வைத்த கட்டிடங்களை காண ஆயத்தமானோம். அதற்கு முன் அங்கோர் பார்க் எனப்படும் கோவில்களும் கலைச் சிற்பங்களும் நிறைந்த அப்பகுதியை சுற்றி பார்க்க உரிமச் சீட்டு எடுக்க வேண்டும். எல்லா பணமும் மொத்தமாக பயண வழிகாட்டியிடம் செலுத்திவிட்டதால் பாஸுக்கான விலையும் சேர்க்கப்பட்டிருந்தது. படம் பிடிக்க முகத்தை காட்டி பாஸ் வாங்கி மாட்டிக் கொண்டோம். 

முதலாவதாக நாங்கள் காணச் சென்ற இடத்தை இப்படி குறிப்பிடுகிறார் சீனத் தூதுவன் ச்சாவ் தாகுவான்:

‘the wall of the city are about twenty li (10 kilometers) in circumference. there are five gateways, each of them with two gates, one in front of the other.'

'in the center of the capital is a gold tower, flanked by twenty or so stone towers and hundred or so stone chambers'. A Record of Cambodia The Land and its People - Page 47&48 (the city and its walls)

பயணங்கள் தொடரும்...

Thursday, December 05, 2013

அங்கோர் வாட் - கம்போடிய பயணம் படங்களுடன்

எனது பாஸ்போர்ட், இமிகிரேஷனுக்கான வெள்ளை அட்டையும், சுங்கத்துறைக்கான நீல அட்டையும்
சரித்திர சுவடுகளை படித்து உணர்ந்து கொள்வதிலும், நேரிடையாக கண்டு உணர்வதிலும் காத தூர வேறுபாடுகள் உண்டு. முன் நோக்கி ஓடும் முன்னோடிகள் சரித்திரத்தை பழம் பெருமை பேசும் கருவியாகவே கருதுகிறார்கள். அதை தூர எரிந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது இவர்களின் வாதம். 

வரலாற்று பின்னணிகளை அலசல் செய்து தெரிந்து கொள்வதில் எனக்கு அலாதி பிரியம். முடிந்த அளவில் அதை இங்கு பகிர்ந்தும் வந்துள்ளேன். இப்பொழுதும் ஒரு சுவாரசியமான பயணத்தை முடிந்த மட்டில் இங்கு கொடுக்க எத்தனிக்கிறேன். 

சியம் ரிப் கம்போடியாவின் இரண்டாவது பெருநகரம். முதல் நிலையில் உள்ளது அதன் தலைநகரான ப்நோம் பேன். கம்போடியா ஆசியாவில் மூன்றாம் நிலையில் இருக்கும் ஏழை நாடு. பல போர்களாலும் படையெடுப்புகளாலும் பலமான அடிகளை வாங்கிய நாடு. இன்னமும் அதன் தாக்கத்தை நாம் அங்கு காண முடிகிறது. போல் போட்டின் ஆட்சி காலத்தின் யுத்த கால நிகழ்வுகளை வாசிக்க விரும்புவோர் Survival in the Killing Fields எனும் நூலினை வாசித்துப் பார்க்கலாம். 
தரையிறங்கும் முன்
அதிக வளர்ச்சி என ஏதும் கூற முடியாத நகரம் சியம் ரிப். 20 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஒரு கிராமப் பகுதியில் வாழ்ந்திருப்பீர்கள் என்றால் அது தான் இன்றைய சியம் ரிப். நகரப் பகுதிகளில் மட்டுமே மின்சார வசதிகள் காணப்படுகிறது. நான் சென்றது அதன் மழை கால சமயத்தில். கால்வாய் வசதிகள் போதுமானதாக அமைக்கப்படவில்லை என்பதால் சிறு மழைக்குக் கூட நீர் தேக்கங்கள் ஏற்படுகிறது. சியம் என்பது தாய்லாந்தின் புரதான பெயர். சியம் ரிப் என்பது தாய்லாந்து வீழ்ந்த பகுதி என அறியப்படுகிறது. கம்போடியர்கள் இன்றளவிலும் தாய்லாந்துக்காரர்களை தன் எதிரியாகவே கருதுகிறார்கள். 

