Wednesday, March 06, 2019

மீகாமன் செங் ஹோவும் காணாமல் போன சுல்தானும்

Source of picture: cimsec.org
சீனாவின் நான்ஜிங் நகரில் பண்டைய சுல்தான் ஒருவரின் கல்லறை உள்ளது. தற்சமயம் அவ்விடம் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. சுல்தான் கர்ணா/ அப்துல் மஜிட் ஹசான் (Abdul Majid Hassan) எனும் ’போனி’ நாட்டு சுல்தானின் கல்லறை தான் அது. இவர் வாழ்ந்த காலகட்டம் 1380-1408 வரை. அவர் அந்நாளில் ’போனி’ என அழைக்கப்பட்ட இந்நாளய புருணை பிராந்தியந்தின் சுல்தானாக இருந்துள்ளார். இதற்கான சான்று மிங் பேரரசின் குறிப்புகளில் சீனாவிலும், ஜப்பானிய தோக்கியோ பல்கலைக்கலகத்திலும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சுல்தானின் பயணத்திற்கும் மீகாமன் செங் ஹோவின் கடல் பயணத்திற்கும் தொடர்பு உண்டு.

1408-ஆம் ஆண்டு குளிர்காலத்தின் போது சீன பயணம் மேற்கொண்ட சுல்தான் கர்ணா உடல் நலம் குன்றி நான்ஜிங்கில் (Nanjing) இறந்தார். இறக்கும் போது அவருக்கு 28 வயது. இவருக்கு ஒரு மகன் இருந்துள்ளார். அந்த இளவரசருக்கு நான்கு வயது. இளவரசரின் பெயர் ஷியாவ் வாங் என சீனத்தில் குறிப்பிடப்படுகிறது. ஷியாவ் வாங் ஆட்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மிங் பேரரசரின் விருப்பம். இருந்தும் புருணை வரலாற்றில் சுல்தான் கர்ணாவின் பெயரும் அவரது மகனின் பெயரும் இடம் பெறவில்லை. இவர் ஆட்சி செய்த காலகட்டமும் புருணை சுல்தான்களின் பட்டியலில் விடுபடுகிறது. சுல்தான் கர்ணா ஆட்சி செய்த காலம் 1402-1408 ஆகும். இந்த காலகட்டத்திற்கான ஆட்சி அதிகார தடத்தை புருணை இன்றளவிலும் வெளியிடவில்லை. சீனக் குறிப்புகளை ஏற்கும் அவசியம் இல்லை எனக் கூறுகிறார்கள். 

சுல்தான் கர்ணா மிங் பேரரசுடன் நட்பு பாராட்டி இருக்கிறார். வணிகம், திருமணம் என பல வழிகளில் இரு நாட்டின் நட்புறவு வளர்ந்துள்ளது. இவரது சகோதரி ரத்னா தேவி, ஓங் சம் பிங் (Ong Sum Ping) எனும் சீனரை திருமணம் செய்து கொண்டார். இன்றளவிலும் புருணையில் ஓங் சம் பிங் பெயரில் ஒரு வீதி உள்ளது. நான்ஜிங்கில் சுற்றுளாத் தளமாக விளங்கும் சுல்தானின் கல்லறை 17 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு China Brunei Friendship Hall அமைந்துள்ளது. சுல்தான் கர்ணாவின் விருப்பத்திற்கு இணங்கவே அவரை சீனாவில் அடக்கம் செய்து இருக்கிறார்கள். அவரது இறுதிச் சடங்கு சீன அரச மரியாதை முறைப்படி செய்யப்பட்டுள்ளது. சீன அரசர்களின் கல்லறை போல் பிருமாண்டமாக இருப்பினும் சமாதி இஸ்லாமிய பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி பின்னாட்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியாகினும் இவருக்கு புருணை சரித்திரத்தில் இடம் இல்லை. இது ஒரு அடையாளச் சிக்கலும் கூட. 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் அடிப்படையிலேயெ புருணை சுல்தான்களின் பட்டியல் இருப்பதாக புருணையின் அதிகாரப் பூர்வ வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுல்தான் கர்ணா கல்லறை- நான்ஜிங்
செங் ஹோ தொடர்பான செய்திக்கு திரும்புவோம். பண்டைய சீனாவில் காழ்கடிதல் எனும் சடங்கு அமலில் இருந்தது. அந்தபுரம், பல்லக்குத் தூக்குவோர், அரச குல பெண்டிர்களுக்கு சேவகம் செய்யும் ஆண்கள் என அனைவருக்கும் விதை (விந்து கொள்பை) நீக்கம் செய்துவிடுவார்கள். இந்த சடங்கு முறை சீனாவின் 5000 ஆண்டு எழுத்துவடிவ வரலாறு நெடுகினும் பதியப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் விதை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டு வந்தது. கடைசி பேரரசான ச்சிங் இராஜியத்தின் போது அது குறி நீக்கச் சடங்காக அமல்படுத்தப்பட்டது. 

