Wednesday, January 22, 2014

அங்கோர் வாட் - தங்கக் கதவு

Phimeanakas 3D வடிவமைப்பு Source: .angkor-planet.com

’கண்ணி வெடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்கள் அரசின் உதவி ஊதியம் ஏதும் ஆவண செய்யப்பட்டுள்ளதா?’


‘இல்லை. அவர்களாகவே அவர்களை கவனித்துக் கொள்ளும் நிலை தான். இந்த அங்கோர் பார்க் பகுதிகளில் கூட அவர்கள் இருக்கிறார்கள். பிறகு சந்திப்பீர்கள்.’ என்றார் ச்சேன்.

கம்போடியாவில் இருக்கும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். கண்ணி வெடிகள் மிக சுலபத்தில் புதைக்கப்பட்டுவிட்டன ஆனால் அதை அகற்றும் பணியோ உயிர் போகும் செயல். ஒரு கண்ணி வெடியை அகற்ற சராசரியாக 1200 அமேரிக்க டாலர்கள் செலவாகின்றது. கம்போடியா போன்ற ஏழை நாட்டுக்கு இது பெரும் சுமை. ஆகவே உலக நாடுகளின் நன்கொடையை கொண்டே இப்பணிகள் நடைபெறுகின்றன.

கண்ணி வெடியை அகற்றும் பணியில் அக்கி ரா Source: archcomm.arch.tamu.edu
ரியல் ஹீரோஸ் Source: archcomm.arch.tamu.edu


கம்போடிய கண்ணி வெடிகளை பற்றி பேசும் போது அக்கி ரா எனும் கம்போடிய தனி மனிதனையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். கம்போடியாவில் கண்ணி வெடி பொருட் காட்சி சாலையை ஆரம்பித்தவர் இவர். அக்கி ரா தனது பத்தாவது வயதில் கட்டாய இராணுவ அடிமையாக்கப்பட்டார். போல் போட்டின் அராஜக அட்சியில் நூற்றுக்கும் மேட்பட்ட கண்ணி வெடிகளை இவர் புதைத்திருக்கிறார். கெமர் ஆட்சி சீர் நிலைக்கு வந்த பின் அக்கி ரா கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார். ஆயிரக்கணக்கான வெடிகளை இவர் அகற்றியுள்ளார்.

கண்ணி வெடிகள் மரண எண்ணிக்கையை அதிகரிக்க புத்கைக்கப்பட்டவை அல்ல. அவை உடல் ஊன எண்ணிக்கையை அதிகரிக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டன. போர்களில் மரணங்கள் புறம் தள்ளப்படுபவை. அவை மறக்கப்படும். உடல் ஊனமோ நெடுங் கால பாதிப்பை கொடுப்பவை. அதன் தாக்கம் ஏனைய படை பலத்தையும் பாதிக்கும். போர்களில் நெடுநாள் பாதிப்புகளுக்கு கையாளப்படும் மிக மலிவான கருவி கண்ணி வெடி. செற்ப வெடி மருந்தும் சில ஆணிகளும் அதற்கு போதும் என்பது அக்கி ராவின் கருத்து.

ச்சேனுடன் பேசியபடி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். கோல் ச்சேன் ஏதாகினும் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டே இருந்தார். கூடவே கொஞ்சம் குபீர் சிரிப்புக்கான நகைச்சுவைகள். பயணிகள் கலைப்பு தெரியாமல் இருப்பதற்கான அவர் தொழில் உக்திகள் இவை.

இன்றைய நிலையில் Phimeanakas
தொடர்ந்து நாங்கள் பார்த்த இடம் Phimeanakas. இந்த புராதன கட்டிடம் பலமாகவே சிதிலமாகியுள்ளது. பிரமிட் போன்ற மூன்று அடுக்குகளோடு உச்சியின் நடுவில் ஒரு கதவு. அங்கோர் தோம் பெருங் கோட்டை பகுதியில் இதுவும் பத்தோடு பதினொன்றாக உள்ளது. சரித்திர ஆதாரத்தின் படி இக்கட்டிடம் தங்கத்தால் ஆன அரண்மனையாகும். 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராஜேந்திரவர்மனால் கட்டபட்டு பின் இரண்டாம் சூரியவர்மனால் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இன்று இந்துக் கோவிலாக Phimeanakas அழைக்கப்படுவதன் காரணம் மர்மமானதே. இறந்த அரசனின் மீது வைக்கப்பட்ட சிவலிங்கம் கூட இதற்கு காரணமாக இருக்காலாம்.


