Tuesday, December 09, 2008

சாண்டில்யனின் - மன்னன் மகள்

நூல்: மன்னன் மகள்
ஆசிரியர்: சாண்டில்யன்
நயம்: சரித்திர நாவல்
வெளியீடு: வானதி பதிப்பகம்

பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை நகர்த்தும் யுக்தி பல சரித்திர நாவல்களிலும் கண்டிருப்போம். முக்கியமாக பொன்னியின் செல்வன் மற்றும் கடல் புறா இவற்றிக்கு விதிவிலக்கல்ல.கடல் புறாவில் மஞ்சள் அழகியின் கதாபாத்திரம் என்னைக் கவர்ந்த கதாபத்திரங்களுல் ஒன்று. ஆச்சய முனையின் இளவரசியாக வரும் இவளின் பிறப்பு இரகசியமாக்கப்பட்டு பிண்ணணியில் சொல்லப்படும். கற்பனை கதாபாத்திரமான இவளின் பெயர் கடைசி வரை சொல்லப்படாமலே இருக்கும். அதை போலவே பொன்னியின் செல்வனில் நந்தினியின் கதா பாத்திரமும். கற்பனை கதாபாத்திரமான இவளின் பிறப்பின் இரகசியம் பரவலாக விவாதிக்கப்பட்ட ஒன்றாகும்.

பல சரித்திர நாவல்களில் ஒரு மாறுபாடு கொண்டு அமைந்துள்ள நாவல் மன்னன் மகள் எனக் கூறினால் அது மிகையன்று. கௌடிள்யம் எனும் தர்க்க சாஸ்திரத்தை மையமாகக் கொண்டு கதை கொண்டுச் செல்லப்படுகிறது. தமது பிறப்பின் இரகசியம் அறியும் பொருட்டு புறப்படுகிறான் கரிகாலன். இவன் இளம் பிராயத்தில் தம் தாயினால் நாகபட்டிணத்தின் சூடாமணி விஹாரத்தில் விட்டுச் செல்லப்படுகிறான்.

எதனால் விட்டுச் செல்லப்படுகிறான் என்பதுதான் கதையின் சுவாரசியமே. பிறப்புச் சிக்கலை அவிழ்க்கும் பொருட்டு உலக வாழ்க்கையில் காலடி வைப்பவன், விஹாரத்தை விட்டு வந்த சமயம் முதலே உலகப் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறான். அதாவது நாம் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும் அதற்கான பின் விளைவுகள் நிச்சயம் உண்டு என்பதற்கு இதுவே சான்று.

இப்படியாக, சிறு விடயமாக கருதி ஒரு போலி துறவிக்கு உதவ முனைகிறான். அச்சிறு செயலானது அவனை வேங்கி நாட்டின் அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ளச் செய்கிறது. வேங்கி நாட்டின் மன்னன் மகளாக பிறந்து நாட்டின் அரசியல் பிரச்சனைகளால் மண்ணாள முடியாமலும் சுதந்திரமற்றும் இருக்கிறாள் நிரஞ்சனா தேவி. இவளே கதையின் நாயகியுமாவாள். வேங்கி நாட்டின் அரசியல் சிக்கலில் அகப்பட்டுக்கொள்ளும் கரிகாலன் தமது வாழ்வில் பல திருப்பங்களை காண்கிறான். நிரஞ்சனா தேவியின் மீது அவன் கொள்ளும் காதலும் அதில் அடங்கும்.

பொதுவாகவே சாண்டில்யனின் நாவல்களில் வர்ணனைகளும், சிருங்கார ரசமும் மிகையாகவே இருக்கும். சில வேளைகளில் சலிப்பைத் தட்டும் விதமாகவும் இருக்கும். கடல் புறா, இராஜ யோகம் போன்ற நாவல்களை காட்டினும் இதில் சிருங்கார ரசம் சற்றுக் குறைவாக உள்ளது என்றே சொல்லலாம்.