இப்படி விதை நீக்கம் செய்யப்பட்ட ஆண்களை திருநங்கைகள் என குறிப்பிட முடியாது. இவர்கள் பெண் குணாதிசங்களை கொண்டவர்கள் அல்ல. நாட்டின் முதல் மந்திரிகளாகவும், அமைச்சர்களாகவும், படைத் தளபதிகளாகவும், இராணுவ வீரர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். காழ்கடியும் சடங்கு நிகழ்த்தப்பட முக்கியக் காரணம் சேவகர்களின் இரத்தம் அரச குலத்தில் கலந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டும் அல்ல. அப்படிச் செய்வதின் வழி ஆண்களின் ஆற்றலை அது வலிமையாக்கும் எனும் நம்பிக்கை இருந்ததாலும் தான். 1912-ல் சீன பேரரசு வழக்குடைந்து போனப் பின்  அதில் மிஞ்சிய காழ்கடிஞர்களின் கடைசி நபர் 1996-ஆம் ஆண்டு இறந்தார். 

அட்மிரல் செங் ஹோ தனது கடல் பயணத்தில் வழி பல நாடுகளோடு நட்புறவை ஏற்படுத்தினார். அவரது ஏழு பயணங்களும் மலாய் தீவுக் கூட்டத்தை கடந்துச் சென்ற பயணங்களாக அமைந்துள்ளன. லங்காசுக்கா, போனி, சம்பா, அயூத்யா (தாய்லாந்து), சாவகம் (ஜாவா), தெமாசிக் (சிங்கை), மலாக்கா, விஜயநகரம், இலங்கை, ஏடன், மொசாம்பிக், மெக்கா என இவரின் பயணங்கள் விரிவடைந்துள்ளன. 1405 முதல் 1433 வரை 28 ஆண்டுகள் செங் ஹோ கடற்படை தளபதியாக இருந்துள்ளார். அதில் 14 ஆண்டுகள் முழுமையாக கடல் பயணத்தில் செலவு செய்திருக்கிறார். 1433-ஆம் ஆண்டு அந்நாளில் விஜயநகரம் என அழைக்கப்பட்ட தென் இந்திய பகுதியின் பயணத்தின் போது இறந்தார். அவர் உடல் கடலில் வீசப்பட்டது.
நான்ஜிங் அருங்காட்சியகம்
செங் ஹோ என்பது அரசவை பெயராகும். செங் ஹோவின் இயற்பெயர் மா சான்போ. மா என்பது அவரது குடும்பப் பெயர் அது குதிரையை குறிக்கும் சொல். சான் என்றால் மூன்று, போ என்பது பொக்கிஷம். செங் ஹோ யூனான் மாநிலத்தின் இன்றைய குன்மிங் பகுதியில் உள்ள இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். செங் ஹோவின் அப்பாவும் தாத்தாவும் மெக்கா பயணம் மெற்கொண்டுள்ளார்கள். செங் ஹோ தமது ஏழாவது பயணத்தின் போது மெக்கா சென்று திரும்பும் வழியில் காலமானார்.