எல்லையோர வாய்க்கால் வரப்பு தகறாருகள் இவர்களுக்கு உண்டு. கம்போடிய தாய்லாந்து எல்லையில் இருக்கும் ஒரு புரதான கோவில் யாருக்கு சொந்தம் என்பதிலான பிரச்சனை இன்னும் நிலுவையில் உள்ளது. தாய்லாந்தில் இருந்து கம்போடியாவுக்கு பயணம் செய்வது ஒரு மலை முகட்டில் இருந்து உங்களை கீழே உருட்டிவிடுவதற்கு சமமாகும். மிக மோசமான பாதைகளை கடந்து வந்தாக வேண்டும். இரு நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கம் சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் வருமானமும் யுனேஸ்கோவின் மாணியமும் இதற்கு முக்கிய காரணம். இருவரும் சலிக்காமல் விடாப்பிடியாகவே இருக்கிறார்கள். 

விமான நிலையத்திற்கு வெளியே- துடைத்து வைத்த சுத்தம்
மலேசியர்கள் கம்போடியாச் செல்ல விசா தேவை இல்லை. விசா கட்டுப்பாடு உள்ள நாடுகள் கம்போடிய இமிகிரேஷனில் 'Visa On Arrival' எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதற்கான கட்டணம் தெரியவில்லை. மலேசியர்கள் விசா இல்லாமல் 30 நாட்களுக்கான பயண உரிமத்தை பெற்றுக் கொள்ள முடியும். 30 நாட்களுக்கும் அதிகமாக தங்க விரும்புவோர் விசா நிபந்தனைக்குட்படுவார்கள். 

சியம் ரிப் முழுவதும் சுற்றுலா பயணிகளை நம்பி செயல்படுகிறது. சுற்றுலா பயணிகள் இல்லாத சியம் ரிப் நகரத்தை இவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்துக் கலாச்சாரத்தையும் மரபுக் கலைகளையும் அமல்படுத்திய ஒரு பழம் பெரும் நாகரீகத்தை காண புற்றிசல்களை போல் கூட்டம் கிளம்பி வந்துக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் ஐரோப்பிய வெள்ளைத் தோல்கள் அதிக அளவில் வருகிறார்கள். அதனை அடுத்து ஜப்பானியர்களும் சீனர்களும் அதிகமாக வருகை புரிகிறார்கள் என்பது சற்று ஆச்சரியமான தகவல் தான். 

விமான நிலையத்தினுள் இந்த வெள்ளை யானை பலரையும் கவர்ந்தது
வாட் என்பது கோவிலை குறிக்கும். இன்றய அங்கோர் எனப்படும் சமவெளி முன் ஒரு காலத்தில் யசோதரபுரம், ஹரிஹரலாயம், ஈஸ்வரபுரம் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. அங்கோர் வாட் என்பது சூரியவர்மன் எனும் கெமர்(கம்போடியா) அரசனால் கட்டப்பட்ட கோவிலாகும். இன்றும் அது தமிழர்களால் கட்டபட்டது எனவதிடுவோர் உண்டு. சூரியவர்மன் தமிழன் என சொல்பவர்களும் உண்டு. அங்கு வாழ்ந்த மக்கள் இந்துவாக இருந்திருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் நிச்சயமாக அந்த மண்ணின் மைந்தர்களாகிய கம்போடியர்கள் தான். அக்கோவில்களை கட்டி எழுப்பியதும் கம்போடிய அரசர்கள் தான். ஹிந்து மதமும் அரசாட்சி முறைகளும் வணிகத்தின் வழி அங்கு பரப்பப்பட்டுள்ளது. 

அங்கோர் பகுதியில் நூற்றுக்கும் மெற்பட்ட கோவில்கள் இருந்துள்ளன. ஆனால் இன்று நம்மால் காண முடிந்தது அவற்றில் சொற்பமானவை மட்டுமே. பல கோவில்கள் போர்களலும் இயற்கை பேரிடர்களாலும் பலமான பாதிப்பிற்குட்பட்டுள்ளன. சிற்ப கலை திருட்டுகளும் நடந்துள்ளன. இதில் அங்கோர் வாட் மட்டும் கொஞ்சம் தப்பித்துவிட்டது. அதுவே இன்றளவும் முழுமையாக காணப்படுகிறது. அதனால் தான் என்னவோ சியம் ரிப் போகும் பலரும் அங்கோர் வாட் காணச் செல்வதாக அதை ஒரு ‘லெண்ட் மார்க்காக’ குறிப்பிடுகிறார்கள். 
எல்லையோர சர்ச்சைக்கு காரணமான Preah Viher கோவில் - Photo thanks to TOGO website
நான், மனைவி, அப்பா, அம்மா, என் நண்பர் மாறன் மற்றும் அவர் மனைவி என 6 பேர் இந்த அங்கோர் பயணத்தில் கலந்துக் கொண்டோம். ஏர் ஆசியாவின் மலிவு விற்பனையின் போது போக வர விமான சீட்டு ஒரு ஆளுக்கு 270 ரிங்கிட் ஆனது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சியம் ரிப் விமான நிலையத்துக்கு 2.30 மணி நேர பயணம். தரையிறங்கும் முன் அந்நாட்டின் நிலபரப்பு மிக விசித்திரமாகவே காட்சியளித்தது. சமவெளியும் நீர் நிலை பகுதிகளும் அங்கும் இங்குமாக காணப்பட்டது. 

