Friday, March 14, 2014

வெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்


மியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக இந்துகள். அந்த சிறுபான்மைக்கு அன்னாந்து பார்க்கும் அளவுக்கு கோவில். அந்தக் கோவில் கோபுரம் மட்டும் தான் உயரமாக உள்ளது. மக்களின் வாழ்க்கை தரமோ கோவில் வாசலை விட மோசமாக உள்ளது. பாகுபாடு மிகுந்த அரசியல் நிலையால் அதிகமான அகதிகளை உருவாக்குவதில் முதல் நிலை வகிக்கிறது இந்நாடு. அதில் மிகுதியாகவே முகமதிய அகதிகள். 

மியன்மார் அகதிகளின் தொல்லை தாய்லாந்து மற்றும் மலேசிய குடியுரிமை இலகாக்களுக்கு பலமான தலைவலியை கொடுக்கும் விடயங்களில் ஒன்று. தரை வழி பயணமும், கள்ளத் தோனியும் இவர்கள் இங்கு குடியேற காரணம். கூட்டமாக இவர்கள் வந்த படகு சுட்டு வீழ்த்தப்பட்ட ’சம்பவங்களை’ கேள்விபட்டதுண்டு. முறையான கடப்பிதழ் இன்றி பிடிபடும் இவர்களை திருப்பி அனுப்புவதிலும் பெரும் சிக்கல். எவ்வளவு துள்ளியமாக மியன்மார் மொழி பேசுபவராக இருப்பினும் தூதரகங்கள் ’இவன் என் நாட்டினன்’ என்பதை மறுக்கவே செய்கின்றன. ’ரொகின்யா’, ‘ஹரக்கான்’, ‘சின்’, ‘மின்’ என இவர்களுக்குள் பல பிரிவுகள். பிளவுகளும் கூட. சில அகதி முகாம்களில் பத்து பன்னிரண்டு ஆண்டுகள் என இவர்கள் காலம் கடத்தி வருவது அரசாங்க பணத்திற்கான கேடு. 

வெண்ணிற இரவுகள் காதலின் ஊடலை மையமாக கொண்ட கதையோட்டம். சலிப்பு தட்டாத கதை. படத்தை பார்த்து முடிக்கையில் தோன்றியது ஒன்று தான். இப்படிபட்ட தமிழ்ப்படங்கள் மலேசிய சூழலில் இன்னும் அதிகமாகவே வர வேண்டும். திறம் கொண்ட படைப்பாளிகள் இங்கு அதிகமாகவே இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு என காண்கையில் திரையரங்கம் பல் இளிக்கவே செய்கிறது. முந்தைய படைப்புகள் தான் இதற்கு காரணம். மலேசிய திரைப்படத்தை திரையரங்கில் பார்ப்பது சொந்தக் காசுக்கு சூன்யமாகும் எனும் கருத்தே பலரிடமும் ஆழமாக பதிந்துள்ளது. வெண்ணிற இரவுகள் கொஞ்சமும் ஏமாற்றமளிக்கவில்லை. அடுத்த படைப்புகளுக்கான நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் இயக்குனர். மலேசிய சூழலில் சில நல்ல படைப்புகள் முன்பு வந்திருந்தாலும் அவை திரையிடப்படாமல் இருந்திருக்கின்றன. வெண்ணிற இரவுகள் ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. இது நிச்சயமாக வெற்றி பெற கூடிய தொடக்கமும் ஆகும்.

தனது கடன்கார முன்னாள் காதலனை தேடிச் செல்கிறார் காதலி. மலேசியாவின் ‘ஏர் ஆசியா’ விளம்பரத்துடன் மியன்மாருக்கான இவரின் பயணம் தொடங்குகிறது. கதைக் களம் மியன்மார், மலேசியா, சிங்கப்பூர் என விருவிருப்பை கூட்டுகிறது. மியன்மாரில் மகேனை தேடும் போது காட்டப்படும் இடம் தான் நான் ஆரம்பத்தில் கூறிய கோவில். இங்கே இயக்குனரின் நூதனம் வியக்க வைக்கிறது. தமிழர்களிடையே பாழாய் போன ஓர் எண்ணம் உண்டு அது ஹிந்து மதமும் தமிழனும் பிரிக்க முடியாத சக்தி எனும் அசைக்க முடியாத நம்பிக்கை. கோவிலை காட்டுவதன் வழி மியன்மாரின் தமிழ் குடியினரையும் காட்டிவிடுகிறார். ‘அங்கயும் தமலவங்க இருக்காங்க பாரு’ எனும் எண்ணத்தை 'பாமரனிடம்' புகுத்தும் எளிய வழி. உண்மையில் அதிகமான தமிழ் முஸ்லிம்களும் அங்கே வசிக்கிறார்கள். 

பாடாவதியான வசனங்களினால் பல மலேசிய ’டெலிமூவி’கள் நம்மை வெயில் காய வைத்துள்ளன. ‘வாழ்க்கைனா என்னானு தெரியுமா’ எனும் வகையிலான வசனங்களை கேட்டாலே சேனலை மாற்றும் மனப்போக்கை தான் மலேசிய தமிழ் நன்னெறி திரைப்படைப்புகள் இங்கே ஏற்படுத்தியுள்ளன. புதிய தலைமுறையின் திரை ஆர்வமும் படைப்புகளும் இதை பலமாகவே மாற்றி அமைக்கும் என்பதாக உணர்கிறேன்.

’நுசந்தாரா’ எனும் சூழல் மியன்மார் முதல் இந்தோனேசியா வரை பல நாடுகளை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில் சேவல் சண்டை மிக பிரபலம். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதீத சட்ட அழுத்தத்தால் இவ்விளையாட்டு வழக்கொழிக்கப்பட்டது. இது கல்வெட்டில் பொறிக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டும் ஆகும். மியன்மார் மக்களோடு மக்களாக சேவல் சண்டை விட்டுக் கொண்டிருக்கும் காட்சியோடு மகேனின் கதாபாத்திரம் தொடங்குகிறது. வறண்ட பூமி, வயல் வெளி, குடிசை வீடு என எல்லா பாகுதிகளிலும் கேமரா கோனம் பயணித்துள்ளது. காதல் கதை என்பதால் மியன்மார் மக்களின் சமூக சூழல் அழுத்தத்தோடு முன் வைக்கப்படவில்லை. திரைக்கதைக்கு அது ஒவ்வாததாகவும் கருதி இருக்கக் கூடும். 

ரமேஷ், மேகலா என இரு கதாபாத்திரங்களை மையமாக கொண்டே திரைக்கதை நகர்கிறது. இதற்கு நிச்சயமாக அசாத்திய திறன் வேண்டும். முக்கிய கதாபாத்திரம் இந்த இரு ஜோடிகள் மட்டுமே என்றிருக்க கதையை சுவாரசியமாக சொல்லி முடிப்பது சவாலான காரியமே. நிகழ்காலத்திலும் பழய நினைவுகளுடனும் படம் நகர்வதால் கதையோட்டம் போர் அடிக்காமல் உள்ளது. இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் உள்ள முரண் நாயகன் ஜாலியான கேரக்டராகவும் நாயகி சீரியசான கேரக்டராகவும் காட்டப்படுவது. ஒவ்வொரு காட்சிகளும் இளமையின் துள்ளலோடு நகர்ந்துச் செல்ல இது பெரும் பலமாக அமைந்துள்ளது. 

லாஜிக் தவறுகளை சுட்டிக்காட்டாவிட்டால் இவ்விலக்கிய சமூகம் என்னை மன்னிக்காது என்பதால் இதன் சில குறைபாடுகளையும் காண்போம். தந்தையின் மீது வெறுப்பு மிகுந்த ரமேஷ் தன் படிப்புக்கு தானாகவே பணம் தேடிக்கொள்கிறார். அப்படியாக மேகலாவிடம் நாமம் போடும் பணம் சில ஆயிரங்கள். இருந்தும் இவர் கையில் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் பளபளக்கிறது. ’புரட்டாசிக்கு ஒரு மாசம் சைவம்’ எனும் மேகலா, ரமேஷிடம் இங்க ‘காட்டுப் பன்டி’ கிடைக்காதா என நம் போன்ற பிஞ்சு பார்வையாளனின் மனதில் கள்ளுக்கடையை ஞாபகப்படுத்தி தொலைக்கிறார். மேகலா ஒரு வலைபதிவர். ’வெட்பிரஸ்’ தளத்தில் வெண்ணிற இரவுகள் என தனது பிளாக் எழுதி வருகிறார். எந்த வலைத்தளமாக இருந்தாலும் ‘கொம்பஸ்’ பகுதியில் மட்டுமே உள்ளீடுகளை செய்ய முடியும். ஆனால் அவரோ முகப்பு தளத்தில் தட்டச்சு செய்வது ‘நொட்டையாக’ உள்ளது.


மலேசிய பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க்கை முறையை மிக யதார்த்தமாக காட்டியுள்ளார்கள். யூனிவர்சிட்டியில் கொடுக்கப்படும் பட்டப் பெயர், ஓரெண்டேஷன் @ ரேகிங் போன்ற காட்சிகள் மலரும் நினைவுகளாக உள்ளன. மீண்டும் மீண்டும் வரும் அதே ’ஸப்போர்டிங் ஆர்டிஸ்’ காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அதாவது மேகலா மகேன் உற்ற தோழர் தோழியரை தாண்டிய மற்ற கதாபாத்திரங்களை குறிப்பிடுகிறேன். இது போக மகேன் (ரமேஷ்) மற்றும் ’சைக்கோ மந்திரா’ (ரமேஷின் நண்பன்) பாடகரையும் தவிர்த்து அதிகமான தமிழ் இளைஞர் கதாபாத்திரங்கள் இல்லை. பெண்களின் ஆதிக்கம் கதையில் மிகுந்துள்ளது. 

