Wednesday, July 17, 2019

NOTHING TO ENVY – ORDINARY LIVES IN NORTH KOREA - இரகசிய தேசம்

I AM SUN MU எனும் ஆவணப்படம் தொடர்பாக இதற்கு முன் எழுதி இருந்தேன். சுன் மூ ஓரு வடகொரிய அகதி. தொன் கொரியாவில் தஞ்சமடையும் அவர் நெடுநாட்களுக்கு பின் பெய்ஜிங்கிற்கு தனது ஓவிய கண்காட்சியை அரகேற்ற வருகிறார். அச்சமயம் அவர் பதிவு செய்யும் வார்த்தைகளில் சில பின்வருமாறு ஒலிக்கும், “இந்த இரவுகள் எனக்கு புதுமையாக இருக்கின். நான் தப்பி ஓடும் வரையினும் இரவில் இவ்வளவு விளக்குகளின் வெளிச்சத்தைக் கண்டதில்லை. வடகொரியாவை பொறுத்தவரை இது விரையம்”. ஆவணப் படத்தில் சுன் மூ பேசியது எனக்கு கொஞ்சம் வியப்பைக் கொடுத்தது. Nothing to Envy நூலினை வாசிக்கும் போது இதற்கான விடையுடனே அந்த நூல் தொடங்குகிறது.

இரு துண்டுகளாக உடைந்துக் கிடக்கும் கொரியாவின் இரவை செயற்கைக்கோளின் துணை கொண்டு காண்போம் என்றால் தெற்கே வெளிச்சம் மிகுதியோடும், வடக்கே ஒரு சில பொட்டுகளைப் போன்ற வெளிச்சமும் தெரியும். மிகுந்திருக்கும் இருள் அந்த மக்களை கவ்வியதோடு, அவர்களை அறிந்துக்கொள்ளவும் முட்டுக்கட்டையாகிறது. அதிதீவிர கம்யூனிச பத்தர் கூட வடகொரியாவுக்கு அகதி தஞ்சம் போக தன்னை ஒப்புக் கொடுக்கமாட்டார். அந்நாட்டிற்கு தஞ்சம் போவதாக கூறிக் கொள்ளும் ஒரு சில ஊதி பெருக்கப்பட்ட செய்திகளை பகிர்ந்து மகிழ்ச்சி கொள்ள முடியும். உண்மையில் அங்கிருந்து தப்பி ஓடுவோரின் பட்டியலே மிக அதிகம். இதன் காரணமாகவே சீனாவை ஒட்டி இருக்கும் டூமன் நதி நெடுகினும் மின்சார தடுப்பு வேலிகளை அமைக்க கட்டளை இட்டுள்ளார் அந்நாட்டின் தற்போதைய ’பேரரசரான’ கிம் ஜொங் உன்.

Barbara Demick எழுதி இருக்கும் Nothing to Envy ஒரு நாவலைப் போலவே பயணிக்கிறது. ஆறு வெவ்வேறு மனிதர்களின் சுயசரிதத்தை நோன்-லீனியர் முறையில் பதிவு செய்துள்ளது. அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் நாம் அறிந்திராத இன்னொரு உலகை நமக்காக படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூல் ஆசிரியர். வடகொரியாவை கம்யூனிசத்தின் கண்ணாடி எனக் கருத்துவோருக்கு இதற்கு பிறகான வரிகள் கசக்கவே செய்யும். 

1990-களின் முற்பகுதியில் சோவியத் யூனியனின் பிளவு வடகொரியாவை பாதிக்கச் செய்தது. அதற்கு பிறகு நிகழ்த அந்நாட்டு அதிபரின் மறைவும் அங்கிருக்கும் சூழலை மோசமாக்கியது. சுதந்திரம் முதல் இன்று வரை வாரிசு அரசியலை சந்தித்து வரும் நாடு அது. தலைமைத்துவ பண்பை வாரிசு ரீதியாகக் கொண்டுச் செல்ல முடியுமா என்பது கேள்வியே. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறனும் விருப்பமும் இருக்கக்கூடும். தந்தை செய்த தொழிலையே மகனும் செய்தாக வேண்டும் என நிர்பந்திப்பதும் இயற்கை விதிக்கு எதிரானதே. 