716 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாக அமைந்திருந்தாலும் மற்ற நாவல்களைக் காட்டினும் அதிகபடியாக கதாபாத்திரங்களும், சரித்திர நிகழ்வுகளும் இணைக்கப்பட்டிருப்பது கதைக்கு வழு சேர்க்கும் விடயம் என்றே கூற வேண்டும்.

வேங்கி நாட்டின் அரசியலில் சிக்கலை உருவாக்கி அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி நாட்டை ஆக்கிரமிக்க எத்தனிக்கிறான் விஷ்ணுவர்த்தன விஜயாதித்தன். இதற்கான முனைப்பையும் செய்கிறான் ஜெயசிம்ம சாளுக்கியன். ஒரே தகப்பனுக்கு பிறந்த இரு தாய் மக்கள் விஷ்ணுவர்தனும், ராராஜ நரேந்திரனுமாவர்.சாளுக்கிய அரச மகளுக்கு பிறந்தவன் விஷ்ணுவர்தன், இராஜேந்திர சோழ தேவரின் மகளான குந்தவைக்கு பிறந்தவன் ராஜ ராஜ நரேந்திரன். தந்தையின் இறப்புக்கு பின் அரியணை பிரச்சனை ஏற்படுகிறது. அரியணைக்கு சொந்தம் சோழர் வழியில் வந்தவனா இல்லை சாளுக்கிய வழியில் வந்தவனா எனும் பிரச்சனை உருவாகிறது.

அதே சமயம் சோழர்களின் வங்கப் பிரதேச படையெடுப்பும் ஆயத்தமாகிறது. கங்கை நதி பாயும் வங்கப் பிரதேசத்தை வெற்றி கொண்டு அதன் நீரில் மகுடாபிசேகம் செய்துக் கொள்ள வேண்டும் என்பது இராஜேந்திரச் சோழத் தேவரின் எண்ணம். இதன் வெற்றிக்கு பிறகே கங்கை கொண்ட சோழபுரம் என அழைக்கப்படுவதாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

வங்க தேசத்தின் மீது படையெடுப்பு நடத்த வேங்கி நாட்டை கடந்து போக வேண்டும். வேங்கி நாட்டைக் கடக்க சாளுக்கியர்களை வெற்றி கொள்ள வேண்டும் அல்லது வேங்கியில் இருக்கும் அரியனை பிரச்சனை தீர்க்க வேண்டும். எதிர் கொண்டு செல்வதென்றால் இறுதி போர் வரை படை பலம் வழுவிழந்து போகும். இந்தச் சிக்கல்களை களைவதே கதையின் சாரம்.

இக்கதை பலரையும் கவர்ந்திருக்க வேண்டும். காரணம் இதன் 'PLOT' அல்லது கதைக்கோப்பு என சொல்லலாம். துரிதமான கதையம்சமும், தீர்வுகளும் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. இக்கதைக்காக ஆசிரியர் சொல்லும் அரசியல் தந்திரங்களும் போர் விவரங்களும் முதல் தரம். அதற்கான தகவல் சேமிப்புகள் வியப்பளிக்கும் படி அமைந்துள்ளது. கதை போக்கில் சொல்லப்படும் அரசியல் மற்றும் போர் தத்துவங்கள் மேலும் வலு சேர்க்கிறது.

இளமை பருவம் முதல் ஏட்டுக் கல்வியில் மூழ்கியவன் கரிகாலன். கௌடிள்யம் எனப்படும் தர்க்க சாஸ்திரத்தில் தேர்ச்சி மிக பெற்றவன். அரசியல் மற்றும் போர் முனைக்கு உந்தப்படும் கரிகாலன் ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது எனும் படியாக கேலிக்குட்படுகிறான். கரிகாலனின் பாத்திர அமைப்பு சுவாரசியம் மிகுந்தது. இடற்களை அல்லது பிணக்குகளை நுண் அறிவால் வெல்லும் குணம், பிரச்சனைகளை பெரிது கொள்ளாதது போல் எதிராளியை கருதச் செய்து தோற்கடிப்பது போன்ற யுக்திகள் செலுத்தப்பட்டு மிளிர வைக்கப்பட்டுள்ளது.

