Monday, September 28, 2009

எனக்கு சில அடிமைகள் வேண்டும் (கடைசி பகுதி)


அவள் என் மீது படுத்திருப்பதாக உணர்ந்தேன்...
எனக்கு சில அடிமைகள் வேண்டும் பகுதி ஒன்று (படிக்க இங்கே சுட்டவும்)
நாள்: வியாழக்கிழமை 12.08.2518
இடம்: விற்பனை அறை
நேரம்: இரவு 8.18
என் தலையில் இருந்த கருவியை கழ‌ட்டி வைத்தபடி அவள் சிரித்தாள்.
அட இது நிஜம் இல்லையா... ச்சே... என் நினைவுகளை படித்திருப்பாளோ... சிறு வெட்கத்தை அவளிடம் காண முடிகிறது.
"உங்களின் நினைவாற்றல் மற்றும் உடல் ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்படும்படியாக இயந்திரத்தில் கட்டளை கொடுத்துவிடலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்களுக்கு மறு பரிசோதனை செய்து அதற்கேற்ப சரிபடுத்திக் கொள்ளலாம்".
"உன்னைப் போலவே இந்த இயந்திரமும் என்னை வியக்க வைக்கிற‌‌தடி பெண்ணே, இதன் ஆக்கத்தை எத்தனை நாட்களில் நான் உணர முடியும்?"
"சுமார் 20 முதல் 25 நாட்கள் ஆகலாம், அப்படி உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்பதை நிரூபித்தால் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்கலாம்..."
"நஷ்ட ஈடாக உன்னைத் திருமணம் செய்து வைக்கக் கேட்கலாமா...?"
அவள் முறைத்தாள். மீண்டும் சிரித்தாள். எனக்கு அதன் அர்த்தங்கள் புரியவில்லை. அர்த்தம் புரியாததால் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை போலும். பாதகமில்லை, இதோ இயந்திரத்தை வாங்கிவிட்டேன். என்னை திடப்படுத்திக் கொண்டு இவளை சந்திக்க வேண்டும். சம்மதம் தெரிவித்துவிட்டால் அரசிடம் திருமணத்துக்கு விண்ணப்பம் செய்துவிடலாம். அடடா! அவள் பெயரைக் கேட்க மறந்தேன். சரி அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்.
அன்று வீடு திரும்பியவுடன் நான் உற்சாகமாக இருந்தேன். ப்ரேண்டோமினோ இயந்திரத்தைப் பொருத்தி வைத்து அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக படித்து அதன் இயக்கங்களைச் சோதித்துக் கொண்டேன்.

