Friday, December 28, 2018

NO SEX PLEASE, WE'RE JAPANESE - ஆவணப் படம்



NO SEX PLEASE, WE'RE JAPANESE எனும் ஆவணப்படம் படம் பார்த்தேன். 2013-ஆம் ஆண்டு இந்த டாக்குமெண்டிரியைப் பதிவு செய்திருக்கிறார்கள். கால தாமதமாக பார்த்திருப்பினும் தற்போதய ஜப்பானிய சூழ்நிலையில் இது இன்னமும் பேசு பொருளாகவே உள்ளது. ஜப்பானில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கடும் சரிவை எதிர் நோக்கிச் செல்வதையும், அதன் காரணங்களையும் எதிர்கால விளைவுகளையும் இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் The Mystery of Why Japanese People Are Having So Few Babies மற்றும் No Babies In Japan எனும் தலைப்பிலும் சில ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஒரு சிறு நகரைக் காண்பிக்கிறார்கள். சுமார் 1 லட்சம் மக்கள் வாழ்ந்த பகுதி அது. 29 பள்ளிக்கூடங்கள் அங்கிருந்துள்ளன. தற்சமயம் ஒரே ஒரு பள்ளிக்கூடத்தை மட்டும் ஒப்புக்கு ஓட்டிக் கொண்டுள்ளார்கள். அங்கே குழந்தைகளைக் காண்பது அரிதாகிவிட்டது. குழந்தைகளுக்கான கோளிக்கை மையங்கள் கூட வெகு நாட்களாக மூடப்பட்டுவிட்டன. இன்னும் சில நாட்களில் அங்கிருக்கும் புதர்கள் அவற்றை மொத்தமாக சாப்பிட்டுவிடும் நிலையைக் காண முடிகிறது.

ஒட்டு மொத்த நகரமும் பேர் அமைதியாக உள்ளது. அந்த நகரின் மருத்துவமனையைக் காண்பிக்கிறார்கள். குழந்தைகளை பிரசவிக்கும் பகுதி வெகுநாட்களாக பயன்படுத்தப்படாமல் பழைய பொருட்களை சேகரிக்கும் கிடங்கு போல் உள்ளது.

100 வயதைக் கடந்த ஜப்பானியர்கள் மட்டும் ஏறக்குறைய 50000க்கும் அதிமானோர் அந்நாட்டில் உள்ளனர். நாளுக்கு நாள் அங்கு சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டும். தேசத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும் உழைத்து ஓய்ந்த அவர்களின் நலனைக் காக்கும் பொறுப்பு 
மறைமுகமாக இளய தலைமுறையிடம் விடப்படுகிறது. அதாவது ஜனத்தொகையின் எண்ணிக்கைக் குறைவதால் வரி வசூல் குறையும். குறைந்துவரும் வரியைக் கொண்டு அரிகரித்துவரும் பணி ஓய்வு பெற்ற குடிமக்களின் நலன் காக்க வேண்டும். குருவித் தலையில் வைக்கப்படும் பறை தான் இந்தச் சூழ்நிலை.

உலகில் அதிகமான முதியவர்கள் சிறையில் இருக்கும் நாடும் ஜப்பான் தான். சிறைக் கைதிகளில் 20% விழுக்காட்டினர் 60 வயதைக் கடந்தவர்கள். அதிக வயதான கைதியின் வயது 87. குடித்துவிட்டுப் பணம் செலுத்தாமல் போனது, சிறுநீர் கழித்தது, சண்டைப் போட்டது, குப்பைப் போட்டது என பல குற்றங்களின் பேரில் உள்ளே வந்தவர்கள். நெடுநேரம் உழைத்த மக்கள். தனிமைக் கொண்ட முதுமை வாழ்க்கை அவர்களைப் போர் அடிக்கச் செய்துள்ளது. விடுதலையாகும் சில வாரங்களில் மீண்டும் குற்றம் புரிந்து சிறை வந்துவிடுகிறார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் வெகு விரைவாக முன்னேரிய நாடு ஜப்பான். கட்டொழுங்கும் உழைப்பும் ஜப்பானின் அடையாளமாக அமைந்தது. பொருளாதார நிலையில் மூன்றாம் இடத்தை எட்டிப் பிடித்தப் பின் அதன் நிலை நிலுவைக் கண்டது. காரணங்களில் ஒன்று பிறப்பின் விகிதாச்சாரம். இன்னும் 40 ஆண்டுகளில் ஜப்பானியர்களின் ஜனத்தொகை மூன்றில் ஒருப் பகுதியாக குறையுமென கணக்கிடுகிறார்கள்.