மலேசிய காட்சி அமைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் பசுமையோடும் மியன்மார் காட்சி அமைப்புகள் வறட்சி நிலையும் மிகுந்து உள்ளன. இரு வேறு நிலப்பகுதிகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை காத தூர வேறுபாடுகளை உணர்த்துகிறது. வசதியற்ற அவர்களின் நிலையை தமிழ் தேசியம் மறந்தே வாழ்கிறது. புரட்சிக்கும் போருக்கும் மட்டும் தமிழ் தேசியம் முதுகு வளையும் என்பதாகவே இதை உணர்கிறேன். 

உணர்ச்சி மிகு தருணங்கள் மேகலா எனும் கதாபாத்திரத்துக்கு மிக எளிதாக அமைந்திருக்கிறது. அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். அழுகை, பயம், கோபம், நகைச்சுவை, யதார்த்தமென கலக்கி இருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் சோடாபட்டி கண்ணாடியுடனும், ஒப்பனை பவுடர் அடர்த்தியுடனும் நாம் பார்க்கும் மேகலா நிகழ்கால தைரிய பெண்ணாக முற்றிலும் மாறுபடுகிறார். மனதை பறிக்கும் அழகுடன் இருக்கிறார். 

’சைக்கோ மந்திரா’ ’பத்தல பத்தல சூரு பத்தல’ எனும் பொன்னான வரிகளில் ஏதாகினும் பாடலை பாடிவிடுவாரோ எனும் அச்சத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்கள். பாடல் வரிகளும் இசை அமைப்பும் நெஞ்சில் நிற்கின்றன. ரிங் டோன் வைத்துக்கொள்ளும் வசதி செய்துள்ளார்களா எனும் விவரம் தெரியவில்லை. 

மியன்மார் காட்சி அமைப்பு எனும் பட்சத்தில் புத்த மடாலயங்களை படக்குழுவினர் மறக்கவில்லை. பார்க்கும் இடமெங்கும் முளைத்த காளான்களாக இருப்பது அது தானே. இங்கே தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களின் இலக்கிய பாரம்பரியம் என்ன? மொழியை மறக்காமல் இருக்கும் போது எழுத்தை மறந்திருக்க கூடுமா எனும் எண்ணங்களை தவிர்க்க முடியவில்லை. 

உலகச் சந்தையில் மதிப்பு குறைந்த மியன்மார் நாணயம் ஊடலில் பிரிந்த காதலரின் உறவை மீட்டுணர வைக்கிறது. ஊடல் தவிர்த்து வேறு என்ன காரணங்களுக்காக பிரிந்தார்கள் என்பது படத்தின் முக்கிய திருப்புமுனைகள். அவர்களை மியன்மார் நாணயம் இணைத்ததா அல்லது பிரித்ததா என்பது உட்ச பட்ச காட்சி. இப்படத்தின் வசன அமைப்புகளில் மகேன் தன் சித்தியுடன் பேசும் காட்சி அமைப்பே சற்று சறுக்கல் கொண்டுள்ளதாக கருதுகிறேன். அதன் அழுத்தம் ஒப்ப மறுக்கிறது. 

மலேசிய தமிழ் திரைப்படைப்புக்கு வெண்ணிற இரவுகள் ஓர் அடித்தளமாக அமைந்துள்ளது. இது மென்மேலும் வளர வேண்டும். நிச்சயமாக திரையரங்குகளில் இப்படத்தை காண தவறாதீர்கள். படக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். 

வெண்ணிற இரவுகள் (White Nights) - நவீன டொஸ்தாயெவ்ஸ்கியின் காதல்.

Monday, February 24, 2014

2013-ல் படித்ததில் பிடித்த 10 நூல்கள்

10. ONLY 13 - THE TRUE STORY OF LON (Julia Manzanares & Derek Kent)

தாய்லாந்தை சொர்க பூமியாக அடையாளம் காண்பதற்கு அதன் ‘செக்ஸ் டூரிசமும்’ ஒரு காரணம். பாலியல் வேட்கை பொருட்டு அங்குச் செல்லும் பயணிகள் அதிகமாகவே இருக்கிறார்கள். பயணிகளின் இந்த பாலியல் தேடல் அதிகமான பெண்களை உலகின் புராதன தொழிலான விபச்சாரத்திற்கு அழைத்து வந்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் விரட்டல் ஒரு தாய்லாந்து பெண்ணை பேங்காக் பாலியல் வீதியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. அப்போது அவளின் வயது 13. இந்நூல் தொடர்பாக எனது விமர்சனத்தை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பாலியல் தொழில் தொடர்பாக ஆழமான பதிவை முன் வைக்கும் லோன் எனும் பெண்ணின் சுயசரிதம் மிக எளிமையான ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


9. பிரபல கொலை வழக்குகள் (எஸ்.பி.சொக்கலிங்கம்)

கிழக்கின் தரமான வெளியீடுகளில் மேலும் ஒரு புத்தகம். எஸ்.பி.சொக்கலிங்கம் எனும் வழக்கறிஞரால் எழுதப்பட்ட நூல். தடையற்ற வாசிப்பு. 'க்ரைம்' சிறுகதைகளை கண் விரித்து வாசிப்பதை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. மொத்தம் 10 கொலை வழக்குகளை விளக்குகிறது இந்நூல். வழக்குகளின் விசாரணை சுவாரசியமானது. அங்கே சான்றுகள் அற்ற சாட்சியம் பொய்த்து போகிறது. இருந்தும் நீதி பல நேரங்களில் வெல்வதையும் சில நேரங்களில் தோற்றுப் போவதையும் நாம் காண்கிறோம்.


8. A Record of Cambodia - The Land and It's People (Zhou Daguan)

இந்நூல் தொடர்பாக எனது கம்போடிய பயண கட்டுரையில் பல இடங்களில் மேற்கோள் காட்டி இருந்தேன். 1296-ல் அந்நாளைய அங்கோர் நகரத்திற்கு பயணம் மேற்கொண்ட ஒரு சீன பயணியின் குறிப்புகளை விளக்கும் நூல் இது. கம்போடியாவின் அங்கோர் கால மக்கள், ஆட்சி, வணிகம், வாழ்வியல், மதம் என பல தளங்களை விளக்குகிறது. சமீப காலத்தில் தான் இந்த நூல் நேரடியாக சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பு பிரஞ்சு மொழியில் இருந்து அங்கிலத்தில் The Customs of Cambodia என அறியப்பட்டது. அங்கோர் சரித்திரத்தை அறிந்துக் கொள்ள விரும்புவோர் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் இது. ச்சாவ் தாகுவான் எழுதிய சீன குறிப்பில் இருந்து இன்று நமக்கு வெகு சொற்பமானவையே கிட்டி உள்ளது. மார்க்கோ போலோவின் ஆசிய பயண குறிப்பிற்கும் ச்சாவ் தாகுவான் பயண குறிப்பிற்குமான வேறுபாட்டையும், தாகுவான் குறிப்புகளில் இருந்து இன்றைய ஆய்வுகள் கண்டடைந்த முரண்பாட்டையும் ஆசிரியர் விளக்க தவறவில்லை.


7. ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம் (கே.ரகோத்தமன்)

வாசகனை மாய காட்டுக்குள் ஆழ்த்தும் நூல் இது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமனால் எழுதப்பட்ட நூல். கொலை வழக்குக்கு முக்கிய ஆதாரமாக அமைந்த புகைப்படங்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இன்றளவிலும் பல விதமான சர்ச்சைகளை எதிர் கொண்டுள்ள வழக்கு இது. விசாரணை அதிகாரி எனும் பட்சத்தில் தனது சார்பிலான நியாய வாதங்களை முன் வைக்கிறார் ரகோத்தமன். ஒரு வழக்கை விசாரிக்க வேண்டிய முறைகளையும் அதில் தவிர்த்திருக்க வேண்டிய வற்றையும், விசாரணை அதிகாரிகளுக்கு நேர்ந்த பல விதமான இடர்பாடுகள், தடைகள், அதிகாரக் குறுக்கீடுகள் பற்றியும் விலாவாரியக குறிப்பிட்டுள்ளார். ராஜிவ் காந்தி எனும் பிரபலத்தின் கொலை வழக்கினை அறிந்துக்கொள்ள வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.


6. வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம் (முகில்)

எழுத்தாளர் முகில் எழுதிய நூல்களில் முதலில் வாசித்தது யூதர்கள். அவர் எழுத்தின் வசீகரமே மேலும் அவரின் வெறு சில படைப்புகளை நாடிச் செல்ல வைத்தது. வெளிச்சத்தின் நிறம் கருப்பு கொஞ்சம் தடித்த நூல் தான் இருந்தும் வாசிப்புக்கு தடையற்ற நூல். ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரசியத்தை கொட்டி எழுதி இருக்கிறார் முகில். என்ன தான் நாம் விஞ்ஞான ரீதியாக லாஜிக் தேடினாலும் ஆச்சரியமளிக்கும் சில அதிசயங்கள் ஆங்காங்கு நடந்தபடியே உள்ளன. சைன்ஸுக்கு அப்பாற்பட்ட சில நம்பிக்கைகள் நவநாகரீக வளர்ந்த நாடுகளிலும் மெத்த படித்த மக்களிடமும் கொட்டிக் கிடக்கிறது. இயற்கையாக நடக்கும் சம்பவங்கள் கூட சில வேளைகளில் அதிசயமாகும் அதிசயத்தை நாம் காண்கிறேம். இதை படித்து முடித்ததும் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே என்றே தோன்றியது. இது குறித்து முகிலிடம் கேட்ட போது வாய்ப்பு கிட்டுமாயின் இத்தொடரின் அடுத்த பாகத்தை எழுதுவதாக கூறினார்.


