Friday, September 26, 2008

பயணிகள் கவனிக்கவும்-பாலகுமாரன்


தலைப்பு: பயணிகள் கவனிக்கவும்

நயம்: சமூக நாவல்

ஆசிரியர்: பாலகுமாரன்

வெளியீடு: விசா பதிப்பகம்

விதவைகள் திருமணம் செய்து கொள்வது அவ்வளவு பாவமா? ஒரு இளைஞன் விதவையை காதலிப்பது கேவலமா? திரையுலகிலும் சரி எழுத்துலகிலும் சரி ஒருவனுக்கு ஒருத்தி என்பது விதீ மீறக் கூடாத வாக்காகவே சித்தரிக்கப்படுகிறது. ஒரு சில கதைகள் விதிவிளக்காக இருக்கிறது எனலாம். இது வருந்தத்தக்கது. விதவைகள் ஒரு ஒடுக்கப்பட்ட இனமாக நம் சமூகத்தின் பார்வையில் இருப்பது வெட்கப்பட வேண்டிய விடயம். அவர்களும் மனிதர்கள் தானே? ஏன் அவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்?

காதல் எந்தச் சூழலிலும் ஏற்படலாம். திருமணமாகாத ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் அது காதல் என்றும். மனைவி அல்லது கணவனை இழந்தோர் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வது காதலல்ல காமம் என்றும் உரைப்பதும் நமது சமுதாயக் கேடு.

பயணிகள் கவனிக்கவும் என பாலகுமாரன் கூறும் இந்நூலில் நயம் நாம் மிக அறிந்த காதலே. இக்கதையை முடித்த போது ஜார்ஜினா எனும் பாத்திரம் சித்தரிக்கப்பட்ட‌ விதம் எனை மிகவும் பாதித்தது என்றே கூறுவேன். இன்னும் எத்தனை ஜார்ஜினா போன்ற பெண்கள் இந்த உலகில் அவர்களுக்குள் புளுங்கிக் கொண்டிருப்பார்கள். எண்ணங்களை பரிமாற ஒரு மனம் இல்லாமல், அசதிக்கு சாய்ந்து கொள்ள ஒரு தோளில்லாமல், உணர்ச்சிகளை பூட்டி வைத்து வாழ வேண்டிய நிர்பந்த வாழ்க்கை தான் விதவைகளின் வாழ்க்கை என தீர்மானங்கள் உண்டா?

இக்கதை பதிபிக்கப்பட்ட போது எனக்கு 4 அல்லது 5 வயதிருக்கலாம். அதை இப்போது படிக்கும் போது ஒரு வித்தியாசமான வாசிப்பைக் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். கதையின் காலம் 1980களில் அமைக்கப்பட்டிருக்கிறது. உதாரண‌த்திற்குச் சொல்ல போனால் 'சுப்ரமணியபுரம்' படத்தை போன்றதொரு காலத்தில் நகரும் கதை எனலாம்.

இக்கதயின் பயணம் ஒரு எதிர்பாராத திருப்புமுனை. எங்கோ ஆரம்பித்து எப்படியோ சொல்கிறதே எனத் தோன்றியது. ஸ்டீபன் தான் நாயகன் என ஒரு தேர்ந்த வாசகனும் அறிந்துக் கொள்ளும் படியான கதையின் போக்கு. ஆனால் சற்று தூரத்தில் சிறிதே இடம் மாறி வேறு பாதையில் போகும் கதை தளம். இந்தக் கதை அமைப்புதான் இந்நாவலின் வெற்றி எனக் கருதுகிறேன்.

ஒரு முசுடு அல்லது சிடுமூஞ்சி அப்படியும் இல்லையென்றால் நாகரீகமாக எளிதில் உணர்ச்சிவசப்படுபவன் எனச் சொல்லக் கூடியவன் தான் சத்தியநாராயணன். சக்தி என அழைக்கப்படும் கதையின் நாயகன்.

திருமணமாகி 6 மாதத்தில் கணவனை இழந்துவிடுகிறாள் ஜார்ஜினா. முழுமையாய் அறிந்து பார்த்தால் இந்த புள்ளிதான் கதையின் தொடக்கம். இதனால் வரும் பாதிப்புகளே முழுக் கதையும்.

விதவை திருமணத்தையடுத்து முக்கியமாய் சொல்லப்பட்டிருப்பது மத மாற்றுப் பிரச்சனை. ஜார்ஜினா எனும் கிருஸ்துவ பெண் சக்தி எனும் ஒரு இந்து ஆணுடன் புது வாழ்வை ஆரம்பிக்க சுற்றத்தால் தடை உண்டாகிறது. இதுவே பாலகுமாரன் கதையில் இருவரும் சேர்வார்களா பிறிவார்களா என சொல்லவரும் தளம். சற்று நீளமும் அதிகம். மதத்திற்கு முக்கிய காரணமாய் கூறப்படுவது ஜார்ஜினாவின் ஐந்து வயது மகன். அப்படி அவர்களுக்கு மீண்டும் வாரிசுகள் உண்டானால் அவர்களுக்கு சூட்டப்படும் மதம். இதில் மீண்டும் வருவதிலும், இப்பிரச்சனைகளை சுமூகமாக களைவதிலும் கதை முடிகிறது.

முக்கியமாக இக்கதையில் நான் இரசித்தது. ஜார்ஜினா மற்றும் சக்தியின் காதல் தருணங்கள். சினிமா தனம் இல்லாமல் இருந்தது. அவர்கள் பரிமாறிக் கொள்ளும் கவிதை முறை தூது என இன்னும் பல.

ஜார்கினாவிற்கு எதிர்பதமாக படைக்கப்பட்டிருப்பது சக்தியின் முதல் காதலி ஷோபனா. இவளை ஆரம்பத்தில் இரசிக்கும் படி சித்தரிக்கும் ஆசிரியர் இக்கதையை முடிக்கும் போது அவள் மீது ஒருவித அறுவருப்பை ஏற்படுத்தவேச் செய்கிறார். ஏமாற்றுகாரி என்றோ அல்லது கோழை என்றோ தான் பார்க்க முடிகிறது.