தோக்கியோ நகரில் இரு இளைஞர்கள், கசிந்துருகி காதலிக்கிறார்கள். அவர்களுடைய காதலிகள் பதுமைகளைப் போல் இருப்பதாகச் சொல்கிறார்கள். பள்ளி முடிந்ததும் வேளிக்கு வெளியே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் அந்தக் காதலிகள் நிஜப் பெண்கள் அல்ல. நிண்தெண்டோ விளையாட்டுக் கருவியில் இருக்கும் பொம்மைகள். டிஜிட்டல் காதலர்கள் டி.ராஜெந்திரைப் போல் நாயகியின் கையைப் பிடிக்காமலேயே காதலிக்கிறார்கள்.

இப்படி இவர்கள் காதலைத் தேடவும், காதலிக்கவும் 16-17 மாடியில் ஒரு கட்டிடத்தைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள். இளைஞர்களை கொஞ்சிக் கண் சிமிட்டி ஆயிரக் கணக்கான அனிமே காதலிகள் தினமும் அவர்களை வரவேற்கிறார்கள். அந்தக் கட்டிடம் தினம் தினம் திருவிழாக் கோளம் காண்கிறது.

ஜப்பானிய பணியிட கலாச்சாரத்தைப் பேசும் போது தனது வேலையிடத்திற்கு ஒரு பணியாளன் கொடுக்க வேண்டிய அற்பணிப்புகளைக் குறிப்பிடுகிறார்கள். உடல் நலம் இல்லை என மருத்துவ விடுப்பு எடுப்பவர்கள் மறுநாள் வேலைக்கு வந்து சக பணியாளர்களுக்கு சிரமம் கொடுத்ததற்காக அனைவர் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்க வேண்டும். வருடாந்திர ஓய்வான 10 நாட்களில் பாதியைக் கூட அவர்கள் முடிப்பதில்லை. வேலை நேரம் முடிந்த பின்னர் பணியிட அற்பணிப்பு எனும் பெயரில் அதிக நேரம் உழைப்பது அவர்களின் கலாச்சாரத்தில் ஊன்றிவிட்டது. நமது கலாச்சாரத்தில் கூறிக் கொள்ளும் 'life' அங்கில்லை. இதில் காதல், கல்யாணம், குழந்தை என்பதெல்லாம் கூடுதல் சுமை என்பதாகவே பார்க்கப்படுகிறது.

ஜப்பானியர்களின் ஆண் பெண் உறவு அதன் இனக் கவர்ச்சியை இழந்துக் கொண்டுள்ளது. பணிச் சுமையும், பொருளாதார சுமையும் இன்றய இந்நிலைக்கு பெரும் பங்காற்றியுள்ளன. காதல், உரசல், முத்தம் எல்லாம் சுத்த பேத்தலான விசயமாகிவிட்டது. இலகுவாக கிடைக்கும் பாலியல் சேவைகளும் ஜப்பானிய குழந்தைகள் பிறப்பின் வீழ்ச்சிக்கான காரணமாக முன் வைக்கப்படுகிறது. ஜப்பானிய அரசு இன்னமும் தீர்வு காணாத சாமூதாயச் சிக்கலாக இந்நிலை அங்கே உள்ளது.

ஜப்பானுக்கு நேர் மாறான சமுதாயச் சிக்கல் உள்ள நாட்டில் இந்த ஆவணப்படம் முடிவடைகிறது.