முதலில் என்ன விதமான பானத்தை முயற்சிக்கலாம்? பல முறை சிந்தித்தேன். பல தேர்வுகள் என் மனக் கண்ணில் ஊஞ்சலாடின.
பௌதிகம் எனும் பொத்தானை அழுத்தினேன். உடல் ஆரோக்கியம் எனும் பிரிவை தேர்வு செய்து சாக்லெட் எனும் பொத்தானை அழுத்தினேன். கட்டுமஸ்தாக கட்டுக்கடங்காத காளை போல் எனச் சொல்வார்களே அது போல் இருந்தால் அவள் என்னை விரும்புவாள் எனும் எண்ணம் தான்.
எனது கோப்பையில் சாக்லெட் பானம் நிர‌ம்பியது.
ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே என்பது அளவுகோள். நான் இரண்டு மூன்று நாட்களாக அருந்தி வந்தேன். சொல்லிக் கொள்வதை போல் மாற்றங்களை உணராமலிருந்தேன்.
சில தினங்களுக்குப் பின் நிறுவனத்தில் எங்களை ஆய்வியல் தொடர்பான மேல் நிலைப் பயிற்சிக்கு அனுப்பி இருந்தார்கள்.
"இதோ உங்கள் மேசை மீது இருக்கும் அந்த முள் கரண்டியை கவனியுங்கள். பதுவிசாக எடுத்து உண்பதற்கு பயன்படுவதை போலவே நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் உங்கள் உதட்டை பதம் பார்க்கவும் செய்யும். இப்படித் தான் எந்த ஒரு அனுகுமுறைக்கும் பல கோண பார்வைகள் உண்டு..." அவரின் உரை பழைய பஞ்சாங்கமாகவே இருந்தது.
ஓய்வாக இருந்த ஒரு மதிய வேளையில் அந்த வரிகளை ஏனோ நினைவு கூர்ந்துக் கொண்டேன். அந்த யோசனை ப்ரேண்டோமினோ இயந்திரத்தின் மீதும் சென்றது. ஏன் இதன் குறைபாடுகளை நான் கண்டறிய முடியாமல் போகிறது. நிச்சயமாக இதற்கும் குறை இருக்கும் தானே. இருக்கும். சோதித்துவிடலாம்.
உலக வளர்ச்சி ஆட்சியாளர்களுக்குத் தலைவலியாக அமைந்திருந்த காலக் கட்டம் இருந்தது. அதை தகர்ப்பதற்கான வழிகளை கண்டறிய ஏகப்பட்ட பணம் வாரி இறைக்கப்பட்டது. அவர்கள் நினைக்கும் வகையில் மக்கள் இருந்துவிட்டால் பிரச்சனைகள் இல்லை.
வேலையிடம், உண்பது, உறங்குவது மட்டும் ஒருவனுக்கு போதுமானதாக ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துதலே இதற்கு சாத்தியம். அப்படி செய்ததில் ஆட்சியாளர்கள் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தார்கள்.
ஆட்சியாளர்களின் உச்சக்கட்ட இலக்கே இந்த ஆரோக்கிய பான இயந்திரம். சில நாட்களில் எனது தனிபட்ட அயராத முயற்சியில் இதை அறிந்து கொள்ள முடிந்தது. இதற்காக அரசின் சில தடைகளை மீறியும் நான் செயல்பட வேண்டி இருந்தது. அதில் வெற்றியும் கண்டேன். சில அதிர்ச்சிகளையுடைய வெற்றி. பயமும் பதற்றமும் என்னை பிடுங்கித் தின்றது.
இதை நான் தடுக்க வேண்டும். நான் இங்கே இதை எதிர்த்து போராடினால் நம்புவார்களா? மக்கள் மத்தியில் பீதியை விளைவிக்கும் செயலாக நினைத்து என்னை கைது செய்யலாம். அவர்களின் திட்டத்தை அறிந்தவன் எனும் நோக்கில் எனை இரகசியமாக கொலை செய்துவிடலாம்.
இதை என் முன்னோர்களுக்கு தெரிவித்துவிட்டால் நான் எல்லோரையும் காப்பாற்றிவிடலாம் இல்லையா. காலத்தை பின்னோக்கி பயணிக்கும் யுக்தியை நான் படித்திருக்கிறேன். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் அவர்கள் நினைத்த மாத்திரத்தில் தான் விரும்பிய காலத்திற்கு செல்வார்களாமே? அப்படி செய்ய நான் சித்தனாக வேண்டுமா? அதை கற்றுக் கொள்ளும் அளவுக்கு நேரமும் பொறுமையும் எனக்கில்லை.
நான் சிறுவனாக இருந்த சமயம் சரித்திர ஆய்விற்காக காலத்தை பின்னோக்கி பயணிக்கும் இயந்திரத்தைக் கண்டு பிடித்திருந்தார்கள். சில காரணங்களுக்காக அது தடை செய்யப்பட்டது. அதைக் கண்டு பிடித்தவர் இப்பொழுது உயிரோடு இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி இருந்தாலும் அவர் எனக்கு உதவி செய்வாரா என்பது சந்தேகமாக இருந்தது.
அவ்வியந்திரம் தொடர்பான செய்திகளைத் திரட்டினேன். எனது நண்பன் ரவிவர்மன் செவ்வாய் கிரகவாசியாக வாழ்ந்து வந்தான். அறிவியல் ஆராய்ச்சியில் தேர்ச்சி பெற்றவன். அவன் உதவியுடன் அவ்வியந்திரத்தை குறைந்தபட்ச இயக்கங்களுடன் உருவாக்கினேன். அவசர கதியே இதற்கு காரணம்.
காலத்தை பின்னோக்கிப் பயணித்து வந்து இதோ இதை இப்பொழுது உங்களிடம் சொல்லிவிட்டேன். எனது முன்னோர்களாகிய நீங்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். மனித குலத்தை அடிமைபடுத்தும் செயல்திட்டங்கள் எதிர்காலத்தில் நடந்து கொண்டு இருக்கிறன‌. உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு சுதந்திர வாழ்க்கை அமைந்திருக்கிறது. அது நிரந்தரமல்ல. நேற்று துரித உணவகம் ஒன்றில் அமர்ந்து இணையத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். எல்லாம் எதிர்கால செய்தியை உங்களிடம் தெரிவிக்கும் நோக்கத்தில் தான். எதிரே ஒரு காதல் ஜோடிகள் பிட்சாவோ பர்க்கரோ ஏதோ ஒரு வஸ்துவைத் தின்று கொண்டிருந்தார்கள். தற்செயலாக சார்ஸ் அவள் உதட்டில் ஒட்டிக் கொள்ள இவன் அதை தொட்டு நக்கிக் கொள்ள என கொஞ்சலும் மிஞ்சலுமாக இருந்தது. இதுதான் அந்த காதல் எனும் எழவோ! ஒரே கிளுகிளுப்பு சமாச்சாரமாக இருக்கிறது.
நானும் பிட்சாவோ பர்க்க்ரோ சாப்பிட விருப்பம் கொள்கிறேன். இங்கேயே இருந்துவிட நினைக்கின்றேன். காலம் அனுமதிக்காது. கால இயந்திரத்தின் இயக்கம் எனக்கு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே அனுமதித்திருக்கிறது. நேரம் காலாவதியானதும் நான் தானாகவே எதிர்காலத்துக்குச் சென்றுவிடுவேன்.
**************
நாள்: செவ்வாய்க்கிழமை 27.09.2518
இடம்: தெரியவில்லை
நேரம்: இரவு 11.24
கால இயந்திரம் என்னை மீண்டும் அழைத்து வந்துவிட்டது. நான் இப்பொழுது இருக்கும் இடத்தை என்னால் அறிந்துக் கொள்ள முடியவில்லை.
விற்பனை அறையில் பார்த்த அந்த இரப்பர் சிரிப்பழகி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். இவளுக்கு ஏதும் தெரிந்துவிட்டதோ? என் உள்ளுணர்வு உறுத்தியது.
அன்று பார்த்ததை விட இப்பொழுது இன்னும் எழிலாகத் தோன்றினாள். குட்டைக் கை சட்டையும், காற்சட்டையும் அணிந்திருந்தாள். இப்பொழுது தான் குளித்திருப்பாள் போலும். ஏதோ ஒரு வாசனை விசிரியடித்தது. தலைமுடியைக் கோதிவிட்டபடி இருந்தாள். காகம் எச்சம் போனதைப் போல் அதில் சில மயிர்களுக்கு வண்ணம் பூசி இருந்தது தெரிந்தது.
"உங்களின் பேருதவிக்கு நன்றி பாரிதாசன்..." எனக்கு வியப்பாக இருந்தது. எதற்கு இவள் நன்றி சொல்ல வேண்டும்.
"எதற்கு நன்றி சொல்கிறாய் பெண்ணே. இப்பொழுது உனது தனிமை பயத்தை விரட்ட வந்ததற்காகவா?"
"எங்களின் ஆரோக்கிய பான இயந்திரத்தின் விற்பனைக்காக நாங்கள் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டோம். இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் ஆதரவில் செய்யப்பட்டது. மக்களிடையே சந்தேகம் வராமலிருக்கவே இப்படி தனியார் நிறுவனத்தின் வழி இயங்கினார்கள். இதன் செயல்பாட்டை பரப்புவதற்கு எங்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இருந்தும் வெற்றி கண்டோம். இதன் விற்பனை அரசு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருந்தது."
"நீ வந்தவுடன் விற்பனை சிட்டாக சிறகடித்திருக்குமே. உன் கண்களைப் போல்". அவள் பெருமூச்சிட்டாள். நான் அவளை மதிக்கவில்லை என கடுப்பேறுகிறாளோ?
"ஒருவர் இயந்திரத்தில் வெளிப்படும் பானத்தை அருந்திய அடுத்த 20 நாட்களில் அதில் கலக்கப்பட்ட மிக்ரோ சிப்கள் செயல்பட ஆரம்பித்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக மெய்ன் சிஸ்டத்தின் வழி எங்களின் தேவைக்கு ஏற்ப அவர்களை நாங்கள் இயக்க ஆரம்பித்துவிடுவோம்."
"அப்படி என்றால் 24 மணி நேரமும் என் ஞாபகமாகவே என்னை கவனித்து இருக்கிறாய் என சொல்ல வருகிறாய். அப்படித் தானே..?"
"எங்கள் தயாரிப்பின் இரகசியங்களை நீங்கள் கண்டறிந்த மறு நிமிடம் உங்களை அழித்துவிடத் திட்டமிட்டோம். ஆனால் எங்கள் குழுவின் தீர்மானத்தால் உங்களை வைத்து காரியம் சாதித்துக் கொண்டோம்".
"என்ன காரியம்..." என் தொண்டை குழிக்குள் சில கோலிக்குண்டுகள் உருண்டோடின. பயந்திருந்தேன்.
"இறந்த காலத்திற்கு நீங்கள் இச்செய்தியை சொல்ல முயற்சித்திருந்த அதே சமயம் நாங்களும் உங்களின் மூளை செயல்பாடுகளின் மாற்றங்களை செய்தோம். நீங்கள் சொல்லும் செய்தியை கேட்பவர்களும், பார்ப்பவர்களும் படிப்பவர்களும் அதை உள்வாங்கிக் கொள்ளும் சமயம் எழுத்திழும் பேச்சிலும் மில்லி மிக்ரோ சிப்ஸ் படிந்திருக்க உங்களின் மூளையை செயல்படுத்தினோம். அப்படி பார்த்து, படித்து, கேட்வர்களின் மூளைகளிலும் இயந்திர செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட ஆரம்பித்துவிடும்".
"அப்படி என்றால்..."
"உங்கள் தட்டச்சு செய்தல், எழுதுதல், பேசுதல், என எல்லா நடவடிக்கைகளிலும் மில்லி மிக்ரோ சிப்ஸ் பரவும் டெக்னாலாஜி சிஸ்டம், கணினியின் வைரஸ் போன்ற யுக்தி".
"அப்படி என்றால் அவர்கள்...."
"அரசு தான் நினைத்த காலக் கெடுவை விட அதி விரைவில் இவ்வுலகை அதன் கட்டுபாட்டுக்கு கொண்டுவந்துவிடும். உன்னைப் போன்ற மனித ஜென்மங்களால் தொல்லை இல்லை. நம் உலகுக்கு வா...".
"இதை படித்தவர்கள்..."
அவள் என்னை நெருங்கினாள். அவள் விரல்களின் ஸ்பரிசம் என் உடலில் படர்ந்தது. என் உதடுகளில் அவள் உதட்டைப் பதித்தாள். அந்த முத்தச் சத்தம் இனிமையாக இருந்தது. அவள் விரல்களை என் இடுப்பில் பதித்துத் திருகினாள்.
எனது இறுதி செயல்பாடுகள் சேமிக்கப்பட்டது. எனது இயக்கங்கள் குறைந்தது. நான் மெல்ல மெல்ல அணைந்து கொண்டிருந்தேன்.
-முற்றும்-