நாவலை முடித்ததும் மறுமுறை படிக்கத் தூண்டிய கதை இது. காரணம் என்னில் அறிய முடியாமலே போனது. ஒருவேளை நான் இக்கதையில் மீண்டும் மீண்டும் தேடிப்பார்க்க நினைத்த மாற்றங்களாக இருக்கக் கூடும். ஆனால் அதன் தீர்மானம் ஒன்றுதான். இக்கதையின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை என்றே கூறுவேன். முடிவு பிடிக்கவில்லை என்றும் சொல்ல முடியாத நிலை. அதை பாலகுமாரன் இரசிகர்கள் இப்படிதான் விருப்புவார்கள், இப்படிதான் அமைக்க வேண்டும் எனும் பாணியில் கொடுத்திருந்தால் இந்நாவல் எனது விருப்பத்தில் இருந்து அகன்று போயிருந்தாலும் இருக்கலாம்.

மொத்தத்தில் பயணிகள் கவனிக்கவும் ஒரு சுவாரசிய படைப்பாக இருந்தாலும் ஏதோ ஒரு சின்ன வருத்தத்தோடே காண்கிறேன். பிடித்திருக்கிறது என்றே சொல்வேன் சில கருத்து முரண்பாடுகளோடு.

திரு.மோகந்தாஸ் எழுதிய பிரிதொரு விமர்சனத்திற்கு இங்கேச் சுட்டவும்: பயணிகள் கவனிக்கவும்.

(பி.கு: புத்தகத்தைக் கொண்டு வர மறந்து போனதால் 'ஸ்கேன்' செய்து போட முடியவில்லை. இப்படம் உடுமலை டாட் காமில் எடுக்கப்பட்டது)

Thursday, September 25, 2008

வாங்க சார் ‘தம்’ அடிக்கலாம்!!


பத்து நபர்கள் மரணமடைவாரெனின் அதில் ஒருவர் புகையிலையின் பக்கவிளைவினால் மரணமடைகிறார். இதை ஒட்டு மொத்தமாக காண்கையில் ஒரு வருடத்திற்கு 5 கோடி இறப்புகளுக்கு சமமாகும். பெரும்பான்மையான மரணங்கள் மாரடைப்பு, புற்று நோய் மற்றும் சுவாச கோளாருகளால் எற்படுகின்றன. அமெரிக்காவில் மூச்சுக் குழாய் அடைப்பினால் மரணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக சமீபத்தய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

புகை பிடிப்பது மரணத்தை நம் வீட்டின் அடி வாசலுக்கு அழைப்புவிடுக்கும் செயல் என்பார்கள். புகை பிடிக்கும் பழக்கமானது புகைப்பவனை மட்டுமல்லாது அவனைச் சூழ்ந்து இருப்பவரையும் பாதிக்கிறது. உறிஞ்சப்படும் புகை புகைப்பவனின் இருதயம், சுவாசப்பை மற்றும் மூளை போன்ற அங்கங்களை பாதிக்கிறது.

ஒரு வெண்சுருட்டில் அடங்கியுள்ள தார், நிக்கோடின், மற்றும் பல இரசாயன பொருட்களின் கலவை புற்று நோய், டீபி, மூளையில் இரத்தம் கசியச் செய்தல் என பல நோய்களை உண்டாக்கின்றன.

உறிஞ்சப்படும் புகையில் 4000 இரசாயனப் பொருட்களும் அவற்றுள் 200 விஷ இரசாயனங்களும் உள்ளன. மேலும் 43 வகை இரசாயனங்கள் புற்றுநோயை உண்டு பண்ணுபவை. வெளியேற்றப்பட்ட சிகரட்டு புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்க வாத நோய் ஏற்பட சாத்தியங்கள் அதிகம். பக்கவாத நோய் ஒருவரின் பார்வையிழக்கச் செய்யலாம், உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்படையச் செய்யலாம், உயிரைக் கூட குடித்துவிடலாம்.

புகை பழக்கம் கொண்ட கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் சராசரியாக 1 முதல் 10 சிகரட்டுகள் புகைப்பாராயின் அவர்களில் 29 சதவிகிதத்தனரின் சிசுக்கள் ஊனமாய் பிறக்கிறது. இதை தவிர்த்து புகைக்கும் பழக்கம் ஒருவரின் பணத்தையும் பாழ்படுத்துகிறது என்பது நாம் அறிந்த விடயமாகும்.

கடந்த நான்கு நூற்றாண்டுகளாக புகை பழக்கத்தின் பாதிப்புகள் சரிவர அறியாமலே இருந்தது. ஆதலால் புகை பிடிப்பதின் பக்கவிளைவுகளும் கட்டுபாடின்றி வளர்ந்து கொண்டே இருந்தது. புகையிலையின் பக்க விளைவுகளை உணர்த்தும் நோக்கில் விழிப்புணர்வு பட்டரைகளும் விளம்பரங்களும் அதிகரிக்கப்பட்டன. ஆனால் புகைப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. புகைப்பவரிடையே உண்டாகும் புற்றுநோயும், மாரடைப்பும் பிரிட்டனில் ஏற்படும் 30% மரணத்திற்கு முக்கிய காரணமாய் அமைக்கிறது.

புகை பழக்கத்தை விடுவோமேயானல் அதன் பலன்கள் ஐந்து வருடத்தில் நம்மால் உணர முடியும் என்கிறது ஒரு தகவல்.

புகைக்கும் பழக்கம் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். உடலுறவில் அதிருப்தியும் சுக்கில உற்பத்தியும் குறைந்து போகும். ஒரு ஆய்வின்படி புகைபிடிக்கும் ஆண்களில் 30-40 வயதிற்குட்பட்ட 50 சதவிகிதத்தினருக்கு ஆண்மை வீரியம் குறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

புகை பழக்கம் கொண்டவர்கள் விரைவாகவே முதுமைத் தன்மையோடுக் காட்சியளிப்பார்கள். இது புகை பிடிக்காதவரைக் காட்டினும் ஆண்களுக்கு 2 மடங்கும் பெண்களுக்கு 3 மடங்கும் ஒப்பானதாகும். இதற்கு என்ன காரணம்? சிகரட்டு புகை நம் உடலில் காணப்படும் A வகை விட்டமினைக் குறைக்கும். விட்டமின் A நமது தோல் பாதுகாப்பிற்குடையதாகும். இவ்விட்டமின் குறைவினால் இயல்பான வயதை விட முதுமை தோன்றமே முந்தி நின்று காட்சி அளிக்கும்.