பயணத்திற்கு முன்பாகவே ஹோட்டல் மற்றும் பயண வழிகாட்டியையும் முன் பதிவு செய்திருந்தேன். சியம் ரிப்பின் ஹோட்டல்கள் மிக மலிவான விலையில் கிடைக்கின்றன. TripAdvisor, Booking, AirAsia Go, Agoda போன்ற இணைய தளங்கள் இதற்கு மிகவும் பயனாக இருந்தன. பயண வழிகாட்டிக்கு ஒரு சில நிருவனங்களை அனுகினேன். தேர்ந்தெடுக்க நினைத்த வழிகாட்டியை இணைய பயனர்கள் அவர்களின் பயண அனுபவங்களில் எழுதியதின் அடிப்படையில் தேர்வு செய்தேன். எனது நல்லூழ், கோல் ச்சேன் எனும் அவ்வழிகாட்டி அருமையான மனிதராக அமைந்தார். 

சியம் ரிப் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விசா பிரச்சனைகள் ஏதும் இல்லாததால் இமிகிரேஷன் விவகாரங்கள் இனிதே முடிந்தது. விசா வேண்டுவோர் ஒரு பக்கம் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தார்கள். 30 நாள் முத்திரையோடு கம்போடியாவில் காலடி வைத்தோம். ச்சேன் எனது பெயர் பலகையோடு காத்திருந்தார். விசாலமான இருக்கைகள் கொண்ட ‘வேனுக்கு’ எங்களை அழைத்துச் சென்றார். அதிசயமாக வேனின் கதவுகளை காணவில்லை. ‘நண்பா இது மலேசியா இல்லை. இந்த வண்டியின் கதவுகள் அந்தப் பக்கம் இருக்கிறது பார்’ என்றார் ச்சேன். கம்போடியாவின் வண்டிகள் யாவும் இட பக்க வழக்கம் கொண்டவை. நமது போகும் வழி அவர்களுக்கு வரும் வழியென சாலை அமைப்பு. அறியாமையின் நகைப்போடு எங்களின் விடுதியை நோக்கி பயணப்பட்டோம்... 

பயணங்கள் தொடரும்... 

Monday, December 02, 2013

யூதர்கள் தொடர்பான 15 குறிப்புகள்


1.உலகில் அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்களும் அதிகமாக சபிக்கப்பட்டவர்களும் யூதர்களே எனும் ஆங்கில சொற்றொடர் பிரபலமானது.


2. நான் யூதர்களை கொன்றுக் குவித்த காரணங்களை மிச்சம் விட்டு வைத்திருப்பவர்களை கண்டு தெரிந்துக் கொள்வீர்கள் எனச் சொல்கிறார் ஹிட்லர்.

3. ஹிட்லரின் தந்தையின் பெயர் அலாய்ஸ் ஹிட்லர். அலாய்ஸ் ஹிட்லருக்கு தன் தந்தை யார் என தெரியாது. அவர் தாய் (ஹிட்லரின் பாட்டி) ஒரு யூதனின் வீட்டில் தங்கி பணி புரிந்த காலத்தில் பிறந்தார் என்பது மட்டுமே தெரியும். அப்படி இருப்பின் ஹிட்லர் வெறுத்த முதல் யூதன் தன் தந்தை தான். ஹிட்லருக்கு தன் அப்பாவை பிடிக்காது.

4. தனது மதம், தனது இனம் என விட்டுக் கொடுக்காமல் சரித்திர சங்கிலியில் தொடர்ந்து இரத்தம் சிந்தி வருகிறார்கள் யூதர்கள்.

5. மோசஸ் எனும் இறை தூதனின் வழி தோரா எனும் புனித நூலை பெற்றவர்கள் இன்னமும் ஒர் இறை தூதன் தனது இனத்தில் தோன்றுவான் என காத்திருக்கிறார்கள். ஏசு ஒரு யூதனாக இருப்பினும் அவரை யூத குலம் முழுமையாக ஏற்க மறுத்தது. ஒரு யூதனால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஏசு (யூதாஸ் கொடுத்த முத்தம்) யூதர்களால் வதைத்துக் கொல்லப்படுகிறார். நபிகள் நாயகம் யூத குலத்தில் பிறக்காததால் அவர்ரையும் தேவ குமாரனாக ஏற்க மறுத்தவர்கள் யூதர்கள்.