Friday, September 25, 2009

எனக்கு சில அடிமைகள் வேண்டும்

அச்சமயம் எனக்கு 25 வயது இருக்கலாம். வாழ்க்கை இயந்திரத்தை விட வேகமாக‌ ஓடிக் கொண்டு இருந்த பொழுது இக்கதை நடந்தது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 2518-ஆம் ஆண்டு நடந்த கதை. 2012ல் பூமி அழிந்து போய்விடவில்லையா என கேள்வி கேட்க நினைப்பவர்கள் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வரவும். அது வரை நான் கதை சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

எங்கே விட்டேன்... ஆம், 25 வயதாக இருந்த போது ஒரு ஆரோக்கிய உணவு உற்பத்தி நிறுவனத்தில் 'ரிசர்ச் & டெவெலப்மெண்ட்' டிப்பார்ட்மெண்டில் ஆராய்ச்சியாளனாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். நான் வேலை செய்த பகுதியில் மொத்தம் 4 பேர். நான், நளினா மேலும் 2 ரோபோக்கள்.

"மிஸ்டர் பாரி, 'அல்பேர்ட்டோ' கம்பேனி வெளியீடு செய்திருக்கும் இந்த ஆரோக்கியா மாத்திரையால் நமது 'ப்ரோடாக்' பாதிக்கப்படலாம்னு 'பாஸ்' மிகவும் கவலைபடுவதை போல் இருக்கிறது. நமது வர்க்கிங் ப்போகிரஸ் தொடர்பாக அவர் திருப்தி அடைந்ததாக தெரிய வில்லையே.."

மார்கெட்டிங் போட்டிகள் உச்ச நிலையில் இருந்த சமயம் அது. ஒரு நிறுவனத்தின்
தயாரிப்பை மற்றொரு நிறுவனம் தாக்கிப் பேச முடியும். வித்தியாசங்களை காட்டும் முறையில் பல நிறுவனங்கள் தங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருந்தன.

எங்களுடைய வேலை மற்ற நிறுவனங்களின் வெளியீடுகளை ஆய்வு செய்து அதன் குறைகளை பட்டியலிட்டு விளம்பரத் துறைக்குக் கொடுப்பது. இந்தப் பகுதியில் வேலை செய்யும் போது இரகசியம் காப்பது மிக முக்கியமாக இருந்தது. கண்டறியபட்ட குறைபாடுகளை எதிராளிகள் விரைவாகத் தெரிந்து கொண்டால் அதை தகர்த்தெரியும் வகையில் விளம்பரம் தயாரித்துவிடுவார்கள்.

நளினாவை பற்றி சொல்ல மறந்தேன். நளினா எனக்கு ஜூனியர். படபடவென பேசுவாள். பார்த்தாலே பத்திக்கொள்ளும் அழகு. இப்படி நிறைய சொல்லலாம். பெரிய பெரிய விசயங்கள் அவளிடம் இருந்தன என சுருக்கமாகவும் சொல்லலாம்.

"மிஸ்.நளினா, நான் உங்களைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் கொள்கிறேன். நான் மிகவும் திறமையானவன். என்னை உங்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன்".

