Wednesday, June 12, 2019

நிலங்களின் நெடுங்கணக்கு – மங்கோலியர்களின் கணிதப் பிழையும் அதன் பின் விளைவுகளும்


இந்நாவலின் ஆறாம் அத்தியாயம் முக்கியமான வரலாற்றுப் பின்னணியை பேசுகிறது. அதுவே நெடுங்கணக்கின் தொடக்கப் புள்ளியும் கூட. மங்கோலியர்களின் சீன படையெடுப்பின் போது சீனத்தின் அதற்கு முந்தைய ஆட்சியான சொங் பேரரசு தென் பகுதியை நோக்கி குறுகியது. அதை முழுதுமாக அழிக்க முடியாமல் தினறிக் கொண்டிருந்தார் குப்ளாய் கான்.

சீனப் பெருஞ்சுவரைப் போன்ற மதில் சுவர்களை தகர்த்து சோங் பேரரசை முறியடித்து வெற்றி கண்டதும். அவ்வரசின் 5 அல்லது 6-வயதே நிறம்பிய அரசனை கொன்று காட்சி படுத்தியதும் வேறு கதைகள். குப்ளாய் கான் சீனத்து அரசரா அல்லது மங்கோலிய அரசரா எனும் கேள்வி எழும் நிலையில் தன்னை இவ்வுலகின் பேரரசனென பிரகடனப் படுத்திக் கொண்டார். அதுவே இன்றளவிலும் சீனத்தில் யூவான் பேரரசாக (Yuan Dynasty) அறியப்படுகிறது. மார்க்கோ போலோ சுமர் 17 ஆண்டுகள் குப்ளாய் கானிடம் பணியாற்றினார். மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள் 1270-களுக்கு பிறகான சீனாவை மட்டுமின்றி சாவகம் என அறியப்படும் ஜாவாவை அறித்துக் கொள்ளவும், மலாய்காரர்களின் அசாதரனமான போர்,வாழ்வியல் மற்றும் ஆட்சிகளை அறிந்துக் கொள்ளவும் வழி செய்கிறது. மார்க்கோ போலோ தொடர்பான செய்தியை பிறிதொரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மங்கோலியர்கள் நுசாந்தாராவின் மாபெரும் பேரரசை கைப்பற்றி மலாய் தீவுகளில் தமது ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட காரணம் என்ன? குப்ளாய் கானுக்கு ஜாவாவை சேர்ந்த கிளத்தியர்களும் அவர்கள் வழிப் பிள்ளைகளும் இருந்துள்ளார்கள். ஆக, ஜாவா படையெடுப்பிற்கு முன்பாகவே மங்கோலியர்களுக்கு ஜாவாவோடு நல்லிணக்கம் இருந்துள்ளது. ஜாவாவை நோக்கிய குப்ளாய் கானின் பார்வையும் நெடுங்கணக்கில் அடங்கிய ஒரு குறுங்கணக்கென உணர முடிகிறது.

பண்டைய காலத்தில் இரண்டு முக்கியமான வணிகப் பாதைகள் இருந்தன. இந்த வணிகப் பாதைகள் ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்குமான முக்கிய வழித் தடங்களாக அமைந்தன. இந்தியாவின் மசாலாப் பொருட்களும் சீனத்துப் பட்டும் அன்றைய வணிகத்தின் முக்கிய அம்சங்கள். இந்தப் பொருட்களின் அடிப்படையிலேயே அப்பாதைகள் பெயரிடப்பட்டன.

ஒன்று பட்டுப் பாதை எனக் கூறப்படும் சில்க் ரோட் (Silk Road). பட்டுப் பாதை நில வழி பாதை. துர்க்கி, ஈரான், இந்தியா, தட்ஜ்கிஸ், கிர்கிஸ் எனத் தொடங்கி சின்ஜியாங் வழியாக சீனாவை வந்தடைகிறது. மற்றொன்று நறுமணப் பாதை எனப் படும் ஸ்பைஸ் ரோட் (Spice Road). ஸ்பைஸ் ரோட் கடல் வழிப் பாதை. ஸ்பைஸ் ரோட் வெனீஸில் தொடங்கி அரேபியா, ஆப்ரிக்கா, தென் இந்தியா, நுசாந்தாரா வழியாக சீன தேசத்தை வந்தடைகிறது. பட்டுப் பாதை முழுவதுமாக குப்ளாய் கானின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் வழி அதீதமான வரி வசூல் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார் குப்ளாய் கானின் நிதி அமைச்சரான அஹமத்.