6. ஏசுவை கொன்றவர்கள் என கிருத்தவர்களாலும் நிலத்தை அபகரித்தவர்கள் என முஸ்லிம்களாலும் சுமார் முந்நூறு ஆண்டு கால சிலுவை போரில் பந்தாடபட்டவர்கள் யூதர்கள்.

7. முகில் எழுதிய யூதர்கள் எனும் புத்தகம் யூதர்கள் தொடர்பான மேலோட்ட தகவல்களை கொடுக்கிறது. மிகவும் சிறப்பானதொரு தொகுப்பு நூல் இது.

8. இதனை தொடர்ந்து மேலதிக தகவல்களுக்கு பா.ராகவனின் நிலமெல்லாம் இரத்தம் எனும் நூலினை வாசிக்கலாம். நிலமெல்லாம் இரத்தம் யூதர்கள் மற்றும் இஸ்ரேல் எனும் தேசம் உருவானதின் பின்னனியை முழுமையாக விளக்குகிறது.

9. நில வங்கியை கண்டுபிடித்து, கடன் கொடுத்து, நில அபகரிப்பு செய்து கொஞ்சம் கொஞ்சமாக தன் தேசத்தை உருவாக்க எத்தனித்தவர்கள் யூதர்கள். லஞ்சம், கிரேடிட் கார்டு, எம்.எல்.எம் போன்ற இன்னும் பல வஸ்துக்களுக்கு இவர்களே முன்னோடிகள்.

10. யூதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கருவில் இருந்தே போதனை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்க ஆரோக்கிய உணவு, சிறந்த நூல்கள், கணிதம் என பல வழிமுறைகளை கரு உண்டான காலம் முதல் பின்பற்றுகிறார்கள். உலகில் தனித்துக் காணப்படும் இனமாக அறியப்பட இவர்களின் புத்தி கூர்மையும் ஒரு காரணமாகும்.

11. தீவிர மதப் பற்றுக் கொண்ட யூதர்கள் தாடியையும் கிருதாவையும் வெட்டுவதில்லை.

12. யூத ஆண்கள் சிறு குல்லாவை அணிவார்கள். அவர்கள் அணியும் குல்லா ‘கிப்பா’ என அழைக்கப்படும். கிப்பா எல்லா வேளையிலும் அணிய வழியுறுத்தப்படுகிறது. கிப்பாவை அணியாமல் விடுவது அவர்களின் சடங்கு முறைக்கு எதிரானது.

13. யூதனாக பிறப்பவன் மட்டுமே யூதமத்தில் இருக்க முடியும். யூத மதத்தை துறப்பது சுலபம். யூத மதத்தை தழுவுவது சிரமம்.

14. வெள்ளிக்கிழமை சூரியன் உதிக்கும் சமயம் ’சப்பத்’ தொடங்குகிறது. சப்பத் என்பது யூதர்களின் வார நாள். மிக முக்கிய நாளும் கூட. குடும்பத்தோடு ஒன்று கூடி வழிபாட்டில் ஈடுபடுவார்கள். சப்பத்தின் போது யூதர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். எந்த விதமான சிறு வேலையாக இருந்தாலும் கூட அதைச் செய்ய மாட்டார்கள். ஒரு விளக்கை ஊதி அனைப்பது உட்பட. அந்நாள் முழுக்க அவர்களின் கடவுளை நினைத்தபடி இருப்பார்கள்.

15. Western Wall அல்லது wailing wall என்பது ஜெருசலத்தில் அமைந்திருக்கும் யூதர்களின் புரதான புனிதத் தளம். கி.மு 7-ஆம் நூற்றாண்டில் யூதக் கோவிலாக இருந்த இவ்விடம் ரோமனியர்களின் படையெடுப்பினால் தரைமட்டம் ஆனது. அக்கோவிலில் எஞ்சிய தூண் இன்றும் காணப்படுகிறது. பல யுத்தங்களையும், துப்பாக்கிச் சூடுகளையும், குண்டடிகளையும் கண்ட தூண் அது. யூதர்கள் இன்னமும் அத்தூணை கண்ணுக்குள் வைத்து போற்றுகிறார்கள். அங்குச் செல்லும் ஒவ்வொரு யூதனும் அத்தூணை கட்டித் தழுவி அழுகிறார்கள். அவர்களின் சரித்திர சுவடுகளுக்கு அத்தூண் ஒரு மாபெரும் சாட்சி.