புகையிலையில் காணப்படும்
Acetyldehdye எனப்படும் இரசாயனம் நமது உடலில் காணப்படும் C வகை விட்டமீன்களை குறைத்துவிடும் தன்மையைக் கொண்டது. ஒரு துண்டு சிகரட்டு புகைப்பவரின் உடலில் காணப்படும் 20மில்லிகிராம் C வகை வைட்டமின்களை அழிக்கிறது.

ஒரு சிகரட்டின் 15% பாதிப்பு புகைப்பவரையும் 85% பாதிப்பு சிகரட்டிலிருந்து வெளியேறும் புகைவழியே சுற்றதாரையும் பாதிக்கிறது. அதாவது புகை உறுஞ்சுபவரை காட்டினும் அவரை சுற்றி இருப்பவருக்கே பாதிப்புகள் பல மடங்கு அதிகமாக உள்ளது. முக்கியமாக குழந்தைகள் பெரியவர்களை காட்டினும் விரைவாக சுவாசிப்பார்கள், அப்படி சுவாசிக்கப்படுபவர்கள் இளம் பிராயத்திலேயே பாதிப்படைகிறார்கள், நோய்க்குற்படுகிறார்கள்.

70 கோடி சிறார்கள் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் வீடுகளில் வாழ்வதாக குறிப்பிடுகிறார்கள். சிகரட்டு புகை, சிறார்களின் உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சியை பாதிக்கக் கூடியது. அமேரிக்க ஆய்வறிக்கை ஒன்று மிதமான சிகரட்டு புகையில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட ஆய்வின்படி அவர்களிடையே படிக்கும் மற்றும் சிந்திக்கும் திறன் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக காட்டுகிறது.

புகை பழக்கம் கொண்டவர்கள் முல்லங்கி ரசம் உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் புகை பழக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென ஓர் தகவல் விளக்கம் கொடுக்கிறது. சீறிய வாழ்விற்கு புகை பிடிக்காதிருப்போம். இறுதியாக ஒரு கவுஜை சொல்லிக் கொள்கிறேன்.

புகைப்பழக்கம்

காலனைக்

கைவிரலணைத்துக்


காதலிக்கும் செயல்.

காற்றைக்

கவலையின்றி

கற்பழிக்கும் புயல்.

(பி.கு: 5/6 மாதங்களுக்கு முன் எழுதி வைத்தேன். நேற்று தூசு தட்டபட்டது.)

Wednesday, September 24, 2008

இரவுக் காதலிகள்


விளக்கேற்றும் நேரம் தனை
விடியல் பொழுதென சாபம்
பெற்ற இனம்.

இவர்களுக்கு
விளக்கணைக்க
மட்டுமே
பட்டா போட்டுக்
கொடுக்கப்பட்டிருக்கிறது.

உணர்ச்சிகளை
மூட்டைக் கட்டி
ஊருக்கு வெளியே எறிந்தவர்கள்.
அடுப்பெறிக்க
உடல்தனை விறகாக்கியவர்கள்.
உறவுகளுக்கு
துறவு பூண்ட கண்ணீர் மலர்கள்.

இந்த மலர்கள்
இரசிக்கப்படுபவையன்று.
துளி நேர இச்சைக்கு
கசக்கப்படுபவை.
எச்சில் உமிழ்ந்து
தூரமாய் தூக்கியெறியபடுபவை.

இரவு
இவர்களின் உற்ற தோழன்.
இந்நிலவுகள்
தினம் தினம்
தேய்வதை கண்டு
அது கண்ணீர் வடிக்கும்.
இவர்களுக்கு
வளர்பிறை வேண்டி
தவம் இருக்கும்.

உடல் ரணங்களை
பூட்டி வைத்து
மனதை ரணமாக்கிக்
கொண்ட மானுட பிறவிகள்.

அவனுக்கு
பகலில் அவள் தேவதாசி
இரவில் அவள் தேவதை.

தவறாய் போன இரவொன்றில்
தப்பி பிறந்த பிள்ளையொன்று
தாகம் தீர்க்க அழுகின்றது.

அவன் காமம் தீர்க்க
உடல் நாடினான்
அவள் காசு சேர்க்க
கட்டில் தேடினாள்.
மீண்டும் மீண்டும்
சேற்றில் விழுந்து
பிள்ளையின் பசியாற்றினாள்.

Tuesday, September 23, 2008

மோனாலிசா ஒரு விபச்சாரி

‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் பெரிதும் துணை புரிகிறது என்றும் சொல்லலாம்.

சிறு வயதில் பல இடங்களில் மோனாலிசா ஓவியத்தைக் கண்டிருக்கிறேன். ஒரு முறை தாத்தாவிடம் கேட்டேன். ஏன் பலர் இந்த படத்தை விரும்புகிறார்கள் என்று. அது புகழ் பெற்ற ஓவியம் என்றார். ஏன் புகழ் பெற்றது என்றேன். புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் சிரிப்பிற்கு இன்று வரை அர்த்தம் சொல்ல முடியவில்லை. அவள் சிரிப்பு துக்கச் சிரிப்பா அல்லது மகிழ்ச்சியின் சாயலா என நிச்சய படுத்திச் சொல்வது சிரமம் என்றார்.

அதன் பின் மோனாலிசா ஓவியத்தை எங்கு கண்டாலும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அது பற்றிய விடயங்களை புத்தகத்தில் வந்தாலும் ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தேன். சேகரித்து வைத்தேன். சேகரித்தும் வருகிறேன்.

1506ஆம் ஆண்டு இவ்வோவியம் வரையப்பட்ட நாளில் இருந்து இன்று வரை மேற்கத்திய அறிஞர்கள் இதன் பொருமை பேசுவதை நிறுத்தியதில்லை. ‘டா வின்சி’யின் படைப்புகளை ஆராய்வது மட்டுமின்றி மோனாலிசாவின் சிரிப்பின் அர்த்தத்தையும் ஆராய்ந்தார்கள்.