" மன்னிக்கனும். இப்படி ஒரு கேவல‌மான 'அப்ரோச்' என் வாழ்க்கையில நான்
எதிர்ப்பார்க்கலை......" என அவள் ஆரம்பித்து பேசிக் கொண்டு போன மறுப்பு
அறிக்கையால் மனம் உடைந்து போனேன். எழு நாட்களுக்கு வருடாந்திர ஓய்வு எடுத்துக் கொண்டு ராக்கெட் பிடித்து செவ்வாய்க் கிரகம் சென்று என் நண்பனை சந்தித்து வந்தேன். அவனோடு அமுத பானம் அருந்தி ஆனந்தம் அடைந்தேன். கவலைகளை தெளிவித்துக் கொண்டு வேலைக்கு திரும்பினேன்.

அன்று மேலிடத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. ரோபோக்களை ப்ரோகிரமிங் வழி ஆப்டேட் செய்தேன். கடைசி நிமிட குறிப்புகளை ரிப்போட் எடுத்துக் கொண்டு
மேலதிகாரியை சந்திக்க கிளம்பினேன்.

"உங்கள் செயல்பாட்டில் சுனக்கம் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் கருதுகிறது. நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நீங்கள் திருப்திபடுத்த தவறி இருக்கிறீர்கள். உங்கள் ஆய்வுகளின் தொய்வு நிலை காரணமாக விளம்பர துரையின் வீரியம் குறைந்துள்ளது. மக்களின் கவனம் புதிய வெளியீடுகளின் பக்கம் திரும்பி இருக்கிறது. மெத்தனப் போக்கு, கவனக் குறைவு, சோம்பல் என இதை எப்படி வேண்டுமானாலும் அடையாள‌ப்படுத்திக் கூற முடியும். நிர்வாகம் உங்களை எச்சரிக்கை செய்கிறது. உங்களை மேம்படுத்திக் கொள்ள தகுந்த நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்போது நீங்கள் போகலாம்".

அன்று மித மிஞ்சிய மன வருதத்துடன் வீடு திரும்பினேன். அலுவலகக் கட்டிடத்திலேயே வீடு இருந்தது. வீட்டுக்குப் போக மூன்று கிலோ மீட்டர் உயரம் பயணிக்க வேண்டும். குளித்துவிட்டு வந்த போது 3 புதிய தகவல்கள் உள்ளதாக தபால் பெட்டி அறிவிப்பு செய்தது.