Pheimeanakas தொடர்பான கர்ண பரம்பரை கதை ஒன்றும் உள்ளது. மறைவாய் சொல்ல வேண்டிய கதை என்பதால் பெண்களும், இளையோரும், முதியோரும் 18 வயதுக்கும் குறைவானோரும் அடுத்த பத்தியை ஸ்கீப் செய்துவிட்டு படிக்கலாம். கீழே கதை.


யசோதரபுர காலத்தில் Pheimeanakas தங்கத்தால் ஆன அரண்மனையாக இருந்தது. அதில் அரசனின் ஏகபட்ட மனைவிகளும் சேடிப் பெண்களும் இருந்திருக்கிறார்கள். அரண்மனைக்குள் நுழைவதற்கு பெண்களுக்கு மட்டும் தான் உரிமை என்பது வரலாற்று உண்மை. தினமும் முதல் ஜாமத்தில் ஒன்பது தலை கொண்ட நாகம் பெண் உருவம் கொண்டு பிரதான அறையில் ஆஜராகிவிடுமாம். அந்த அறையில் அரசன் மட்டுமே நுழைய முடியும். பட்டத்து ராணியாக இருந்தாலும் தூக்க வியாதியில் கூட அந்த அறையை எட்டிப் பார்க்க கூடாது என்பது எழுதப்படாத விதி. முதல் ஜாமம் முழுக்க நாகத்தை குஷிபடுத்திவிட்டு இரண்டாம் ஜாமமே தன் ஏனைய மனைவிகளோடு அவன் குஷியாக இருக்க முடியும். ஒரு வேளை நாகம் பெண் உரு கொண்டு வரமால் போய்விட்டால் அது குறுகிய காலத்தில் அரசன் இறப்பதற்கான அறிகுறி என்பதும் நாகப் பெண்ணோடு அரசன் கூட தவறுவது நாட்டின் சுபிட்சத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதும் கெமர் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகும்.

North Khleang இன்றய நிலை
Pheimeanakas போன்ற வடிவமைப்பைக் கொண்ட மேலும் இரு கட்டிடங்கள் உள்ளன. அவை North Khleang மற்றும் South Khleang என அழைக்கப்படுகிறது. இவ்விரு கட்டிடங்களும் வெவ்வேறு கால கட்டத்திலான அரசர்களால் கட்டப்பட்டது. இக்கட்டிடங்களின் பயன்பாடு இன்னமும் சில ஆச்சரிய குறிகளோடு உள்ளது. இதன் சுவர்களில் இருக்கும் கல்வெட்டுகளின் அடிப்படையில் இவை அரச விருந்தினருக்கும், தூதுவர்களுக்கும் தங்கும் விடுதியாக பயன்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Terrace of Elephant அழகான யானை கூட்டங்களோடு
மேற்கூறிய இடங்களை பார்த்துக் கொண்டு வரும் போது நீங்கள் யானைகளின் மேல் நிற்பது போன்றதொரு மேல்தளத்தை அடைவீர்கள். அவ்விடம் Terrace of Elephant என அழைக்கப்படும். உலோகங்களாலும் யானை தந்தங்களாலும் அலங்கரிக்கப்பட்ட இடமாக இதைக் கூறுகிறார்கள். இன்று நாம் காண்பதோ வயோதிக கிழட்டு யானை சுவர்களை மட்டுமே. அரசன் நிகழ்வுகளை அமர்ந்து காணும் மேல் தளமே இந்த Terrace of Elephant. வெற்றி அடைந்த போர் வீரர்கள் கூடும் இடமாகவும், மக்களவையாகவும், மைதானமாகவும் இவ்விடம் இருந்துள்ளது.
300 மீட்டருக்கும் அதிகமாக யானை புடைப்புச் சித்திரங்கள். 
Terrace of Elephant தளத்தில் இருந்து நாம் கவனிக்கையில் எதிரே சில தனிக் கோபுரங்கள் தெரிகின்றன. அவை கோபுரங்கள் அல்ல. பலி பீடங்கள். அதையும் அரசன் கண் எதிரே கவனிக்கும் படியே அமைத்திருக்கிறார்கள். மொத்தம் 12 கோபுரங்கள் இருந்துள்ளன. தற்சமயம் அவை எண்ணிக்கையில் சற்றே குறைந்துள்ளன. அந்த தண்டனைகள் எப்படி நிறைவேற்றப்பட்டன என்பதற்கான சில குறிப்புகள் காணப்படுகின்றன. மனிதனை வதைக்கும் செயல்களை சிந்திப்பதில் மனிதன் சளைத்தவன் அல்ல. அவனது கிரியேட்டிவிட்டி அங்கே காட்டாறாக பெருக்கெடுக்கிறது.
பயணங்கள் தொடரும்...