சீனாவை முழுமையாக கவர்ந்தப் பின் குப்ளாய் கானின் எண்ணம் ஸ்பைஸ் ரோட்டை அபகரிப்பதில் குவிந்தது. அப்படி கடல் வழி வணிகப் பாதை குப்ளாய் கான் வசம் போயிருந்தால் மேலும் பெரும் நிலப் பகுதியினை தன் ஆட்சியில் இணைத்திருப்பார். நுசாந்தாராவின் வரலாறு வேறு விதமாய் அமைந்திருக்கும். யுவான் பேரரசின் தென் பகுதியில் இருந்த மற்றுமொரு அரசு சம்ப்பா (இன்றைய வியட்நாம்). இந்திரபுரா, அமராவதி, விஜயா, பாண்டுரங்கா என சில பெருநகரங்களை கொண்ட அரசு அது. சம்ப்பா முதல் தெற்காகவும் கிழக்காகவும் பெரும் நிலப்பகுதி நூசாந்தாரா எனும் அடையாளத்தில் மலாய் அரசுகளின் கீழ் இருந்தது.

மங்கோலியர்களின் படையெடுப்பின் போது மாஜாபாகித் அவர்களுக்கு உதவுவதாகக் கூறி மங்கோலிய கூட்டணியில் இருந்தது. ஜாவாவின் முன்னால் அரசன் வீழ்ந்ததும் கூட்டணியில் இருந்த மாஜாபகித் மங்கோலியர்ளுக்கு எதிராக அவர்களை அடித்து விரட்ட ஆரம்பித்தது. காரணம் குப்ளாய் கானின் நிதி அமைச்சர் அஹமத் அதீத வரிகளை விதித்து சிற்றரசுகளை பெருமூச்சிரைக்கச் செய்தது தான். யூவான் பேரரசின் சிற்றரசாக இருக்க விரும்பாத மாஜாபாகித் சுயாட்சியை அமைத்தது. குப்ளாய் கானுக்கு வரிக் கட்ட வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.

ஜாவாவை வெற்றி கொள்வதில் மங்கோலியர்கள் தோற்றுப் போகிறார்கள். மங்கோலியர்களுக்கு ஜாவாவில் நிகழ்ந்த தோல்வி முதல் அல்ல. அவர்கள் மேலும் சில போர்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். உண்மையில் சூது கவ்வும் திரைப்படத்தில் இடம்பெறும் 5-வது கடத்தல் விதிமுறை ஜெங்கிஸ் கான் அவரது பேரனான குப்ளாய் கானுக்கு உரைத்தது. ‘ஒரு வேள சொதப்பிட்டா கூச்சமே படாம பின் வாங்கிடனும்’ என்பதுதான் அந்த விதிமுறை. ஆக மங்கோல்கள் தோல்விகளை படிப்பினையாகவே எடுத்துக் கொண்டார்கள்.

மாஜாபாகித் மங்கோல்களின் வாயில் வடையை வைப்பார்கள் என்பதை அவர்களும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதன் பின் மாஜாபாகித் தனது பேரரசின் ஆற்றலை அபரிமிதமாக வளர்த்துக் கொண்டது. அதற்கு துணையாக இருந்தது காஜா மாடா எனும் தோப்பேங் இரகசியக் குழுக்களின் மூதாதை. பாகுபலிக்கு கட்டப்பாவை போல், சோழர்களுக்கு பழுவேட்டரையரை போல், மாஜாபாகித்துக்கு காஜா மாடா. காஜா மாடா எடுத்துக் கொண்ட சத்தியத்தை அவர்களின் வம்சாவழியினர் இன்றும் காட்டிக்காக்க போராடுவதாக கூறப்படும் ஒரு புனைவின் பின்னணியில் மறைக்கப்படும் அல்லது அதிகம் அறிந்திராத சரித்திர சுவடுகளை நோக்கி பயணிக்கிறது இந்த நாவல்.