அந்த சிரிப்பு டா வின்சியின் யூகமா, அல்லது மோனாலிசாவின் உணர்ச்சியா? அதுமட்டுமின்றி மோனாலிசா ஓவியத்தில் அவளது கண், முடி, கழுத்து என ஆராய்ச்சி தொடர்ந்தது.
ஆராய்ச்சியை கலைஞனின் படைப்போடுவிட்டு வைக்காமல் மேலும் மேலும் சுரண்டினார்கள். இதன் முடிவு ‘டா வின்சி’யின் தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.

யார் இந்த மோனாலிசா? டா வின்சிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? அவர் ஏன் சிரித்தபடி வரையப்பட்டிருக்கிறார்? அப்படி சிரித்தபடி வரையபட்டுள்ள ஓவியத்தில் மோனாலிசா யாரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்? ஓவியரையா இல்லை வேரொருவரையா? இவையாவும் ஆராய்ச்சியாளர்களின் எண்ணத்தில் உதித்த கேள்விகள்.

இவற்றுக்கு விடைகாண உடைக்கப்பட்டதே ‘டா வின்சியின்’ தனிப்பட்ட வாழ்க்கை. ஒரு கலைஞனின் தனிபட்ட வாழ்க்கைக்கும் அவனது படைப்புகளுக்கும் தொடர்பிருக்குமா? இப்படியும் ஒரு கேள்வி எழுந்தது.
இக்கேள்விகளுக்கு ஆராய்சியாளர்களின் பதில் என்ன?

வாசாரி என்பவர் ஒரு வாழ்க்கை வரலாற்று எழுத்தாளர். இவரின் கூற்றின்படி மோனாலிசாவை ஒரு விபச்சாரி எனக் கூறுகிறார். மோனாலிசா மற்றவரின் பார்வைக்கு காட்டபட்டதை போல் ஒழுக்கமானவள் அல்ல என்றும் கூறுகிறார்.

மோனாலிசா தான் புகழ் பெற வேண்டும் என்பதற்காக தன் மானத்தையும் இழக்கத் துணிந்த பெண். அவளது நல்லூழின் காரணமாக அவளின் ஓவியம் புகழ் பெற்றதாகவும் அவளைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றதாகவும் கூறுகிறார்.

மோனாலிசா அல்லது மடோனா லிசா ‘ஃப்ரான்சிஸ்கோ டேல் கியோகொண்டோ’ என்பவரின் மனைவியாவாள். அவளது கணவனான ‘கியோகொண்டோ’ இத்தாலி நாட்டின் புகழ் பெற்ற வர்த்தகராவார். மோனாலிசாவின் அழகில் மயங்காதவர்கள் இல்லை. கியோகொண்டேவும் அப்படி மயங்கியவர்களில் ஒருவனாவான்.

கணவனின் செல்வச் செருக்கு மோனாலிசாவை திருப்திபடுத்தவில்லை. அவளது குழந்தையின் இறப்பு அவள் மன நிலையை பெரிதும் பாதித்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு பிறகு மோனாலிசாவின் வாழ்க்கையில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டது. மோனாலிசாவிற்கு திருமண வாழ்க்கையில் வெறுப்பு உண்டானது. அச்சமயத்தில் அவள் ‘டா வின்சி’யை சந்திக்கிறாள்.

‘டா வின்சி’யின் கலைப் படைப்புகளில் மனம் கவரப்பட்ட மோனாலிச அவரை அடிக்கடி சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள். சந்திப்பு நாளடைவில் காதலாக மலர்கிறது.

24 வயதே நிரம்பிய மோனாலிசாவின் அழகு ‘டா வின்சி’யை அவரது ஓவியத்திற்கு மாடலாக பயன்படுத்திக் கொள்ள தூண்டியது. மோனாலிசாவோ அவளது ஓவியத்தை உலகப் புகழ் பெறும் அளவிற்கு படைப்பதாய் இருந்தால் மட்டும் ஓவிய மாடலாக இருக்க ஒப்புக் கொண்டாள்.

டா வின்சிக்கு இது பழம் நழுவி பாலில் விழுந்ததை போல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. உலகப் புகழ் பெறும் அளவிற்கு வடிக்க வேண்டிய ஓவியத்திற்கு நாட்கள் எடுக்கும். இதன் வழி மோனாலிசாவை நீண்ட நாட்களுக்கு, அவ்வோவியத்தை வரையும் பொருட்டு தன் அருகில் வைத்துக் கொண்டார்.

இக்காலகட்டங்களில் இவர்கள் உடல் அளவிலும் உறவு கொண்டாடினார்கள் என்பது அறிஞர்களின் கருத்து. இத்தகாத உறவை அடுத்தவர் அறிந்துக் கொள்வதில் இருந்து திசைதிருப்ப எண்ணினார்கள். ஓவியத்தின் மாடலாக மட்டுமே மோனாலிசா இருப்பதாக உணர வைத்தார்கள். மோனாலிசாவின் சம்மதத்தின் பொருட்டு ‘டா வின்சி’யும் வேண்டுமென்றே மோனாலிசாவின் ஓவியம் தீட்டும் பணியை தாமதப்படுத்தினார்.

இவர்களின் உறவு ஆறு வருடங்கள் நீடித்ததாகவும். அவ்வாறு வருடமும் மோனாலிசா ‘டா வின்சி’யின் கள்ளக் காதலியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தாலிய நாட்டு புகழ் பெற்ற நிருபர் ரினா டா ஃபிரேண்ஷி. இவர் எழுதிய ‘தி மிஸ்டரி அஃப் மோனாலிசா’ எனும் புத்தகம் இத்தாலிய மக்களிடையே பெரும் பரபரப்பை எற்படுத்து வெற்றி கண்டது.

இப்புத்தகத்தை எழுதும் முன்பிருந்து டா வின்சியின் தாயாரான கர்த்தரினா அவர் கனவில் தோன்றி மறைவாளாம். அவ்வகையில் டா வின்சியை வளர்த்தவிதம், அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் அடிக்கடி பேசுவாளாம்.