Thursday, December 27, 2018

ஓநாய் குலச்சின்னம்/ Wolf Totem/ 狼图腾 (Láng Túténg)


இந்த நாவலை தமிழில் கொண்டு வர முயற்சி எடுத்துக் கொண்ட இயக்குநர் வெற்றி மாறனுக்கு நன்றி. இந்த நூலுக்காகவே ‘அதிர்வு’ பதிப்பகத்தை தொடங்கி இருக்கிறார். இலகுவான நடையில் மொழிபெயர்ப்பு செய்திருக்கும் ஆசிரியர் சி.மோமனின் பங்கும் மகத்தானது.

சமீபத்தில் வாசித்த நூல்களில் அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்ட நூல் இது. இதன் சாரம்சம் என்னை வெகுவாகவே கவர்ந்தது. இந்த நூலை வாசிக்க ஆரம்பிப்பதற்கு சில வாரங்களுக்கு முன் இன்னர் மங்கோலியா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிலம் சார்ந்த நேரடி அனுபவம் இருந்ததால் இந்த நாவலை மனதிற்கு நேருக்கமாகவே வைத்து வாசிக்க முடிந்தது.

இன்னர் மங்கோலியா சீனாவின் மாநிலங்களில் ஒன்று. மங்கோலியாவை ஒட்டி இருக்கும் பிரதேசம். சீனத்தில் இதை ‘நெய் மொங்கு’ எனக் குறிப்பிடுகிறார்கள். Grassland அல்லது மேய்ச்சல் நிலப் பகுதி என அழைக்கப்பட்ட இன்னர் மங்கோலியா தற்சயம் பல மாற்றங்களை அடைந்து ஓநாய் குலச்சின்னத்தில் காணப்படுவதை விட பல காத தூரம் எட்டி நிற்கிறது. மேய்சல் நிலப்பகுதி கொஞ்சமாகவே இருக்கிறது. ஏகப்பட்ட நிலப்பகுதிகள் பாலைவன கதியை அடைந்துக் கொண்டுள்ளன. நாவில் தேனூரும் ஆட்டிறைச்சியும் பால் சார்ந்த வைன் மற்றும் மது வகைகளும் இலகுவாக கிடைக்கின்றன.

ஜெங்கிஸ்கானின் வாழ்க்கை வரலாற்றை வாசிப்பவர்கள், பண்டைய மங்கோலியர்களின் வாழ்க்கை முறை ஓநாய்களின் கூட்டு வாழ்வியலை ஒத்த்தாக இருப்பதை அறிய முடியும். ஜெங்கிஸ்கான் ஓர் ஓநாயை போன்ற புத்தி கூர்மை மிக்கவராக இருந்ததால் உலகளவில் பிரசித்தி பெற்றார். அவரது இராணுவ கட்டமைப்புகள் ஓநாயின் வேட்டை முறையை ஒத்தது.

பெய்ஜிங்கின் குறுகிய இளவேனிற் காலம் முடியும் தருனம் அடிக்கடி மணற் புயல் எற்படும். பார்க்கும் இடம் எங்கும் புகை மூட்டத்தைப் போல் இருக்கும். அவை மணற் துகள்கள். கட்டிடங்களின் சுவர்களில் அப்பிக் கொண்டும், தரை மட்டும் சாலைகளில் உதிர்ந்தும் கிடக்கும். இந்த மணற் புயலின் காரணம் உள் மங்கோலியாவில் ஏற்பட்டிருக்கும் இயற்கை மாற்றம் தான். அதன் காரணங்களை இந்த நூலில் நீங்கள் வாசிக்க முடியும்.

சீனாவில் சுமார் 54 சிறுபான்மை இன மக்கள் வசிக்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 5% மட்டும் தான். அந்த 5%-இல் மேய்ச்சல் நிலமான இன்னர் மங்கோலியாவில் வாழும் மங்கோல் மக்களும் அடங்குவர். இவர்கள் டென்ஞ்சர் எனும் கடவுளை வணங்குகிறார்கள். ஓநாயை அந்த கடவுளின் வடிவமாகவும் தமது குலச்சின்னமாகவும் பார்க்கிறார்கள். சின்ஜியாங் சென்ற போது கசாக் சிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதியைக் கண்டேன். அதிகமாக கழுகு சார்ந்த சிலை, ஓவியம் என அவர்களின் வசிப்ப்பிடம் இருந்தது. கசாக் இன மக்கள் கழுகை தமது குலச்சின்னமாக கருதுகிறார்கள். கசாக்ஸ்தான் கொடியில் கழுகு சின்னத்தைக் காண முடியும். அது நிற்க.