வடகொரியாவின் முதல் அதிபரின் பெயர் கிம் இல் சுங். நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க அவரது மகனான கிம் ஜொங் இல்--லை பலமாகவே தயார் செய்தார். கிம் ஜொங் இல்-லின் கவனம் அரசியலில் இல்லை. அவர் சினிமாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். எந்த அளவுக்கான ஈடுபாடு என்றால் சினிமாவுக்காக புத்தகம் எழுதினார், தென் கொரிய இயக்குநரையும் நடிகையையும் கடத்திக் கொண்டு வந்து எக்கச்செக்கமான படங்களை எடுத்தார் அது போக டைடானிக் திரைப்படத்தில் ஈர்ப்புக் கொண்டு வடகொரியர்களுக்கு ஏற்ற டைடானிக் திரைப்பட்த்தையும் எடுத்தார். அவர் எழுதிய புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு On the Art of Cinema என வெளியீடு கண்டது. தென் கொரிய சினிமாக்காரர்களை கடத்திய பின்னணி ‘The Lovers & The Despot” எனும் ஆவணப் படமாக்கப்பட்டுள்ளது.

Nothing to Envy எனும் வாசகம் வடகொரிய துதிப்பாடலில் இருக்கும் வரிகளாகும். ’எங்கள் தேச பிதா எங்களை காப்பார், இவ்வுலகில் எதன் மீதும் எங்களுக்கு பொறாமை இல்லை’ என்பதாக அப்பாடல் அமைந்துள்ளது. இந்த வரிகளை தொடர்ந்து பாடி தங்களது அதிபரை கடவுள் நிலையில் வைக்க கற்பிக்கப்படுகிறார்கள். வட கொரியா தந்தை தேசம் என்றே குறிப்பிடப்படுகிறது. இந்த நூல் ஆசிரியர் நூற்றுக்கும் அதிகமான வட கொரிய அகதிகளை பேட்டி எடுத்திருக்கிறார். அவற்றில் குறிப்பிட தக்க வெகு சிலரின் வாழ்வியலே இதில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் வெவ்வேறு வாழ்வியல் தளங்களைக் கொண்டவர்கள். சமூக படிநிலைகளில் மேன்மையாகவும் தாழ்மையாகவும் பார்க்கப்படுபவர்கள்.

பொது வெளியில் வடகொரியா தொடர்பாக அந்நாட்டின் அரசியல் சூழல், அதன் தலைவர்கள் மற்றும் வரலாறு தொடர்பான செய்திகளை மட்டுமே வாசித்தும் கண்டும் இருப்போம். இந்நூல் அவற்றை தாண்டி அங்குள்ள மக்களை பற்றியும், அவர்களின் வாழ்வியல், காதல், பட்டினி மற்றும் தப்பி ஓடும் படலங்களையும் பேசுகிறது. வெளி உலகிற்கு வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங் மற்றும் அங்கு அழைத்துச் செல்லப்படும் அளங்கரிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களே காட்டப்பட்டுள்ளன. பியோங்யாங்கை தவிர்த்து பிற நகரங்களும் உண்டு. அப்படியாக இந்நூல் சோங்ஜின் (Chongjin) எனும் சிறு நகர வாசிகளின் கதைகளை பேசுகிறது. இந்நகரம் வடகொரியாவின் சீனா, ரசிய எல்லையில் அமைந்துள்ளது.

மீ-ரான் எனும் இளம் பெண்ணின் காதல் கதையில் இந்த நூல் தொடங்குகிறது. மீ-ரானின் அப்பா தென் பகுதிக்காக போர் புரிந்து வட பகுதியில் சிக்கிக் கொண்டவர். போருக்கு பிறகான அவர் போன்றவர்களின் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகிறது. சமூக ரீதியில் கீழ்மையாக பார்க்கப்படுகிறார்கள், அவர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் மறுக்கப்படுகிறது. இந்த சமூக தண்டனை தலைமுறை ரீதியாக கடத்தப்பட்டு, கறைபடிந்த தலைமுறையாக அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். 1990-களின் மத்தியில் வடகொரியாவில் பஞ்சம் அத்கரித்த போது மீ-ரான் பாலர் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்படுகிறார். ஊதியமற்ற ஊழியம். சுமார் 50 பிள்ளைகளுக்கு பாடம் போதித்த நிலை குறுகிய காலத்தில் 15-ஆக மாறுகிறது. பஞ்சம் காரணமாக அதிகமாக இறந்தது குழந்தைகளும், சிறார்களும் அடுத்தபடியாக முதியோர்களுமே. ஊட்டச் சத்துக் குறைபாட்டால் சிறுவர்கள் தலை பெருத்தும் உடல் மெலிந்தும் காணபட்டார்கள். பள்ளியில் கொடுக்கப்படும் ஒரு வேளை சூப் (உப்பும் + இலை + சுடுநீர்)உணவுக்காக மட்டுமே மாணவர்கள் வந்து கொண்டிருப்பதாக மீ-ரான் குறிப்பிடுகிறார். உணவின்றி தவிக்கும் பிள்ளைகள் சிரமம் கொண்டே ‘தேச பிதா எங்களை காப்பார்’ எனும் பாடலையும், எதிரி நாட்டினர் மீதான வெறுப்பினை போதிக்கும் பாடங்களையும் படித்துள்ளனர். பள்ளி வரும் அக்குழந்தைகளின் கண்கள் ‘நாங்கள் மரணத்தை நோக்கி பயணிப்பதை நீ இரசித்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா’ எனக் கேட்பதாக இருந்ததென குறிப்பிடுகிறார் மீ-ரான். உணவு போதாமை இந்த நூல் நெடுகினும் வெவ்வேறு வடிவங்களில் நமக்குக் காட்டப்படுகிறது. 