Thursday, January 02, 2014

J.C.Daniel (மலையாள சினிமாவின் தந்தை)- ஒரு தாமத விமர்சனம்

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விட கொடுமையானது எனும் தோழர் முத்துக்குமாரின் கடித வரிகளை இங்கு நினைவுக் கூறுகிறேன். சமூக
நிலைபாடுகளால் பல முக்கிய நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு கனமும் இழந்து
வருகிறோம். வாழ்வியல் அறத்தை உடைக்கும் செயல்களை எதிர்க்கின்றோம். பிறகொரு நாள் பிழை என கருதிய செயல் சரி எனும் நிலை ஏற்படுகிறது. அப்போது அதை கொண்டாடுகிறோம். மாற்றத்தால் ஆனது தானே உலகம்.

காலத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு கலைஞனின் வாழ்க்கையை விளக்குகிறது ஜே.சி.டேனியல் எனும் திரைப்படம். மலையாளத்தில் செலுலாய்ட் என எடுக்கப்பட்டு தமிழில் ஜே.சி.டேனியல் என 'டப்' செய்யப்பட்டுள்ளது. ஜே.சி.டேனியல் ஒரு தாமத வரலாற்று திருத்தம்.

இத்தாமத திருத்தம் ஒரு மிகப் பெரும் துயர சினிமா அனுபவமாக இன்று நமக்கு கிடைத்துள்ளது. இது துயரமான சினிமா கதை அல்ல. சினிமாவை உயிருக்கு உயிராய் நேசித்த ஒரு முன்னோடியின் வாழ்க்கை மொத்தமும் துயரமாய் போன உண்மைச் சம்பவம்.

வாகை சூடவா திரைப்படத்தில் ஒரு காட்சி. ஊர் மக்கள் எம்.ஜி.ஆர் நடித்த திரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சண்டைக் காட்சியில்
எம்.ஜி.ஆர் நம்பியாரிடம் பலமான அடிகளை வாங்கிக் கொண்டிருப்பார். இக்காட்சியை பார்த்து வெகுண்டு போன பூர்வக்குடி ஆசாமி ஒருவர் தன் துப்பாக்கியில் நம்பியாரை சுடுவார். திரை குபுகுபுவென தீ பிடித்து எரியும். கலவரமடைந்த இரசிகர் கூட்டத்தை நோக்கி 'எம்.சி.ஆரை காப்பாத்திட்டேன் சாமி' என்பார் பூர்வக்குடி.

சினிமாவை கண்டு உணர்ச்சி வசப்படும் செய்திகளை இன்றும் காண்கிறோம். மதத்தை இழிவு செய்ததாய் கமலின் விஸ்வரூபம் சினிமாவுக்கு நேர்ந்தது சமீபத்ய நிகழ்வுகளில் ஒன்று.

செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஜே.சி.டேனியல் ஒரு பல் மருத்துவர். சினிமா மேல் அதீத காதல் கொண்டு சினிமா தொழில்நுட்ப கலைகளை கற்றுக் கொள்கிறார். 1920-களில் இந்தியா முழுவதும் செல்லூலாய்ட் சினிமா பிரபலமான நேரம் அது. புராணக் கதைகளை அடிப்படையாக கொண்டு பல சினிமா படங்கள் வெளியாகின்றன. உடல் மொழியை மட்டும் மையமாக கொண்டு எடுக்கப்படுவது செல்லுலாய்ட். அதில் பேச்சு இருக்காது. சுருக்கமாக 'ஊமைப் படம்' என இன்று கூறுகிறோம்.

மலையாள கரையில் சினிமா மோகம் எட்டிப் பார்க்காத தருணம். டேனியல் தனது சினிமா கனவை அங்கு விதைக்க நினைக்கிறார். புராணக் கதைகளை தவிர்த்து சமூக கதைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது டேனியலின் ஆசை. குடும்ப உறவை மையப் படுத்தி ஒரு கதை தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு விகதகுமாரன் (the lost child).