காஜா மாடா வம்சாவழியினர் புதைந்து போன மாஜாபாகித் அரசுக்கு விசுவாசமாக இதைச் செய்கிறார்களா? நிச்சயமாக இல்லை. அவர்களின் விசுவாசம் காஜா மாடாவிற்கும் அவர் உரைத்த சூளுரைக்குமே ஆகும். அந்த விசுவாசம் காஜா மாடாவின் பிரியத்திற்கு உரிய முகமூடியின் ஊடாக காலம் காலமாக கடத்திக் கொண்டு வரப்படுகிறது. தான் ஒரு ஜாவாவின் வம்சாவழியினன் எனும் பெருமிதத்தில் அந்த முகமூடி வெளிப்படுகிறது. அது வெளி உலகிற்கு அப்பட்டமாக தெரிந்துவிடாமல் இருக்கவும் இரகசியம் காக்கப்படுகிறது. இன்றைய தேசிய மயமாக்களில் அனைவரும் மலாய்காரர்கள், இந்தோனேசியர், இஸ்லாமியர் என பொதுவில் பார்க்கப்பட்டாலும் அவர்களுக்குள் இருக்கும் ஜாவா, பூகிஸ், சூலுக், சுந்தா, மீனாங்காபாவ், பஞ்சார் எனும் இன பாகுபாடு இன்னமும் அகலவில்லை என்பதையும் ஆசிரியர் முன் வைக்கிறார்.

முகமூடியை வைத்திருக்கும் ஜாவாக்களின் எதிரிகள் யாவர்? நிச்சயமாக காஜா மாடா தனது சூளுரையில் குறிப்பிடும் இடங்களே. அந்த சூளுரையில் மொத்தம் பத்து வெவ்வேறு ஆட்சிகளை மஜாபாதித் பேராட்சியின் கீழ் கொண்டு வருவதாக காஜா மாடா சத்தியம் எடுக்கிறார் அவை முறையே குரூன், செரான், தஞ்சோங்புரா, ஹாரு, பகாங், டொம்போ, பாலி, சுந்தா, பலேம்பாங் மற்றும் துமாசேக். காஜா மாடா சூளுரை எடுத்த சமயம் இந்த மலாய் அரசுகள் ஆட்சி புரிந்தன. கால ஓட்டத்தின் முன் பின்னாக அந்த இடங்களின் பெயர்கள் மாற்றம் அடைந்தன. நாவலில் செல்லத்துரைத் தேடிச் சென்றுள்ளது ஸ்ரீவிஜயா மற்றும் கூத்தாய் பேரரசின் இடங்களாயிற்றே, காஜா மாடா தமது சூளுரையில் அவற்றைக் குறிப்பிடவில்லையே என நினைப்போமானால் அவர் குறிப்பிடும் தஞ்சோங்புராவில் கூத்தாய் பேரரசும், பலேம்பாங் என்பதில் ஸ்ரீவிஜய பேரரசும் அடங்கிவிடுகிறது. ஆக, பத்து இடங்களில் இரண்டு இடங்களின் சுவடுகளை மட்டுமே ஆசிரியர் இந்நாவலில் எழுதி இருக்கிறார் என்றால் மேலும் இருக்கும் எட்டு இடங்களுக்கும் சேர்த்து நிலங்களின் நெடுங்கணக்கை இன்னும் ஒரு இருபது பாகங்களுக்கு எழுதுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

காஜா மாடா முகமூடியின் சரித்திர சுவடுகளை பின் நோக்கி காண்கையில், பேரரசுகளின் காலகட்டத்தில் இவர்கள் சைவ மதத்தையும், புத்த போதனையையும் பின் பற்றி இருக்கிறார்கள். இன்று கூறப்படும் இந்து மதம் அப்பொழுது பரிட்சயத்தில் இல்லை. பிற்காலத்தில் காஜா மாடாவின் முகமூடி ஒரு வழிபாட்டு பொருளாகி போனது. பாலியில் இருக்கும் சிவன் ஆலயத்தில் அதை வைத்து வழிபட்டு இருக்கிறார்கள். 1960-களில் அந்த முகமூடி களவு போனது. அது வரலாற்று பொருட்கள் சேகரிப்போரின் திருட்டுச் செயலாக இருக்கும் என நம்பப்பட்டது. அந்த முகமூடி இன்றளவிலும் கண்டுபிடிக்க முடியாமல் போனது.