சிறு வயது முதல் டா வின்சி ஓவியம் வரைதலில் அதிக ஆர்வம் காட்டினார். இதனால் டா வின்சியின் திறமையை நன்கு வளர்த்து அவருக்கு போதுமான வசதியை செய்ய வெண்டுமென கர்தரினா சபதம் கொண்டாள். தாயாரின் விருப்பப்படியே டா வின்சியும் நல்ல திறமைசாளியாக வளர்ந்தார்.

கனவை மட்டும் அடிப்படையாக கொள்ளாமல், டா வின்சியின் வாழ்க்கை வரலாற்றையும் ரினா ஆராய்ச்சி செய்தார். கார்த்தரினா அவள் வாழ்வில் பெரும் துயரை கடந்து வந்திருக்கிறாள் என குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு காரணம் என்ன? டா வின்சி முறை தவறி பிறந்த குழந்தை என சொல்லப்படுகிறது. டா வின்சி, கார்த்தரினா மற்றும் ஃபியெரோ டா வின்சி எனும் ஆடவருக்கும் ஏற்பட்ட கள்ளக் காதலின் வித்து என்பது ரினாவின் கருத்து.

குழந்தை பிறந்த பிறகு ஃபியெரோ டா வின்சி குடும்ப பொருப்பை ஏற்க மறுத்து கர்த்தரினாவை விட்டு சென்றார். டா வின்சியை வளர்க்கும் முழு பொருப்பும் கர்த்தரினாவின் தலையில் விழுந்தது.

டா வின்சியின் அயராத முயர்சியின் பெயரில் ஃப்லோரென்கா விரோச்சியோ அரங்கில் நுழைந்தார். பல தரமான படைப்புகளை உருவாக்கி நல்ல புகழ் பெற்றார்.

டா வின்சி தன் நிலை அறிந்தவர். குடும்ப வரலாறும் அவள் தாய் பட்ட சுமைகளையும் தெரிந்து நல்ல மகனாக இருந்தவர். அவரது உலக தரமான படைப்புகளுக்கு அவரது தாயாரே முன்னோடியாக விளங்கினார்.

டா வின்சி தன் தாயின் மீது வைத்திருந்த மதிப்பின் அடையாளமாக தலை சிறந்த ஓவியத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அதற்காக பல வருடங்கள் செலவழித்தார். திருப்திகரமாக அதைச் செய்து முடித்த பின் மோனாலிசா என பெயரிட்டார் என்பது ரினாவின் குறிப்பு.

டா வின்சி அவ்வோவியத்தை தனது தாயாருக்கு பரிசளித்தார். அவ்வோவியம் என்றொன்றும் அவள் புகழ் பேசும் என்றும் கூறினார். ‘மோனாலிசாவின் மெல்லிய புன்னகை தாய்மையின் அறிகுறியாகவும், கலைஞர்கள் கலை நுட்பம் எனவும் டா வின்சி கூறுகிறார் என ரினா கருத்துரைக்கிறார்.

தாயாருக்கான ஓவியத்தை தன் தாயின் சொந்த பெயரில் குறிப்பிடாமல் போனதன் நோக்கம் என்ன என்பது என் கேள்வி?

1987லாம் ஆண்டு டாக்டர் லில்லியன் எனும் கணினி நிபுணர் மோனாலிசா ஒரு கற்பனை வடிவம் என தனதாராய்ச்சியில் கூறினார். மோனாலிசா என ‘டா வின்சி’ தன்னைத் தானே குறிப்பிடுகிறார் என்பது இவரது கூற்று. டா வின்சி தன்னை ஒரு பெண்ணாக கற்பனை செய்து வரைந்து படைத்திருப்பதாகவும் விளக்கம் கூறுகிறார்.

கணினி நுட்பத்தினூடே அதை உறுதிபடுத்தினார். மோனாலிசா ஓவியத்தை பாதியாகவும் டா வின்சியின் ஓவியத்தை பாதியாகவும் வைத்து அதன் ஒற்றுமமகளை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

இருவரின் முக ஒற்றுமையும் ஒன்றோடொன்று பொருந்துகிறது. மூக்கின் வடிவமும் உதட்டின் வடிவமும் ஒன்றுகிறது. டாக்டர் லில்லியன் ஒற்றுமைபடுத்த முயன்றது ஒரு இளம் பெண்ணின் முகவடிவையும் சுருகங்களும் ரோமங்களும் நிறைந்த ஓர் ஆடவனின் முகத்தையும்.

இருப்பினும் அவர்களின் பார்வை உட்பட மற்ற அம்சங்களும் ஒற்றுமையோடு அமைவது ஆச்சரிய மிக்க விடயம் அல்லவா? மேலும் அவர் குறிப்பிடுகையில் டா வின்சி மீசையும் தாடியும் இல்லாமல் மோனாவிசசவின் உருவ அமைப்பைப் பெறுவார் என்றும் சிறு உதடும், அகன்ற நெற்றியின் அளவும் வைத்துப் பார்க்கையில் மோனாலிசா ஒரு ஆண் உருவத்தை ஒத்து இருக்கிறது எனவும் கருத்திடுகிறார். அந்த ஆண் உருவம் நிச்சயமாய் டா வின்சி தான் என்றும் அடித்துக் கூறுகிறார். இதனையடுத்து மோனாலிசாவின் தலை முடி ஒரு பெண்ணிற்கான அழகை குறிப்பிடும் வகையில் இல்லையெனவும் கூறுகிறார்.

லேரி பேரி என்பவருக்குள் ஒரு கேள்வி எழுந்தது? அது மோனாலிசாவின் கண்களை பற்றிய கேள்வி. அதற்கான விடையை தேடுவதில் லேரி முனைப்புக் கொண்டார். பல மோனாவிசாவின் ஓவியங்களையும் வைத்துப் பார்த்ததில் எதிலும் ஒரு ஒற்றுமை இன்மையைக் கண்டார். அதன் ஆர்வம் மோலோங்க ஃபிரான்ஸ் நாட்டிற்குக் கிளம்பினார். பாரிஸ் நகரில் இருக்கும் பொருட்காட்டியகத்தின் பொறுப்பாளரின் ஒப்புதலோடு லேரி, மோனாலிசாவின் ஓவியத்தை நெருங்க அனுமதிக்கப்பட்டார். அதில் மோனாலிசா ஓவியத்தின் கண்களின் கரு விழிகள் இரண்டும் பழுப்பு நிறத்தில் இருக்கக் கண்டார்.