அனைத்தையும் தெரிவு செய்க எனும் பச்சை பொத்தானை அழுத்தினேன்.
தகவல் ஒன்று:
"பாரி, அம்மா பேசுகிறேன். எப்போது வீட்டுக்கு வரப் போகிறாய். உன‌து திருமணம் சம்பந்தமாக அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்துவிட்டாயா ? உனது திருமண வயது காலாவதியாக இன்னும் 3 வருடங்களே எஞ்சியுள்ளன என்பதை கவனத்தில் கொண்டாயா...?"
"ஸ்கீப்", எனது ஒலி கட்டளையை ஏற்றுக் கொண்டு அடுத்த தகவலுக்கு தாவியது.
தகவல் இரண்டு:
"வணக்கம். திரு.பாரிதாசன் அவர்களுக்கு. கரு: செவ்வாய் கிரகத்தில் குடியுரிமை விண்ணப்பம். செவ்வாய் கிரகத்தில் குடியுரிமைக்கான விண்ணப்ப கடிதம் கிடைக்கப் பெற்றோம். எங்கள் அரசிடம் உள்ள தங்களின் நம்பிக்கைக்கு நன்றி. குடியுரிமை தேர்வுக்கான திகதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும். நன்றி."
தகவல் மூன்று:
உங்க திறமைகளை பத்த வைக்கனுமா?
அடுத்தவங்கள அசர வைக்கனுமா?
இன்றே வாங்குங்கள் 'அல்பேர்ட்டோ' நிறுவனத்தின் 'பிரெண்டோமினோ' .
ஒரு மடக்கு தண்ணி போதும், ஒரு சொடுக்குல உங்க வாழ்க்கையே மாற்றியமைத்திடும் ஓர் உன்ன‌த கண்டுபிடிப்பு. இப்போதே வாங்குங்கள் இன்றே பயன்பெறுங்கள்.
இரண்டாம் தகவலை மட்டும் எனது கணக்குப் பெட்டியில் சேமித்து வைத்துக் கொண்டு படுக்கச் சென்றேன். எனது கையடக்கக் கணினியை படுத்திருந்ததபடி வெறுத்து நோக்கினேன். ஏனோ கைவிரல்கள் சடசடவென 'அல்பேர்ட்டோ' நிறுவனத்தின் 'பிரெண்டோமினோ' எனும் வார்த்தைகளைத் தட்டச்சு செய்து தேட ஆரம்பித்தது.
சுவாரசிய விளம்பரம். மேலும் தெரிந்து கொள்ள இன்றே அழைக்கவும் என்றிருந்த எண்களை என் கணினியில் அழுத்தினேன். தொடர்பு கிடைத்தது.
முகம் முழுக்க பல் இலித்து ஓர் அழகிய மாடல் கணினி திரையில் தோன்றினாள். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு. அவள் நிறுவனத்தின் பணியாளர் எண்ணை குறிப்பிட்டாள்.
"எங்கள் வெளியீடுகள் பற்றிய உங்களின் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி அடைகிறோம். மேலதிக தகவலுக்கு உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்" என இரசம் இழக்காத அதே சிரிப்புடன் சிற்றுரையை முடித்தாள்.
"உங்களின் 'பிரெண்டோமினோ' ப்ரொடாக் பயன்பாட்டினை தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்"
"ஈசி, உங்களுக்கு தேவையான சிந்தனையை எவ்வளவு விரைவாக அடையனும்னு நினைக்கிறிங்களோ அதைவிட பலமடங்கு விரைவாக அடைய உங்களுக்கு இது உதவியாக இருக்கும்".
"உங்கள் விளம்பரத்தில் கூட இத பற்றி எழுதி இருக்கிங்க, பட் எனக்கு சரியாக புரியவில்லை பெண்ணே...".
"சரி. ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு சங்க கால பாடல்களை எல்லாம்..."
"இல்லை... வேற உதாரணம் கொடுங்களேன்... மனம், லவ், பீலிங்ஸ், இப்படி ஏதாவது..."
"மனிதர்களின் மனம் தொடர்பான ஒரு செய்தியை எடுத்துக்கலாம். 'எமோஷனல் இண்டிலிஜன்ஸ்' என்ற சித்தாந்த்தை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?"
"இல்லை..."
"சில நூற்றாண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட சித்தாந்தம் இது. மனிதர்களின் சிந்தனை-மனம்-சுற்றம் எனும் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அமைவது. எல்லா மனிதர்களுக்குமே உணர்ச்சி என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருக்க ஓர் எதிர்வினைக்கு அல்லது வெளிப்பாட்டுக்கு சிந்தனை முக்கியமா அல்லது உணர்ச்சி முக்கியமா என ஓர் உடனடி தீர்வு காண முடியுமா?"
"பாடம் ரொம்ப கஷ்டமாக இருக்கிறதே. யூ சில்லி கர்ல். கொஞ்சம் புரியும் படியாக சொல்லேன்".
"தர‌ மேம்பாட்டை துரிதப் படுத்த இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதினை நினைவு படுத்த விரும்புகிறேன்".
"ஓஹ்... சாரி... மேலும் விளக்கப்படுத்துங்கள் பெண்ணே..."
"சிந்தனை பூர்வமான உணர்ச்சி, உணர்ச்சி பூர்வமான சிந்தனை, என மனிதர்களின் சிந்தனையை பாகுபடுத்த முடியும்".
"அப்படியா?"
"ஆமாம்... சிந்தனை பூர்வமான உணர்ச்சி நெடுங்கால நோக்கு கொண்டது, உணர்ச்சி
பூர்வமான சிந்தனை குறுகிய கால அல்லது உடனடி தீர்வில் தொடர்புடையது".
"எப்படி..."
"ஒருவர் உங்களை அடித்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்".
"எதிர் தாக்குதல் செய்வேன்".
"இது உணர்ச்சி பூர்வமான சிந்தனை. உங்கள் சிந்தனை உடனடி தீர்வை நாடுகிறது என அர்த்தம்".
"சிந்தனை பூர்வ உணர்ச்சி கொண்டவன் எப்படி செயல்படுவான்?"
"அவனை அடிக்க மாட்டான், நட்பு பாராட்டுவான், ஆனால் நெடுங்கால நோக்கம் கொண்டு அவனை தாக்குதல் செய்வான், கஷடங்கள் கொடுப்பான், அதில் அவன் சம்பந்தப்பட்டிருக்காதபடி இருப்பான். இது ஒரு நெகட்டிவ் அப்ரோச். இந்த சித்தாந்தம் நல்ல காரியங்களுக்கும் பயன்படும்'.
"புரிகிறது... புரிகிறது... நீங்கள் நெகடிவ் முன்னுதாரணத்தை எடுத்துரைக்க காரணம்...?"
"இதுவும் மூளை சம்பந்தமான விசயம்தான்... தவறான விசயங்களை உடனடியாக தெரிவு செய்து கொள்ளும் பழக்கம்..." கண்களை சிமிட்டி தனது இரப்பர் சிரிப்பை உதிர்த்தாள்.
"ஓ... இட்ஸ் இன்ட்ரஸ்டிங்... இதை உபயோகிக்கும் முறையை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்..."
"ஈஸி.... இதற்காக பிரத்தியோகமாக பானம் தாயாரிக்கும் இயந்திரத்தின் வழி உங்களுக்கு வேண்டியதை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்..."
"நான் உங்கள் வியாபார இடம் வந்து இதை பெற்றுக் கொள்ள விருப்பப்படுகிறேன்". எனது ஆர்வாம் மேலோங்கியது. வேண்டிய தகவல்களை வாங்கிக் கொண்டு அவ்விடம் விரைந்தேன்.
அதே பெண். கண்ணாடியில் செதுக்கியதை போல் அவ்விடம் இருக்கக் கண்டேன். இரம்யமான அலங்கரிப்பு. சுகந்த மணம் என் சுவாசப்பையை நிறப்பிக் கொண்டிருந்தது. அந்நிறுவனத்தின் பல வெளியீடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
"நான் அந்த இயந்திரத்தைக் காண வேண்டுமே..."
"ஓ... நிச்சயமாக... எங்களின் சிறந்த கண்டுபிடிப்பாக இதை அரசு அறிவிப்பு செய்துள்ளது", முழங்கை அளவு இருந்த அந்த இயந்திரம் பிரத்தியோக ஜோடிப்புகளுடன் இருந்தது.
"இட்ஸ் நைஸ்..."
"உங்களுக்கு தேவையான பானத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சுவையுடன் தயார் செய்து அருந்திக் கொள்ளலாம். சாக்லட், ச்டாபெரி, புலுபேரி, மில்க், கோஃபி, இப்படி பல சுவைகள் இருக்கின்றன."
"இந்த பொத்தான்கள்..."
"இவை உங்களின் அறிவாற்றலை பெறுக்கிக் கொள்வதற்கான பிரிவுகள். இது வரை மொத்தம்12 பிரிவுகளாக துரை சார்ந்த தகவல்களோடு உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அறிவியல், சமூகம், பொருளாதாரம், விளையாட்டு, சரித்திரம்.... இப்படி இன்னும் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா விசயங்கள்...."
"ஓ..."
"நீங்கள் அறிவியல் துறைக்கான பொத்தானை தேர்ந்தேடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம், அதன் உப பிரிவுகள் நூற்றுக் கணக்கில் இந்த சின்ன திரையில் வெளிபடும். அதில் உங்களுக்கான பிரிவை விரல் நுனியில் அழுத்தி அதற்கான பானத்தை தேர்வு செய்யலாம்..." பானம் எடுத்துக் கொள்ள கோப்பை வைக்கும் இடத்திற்கு அருகில் இருந்த திரையை காண்பித்தாள்.
"டெக்னிக்கல் கோளாறு ஏற்பட்டால்..."
"பயனிட்டாளர்களின் பாதுகாப்பே எங்களின் முக்கிய கோட்பாடு. இதன் கணினி செயல்பாடுகள் மெயின் சிஸ்டத்தில் இணைக்கப்பட்டு நீங்கள் பயன்படுத்தும் சமயங்களில் சிரத்தை எடுத்து கவனிக்கப்படும். தர மேம்பாட்டின் பொருட்டு துறை சார்ந்த விசய‌ங்களும் மேம்படுத்தப்பட்டபடி இருக்கும். கவலை வேண்டாம்".
"இது என்ன விலை பெண்ணே?"
"மேலும் ஒன்றை நீங்கள் அறிந்துக் கொள்வது நலம். முதல் இயக்கத்திற்காக உங்களின் மூளையின் செயல்பாட்டுத் திறனை நான் பரிசோதித்து மெய்ன் சிஸ்டத்தின் நினைவகத்தில் பதிவு செய்ய வேண்டும்".
"ஓ எஸ்... ஐம் ரெடி..."
"இங்கே படுத்துக் கொள்ளுங்கள்"
அவள் நெறுங்கினாள். என்னை சரிபடுத்துகையில் அவளின் ஸ்பரிசத்தில் சிலிர்த்தேன். சரித்திரத்தில் அடிமைகள் இருந்ததாக படித்திருக்கிறேன். இவள் என்
அடிமையாகிவிட்டால் நன்றக இருக்கும் அல்லவா. நான் என்னை மெய் மறக்க ஆரம்பித்தேன். அவள் என் மீது படுத்திருப்பதாக உணர்ந்தேன்...
அடுத்த பாகத்தில் நிறைவடையும்...