படம் எடுப்பதில் பல தடுமாற்றங்கள். தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனை போல் விடாப்பிடியாக இருக்கிறார் டேனியல். எதிர்ப்பார்த்ததை விட அதிக செலவு. சினிமா எடுக்க ஏற்கனவே சொத்துகளை
விற்று இருப்பார். செலவுகள் மேலும் மேலும் கடிக்க சொத்துகளை விற்பதை தவிற வேறு நாதி இல்லாமல் போகிறது. மனைவி ஜேனட் கணவரின் சினிமா கனவுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறார்.
முதுமையில் ஜே.சி.டேனியல் Source: Wikipedia
படத்தின் நாயகனாக டேனியல் நடிக்க. கதாநாயகியை தேடுவதில் பலத்த சிக்கல் ஏற்படுகிறது. அக்காலகட்டத்தில் சினிமாவில் ஆண்களே பெண் வேட்மிட்டு நடிக்கும் நிலை. சினிமாவுக்கு பெண்களை கொண்டுவர விலை மாதர் வீதிகளிலும் தேடி அலைந்திருக்கிறார்கள்.

தேடிபிடிக்கும் ஓர் ஆங்கிலோ இந்திய பெண் நடிகை கொடுக்கும் டாச்சரில் அப்பெண்னை வேண்டாமென ஒழித்துக்கட்டிவிட்டு வேறு ஆளை பார்க்கிறார்.
கூத்துகளில் நடிக்கும் தழ்தப்பட்ட சாதி பெண்னை தனது சினிமாவில் அறிமுகப் படுத்துகிறார் டேனியல். சரோஜினி எனும் நாயர் சாதி பெண்னின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் ரோஸம்மா எனும் பி.கே.ரோஸி.

கருத்த மேனியோடு ஜாக்கட்டும் வேட்டியுமாக ரோஸி பட பிடிப்புக்கு வருக்கிறார். கையில் ஒரு தூக்குச் சட்டி. தீண்டாமையின் கொடுமையையும் ஒடுக்கப்பட்டவர்களின் அன்றய வாழ்வியல் நிலையும் திகைக்க வைக்கின்றது. நாயர் பெண் வேடத்தில் நகையும், புடவையும், அலங்காரமும் கொண்ட தன்னை பார்த்து கண் கலங்குகிறார். ஜாதி, இனம், மதத்திற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த கலை சினிமா என டேனியல் எடுத்துக் கூறியும் ரோஸியால் தீண்டாமையின் தாழ்மை உணர்ச்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. ரோஸியின் கதாபாத்திரம் ஆதிக்கச் சாதியினரின் முகத்தில் அறையும் உண்மை.

கடும் முயற்சியில் சினிமா எடுத்து முடிக்கப்படுகிறது. 1930-ல் விகதகுமாரன் (the lost child) மலையாளத்தின் முதல் சினிமாவாக கேரளத்தில் வெளியிடப்படுகிறது.பெருமிதத்தோடு ஊர் அதிகாரிகளையும், பெரியவர்களையும் தனது சினிமாவை காட்ட அழைத்து வருகிறார் டேனியல். தான் கதாநாயகியாக நடித்த சினிமாவை பார்க்க ஓடி வருகிறாரார் ரோஸி. இவளோடு நாங்கள் படம் பார்ப்பதா என ரோஸியை விரட்டி அடிக்கிறது ஜாதி வெறி.
விகதகுமாரன் சினிமா காட்சி : Source: Wikipedia
தாழ்ந்த சாதி பெண்ணை சினிமாவில் உயர் சாதி பெண்ணாக காட்டியதால் பிரச்சனை உருவாகிறது. திரை நாசம் செய்யப்படுகிறது. ரேஸியின் வீடு தீயிட்டு கொலுத்தப்பட்டு ஊரைவிட்டு விரட்டியடிக்கப்படுகிறாள். இன்று வரை மலையாள சினிமாவின் முதல் கதாநாயகியின் முழுச் சரித்திரத்தையும் அறிவார் இல்லாத நிலை ஆனது. தனது சினிமா கனவை மலையாள கரையில்; மூட்டைக்கட்டி வைத்து தனது ஊரான அகஸ்தீஸ்வரம் திரும்புகிறார் டேனியல்.

தமிழ்நாட்டில் பல் மருத்துவராக தனது சராசரி வாழ்க்கைக்கு திரும்பும் டேனியல் பி.யு.சின்னப்பாவை சந்திக்கிறார். பல் வலியால் சிகிச்சைக்கு வரும் சின்னப்பா பின் நாட்களில் டேனியலின் பெருந் தலைவலியாகி போகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட டேனியலின் சினிமா கனவு வெகுண்டெழுகிறது.சம்பாதித்து சேர்த சொத்துகளை மூட்டைக்கட்டிக் கொண்டு சென்னை செல்கிறார். சின்னப்பாவின் ஆட்களால் ஏமாற்றப்பட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குடும்பத்தோடு சேர்கிறார்.