அடுத்ததாக ஜுன் - சாங்கின் வாழ்வியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் ஜுன் - சாங்கின் குடும்பம் வசிதி மிக்க குடும்பம். இரண்டாம் உலகப் போரின் போது அதிகமான கொரியர்கள் ஜப்பானுக்கு இடம் பெயர்ந்தார்கள். இன்றளவிளும் ஜப்பானில் மூன்றாவது சிறுபான்மை இனமாக கொரியர்கள் வசிக்கிறார்கள். கொரிய பிறிவினைக்குப் பின் வடகொரியாவிற்கு இடம் பெயர்ந்து வசிக்கிறது ஜுன் - சாங்கின் குடும்பம். ஜுன் சாங்கின் முன்னோர் அக்காலகட்டத்தில் வடகொரியாவுக்கு போக காரணம் என்ன? இரண்டாம் உலகப் போர் முடிந்த நிலையில் ஜப்பான் பலம் இழந்த நாடாக இருந்தது. நாடு திருப்பும் அவர்கள் வட கொரியாவுக்கு போக நேர்கிறது. பிறிவினைக்கு பின் தென் கொரியா வட கொரியாவை விட பின் தங்கிய நாடாகவே இருந்துள்ளது என்பதையும் இங்கு பதிவு செய்துள்ளார்கள். ஜுன் - சாங் பியோங்யாங்கில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கிறார். அவர் அறிவியலாளராக நாட்டிற்கு சேவகம் செய்ய வேண்டும் என்பது குடும்பத்தின் விருப்பம். பள்ளி பருவத்தின் போதே ஜுன் - சாங்கிற்கும் மீ- ரானுக்கும் காதல் மலர்கிறது. அந்தக் காதலில் அவர்கள் தமது நாட்டின் நிலை பற்றியோ அல்லது அரசியல் பார்வையையோ பகிர்ந்துக் கொண்டதில்லை. அதன் பின் விளைவுக்கான பயமே அப்படி பேசமல் இருக்கச் செய்துள்ளது. மீ-ரான் மற்றும் ஜுன் சாங் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் தப்பி ஓடி அகதி தஞ்சம் கோறுகிறார்கள். மீ-ரான் ஜுன் சாங்கிடம் சொல்லாமலே முதலில் ஓடிவிடுகிறார். இவர்களின் காதல் எப்படியாக நிறைவடைந்தது என்பதை புத்தகம் வாசிப்போர் அறிய முடியும். 

திருமதி சோங் மற்றும் அவருடைய மகள் ஹொக்-ஹீயின் சுய ஒப்புதல் மற்றுமொரு தளத்தை பதிவு செய்கிறது. சோங் தொழிலாளர் கட்சியின் அதி தீவிர நம்பிக்கையாளராவார். வடகொரியர்களின் வீடுகளில் கிம் அதிபர்களின் படங்களை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் காலையில் எழுந்ததும் அச்சுவர் படங்களை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை மக்கள் எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்பதை பறிசோதிக்க ஒரு தனி இலாக்கா சோதனை நடத்தும். திருமதி சோங் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். அதே வேளை தன் குடில் வாசிகளின் தலைவியாகவும் இருக்கிறார். காலையில் எழுந்து சுவர் படங்களை சுத்தம் செய்வது முதல் இரவு படுக்கும் வரை ஓயாது பணி செய்கிறார். இவர் ஊடாக சொல்லப்படும் செய்திகள் பல. ஹொக்-ஹீ க்கு அவர் செய்து வைக்கும் திருமணம், திருமண முறை, அதற்கான செலவு, குளிர் காலத்தில் நிகழும் ’கிம்-சீ’ ஊறுகாய் திருட்டு, தினமும் தொழிலாளர்களின் முன்னிலையில் ஒவ்வொருவராக தன்னை சுய விமர்சனம் செய்து தன்னிடம் குறை இருப்பதாக முடிவுரை செய்வது, வார இறுதிகளில் தொலை தூர காடுகளில் உணவிற்காக குறுத்துகளை சேகரிப்பது, மனித மலங்களை பட்டியல் முறையில் அவர்கள் சுத்திகரிப்பு நிலையம் கொண்டுச் செல்வது என நேரடி விளக்கங்கள் நம் மனதை பிசையச் செய்கிறது. 