இக்கதையின் மற்றுமொரு முக்கிய கூறு போர் உத்தி. அதிகபடியான மோதல்கள் இல்லாமல் மதி நுட்பத்தால் வெல்லும் திறன் பற்றி அதிகமாக சொல்லப்பட்டுள்ளது.

வந்தியத்தேவன், அரையன் ராஜராஜன், பிரும்ம மாராயர் போன்ற உண்மைக் காதாப்பாத்திரங்கள் பெரிதளவாக பேசப்பட்டாலும் கவரும் விதம் குறைபாடுடையதாகிறது. பொன்னியின் செல்வனில் குறும்புத் தனத்தோடு சித்தரிக்கப்படும் வந்தியத்தேவனின் காதாபாத்திரம் இதில் மாறுபடுகிறது. அகிலனின் வேங்கையின் மைந்தன் கதையில் முதிய வந்தியத்தேவனை குறும்புத்தனத்தோடு காண முடியும்.

பல போர் முனைகளை சந்தித்து மிகுந்த அனுபவம் கொண்ட இராஜேந்திரச் சோழ தேவரின் படை தளபதிகளின் திட்டத்தில் குறை காணப்படுவது நாவலில் நெருடுகிறது. வாசகர் அதைக் குறையாக காணாதிருக்கும் பொருட்டு ஆசிரியரும் அதைச் சாடியே எழுதியுள்ளார். அது கரிகாலன் கதாபாத்திரத்தின் தர்க்க சாஸ்த்திர முறையின் யுக்தியை முன்னிருத்த கையாளப்பட்ட தவிர்க்க முடியாத முரண்பாடுகளாக கூட இருக்கலாம்.

அடுத்தபடியாக கேள்விக் குறியாக அமையும் விடயம் இராஜராஜ சோழத் தேவரின் வாழ்க்கை. வந்தியத்தேவன் 50 அகவையைக் கடந்தவராக அல்லது இளம் முதுமையைக் கடந்தவராக சித்தரிக்கப்படுகிறார். அச்சமயம் இராஜேந்திரச் சோழத் தேவர் சோழ தேச அரியணையில் அரசனாக இருக்கிறார். சரித்திரக் கூற்றின் படி இராஜேந்திர சோழர் அரியனை ஏறியது அவரது 40வது வயதில் என குறிப்பிடப்படுகிறது.

அச்சமயம் வந்திய தேவரின் வயது என்னவாக இருந்திருக்க வேண்டும்? இராஜராஜ சோழரின் தமக்கையான குந்தவை நாச்சியாரை திருமணம் செய்த வந்தியத் தேவரின் வயது ராஜ ராஜ சோழனை விட குறைவானதா? வந்தியத் தேவருக்கு 50 அகவை இருக்கும் போது கண்டிப்பாக இராஜ ராஜ சோழருக்கும் ஏறக் குறைய அவ்வளவே இருந்திருக்க வேண்டும்.அப்படி என்றால் அச்சமயத்தில் இராஜேந்திரனின் வயது என்னவாக இருந்திருக்க வேண்டும்? அச்சமயம் அவர் அரசபீடத்தில் இருப்பதாக குறிப்பிட்டபட்டிருப்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம். இல்லை கற்பனை நாவலில் சரித்திர பிழை ஏற்பட்டுள்ளதா?

மற்றபடியான கற்பனைச் செருகல்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள நாவல் சாண்டில்யனின் மன்னன் மகள். இது வெறும் கதையாக மட்டும் இல்லாமல் சிந்தனைக்கும் மதி நுட்பத்தைப் பற்றிய யுக்திகளின் விவரிப்புகளுக்கும் சிறந்த நாவல் என்றே சொல்ல வேண்டும்.

26 comments:

கோவி.கண்ணன் said...

மீ த பர்ஸ்ட் !

Anonymous said...

மிகவும் அழகான வர்ணனை... இரசித்துப் படித்தேன் விக்கி...மன்னன் மகளையும் தரிசிக்க...வாசிக்க தூண்டுகிறது... பாராட்டுகள்..!!!