தொடர் சினிமா தோல்வி அவரை தளர்வடையச் செய்கிறது. அப்பாவை புரிந்துக்கொள்ள முடியாததால் பிள்ளைகளோடு இடைவெளி ஏற்படுகிறது. அப்போதும் மனைவி ஜேனட் மட்டுமே அவரோடு உறுதுணையாக இருக்கிறார். டேனியல் தன்னை தனிமை படுத்திக் கொண்டு முதுமைக் கோடுகளோடு அமைதியாகி போகிறார். ஒரு பக்கம் வாட்டும் வறுமை. மலையாள சினிமா டேனியல் எனும் தந்தையின் அடையாளம் தெரியாமல் வளர்கிறது.
அவரை அறிந்துக் கொண்டு தேடி வருகிறார் மலையாள பத்திரிக்கையாளரான
கோபாலகிருஷ்ணன். ஜே.சி.டேனியல் இன்று மலையாள சினிமாவின் தந்தையென அறியப்படுவதற்கு இவரின் பங்கு மிகுதியானதே. டேனியலின் அங்கீகாரத்திற்காக போராடுகிறார் கோபாலகிருஷ்ணன். ‘அந்த ஆளு தமிழ்நாட்டுக்காரன் தானேயா,தமிழ்நாட்டு கவர்மெண்ட் பென்சன் கொடுக்கட்டுமே’ என இன வெறியும் ஜாதி வெறியும் கேரளத்தில் பல் இளிக்கிறது.

எந்தவித அங்கீகரமும் இல்லாமல் 1975-ல் இறந்து போகிறார் ஜே.சி.டேனியல்.
மரணப் படுக்கையில் இருக்கும் டேனியல் காற்றசைவில் சுவரில் நிழலாடும் காட்சியை தனது செல்லுலாய்டாக காண்கிறார். கோபாலகிருஷ்ணனின் தொடர் போராட்டம் டேனியலின் மரணத்தின் பின் வெற்றி காண்கிறது. ஜே.சி.டேனியல் மலையாள சினிமாவின் தந்தையாக அறிவிக்கப்படுகிறார். திரைப்பட சாதனையாளர்களுக்கு ஜே.சி.டேனியல் விருது வழங்க ஆவண செய்கிறது கேரள அரசு. காலம் கடந்த அங்கீகாரமே. பாரதிக்கு நடந்த அதே கதி.

விகதகுமாரன் அழைப்பிதழ்
ஜே.சி.டேனியல் காதாபாத்திரத்தில் கச்சிதமாய் பொருந்தியுள்ளார் பிருத்வி ராஜ். ரோஸம்மாவாக நடிக்கும் பெண் மனதை நெருடிச் செல்கிறார். மலையாள சினிமாவின் முதல் கதாநாயகியென அங்கீகரிக்கப்பட்டது அவர் சந்ததியினருக்கு தெரிந்த செய்தியும் இல்லை. ஜே.சி.டேனியலின் இரண்டாவது மகன் தன் தந்தையின் ஆங்கீகாரத்தின் போது கலங்கி பேசும் உரையும் படமாக்கப்பட்டுள்ளது.

சினிமாக்காரரின் சினிமா தோல்வியை சினிமாவாக்கிய இயக்குனர் நிச்சயம் பாரட்டுதலுக்குரியவர். ஜே.சி.டேனியல் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாமல் பத்தோடு பதினொன்றாய் வந்த வேகத்தில் பெட்டிக்குள் போனது வருத்தமான செய்தியே. பிரியாணி மயக்கத்தில் இருக்கும் மக்கள் இந்த மூலிகை இரசத்தையும் கொஞ்சம் பருகி இருக்கலாம்..
பி.கு: 
1. 2000-ம் ஆண்டு வரை பிராமணர் ஒருவரால் எடுக்கப்பட்ட ‘பாலன்’ (1938) எனும் பேசும் படம் தான் மலையாளத்தின் முதல் சினிமாவாக கருதப்பட்டது.

2. ஜே.சி.டேனியல் தயாரிப்பாளரின் இன்றய நிலைய வாசிக்க இங்கே சொடுக்கவும்.