5. Lady Boys - The Secret World of Thailand's Third Gender

Only 13 புத்தகத்தை வாங்கிய போது தான் இதையும் வாங்கினேன். தென் கிழக்காசியாவில் அதிகமான திருநங்கைகள் வாழும் நாடு தாய்லாந்து. ‘லேடி பாய்ஸ்’ எனும் இந்த நூல் தாய்லாந்தில் திருநங்கைகள் தொடர்பான பல தகவல்களை நமக்கு அளிக்கிறது. நான் வித்தியா, அவன் - அது = அவள் போன்ற தமிழ் நூல்கள் இந்திய சூழலில் திருநங்கைகளின் வாழ்க்கை முறையை நமக்கு விளக்கின. தாய்லாந்து தொடர்பான ஆங்கில நூல் வரிசையில் முதல் 10-ல் இந்நூலும் ஒன்று. ஒன்பது திருநங்கைகள் குறித்த தனி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருநங்கையர்களின் அடையாளம் அந்நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. பாலியல் தொழிலின் வியாபார நூதனங்களும் அங்கு பல திருநங்கையர்கள் உருவாக காரணமாக அமைவதை காண முடிகிறது. ‘ஃபியூடிப்புல் பாக்சர்’ எனும் திரைப்படம் தொடர்பாக எனது கண்ணோட்டத்தை முன்பு எழுதி இருந்தேன். நோங் தோம் எனும் அந்த ’முய் தாய்’ வீரரின் வாழ்க்கை குறிப்பையும் இந்நூலில் காணலாம்.

4. எரியும் பனிக்காடு (Red Tea) (இரா.முருகவேல்)

இது ஆங்கிலத்தில் வெளி வந்த நாவல். தமிழில் இரா.முருகவேல் அவர்களால் மிக அருமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இன்று நமக்கு தமிழில் வாசிக்க கிடைத்திருக்கும் நாவல் இது. இந்நாவலை மையப்படுத்தியே பாலாவின் பரதேசி படம் எடுக்கப்பட்டுள்ளதை வாசித்தவர்கள் அறிய முடியும். பாலா அவரின் பெயரை போட்டுக் கொண்டது பலமான சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகின் ஒரு பக்கம் புரட்சிகளும் போராட்டங்களும் இரண்டாம் உலகப் போரின் ஆயத்தங்களும் நடந்துக் கொண்டிருந்த சமயம் தனது அடிப்படை உரிமைகள் என்னவென அறியாத மக்கள் முதலாளித்துவ பிடியில் வதைபடுகிறார்கள். அறியாமையே இதற்கு முழு முதற் காரணம். படித்து முடிக்கையில் ஏதோ ஒரு பாரம் நம் நெஞ்சில் ஏற்றி வைக்கப்படுகிறது. பனிக்காட்டில் தன் வாழ்க்கையை அற்பணித்த உயிர்களுக்கு ஒரு கணம் நம்மை மௌன அஞ்சலி செலுத்த வைக்கிறது.

3. அறம் - சிறுகதை தொகுப்பு (ஜெயமோகன்)

அறம் மொத்தம் 13 சிறுகதைகளை கொண்ட தொகுப்பாகும். வாசகனின் உணர்ச்சிகளை தட்டிச் செல்லும் படைப்பு மிக உன்னதமானது. அறம் நூலின் ஒவ்வொரு கதையிலும் அத்தன்மை புதைந்துள்ளது. அறம் செய்யும் மனிதர்களை இவ்வுலகம் எவ்வளவு அந்நியமாக்கிவிட்டது என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இதில் யானை டாக்டர் எனும் சிறுகதை தனித்துவம் வாய்ந்தது. அக்கதை பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு விழிப்புணர்வுக்காக இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிகிறேன். தமிழ் இலக்கியத்தில் இக்கதைகள் அனைத்தும் மிக முக்கியமான நிகழ்வுகளாகும். அறம் நிகழ்த்திய மனிதர்கள் பலரை நாம் அறியாமல் போனதற்கு காரணம் சமூகத்தின் அறமற்ற நிலைகள் என்பதே உண்மை.

2. என் பெயர் ராமசேஷன் (ஆதவன்)

ஆதவன் படைப்புகள் மீதான பரிச்சையத்தை ஏற்படுத்தியது என் நண்பன் முரளி. அவரிடம் இருந்த தலையணை சைஸ் ஆதவன் சிறுகதை தொகுப்புகளை தான் முதலில் வாசித்திருந்தேன். பாதி புத்தகத்தை தாண்டி இருந்த நன்நாள் ஒன்றில் முரளிக்கு டிரான்ஸ்பர் கிடைக்க புத்தகமும் இனிதே இடம் மாறியது. தொடர்ந்து வாசித்த எஸ்.ராமகிருஸ்ணனின் கதாவிலாசம் நூலில் ஆதவனின் படைப்புகளான காகித மலர்களையும் என் பெயர் ராமசேஷன் நாவலையும் அறிமுகம் செய்து இருந்தார். ராமசேஷன் ஓர் அர்தடாக்ஸ் பிராமண குடும்பத்தில் வந்தவன். நவநாகரீகம், முற்போக்கு சிந்தனை என சில சமகால சமூக வஸ்துகள் தன்னுள் நிறம்பி இருப்பதாக நினைக்கும் கதாபாத்திரம் அவன். தனது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் போலியாக வாழ்வதை காண்கிறான். ராமசேஷனை பொருத்தவரை எல்லா மனிதர்களும் முகமூடி அணிந்தே சமூகத்தை அனுகுகிறார்கள். எதனால் இச்சூழ்நிலை என்பதை நகைச்சுவை இழையோட கதை விவரிக்கப்படுகிறது. முற்போக்கு வாதி ராமசேஷன் கடைசியில் கூறும் வாக்கியம் ’என் தங்கையை காதலிப்பவனின் பல்லை உடைப்பேன்’என்பதாக இருக்கும். ராமசேஷனும் முகமூடியோடு தான் இருந்தான் என்பதை அப்பொழுது வாசகனும் உணருகிறான் . பாலகுமாரனும் இந்நூலினை அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகப்பட்டியலில் முன்மொழிந்துள்ளார்.


1. ஏழாம் உலகம் (ஜெயமோகன்)

புனித தன்மைகள் நிறைந்த கோவிலின் வாசலில் இருக்கிறது நாம் கொஞ்சமும் விரும்பாத ஏழாம் உலகம். படிக்க படிக்க ஓர் ஆச்சரியமான ஆழத்தில் மூழ்கடிக்கும் கதையம்சம். இப்படியும் நடக்கிறதா இன்னமும் நாம் வாழும் சமகால உலகில் என அதிர்ச்சியளிக்கும் நாவல். ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஒரு மாஸ்டர் பீஸ் என முத்திரை குத்தலாம். வாசகனை இந்த உலகில் இருந்து வேறு ஓர் உலகத்திற்கு தூக்கிச் செல்லும் கதை அமைப்பைக் கொண்ட படைப்பு. இந்த மனிதன் எப்படி தான் இதை எழுதினார் என இன்னமும் வியப்பாகவே உள்ளது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் இந்நாவலின் கதையாம்சம் தொட்டு பேசப்பட்டுள்ளது. ஆனால் ஜெயமோகன் இந்நாவலில் நம்மை இட்டுச் செல்லும் உலகத்தோடு ஒப்பிடும் போது நான் கடவுள் வெகு தொலைவில் தான் உள்ளது.

(பி.கு: படித்ததில் நினைவில் நின்ற நூல்களையே இங்கே பட்டியலிட்டுள்ளேன். சில நினைவில் தவறி இருக்கலாம். இவை மட்டுமே கடந்த ஆண்டின் சிறந்த நூல்கள் என குறிப்பிடவில்லை. ஆதலால் தீவிர இலக்கியவாதிகள் பொருத்தருள்வார்களாக. நீங்கள் படித்ததில் பிடித்த நூல்களையும் பட்டியலிடுங்கள் பலரின் வாசிப்பு தளத்தை விரிவுபடுத்த உறுதுணையாக இருக்கும்.)

Wednesday, February 19, 2014

அங்கோர் வாட் - 1000 லிங்க ஆற்றுப்படுகை

நீரில் இருக்கும் லிங்க சிலைகள்
(இதை புதிதாக வாசிக்க ஆரம்பிப்பவர்கள் ஓர் எட்டு இந்த பக்கங்களையும் கிளிக் செய்து வாசித்துவிடுங்கள் பாகம்1 பாகம்2 பாகம்3 பாகம்4 பாகம்5 பாகம்6


நமது முன்னோர்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. பிருமாண்டமான கோவில்களை வானுலகின் பூதங்கள் வந்து கட்டிச் சென்றதாக கூறுவார்கள். 'சும்மானு நினைச்சியா, பூதங்க ஒரே நாளுல வந்து கோவில கட்டிடுங்க, சூரிய வெளிச்சம் வரத்துக்குள்ள கட்டிட்டு போயிடனும், அதனால தான் இந்தியாவுல நிறைய கோவிலுங்க முழுசா கட்டி முடிக்காம இருக்கும்' பால்ய வயதில் என் தாத்தா சொன்ன வரிகள் இன்னமும் ஞாபகம் உள்ளது. மதத்தின் மீதான அதீத நம்பிக்கை காரணமாக அவர் இப்படி கூறி இருக்கலாம்.

இன்றைய நாவீனத்தில் இருந்து காண்கையில் அந்நாளய மக்களின் கட்டிடக் கலை ஓர் ஆதிசய சாதனை. சரி இந்த கம்போடிய கோவில் நகரத்தை எப்படி அமைத்தார்கள் எனும் குறிப்புகளை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அலசி ஆராய்து பிரித்து மேய்ந்து பார்த்திருக்கிறார்கள். இன்னமும் பார்த்துக் கொண்டுள்ளார்கள்.