அடுத்ததாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஃப்பிபோ கூறுகையில் மோனனலிசா இயல்பாக பல் இளித்தபடி இருப்பவள் எனவும் ஓவியத்தில் மௌனமான சிரிப்பில் இருப்பது அவள் வாழ்க்கைத் துயரத்தை தெரியப்படுத்துகிரது எனவும் குறிப்பிடுகிறார். இவரது கூற்றுகள் சரியான விளக்க முறை இன்றியும் சற்று குழப்பும் வகையிலும் காணப்படுகிறது. ஆனால் இவது இறுதியான கருத்து ஓவியத்தில் காண்பது மோனாலிசாவின் துயரச் சிரிப்பே என்பதாகும்.

இன்று வரை மோனாலிசா என்பவள் நிஜமா அல்லது நிழலா என்பது நமக்குள் கேள்விக்குறியே. ஒரு கலைஞனின் வெற்றி இரசிகனை சிந்திக்கத் தூண்டச் செய்தல். அவ்வகையில் லியோநார்டோ வின்சியின் புகழ் இன்றளவில் ஓங்கியே விளங்குகிறது.

கல்கியின் பொன்னியின் செல்வனும் இந்த கூற்றுக்கு பொருந்தும். நந்தினி எனும் கதா பாத்திரத்தின் மர்மத்தை இன்றும் கண்டு கொள்ள முயல்கிறோம்.

Monday, September 22, 2008

பைத்தியகார வேலை தெரியுமா?


லண்டன் மாநகரில் நடந்த சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவு இவ்வாறு
குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் இம்முடிவு இளைய
சமூகத்தினருக்கு ஒரு மிரட்டலாக அமைந்துள்ளது.

அலுவலக வேலைகள் அதிகமாகத் திணிக்கப்படுபவர்களிடையே அளவிற்கு அதிகமான மனஇறுக்கமும்,உணர்ச்சிவசப்படும் தன்மையும் அதிகரிக்குமாம். இப்பாதிப்பு மற்றவரை காட்டிலும் இளைஞர்களுக்கு இரு மடங்குகள் அதிகமாக இருக்கிறதாம்.

32 வயதிற்குட்பட்ட 1000 பேர்களுக்கிடையிலான இவ்வாராய்ச்சி நியுசிலாந்து
மற்றும் பிரிட்டனில் நடத்தப்பட்டது. அவர்களில் 45 சதவிகிதித்தினர்
வேலைபளுவின் காரணமாக மன இறுக்கத்திற்குள்ளாகி இருப்பதாக 'சைக்கோலாஜிக்கல் மெடிசன்' எனும் மாதிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வேலை பளு என்றால் என்ன? கட்டுப்பாடில்லா வேலைகள், வேலையினால் ஏற்படும் மன அழுத்தம், ஓய்வில்லாமை, வேலை முடிக்க முடியாமல் கிடக்கிறதே எனும் மனோநிலை, ஆரம்ப வேலையை முடிக்காமல் இருக்கும் முன்னமே அடுத்தடுத்த வேலைகளின் குவியல்கள், நேரமின்மை என இன்னும் பல.

இவ்வாராய்ச்சி நடிப்பு, மூளை நிபுணத்துவம், விமானி, ஆசிரியர், சுற்றுச்
சூழல் காப்பாளர் மற்றும் காவல்துறையினரிடையே நடத்தப்பட்டது.

முன் காலத்தில் இருந்த இளம்தொழிலாளர்களைக் காட்டினும் தற்காலத்தில்
பெரும்பாலானோர் மனநிலை பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். வேலையிடச் சூழலும் அளவிற்கதிகமான பளுவும் இதற்கான காரணமென என லண்டனைச் சேர்ந்த டாக்டர் மரியா குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் மற்றும் நியூஸிலாந்தில் ஒருவருட காலமாக 1000 பேர் கொண்ட
குழுவினரிடையே ஏற்படும் மன‌நிலை மாற்றத்தை குறிப்பெடுத்து வந்தார்கள்.
அவர்கள் வாழ்க்கை முறை மாற்றமும் கணக்கிடப்பட்டது.

அவர்களில் 10% ஆண்களும் 14% பெண்களும் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை உணர்ந்து ஒப்புக் கொண்டும் இருக்கிறார்கள்.

வேலை பளு அதிகமிருப்பினும் அடுத்தடுத்த வேலைகளில் தாவுவது
பாதுகாப்பின்மையான செயல் என்பதினால் பலரும் மன அழுத்தத்தை
பொருட்படுத்துவதில்லை. வடிவேலு பாணியில் 'எவ்வளோ அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்' எனும் ஸ்டைலில் வாழ்க்கையை ஓட்டிக்
கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற மன அழுத்தத்தின் காரணமாக தூக்கமின்மையும், மனச் சோர்வும்
ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இவர்களால் சமூக நிகழ்வுகளில் ஈடுபடவும்,
ஈடுபாடு காட்டவும் முடியாமற் போகிறது.

இந்நிலை நாளுக்கு நாள் அதிகரிப்பதினால் குடும்பச் சூழலும் மிகவும்
பாதிப்படைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Tuesday, September 16, 2008

கோவியாரும், பரிசலும் பின்னே அதிஷாவும்

கோவியார்: இன்னிக்கு நான் பதிவெழுத யாரு ஐடியா கொடுக்க போறது. 'ஹிட்'டான 'மேட்டர்' சொல்லல பிச்சிப்போடுவேன்.
பரிசல்: நான் எழுதுறதுக்கு எல்லோரும் எதிர் பதிவு போட்டு சாத்துறாங்கனா... வீட்டுல....


அதிஷா: யாருமே என்ன மதிக்க மாட்டுறாங்க... எவனேவனோ என் பதிவ திருடி போட்டுகிட்டு இருக்கானுங்க. முருகா என்ன காப்பாத்துப்பா...

Saturday, September 13, 2008

வைரமுத்துவின் வரம்புமீறிய பேச்சு!