மிங் பேரரசு ஆட்சியைக் கைபற்றும் முன் சீனா மங்கோலியர்களின் வசம் இருந்தது. மங்கோலியர்களின் ஆட்சி யுவான் பேரரசு என குறிப்பிடப்படுகிறது. அது குப்லாய் கான் அரசனால் தேற்றுவிக்கப்பட்டது. மங்கோலியர்களின் ஆட்சியின் போது சீனர்கள் மீது அவர்கள் மொழி அல்லது இன அழிப்புக் கொள்கையை மேற்கொள்ளவில்லை. ஆனால் அரசமைப்பில் ஹன் சீனர்களை மிகவும் தழ்வான நிலையில் வைத்திருந்தார்கள். செங் ஹோவின் அப்பா யுவான்-மிங் பேரில் இறந்தார். செங் ஹோ அவரது 12-வது வயதில் காழ்கடியபட்டு அரண்மனையில் ஷு டீ இளவரசருக்கு சேவகம் செய்ய அமர்ந்தப்பட்டார்.

Gavin Menzies எனும் இங்கிலாந்துக்காரர் தமது பெய்ஜிங் பயணத்தின் போது Forbidden City அரண்மனை நெடுகினும் 1421 எனும் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளதை காண்டார். 1421-ஆம் ஆண்டு நிச்சயமாக முக்கியதுவம் வாய்ந்த ஆண்டாக இருக்கக் கூடுமென கருதிய அவர் அவ்வாண்டில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை ஆய்வு செய்து நூலாக வெளியிட முடிவு செய்தார். அவரது ஆய்வு சுமார் 1500 பக்கங்களை எட்டியது. Gavin Menzies கடற்படையில் பணியாற்றியவர். வரலாற்று ஆய்வாளர் கிடையாது, அவரது எழுத்தும் சுவாரசியமாக இல்லை எனக் கூறி எந்த பதிப்பகமும் அவருடைய நூலை வெளியிட முன்வரவில்லை. ஒரு பதிப்பாளர் மட்டும் அவர் செங் ஹோ தொடர்பாக எழுதிய குறிப்புகளை மறுசீரமைத்து வெளியிட ஒப்புக் கொண்டார். அப்படியாக 1421: The Year China Discovered the World எனும் நூல் வெளியீடு கண்டது. ஆனால் அது வரலாற்று ஆசிரியர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

அதற்கு முன்பாக ஃபோர்பிடன் சிட்டி அரண்மனையில் இருக்கும் 1421 எண்ணுக்கான காரணத்தைக் காண்போம். சீன வரலாற்றில் மொத்தம் 8 இடங்கள் தலைநகரமாக விளங்கின. பெய்ஜிங்கின் (பெக்கிங்) ஃபோர்பிடன் சிட்டி அரண்மனை 1406-1420 வரை நிர்மாணிக்கப்பட்டு, 1421 முதல் 1911 வரை அரண்மனையாகவும் அரசவையாகவும் இருந்தது. பெய்ஜிங்கிற்கு முன் நான்ஜிங் தான் தலைநகரம். மிங் ஆட்சியின் போது ஷூ டீ அரசாட்சியை அபகரித்துக் கொண்ட பின் ஃபோர்பிடன் சிட்டிக்கு அரசவையை மாற்றினார்.