நாம் அங்கோர் பகுதிகளில் காணும் கோவில்கள் பெரும் கற்சுவர்களாலும், கற்சிலைகளாலும் 
​​
ஆனது. அக்கற்களை நீங்கள் காணும் போது அதில் சில துளைகளை காண முடிகிறது. அவை கட்டுமான பணிகளோடு சம்பந்தப்பட்ட துளைகள் என யூகிக்க முடிகிறது. இக்கற்கள் ஏறத்தாழ 50 கிழோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குளன் மலைப் பகுதியில் இருந்து கொண்டு வரபட்டவை. கட்டுமான பணிக்கு இக்கற்கள் கொண்டு வரபட்ட முறையை Sculpture of Angkor and Ancient Cambodia: Millennium of Glory (1997) எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் John Sanday:

இயற்கையோடு மறைந்துக் கொண்டிருக்கும் சிற்பம்
இக்கற்கள் கொண்டு வரபட்ட வழிமுறை தொடர்பாக ஆராய்சியாளர்களிடையே ஏகபட்ட சர்சைகள் உண்டு. ஒன்றிலிருந்து எட்டு டன் எடைகளிலான பாறை கற்கள் அவை. சில பெரிய கற்கள் 10 டன் எடையையும் எட்டிப் பிடிக்கின்றன. குளன் மலை பகுதியில் பாறைகள் பல அளவுகளில் வெட்டப்பட்டன. பின் மூங்கில் களிகளை செருக சுமார் இரு தூவாங்கள் துளைக்கப்பட்டன. இரு புரமும் நீண்டிருக்கும் களிகள் கொடிகளால் இருக்கிக் கட்டப்பட்டு நீரால் நிறப்பப்படும். நீர் நிறம்பிய மூங்கிற் களிகள் கற்பாறைகளை இருகப் பற்றிக் கொள்ளும். இக்கற்களை இழுக்க யானைகளை பயன்படுத்தினார்கள். கற்களுக்கு அடியில் உருளைகளை கொடுத்து யானைகளின் உதவியோடு சியம் ரிப் நதியருகே கொண்டு செல்வார்கள். அக்கற்கள் மூங்கிலால் ஆன மிதவைகளில் ஏற்றப்பட்டு கட்டுமான பணியிடங்களுக்கு அருகே எடுத்துவரப்படும். அங்கிருந்து மீண்டும் யானைகளை பயன்படுத்தி கற்களை நகர்த்தி வேலைகளை செய்திருக்கிறார்கள்.

மகேந்திர பார்வதம் தேடல் - கல்லில் சிற்பம் Source: alfredmeier.me
இரண்டு கற்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து கட்டுமான வடிவத்திற்கு ஏற்ப இளைக்கப்படும். அதன் பின்னரே கட்டுமானத்திற்கும் சிற்ப வேலைபாடுகளுக்கும் அவை பயன்படுத்தப்பட்டன. எல்லாமே மாபெரும் திட்டங்கள். இக்கட்டுமான திட்டங்களுக்கு அதிகமான அடிமைகள் தேவைபட்டார்கள், அடிமைகளை திரட்ட அதிகமான போர்களும் தேவைபட்டது.
மறுநாள் காலையில் விடுதியில் காலை உணவை முடித்துக் கொண்டு குளன் மலைக்கான பயணத்தை தொடர்ந்தோம். காலை சிற்றுண்டிகளில் பிரஞ்சு வாடை ஆதிகமாகவே உள்ளது. கட்டமாக வெட்டப்பட்ட ஸ்லைஸ் ரொட்டிகளை பட்டர் தடவி சாப்பிட நினைத்திருந்தீர்களானால் உங்கள் சிற்றுண்டி கனவில் மண் விழும். பூரி கட்டையை போன்ற உருளைகளை ரொட்டியென கொடுக்கிறார்கள். கடித்துத் தின்ன வரட்டுத்தனமானகவும் முரட்டுத்தனமாகவும் உள்ளது.

சியம் ரிப் பகுதிகளில் சமவெளிகளே கண்ணுக்கு எட்டிய தூரம் தென்படும் என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். சுமார் 45 நிமிட மகிழுந்து பயணத்தில் Kbal Spean அடிவாரத்தை அடைந்தோம். இந்த Kbal Spean எனும் இடம் Kulen மலைத் தொடரில் இருக்கும் ஒரு பகுதி. இவ்விடத்தை நெருங்கும் போது ஒரு மலைத் தொடர் நம் கண் முன் விரிகிறது.

மகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me
Kbal Spean-ணின் சிறப்பம்சம் 1000 லிங்கங்கள். மலையடிவாரத்தில் இருந்து உச்சியை அடைய 1.5 கிலோ மீட்டர் தூரம். மாற்றுப் பயண வசதிகள் இல்லை. நிச்சயம் நடந்தாக வேண்டும் அல்லது மலையேறியாக வேண்டும். உங்கள் அங்கோர் பயணத்தில் இவ்விடம் செல்ல திட்டம் இருப்பின் தகுந்த காலணியை தேர்ந்தெடுப்பது மன உளைச்சளை குறைக்கும். அடிவாரத்தில் இருந்து ஒற்றையடி காட்டுப் பாதை மலையை நோக்கி பயணிக்கிறது. சில இடங்களில் செங்குத்தான மண் முகடுகள். அதில் பதிந்திருக்கும் கற்களில் கால் வைத்து சமத்தாக ஏறிக் கொள்ள வேண்டும். மண் எங்கும் மரக் கிளைகளை போல் வேர்களும் பரவி இருக்கும். இது தான் அதன் இயற்கை எழில். அழகு மிளிரும் கம்போடியா.

மகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me
பசுமையை இரசித்துக் கொண்டு அமைதியாக மலை ஏறலாம். இந்த குளன் மலையில் எண்ணற்ற கலைப் புதையல்கள் உள்ளன. கட்டிடங்களும், முழு சிற்பங்களும், முழுமையடையாத சிற்பங்களும் அவற்றில் அடங்கும். குளன் மலைத்தொடர் அகழ்வாராய்ச்சிக்கு திறந்துவிடப்பட்ட பகுதி. தொல்லியல் ஆய்வு செய்ய விரும்புவோர் கம்போடிய அரசுக்கு தெரிவித்துவிட்டு ஆராய்ச்சியை தொடர முடியும்.

அது சுலபமான காரியமும் அல்ல. கண்ணி வெடிகள், காட்டாறின் மிரட்டலும், விலங்குகளின் ஆபத்தும் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக எதிர் நிற்கின்றன. அங்கோரியன் காலத்தில் இப்பகுதியில் ஒரு நகரம் இருந்ததாகவும் அந்நகரம் மகேந்திர பார்வதம் என அழைக்கப்பட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. நான் அங்கிருந்து திரும்பிய சில நாட்களில் அஸ்திரேலிய தொல்லியல் நிபுணர்களால் அந்நகரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக செய்தியை படித்து தெரிந்துக் கொண்டேன். தாமதமாக தெரிந்ததில் சிறு வருத்தமே. இன்னமும் குளன் மலைப் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

மகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me

தமிழ் நாளிகை செய்தி. Source: facebook
மகேந்திர பார்வதம் இரண்டாம் ஜெவர்மன் காலத்திய நகரம். இவ்வரசனின் காலத்தில் இருந்த மேலும் இரு நகரங்கள் ஹரிஹரலாயம் மற்றும் இந்திரபுரம் ஆகும்.

Kbal Spean உச்சியை அடையும் போது சில்லென்ற நீர் காற்று முகத்தை இதமாக தடவுகிறது. மாசற்ற நீரில் ஏறலமான லிங்கங்கள். ஆற்றுப்படுகை முழுக்க சின்ன சின்ன லிங்க சிலைகள். கறையோர பாறைகளில் இந்து உருவ வழிபாட்டு சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையான பெண் உருவச் சிலைகளில் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. பாறைகளால் ஆன பாலத்தை போன்ற இடத்தில் இருந்து நாம் காண்கையில் எதிர்புரம் வரும் சலனமற்ற நீர் பாலத்தை தாண்ட்டிய பள்ளத்தில் பேரிரைச்சலோடு விழுந்தோடுகிறது. பாலத்தின் நடுவே வட்டமான ஓட்டையை காண முடிகிறது. அங்கிருந்த லிங்க சிலை எடுக்கப்பட்டுவிட்டது. Kbal Spean எனும் கெமர் மொழி பாலம் எனும் அர்த்ததைக் கொண்டுள்ளது..

அதிகமான சிற்பங்களில் கவர்ந்த ஒன்று
இந்த ஆற்றுபடுகையில் லிங்கங்களை எப்படி செதுக்கினார்கள்? நீர் பெருக்கு குறைவாக இருந்த காலத்தில் அவற்றை அமைத்திருக்கிறார்கள். இமயத்தில் உருவாகும் கங்கை சிவனின் சிரசில் உதிப்பதாக நம்பப்படுகிறது. மலை ஊற்றுகளில் வழி உருவாகும் Kbal Spean ஆற்று நீர் இந்த ஆயிரம் லிங்கங்களை கடந்து புனிதப்படுவதாக புராதன கெமர் மக்கள் நம்பினார்கள். இதை கெமர் நாட்டின் கங்கையாக அவர்கள் மதித்தார்கள். அங்கோர் நகரங்களில் இருந்த கோவில் சடங்கு சாங்கிய முறைகளை நடத்த இங்கிருந்து எடுக்கப்படும் நீரையே பயன்படுத்தி இருக்கிறார்கள். KHMER THE LOST EMPIRE OF CAMBODIA by THIERRY ZEPHIR எனும் நூலில் இவற்றுக்கான மேலதிக தகவலை அறிந்துக்கொள்ள முடியும்.
ஆற்றில் சிலைகள்
'இங்கு ஏன் ஆயிரம் லிங்கங்கள் இருக்குனு தெரியுமா?' ச்சேன் வினவினார்.