Friday, September 04, 2009

துறைமுகம் நாவல் - இஸ்லாம் எனும் போர்வையில்


தலைப்பு: துறைமுகம்

நயம்: சமூக நாவல்

ஆசிரியர்: தோப்பில் முகமதுமீரான்

இறை என பெயரிட்டு, அதை ஓர் உன்னத பொருளாக பார்க்கிறான் மனிதன். மனிதன் - இறை, இதற்கு மத்தியில் மதம். இறையை அடைய மதம் முக்கியமானது தானா? தனக்கு மதம் வேண்டும் என்பது இறையின் விருப்பமா? இறைக்கு மதம் வேண்டும் என்பது மனிதனின் விருப்பமா? மதம் என்று வந்துவிட்டாலே கேள்வி கேட்கக் கூடாது. அப்படி கேள்வி கேட்க ஆரம்பித்தால் அதற்கானத் தீர்வு எந்தக் காலத்திலும் கிடைத்துவிடாது என்பார்கள்.

மதம் எனும் போர்வையால் மனிதனுள் ஏற்படும் பிம்பங்கள் பல. வித விதமான புரிதல்கள். இதன் பிரள்வுகளே மூட நம்பிக்கைகள் என அறியப்படுகிறது. படிப்பறிவு இல்லாத, மதம் எனும் புரிதலில் பயமும், தெளிவற்ற சிந்தனையும் கொண்ட கடலோர மக்களின் வாழ்வை சித்தரிக்கும் புதினமாய் அமைந்துள்ளது தோப்பில் முகமது மீரான் எழுதிய துறைமுகம் நாவல்.

குமரி மாவட்டத்தில், இந்திய தேசத்தின் சுதந்திரத்துக்கு முன் நடக்கும் சம்பவங்களைப் பிணைத்து கதைக் களம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மக்களின் வாழ்வை நாம் கண் முன் நிறுத்துவதில் ஆசிரியரின் சிரத்தை சிறப்பாகவே இருக்கிறது. இதில் முக்கியமாக விவரிக்கப்பட்டுள்ளது இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையே. மதத்தை தன் வாழ்வியல் எல்லையாக பயன்படுத்தும் மக்கள். தமது நடவடிக்கைகளை, மதத்தில் இருக்கிறதா இல்லையா என்ற தெளிவற்ற கோட்பாடுகளோடு இணைத்து தங்களை ஒடுக்கிக் கொள்கிறார்கள்.

பத்திரிக்கை படிக்க கூடாது, ஆண்கள் தலையில் முடி வைத்திருக்கக் கூடாது, ஆங்கிலம் பயிலக் கூடாது. இவற்றைச் செய்துவிட்டால் அது ஹராம் என தீர்மானித்து தம் மதத்தின் மீதான தீவிர பற்றோடு இருக்கிறார்கள். பாமர மக்களிடையே தவறான மத போதனையை வழங்கப்படுகிறது. மதத்தின் பெயரால் மக்களிடையே தவறான போதனைகளை திணிக்கப்படும் சம்பவங்களை மத போதனையாளனின் கதாபாத்திரத்தோடு பேசப்படுகிறது. முகமது அலிகான் என்பவன் ஊருக்கு உயர்ந்தவனாக சித்தரிக்கப்படுகிறான். இவனது பிரள்வான சிந்தனைகளை அடிப்படையாக கொண்டால் இஸ்லாமியர்கள் உலக ஒருமைப்பாட்டை பேச முடியாது. மத வெறி தூண்டுதலின் அடிப்படை கருவியாகவே அவனை காண முடிகிறது.

கடலை நம்பி வாழும் மக்களின் நிலைபாடு எத்தகைய நிலையில் இருந்தது என்பது நெருடலாக இருக்கிறது. திடீர் திருப்பங்கள் இல்லாமல் யதார்தமாக கதை நகர்கிறது. பைத்தியகாரன் ஊரில் அறிவாலி முட்டாளான கதையாக, ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மை குறுக்கிக் கொண்ட மக்களின் மூட நம்பிக்கைக்கு எதிராக கேள்வியெழுப்புபவர்கள் அவ்வூர் மக்களுக்கு எதிரியாகிறார்கள்.

கதையில் வரும் மீரான் பிள்ளை சிறு வியாபாரி. மீன்களை கொழும்புக்கு அனுப்பி அவற்றில் கிடைக்கும் வரும்படியில் குடும்பத்தை நடத்துகிறார். கடலில் கிடைக்கும் மீன்களும் சரி, மீன்களின் விலை நிர்ணயமும் சரி இரண்டுமே அவருக்கு மரண பயத்தை கொடுக்கின்றன. மீன்கள் கிடைக்கும் காலத்தில் மார்கெட்டில் விலை இல்லை, மார்கெட்டில் மீன் கிராக்கி ஏறும் சமயம் மீன்கள் கிடைப்பதில்லை. இதில் பொய் புரட்டு என கஷ்ட ஜீவனம் நடத்தும் மக்கள். ஒரு கடிதம் வந்துவிட்டாலும் அதை படிப்பதற்கு ஆள் தேடும் ஊர் மக்கள்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது முதலாளி வர்க்கத்தின் பொருளாதார அரசியல். ஒரே சமயம், ஓர் ஊர் மக்கள், கடலை நம்பி வாழ்பவர்களாக இருந்தாலும் முதலாளிமார்களின் திருட்டுத்தனத்தை வெளிப்படையாக நாவலாசிரியர் சொல்கிறார். அதாவது பொருளியல் தேடலில் மதம் எல்லாம் ஒரு சால்ஜாப்பு சமாச்சாரம் என்பதே இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. ஈனா பீனா கூனா போன்ற முதலாளிகளின் துரோகத்தால் அக்கடற்கரை கிராமத்தின் பல மக்கள் கடன் சிக்கலிலும் வறுமையில் வாடுகிறார்கள்.