ஓநாய் குலச்சின்னம் சுயசரிதமும் கொஞ்சம் புனைவும் கலந்த நாவல். ஜியாங் ரோங் எழுதிய நாற்குறிப்புகள் இதன் கதை வடிவமாக அமைந்துள்ளது. மா வோவின் காலாச்சார புரட்சியின் போது பல்கலைகழக மாணவர்கள் கிராமப்புரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சுமார் மூன்று ஆண்டுகள் அவர்கள் அங்கு தங்கி அந்த நில மக்களோடு வாழ வேண்டும். இளைய தலைமுறையினர் முதலாலித்துவ மனப்பான்மையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவும், கம்யூனிச சித்தாந்த்தின் அடைப்படைக் கூறுகளை கிராம மக்களிடம் சமர்பிக்கவும் அவர்கள் செயல்பட வேண்டும்.

ஜென் மற்றும் அவனது நண்பர்களும் உள் மங்கோலியா மேய்சல் நிலப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த மாணவர்கள் அனைவரும் பெய்ஜிங் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஹன் இனத்தவர்கள். மங்கோல் மக்களோடு முற்றிலும் மாறுபட்ட வாழ்வியலும் கலாச்சார பிண்ணனியும் கொண்டவர்கள். அந்த மூன்று ஆண்டுகளில் மொங்கோல் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் இந்த மாணவர்கள் கற்றுக் கொண்டாக வேண்டும்.

உள் மங்கோலியாவின் ஓலான்புலக் மேய்சல் நிலத்தில் கதைக் களம் நகர்கிறது. பீடிகை ஏதும் இன்றி முதல் அத்தியாயத்திலேயே ஓநாய்கள் நம்மை ஆக்கிரமித்துவிடுகின்றன.
குதிரை பயணத்தின் போது தனியாக மாட்டிக் கொள்ளும் ஜென் ஓநாய்களிடம் இருந்து தப்பிப்பது முதல் கதை தொடங்குகிறது. கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்ட மாணவனாக இருப்பதால் பில்ஜி என்னும் முதியவருக்கு ஜென்னை மிகவும் பிடித்துப் போகிறது. இந்த பில்ஜி கதாபாத்திரம் மேய்சல் நிலத்தின் ஞானியாகவே காட்டப்படுகிறார். அறிவு முதிர்ச்சியும், இயற்கைக்கு எதிரான தீர்வுகளின் முன் அனுமானத்தையும் கச்சிதமாக சொல்லிவிடுகிறார்.

பனி காலத்தின் போது ஓநாய்கள் வேட்டையாடுவதைக் காட்ட ஜென்னை அழைத்துக் கொண்டு மலையுச்சிக்குப் போகிறார் பில்ஜி. சிறு வயது முதல் ஓநாய்களை தீய சக்தியாக பார்த்து வந்த ஜென் தனது உரையாடலில் பின் வருமாறு கூறுகிறான்:

“இந்த மான்கள் மிகவும் பரிதாபத்துக்குரிய ஜீவன்கள்; ஓநாய்கள் தீயவை, அப்பாவிகளை கொல்பவை.வாழ்வின் பெறுமதியை உணராதவை. அவை பிடிக்கப்படுவதும், தோல் உரிக்கப்படுவதும் தப்பே இல்லை.”