'நிஜமாவே 1000 தான் இருக்கா? நான் அறிந்து இந்துக்கள் 108, 1008, 10008 எனும் எண்களில் நம்பிக்கை கொண்டவர்கள். வேத மந்திரகளுக்களோடு அவ்வெண்களை சம்பந்தப்படுத்துவதாக அறிகிறேன். இந்த கணக்கு எனக்கு தெரியவில்லை'.

'சிவனுக்கு 1000 மனைவிகள் அதனால் தான் இந்த 1000 லிங்கங்கள்.'

'அடடே, ஆச்சரியமான தகவலாக உள்ளது'.

1000 லிங்கங்கள் ஒரு பகுதி
ஆற்றின் ஓரமாக ஓர் ஒற்றயடி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழி நடந்து போகையில் கறையில் இருக்கும் பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களை நாம் காணலாம். சற்று தூரத்தில் இந்த கம்போடிய கங்கை ஒரு குட்டி நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கிறது. இங்
கு சுற்றுப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். நீர் பாசிகளை கவனத்தில் கொண்டு குளிப்பது அவசியம். மனதிற்கும் உடலுக்கும் ஓர் அதிசய உற்சாகத்தை கொடுக்கிறது இந்நீர்.

இங்கே ஓரு வசிதியும் உள்ளது. பெரும்பான்மையான பயணிகள் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையேறி வர விரும்புவதில்லை. ஆக இங்கு ஆட்களின் நடமாட்டம் சற்று குறைவென்றே சொல்லமுடியும். அப்படி வருபவர்களில் பலரும் 1000 லிங்கங்களை பார்த்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். நீர் வீழ்ச்சி பகுதியில் குளிக்க விரும்புவோருக்கு தனி அமைதி நிலையும் கிடைக்கிறது.
கபால் ஸ்பியன் நீர் வீழ்ச்சி
மலை பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வேளையில் மழை தனது வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது. பசியின் காரணமாக வயிற்றில் சிறு சலனத்தை உணர முடிந்தது. பெண்களுக்காக கட்டப்பட்ட கோட்டையை காணும் முன் அரை சான் வயிற்றுக்கான ஆகார வேட்டையில் இறங்கினோம்.

பயணங்கள் தொடரும்...

Tuesday, February 04, 2014

அங்கோர் வாட் - மரக் கோட்டை

Leper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது 

கம்போடியா இரு வேறு சரித்திர பதிவுகளை நமக்கு அளிக்கிறது. அங்கோர் காலத்தின் மாட்சியும் போல் போட் காலத்தின் வீழ்ச்சியும் அழுத்தமான ஆதாரங்களோடு நம் முன் வைக்கப்படுகின்றன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த சீனா, வியட்நாம் மற்றும் பிரஞ்சு சுரண்டல்களை நாம் கடந்துவிடுகிறோம். அதற்கான சரித்திர குறிப்புகள் பல குறைபாடுகள் கொண்டுள்ளன. பிரஞ்சுசுகார்களை பொருத்தவரை கம்போடியாவின் இன்றய துரித நிலைக்கு அவர்களின் காலனிய ஆட்சி உதவியுள்ளது என்பதே.

போல் போட் ஆட்சியில் மக்களை பண்டைய வாழ்க்கைக்கு திரும்பச் சொன்னார்கள். ஆண்டுக்கு நான்கு அறுவடைகள் செய்ய மக்கள் பிழிந்தெடுக்கப்பட்டனர். அதில் அவர்களுக்கு கிடைத்தது தோல்வி என்றாலும் போல் போட்டின் நான்கு அறுவடைக்கான யோசனையின் காரணம் அங்கோர் வரலாறு தான். அங்கோர் காலத்தில் நான்கு அறுவடை சாத்தியப்பட்டுள்ளது. வற்றாத 'Tonle Sap' அணையும் சியம் ரிப் நதியும் கம்போடிய விவசாத்தை பொன் விளையும் பூமியாக்கி உள்ளது. போல் போட் காலத்தில் அதன் நடைமுறை சாத்தியமற்று போனது கேள்விகுறியான ஒன்றே.

அப்சரஸ் புடைச் சிற்பம்
யசோதரபுரத்திற்கு முன்பிருந்த அங்கோர் நகரம் ஹரிஹரலாயம் என அழைக்கப்பட்டது. ஹரிஹரலாய காலத்து அரசர்களில் ஒருவன் யசோஹவர்மன். யசோஹவர்மன் நோய் வயபட்ட அரசனாக புகழ் பெருகிறான். கிருமி கண்ட குலோத்துங்க சோழனை போல் கெமர் மக்கள்ளின் அங்கோர் வரலாற்றுக்கு யசோஹவர்மன். இதன் தொடர்பான குறிப்பு பின்வருமாறு:-

"சீதோஷன சூழ்நிலைகளால் மக்கள் பெருவியாதிக்கு உட்படுவதாக இந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள். வீதிகளில் அதிகமான தொலுநோயாளிகளை காண முடிகிறது. தொலுநோயாளிகள் மக்களோடு ஒன்றியே வாழ்கிறார்கள். தொலுநோயை இவர்கள் பெருவியாதியாக கருதவில்லை. முன்பு ஆட்சி செய்த அரசனுக்கும் இப்படி நேர்ந்ததாக மக்களிடம் பேச்சு உண்டு. எந்த ஒரு நோயாக இருந்தாலும் ஆற்றங்கரையில் உடலை சுத்தம் செய்து கொள்கிறார்கள். தலையை அடிக்கடி நீரில் கழுவிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதை நோய் நிவாரணியாக கருதுகிறார்கள்.

தா ப்ரோம்

தா ப்ரோம்
 உடலுறவு கொண்ட உடன் நீரில் மூழ்கி குளிப்பதாலேயே பலருக்கும் வியாதி காண்கிறது என்பது என் கருத்து. வயிற்றுக் கடுப்பு உண்டாகும் 10 நபர்களில் 8 அல்லது 9 பேர் இறந்து போகிறார்கள். மக்களின் பயனுக்கு அறிவுப்பூர்வமாக சில மருந்து வகைகளும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. " Zhou Daguan LEPROSY AND OTHER ILLNESSES, Page 65&66 A Record of Cambodia The Land and Its People (1296-1297) எனும் புத்தக குறிப்பின் சாரமே மேலே நான் குறிப்பிட்டுள்ளது.

ச்சாவ் தாகுவான் தனது குறிப்பில் கூறும் அரசன் முதலாம் யசோஹவர்மனாவான். 'Leper King' அல்லது தொலுநோய் ராஜா யார் என்பதில் சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. The Legend of the Leper King - Facing Cambodian Past எனும் நூல் ஆசிரியர் D.Chandler. இவர் எட்டாம் ஜெயவர்மனை தொலுநோய் ராஜாவாக குறிப்பிடுகிறார். சிலர் அது ஏழாம் ஜெயவர்மன் என்றும் நம்புகிறார்கள். இன்றய நிலையில் முதலாம் யசோஹவர்மன் என்பது ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.

யசோஹவர்மன் தனது காலத்தில் பல மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். 100 மடாலயங்களையும் பல கோவில்களும் கட்டிய இந்த அரசன் தொலுநோயில் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார். ஆட்சியை மேம்படுத்த யசோதரபுர சிந்தனையை இவர் முன் வைத்துள்ளார். ஹரிஹரலாய நகரில் இருந்து யசோதரபுரம் நகரை அமைக்க வழிவகுத்தவர் யசோஹவர்மன். தனது அரசாட்சியையும் அழியாப் புகழையும் தக்க வைக்க யசோதரபுர சிந்தனை கை கொடுக்கும் என நம்பினார். சரி இந்த ராஜாவின் கதை எதற்கு?
Terrace of the Leper King
Terrace of the Leper King புடைச் சிற்பங்கள்

கடந்த பதிவில் Terrace of Elephant எனும் பகுதியை குறிப்பிட்டிருந்தேன். அதன் அருகே இருக்கும் மற்றுமொரு பகுதி Terrace of the Leper King. அங்கிருந்த சிலை அட்டைகளின் பாதிப்பில் தொலுநோயாளி சிலை போல் காணபட்டது. தொலுநோய் ராஜாவின் பெயராகவே அப்பகுதி அழைக்கப்படுகிறது. அச்சிலை தர்ம ராஜாவின் (எமன்) சிலை. முதலாம் யசோஹவர்மன் தர்ம ராஜாவாகவும் அழைக்கப்படுகிறார். யசோஹவர்மனை போல் இன்னும் சில பெயர் அறியா ராஜாக்களும் தொலுநோயால் இறந்து போயிருக்கவும் சாத்தியம் உள்ளது.

12 சிறு கோபுரங்கள் - Prasat Suor Prat
இவ்விரு பகுதிகளுக்கும் எதிர்புரம் இருப்பது 12 சிறு கோபுரங்கள். அவை ஆண்டின் ஒவ்வொரு மாதத்தையும் குறிப்பவையாகும். புராதன அங்கோர் காலத்தில் 12 மாதங்களை கொண்ட கால அளவையே பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒருவன் பிறந்த மாதத்திற்கு ஏற்ப அந்தந்த கோபுரங்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படும். இந்தக் கோபுரங்களில் கொடுக்கப்படும் தண்டனைகள் சொர்கத்தின் தீர்ப்பாக கருதப்படுகிறது.