1990-களின் மத்தியில் வடகொரியாவில் பஞ்சம் அதிகரித்த போது தொழிற்சாலைகள் மூடபட்டன, விவசாயமும் பாதிப்படைந்தது. உணவு பற்றாக் குறையை மறைக்க அதிக உணவு சாப்பிட்டால் தொப்பை விழும் என்பதை போன்ற விளம்பரப் படங்கள் நாடு முழுக்க எழுப்பப்பட்டது. மக்களுக்கான உணவு விநியோகம் குறைக்கப்பட்டது. அதே வேளை, தென் கொரியர்கள் அபரிமித வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் வகனம் வைத்திருக்கிறார்கள் எனும் செவி வழிச் செய்தியை ஆரம்பத்தில் நம்ப மறுத்தனர் வட கொரிய மக்கள். பஞ்சத்தின் போது கள்ளச் சந்தை விரிவடைந்தது. சீனாவின் வழி தனியங்களும் தொழில்நுட்ப பொருட்களும் வட கொரியாவின் எல்லை ஓர கள்ளச் சந்தையில் நுழைந்தன. அப்படியாக தென் கொரிய வானொலியையும் அவர்கள் கேட்க ஆரம்பிக்கிறார்கள். கொஞ்சம் வசதி இருந்தவர்களுக்கு தொலைக்காட்சி, சீடி மற்றும் டிவீடி பார்க்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. இது மக்களிடையே அதிர்வை உண்டாக்கியது. வடகொரியாவில் இது தேச துரோகத்திற்கு ஒப்பானதாகும். பிடிபட்டவர்களை சிறை மற்றும் லேபர் கேம்-களில் அடைத்தார்கள். 

பஞ்ச காலத்தில் ஏராளமான சிறார்கள் கைவிடப்பட்டார்கள். அவர்களின் சாவல்களை கிம்- ஹயுக் எனும் சிறுவனின் வழி நமக்கு சொல்லப்படுகிறது. அது போக டாக்டர் கிம் எனும் பெண்மணியின் வழி நிபுணர்களின் வாழ்வும் எந்த அளவுக்கு வடகொரியாவில் பாதிப்படைந்தது என்பதையும் விளக்குகிறது இந்நூல். 

பெரும்பான்மையான வடகொரியர்களின் தப்பிக்கும் படலம் சீனாவின் வழியே நிகழ்ந்துள்ளது. டூமன் நதியை கடந்து அகதிகளாக சீனாவில் நுழைகிறார்கள், முயற்சி எடுத்து அதில் சிலர் தென் கொரியாவை சென்றடைகிறார்கள். இந்நிகழ்வுகள் எளிமையான செயல்பாடக அமைவதில்லை. சீனாவிற்குள் நுழையும் வடகொரியர்கள் இங்குள்ள தென்கொரிய தூதரகத்தில் அகதி தஞ்சம் கேற முடியாது எனும் சட்டம் அமலில் உள்ளது. ஆக அவர்கள் இங்கிருந்து தரை வழி பயணமாக மங்கோலியா சென்று அங்கிருக்கும் தென்கொரிய தூதரகத்தை அடைகிறார்கள். இது ஆபத்தான வழியாகவும் அறியப்படுகிறது. காரணம் அவர்கள் ‘கோபி’ பாலைவனத்தை கடந்து போக வேண்டும். அப்படி பயணம் மேற்கொள்ளும் பலர் இறந்தும் போகிறார்கள். அடுத்ததாக குன்மிங்கில் இருந்து மியன்மார் சென்று தாய்லாந்தை அடைந்து அங்கிருந்து தென் கொரியா செல்கிறார்கள். இதற்கான செலவு மிக அதிகம். பணம் இல்லாத வடகொரிய அகதிகள் எப்படியாக இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள்? அங்கும் ஒரு மோசடி நிகழ்கிறது.