Thamiz Priyan said...

நல்ல அறிமுகம்! சாண்டில்யனின் நாவல்கள் எதையும் முழுதாக படித்ததில்லை. அந்த ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.

CA Venkatesh Krishnan said...

மன்னன் மகள் மிக நல்ல நாவல் என்றாலும் சாண்டில்யனிடம் என்னைக் கவர்ந்தது யவன ராணியும் கடல் புறாவும்தான்.

சாண்டில்யன் போர் முறைகளையும், காதல் முறைகளையும் விளக்குவதில் வல்லவர். ஈடு இணையற்றவர்.

ஒரு சிறு திருத்தம்.

கொடிள்யம் தர்க்க சாஸ்திரம் அல்ல. அது கௌடில்யம் - அர்த்த சாஸ்திரம்.

நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

உடனடி மறுமொழி

@ இளய பல்லவன்

//கொடிள்யம் தர்க்க சாஸ்திரம் அல்ல. அது கௌடில்யம் - அர்த்த சாஸ்திரம்.//

தர்க்க சாஸ்த்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக ஞாபகம்... இரவு சரி பார்த்து போடுகிறேன்... வருகைக்கு நன்றி...

கோவி.கண்ணன் said...

கொஞ்சம் எழுத்துப் பிழைகளும், மிகுதியான வடசொற்களும் இருக்கின்றன. அடுத்தமுறை கவணத்தில் கொள்ளுங்கள்.

நல்ல அலசல் !

சென்ஷி said...

அருமையான புத்தக விமர்சனம் விக்கி. ரசித்துப் படித்தேன்.

சாணக்கியரின் பெயர் கௌடில்யர்.
அர்த்த சாஸ்திரம் தர்க்க சாஸ்திரமா என்று தெரியவில்லை. இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றது.

மன்னன் மகளை வாசிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தி விட்டது உங்களின் விமர்சனத்தில் அமைந்துள்ள மர்ம முடிச்சுக்கள்.. மிக நேர்த்தியாய் உள்ளது.

சாண்டில்யன் அவர்களின் மற்ற வரலாற்றுப்புதினங்களைப் பற்றிய விமர்சனங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

கலக்குங்க...

RAHAWAJ said...

நல்ல அழகான முறையில் விமர்சித்துள்ளீர்கள் விக்கி, நானும் பல முறை இந்த நாவலை படித்தேன்,உங்கள் விமர்சனத்திற்கப்புறம் மறு முறை படிக்க தூண்டுகிறது

RAHAWAJ said...

சாணாக்கியனின் அர்த்த சாஸ்திரத்தில் அனைத்தும் அடக்கம்,தர்க்கம்,போர் முறை,குடும்ப வாழ்வியல் என்று பல

சி தயாளன் said...

நான் முதன் முதல் வாசித்த சரித்திர நாவல் “பார்த்தீபன் கனவு” (10 வயதில்), அதன் பாதிப்பில் கல்கியின் அனைத்து சரித்திர நாவல்களையும் வாசித்து முடித்துவிட்டேன். சாண்டிலியன் நாவல்களில் என்னைக் கவர்ந்தது கடல்புறா தொடர். மற்றவை என்னைப் பெரிதாக கவரவில்லை.

நீங்கள் கூறிய சில குளறுபடிகள் என்னையும் குழப்பவைத்தவை..கற்பனை பாதி, கதை மீதி என்பதால் பேசாமல் விட்டு விட்டேன். :)

வெங்கட்ராமன் said...

படிக்க வேண்டிய நாவல்களின் பட்டியலில் இதையும் சேர்த்து விட்டேன்.

சரி உடையார் என்ன ஆனார்?

விஜய்கோபால்சாமி said...

இது நூல் விமர்சனமல்ல. நூல் அறிமுகம். உனது இந்தக் கட்டுரையைப் படித்த உடன் “மன்னன் மகள்” நாவலைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.

து. பவனேஸ்வரி said...