ஒருவனின் அறியாமையை இன்னொருவன் பயன்படுத்திக் கொள்வதைப் போன்ற மட்டகரமான செயல் இருக்க முடியாது. ஆண்கள் முடி வைத்திருந்தால் ஹராம் என்பதால் இன்று எந்த தலையை மொட்டை அடிக்கலாம் என சுற்றித் திரிகிறான் ஆனவிளுங்கி எனும் முடி வெட்டுபவன். இவனது கதாபாத்திரம் நகைச்சுவையூடாக சொல்லப்படுகிறது. முடி சரைப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போன்ற பாவனையிலும், தன் சரைக்கும் கத்தியைப் போல் உலகத்தில் கிடையாது எனும் மிதப்பில் இருப்பவன். மதம் தனக்கு சாதகமாக ஒரு விடயத்தைக் கொடுப்பதால் அதை அவன் பவ்யமாக ஏற்றுக் கொள்கிறான்.

அரசியல், நாட்டுப்பற்று என அவர்களின் புரிதலுக்கு சிரமமானவை கூட ஹராம் என அடையாளப்படுத்தப் படுகிறது. இம்மாதிரியான அவல நிலைகளுக்கு எதிராக குரல் எழுப்பும், ஓராளவு படித்த இளைஞனானவன் விரோதியாக கருதப்படுகிறான். மீரான் பிள்ளையின் மகனான காசீமின் கதா பாத்திரம் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. தமது சமூகத்தின் விழிப்புக்காக மாறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்துக்காட்ட முற்படும் இவன் செயல் எப்படி அமைகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உடனடி மாற்றங்கள் எடுபடுமா என்பதையும் இங்கு நாம் காண வேண்டியுள்ளது.

நாவலின் எழுத்து நடை குறிப்பிட்ட மக்களின் மொழி வழக்கோடு அமைந்துள்ளது. தமிழ், மலையாளம், கொழும்பு, அரபு என கலவைகளை கொண்ட பேச்சு நடை வாசிப்புக்கு சிறு தடை என்றேச் சொல்லலாம். மேற்கோள் வார்த்தைகளை கொடுத்திருப்பினும் சரளமான வாசிப்புக்கு தகுந்த ஒன்றாக அமைத்திருக்கவில்லை. சில விவரிப்புகள் ஜவ்வு போல் இழுப்படுவதும் அயற்சியை கொடுக்கிறது. நாவலின் இயல்பு தன்மைக்கு இவ்வகை எழுத்து நடை அவசியமாக அமைந்துள்ளதையும் மறுக்க இயலாது.

குறிப்பிட்டக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறையை பதிவுப்படுத்தியதில் துறைமுக கப்பலின் பயணம் சிறப்பான ஒன்றே.

Wednesday, September 02, 2009

செம்புலப் பெயல் நீர் போல...


முதல் முறையாக

உனை சந்திக்கப் போகிறேன்

எப்படி இருப்பாய்

என்ன பேசுவாய்- எனும்

எண்ணற்ற ஆசைகளோடு

ச்சே... என்ன இது புது கவிதையா. இல்லை... கொலை மிரட்டல் வரும். வாக்கியத்தை மடக்கி போட்ட வரிகள் என வைத்துக் கொள்கிறேன். வேண்டாம் இதற்கு மேல் எழுத வேண்டாம்... சிந்தனை நிலையாக இல்லை. எங்கெங்கொ பறக்கிறது.

ஆம் முதல் முறையாக அவளை சந்திக்கப் போகிறேன். கழுத்தளவு ஆசைகள். ம்ம்ம்... பேசிவிட வேண்டும். எப்படி ஆரம்பிப்பது. கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது... இல்லை இது பயமில்லை... பதற்றம்...

காலையில் கிளம்பிவிட்டேன். ஒரு வார தாடியை சேமித்து வைத்து நேற்றிரவு தான் 'கிளீன் ஷேவ்' செய்தேன். ஹம்ம்ம்... இந்த முகம் அவளை கவருமா... பெருமூச்சு ஒன்று விடுதலையாகி சென்றது. இந்த சட்டை, இந்த 'பேண்ட்' எனக்கு எடுப்பாக இருக்குமா என்று நினைத்து வாங்கவில்லை. வாங்க வேண்டும் என்று நினைத்து வாங்கிவிட்டேன். இதை அணிந்து சென்றால் நன்றாக இருக்குமா? இவன் உடை கூட சரி இல்லை என்று ஆரம்பத்திலேயே கோட்டை விட்டுவிடுவேனோ என்ற எண்ணம் ஒரு பக்கம்.

இந்த வாசனை திரவியம் வேண்டாம். ஒரு வேளை அவளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். முகம் சுளித்துவிட்டால்.... ம்ம்ம்... இல்லை கொஞ்சமாக போட்டுக் கொள்ளலாம்... நெடுந்தூரம் போகிறோம்... மக்கள் நலனும் முக்கியம்.

சில மணி நேர பயணம். பேருந்தில் அமர்ந்திருந்த சமயம் எதுவும் கவரவில்லை. சாலையோர காட்சிகள் சூன்யமாக மறைந்து போனது. அவளை சந்திக்கும் தருணத்திற்காக உள் மனம் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. எப்படி ஆரம்பிப்பது.... எனது கைப்பேசியில் இருந்து சில எஸ்.எம்.எஸ்கள் அவளுக்காக பறந்தது. அவ்விடம் சென்றடையும் வரை இந்த நேரம் கரைய வேண்டும். உள்மனம் அவசரப்படுத்தியது. காதில் எம்.பி.3யை மாட்டிக் கொண்டேன். ஒரு சில காதல் வரிகளை இரசித்தேன். தூங்கிப் போனேன்.