பதினேழு இலக்கம் தமிழர்கள் வாழும் மலேசிய நாட்டுக்குத் தானே தமிழ் வாழ்த்து எழுதித் தருவதாக்க் கூறிய கவியரசு வைரமுத்துவின் பேச்சுக்கு மலேசியக் கவிஞர் காரைக்கிழார் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவின் இந்தப் பேச்சு தன்மூப்பானது என்றும் மலேசியக் கவிஞர்களை மதிக்காத வரம்பற்ற செயல் என்றும் அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கரைக்கிழார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்நாட்டில் உள்ள தமிழ்க் கவிஞர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

‘நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முத்து கிளவாச் செரிவு’

அறிவுமிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும் நல்லது!

கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு நிகழ்வைப் பற்றி அறிந்தபோது, வள்ளுவரின் மேற்கண்ட குறள் மீண்டும் நினைவுக்கு வந்தது.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரனின் நூல் வெளியீட்டு விழாவின்போது, கவிஞர் சீனி நெய்னா முகமதுவின் பாடல் தமிழ் வாழ்த்தாகப் பாடப்பட்டது. அந்த தமிழ் வாழ்த்துப் பற்றிக் கருத்துச் சொல்ல வந்த சிறப்பு பேச்சாளர் வைரமுத்து, தமிழ்வாழ்த்து சுருக்கமாக இரண்டொரு மணித்துளிகளில் இருக்க வேண்டும் என்றும், அது ஒரே பாடலாகவும் எல்லா அமைப்புக்களுக்கும் அதனையே பாடுமாறும் அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.

அத்தோடு நிறுத்தியிருந்தால் தேவலை. அதற்கும் ஒரு படி மேலே சென்று, நானே எழுதி நானே இசையமைத்துத் தருகிறேன். அதனை மலேசியத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்த நாட்டின் சுவாமி இராமதாசர், கவிஞர் க.பெருமாள், புலவர் முத்தையனார், கனல் கவிஞர் அ.பு.திருமாலனார், கவி புயல் கரு.வேலுச்சாமி, போன்ற இன்னும் பன்னூறு மறைந்த கவிஞர்களின் படைப்புகள் மங்கிப் போகமல் இருக்கின்றன.

வாழ்ந்துக் கொண்டிருக்கும் பன்னூறு பாவலர்களின் படைப்புகளும் இங்கே வலம் வந்து கொண்ருக்கின்றன. அவற்றிலிருந்தெல்லாம் சில வரிகளை தேர்ந்து தமிழ் வாழ்த்தாக அமைக்க முடியாதா என்ன?

முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தியவர்கள் நாங்கள். முதல் தமிழ் கவிதை மாநாடு நடத்தியவர்கள் நாங்கள். முதல் சித்தர்கள் மாநாடு நடத்தியவர்கள் நாங்கள் எங்கள் நடுவிலேயே இப்படி ஒரு அவலமா?

தான் பிறந்த மண்ணிலேயே தமிழ் வாழ்த்து எழுத வாய்ப்பில்லாத வைரமுத்துவுக்கு மலேசிய மண்ணில் இப்படி பேசும் துணிச்சல் எங்கிருந்து வந்தது? யாரால் வந்தது?

'மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் நீராருங் கடலுடுத்த’ எனும் பாடல் தமிழகத்தின் தமிழ் வாழ்த்தாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் அரசவைக் கவிஞராக இருந்த கவிஞர் கண்ணதாசனை ஒரு தமிழ் வாழ்த்து எழுதுமாறு எம்.ஜி.ஆர் கேட்டுக் கொண்டார். அதற்கு கண்ணதாசன் என்ன சொன்னார் தெரியுமா?

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பாடலைக் காட்டிலும் ஒர் உயர்வான பாடல் உண்டா? அந்தப் பாடலில் எல்லாமும் இருக்கிறது. அந்தப் பாடலே இருக்கட்டும் என்று சொன்னார் கவியரசு கண்ணதாசன்.

நாட்டுக்கொன்று ஒரு நாட்டு பண் உண்டு. கட்சிக்கென்று ஒரு கட்சிப் பண் உண்டு. இயக்கத்திற்கென்று ஒரு இயக்கப் பண் உண்டு. அவையாவும் அந்த நாட்டுக் குடி மக்களால், குடிமக்களில் ஒரு பாவலனால் எழுதப்பட்டவையே என்பதைக் கூட வைரமுத்து உணரவில்லையே?

இங்கிருக்கும் என்ணற்ற கவிஞர்களின் பாடல் வரிகள் அவ்வப்போது அந்தந்த மேடைகளில் தமிழ் வாழ்த்தாக ஒலிப்பதால் என்ன கெடுதல்?

என்னருந்தமிழே என்று ஒருத்தன் மகிழட்டுமே, என்னுயிர் தமிழே என்று இன்னொருத்தன் நெகிழட்டுமே, இன்கனிச்சாறே என்று ஒருத்தன் உருகட்டுமே, இன்பத்தேன் ஊற்றே என்று பிரிதொறுவன் மயங்கட்டுமே. இப்படி ஆயிரமாயிரம் தமிழ்க் கவிஞர்களும் தமிழை வாழ்த்தி அதன் சுவையை பருகட்டுமே.

கோடிக்கணக்கில் படைப்பாய்ச்சலாய் வரும் சுக்கிலத்தில் ஒன்றே ஒன்று கருவாகி உருவாகிக் காலத்தை வென்று நிலைப்பது போல். எங்கள் சொந்த வித்திலே கருக் கொள்ளட்டும் தமிழ் வாழ்த்து. உருக்கொள்ளட்டும் மலேசிய தமிழ் வாழ்த்து.

தமிழுக்கு நான் தான் கஞ்சி ஊற்றுகிறேன். தழிழுக்கு நான் சோறு போடுகிறேன். தமிழ் என்னால் தான் வாழ்கிறது. தமிழை வாழ வைக்கிறேன் என்று சொல்லி தமிழ்நாட்டு அறிஞர்பெருமக்களின் ஆத்திரத்தையெல்லாம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஒரு கவிஞன், எங்கள் தமிழ் இலக்கியக் கோட்டைக்குத் தமிழ் வாழ்த்துப் பாடிக் கொடியேற்ற நினைப்பதா?

என்ன கொடுமையப்பா இது?