ஆசிரியர் ‘ஒரிஞினல்’ முகமூடியை மடகாரிபுற குடும்பம் வைத்திருப்பதாக கூறி நமது கவனத்தை கோத்தா கெலாங்கியின் பக்கம் கொண்டு போகிறார். கோத்தா கெலாங்கி தொடர்பாக நான் அறிந்துக் கொண்டது அமரர் டாக்டர் ஜெயபாரதியின் வழி தான். அவருடைய விஸ்வா காம்ப்லேக்ஸ் வலைதளத்தில் கேத்தா கெலாங்கி தொடர்பான தகவல்களை சில கட்டுரைகளில் பகிர்ந்து இருந்தார். அவர் கோத்தா திங்கி மருத்துவமனையில் பணியாற்றிய சமயம் சேகரித்த தகவல்கள் அவை என்பதை அறிய முடிகிறது. கோத்தா கெலாங்கி 2005-ஆம் ஆண்டு தொல்பொருளாய்வு தளமாக அரசினால் அறிவிக்கப்பட்டது. டாக்டர் ஜெயபாரதியின் குறிப்புகள் அதற்கும் முந்தியவையாகும். இக்கதையில் டாக்டர் மணிசெல்வம் வரும் காதாபாத்திரத்தின் இடங்களில் டாக்டர் ஜேபியை நினைவு கூறுவதை தவிர்க்க முடியவில்லை.

கோத்தா கெலாங்கி தொடர்பான அறிமுகத்தைக் கொடுக்கும் ஆசிரியர் மேலாதிக தகவல் தேடல்களை நம்மிடமே விட்டுவிடுகிறார். இது வரை கண்டடைந்த சரித்திர ஆய்வுகளை உரையாடலின் போக்கில் நம்மிடம் கடத்திவிடுகிறார். இது ஒரு குறைபாடாகவே தெரிகிறது. ஜாவா முகமூடிக்காரர்கள் கோத்தா கெலாங்கியில் இருக்கும் ஸ்ரீவிஜய பேரரசின் சரித்திர சுவடுகள் வெளி தெரியாமல் இருக்கச் செய்கிறார்கள் என்பதை இன்னும் பலமாக நிறுவி இருக்கலாம். சரித்திரத்தில் இந்த இனக் குழுக்களுக்குள் நடந்த போர் மற்றும் நில ஆக்கிரமிப்பு சம்பவங்களை சேர்த்திருந்தால் இதன் சுவாரசியம் பன்மடங்காகி இருக்கும்.

ஜெகூர் பாருவில் இன்று ஜப்பானிய கல்லறை எனும் பெயரளவில் மட்டுமே ஓர் இடம் உள்ளது. அதன் பின்ணணி புத்த பிக்குவாக மாறிய ஜப்பானிய இளவரசனின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்நாவலில் அறிகிறோம். கோத்தா கெலாங்கியில் இளவரசர் தக்காவோ மரணித்திருக்கக் கூடும் என நம்பும் ஜப்பானிய இராணுவம் இரண்டாம் உலகப் போரின் போது அவருக்கான நினைவிடத்தை எழுப்புகிறார்கள். ஆக, ஜப்பானியர்களிடம் அந்நாளய கோத்தா கெலாங்கி தொடர்பான தகவல் குறிப்புகள் இருப்பதற்கான சாத்தியம் உண்டு. அதை நோக்கிய தேடல்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்பதன் தகவல்கள் நம்மிடம் இல்லை.

சோழர்களுக்கு முன்பாக பல்லவர்களும் பாண்டியர்களும் நுசாந்தாரா பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்தியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த ஆதிக்கம் என்பது மொழி, மதம் மற்றும் பண்பாட்டால் ஆனது. இனத்தால் அவர்கள் இம்மண்ணின் குடிகளாகவே விளங்கி உள்ளனர். இதை உணர்த்தவே பரமேஸ்வராவின் கதையை இதில் இணைத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. மலாக்கா பேரரசை நிறுவிய பரமேஸ்வரா தமிழன் எனும் மூடநம்பிக்கை தமிழ் மக்களிடையெ வேறூன்றி உள்ளது. செவிவழிச் செய்திகளாலும் தேடல்கள் அற்ற ’பிம்பலக்கி’ தனத்தாலும் இந்த மூட நம்பிக்கையை தமக்குள் வலுவாக்கிக் கொண்டவர்கள் ஏராளம். அதன் வெளிப்பாடாகவே பாடல் எழுதி இசை அமைத்து குதூகளித்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உரைப்பதற்காகவே “கையில் ஏதாவது திறந்தால் உன் மண்டையை திறந்திட போகிறேன். பரமேஸ்வரா தமிழனா உனக்கு” எனும் வசனத்தை இந்நாவலில் இணைத்திருக்கிறார் ஆசிரியர்.