வணக்கம்,
அருமையான பதிவு. மன்னன் மகளை ஏற்கனவே படித்துவிட்டேன். நீங்கள் கூறிய நேர்மறையான விசயங்களை நானும் கவனிக்கவே செய்தேன். இருப்பினும், நாவல் என்று வரும் போது முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களையே அடிப்படையாக வைத்து எழுத முடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். கதை என்று வரும் போது கற்பனை அவசியமாகிறது. கற்பனை இல்லாத கதை கட்டுரையாகிறது. மன்னன் மகள் நாவல் என்ற காரணத்தினால் சாண்டில்யன் கதைச்சுவைக்காக கதாப்பாத்தின் இயல்புகளை மாற்றியிருக்கலாம்....

MyFriend said...

ம்ம்.. என்னையும் படிக்க தூண்டிவிட்டுட்டீங்களா?

சரி சரி.. எனக்கு எப்போ இந்த புத்தகத்தை பிஞ்சாம் கொடுக்க போறீங்க? :-)

ஹேமா, said...

விக்கி,உங்களை நினைக்க பொறாமையா இருக்கு.நிறையப் புத்தகம் வாசிக்கிறீங்க.நான் ஒன்று சொன்னால் கோவிக்க வேணாம்.
ஏதாவது நல்ல நாவல் ஒன்றைக் கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் பதிவில் தாங்களேன்.

இராம்/Raam said...

விக்கி,

சாண்டியல்யன் புத்தககங்களை வாசிப்பது ஒரு அழகான அனுபவம்.... அவருடைய அனைத்து புத்தகங்களும் ஏறக்குறைய படித்து முடித்துவிட்டேன்... அடுத்ததாக "விஜய மகாதேவி"ய வாசியுங்களேன்... :)

A N A N T H E N said...

கடைசி பத்திக்கு முந்தைய இரு பத்திகளில் விவரிக்கப்பட்ட வயது சார்ந்த ஆய்வு, விமர்சனத்தின் இடை இடையே மற்ற நாவல்களோடு ஒப்பீட்டு நிகழ்த்தி இருப்பது இப்படி பல இடங்களில் உங்களது வாசிப்பு பழக்கம் பளிச்சிடுகிறது. நாவல் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

ஆனாலும், இது போன்ற வரலாற்று நயம் கொண்ட கதைகளைப் படிக்க ஓரளவு தமிழ் இலக்கியம்/வரலாறு தெரிய வேண்டுமோ?

ஆட்காட்டி said...

ஞாபகப் படுத்தியதுக்கு நன்றி. இப்புத்தகத்தினைப் படித்து 14 வருடங்கள் முடிந்து விட்டன? அப்படியாயின் எனது வயது என்னவாக இருக்கும்? அடிக்கடி நீங்க என்னைச் சீண்டுவதால் இந்தப் பொது அறிவுக் கேள்வி.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோவி. கண்ணன்

முதல் கும்மிக்கு நன்றி... சுட்டிக் காட்டியதை திருத்திக் கொள்கிறேன்... வட மொழி கலந்து எழுதுவதை தவிர்க்கிறேன்...

@ இனியவள் புனிதா

வாசிக்கத் தூண்டினால் போதாதே... நீங்களும் வாங்கி வாசித்து கருத்தை பதிவு செய்யுங்கள்...

@ தமிழ் பிரியன்

ஏன் முழுதாக படித்ததில்லை... வருகைக்கு நன்றி...

@ இளைய பல்லவன்

நண்பரே நீங்கள் சொல்லியது போல் கௌடில்யம் அர்த்த சாஸ்திரம் தான்... தர்க சாஸ்திரமும் அதில் அடங்கும்...

@ சென்ஷி

சாண்டில்யன் புத்தக விமர்சனங்கள் சில ஏற்கனவே எழுதியுள்ளேன்... கண்டிப்பாக வாசித்துப் பாருங்கள்.. வருகைக்கு நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜவஹர்

உங்கள் கருத்தினை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்... இந்த புத்தகத்தைப் பற்றிய உங்கள் விடய ஞானம் ஆழமானதென அறிகிறேன்... வருகைக்கு நன்றி...