முதல் நாள் பயணத்தின் பாதியை கடந்திருந்தோம். அங்கோர் பார்க்கில் அமைந்த ஒரு லோக்கல் உணவகத்தில் எங்கள் மதியை உணவை முடித்துக் கொண்டோம். சீன- தாய்- கம்போடிய உணவு வகைகள் கலந்தபடி இருந்தது. மலேசியாவில் சீன உணவுகளையும், ஏதோ ஒரு வகையில் மலேசியர்களின் வாழ்வின் ஒன்றிவிட்ட தாய்லாந்து உணவுகளையும் ருசிந்திருந்தபடியால் புதிய வகை என சொல்ல ஏதும் இல்லை. கெமர் மொழிக்கு அடுத்தபடியாக சீன மொழியே கம்போடியாவின் வியாபார மையங்களில் தென்பட்டது. முக்கியமாக உணவருந்தும் இடங்களில்.

கண்ணி வெடியில் பாதிக்கப்பட்டவர்கள்
மாலையில் மழை பிடித்துக் கொண்டது. கொஞ்சம் குறைந்தது போல் இருக்கக் கண்டதும் பயணத்தை தொடர்ந்தோம். சில கிலோ மீட்டர் பயணத்தில் 'Ta Phrom' எனும் கோவிலை அடைந்தோம். இந்தக் கட்டிட பகுதிக்குள் நுழைய சில மீட்டர் நடக்க வேண்டும். நடக்கும் வழியில் சிலர் இசைக் கருவிகளை மீட்டிக் கொண்டிருந்தார்கள். கூர்ந்து கவனிக்கையில் கண்ணி வெடியில் பாதிக்கபட்டவர்கள் என அறிந்துக் கொள்ள முடிந்தது. கெமர் மக்களின் பாரம்பரிய இசையை வாசிக்கிறார்கள். இசை தட்டுகளை விற்பனை செய்து தமது வருமானத்தை தேடிக் கொள்கிறார்கள்.

நடக்கும் வழியெங்கும் வானுயர்ந்த மரங்கள். மழைத் தூரல்களை சிந்திக் கொண்டிருந்தன. இந்த மரங்கள் ஒரு ’ஐகோன்’ என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு மரங்களும் இரண்டு அல்லது மூன்று தென்னைகளின் உயரம் உள்ளன. இம்மரங்கள் 500 ஆண்டுகளை கடந்ததாக மதிப்பிடப்படுகிறது.

'தா ப்ரோம்' என்றழைக்கப்படும் இக்கோட்டை/ கோவில் பகுதி ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது. இயற்கை எழில் கட்டியணைத்த இரம்ய சூழலை இங்கு நாம் இரசிக்க முடிகிறது. ஏதோ ஒரு பிரமிப்பு மனதில் புகுந்து நம்மை வாய் பிளக்கச் செய்கிறது. கட்டிடங்களை இருக்கிப் பிடித்த மரங்கள் அழகை கொடுத்தாலும் ஒருபுரம் சிதிலங்களை ஏற்படுத்தவும் தவறவில்லை. ஹாலிவூட் படத்தால் புகழ்பெற்ற பகுதியென வழிகாட்டிகள் மேற்கோள் காட்டுகிறார்கள். 'தோம் ரைடர்' எனும் திரைப்படம் இப்பகுதிகளில் தான் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இக்கோவில் இராஜவிஹாரம் என அழைக்கப்படுகிறது. தவச் சாலைகளும் நூலகங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடம் ஜெயவர்மன் தனது தாய்க்கு அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. தவச் சாலையாக இருந்த ஓரிடம் இருட்டான சூழலில் சுவர் முழுக்க முஷ்டி அளவிளான ஓட்டைகளால் அமைக்கப்பட்டிருந்தது. அத்துவாரங்கள் விலை உயர்ந்த கற்களாலும் உலோகங்களாலும் பதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. கைகளை இறுக்கி இதயத்தில் தட்ட அறையெங்கும் இதய ஒலி கேட்கிறது.

விதவிதமான அப்சரஸ் புடைச் சிற்பங்களையும் சுவரோவியங்களையும் புகைப்பட கருவிக்குள் அடக்கிக் கொண்டு போகும் போது மரப் பலகைகளான நடைபாதை நம்மை ஒரு பிருமாண்டமான காட்சிகளுக்கு இட்டுச் செல்கிறது. இக்கட்டிடங்களை சிதிலமாக்கிக் கொண்டிருக்கும் இந்த இலவம் மரங்கள் தான் இதை தாங்கி பிடித்து பாதுகாக்கிறதா என யோசிக்க வைக்கிறது.

மரங்களின் ஆட்சி
சட்டென நினைவுக்கு வர ச்சேனிடம் கேட்டேன். 'இக்கோவிலில் டைனசோர் வகையை சேர்ந்த மிருக சிற்பம் உண்டு அல்லவா. அது எந்த பகுதி?'. நாங்கள் அவ்விடத்தின் அருகாமையில் இருந்தோம் ச்சேன் அந்த பகுதியை காண்பித்தார். அங்கோர் கால கட்டத்தில் இச்சிற்பத்தை பதிவு செய்திருப்பது ஆச்சரியமே. இதை Stegosaur என குறிப்பிடுவார்கள். The Mysteries of Angkor Wat எனும் புத்தகத்தில் இச்சிற்பம் தொடர்பாக குறிப்புகள் வரும். Richard Sobol எனும் புகைப்பட கலைஞரால் எழுதப்பட்ட புத்தகம். பல அருமையான புகைப்படங்களோடு பயண குறிப்பை எழுதி இருப்பார். குழந்தைகளுக்கு ஏற்ற நூல் இது.
Stegosaur/ காட்டு பன்றி/ காண்டா மிருகம்???

புடைச் சிற்பங்கள்

இந்தக் கோவிலின் மறு புணரமைப்புக்கு இந்திய தேசம் நேசக் கரம் நீட்டியுள்ளது. பிளைட் பிடித்து வந்த பாவத்துக்கு கட்டிடத்தை காப்பாற்றும் பேர்வழி என சிமெண்டை கறைத்து கொட்டி இருக்கிறார்கள். எதிர்ப்பு கிளம்பவும் அவ்வேலையை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

முதல் நாள் பயணம் இந்த கோவிலோடு முடிந்தது. வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் கலைத்துப் போய் இருந்தோம். விடுதியில் 7 டாலருக்கு மசாஜ் வசதிகள் இருந்தது. மனதிற்கு பயணமும் உடலுக்கு மசாஜும் இதத்தைக் கொடுத்தது. சியம் ரிப் நகர் எங்கும் அதிகமான மசாஜ் மையங்கள் உள்ளன. 5 டாலர் முதல் அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பகல் முழுக்க கோவிலை சுற்றியவர்கள் மாலையில் காலை நீட்டி மசாஜ் செய்து இளைப்பாறிக் கொள்கிறார்கள்.

தா ப்ரோம்
கம்போடியாவில் பியர் விலை மிக மலிவாக உள்ளது. மலேசியாவில் விற்பனை செய்யப்படும் அதே பியர் வகைகள் தான். சுவையும் அதே போல் என அறிகிறேன். அங்கோர் பியர், கம்போடியா பியர் என உள்ளூர் வகைகளும் உண்டு. விற்பனைக்கு இருந்ததை கையில் எடுத்து பார்த்து தெரிந்துக் கொண்டேன்.

பயணங்கள் தொடரும்...

Wednesday, January 22, 2014

அங்கோர் வாட் - தங்கக் கதவு

Phimeanakas 3D வடிவமைப்பு Source: .angkor-planet.com

’கண்ணி வெடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்கள் அரசின் உதவி ஊதியம் ஏதும் ஆவண செய்யப்பட்டுள்ளதா?’


‘இல்லை. அவர்களாகவே அவர்களை கவனித்துக் கொள்ளும் நிலை தான். இந்த அங்கோர் பார்க் பகுதிகளில் கூட அவர்கள் இருக்கிறார்கள். பிறகு சந்திப்பீர்கள்.’ என்றார் ச்சேன்.

கம்போடியாவில் இருக்கும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். கண்ணி வெடிகள் மிக சுலபத்தில் புதைக்கப்பட்டுவிட்டன ஆனால் அதை அகற்றும் பணியோ உயிர் போகும் செயல். ஒரு கண்ணி வெடியை அகற்ற சராசரியாக 1200 அமேரிக்க டாலர்கள் செலவாகின்றது. கம்போடியா போன்ற ஏழை நாட்டுக்கு இது பெரும் சுமை. ஆகவே உலக நாடுகளின் நன்கொடையை கொண்டே இப்பணிகள் நடைபெறுகின்றன.

கண்ணி வெடியை அகற்றும் பணியில் அக்கி ரா Source: archcomm.arch.tamu.edu
ரியல் ஹீரோஸ் Source: archcomm.arch.tamu.edu


கம்போடிய கண்ணி வெடிகளை பற்றி பேசும் போது அக்கி ரா எனும் கம்போடிய தனி மனிதனையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். கம்போடியாவில் கண்ணி வெடி பொருட் காட்சி சாலையை ஆரம்பித்தவர் இவர். அக்கி ரா தனது பத்தாவது வயதில் கட்டாய இராணுவ அடிமையாக்கப்பட்டார். போல் போட்டின் அராஜக அட்சியில் நூற்றுக்கும் மேட்பட்ட கண்ணி வெடிகளை இவர் புதைத்திருக்கிறார். கெமர் ஆட்சி சீர் நிலைக்கு வந்த பின் அக்கி ரா கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார். ஆயிரக்கணக்கான வெடிகளை இவர் அகற்றியுள்ளார்.