தென்கொரியாவை சென்றடையும் வடகொரியர்களுக்கு ஒரு சில மாதங்களுக்கு மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பின் அவர்களின் மறுவாழ்விற்காக 20-ஆயிரம் அமேரிக்க டாலர்கள் வரையினும் பணம் கொடுக்கப்படுகிறது. இந்த அமேரிக்க டாலர்களை குறி வைத்து ஒரு சில மனித கடத்தல் குழுக்கள் இயங்கி வருகின்றன. சீனாவில் நுழைவது முதல் சீயோல் தலைநகரை அடைவது வரை இந்த கடத்தல் குழுக்கள் திறப்பட செயல்படும். அதற்கு கைமாறாக மறுவாழ்வு தொகையில் பெரும் பகுதியை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்தக் கடத்தல் குழுக்களை தவிர்த்து எம்.எல்.எம் செய்யும் ஆசாமிகளும் ஆசை வார்த்தைகளைக் கூறி பணம் பறித்துவிடுகிறார்கள். அரசினால் பகிர்ந்து கொடுக்கப்படும் நிலையில் இருந்து பண நிர்வாக வாழ்க்கை முறைக்கு மாறுவது மறுவாழ்வை மேற்கொள்ளும் கொரியர்களுக்கு சிக்கலாக அமைகிறது.

திசைகளில் மாறுபட்டிருந்தாலும் வடக்கில் இருந்து வருபவர்களும் கொரியர்களே. தெற்கில் இருப்பவர்களும் கொரியர்களே. இருந்தும் சமூக அமைப்பில் அவர்களின் ஏற்பு எத்தகையது? இரு நிலப் பகுதியினருக்குமான கால இடைவெளி சுமார் 60 ஆண்டுகளென கணக்கிடுகிறார்கள். மொழி, காலாச்சாரம், பண்பாடு என சமூக செயல்படுகளின் முக்கிய அம்சங்களில் இரு கொரியர்களுக்கும் அதீத மாறுபாடுகள் ஏற்பட்டுவிட்டது. தன்னை முழு தென் கொரியனாக கருதும் பலராலும் புதியவரை முழுமையாக ஏற்க முடியாத சிக்கலும் அங்கே உண்டாகிவிட்டது. அரசியல், பொருளாதரம், சமூகம் என பல நிலைகளிலும் புதிய குடியேற்றம் கண்டவர்கள் சிக்கலை சந்தித்ததை பதிவு செய்கிறார்கள்.

தற்போதைய நிலையில் டூமன் நதி படுகை நெடுகினும் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நூல்கொரிய பிறிவினை முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளை பதிவு செய்து 2009-ன் இறுதியில் வெளியீடு கண்டது. கிம் ஜொங் இல் மரணித்த ஆண்டு 2011. இந்நூலை எழுதும் சமயத்தில் வடகொரிய ’அரியனை’ பிரச்சனையையும் பதிவு செய்கிறார் இந்நூல் ஆசிரியர். கிம் ஜோங் உன் அடுத்த வாரிசாக தயாராகி கொண்டிருந்த நிலை ஒரு இடத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு கிம் ஜொங் இல் சிறுநீரக பாதிப்பால் கடுமையாக உடல் நலம் குன்றினார். 

ஐக்கிய நாட்டு சபை முக்கிய எல்லை பகுதிகளில் தனது செயல்பாடுகளை அமல்படுத்த விண்ணப்பம் வைத்தது. சீனா அதற்கான அனுமதியை மறுத்தது. வட கொரிய அகதிகளுக்காக தன்னார்வளர்களாக செயல்பட்ட சில கிருஸ்துவ மிஸனரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வீடமைப்பு பகுதிகளில் நிறுவப்பட்ட தற்காலிக தேவாலயங்களும் மூடப்பட்டன. அதற்கு எதிர்மறையாக வடகொரிய இராணுவத்தினர் சீன எல்லை பகுதிகளில் அனுமதிக்கப்பட்டனர். ஒற்றாடவும் வடகொரியர்களை கைது செய்து கொண்டுச் செல்லவும் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த நூல் வாசிக்க மிக இலகுவாகவே அமைந்துள்ளது. விவாத பொருளுக்கான மிகப் பெரும் வெளியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

-முற்றும்-