Gavin Menzies தனது நூலில் கொலம்பஸ், வஸ்கோ டா காமா, ஃபெர்டினட் மெகெலன் மற்றும் ஜேம்ஸ் குரூக் போன்றவர்கள் சீனத்து வரைபடங்களைக் கொண்டே அவர்களது கடல் பயணங்களை மேற்கொண்டதாக குறிப்பிடுகிறார். செங் ஹோ தமது கடல் பயண அனுபவ அடிப்படையில் தூர அளவுகளை குறிப்பிட்டு வரைபடங்களைத் தயாரித்தார். அவை Nautical Chart of Zheng He என அறியப்படுகிறது. நௌடிகல் அளவீடுகளைக் கொண்டு உலக அரங்கில் பதிவாகி இருக்கும் ஆரம்ப கால கடல் பயண வரைபடம் செங் ஹோவால் உருவாக்கப்பட்டது. செங் ஹோ தனது வரைபடத்தில் அமேரிக்க கடல்படுகையயும், கெரீபியன் தீவுகளையும் குறிப்பிட்டுள்ளார். ஆக, கொலம்பஸுக்கு முன்பாகவே சீன கடலோடிகள் அமேரிக்க நிலபரப்பினை கண்டறிந்ததாக Gavin Menzies தனது கருத்தை முன் வைத்ததும் வரலாற்று அறிஞர்கள் கொதித்துப் போனார்கள். வரலாற்றுத் திரிபு செய்வதாக குற்றம் சுமத்தி அவருடைய நூலை புறம்தள்ளினார்கள்.

செங் ஹோவின் கடல் பயண வரைபடத்தை Mao Kun Map என்றும் குறிப்பிடுவார்கள். அது இராணுவ அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக ஆய்வுகளில் இந்த வரைபடம் தொடர்பாக அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. வெள்ளையர்களைப் போல் செங் ஹோ நாடு பிடிக்கும் நாட்டத்தில் தமது கடல் பயணத்தை மேற்கொள்ளவில்லை. சீனத்தின் கலாச்சாரத்தையும் வியாபாரத்தையும் விருத்தி செய்வதே அவரின் முதன்மை நோக்கமாக இருந்தது.

அட்மிரல் செங் ஹோ தமது பயணத்திற்காக ஏகபட்ட மரக்கலங்களை தயாரித்திருக்கிறார். அவர் பிரத்தியோகமாக பயன்படுத்திய கப்பல் 147 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகளமும் கொண்டது. சுமார் 30 நாடுகளை இந்த கப்பல் படை வளம் வந்துள்ளது. ஜப்பான் (வூகோவ்) மற்றும் சுமாத்ரா பகுதிகளில் கடல் கொள்ளையர்களோடு போர் புரிந்துள்ளார்கள். பண்ட மாற்று முறையில் சீனத்து தங்கம், வெள்ளி, பீங்கான் மற்றும் பட்டு பொருட்களைக் கொடுத்து யானை தந்தம், மசாலா பொருட்கள், தாவரங்கள், மிருகங்கள் என சீனாவிற்கு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். அப்படிக் கொண்டுச் சென்றவற்றில் சிங்கம், ஒட்டகச் சிவிங்கி, நெருப்புக் கோழி, காண்டா மிருகம், வரிக் குதிரை போன்றவையும் அடங்கும்.

செங் ஹோவின் நட்புறவு பயணத்தால் பல நாடுகள் சீனாவுக்கு தங்களது தூதுவர்களை அனுப்பி வைத்தன. அரசர்களும், சுல்தான்களும் மிங் அரசரை சந்திக்க வந்தனர். அப்படி பயணம் மேற்கொண்டு இறந்து போன இரு சுல்தான்களுக்கு மட்டுமே சீனாவில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுல்தான் கர்ணா, மற்றொருவர் பிலிப்பின்ஸ் நிலபரப்பை சேர்ந்த சுல்தான் சூலு. 

செங் ஹோவின் பெயரை உலகில் பல நாடுகளிலும் இன்றும் காணலாம் . மலாக்கா மாநிலத்தில் இவர் பெயரில் அருங்காட்சியகம் உள்ளது. அது போக வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய நாடுகளில் சான்போ எனும் பெயரில் கோவில்களும், வீதிகளும், கோபுரங்களும், மசூதி மற்றும் கட்டிடங்களும் உள்ளன. இலங்கையில் இருக்கும் Galle Trilingual Inscription (15.02.1409) தமிழ், பாரசிகம் மற்றும் சீனம் என  மும்மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. தமது மூன்றாவது பயணத்தின் போது நான்ஜிங்கில் அந்தக் கல்வெட்டைத் தயார் செய்து கையுடன் இலங்கைக்கு கொண்டுச் சென்றுள்ளார். தேனாவரை நாயனார் எனும் சிவன் கோவிலுக்கு இவர் அளித்த தானங்களின் பட்டியலும் வேண்டுதலும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னாட்களில் போர்த்துகீசியர்களின் ஆக்கிரமப்பின் போது இக்கோவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அக்கல்வெட்டும் காணாமல் போனது. 1911-ஆம் ஆண்டு அதை மீட்டெடுத்து இலங்கை அருங்காட்சியகத்தில் வைத்தார்கள்.