கண்ணி வெடிகள் மரண எண்ணிக்கையை அதிகரிக்க புத்கைக்கப்பட்டவை அல்ல. அவை உடல் ஊன எண்ணிக்கையை அதிகரிக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டன. போர்களில் மரணங்கள் புறம் தள்ளப்படுபவை. அவை மறக்கப்படும். உடல் ஊனமோ நெடுங் கால பாதிப்பை கொடுப்பவை. அதன் தாக்கம் ஏனைய படை பலத்தையும் பாதிக்கும். போர்களில் நெடுநாள் பாதிப்புகளுக்கு கையாளப்படும் மிக மலிவான கருவி கண்ணி வெடி. செற்ப வெடி மருந்தும் சில ஆணிகளும் அதற்கு போதும் என்பது அக்கி ராவின் கருத்து.

ச்சேனுடன் பேசியபடி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். கோல் ச்சேன் ஏதாகினும் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டே இருந்தார். கூடவே கொஞ்சம் குபீர் சிரிப்புக்கான நகைச்சுவைகள். பயணிகள் கலைப்பு தெரியாமல் இருப்பதற்கான அவர் தொழில் உக்திகள் இவை.

இன்றைய நிலையில் Phimeanakas
தொடர்ந்து நாங்கள் பார்த்த இடம் Phimeanakas. இந்த புராதன கட்டிடம் பலமாகவே சிதிலமாகியுள்ளது. பிரமிட் போன்ற மூன்று அடுக்குகளோடு உச்சியின் நடுவில் ஒரு கதவு. அங்கோர் தோம் பெருங் கோட்டை பகுதியில் இதுவும் பத்தோடு பதினொன்றாக உள்ளது. சரித்திர ஆதாரத்தின் படி இக்கட்டிடம் தங்கத்தால் ஆன அரண்மனையாகும். 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராஜேந்திரவர்மனால் கட்டபட்டு பின் இரண்டாம் சூரியவர்மனால் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இன்று இந்துக் கோவிலாக Phimeanakas அழைக்கப்படுவதன் காரணம் மர்மமானதே. இறந்த அரசனின் மீது வைக்கப்பட்ட சிவலிங்கம் கூட இதற்கு காரணமாக இருக்காலாம்.


Pheimeanakas தொடர்பான கர்ண பரம்பரை கதை ஒன்றும் உள்ளது. மறைவாய் சொல்ல வேண்டிய கதை என்பதால் பெண்களும், இளையோரும், முதியோரும் 18 வயதுக்கும் குறைவானோரும் அடுத்த பத்தியை ஸ்கீப் செய்துவிட்டு படிக்கலாம். கீழே கதை.


யசோதரபுர காலத்தில் Pheimeanakas தங்கத்தால் ஆன அரண்மனையாக இருந்தது. அதில் அரசனின் ஏகபட்ட மனைவிகளும் சேடிப் பெண்களும் இருந்திருக்கிறார்கள். அரண்மனைக்குள் நுழைவதற்கு பெண்களுக்கு மட்டும் தான் உரிமை என்பது வரலாற்று உண்மை. தினமும் முதல் ஜாமத்தில் ஒன்பது தலை கொண்ட நாகம் பெண் உருவம் கொண்டு பிரதான அறையில் ஆஜராகிவிடுமாம். அந்த அறையில் அரசன் மட்டுமே நுழைய முடியும். பட்டத்து ராணியாக இருந்தாலும் தூக்க வியாதியில் கூட அந்த அறையை எட்டிப் பார்க்க கூடாது என்பது எழுதப்படாத விதி. முதல் ஜாமம் முழுக்க நாகத்தை குஷிபடுத்திவிட்டு இரண்டாம் ஜாமமே தன் ஏனைய மனைவிகளோடு அவன் குஷியாக இருக்க முடியும். ஒரு வேளை நாகம் பெண் உரு கொண்டு வரமால் போய்விட்டால் அது குறுகிய காலத்தில் அரசன் இறப்பதற்கான அறிகுறி என்பதும் நாகப் பெண்ணோடு அரசன் கூட தவறுவது நாட்டின் சுபிட்சத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதும் கெமர் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகும்.

North Khleang இன்றய நிலை
Pheimeanakas போன்ற வடிவமைப்பைக் கொண்ட மேலும் இரு கட்டிடங்கள் உள்ளன. அவை North Khleang மற்றும் South Khleang என அழைக்கப்படுகிறது. இவ்விரு கட்டிடங்களும் வெவ்வேறு கால கட்டத்திலான அரசர்களால் கட்டப்பட்டது. இக்கட்டிடங்களின் பயன்பாடு இன்னமும் சில ஆச்சரிய குறிகளோடு உள்ளது. இதன் சுவர்களில் இருக்கும் கல்வெட்டுகளின் அடிப்படையில் இவை அரச விருந்தினருக்கும், தூதுவர்களுக்கும் தங்கும் விடுதியாக பயன்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Terrace of Elephant அழகான யானை கூட்டங்களோடு
மேற்கூறிய இடங்களை பார்த்துக் கொண்டு வரும் போது நீங்கள் யானைகளின் மேல் நிற்பது போன்றதொரு மேல்தளத்தை அடைவீர்கள். அவ்விடம் Terrace of Elephant என அழைக்கப்படும். உலோகங்களாலும் யானை தந்தங்களாலும் அலங்கரிக்கப்பட்ட இடமாக இதைக் கூறுகிறார்கள். இன்று நாம் காண்பதோ வயோதிக கிழட்டு யானை சுவர்களை மட்டுமே. அரசன் நிகழ்வுகளை அமர்ந்து காணும் மேல் தளமே இந்த Terrace of Elephant. வெற்றி அடைந்த போர் வீரர்கள் கூடும் இடமாகவும், மக்களவையாகவும், மைதானமாகவும் இவ்விடம் இருந்துள்ளது.
300 மீட்டருக்கும் அதிகமாக யானை புடைப்புச் சித்திரங்கள். 
Terrace of Elephant தளத்தில் இருந்து நாம் கவனிக்கையில் எதிரே சில தனிக் கோபுரங்கள் தெரிகின்றன. அவை கோபுரங்கள் அல்ல. பலி பீடங்கள். அதையும் அரசன் கண் எதிரே கவனிக்கும் படியே அமைத்திருக்கிறார்கள். மொத்தம் 12 கோபுரங்கள் இருந்துள்ளன. தற்சமயம் அவை எண்ணிக்கையில் சற்றே குறைந்துள்ளன. அந்த தண்டனைகள் எப்படி நிறைவேற்றப்பட்டன என்பதற்கான சில குறிப்புகள் காணப்படுகின்றன. மனிதனை வதைக்கும் செயல்களை சிந்திப்பதில் மனிதன் சளைத்தவன் அல்ல. அவனது கிரியேட்டிவிட்டி அங்கே காட்டாறாக பெருக்கெடுக்கிறது.
பயணங்கள் தொடரும்...

Thursday, January 02, 2014

J.C.Daniel (மலையாள சினிமாவின் தந்தை)- ஒரு தாமத விமர்சனம்

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விட கொடுமையானது எனும் தோழர் முத்துக்குமாரின் கடித வரிகளை இங்கு நினைவுக் கூறுகிறேன். சமூக
நிலைபாடுகளால் பல முக்கிய நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு கனமும் இழந்து
வருகிறோம். வாழ்வியல் அறத்தை உடைக்கும் செயல்களை எதிர்க்கின்றோம். பிறகொரு நாள் பிழை என கருதிய செயல் சரி எனும் நிலை ஏற்படுகிறது. அப்போது அதை கொண்டாடுகிறோம். மாற்றத்தால் ஆனது தானே உலகம்.

காலத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு கலைஞனின் வாழ்க்கையை விளக்குகிறது ஜே.சி.டேனியல் எனும் திரைப்படம். மலையாளத்தில் செலுலாய்ட் என எடுக்கப்பட்டு தமிழில் ஜே.சி.டேனியல் என 'டப்' செய்யப்பட்டுள்ளது. ஜே.சி.டேனியல் ஒரு தாமத வரலாற்று திருத்தம்.

இத்தாமத திருத்தம் ஒரு மிகப் பெரும் துயர சினிமா அனுபவமாக இன்று நமக்கு கிடைத்துள்ளது. இது துயரமான சினிமா கதை அல்ல. சினிமாவை உயிருக்கு உயிராய் நேசித்த ஒரு முன்னோடியின் வாழ்க்கை மொத்தமும் துயரமாய் போன உண்மைச் சம்பவம்.

வாகை சூடவா திரைப்படத்தில் ஒரு காட்சி. ஊர் மக்கள் எம்.ஜி.ஆர் நடித்த திரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சண்டைக் காட்சியில்
எம்.ஜி.ஆர் நம்பியாரிடம் பலமான அடிகளை வாங்கிக் கொண்டிருப்பார். இக்காட்சியை பார்த்து வெகுண்டு போன பூர்வக்குடி ஆசாமி ஒருவர் தன் துப்பாக்கியில் நம்பியாரை சுடுவார். திரை குபுகுபுவென தீ பிடித்து எரியும். கலவரமடைந்த இரசிகர் கூட்டத்தை நோக்கி 'எம்.சி.ஆரை காப்பாத்திட்டேன் சாமி' என்பார் பூர்வக்குடி.

சினிமாவை கண்டு உணர்ச்சி வசப்படும் செய்திகளை இன்றும் காண்கிறோம். மதத்தை இழிவு செய்ததாய் கமலின் விஸ்வரூபம் சினிமாவுக்கு நேர்ந்தது சமீபத்ய நிகழ்வுகளில் ஒன்று.

செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஜே.சி.டேனியல் ஒரு பல் மருத்துவர். சினிமா மேல் அதீத காதல் கொண்டு சினிமா தொழில்நுட்ப கலைகளை கற்றுக் கொள்கிறார். 1920-களில் இந்தியா முழுவதும் செல்லூலாய்ட் சினிமா பிரபலமான நேரம் அது. புராணக் கதைகளை அடிப்படையாக கொண்டு பல சினிமா படங்கள் வெளியாகின்றன. உடல் மொழியை மட்டும் மையமாக கொண்டு எடுக்கப்படுவது செல்லுலாய்ட். அதில் பேச்சு இருக்காது. சுருக்கமாக 'ஊமைப் படம்' என இன்று கூறுகிறோம்.

மலையாள கரையில் சினிமா மோகம் எட்டிப் பார்க்காத தருணம். டேனியல் தனது சினிமா கனவை அங்கு விதைக்க நினைக்கிறார். புராணக் கதைகளை தவிர்த்து சமூக கதைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது டேனியலின் ஆசை. குடும்ப உறவை மையப் படுத்தி ஒரு கதை தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு விகதகுமாரன் (the lost child).

படம் எடுப்பதில் பல தடுமாற்றங்கள். தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனை போல் விடாப்பிடியாக இருக்கிறார் டேனியல். எதிர்ப்பார்த்ததை விட அதிக செலவு. சினிமா எடுக்க ஏற்கனவே சொத்துகளை
விற்று இருப்பார். செலவுகள் மேலும் மேலும் கடிக்க சொத்துகளை விற்பதை தவிற வேறு நாதி இல்லாமல் போகிறது. மனைவி ஜேனட் கணவரின் சினிமா கனவுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறார்.
முதுமையில் ஜே.சி.டேனியல் Source: Wikipedia
படத்தின் நாயகனாக டேனியல் நடிக்க. கதாநாயகியை தேடுவதில் பலத்த சிக்கல் ஏற்படுகிறது. அக்காலகட்டத்தில் சினிமாவில் ஆண்களே பெண் வேட்மிட்டு நடிக்கும் நிலை. சினிமாவுக்கு பெண்களை கொண்டுவர விலை மாதர் வீதிகளிலும் தேடி அலைந்திருக்கிறார்கள்.

தேடிபிடிக்கும் ஓர் ஆங்கிலோ இந்திய பெண் நடிகை கொடுக்கும் டாச்சரில் அப்பெண்னை வேண்டாமென ஒழித்துக்கட்டிவிட்டு வேறு ஆளை பார்க்கிறார்.
கூத்துகளில் நடிக்கும் தழ்தப்பட்ட சாதி பெண்னை தனது சினிமாவில் அறிமுகப் படுத்துகிறார் டேனியல். சரோஜினி எனும் நாயர் சாதி பெண்னின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் ரோஸம்மா எனும் பி.கே.ரோஸி.

கருத்த மேனியோடு ஜாக்கட்டும் வேட்டியுமாக ரோஸி பட பிடிப்புக்கு வருக்கிறார். கையில் ஒரு தூக்குச் சட்டி. தீண்டாமையின் கொடுமையையும் ஒடுக்கப்பட்டவர்களின் அன்றய வாழ்வியல் நிலையும் திகைக்க வைக்கின்றது. நாயர் பெண் வேடத்தில் நகையும், புடவையும், அலங்காரமும் கொண்ட தன்னை பார்த்து கண் கலங்குகிறார். ஜாதி, இனம், மதத்திற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த கலை சினிமா என டேனியல் எடுத்துக் கூறியும் ரோஸியால் தீண்டாமையின் தாழ்மை உணர்ச்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. ரோஸியின் கதாபாத்திரம் ஆதிக்கச் சாதியினரின் முகத்தில் அறையும் உண்மை.

கடும் முயற்சியில் சினிமா எடுத்து முடிக்கப்படுகிறது. 1930-ல் விகதகுமாரன் (the lost child) மலையாளத்தின் முதல் சினிமாவாக கேரளத்தில் வெளியிடப்படுகிறது.பெருமிதத்தோடு ஊர் அதிகாரிகளையும், பெரியவர்களையும் தனது சினிமாவை காட்ட அழைத்து வருகிறார் டேனியல். தான் கதாநாயகியாக நடித்த சினிமாவை பார்க்க ஓடி வருகிறாரார் ரோஸி. இவளோடு நாங்கள் படம் பார்ப்பதா என ரோஸியை விரட்டி அடிக்கிறது ஜாதி வெறி.
விகதகுமாரன் சினிமா காட்சி : Source: Wikipedia
தாழ்ந்த சாதி பெண்ணை சினிமாவில் உயர் சாதி பெண்ணாக காட்டியதால் பிரச்சனை உருவாகிறது. திரை நாசம் செய்யப்படுகிறது. ரேஸியின் வீடு தீயிட்டு கொலுத்தப்பட்டு ஊரைவிட்டு விரட்டியடிக்கப்படுகிறாள். இன்று வரை மலையாள சினிமாவின் முதல் கதாநாயகியின் முழுச் சரித்திரத்தையும் அறிவார் இல்லாத நிலை ஆனது. தனது சினிமா கனவை மலையாள கரையில்; மூட்டைக்கட்டி வைத்து தனது ஊரான அகஸ்தீஸ்வரம் திரும்புகிறார் டேனியல்.

தமிழ்நாட்டில் பல் மருத்துவராக தனது சராசரி வாழ்க்கைக்கு திரும்பும் டேனியல் பி.யு.சின்னப்பாவை சந்திக்கிறார். பல் வலியால் சிகிச்சைக்கு வரும் சின்னப்பா பின் நாட்களில் டேனியலின் பெருந் தலைவலியாகி போகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட டேனியலின் சினிமா கனவு வெகுண்டெழுகிறது.சம்பாதித்து சேர்த சொத்துகளை மூட்டைக்கட்டிக் கொண்டு சென்னை செல்கிறார். சின்னப்பாவின் ஆட்களால் ஏமாற்றப்பட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குடும்பத்தோடு சேர்கிறார்.

தொடர் சினிமா தோல்வி அவரை தளர்வடையச் செய்கிறது. அப்பாவை புரிந்துக்கொள்ள முடியாததால் பிள்ளைகளோடு இடைவெளி ஏற்படுகிறது. அப்போதும் மனைவி ஜேனட் மட்டுமே அவரோடு உறுதுணையாக இருக்கிறார். டேனியல் தன்னை தனிமை படுத்திக் கொண்டு முதுமைக் கோடுகளோடு அமைதியாகி போகிறார். ஒரு பக்கம் வாட்டும் வறுமை. மலையாள சினிமா டேனியல் எனும் தந்தையின் அடையாளம் தெரியாமல் வளர்கிறது.
அவரை அறிந்துக் கொண்டு தேடி வருகிறார் மலையாள பத்திரிக்கையாளரான
கோபாலகிருஷ்ணன். ஜே.சி.டேனியல் இன்று மலையாள சினிமாவின் தந்தையென அறியப்படுவதற்கு இவரின் பங்கு மிகுதியானதே. டேனியலின் அங்கீகாரத்திற்காக போராடுகிறார் கோபாலகிருஷ்ணன். ‘அந்த ஆளு தமிழ்நாட்டுக்காரன் தானேயா,தமிழ்நாட்டு கவர்மெண்ட் பென்சன் கொடுக்கட்டுமே’ என இன வெறியும் ஜாதி வெறியும் கேரளத்தில் பல் இளிக்கிறது.

எந்தவித அங்கீகரமும் இல்லாமல் 1975-ல் இறந்து போகிறார் ஜே.சி.டேனியல்.
மரணப் படுக்கையில் இருக்கும் டேனியல் காற்றசைவில் சுவரில் நிழலாடும் காட்சியை தனது செல்லுலாய்டாக காண்கிறார். கோபாலகிருஷ்ணனின் தொடர் போராட்டம் டேனியலின் மரணத்தின் பின் வெற்றி காண்கிறது. ஜே.சி.டேனியல் மலையாள சினிமாவின் தந்தையாக அறிவிக்கப்படுகிறார். திரைப்பட சாதனையாளர்களுக்கு ஜே.சி.டேனியல் விருது வழங்க ஆவண செய்கிறது கேரள அரசு. காலம் கடந்த அங்கீகாரமே. பாரதிக்கு நடந்த அதே கதி.

விகதகுமாரன் அழைப்பிதழ்
ஜே.சி.டேனியல் காதாபாத்திரத்தில் கச்சிதமாய் பொருந்தியுள்ளார் பிருத்வி ராஜ். ரோஸம்மாவாக நடிக்கும் பெண் மனதை நெருடிச் செல்கிறார். மலையாள சினிமாவின் முதல் கதாநாயகியென அங்கீகரிக்கப்பட்டது அவர் சந்ததியினருக்கு தெரிந்த செய்தியும் இல்லை. ஜே.சி.டேனியலின் இரண்டாவது மகன் தன் தந்தையின் ஆங்கீகாரத்தின் போது கலங்கி பேசும் உரையும் படமாக்கப்பட்டுள்ளது.

சினிமாக்காரரின் சினிமா தோல்வியை சினிமாவாக்கிய இயக்குனர் நிச்சயம் பாரட்டுதலுக்குரியவர். ஜே.சி.டேனியல் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாமல் பத்தோடு பதினொன்றாய் வந்த வேகத்தில் பெட்டிக்குள் போனது வருத்தமான செய்தியே. பிரியாணி மயக்கத்தில் இருக்கும் மக்கள் இந்த மூலிகை இரசத்தையும் கொஞ்சம் பருகி இருக்கலாம்..
பி.கு: 
1. 2000-ம் ஆண்டு வரை பிராமணர் ஒருவரால் எடுக்கப்பட்ட ‘பாலன்’ (1938) எனும் பேசும் படம் தான் மலையாளத்தின் முதல் சினிமாவாக கருதப்பட்டது.

2. ஜே.சி.டேனியல் தயாரிப்பாளரின் இன்றய நிலைய வாசிக்க இங்கே சொடுக்கவும்.