ஜென்னை முறைத்துப் பார்த்துவிட்டு முதியவர் கோபத்துடன் சொன்னார்: “அப்படியானால் புல்லுக்கென்று உயிர் கிடையாது என்று அர்த்தமா? மேய்ச்சல் நிலம் என்பது ஓர் உயிர் இல்லையா? இங்கு, புல்லும் மேய்ய்சல் நிலமும் தான் உயிர், பெரிய உயிர். மற்றவை சிறிய உயிர்கள். அவை உயிர் வாழ்வதற்குப் பெரிய உயிரையே சார்ந்திருக்கின்றன. ஓநாய்களும் மனிதர்களும்கூட சிறிய உயிர்கள்தான். புல்லைத் தின்னும் ஜீவன்கள் இறைச்சி உண்ணும் ஜீவன்களை விட மோசமானவை. ……. நீ கொலை செய்வது பற்றிப் பேச விரும்பினால், புல் வெட்டும் எந்த ஒரு கருவியையும் விட மான்களே அதிக புல்லைக் கொல்கின்றன….. மான்கள் நிகழ்த்தும் ஊறுகள், ஓநாய்கள் நிகழ்த்தும் ஊறுகளை விட மிக மிக அதிகம். மஞ்சள் மான்கள் மிக பயங்கரமானவை; இங்கு வசிக்கும் மக்களுடைய வாழ்க்கையை அவற்றால் அழித்துவிட முடியும்”.

பனி கால வேட்டையில் ஓநாய்கள் ஏகபட்ட மான்களை வேட்டையாடுகின்றன. மிக தந்திரமான வேடை. அவற்றின் கூட்டு முயற்சியை இந்த வேட்டை மற்றுமின்றி பல இடங்களில் மிக நேர்த்தியாக விளக்கி இருப்பார்கள். மான்களை சுற்றிவளைத்து ஒரு பனி குழிக்குள் தள்ளிவிடுகின்றன ஓநாய்கள்.

தேவையான அளவுக்குச் சாப்பிட்டுவிட்டு அதிகபடியான மான்களை மீதம் வைக்கின்றன. பனிகாலம் முடியும் போது குட்டிகளை ஈன்று அழுகிப் போக தொடங்கி இருக்கும் வேட்டை இறைச்சிகளை உண்ண மீண்டும் அவ்விடம் வருவது ஓநாய்களின் வழக்கம்.

ஓநாய்கள் வேட்டையாடியதில் சிலவற்றை அப்பகுதி வாழ் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். மான் இறைச்சி, தோல் என பாகுபடுத்தி சேமிப்புக் கிடங்கில் கொடுத்து புள்ளிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஒநாய்கள் சாப்பிடுவதற்கு போதுமான / அவற்றின் வேட்டை களவாடபட்டுள்ளது என்பதை அவை அறியாத அளவுக்கு மட்டுமே எடுக்கிறார்கள்.

சேமிப்புக் கிடங்கில் மான் தோலை காணும் கும்பல் வேட்டைக் குழியை அறிந்துக் கொண்டு ஓநாய்களின் ஒட்டு மொத்த மான் வேட்டையையும் எடுத்துக் கொள்கிறார்கள். சில காலத்திற்குப் பின் அவ்விடம் வரும் ஓநாய்கள் சேகரித்து வைத்த உணவு இல்லாமல் போனதை கண்டு பெரும் கோபம் அடைகின்றன.

உணவுக்கு மீண்டும் ஒரு வேட்டைக்கு ஆயத்தமாகின்றன. ஓர் இரவில் சீன இராணுவத்திற்காக வளர்க்கப்படும் இராணுவக் குதிரைகளை வேட்டையாடி தீர்க்கின்றன. ஓநாய்களுக்கும் குதிரைகளுக்கும் நடக்கும் இந்த போரை வாசிக்கையில் பிரமிப்பே மிஞ்சுகிறது. தனது குரூரத்தை தீர்த்துக் கொள்ள தேற்றுப் போகாமல் இருக்க வேண்டும், அதற்காக தற்கொலைக்கும் துணிகின்றன ஓநாய்கள். குதிரைகள் மூர்கமாக உதைக்கும் போது சில ஓநாய்கள் அவற்றின் வயிற்றின் அடியில் கவ்வி கிழித்து அவை விழும் போது சேர்ந்து அமிழ்ந்து மடிகின்றன. சுமார் 2000க்கும் அதிகமான குதிரைகளைக் கொன்று குவிக்கின்றன.

இராணுவக் குதிரைகள் வேட்டையாடப் பட்டதில் கோபமடையும் சீன அரசு ஓலான்புலாக்கில் இருக்கும் அத்தனை ஓநாய்களையும் அழித்தொழிக்கச் சொல்கிறது. அதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமிக்கிறது.