செங் ஹோ- கல்லறை நான்ஜிங்
செமாராங் மற்றும் ஜாவாவில் செங் ஹோவின் நினைவிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவரின் பெரும் பயணத்திற்கு பின் Luzon (பிலிப்பைன்ஸ்) பகுதியில் 20 ஆயிரம் சீனர்களும் ஜாவா பகுதிகளில் 30 ஆயிரம் சீனர்களும் குடியேறி இருக்கிறார்கள். சீனத்து செப்பு காசுகள் அந்நாடுகளின் வணிகத்தில் அமலுக்கு வந்தன. கலாச்சார ரீதியாக போர்னியோ, சுமாத்திரா, ஜாவா பகுதிகளில் வாழை இலை சாப்பாட்டு முறை வழக்குடைந்து பீங்கான்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. மலாய் தீவுக் கூட்டத்தில் இருந்த இராஜியங்கள் மிங் அரசருக்கு அளித்த பரிசுகள் இன்று ஃபோர்பிடன் சிட்டியின் Wenhua Hall-லில் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அட்மிரல் செங் ஹோவின் ஆறாவது கடல் பயணத்தின் போது ஃபோர்பிடன் சிட்டி கட்டி முடிக்கப்பட்டிருந்தது. 1421-1422 வரை பத்து நாடுகளைச் சேர்ந்த 1200 பிரமுகர்களை அழைத்துக் கொண்டு சீனா வந்தடைந்தார். மிங் அரசருக்கு மரியாதை செய்யும் நிமித்தம் அப்பயணம் அமைந்தது. அவர்களில் சில சுல்தான்களும் அரசர்களும் வந்திருந்தனர். மாலி தேசத்து அரசர் இப்பயணத்தின் போது ஃபூஜியன் (Fujian) நகரின் காலமானார். அவருக்கு கல்லறைகள் ஏதும் அமைக்கப்படவில்லை.

செங் ஹோ தமது 62-வது வயதில் மரணமடைந்தார். உடல் கடலில் வீசப்பட்டதால் நான்ஜிங்கில் இவருக்கு உடலற்ற வெற்றுக் கல்லறை எழுப்பப்பட்டது. பண்டைய சீன முறைபடி அமைக்கப்பட்ட அக்கல்லறை இன்று அவரின் நினைவிடமாக உள்ளது. 1985-ஆம் ஆண்டு அக்கல்லறை இஸ்லாமிய முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. செங் ஹோவின் கால்லறை சுல்தான் கர்ணாவின் கல்லறையைவிட மிகச் சிறியது. காரணம் அவர் ஒரு படைத் தளபதி எனும் மதிப்பை மட்டுமே பெற்றிருந்தார். கால பெருவெள்ளத்தில் செங் ஹோவிற்கு கிடைத்திருக்கும் செல்வாக்கு சுல்தான் கர்ணாவிற்கு கிடைக்கவில்லை. செங் ஹோவிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அயராத உழைப்பும், நல்லுறவு நூதனமும் (diplomatic skills). அதை இலங்கை கல்வெட்டின் வேண்டுதல் வாசகங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன.

2 comments:

RAHAWAJ said...

வணக்கம் விக்கி,நல்ல பதிவு,பழயை படி நிறைய எழுத வாழ்த்துக்கள்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜவஹர்

நன்றி பாஸ்... எழுத முயற்சிக்கிறேன்...