இந்நாட்டு தமிழ் எழுத்தாளச் சிங்கங்களின் சுயமரியாதைக்கு எத்தகைய சோதனையப்பா இது.

மேலும் ஒரு சேதி. மலேசிய நாட்டு தமிழ்க் கவிஞர்களின், தமிழ் எழுத்தாளர்களின், தமிழ் படைப்பாளிகளின் மானம் காக்க வேண்டிய மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் அதன் தலைவரும் வைரமுத்துவின் இந்தச் செயலைப் பாராட்டுவதும் பெரும் பாக்கியம் எனக் குறிப்பிட்டிருப்பதும், இந்த நாட்டு தமிழ் இலக்கிய உலகம் பெற்ற சாபக்கேடு. சமுதாயக் கறை என்றுதான் கூற வேண்டும்.

கொல்லன் தெருவில் ஊசி விற்கும் முயற்சியைக் கைவிடுங்கள். அன்றேல் உங்கள் பண்டமாற்று பெரு வணிகம் ஊசிப் போகும்.

வைரமுத்துவின் வரம்பு மீறிய பேச்சும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இரங்கதக்க செயலும் விரைந்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

‘வருமுன் காவாதான்
வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்’.

நன்றி: மலேசிய நண்பன்

Friday, September 12, 2008

இது தான் தொப்புள் கொடி உறவோ?

(மு.கு: இது எனது 50வது பதிவு. அன்னைக்கு காணிக்கை.)

ஈனும் முன்னே கருவில் சுமந்தவள்
ஈன்ற பின்னும் இதயம் தாங்கியவள்
வானின் அளவு அன்பில் கனிந்தவள்
வண்ணம் பேனி வாழ்வு தந்தவள்!

பாலை ஊட்டி பாசம் பொழிந்தவள்
படிப்பும் அறிவும் பகிர்ந்து கொடுத்தவள்
நாளை எண்ணி நடையாய் நடந்தவள்
நன்றாய்ப் பணிகள் நயமாய்ச் செய்தவள்!

இரவும் பகலும் விழித்துக் காத்தவள்
இறைவன் அடியைப் பார்த்து வணங்கி
வரவும் செலவும் பாரா வண்ணம்
வாழ்வு முழுதும் மகனுக் குழைத்தவள்!

பிள்ளை இளைஞன் ஆன உடனே
பெண்ணை பேசி திருமணம் முடித்தவள்
நல்ல மகனும் நல்ல மகளும்
நட்புடன் வாழ நாளும் உழைத்தவள்!

வயது போக கிழவி ஆனாள்
வறுமை நோயும் வந்து சேர்ந்தது
தயவு காட்ட உறவு இன்றி
தனிமை கொடுமை வாழ்வில் நலிந்தாள்!

ஊதியம் தேடா தாய்க்கு மகனும்
ஒதுப்புறம் ஒன்றே தேடிக் கண்டான்
நாதியற்ற நடை பிணம் ஆனாள்
நல்ல நாளே மரண நாளே!

ஊரார் கூடி பிரார்த்தனை செய்வர்
உறவார் கூடி கட்டி அழுவர்
தேரா உலக தெய்வ மாந்தரே
தெளிந்து நோக்க திருவருள் உணர்வீர்!

(பி.கு: எதுகை மோனை வைத்து எழுதிப் பார்த்த கவிதை முயற்சி. பிழை இருப்பின் சுட்டவும்)


Wednesday, September 10, 2008

நாசமா போச்சி...

வரலாற்றில் முதல் முறையாக வட துருவம் ஒரு தீவாக உருமாறி வருவதாக அண்மைய தகவல் கூறுகிறது.
சமீபத்தில் 'நாசா'வால் சில தொலை நோக்கு புகைப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அப்புகைபடங்களின் அடிப்படையில் ஆராயப்பட்ட சில தகவல்கள் திடுக்கிடும் வண்ணம் உள்ளன. வட துருவத்தில் உறைந்து இருக்கும் பணிக்கட்டிகள் பெரும்பான்மையாக உருகிவிட்டன.

மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த அதீத பாதிப்பு எப்படி பட்டது தெரியுமா? அதாவது ஆர்டிக் பணி படலத்தை ஒரு சுற்றில் வலம் வந்துவிடும் அளவில் உள்ளது.

கவலை தரும் இச்செய்தி சில பன்னாட்டு கப்பல் நிறுவனங்களின் காதில் தேன் வார்த்துள்ளது. இம்மாறுதலினால் நெடுந் தூர பயணங்களை சுருக்கிக் கொள்ள முடியும். இதனால் எரி பொருள் மற்றும் நேரமும் மிச்சப்படுமென மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.

அறிவியல் வல்லுநர்கள் இது பூமிப் பந்தை நாசப்படுத்த ஏற்பட்டிருக்கும் ஒரு கண்டமெனவே கருதுகிறார்கள். இதனால் ஒட்டு மொத்த பூமிக்கும் பாதிப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது என கருத்துரைக்கிறார்கள்.

புவி வெப்பத்தைப் பற்றிய விழிப்புணர்வுகள் நெடுங்காலமாக நடத்தியும் மனித குலத்தினரிடையே அது எடுபடாமல் போயிருப்பது மிகவும் வேதனைக்குரியதே. இனியும் நாம் செய்யப் போகும் தவறுகள், நமக்கே நாம் பறித்துக் கொள்ளும் சவக் குழி என்பதை அறிந்து செயல்பட்டால் நன்மை பயக்கும்.
பணிகட்டிகளின் ஆராய்ச்சி நிபுணரான மார்க் சீரீஸ் கூறுகையில், இப்போது எற்பட்டிருக்கும் மாற்றமானது சரித்திரத்தில் முக்கிய அங்கமெனவும், மனிதர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

125000 வருட பூவியியல் வரலாற்றில் முதன் முறையாக அட்லாந்திக் மற்றும் பசிஃப்பிக் கடல் பகுதிகள் ஒன்றென கலந்து சந்தித்துக் கொள்ளப் போகிறன. கரை பகுதிகள் மேலும் கரைந்து போக போகின்றன. இப்பாதிப்பு சூனாமியின் பாதிப்பை விட மோசமானதாக இருக்குமோ?