ஒரு வழியாக வந்துவிட்டேன். பயண தூரம் மறைந்து போனது. அவள் தொடர்பு கொண்டாள். காத்திருக்கும் இடத்தை சொன்னாள். அவள் குரலில் பயம் கலந்திருந்தது. சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டாள். போகட்டும்... பாதகமில்லை....

நான் அவ்விடம் விரைந்தேன். தூரத்தில் அவளைக் கண்டேன். அவளும் என்னை பார்த்துவிட்டாள். அடையாளம் கண்டு கொண்டாள். பிடிக்குமா... பேசுவாளா...

என்னை மகிழ்ச்சியாகவே வரவேற்றாள். நிம்மதி என்னுள் மலர்ந்தது. 'பர்ஸ்ட் இன்ப்ரேஷன்' ஒவ்வொரு மனிதனுக்கும் அது முக்கியமான தருணம் இல்லையா.

"யூ ஆர் லுக்கிங் ஹண்ட்சம்" ஹம்ம்ம் இது வரை யாரும் சொல்லாத ஒன்று. இவள் ஏன் இப்படி சொல்ல வேண்டும். இது உண்மை தானா? இல்லை எனக்காக சொன்னாளா... இன்றுவரை குழம்புகிறேன். பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை... அவள் சொன்னது பிடித்திருந்தது...

"உங்கள் விரல்களில் நடுக்கம் தெரிகிறது", குளிர்பாக கோப்பைக்கு அருகில் இருந்த என் கரத்தை பார்த்து சொன்னாள். மை காட்... கன்ரோல் யுவர் செல்ப்...

எவ்வளவு அழகாக இருக்கிறாள். கோர்த்து வைத்திருந்த வார்த்தைகள் நெஞ்சுக்குள் சுக்குநூறாக உடைந்து போனது. அதை அடுக்க முற்படவில்லை. பேசுவோம்... போவதற்குள் சொல்லிவிட வேண்டும் எனும் தீர்மானம் மட்டும் மாறவில்லை.

என்னைக் களவாடும்

விழிகளின் வலிமைக்கு

என்ன பதில் சொல்வேன்

உன் இமைகள் மீது

பொறாமை வருகிறது

எவ்வளவு அழகாக

அதை பத்திரப்படுத்துகிறது

உன் விழிகளை சிறைபடுத்த

என் இமைகள் துடிப்பதை

அது அறியவில்லை

கொடுமைக்காரியே...

ஐய்யய்யோ என்ன இது... கவிதை எனும் பெயரில் ஒரு வஸ்து... வேண்டாம்... வேண்டாம்... மீண்டும் கதைக்கு வருவோம். கோவம் வேண்டாம் கண்மணியே பொதுவில் எழுதுவதால் என் வர்ணனைகளை தவிர்த்துக் கொள்வது நலம் என ஒரு அசரிரீ குரல் கேட்பது நன்றாகவே விளங்குகிறது. எனை கொலை செய்துவிடாதே.

அப்பப்பா என்ன ஒரு கண்கள். கொஞ்சமாக பழுப்பு நிறம் கலந்த சின்ன கண்கள். கொலை செய்யும் கண்கள் இதை பார்த்து தான் சொல்ல வேண்டுமா? ம்ம்ம்.... பதற்றம்... பதற்றம்... பதற்றம்... இல்லை நிச்சயமாக சொல்லிவிடுவேன். என் குரல் சிக்கிக் கொள்ளாமல் இருக்கட்டும்...

என் பரிசுகளை அவள் இரசித்தால். "இதை மட்டும் பிரிக்க வேண்டாம்", அறைக்கு சென்ற பின் பார்த்துக் கொள்ள சொன்னேன். எனது வருகையால் அவள் மகிழ்ச்சியடைந்து இருக்கிறாள். புரிந்துக் கொள்ள முடிந்தது.

அவளோடு பேசிக் கொண்டிருக்கும் இந்தத் தருணம் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது உங்களுக்காக என அவள் கொடுத்த சாக்லேட் கூட ஒரு சின்னமாக என் முன் இப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறது. சாக்லேட்டே.... உனக்கு ஆயுசு கெட்டி... அவள் கொடுத்த காரணத்தினால் நீ உயிரோடு இருக்கிறாய்.... அவள் கரம்பட்ட நீயாவது என்னுடன் இருக்கிறாயே... நீ நல்ல சாக்லெட் தான்... ச்சே ச்சே என்ன இது எனக்கு பைத்தியம் முற்றிவிட்டது... ஆம் அவள் நினைவின் பைத்தியம்....

எல்லாவற்றையும் இங்கு எழுதிவிட வேண்டுமா? இல்லை வேண்டாம்.... சில நினைவுகள் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கட்டும்...

சில மணி நேரங்கள் சடுதியில் சட்டென காலத்தில் கரைந்தோடியது. மீண்டும் இந்த தருணம் என் வாழ்வில் ஏற்பட காத்திருக்கிறேன். உன் நினைவாக எதையாவது எழுதி கொடு என்றேன். நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை திருப்பி சுபம் என குறிப்பிட்டப்பட்டிருந்த பகுதிக்கு கீழிருந்த வேற்றிடத்தில் எதையோ எழுதினாய். பார்க்காதே என கண்டிப்பாக சொன்னாய். எழுதிவிட்டு இப்போது பார்க்க வேண்டாம். பேருந்தில் போகும் போது பார்த்துக் கொள்ளுங்கள் என்றாய்.

உன்னை வழியனுப்பிவிட்டு பேருந்துக்கு காத்திருக்கும் சயமம் அதை பிரித்து படித்தேன். உன்னை போலவே நீ எழுதிய தமிழ் எழுத்துகளும் அழகாகவே இருக்கின்றன. ஒன்னும் இல்லை சும்மா ரெண்டு வரி எழுதினேன் என்றாய். எனக்கு அது கவிதை தான்.

உன் அன்பை

வர்ணிக்க

நான் இன்னும்

வார்த்தைகளை

தேடுகிறேன்...

மன்னித்திடு...

என் தாய்மொழி

இன்னும்

தவித்துக் கொண்டிருக்கிறது

மீண்டும் மீண்டும் எனக்கான உனது இவ்வரிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன். என்னவளே உனக்காக காத்திருப்பேன்.