@ டொன் லீ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

@ வெங்கட்ராமன்

உடையார்... முடியலை... 3ஆம் பாகத்தோடு நிறுத்தி வைத்துள்ளேன்....

@ விஜயகோபால்சாமி

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி...

@ பவனேஸ்வரி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... கற்பனையில் 'லாஜிக்' இருந்தால் சிறப்பாக இருக்கும் என சொல்கிறேன்... வந்தியதேவனை முதியவராக காண்பித்தால் அதில் தவறில்லை தானே?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மை பிரண்டு

பதிவர் சந்திப்புக்கு வாங்க கொண்டு வரேன்... வராதவங்களுக்கு ஒன்னும் கிடையாது...

@ ஹேமா

வருகைக்கு நன்றி.. நாவல்களுக்கு பதிப்புரிமை இருக்கும்... அதை இங்கே தருவது முறையன்று... நல்ல நாவல்களை பணம் கொடுத்து வாங்கி படிப்பதே சிறந்தது...

@ ராம்

வருகைக்கு நன்றி... நன்றி கண்டிப்பாக படிக்கிறேன்...

@ ஆனந்தன்

சரித்திர நாவல் படித்தால் நமக்கு சரித்திரம் பிடிபடும்... வருகைக்கு நன்றி...

@ ஆட்காட்டி

உங்களூக்கு 4 வயது இருக்குமா?

VG said...

finally i read it completely. but nerai vaartaigal puriyavillai.. sila vishyangalum vilanga villai.

ennudaiya tamil arivu konjam kuraivu thaan compare to urs. hehehhe

anyway a good intro... and follow up with summary and included with other examples.. nalla elutum tiran.. valga valarga.

Sathis Kumar said...

மன்னன் மகள்

அத்தியாயம் 35
பக்கம் 354
உருவிய வாள்கள், உரத்த குரல்கள்

// வந்தியதேவர் வாழ்க்கையின் பாதிப் பகுதியைத் தாண்டி வருஷம் பத்தாகிவிட்டாலும், இடைவிடாத போர்ப்பயிற்சியின் காரணமாகவும், உள்ளூர அவருக்கு யாரிடமும் இருந்த அன்பின் காரணமாகவும், முகத்தில் முதுமை அதிகமாகத் தட்டவில்லை//

இதில் அவருக்கு அகவை 60 என குறிப்பிடுகிறார் சாண்டில்யன்.

முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறிய சமயம் அவருக்கு அகவை 48. மன்னன் மகளில் இராசராசர் உயிரோடில்லை. இராஜேந்திரன் அரியணையேறிய மூன்றாம் ஆண்டில் இராசராசர் இறந்ததாகக் கணிக்கப்படுகிறது. அப்பொழுது இராஜேந்திரனுக்கு அகவை 50.

இராசராசரின் தமக்கையை மணம் புரிந்த வந்தியதேவரின் அகவை 60, அதாவது தன் பெரியப்பாவின் வயது தன்னைவிட 10 வயதுதான் அதிகம் என்று கூறுவது பொறுத்தமாக இல்லை.

வந்தியதேவரின் வயதை சாண்டில்யன் தவறாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். நீங்கள் கூறுவது சரிதான்..

Anonymous said...

ராஜராஜ சோழரை பொன்னியின் செல்வனில் ஆதர்ச மனிதராக பார்த்து இங்கே கரிகாலனின் பிறப்பையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.... இது இந்நாவலின் மிகப்பெரிய குறை... வந்தியத்தேவர் வந்தவுடன் அவருக்கும் நிறைய முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை... மற்றபடி போர் நுணுக்கம், யுக்தி இவற்றில் சாண்டில்யனை வீழ்த்த ஆளில்லை...

b1lunpod said...

This novel is an exact copy of one of Sabbatini's novel - I forgot the name. Sandilyan just changed the situation to suit to the Indian kingdoms. The hero, the heroine and their background are exactly what Sabbatini has given in his novel - there is not even a simple twist in Sandilyan's efforts.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வருகைக்கும் பின்னூடங்களுக்கும் நன்றி...