இது ஒரு பக்கம் இருக்க, சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் உள்ள சரித்திரத்தை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அதற்கு முந்தைய சுவடுகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். உதாரணமாக திரங்கானுவின் சிறுகல்வெட்டிற்கு இருக்கும் பிரபலம் கோத்தா கெலாங்கி எனும் பெருநகரம் இருந்த இடத்திற்கு இல்லை. இதற்கு வலுவாக வேறுன்றிய இஸ்லாமியமும் காரணி ஆகிறது. புத்த மதம் உச்சத்தில் இருந்த போது சீனாவிலும், ஜப்பானிலும் அது பல பிரபலமான புத்த பிக்குகளை உறுவாக்கியது. இவர்களின் தத்துவங்களும், பயணக் குறிப்புகளும் இன்றும் பேசப்படுகிறது. அவர்களின் காஞ்சி மற்றும் நாளந்தா பல்கலைக்கழக பயணத்தில் நுசாந்தாரா தீவுகளை கடந்துச் சென்றுள்ளார்கள். ஸ்ரீவிஜய பேரரசும் புத்த ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படி இருக்க இப்பிராந்தியத்தில் புத்த மதத்தை போற்றிய பிக்குகள் யாரையும் நாம் அறிய முடியவில்லை. மத மாற்றமும் பண்பாட்டு மாற்றமும் வரலாற்று ஏற்பில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

போர்னியோவில் இருக்கும் கூத்தாய் பேரரசு குறித்த தகவல்களும் நம்மிடம் மிகக் குறைவாகவே உள்ளது. இந்நாவலை தவிர்த்து தமிழில் அப்பேரரசு தொடர்பான செய்தியை மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தமது கட்டுரயில் எழுதி இருந்தார். அது போக கோத்தா கிலாங்கி தொடர்பாகவும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட தகவல்களை அவரது முகநூலில் பதிப்பித்திருந்தார்.

நாவலில் 2005-ஆம் ஆண்டு செல்லத்துரையின் புகைப்படத்தின் வழி கோத்தா கிலாங்கி பொது மக்களின் பார்வைக்கு சென்றதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். அரசாங்கம் அதை அதிகாரபூர்வமாக தெல்பொருள் ஆய்வு தளமாக அறிவித்த ஆண்டும் அதுவே. ஆசிரியர் கதையை புனைந்திருக்கும் நூதனம் பாராட்டுதலுக்கு உரியது.

செல்லத்துரையின் தேடல்கள் வழியும், செல்லத்துரையை தேடுவதின் வழியும் இந்நாவல் நுசாந்தாரா எனும் இப்பிராந்தியத்தின் கவனம் பெறாத வரலாற்றுத் தடங்களை நமக்கு விளக்குகிறது. அதே சமயம் சமகாலத்தில் நிகழும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தையும் பதிவு செய்ய தவறவில்லை. வரலாற்றுத் திரிபுகளை உறுவாக்காமல் அதன் போக்கிலேயே சரித்திர தடங்களை பதிவு செய்திருப்பினும் அதன் தேடல்கள் முடிவடையவில்லை. அதனால் செல்லத்துரையை நாம் கண்டடையவில்லை. சிக்கலான வரலாற்றுத் தகவல்களை மிகவும் இலகுவான எழுத்து நடையில் வாசகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் மதியழகன். இதற்காகவேனும் அமேரிக்க ஏகாதிபதியம் அவருக்கு பாராட்டு விழா நடத்தி இலக்கிய பரிசளிக்க வேண்டும். ஆசிரியரின் தொடர் படைப்புகளுக்காக வாசக தேன்’ஈ’களாக காத்திருப்போம்.

1 comment:

Vignesh said...
This comment has been removed by a blog administrator.