இந்தக் கதை உணவுச் சங்கிலியின் பாதிப்பை மட்டும் பேசவில்லை. தேசியமயமாக்களில் சிறுபான்மையின் வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் மண் எப்படியெல்லாம் பாதிப்படைந்தது என்பதையும் விளக்குகிறது.
மேய்ச்சல் நிலத்தின் புல் வெளியை ஆடுகள், குதிரைகள், மான்கள் மர்மோட்டு எனும் பெரிய எலி வகைகளும் சூரையாடுகின்றன. புல் மேயும் இவ்விலங்குகளை ஓநாய்களும், மனிதர்களும் வேட்டையாடுகிறார்கள். இன்றள்விலும் மங்கோலிய பகுதிகளில் மனிதர்களை விட விலங்குகளே அதிகம். அப்படியான சூழலில் ஓநாய்கள் அழித்தொழிக்கப்பட்டது அந்த நிலத்தை எந்த அளவிற்குப் பாதித்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

பில்ஜி எனும் முதியவரின் பேச்சின் ஈர்ப்பில் ஜென் ஓநாய்களின் மீது அதீத காதல் கொள்கிறான். ஒரு ஓநாய் குட்டியை வளர்த்துப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் மேலிடுகிறது. சிரமப்பட்டு ஒரு ஓநாய்க் குட்டியைப் பிடித்துக் கொண்டு வந்து வளர்க்கிறான். ஓநாயை தெய்வச் சின்னமாகப் பார்க்கும் அப்பகுதி மக்களும் முதியவரும் அதற்கு எதிராக இருக்கிறார்கள்.

ஓநாய்க் குட்டியின் வளர்ச்சியை மிக நேர்த்தியான குறிப்புகளாக நமக்கு விளக்குகிறது இந்த நூல். ஓநாய்கள் மற்றும் மேய்ச்சல் நிலம் பற்றிய ஒரு களஞ்சியமாக இந்த நூலை காண முடிகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இன்னர் மங்கோலியா போகும் ஜென் சென்னின் பார்வையில் அந்த நிலம் வேறு ஒரு கோணத்தில் பார்க்கப் படுகிறது. தனது ஒநாய்க் குட்டியை கண்டெடுத்த இடத்தின் தனது நூலின் முதல் அத்தியாயத்தை சமர்பித்துவிட்டு வருகிறார். 2004-ஆம் ஆண்டு பருவக் காற்றின் வீச்சு பெய்ஜிங்கில் கடுமையான மணற் புயலை ஏற்படுத்துகிறது.

சீனாவில் அதிகமாக விற்பனையான நூல் மா வோவின் சிகப்பு நூல் ‘ரெட் புக்’. அதற்கு அடுத்தபடியாக இருப்பது ‘லாங் தூதெங்’ எனப்படும் இந்த ஓநாய் குலச்சின்னம். முரண் என்னவென்றால் ‘ரெட் புக்’ பேசும் கம்பூனிச கோட்பாடுகளை ஓநாய் குலச்சின்னம் மறுத்தும் எதிர்த்தும் பேசுகிறது.

இந்த நாவல் நுற்பமான வரலாற்று ஆவணத்தை 617 பக்கங்களுக்கு பதிவு செய்து வைக்கிறது. நிச்சயமாக 2 மணி நேர திரைப்படத்தில் சொல்லிவிட முடியாது. இருந்தும் படமாக எடுத்து இதன் அழகியலை சிதைத்து வைத்திருக்கிறார்கள். கதையை மாற்றி இருக்கிறார்கள். நிறைய விசயங்களை பேசாமலேயே கடந்துச் சென்றுள்ளார்கள். அதிருப்தியே மிச்சம். நாவலாக வாசிக்க நினைப்பவர்கள் முதலில் இதை திரைப்படமாக பார்க்காமல் இருப்பதே நல்லது.

ஓநாய் குலச்சின்னம் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாவலை வாசித்து முடிக்கும் போது நீச்சயமாக நீங்கள் ஓநாய்களை காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். மாறுபட்ட வாசிப்பு அனுபவமாகவும் இருக்கும்.